நான் உஷிதமணி அல்ல

தமிழ் மொழிக்கு விக்கிப்பீடியா இருக்கிறது என்பது எனக்கு இன்று தான் தெரியவந்தது. டெக்னாலஜியில் மிகவும் பின் தங்கியிருக்கிறேன் என்பது தெரியவருக்கிறது. நன்றி:நற்கீரன். விக்கிப்பீடியாவின் வசதி/தனித்தன்மை என்னவென்றால், யார் வேண்டுமானாலும் ஒரு புதிய விசயத்தை (Topic) ஆரம்பிக்கலாம் என்பதும், பின் யார் வேண்டுமானாலும் அதை திருத்தி / மேலும் விசயங்களை சேர்க்க முடியும் என்பதே. இதில் பல நன்மைகளும்/சில தீமைகளும் இருக்கிறது. அது சரி, தீமையும்/நன்மையும் ஒரு சேர இல்லாமல் இருக்கும் விசயம் உலகத்தில் ஏதேனும் இருக்கிறதா என்ன?

தமிழில் விக்கிபீடியா இருக்கிறது என்று அறிந்தவுடன் நான் அதில் புதிதாக சேர்க்க நினைக்கும் வார்த்தை “தாமதம்”. சேர்த்ததும், அதில் ஏர்-இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே சேர்க்கவேண்டும் என்றுன் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விக்கிபீடியாவின் தீமை? நன்மை?

என் நண்பர்கள் அனைவரும் ஏர்-இந்தியாவையோ அல்லது இந்தியன் – ஏர்லைன்ஸையோ உபயோகிப்பவர்கள் தான். அவர்கள் சென்ற அனைத்து முறையும் விமானம் தாமதமாக கிளம்பியது என்பது எதிர்பாராத அல்லது எதிபார்த்த ஒன்றுதான். கோயின்சிடன்ஸ் அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல (unintentional) என்றே வைத்துக்கொள்வோம். திட்டமிட்டு செய்யமாட்டார்கள் என்பதே என் உறுதியான கருத்து அல்லது நம்பிக்கை. அதுசரி, நம்பிக்கை தானே வாழ்க்கை. நான் ஒரே ஒரு முறை மட்டுமே ஏர்-இந்தியாவில் சென்றிருக்கிறேன். அப்பொழுது 20 நிமிடங்கள் தாமதம். ஏன் இப்படி?

20 நிமிடங்கள் தாமதமாகச் செல்வதால், என்னுடைய 20 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாமல்(?!) போகும், என்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை, ஆனால் பலருக்கு இந்த 20 பில்லியன் டாலரை விட 20 நிமிடங்கள் பெரியது. தாமதம் மிக மிக கொடிய விசயங்களில் ஒன்று. தாமதமாகச் செல்வதால், நாம் நமது நேரத்தை மட்டும் வீணடிப்பதில்லை, நம்மை சார்ந்தவர்களின் நேரத்தையும் அநியாயமாக வீண் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 200 * 20 நிமிடங்கள்?

சரி. பயணச்சீட்டு கொடுத்தபின், திடீரென்று விமானம் ஏன் ரத்து செய்யப் படுகிறது? பல காரணங்கள் இருக்கலாம். எப்பொழுதும் தாமதம் என்று அறிந்து யாரும் பயணம் செய்ய முன்வராததால், எதிர்பார்த்த கூட்டம் இல்லையென்று விமானத்தையே ரத்து செய்யலாம். செய்யுங்கள். விமானம் உங்களுடையது. வாழ்க்கை எங்களுடையது. விமானம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டுமா இல்லையா? அந்த அறிவிப்பு ஒவ்வொரு பயணியையும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டுமா இல்லையா?
சரி. என்னதான் நடந்தது?

ஒருவர் ஒரு மாதத்திற்கு முன் டிக்கெட் வாங்கிக் கொண்டு, விமானம் ஏறி, வேறு நாட்டுக்கு செல்கிறார். ரிட்டன் டிக்கெட்டும் சேர்த்துதான். பயணிக்கு வெளிநாட்டில் விசா ஒரு மாதத்திற்கு மட்டுமே. சரியாக விசா முடியும் நாளில் அவருக்கு ரிட்டன் டிக்கெட். ஆசை ஆசையாக, அயல்நாட்டில் உடன் தங்கியவர்களுக்கும், தாய்நாட்டில் பார்க்கப் போகும் சொந்தங்களுக்கும், பரிசுகள் கொடுத்து/வாங்கி கொண்டு விமான நிலையம் சென்றவருக்கு அதிர்ச்சி, விமானம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது. [இரு வாரங்களுக்கு முன்னரே ரத்து செய்தி வெளியாகியிருக்கிறது. ஏஜெண்ட் தெரிவிக்கவில்லை]. அவருக்கு விசா இன்றோடு முடிகிறது. நாளை தான் வேறு பிளைட். நாளை பிளைட்டுக்கு மாற்றித் தருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்கள். நாளைக்கு சென்று விடலாம் தான். வேறு முக்கியமான் விசயங்கள் இல்லை தான். இமிகிரேஷனில் ‘வார்ன்’ மட்டுமே செய்வார்கள் தான். அதை போன் செய்து கேட்டாயிற்று தான். போனில் பேசிய இமிகிரேசன் பெண்மணி தன் பெயரை மட்டுமே கூறினாள் தான். ICயை சொல்லவில்லை தான். எல்லாம் நன்மைக்கே தான்.

ஆனால் நாளைவரை, அவர் ஒரு பிரச்சனையும் இல்லாமல், இந்தியாவில் காலடி எடுத்துவைக்கும்வரையில், அலைபாயும், ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும், அவர் மனதிற்கு யார் ஆறுதல் கூறுவது?

அவர் உலகநாடுகளில் பல இடங்களுக்கு சென்று வந்தவர். தனக்கு இவ்வாறு நேர்வது இதுதான் முதல் முறை என்றார்.

தவறு இருபக்கமும் இருக்கிறது. ஆனால் விழுக்காடு? அன்பர்களே உஷார்.

மற்றவர்கள் திருந்துவார்கள் என்று நினைப்பதைவிட நாம் திருந்துவது தான் உஷிதம் (நான் உஷிதமணி அல்ல!). பயணம் செய்யும் ஓரிரு நாட்களுக்கு முன், விமான நேரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

Leave a comment