சே குவேரா

இரண்டு வருடங்களுக்கு முன், என் அண்ணன், சே குவேரா : வாழ்வும் மரணமும் என்ற ஜோர்ஜ் ஜி காஸ்நாடா, எழுதிய புத்தகத்தை வாங்கி வைக்குமாறு என்னைப் பணித்தார். அப்பொழுது, சென்னையில் நடந்து கொண்டிருந்த புத்தக கண்காட்சியில், அந்தப் புத்தகத்தை தேடி அலைந்து, கிடைக்காமல், இல்லை என்று என் அண்ணனிடம் சொல்லிவிட்டேன். அப்புறம், இரண்டு வருடங்கள், நான் சிங்கப்பூர் நூலகத்தின் குறிப்பு பகுதியில் (reference section) இந்த புத்தகத்தைப் பார்க்கும் வரையில், நான் சே குவேராவை மறந்தே போயிருந்தேன்.

நான் புத்தக அலமாரியிலிருந்து அந்த புத்தகத்தை எடுத்து வந்து, மேஜைமேல் வைத்து, முன்னுரையைப் படிக்கும் வரை, சத்தியமாக எனக்கு சே குவேரா, யாரென்று தெரியாது.

முன்னுரையைப் படித்து முடித்த எனக்கு, சற்று வியப்பாகவும், ஆச்சரியமாகவும் கூட இருந்தது, நல்ல வருமானம் தரக்கூடிய டாக்டர் தொழிலை விட்டு விட்டு, புரட்சியென்று யாராவது சுற்றித் திரிவார்களா என்ன? சமகாலத்தில், புரட்சி என்ற ஒரு சொல், அருங்காட்சியகத்தில் மட்டுமே காணக்கிடைக்கின்ற ஒன்றாக ஆகிவிட்ட காரணத்தால் கூட, நான் இவ்வாறு நினைத்திருக்கலாம்.

சே குவேரா, பற்றி, அறிந்தவர்கள், இந்த ‘பாரா’வை புறக்கணிக்கவும். இது ஒரு எளிய அறிமுகம். சே குவேரா, அர்ஜெண்டினாவில் பிறந்து, மருத்துவக் கல்லூரியில் பயின்று, மாணவனாக இருக்கும் பொழுதே, சரித்திரப் புகழ் பெற்ற, லத்தீன் அமெரிக்கா முழுவதும் தன் மோட்டார் சைக்கிளில் கடக்கும், பயணத்தை செய்தார். அந்தப் பயணத்தின் பொழுது தான் தனது மக்களின் வறுமையை கண்கூடாகக் கண்டார். அவர் ஒரு புரட்சியாளனாக மாறுவதற்கான விதையும் அப்பொழுதே தூவப்பட்டது. பிற்காலத்தில் அவர் கெரில்லா (கொரில்லா என்று சொல்லக்கூடாது என்று மதன் சொன்னது ஞாபகம் இருக்கிறது!) (Guerilla) ,படைத் தளபதியாக இருந்தார். கியூபாவின் விடுதலைக்கு காரணமாகவும் இருந்தார். கெரில்லா யுத்தத்தைப் பற்றி அவர் பல நூல்கள் எழுதியுள்ளார். இறுதியில் பொலிவியாவில், அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.

அதற்கப்புறம் நான் சிங்கப்பூரில் இந்தப் புத்தகத்தை தேடி அலைந்து விட்டேன். இந்தியா சென்றிருக்கும் என் நண்பரிடம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறேன். வாங்கி வருகிறாரா பார்ப்போம்.

இந்த சமையத்தில் தான், மோட்டார் சைக்கிள் டைரீஸ், என்ற படத்தின் குறுந்தகடு (CD) எனக்கு கிடைத்தது.இது ஒரு லத்தீன் அமெரிக்க திரைப்படம். ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருந்தது. இதுவே எனது முதல் வேற்று மொழித் திரைப்படம். வேற்று மொழித்திரைப்படங்கள் பார்ப்பதில் ஒரு அசௌகரியம் இருக்கிறது. வசனங்களைக் கவனிக்க சப் டைட்டிலைப் பார்த்தால், நடிகர்களின் முக பாவனைகளை கவணிக்க முடியாமல் போகிறது. முகபாவங்களை கவனித்தால் வசனங்களை பின்பற்ற (follow) செய்ய முடிவதில்லை.
இந்த திரைப்படத்தைப் பற்றி முன்பே நான் அறிந்திருக்கிறேன். நல்ல படம் என்பது மட்டுமே எனக்கு தெரியும். சிடியின் பின்புறம் பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி, இது சே குவேராவின் இளமைக் காலத்தை, அவரது சரித்திரப் புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள் பயணத்தை பற்றிய படம். பயோகிராபி (Biographical).

படம், சேகுவேரா தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்குவதிலிருந்து, ஆரம்பிக்கிறது. சே குவேரா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டவர். அதுவும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆஸ்துமா நோய்வாய்ப் பட்டவர், கெரில்லா யுத்தங்களை செய்ய முடிந்தது, என்பது மிகவும் வியப்பான, கவணிக்கப் பட வேண்டிய ஒன்று.

தனது காதலி, அவளுக்கு அமெரிக்காவில், நீச்சல் உடை வாங்கிவர, தன்னிடம் கொடுத்த, 20 டாலர் பணத்தை தன் நண்பனிடமிருந்து பாதுகாத்து, தனக்கு மிகவும் தேவைப்பட்டபொழுதும் அதை உபயோகிக்காது, பிறகு, ஒரு கல்லுடைக்கும், சாப்பாட்டிற்கு வழியில்லாத, தம்பதியினரிடம் கொடுப்பது அவரது நேர்மையையும், கனிவையும், சமூகப் பொருப்புணர்வையும் காட்டுகிறது.

படத்தின் ஒரு வசனம். எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட : உன் ஒவ்வொரு மூச்சிலும், நீ போரிடு. சாவை நரகத்திற்கு போகச்சொல்.

படம் முடிந்தும், படத்தின் காட்சிகளும், சே குவேராவின் பிம்பமும், ஒரு நாய்க்குட்டியைப் போல நம்மைச் சுற்றி சுற்றி வருகின்றன. படத்தின் சிந்தனைகள், ஒரு அலையைப் போல, மனதில் ஓயாமல் அடித்துக் கொண்டேயிருக்கிறது.

மிக நீண்ட நாட்களுக்கு பின் புரட்சி என்ற வார்த்தையை நான் மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொண்டேன்.

புத்தகத்தை எப்படியும் இந்த வருடத்திற்குள் படித்துவிடுவேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s