அமுதத்தை இட்டாள்

(சரித்திர சிறுகதை)
(நீண்ட நெடுங்காலத்திற்கு முன், திருக்கோவலூர் என்னும் ஊரில்)

‘அய்யனே, தாங்கள் எப்பொழுது வருவீர்கள்’ என்று கேட்டாள் அந்தச் சின்னஞ்சிறு சிறுமி. பத்து அல்லது பதினோறு வயது தான் இருக்கும் அந்தப் சிறுமிக்கு. குழந்தைத்தனம் மாறாத முகமும், இன்னமும் ஒரு மழலையின் குரலுமே கொண்டிருந்தாள் அவள். மழை மேகம் திரண்டு கொண்டிருந்த அந்த மாலைப் பொழுதில், காலையில் பக்கத்துக் காட்டில் திரட்டிய சுள்ளிகள், அடுப்பில் கணலாக இருக்க, மண்சட்டியை இறக்கி கீழே வைத்தாள். பின் சிறிதளவு நீரைக்கொட்டி அடுப்பை அனைத்தாள். அருகிலிருந்த மண் சட்டியில் கூழ் இருந்தது. ‘தெரியவில்லை தாயே! மழை நிற்பதற்குள் வந்துவிடுவேன். சோழ நாட்டில் மழைக்கு பஞ்சமேது? ம்..ம்.. வேடுவனும் உடன் வருகிறான்.’ என்று தன் மகளைப் பார்த்து கூறிக்கொண்டே, மரப் பலகையில் அமர்ந்து கொண்டான். அந்த பெண், மற்றொரு மண்சட்டியில் கூழை ஊற்றிவிட்டு, கீரைக்கறியை சுடசுட எடுத்து வைத்தாள். மழை சிறு துளிகளாக இறங்கிக் கொண்டிருந்தது. ஓலைக் கூரையில் பட்டுத் தெரித்தது. மழை ஓசை இசைப்பெருவெள்ளமென ஓங்கி ஒலித்தது. மண் வாசனை, கீரை வாசனையையும் விஞ்சிவிட்டிருந்தது. ஒரு திவலை குடித்த இடையன், கீரைக்கறியை எடுத்துக் கொண்டான். மண்வாசனையையும், கீரைக்கறியையும் ஒரே நேரத்தில் புலன்கள் ரசித்துக்கொண்டிருக்க, நா அதற்கு ‘சப் சப்’ என்று எதிர்வினை காட்டிக்கொண்டிருந்தது. ‘மகளே! உன் அன்னையின் கைப் பக்குவத்தையும் மிஞ்சிவிட்டாய் தாயே! உன் அன்னை இப்பொழுது இருந்திருந்தால், உன்னை மெச்சிப் புகழ்ந்து பாடியிருப்பாள்’ என்ற இடையன், சிறிது நேரம் கூரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அய்யனே. தாங்கள் தான் எனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கிறீர்களே! ஒரு குறை இல்லை தந்தையே!’ என்றாள் அந்த சிறுமி.

தன் கைத்தடியை எடுத்துக் கொண்டு இடையன் புறப்பட்டபொழுது, ‘அம்மா! ஆடுகளை நினைத்து நீ வருத்தம் கொள்ளாதே. மழையில் நீ நனைந்து, உன்னிடமிருக்கும் ஒரே ஆடையையும் நீ நனைத்துக் கொள்ளாதே. நீயும் கூழைக் குடித்துவிட்டு, அமர்ந்திரு. நான் விரைவில் திரும்பிவிடுவேன். இந்த விளைச்சலில் உனக்கு மாற்று ஆடை வாங்கிகொள்ளலாம்’ என்றான். ‘கவலையில்லை அய்யனே. காலம் வரும்பொழுது வாங்கிக்கொள்ளலாம். சென்று வாருங்கள் தந்தையே!’ இடையன், புண்ணகைத்துவிட்டு, வெளியே சென்றான்.

தன் தந்தையின் வழி தடங்களில், மழை தன்னை நிரப்பிக் கொள்வதையே, வெகு நேரம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த சிறிய பெண். தந்தை கூழ் குடித்த அந்த மண்சட்டியை மழை நீரிலே சுத்தம் செய்துவிட்டு, சாப்பிட மனமில்லாமல், மழையையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

மழை வலுத்திருந்தது. மழையின் பலத்த துளிகளில், ஒரு கிழவி, ஊண்று கோலைப் பற்றிக்கொண்டு, மழையைவிட வேகமாக, மழையைப் போல் தள்ளாடிக்கொண்டு வருவதைக் கவனித்தாள்.’வாரிக்கொடுக்கும் மழையே. நீ அவள் கிழவி என்பதை அறியாயோ? உன் கனிவுக் கரம் கொண்டு, அவளது கணிந்த உடலை, என் குடிசைக்கு வரும் வரையில் தழுவாமல் தான் இரேன்!’ என்று மழை தேவனை பணித்துக்கொண்டிருந்தாள்.

தள்ளாடிய வயதில், நெடுந்தூரம் பயணம் செய்த கிழவி, மழையரசனிடம் விடுபட்டு, அந்த சிறு குடிசையில் தஞ்சம் புகுந்தாள். அந்த சிறிய பெண், அந்த கிழவியை, ‘வாருங்கள்! வாருங்கள் மூதாட்டியே! மழை உங்களுக்காக நிற்காது. அப்படி நின்றால் மண் செழிக்காது! நன்றாக நனைந்திருக்கிறீர்களே. துவட்டிக்கொள்ளுங்கள்’ என்று கிழவி துவட்டிக்கொள்ள ஆடை தேடினாள். இடையன் தன் ஒற்றை துணியை சுற்றிக்கொண்டு சென்று விட, மாற்றுத் துணி தேடினாள். வேறு துணி இல்லை. கிழவி குளிரில் நடுங்குவதைக் கண்ட அந்த சிறுபெண், பாரியை விடவும் கொடையாளியானாள். மாற்றுத்துணி வேறில்லாத பொழுதும், தன் ஒற்றை துணியான, அந்த நீல நிற சிற்றாடையை அவிழ்த்துக் கொடுத்தாள். ‘தலை துவட்டிக்கொள்ளுங்கள், பாட்டி!’ என்று சொல்லிவிட்டு, உள்ளே ஓடினாள். உள்ளே என்றால் என்ன? ஒரு மூலைக்குத்தான்.

திடுக்கிட்டு விழித்த கிழவி, அச்சிறுபெண்ணின் இப்பெருஞ்செயல் கண்டு விக்கித்து நின்றாள். மானம் காக்க, மூலைக்கு ஓடிய அந்த சிறுமியை போற்றினாள். வார்த்தை சிக்காமள் துணுக்குற்றாள்.

அந்த சிறுமி மானம் காக்கவா ஓடினாள்? இல்லை. இல்லவே இல்லை. ஓடிய சிறுமி, ஒரு மண்சட்டியில் மீதமிருந்த கீரைக்கறியையும், கூழையும் எடுத்துக்கொண்டு வந்தாள். ‘பாட்டி, தாங்கள் மழையில் நனைந்து சோர்வாக இருப்பீர்கள். துவட்டிக்கொண்டு இந்த சூடான கீரைக்கறியை உண்ணுங்கள்’ என்றாள்

மிகுந்த பசியுடன் வந்த கிழவி, அந்த சிறுமியின் முகம் கூட பார்க்காமல், பரிமாறும் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

****

சோழ தேசத்தின் தலைநகர். ஒரு நள்ளிரவு. நல்ல நிலவு. ஒரு மண்டபத்திலே கூனிக் குறுகிய கிழவி காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். நகர சோதனைக்காக உருமாறி வந்த சோழ மன்னன் கிழவியைப் பார்க்கிறான். இவளைக் கண்டு யார் என்று அறிய ஆவல் கொண்டு ‘அம்மே நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?’ என்றான். கிழவியின் கூர்ந்த கண்கள் அவன் யார் என்று அறிந்து கொள்கின்றன.
கிழவியிடம் பேசிய மன்னன், அவள் புழமைகண்டு வியக்கிறான்.
கிழவியின் கவிப்புழமையில் மயங்கிய மன்னன், மேலும் கிழவியிடம் கதை கேட்க ஆவலாகிறான்.
கிழவி தன் முடிப்பை அவழ்த்து சிறிய குழந்தைகள் போட்டுக் கொள்ளக்கூடிய ஒரு நீலச்சிற்றாடையை எடுக்கிறாள். ‘அப்பனே இதைப் பார்த்தாயா?’ என்று மன்னனிடம் கெட்டுக் கொண்டே, பின் வருமாறு கூறாலானாள்,

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து – பொய்யாய்
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டாள்
கடகம் செறிந்தகை யாள்

அந்த கிழவியை யாரென்று நான் சொல்லவும் வேண்டுமோ!

***

பிகு
புதுமைப்பித்தன் “கூழுக்குப் பாடி” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஔவையாரின் பாடலுக்கு என் பார்வையில் ஒரு திரைக்கதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s