என்ன சத்தம்?

(சிறுகதை)

“ப்யூரட்டை எடுத்துக்கொள்ளவும். அதில் 200 மில்லிலிட்டர் பொட்டாஷியம் பெர்மாங்கணேட் ஊற்றவும். பிப்பட்டை எடுத்து அதில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட்”
“ஏய்..ஏன் இப்படி கத்தற. மணி என்ன ஆகுது தெரியுமா?’ என்றேன். இருந்தாலும் எனக்கு மணி என்ன என்று தெரியாது. என்ன ஒரு 12:45 இருக்கும். நாளைக்கு என் அக்காவுக்கு பரிட்சை. அவள் படித்து கொண்டிருக்கிறாள். அதற்காக இப்படியா கத்த வேண்டும். எனக்கும் பரிட்சை தான். அதற்காக இப்படியா யாராவது இரவு 12:45 மணிக்கு கத்திக் கொண்டிருப்பார்கள். நான் தான் என் அக்காவுக்கு காவல். நானும் புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் படிப்பை விட தூக்கம் தான் வருகிறது. இதோ இப்பொழுது தூக்கம் கெட்டுவிட்டது. ‘டேய்! தூங்கறதா இருந்தா, அந்த ரூம்ல போய்த் தூங்கு. நான் இப்படித்தான் கத்துவேன்’ அப்பாடா இதுதான் சந்தர்ப்பம் என்று எழுந்து பக்கத்து ரூம் போய்விட்டேன்.

பரிட்சை ஹாலில் கொஸ்டீன் பேப்பரைப் பார்த்ததும் எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. பெரிய கேள்விகளில் ஒன்று கூட எனக்கு தெரியவில்லை. வியர்வை பெருக்கெடுத்தது. எத்தனை தெய்வங்களை வேண்டினேன்? ச்சே.. எல்லா தெய்வங்களும் இப்படி கை விட்டு விட்டனரே. கண்டிப்பாக பெயில் தான். மறுபடியும் பத்தாம் கிளாசா? அதுவும் அந்த ஒன்பதாப்பு நாராயணன் கூட படிக்கனுமா? ஐயோ.. அதை விட கேவலம்..அசிங்கம் ஒன்றும் இல்லை. அது மட்டும் நடக்கக் கூடாது. நாராயணனும் பெயில் ஆகி ஒன்பதாப்பிலே இருந்து விட்டால் நன்றாக இருக்கும். அது நடக்குமா? வேறு வழியில்லை பிட்டை எடுத்துவிட வேண்டியதுதான்.ம்ம்..இதெல்லாம் தெரிந்துகொண்டு தான் ஒரு புல் ஸ்கேல் பேப்பரை 24 ஆக மடித்து பிட் தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். சட்டைப் பையில் தான் இருக்கிறது. பஸ் பாஸில் செருகி வைத்திருக்கிறேன். திடுதிப்பென்று ஐந்து பேர் ஹாலுக்குள் நுழைந்தனர். ப்ளையிங் ஸ்குவாட். என்னடா இது சோதனை மேல் சோதனை. பெயிலானால் அடுத்த வருடம் எழுதிக்கொள்ளலாம். பிட்டைப் பிடித்தால் மூன்று வருடத்திற்கு எழுத முடியாதே. முன் இருக்கும் மாணவர்களை செக் செய்து கொண்டிருந்தார்கள். திருட்டுமுழி முழித்தவர்களின் சட்டைப் பைகளை துலாவி துலாவி சோதனைப் போட்டுக்கொண்டுவந்தனர். எனக்கு இயற்கையிலே திருட்டு முழிதான். ஐயையோ மறுபடியும் தெய்வங்களை வேண்டினேன். கடவுளே. முருகா. காப்பாத்து. அருகில் வந்த ப்ளையிங் ஸ்குவாட். எழுந்திருடா என்றார். குரல், ஆனால் இனிமையாக இருக்கிறதே. ‘டேய். எழுந்திருடா. எழுந்திருடா.’ யாரோ என்னை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். கண் முழித்துப் பார்த்தேன். என் அக்கா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு எழுப்பிக்கொண்டிருந்தாள். அப்பாடா…கனவு போலிருக்கிறது? விடிந்துவிட்டதா என்ன?. இல்லை. கும்மிருட்டு. எழுந்து உட்கார்ந்தேன். ‘என்ன?’ என்றேன் எரிச்சலுடன். ‘பயமா இருக்குடா’-அக்கா. ‘எதுக்கு’ – நான். குழந்தை அழும் சத்தம் கேட்குது. கவனிச்சியா?’ – அக்கா. ‘குழந்தைனா அழுகத்தான் செய்யும். போக்கா. போய் படு.’ எனக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. அது என்ன கேள்வி? கனவில் கொஸ்டீன் பேப்பரில் பார்த்த கேள்விகளை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்தேன். ம்..ஹீம். ஒன்றும் நினைவில் இல்லை. அப்பொழுதுதான் அந்த சத்தம் கேட்டது. குழந்தை அழும் சத்தம். மிக அருகாமையில். எனக்கு தூக்கம் கலைந்து விட்டது. அட ஆமாம்! ஆனால் இங்கு பக்கத்து வீட்டில் கைக்குழந்தை யாரிடமும் கிடையாதே. ‘டேய். வெளியே போய் பாப்பமா?’ அக்கா கேட்டாள். கதவை திறந்தோம். காற்று வந்தது.(?) அக்கா முதலில் எட்டிப் பார்த்தாள். நான் பின்னாடியே சென்றேன். ம்..ஹ¤ம். யாரையும் காணோம். எதிர் வீட்டில் இருந்துதான் வந்தது. ஒருவேளை யாரேனும் விருந்தினர் வந்திருக்கக்கூடும். விருந்தினருக்கு குழந்தை இருக்கக்கூடும். நானும் அக்காவும் மறுபடியும் வீட்டிற்குள் வந்து தூங்கிவிட்டோம். மறுநாள் காலை தெருவெங்கும் இதே பேச்சு. எல்லோருக்கும் கேட்டிருக்கிறது குழந்தை அழும் சத்தம். மிகச் சத்தமாக அழுதிருக்கிறது போல. விசயம் என்னவென்றால், யார் வீட்டிலும் குழந்தை இல்லையென்பதே. எதிர் வீட்டிற்கும் விருந்தினர் யாரும் வரவில்லை.

நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.பரிட்சை சுமூகமாக முடிந்தது. கண்டிப்பாக பாஸ் செய்து விடுவேன். நாளைக்கு கணக்கு பரிட்சை. ‘தவளையின் இருதயம்..’ அக்கா படித்துக்கொண்டிருந்தாள். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நான் கணக்கு நோட்ஸைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘டேய், பாலு பார்த்தியா? நேத்து குழந்தை அழும் சத்தம் எல்லோருக்கும் கேட்டிருக்கிறது. ஆனால் சின்னக்குழந்தையே இல்லை. ஒருவேளை வேறு ஏதாவது…’ ‘அக்கா. பேசாம இருக்கியா. அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது.’ அப்பொழுதுதான் கேட்டது. குழந்தை அழும் சத்தம். இந்த முறை மிகத் தெளிவாக. ‘டேய்.பார்த்தியா.மறுபடியும் கேட்குது.’ ‘அக்கா. நான் தூங்கப்போறேன். நீ படிச்சிட்டு வந்து படு!’ நான் அவசர அவசரமாக அப்பா பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டேன். மறுநாள் பலரது வீட்டில் எழுமிச்சை தொங்கிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலும் தான்.

நாளை எனக்கு வரலாறு. அக்காவுக்கு பரிட்சை முடிந்துவிட்டது. ஆனாலும் இந்திரா சௌந்திராஜன் கதையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ரொம்பத் தேவைதான். அதுவும் ராத்திரி நேரத்தில் இந்திராசௌந்தர்ராஜன் கதை. ரொம்பநேரம் படிக்கவேண்டாம் வேகமாகவே தூங்கிடுங்க என்று அம்மா சொல்லிவிட்டுப் போனார்கள். அக்கா தீவிரமாக கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல் புத்தகத்தை வைத்துக்கொண்டே தூங்கிவிட்டேன். அக்பர் கனவில் தோன்றவே, முழித்துக்கொண்டு புத்தகத்தைப் புரட்டினேன். அக்கா இப்பொழுதும் கதையைப் படித்துக்கொண்டிருந்தாள். ‘ச்..சே. பரிட்சை முடிஞ்சதுனா தூங்கவேண்டியதுதானே?’ எனக்கு பொறாமையாக இருந்தது. மறுபடியும் அந்த சத்தம். குழந்தை அழும் சத்தம். அக்கா நிமிர்ந்து பார்த்தாள். ‘பாலு டார்ச் எடுடா. போய் பார்ப்போம்’ ‘வேண்டாம்கா. நான் வரலை’ ”ஆம்பிளைப் பையன் தானடா நீ? நான் போறேன். நீ வரதுனா வா. வராட்டினா போ.’ அக்கா டார்ச் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வேறு வழியில்லை. இரத்த பாசம். பின்னாலையே சென்றேன். கதவைத் திறந்தோம். காற்று வரவில்லை. யாரும் இல்லை. கப் சிப். எங்கள் வீட்டுக் கொய்யா மரம் கூட குழந்தை அழும் சத்தத்தை இரசித்துக் கொண்டு அசையாமல் நின்று கொண்டிருந்தது. மிகத்தெளிவாகக் கேட்டது குழந்தை அழும் சத்தம். எதிர் வீட்டு தொழுவத்திலிருந்துதான் கேட்டது. ‘பாலு அங்க இருந்துதான் சத்தம் வருது. வா போகலாம்’ ‘என்னது! போறதா? நான் வரலை.’ என்னைக் கண்டுகொள்ளாமலே சென்றாள் அக்கா. நானும் சென்றேன். உள்ளே சென்று டார்ச் அடித்தாள். பட்டென்று கொட்டத்து விளக்கு எரிந்தது. எதிர் வீட்டுக் காரருக்கும் கேட்டிருக்கவேண்டும். அவரும் வந்து விட்டார். இப்பொழுது சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து சத்தம் எங்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்து கேட்டது. அக்கவும் நானும் எதிர்வீட்டுக்காரரும் எங்கள் தோட்டதிற்குள் நுழைந்தோம். எங்கள் தோட்டத்தில் குழந்தையா? எங்கள் தோட்டம் அடர்த்தியாக இருக்கும். மரங்கள் நிறைய. டார்ச் அடித்தது தான் தாமதம். படாரென்று சின்ன நாய் சைசில் ஒரு பூனை தாவிக்கொண்டு வெளியே ஓடியது. ‘ச்சே. வெறாகா?’ என்றார் எதிர்வீட்டுக்காரர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அக்காவுக்கும் புரிந்திருக்கவில்லை என்பது அவள் முழியிலிருந்து தெரிந்தது. எங்கள் வீட்டிலும் விளக்கு எரிந்தது. அப்பா வெளியே வந்தார். ‘அது ஒன்னும் இல்லை வாத்தியார் சார், வெறாகுதான் இப்படி கத்தியிருக்கு’ என்று சொல்லிவிட்டு எதிர்வீட்டுக்காரர் போய்விட்டார்.

நாங்களும் வந்து படுத்துக்கொண்டோம். அப்பாவிடம் கேட்டேன். ‘வெறாகுன்னா என்னாப்பா?’ ‘வெறாகுன்னா காட்டு பெண் பூனை. அது குட்டி போட்டால் இப்படித்தான் குழந்தை மாதிரி கத்தும். ஆனால் பொதுவா ஊருக்குள்ளே வராது. காட்டிலேதான் இருக்கும். என்னமோ தெரியல இப்ப ஊருக்குள்ளே வந்திருக்கு. நாளைக்கு பரிட்சை இருக்கில்ல பேசாம படு’ என்றார்.

எங்கள் வீடே ஊரின் ஒதுக்குப்புறத்தில் தான் இருக்கிறது. பஸ்ஸை விட்டு இறங்கி 20 நிமிடம் நடக்கவேண்டியிருக்கிறது. எஙகள் வீட்டைத் தாண்டியும் இன்னும் நிறைய வீடுகள் இருக்கின்றன. நாங்கள் காட்டிற்குள் வந்திருக்கோமா? அல்லது பூனை நாட்டிற்குள் வந்திருக்கிறதா? என்று விட்டத்தில் சுழலும் ப்பேனையே வெறித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன். நாளைக்காலை அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுபடியும் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நான் கண்களை மூடிக்கொண்டேன். குழந்தை அழுதுகொண்டேயிருந்தது. விடியும்வரை.

3 thoughts on “என்ன சத்தம்?

  1. // நாங்கள் காட்டிற்குள் வந்திருக்கோமா? அல்லது பூனை நாட்டிற்குள் வந்திருக்கிறதா? //நல்ல கேள்விங்க! 🙂 // ஒரு புல் ஸ்கேல் பேப்பரை 24 ஆக மடித்து //பேப்பரை 7 முறைக்குமேல் மடிக்க முடியாது என எங்கோ படித்த ஞாபகம்!

    Like

  2. இளவஞ்சி: பதிவைப் படித்தமைக்கு நன்றிஉண்மைதானெ இளவஞ்சி, இன்று ஏரிகளையும் நாம் விட்டுவைக்கவில்லை. நாளை கடல் கண்ணிகள் நம் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடலாம், டெடி பியருக்கு பதிலாக.24 என்பதை ஒரு ஹாஸ்ய உணர்வுக்காக மட்டுமே எழுதினேன். மற்றபடி 7 என்ற கணக்கு ஒரு பேப்பரை, சரி பாதியாக மடித்தாலே பொருந்தும். நாமக்கல் சிபி : பீதியாகவா இருந்தது? ஆனாலும் உங்களுக்கு ஹாஸ்ய உணர்வு அதிகம். :))

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s