நேற்று இரவு சன் டீவியில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பைரேட்ஸ் ஆப் த கரீபியன் பார்க்கப் போய் இந்த நிகழ்ச்சியை முதலில் இருந்து பார்க்க குடுத்துவைக்கவில்லை எனக்கு. பல நடிகர்களின் பொன்னான பேச்சுகளைக் கேட்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தம் தான். எத்தனை நடிகர்கள், அப்பப்பா. அனைவரையும் ஒரு சேரப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்கிறது. மேலும், வலைபதிவுகளில் பலர் சிவாஜி சிலையைப் பற்றி விவாதித்தும் வந்திருக்கின்றனர். வைக்கவேண்டும். வைக்கக்கூடாது. வைத்தால் பராவாயில்லை. வைத்து விட்டுத்தான் போகட்டுமே, நமது ஹாலிலா வைக்கிறார்கள். என்பதைப் போன்று பல விவாதங்கள். நம்மிடம் விவாதங்களுக்கு பஞ்சமா என்ன? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மனம் இருக்கிறதா இல்லையா என்று அரசனே விவாதத்தை தொடங்கிய நாடல்லவா இது. அதற்கு ஒரு நீதி வழங்க அல்லது ஒரு முடிவு ஏற்படுத்த உலககைக் காக்கும் கடவுளே இறங்கி வந்த விவாதம் அல்லவா இது. சும்மா சொல்லக்கூடாது. சிவாஜி கணேஷன் சார் நன்றாக நடித்திருப்பார். அல்லது சிம்மக்குரலில் கர்ஜித்திருப்பார். படமாகப் பார்க்காமலே சும்மா கதை வசனம் மட்டும் கேட்டாலே போதும் படம் கண்ணில் விரியும். அப்படி யார் நடித்தார்கள். நடிக்கிறார்கள். அல்லது நடிப்பார்கள். ஏன்னா கலையை ரசிப்பதற்கும் ஒரு மனது வேனும் பாருங்க. அது தமிழனுக்கு அதிகம் இருக்குதுங்கிறேன்.
சும்மாவா. எத்தனை நடிகர்களை முதல்வர் ஆக்கியிருக்கிறோம். ஆனா உண்மையிலே நமக்கு ரசிப்புத்தன்மை அதிகமுங்க. ரசிப்புத்தன்மைனுதானுங்க சொன்னேன். சகிப்புத்தன்மைன்னும் சொல்லலீங்க. எனக்கு சிவாஜி சாரை நிறைய புடிக்குமுங்க. அவரோட கடைசி காலத்து, ‘ஜாதீய முற்போக்கு’ படங்களை தவிர்த்துட்டா, பல படங்கள் எனக்கு பிடித்த படங்கள் தானுங்க. உத்தமபுத்திரன், மனோகரா, பராசக்தி, அந்த நாள், பாசமலர், பாவமன்னிப்பு, தெய்வமகன், புதியபறவை, முதல்மரியாதை, வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படீன்னு அடிக்கிகிட்டே போகலாம். உத்தமபுத்திரனின் இளவரசர் (இப்போ புலிகேசி, புலிகேசி!) போல இதுவரைக்கும் யாரும் ஸ்டைல் பண்ணதில்லை என்பது உண்மை. அதுவும், புதிய பறவையில ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலில் அப்படியே ஸ்டைலாக புகை விடுவாரே பார்க்கலாம். அமர்களமுங்க. நல்லவேளை ‘தமிழ் குடிதாங்கி’ அப்ப இல்லீங்க.ஆனா அப்பவெல்லாம் சுற்றுச் சூழல் இந்த அளவுக்கு மாசு படவில்லை பாருங்க. அதுவும், அப்ப இருந்த இளைஞர்கள் ரொம்ப நல்லவங்க பாருங்க. இப்பத்தான் நாம கெட்டு குட்டியசுவரா போயிட்டம். சினிமா பாத்து பாத்து கெட்டுப் போயிட்டம். அப்புறம் பாசமலரில் பல கெட்டப்புங்க. ஏழை வெகுளியாக, பின்னர் ஸ்டைலான பணக்காரனாக. என்ன வித்தியாசம் காட்டினார். அட அடா. நம்ப ரஜினி அங்க புடிச்சாருங்க. அப்புறம் அண்ணாமலை, படையப்பா சூப்பர் டூப்பர் ஹிட்டுங்க. நல்லவனுக்கு நல்லவனையும் சேத்துக்கோங்க. அட அது அப்பங்க. இப்ப தலைவரு, எல்லாருக்கும் நல்லவருங்க. ரொம்ம்ப நல்லவருங்க. வேற வழி?. எப்படி இருந்த அவரு இப்படி ஆகிட்டாரு.ஹ¤ம்.அப்புறம், தெய்வமகனுங்க. ‘டாட்’ ‘டாடி’ ன்னு ஒரு நிமிஷம் கூட நிக்காம, ஸ்டைலா, நகம் கடிச்சுக்கிட்டு ஒரு மேல்தட்டு பையனா நடிச்சிருப்பாரு பாருங்க. தூள் டக்கருங்க. அந்த படத்திலே, வயதான தந்தையாகவும், இளவயது முகத்தில் கறை படிந்த, இன்பீரியார்டி காம்ப்ளக்ஸ் இருக்கிற ஆளா நடிச்சிருபாருங்க. யாருங்க இப்ப அப்படிப் பண்ணுவா? மனசைத் தொட்டு சொல்லுங்க. வீரபாண்டிய கட்டபொம்மனுங்க. நம்ப யாராச்சும் வீர பாண்டிய கட்டபொம்மன பார்த்திருக்கோங்களா? ஆனா, பாடபுத்தகத்தில கூட சிவாஜிசாரு தானுங்க வீர பாண்டிய கட்டபொம்மனா, சும்மா அப்படியே, ஜோரா, கெத்தா, கம்பீரமா இருக்காரு பாருங்க. கட்டபொம்மன் இப்படித்தான் இருந்திருப்பாரோ? நமக்கு தெரியாததும் வசதிதானுங்க. என்ன சொல்றீங்க? இல்லீனா, யாராச்சும், கட்டபொம்மனுக்கு மீசை 7 செ.மீ தான், ஆனால் படத்தில் சிவாஜி 12 செ.மீ மீசை வெச்சிருக்காருன்னு கேஸ் போட்டாலும் போட்றுவாங்க. கேஸ¤க்கா பஞ்சம்? குஷ்பு மேல 27 கேஸ் போட்டம்ல. போட்டம்ல. என்ன நான் சொல்றது?
அட. அவரு தொழில அவரு நல்ல செஞ்சாரா இல்லியா? அதச் சொல்லுங்க. நாளைக்கு, நல்ல பல் குத்துன பல் டாக்டருக்கும், நல்ல இருதய ஆப்பரேசன் செஞ்ச ‘பைபாஸ்’ டாக்டருக்கும், நல்ல ஸ்பெஷல் டீயூசன் வெச்சு, சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கும், வாத்தியாரம்மாவுக்கும், நல்லா விழாம கட்டடம் கட்டின இஞ்சினீயருக்கும், நல்ல குப்பை அள்ளுன துப்புறவாளர்களுக்கும், எங்கையும் மோதாம பஸ், ‘இப்பிடிக்கா’ கவுத்தாத லாரி ஓட்டுனருக்கும், ஒழுங்கா சில்லரை மீதம் கொடுத்த கண்டக்டருக்கும், நல்ல விவசாயம் செஞ்ச அல்லது கடனை ஒழுங்கா கட்டின விவசாயிக்கும், கட்-காபி-பேஸ்ட் செய்யாத புரோகிரமருக்கும், excel sheet அ வெச்சுக்கிட்டு ஓபி அடிக்காத புராஜக்ட் மேனேஜருக்கும், சிலை வெச்சா முதல்வருக்கு புண்ணியமாப் போகுமுங்க.
ஆனா நாமெல்லாம் டீவியில் பேட்டி கொடுத்தா யாராவது பாப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? அதுவுமில்லாம, சிவாசி சார் முதல்வருக்கு நண்பருங்க.
சரி. நமக்கெதுக்குங்க, இதில முக்கியமா, நடிக-நடிகயைரை பேட்டி எடுக்கும் போது, மொதல்ல சினேகாவையும், அதுக்கப்புறம் உடனே நம்ப சிரிகாந்தும் (அதாங்க. கொழுந்தானாருங்க. அட அது பெரிய கொடுமைங்க) வந்தாருங்களே கவனிச்சீங்களா? என்ன நினைக்கிறீங்க?ம்…ம்….ம்… அட! நமக்கு எது முக்கியமோ அதத்தானே பாக்கனும். என்ன நான் சொல்றது?