வேட்டையராஜா, கால் நீட்டி களைப்புடன் படுத்துக்கிடந்தான். அவன் முகம் விட்டத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டேயிருந்தது. நான் அவன் பக்கத்தில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு, ஆனந்தவிகடன் படித்துக்கொண்டிருந்தேன். நீண்ட நேரம் அமைதியாக இருந்த வேட்டையராஜா, திடீரென்று கல கலவென்று சிரிக்க ஆரம்பித்தான். கைதட்டி மேலே தெரியும் மின்விளக்கைக் காட்டிக் காட்டி சிரித்தான். திடுக்கிட்டு திரும்பிய என்னிடம் விளக்கைக் காண்பித்து, மீண்டும் சிரித்தான். நான் மேலே தெரியும் விளக்கைப் பார்த்தேன், அது சதுரவடிவில், வெள்ளை நிரத்திலான ஷீல்டால் மறைக்கப்பட்டு விட்டத்தோடு ஒட்டிக்கொண்டு, அந்த இரவின் அமைதியோடு கலந்திருந்தது. அதில் சிரிப்பதற்கென்ன இருக்கிறது? இங்க வா, என்றான் வேட்டையராஜா, சிரித்துக் கொண்டே. அவனருகில் சென்று, அன்னாந்து விட்டத்தைப் பார்க்கும் பொழுது தான் தெரிந்தது, அங்கே இருந்தது, ஒரு மூட்டைப்பூச்சி.
மூட்டைப்பூச்சி முதலில் எங்கள் வீட்டில், நான் இருக்கும் ரூமிற்கு அருகில் இருக்கும் ரூமில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரூம் தான் மதர் ஷிப். இண்டிப்பெண்டன்ஸ் டே படத்தில் வரும் ஏலியன்ஸ் போல மூட்டைப்பூச்சி அந்த ரூமிலிருந்து தான் வந்துகொண்டேயிருந்தது. இருக்கிறது. முதலில் நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. முஸ்தபாவில் சென்று மருந்து வாங்கிவந்து கண்ணில் கண்ட மூட்டைப்பூச்சிகளை மட்டுமே பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். பிறகு எங்கள் எதிற்வினையால் கலவரமடைந்த மூட்டைப்பூச்சி, வீடெங்கும் தென்பட ஆரம்பித்த பொழுதுதான் நாங்கள் திகிலானோம்.
வேட்டையராஜா, அவன் அருகில், ஒரு மீட்டர் சுற்றளவிற்கு மூட்டைபூச்சி எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடுவான். அல்லது அவனுக்கு மூக்கு வேர்த்துவிடும். சிக்ஸ்த் சென்ஸ் (?!). மூட்டைப்பூச்சியைப் பார்த்தவுடன் ஒரு குதி குதித்து ஒரு நாட்டியமாடுவான் பாருங்கள், அட அடா, அவ்வளவு அழகாக இருக்கும். மூட்டைப்பூச்சி மருந்தைத் தேடிக்கண்டுபிடித்து (சில சமையங்களில் யார் ரூமில் இருக்கிறதென்று தெரியாது) வந்து, அந்த மூட்டைப்பூச்சியை அதகளம் செய்தால் தான் அவன் அடுத்த மூச்சுக்காற்றை விடுவது போல இருக்கும். மூட்டைப்பூச்சிகளை விரட்டி விரட்டிக் கொல்வதனாலேயே அவனுக்கு வேட்டையராஜா என்று பெயர் வந்தது. சில சமையங்களில் மூட்டையராஜா என்றும் அழைக்கப்படுவான். மூட்டைப்பூச்சியைப் பார்த்தவுடன் ஹெ… ஹே.. என்று ஒரு டான்ஸ் போடுவதால் நாட்டியராஜா, பாட்டையராஜா. இரும்புக்கரம் கொண்டு அவைகளை ஒருக்குவதால் சாட்டையராஜா. மூட்டைப்பூச்சிகளின் பாஷையில் ‘எம கிராதகன்’.
மூட்டைப்பூச்சியை சாதரணமாக நினைத்து விடாதீர்கள். மிகப் பெரிய நடிகன் (அல்லது நடிகை) அது. என்னது சிலை வைக்க வேண்டுமா? நக்கலா? நாங்களே மூட்டைப்பூச்சியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மூட்டைப்பூச்சியின் மீது மருந்து தெளித்தவுடன் அது டப்பென்று அசையாமல் படுத்துக்கிடக்கும். அவ்வளவு தான் ஆள் அம்பேல் என்று நினைத்தோமேயானால், சில வினாடிகளில் எழுந்து ஓட ஆரம்பித்து விடும். கரடி-மனிதன் கதையிக் கேட்டிருக்குமோ?
மூட்டைப்பூச்சிக்கு கண் இருக்கிறதா இல்லையா என்று ஒருமுறை விவாதம் வந்தது. ஏன் என்றால்? ஒருமுறை ரூம் முழுவதும் நன்றாக பார்த்துவிட்டு, செக் செய்துவிட்டு – ரூமில் ஒரேயொரு பீரோவைத்தவிற ஒன்றுமில்லை, பீரோவும் காலியாக இருக்கிறது – கீழே வெறுந்தரையில் படுத்துக்கொண்டு அடுத்த மூட்டைப்பூச்சி மிஷன் பற்றி ஸ்ட்ராடஜிக் பிளான் செய்து கொண்டிருக்கையில்- வேட்டையராஜா படாரென்று எழுந்தான் – அவனுக்கு தான் சிக்ஸ்த் சென்ஸ் இருக்கிறதே – விளக்கைப்போட்டான் – அவனுக்கு அருகில் இரண்டு மூட்டைப்பூச்சிகள். விளக்கை அனைத்தவுடன் எங்கிருந்தோ வந்து விடுகின்றன. பிறகு விளக்கை அனைத்துவிட்டு கதவைப்பூட்டி வெளியே சென்று விட்டோம். அப்பொழுதும் வரவில்லை. நாங்கள் வந்து படுத்துவிட்டோமேயானால் வந்துவிடுகிறது. உடனே வேட்டையராஜா சொன்னான், நம்ப ஹீட்டை வைத்து கண்டுபிடிக்கிறதென்று நினைக்கிறேன். அப்படிக்கூட இருக்கலாம் என்று நாங்கள், அன்று இரவு முழுவதும், புல் ஏசி வைத்துக்கொண்டு தூங்கினோம். மறுநாள் என் துண்டில் ஒன்று இருந்தது.
பைகளுக்கும், புத்தகங்களிற்கும் நன்றாக மருந்தடித்து, பெஸ்ட் பஸ்டர்ஸ் சொன்னதைப் போன்று வெயிலில் காய வைத்துக்கொண்டிருந்த பொழுது, ஒரு மூட்டைபூச்சி எங்கிருந்தோ வந்தது. தகிக்கும் வெயில். எங்களால் பாதங்களை வைக்கமுடியவில்லை. ஆனால் மூட்டைபூச்சி நிழல் இருக்கும் திசையை நோக்கி வேகவேகமாக ஓடியது. நிழலுக்கு வந்தே விட்டது. எங்களுக்கு கொல்ல மனமில்லை. ஏனென்றால் அது வெயிலில் உயிரை விடுகிறதா என்று சோதிக்க வேண்டும். என் நண்பர், ஒரு இலையை எடுத்து, மூட்டைப்பூச்சியின் பாதையில் வைத்தார். மூட்டைபூச்சி இலையில் ஏறியவுடன் அதை பத்திரமாக வெயில் சென்று, சோதனைக்காக, விடவேண்டும் என்பது திட்டம். சோதனை ஓட்டம். மூட்டைப்பூச்சியும் இலையில் ஏறியது, அதை வெயிலில் விட கொண்டுசெல்லும் பொழுது, தவறி நிழலிலே கீழே விழுந்துவிட்டது. மீண்டும் அதன் பாதையில் இலையை வைத்தால், மூட்டைப்பூச்சி இலையில் ஏறவில்லை. எத்தனை முறை பாதையில் இலையை வைத்தாலும் அத்தனைமுறையும் அது இலையை சுற்றிக்கொண்டு சென்றதேயன்றி, இலைமேல் ஏறவில்லை. யார் சொன்னார்கள் நமக்குத்தான் ஆறறிவு என்று? பொறுமையிழந்த வேட்டையராஜா, சொட்டு மருந்திட்டு அதை கொன்றான். ஆமாம் சொட்டு மருந்துதான். ஸ்ப்ரே செய்தால், மருந்து பாட்டிலுக்குளிருந்து வரமாட்டேன் என்கிறது. அவசரத்திற்கு உதவவில்லை. மூடியைத்திறந்து, டியுபோடு சொட்டு சொட்டாக மூட்டைப்பூச்சியின் மீது விட்டால், சொட்டு மருந்தில்லாமல் வேறு என்னவாம்?
பிறகு செயற்குழு கூட்டி, ஒரு மனதாக பெஸ்ட் பஸ்டர்சை அழைத்து அவர்களுக்கு 500$ கொடுத்து, வீட்டை சுத்தமாக மருந்தடித்து, அனைவரது ஆடைகளையும் ஸ்டீம் வாஸிற்கு போட்டு விட்டு, நன்றாக கொதிநீரில், வீட்டை முழுவதும் வாஷ் செய்து, அது காய்ந்த பிறகு அக்கடா என்று விட்டத்தை பார்த்து படுத்துக்கொண்டிருந்த பொழுது, விட்டத்தில் ஒரு மூட்டைப்பூச்சி தெரிந்தால், யார் தான் சிரிக்க மாட்டார்கள். வேட்டையராஜா விடுவதாகயில்லை. மருந்தை, விட்டத்தில் அடிப்பதென்பது கஷ்டம் தானே? இங்கே சொட்டுமருந்துத்திட்டமும் வேலை செய்யாது, எப்படி மருந்து மேலே செல்லும்? ஜம்ப் செய்து ஜம்ப் செய்து ஸ்ப்ரே செய்துகொண்டிருந்தான். அது அருகிலிருக்கும் விளக்கிற்குள் போவதற்குள் அடித்தாகவேண்டுமே?
மூட்டைப்பூச்சி முஷன் 2 முடிந்திருக்கிறது. மிஷன் 3 இருக்கிறது.
மூட்டைப்பூச்சி மாதிரி தம்மாத்துண்டு இருந்திக்கிட்டு என்ன வேலை செய்யுறான் பாரு என்ற வசனங்களை நான் அவ்வப்போது கேட்டிருக்கிறேன். ஆனால், தம்மாத்துண்டு மூட்டைப்பூச்சி என்னென்ன வேலைகள் செய்யும் என்று, கட்டிலை இழந்து, பெட்டையிழந்து, ப்ளாங்கெட்டை ஸ்டீம் வாஷிற்கு போட்டுவிட்டு, வெறும் தரையில், துண்டைத் தலைக்கு வைத்துப் படுக்கும் பொழுதுதான் உணர்ந்தேன். உணர்ந்தோம்.
Fantastic piece of work. Very good presentation of Real and experienced Bug Story. Some hicups while moving from one paragraph to other but it will be hard to notice for regular readers.Walt disney should translate this and make a movie. ha..ha…Ramke(Tamil Piriyan)
LikeLike