(சிறுகதை)
பிப்ரவரி 2 2003
கோடாங்கிபுரம்
கருப்பாயிதாயி, தனது முதுமையைப் பற்றி பெரிதும் அலடிக்கொள்ளவில்லை. அந்த சுட்டெரிக்கும் சூரியனையும் கண்டுகொள்ளவில்லை. சூரியன் தான் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து, மேலும் சூடானான். கருப்பாயி 50 வயதை தாண்டியவள், என்றாலும் இடைவிடாத உழைப்பு அவளை மேலும் மேலும் வலுவாக்கிக்கொண்டேயிருக்கிறது. மேலக்கோணார்புரத்திலிருந்து, மலேசியாவிலிருக்கும் தன் மகன் செல்லையாவின் குரலைக் கேட்க, இந்த வேகாத வெயிலில் தன் அண்ணன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கிறாள். மேலக்கோணார்புரத்தில் போன் வசதி கிடையாது. மலேசியாவிலிருக்கும் செல்லையா தன் மாமாவின் வீட்டிற்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பேசுவான். கருப்பாயி வாழ்க்கையில் எதைத் தவறவிடுகிறாளோ இல்லையோ, முதல் ஞாயிற்றுக்கிழமையை தவறவிட்டதில்லை. செல்லையாவும் தான்.
படி ஏறியவுடன், கருப்பாயி தன் அண்ணனிடம் செல்லையா இன்னும் போன் செய்திருக்கவில்லை என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள். மதனியிடம் ஒரு டம்பளர் மோர் வாங்கிக் குடித்துவிட்டு, கருமை நிறத்தில் சாந்தசொரூபியாய் அமர்ந்திருக்கும் டெலிபோனையே வெறித்துக்கொண்டிருந்தாள்.
எப்பொழுதும் மதியம் 12:00 மணிக்கு ‘டான்’ – டிரிங் – என்று போன் செய்துவிடுவான் செல்லையா. இன்று மணி மூன்றைத்தாண்டிக்கொண்டிருந்தது. மதனி சாப்பிட அழைத்ததும், ஒப்புக்கு ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் வந்து டெலிபோன் அருகில் அமர்ந்துகொண்டாள்.
மணி ஆறாகியது. மாலை ஏழாகியது. பக்கத்து வீட்டு முனியனைக் கூப்பிடச்சொல்லி, கெஞ்சிய ‘காலை’த் தவிற வேறு ஒரு ‘காலும்’ வரவில்லை.
‘ஏதாவது வேலையா இருந்திருப்பான்மா, கவலைப்படாதே’ என்று தேற்றிய அண்ணனுக்கு செவிசாய்க்கவில்லை.
இரவு தங்கிவிட்டு, காலை செல்லலாம் என்று வற்புறுத்திய அண்ணிக்கு, தாரணி வீட்டில் தனியாக இருப்பாள் என்ற காரணத்தைக் காட்டி, வெற்று மனதோடும், கனத்த மவுனத்தோடும் மறுபடியும், மேலக்கோணார்புரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், சோர்வோடு.
மார்ச் 2 2003
கோடாங்கிபுரம்.
மாலை மணி ஆறாகியும் செல்லையாவிடமிருந்து போன் வரவில்லை.
மார்ச் 6 2003
மேலக்கோணார்புரம்.
யாரோ அழைக்கும் சப்தம் கேட்டு தாரணி வீட்டு வாசலுக்கு வந்தாள். ‘ஆத்தா இல்லையா?’ ‘இல்ல. என்ன விசயம்?’ ‘உங்க அண்ணன் செல்லையா மலேசியாவிலேருந்து கூப்பிட்டிருந்தானாம். நல்லா இருக்கானாம். அடுத்த மாசம் மொதோ ஞாயிற்றுக் கிழமை கூப்பிடறேன்னு சொன்னானாம். கோடாங்கிபுரத்திலிருந்து ராமையா சொல்லி அனுப்பிச்சாரு’ என்று சொல்லிவிட்டு விறுவிறு வென்று நடந்து சென்றார், வந்தவர்.
ஏப்ரல் 6 2003
கோடாங்கிபுரம்.
கருப்பாயி, போனையே வெறித்துக்கொண்டிருந்தாள். ‘அட இங்கன வந்து உக்காரு தாயி, அவன் போன் பண்ணுவான்’ கூப்பிட்ட அண்ணனையும் கண்டுகொள்ளவில்லை.
மணி அடித்தது.
‘யாரு செல்லையாவா?’
‘ஆமாப்பா, ஆத்தாதேன் பேசுறேன். நல்லாயிருக்கியா ராசா?’
‘நான் நல்லாயிருக்கேஞ்சாமி. நீ நல்லாயிருக்கியாய்யா?’
‘சாப்பிட்டியா ராசா?’
‘நல்லா சாப்பிடனும் தம்பி. என்னய்யா சாப்ட?’
‘நல்லா கோழி கீழிய வாங்கி திங்கப்படாது?’
‘ஆத்தா நல்லாயிருக்கேன் ராசா. தாரணியும் நல்லாயிருக்கு. அவதேன் நெடு நெடுன்னு வளர்ந்து நிக்கிறா’
‘அத பாத்துக்கிடலாம்யா. நீ கவலைப்படாத!’
‘குரல் ஏன்யா ஒரு மாதிரி கரகரன்னு இருக்கு. உடம்புகிடம்புக்கு சரியில்லையா?’
‘உடம்ப பார்த்துக்க ராசா! தொலவட்டுல இருக்குற பய! எங்களப்பத்தி கவலப்படாத’
‘ஏன்யா? தம்பியா?’
‘தம்பி நல்லாயிருக்கான்யா. காலு இப்ப பரவாயில்ல!’
‘ஏதோ ஆபரேசன் பண்ணனும்னு சொன்னாங்கல்ல’
சரிப்பா’
‘சரிப்பா. கொண்டு போய் காமிக்கறேன்’
‘எனக்கு அனுப்பறது இருக்கட்டும். நீ உன் செலவுக்கு வெச்சுக்கையா.’
‘சரிப்பா. இருபதினாயிரமா. சரி ராசா’
‘உடம்ப பாத்துக்க ராசா’
‘தம்பி கிட்ட சொல்றேன். சரிப்பா’
‘தாரணி நல்லாயிருக்காப்பா’
‘வெச்சிடுறேன். நல்லா சாப்பிடு ராசா’
ஆகஸ்ட் 3 2003
கோடாங்கிபுரம்.
….
‘மழைக்கு வீடெல்லாம் ஒழுகிப்போச்சுப்பா. ராத்திரியெல்லாம் நின்னுகிட்டேயிருந்தோம்’
‘அதுகிடக்கட்டும்யா. பாத்துகிடலாம்’
‘ரொம்ப செல்வாகுமேய்யா’
‘கூரையப்பிரிச்சிட்டு ஓடுமட்டும் போட்டுக்குவோம்யா. சொன்னா கேளு ராசா. இழுத்துப்போட்டுக்கிடாத’
‘சரிப்பா’
‘நீ உன் செலவுக்கும் கொஞ்சம் வெச்சுக்கப்பா’
‘சரி ராசா’
நவம்பர் 2 2003
கோடாங்கிபுரம்.
‘டாக்டர் இன்னும் கொஞ்ச நாள்ல கால் சரியாயிடும்னு சொல்லியிருக்காருய்யா. மருந்து தொடர்ந்து சாப்பிடச் சொல்லியிருக்காரு’
‘ம்ம்..கொஞ்சம் கொஞ்சம் நடக்குறானய்யா’
‘ஓடு போட்டாச்சுப்பா’
‘ஏன்யா குரல் ஒரு மாதிரி இருக்கு. முன்ன மாதிரி கலகலன்னு பேசமாட்டேங்கிறியே?’
‘ஊரு புடிக்கலைன்னா வந்திடு ராசா’
‘சொல்லுய்யா. ஏன்யா பேசாம இருக்க?’
‘வாங்குன கடனையெல்லாம் நான் அடைக்கிறேன்யா. நீ எதுக்கு ராசா கவலைப்படுற?’
‘தாரணி நல்லாயிருக்காப்பா. அடுத்த தடவ கூட்டியாறேன்’
டிசம்பர் 7 2003
கோடாங்கிபுரம்
‘அண்ணே. எப்படிண்ணே இருக்க?’
‘நல்லாயிருக்கண்ணே. தம்பி நல்லாயிருக்காண்ணே’
‘கொஞ்சம் நடக்குறாண்ணே’
‘சாப்பிட்டேண்ணே. நீ என்ன சாப்பிட்ட?’
‘நல்லா சாப்பிடுண்ணே’
‘அழலண்ணே’
‘இல்லண்ணே அழலண்ணே’ (அழுகிறாள்)
‘ஏ கழுத! ஏன் அழுகுற?’ கருப்பாயி போனை மகளிடமிருந்து வாங்குகிறாள்.
‘கோணாருக்கு கொடுத்தாச்சுப்பா.’
‘ஆமாய்யா. இன்னும் 30 பாக்கி இருக்கு’
‘அது வந்துகிட்டேதான் இருக்கு. மசமசன்னு வளர்ந்து நிக்கறாளே’
‘30,40 பவுன் கேக்காறாங்கய்யா.’
‘நமக்கு சரிப்பட்டு வராதுய்யா’
‘வேணாம்யா. அகலக்காலு வெக்கவேணாம்’
‘கவர்மெண்ட் மாப்பிள்ளைதான் பாக்கனுமா. வேற ஏதாவது பாப்பம்யா’
‘நீ எஞ்சாமி கஷ்டப்படுற?’
‘சரிய்யா. உன் இஷ்டம்’
‘தாரணி இங்க வா.அண்ணன் கூப்பிடறான் பாரு’
மே 2 2004
கோடாங்கிபுரம்.
‘அண்ணே நீ வாண்ணே. நீ வந்தாத்தேன் நான் கல்யாணம் பண்ணுவேன்’
‘போண்ணே’
‘அழலண்ணே’
‘அழலண்ணே’ (அழுகிறாள்)
கருப்பாயி போனை வாங்குகிறாள்.
‘ஜூன் 14 முகூர்த்தம் வச்சிருக்குய்யா’
‘அவளுக்கு சந்தோசம் தான். புடிச்சிருக்கு புடிச்சிருக்கு’
‘கவர்மெண்ட் மாப்பிள்ளை, கசக்குதா என்ன?’
‘ஏஞ்சாமி ரொம்ப வேலையோ? ஒரெட்டு வந்திட்டுபோயேன்’
‘ஏன்யா. ஆமாய்யா’
‘அதான் அனுப்பிச்சிருக்கல்லய்யா?’
‘சரிய்யா’
‘உடம்ப பார்த்துக்கராசா’
‘உடம்புக்கு முடியல்லையா? குரல் ஏன் கரகரன்னு இருக்கு?’
டிசம்பர் 5 2004
கோடாங்கிபுரம்.
‘முடிச்சாச்சுய்யா. எல்லா கடனும் முடிச்சாச்சு.’
‘பாயுக்கும் கொடுத்தாச்சு’
‘நீ தான்யா செஞ்சுகாட்டியிருக்க’
‘ஒரெட்டு வந்திட்டுப் போயேன்’
‘வேலை அதிகமா இருக்கா?’
‘வேலை வேலைன்னு உடம்பக்கெடுத்துக்காத’
ஜனவரி 2 2005
கோடாங்கிபுரம்.
மணி மாலை ஆறு ஆகியும் போன் வராமல், போனையே வெறித்துக்கொண்டிருக்கிறாள்.
பிப்ரவரி 6 2005
கோடாங்கிபுரம்
கருப்பாயி போனையே வெறித்துக்கொண்டிருக்கிறாள்.
***
சனவரி 5 2003
சன்பெங். கோலாலம்பூர்.
ராஜா அந்த ரூமின் கதவைத்திறந்தான். ரூம் லைட் போடப்படவில்லை. லைட்டரை உபயோகித்து சுவிட்சைப் போட்டான். அறை பிரகாசமாகிறது.
செல்லையா ஓரத்தில் சுருண்டு படுத்திருந்தான்.
‘டேய் செல்லையா. எழுந்திரு’
செல்லையா அழுது வீங்கிய கண்களோடு ராஜவை ஏறிட்டுப்பார்த்தான்.
‘இந்தாடா சாப்பிடு’ ராஜா ஒரு புரோட்டா பார்சலைக்கொடுத்தான். அவன் வாங்காததால் அதைக்கீழே வைத்துவிட்டு, அவனுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டான்.
‘சாப்பிடு டா. எதுக்கு வயித்த பட்டினி போடற?’
நிறைய வற்புறுத்தலுக்குபிறகு, செல்லையா பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். சிறிது நேரத்திலேயே அழ ஆரம்பித்தான்.
‘என் ஆத்தா சாப்புட்டுச்சா என்னான்னு தெரியல்லையே. ஊர்ல கடன உடன வாங்கி இங்க வந்தேன், கட்டட வேலைன்னு சொன்னாங்க. ஆனா டேபிள் கிளீன் பண்ணேன். இப்ப அதுவும் போச்சு. வேலையில்லாமா சம்பளமில்லாம கடனை எப்படி அடைப்பேன். கால் ஆனியிருக்கிற தம்பிக்கு எப்படி வைத்தியம் பார்ப்பேன். தங்கச்சிய எப்படி கரையேத்துவேன். ஆத்தா ஒத்தையில கஷ்டப்படுது ராஜா’
கண்களைத் துடைத்துக்கொண்டு புரோட்டாவையே வெறித்துக்கொண்டிருந்தான் செல்லையா.
‘ம்ம்.. கவலைப்படாதடா. செக்கியூரிட்டி வேலை ஒன்னு இருக்கு. எனக்கு தெரிஞ்ச இடம் தான். கொஞ்ச நாள் அங்க வேலை செய்யி. பிறகு பார்த்துக்கலாம். முதல்ல சாப்பிடு, எதுக்கும் கவலைப்படாத. இங்க வார எல்லார் பாடும் இபப்டித்தேன்’ ராஜா சொல்லிவிட்டு விட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்த மங்கலான விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தான்.
சனவரி 6 2003
சன்பெங். கோலாலம்பூர்.
சுனங்கா கோண்டோமினியம். மாலை மணி 6
செல்லையா தனக்கு கொஞ்சமும் பொருந்தாத செக்யூரிட்டி உடையை அணிந்து கொண்டு, கோண்டோவின் வாசலில் நின்றான். கோண்டோவின் முகப்பில் இருக்கும் அறையின் உள்ளேயிருந்த மற்ற இரு செக்யூரிட்டிகளும், வெளியே தலையை நீட்டி இவனை அழைத்தனர். அவர்கள் இவனுக்கு எதிர்மாறாய் நல்ல அகலமாக இருந்தனர். கண்கள் இரத்த சிவப்பாக இருந்தது. கைகளில் கருகருவென்று முடி அடரிந்திருந்தது.
விசாரிப்புகள் முடிந்தபிறகு ரவுண்ட்ஸ் போகச் சொன்னார்கள். செல்லையா கோண்டோவைச்சுற்றிலும் நடந்து, அதன் அமைப்பை உணர்ந்து கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தான். விதம் விதமான மலேசியத்தயாரிப்பு கார்கள். விதம் விதமான பைக்குகள். சினிமாவில் ஐரோப்பிய புல் வெளிகளில் விஜய், அசினைப் பின்னால் வைத்துக்கொண்டு ஓட்டி வருவதைப்போல. செல்லையா தொட்டுபார்த்துக்கொண்டான்.
கோண்டோவின் பின்புறம் கார்கிளீன் பண்ணும் செட் ஒன்று இருந்தது. ‘பாபா கிச்சுத்தா’ பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. நாலைந்து இந்திய இளைஞர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
கோண்டோவில் கார்கள் வந்தவன்னம் இருந்தன. கேட் திறந்து விடுவதே பெரிய வேலையாக இருந்தது. அவனும் மற்ற ஒரு செக்யூரிட்டி மட்டுமே இருந்தார்கள். இன்னொரு செக்யூரிட்டி செல்லையாவை சிகரெட் வாங்கிவர நாலாவது மாடியில் இருக்கும் கடைக்கு அனுப்பினார்.
மணி 12:00 இரவு.
கார் வரத்து குறைந்துவிட்டது. மற்றொரு செக்யூரிட்டியின் குரட்டை காதைப்பிளந்தது. பிளாக் லேபிள் ஒன்று காலியாக இருந்தது. ‘எங்கம்மா உங்கம்மா’ பாடல் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது. நேயர் விருப்பமாம். எந்த மடையன் இராத்திரி 12 மணிக்கு இந்த பாட்டைக்கேட்கிறானென்று தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டான். இண்டர்காம் ஒலித்தது. நாலாவது மாடியின் கடைப்பையன் அழைத்தான்.
லிப்டைவிட்டு வெளியேறி நாலவது மாடியில் நுழைந்ததுமே சத்தம் பயங்கரமாக கேட்டது. உடைந்த பாட்டில் துண்டுகள், இவன் கனத்த பூட்ஸ் காலில் மிதிபட்டு மேலும் சில்லாகியது. தரையெங்கும் பாட்டில் சிதிலங்கள். செல்லையா மெதுவாக நடந்து கடையின் அருகே சென்றான். அங்கு தடிதடியாக ஆறு பேர், போதையில் தாருமாறாக விளையாடிக்கொண்டிருந்தனர். கடையின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.
முதலில் செல்லையாவை அவர்கள் சட்டைசெய்யவில்லை. செல்லையா எச்சரித்தான். அவர்கள் அடங்கவில்லை. ஒருவன் இவனை அடிக்க கை ஓங்கவும், செல்லையா போலிசுக்கு போகிறேன் என்று கடையின் உள்ளே சென்று போனைத்தேடி நம்பரை அழுத்தினான். சற்று நேரம் வெறித்துப் பார்த்த அவர்கள், ஒவ்வருவராக வெளியேறினர். ‘நீங்க மொதல்லையே போலிசுக்கு போக வேண்டியதுதான?’ என்று கடைக்காரரை கேட்டுவிட்டு, கீழே வந்தான், செல்லையா, முதல் நாள் வேலையை வெற்றிகரமாக முடித்த திருப்தியோடு.
‘காதோடுதான் நான் பேசுவேன்’ பாடல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. மணி இரண்டு அடித்தது. தொப்பியை எடுத்து மாட்டிக்கோண்டு, லத்தியை எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ¤க்கு தயாரானான்.
குளிர் அதிகமாக இருந்தது. நாளைக்கு ஜாக்கெட் கேட்டு வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆத்தா இந்நேரம் தூங்கியிருக்கும் என்று நினைத்துக்கொண்டான். கார்கள் அமைதியாக நின்றன. அந்த மணியிலும் ஒருவன் காரை கிளப்பும் ஓசை கேட்டது. கோண்டோவின் பின்புரம் வந்தான். கார் கிளீன் செட் அமைதியாக இருந்தது. அங்கு சற்று ஈரமாக இருந்தது. சில இரவுப்பறவைகளின் சத்தங்களைத் தவிர வேற எந்த சத்தமும் இல்லை. கார் செட்டுக்குப் பக்கத்தில் ஏதோ நிழல் தெரியவே, சற்று நின்று கவனித்தான். மறைவிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. நாலாவது மாடியில் பார்த்தது போலத் தோன்றவே, ‘ஏய்…நீ என்ன இங்க..’ என்று கேட்டு முடிப்பதற்குள், பின் மண்டையில் கனமாக தாக்கப்பட்டதை உணர்ந்தான். திரும்பிப் பார்க்க நினைத்தான் முடியவில்லை. நினைவு தப்பிக்கொண்டிருந்தது. கீழே விழுந்தான். ஆத்தாவின் முகம் வானமெங்மும் நிறைந்திருந்தது. ஒரு உருவம் ஸ்பேனர் பொன்ற தடியான ஒன்றை தன் முகத்துக்கு நேரே ஓங்குவது மங்கலாகத்தெரிந்தது. ‘ராஜா’ என்று சன்னமாக கூப்பிட்டான். பின் சுத்தம்.
***
மார்ச் 6 2003.
கோலாலம்பூர்.
ராஜா, தொலைபேசியில் எண்களை டயல் செய்து, காதுக்கு கொடுத்தான்,
‘கோடாங்கிபுரமா? மாமா நான் தான், செல்லையா பேசுறேன்.’
***
சேர்ப்பு: 21-08-2006
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் இங்கே சென்று வாக்களிக்கவும்.
http://www.thenkoodu.com/survey/2006-08/
கதை நெஞ்சை தொடும் விதமாக இருந்தது. வீட்டிலிருந்து வரும் பாசத்தை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்
LikeLike
முத்து நல்ல கதை…தேதி வாரி அடுக்கி இடையில் இட்டு நிரப்பி நன்றாக பின்னியிருக்கிறீர்கள்…வாழ்த்துக்கள்!
LikeLike
தம்பி, ராசுக்குட்டி : வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. மீண்டும் வருக.
LikeLike