ஆயிரம் கால் இலக்கியம் – 2

 

கோணங்கி பக்கங்கள் என்ற ஒரு தொடர் இப்பொழுது குமுதத்தில் வந்துகொண்டிருக்கிறது. நான் இப்பொழுதெல்லாம் குமுதம் காசு கொடுத்து வாங்குவதில்லை. வலையிலே படித்துவிடுகிறேன். மேலும் காசு கொடுத்து வாங்குவதற்கு அதில் ஏதேனும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை – நமீதாவின் படங்களைத்தவிர. ஆனாலும் என்னுடன் தங்கியிருக்கும் நண்பர் ஒருவர் அவ்வப்பொழுது குமுதம் வாங்கிவருவார். அப்பொழுது தான் சாருநிவேதிதாவின் இலக்கியத்தொண்டு பற்றி அறிந்துகொள்ள நேர்ந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்னால் சாருநிவேதிதா – கோணல் பக்கத்தில் – சென்னையில் எந்த எந்த பார்களில் – பைவ் ஸ்டார், திரி ஸ்டார் – உற்சாகபாணம் எவ்வளவு விலை என்பதை ஆராய்ச்சி செய்து தொகுத்து வழங்கியிருந்தார். (பி.ஹச்.டி செய்யப்போகிறார் என்றும் கேள்வி. டாக்டர் பட்டம் கூட கிடைக்கலாம்) யாரும் படிக்காமல் விட்டுவிடக்கூடும் – யாரும் இந்த அற்புத தகவலால் பயன் பெறாமல் போய்விடுவார்கள் – என்று நினைத்து , விலைப்பட்டியலை நன்றாக கட்டம் கட்டி இருந்தார்கள். அடுத்தவாரம் அவர் ரஜினிகாந்தோடு தண்ணியடித்த விசயத்தையும் – பல ஆண்டு காலம் ஆகியும் -மறக்காமல் சொல்லியிருந்தார். ரஜினியின் ஆரம்பகால தண்ணியடிக்கும் முறை நமக்கு இதன் மூலம் தெரியவந்தது பாக்கியமே. விலைமதிப்பில்லாத தகவல் அல்லவா இது. போனஸாக ரஜினி தற்பொழுது தண்ணயடிப்பதில்லை என்று தன் நண்பர் ஒருவர் – அவர் ரஜினிக்கும் நண்பர்- சொன்னதாக சொல்லியிருந்தார். அதற்கப்புறம் கோணங்கி பக்கங்களை படிக்கும் வாய்ப்பு -பாக்கியம்- எனக்கு இன்று வரை கிடைக்கவில்லை. ஆனால் நண்பர்கள் பலர், சாருநிவேதிதா, இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமானவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது ஒரு படைப்பையும் நான் படிக்காதது எனது துரதிர்ஷ்டமே.

இந்தவார குமுதத்தில் – சும்மா விளையாட்டுக்காக – எண்ணியதில் மொத்தம் 57 பெண்கள் – நடிகைகள் – படங்கள். பல செய்திகளில் – செய்தி? – நடிகைகளின் படங்கள், அங்கே இடம்பெற்றிருக்கும் செய்திக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை. பாய்ஸ் திரைப்படத்தில், விவேக் கேட்கும் கேள்வி எனக்கு ஞாபகத்திற்கு வந்தது : “பம்ப் செட் விளம்பரத்திற்கு ரம்பா தேவையா?’

இரண்டு குமிழிகள்
இணையும் தருணத்தில்
காணாமல் போகின்றன
இரண்டுமே..
மலர்கிறது ஒரு தாமரை

அதற்காக இவ்வாறான புரியாத கவிதைகளைத்தான் போடவேண்டும் என்றில்லை. சில பயனுள்ள தகவல்களையும் சொல்லலாம் : பரத் – ஜெனிலீயா காதலா? என்பதைப் போல.
(விசயம் தெரியாதவர்கள் சென்றவார விகடன் படிக்கவும்)

எனக்கு விகடன், குமுதத்தில் வரும் சிறு கதைகள் மிகவும் பிடிக்கும். அவை ஒரு வித்தியாசமான – நாம் எதிர்பார்க்காத – முடிவைக் கொண்டிருக்கும் காரணத்தால் கூட இருக்கலாம். சில சமையங்களில் கதை படிக்கும்பொழுதே – முடிவை யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். ஆனால் பல சமையங்களில் அந்த முடிவு நான் நினைத்திருந்த முடிவாக இருக்காது. வெகு நாட்கள் – கி. ராஜநாரயணனின் சிறுகதை தொகுப்பை – படிக்கும் வரையில் நான் சிறுகதைகள் என்றால் யாரும் எதிர்பாராத முடிவோடு தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இவ்வாற கதைகளில் – நான் படித்த – கதைகளில் எனக்கு நீண்ட நாட்களாக நினைவில் இருக்கும் ஒரு சிறுகதை : குமுதத்தில் வந்ததென்று நினைக்கிறேன். தலைப்பு ஞாபகமில்லை. எழுதியவரும் ஞாபகமில்லை.

பி.எஸ்.சி முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல், டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து, தம் அடித்து கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருக்கிறார் நமது ஹீரோ. அவ்வாறு ஒரு நாள், தம் அடித்துக்கொண்டிருக்கும் பொழுது, பஸ்ஸில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறார். அவளால் ஈர்க்கப்பட்டு (இயற்கைதானே?) பஸ்ஸில் தொற்றிக்கொள்கிறார். அவள் இறங்கும்பொழுது அவளுடனே இறங்கி அவள் பின்னாலேயே செல்கிறார், வீட்டைக்கண்டுபிடிக்கிறார்(ன்). அப்புறம் கொஞ்ச நாட்கள் அவள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கிறான். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத அந்த பெண், பிற்பாடு நம்ப ஹீரோவை லுக் விட ஆரம்பிக்கிறார்(ள்). அப்புறம் காதல் பற்றிக்கொள்கிறது. இருவரும் உருகி உருகி காதலிக்கின்றனர். அவளும் பி.எஸ்.சி படித்தவள்.

ஒரு நாள் திருச்சியில் இருவருக்கும் இண்டர்வியு வரவே இருவரும் பஸ்ஸில் திருச்சி பயணிக்கின்றனர். துவரங்குறிச்சி வரையிலும் தனித்தனியாக உட்கார்ந்திருந்து விட்டு, அதற்கப்புறம் சேர்ந்து உட்கார்ந்து கொள்கின்றனர். தமது திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் வருகின்றனர்.
இண்டர்வியூ முடிந்து, இருவரும் சினிமாவுக்குப் போகின்றனர். இண்டர்வியூவில் இருவரும் பாஸ் செய்திருக்கவில்லை. சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, தியேட்டரில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி வர, மக்கள் அனைவரும் பயந்தடித்துக்கொண்டு ஓடுகின்றனர். ஹீரோவும், ஹீரோயினும் கூட ஓட, ஹீரோயின் தடுமாறி கீழே விழுகிறாள், ஹீரோ தாங்கிப்பிடித்து விடுகிறார்(ஹீரோவாச்சே?).

மறுபடியும் திருச்சியிலிருந்து பஸ் பிடித்து, துவரங்குறிச்சி வரையிலும் ஒன்றாக அமர்ந்திருந்து, அ தற்கு பிறகு தனித்தனியாக அமர்ந்து சமர்த்தாக வீடு வந்து சேர்கின்றனர்.

ஹீரோ, இண்டர்வியூவில் பெயிலானதை நினைத்து (படம் முழுக்க பார்க்க இயலாததால்?) சோகத்துடன் தூங்கிவிடுகிறார்.

மறுநாள் காலை எழுகிறார். வீட்டிலிருக்கும் அண்ணன், அம்மா, அப்பா, தங்கை யாரும் தன்னுடன் பேச மறுப்பதை அறிகிறான். அம்மா கோபமாக வேறு இருக்கிறார். குழப்பத்துடன் அண்ணனைக் கேட்க, அவன் பதில் பேசாது, அன்றைய செய்தித்தாளை எடுத்துக்கொடுக்கிறான்.
ஹீரோ பேப்பரை பிரித்துப்பார்க்கிறான், அங்கே:

“திருச்சி தியேட்டரில் வெடிகுண்டு புரளி.
தடுக்கி விழுந்த காதலியை தாங்கிப்பிடித்த காதலன்”

என்று கொட்டையெழுத்தில் நம்ப ஹீரோ-ஹீரோயின் போட்டவோடு செய்தி வெளியாகியிருந்தது. அங்கே ஹீரோ ஹீரோயினை ஸ்டைலாக தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நாட்களுக்கு முன்னாள், சிங்கப்பூர் வந்திருந்த, ஜெயமோகன் அவர்களின் பேச்சை கேட்க – அல்லது சிறுகதை பட்டறைக்கு – போயிருந்தேன். அப்பொழுது சிறுகதையின் முக்கியமான ஒன்றாக அவர் குறிப்பிட்டது – சிறுகதையின் முடிவு. ஒரு சஸ்பென்ஸ். அவிழும் ஒரு முடிச்சு. பல சிறுகதைகளில் அதைப்பார்க்கலாம். ( சில படங்கள் கூட சிறுகதைகள் போன்ற ஒரு அதிபயங்கர முடிவோடு இருக்கும். அந்த முடிவுக்காகவே ஒவ்வொரு காட்சியும் காத்திருக்கும். அவ்வாறான ஒரு படம் : the sixth sense.)

இந்த வார விகடனில் கூட ஒரு நிமிடக் கதைகள் சில பிரசுரமாகியிருந்தன. அதில் ஒன்று:

“அம்மா! நல்லவர்னு இவ்ளோ நாளும் நம்பிக்கிட்டிருக்கியே உன் புருசன் அதுதான் என் அருமை அப்பா..அவரோட யோக்கியதை தெரியுமா உனக்கு?”

“என்னடி ஆர்த்தி சொல்ற?”

“அந்த அசிங்கத்தை ஏன் கேட்கிற? நேத்து நான் ஸ்கூல்ல இருந்து சீக்கிரமே வந்துட்டேன். போக்கிடமேயில்லாம பல வருசம் நம்ப வீட்லயே விழுந்து கிடக்கிறாளே நம்ப வீட்டு வேலைக்காரி கஸ்தூரி. அவளோடு நெருக்கமா..பெட்ரூம்ல உன் புருசன்..சே!”

“பதறாதே ஆர்த்தி. சுருக்கமா சொன்னா புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். இந்த வீட்ல வேலைக்காரியா வந்து சேர்ந்தது கஸ்தோரி இல்ல. நான் தான்”

நாலே நாலு வாக்கியம். ஒரு திருப்பம். ஒரு நிமிடம். ஒரு கதை. நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதை விட சுவையாக இருந்தது இந்த கார்ட்டூன்:

அப்புறம், கல்கியில் ஒருமுறை: நாடக தொனியில் ஒரு சிறுகதை பிரசுரமாகியிருந்தது. மிகுந்த நக்கலான – சுவையான, ஹாஸ்யமான – சிறுகதை அது. அதை பத்திரப்படுத்தி நீண்டகாலம் வைத்திருந்தேன். கதையின் பெயரும் எழுதியவரும் நினைவில் இல்லை.

அந்த சிறுகதையின் கரு இதுதான்:
நாம் வாழ்க்கையின் அனைத்து தருனங்களிலும் – அல்லது வாழ்க்கை முழுவதும் – ஏதோ ஒரு வரிசையில் -க்யூவில்- நின்று கொண்டிருக்கிறோம்.

செம நக்கல் பண்ணியிருந்தார் எழுதியவர். புரோமோசனுக்காக காத்திருக்கும் அலுவலர்களிடம், பாஸ்(boss) வந்து, ‘ம்..ம்.. எல்லோரும் எழுந்திருங்க. குதிங்க. யார் நன்றாக குதிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் புரோமசன்’ என்று கூறுவது உச்சகட்டம். மாட்டின் கண்ணில் எம்.ஜி.ஆர். தெரிகிறார் என்று க்யூ நிற்பதாகவும் ஏகத்துக்கும் கிண்டல் செய்திருப்பார்.

இந்தியாவில் எதற்கு க்யூவில் நின்றாலும் – பிள்ளையார் பால் குடிப்பதைப் பார்க்க க்யூவில் நின்றது எனக்கு நினைவிருக்கிறது – பஸ்ஸ¤க்கு க்யூவில் நிறக மாட்டோம். சென்னை பாஷையில் : ‘அச்சு புச்சு ஏறுடா’. சிங்கப்பூரில் பஸ்ஸ¤க்கு க்யூவில் நிற்க வேண்டியுள்ளது. இங்கே க்யூவிற்கா பஞ்சம். மதிய சாப்பாட்டிற்கும் க்யூவில் தான் நிற்க வேண்டும். நாம் வேண்டாமென்றாலும் சில அதி முக்கியமான – இன்னைக்கு சாம்பார் எடுக்கலாமா?பாவற்காய் எடுக்கலாமா? சிக்கன் எடுக்கலாமா? அதோ எந்த வகையிலும் சேராமல் இருக்கிறதே அந்த கூட்டு,அது என்ன? ம்..ம்…புடலங்காய் – வாக்குவாதங்களை கேட்க முடியும். பழக்கமாகிவிட்ட இந்த பழக்கம், இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மட்டும் – மிகவும் விசித்திரமாக இருக்கும். முதன் முதலில் சென்னை வந்து – என் அண்ணனுடன் – டி. நகர் சரவணபவனில் சாப்பிட சென்று, க்யூவில் நின்றது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

நான் பள்ளி படிக்கும் பொழுது – பதினோரம் வகுப்பு – தொண்டர் படை என்ற நாடகத்திற்கு இந்த -க்யூ- கருவைத்தான் எடுத்துக்கொண்டேன். என் நாடகத்தில் மக்கள் அனைவரும் ஒரே க்யூவில் நிற்பார்கள். ஆனால் வேறு வேறு காரணங்கள் சொல்லுவார்கள். வேலையில்லா திண்டாட்டத்தை, அரசுக்கு (சரத்குமார் இல்லை. அரசாங்கம்!) உணர்த்த (ஏதோ, அரசுக்கு இந்த விசயம் தெரியாமலே இருந்ததுபோல!) இளைஞர்கள் நகரின் நடுவே நீண்ட க்யூவில் நிற்பார்கள். அரசின் அடக்குமுறையால் அது புரட்சியாக மாறும். இப்படியாக காமடிக்கரு : கம்யூனிஸ்ட் கதையாக ஆனது. அந்த நாடகத்தில் விகடனில் வந்த கார்டூன் ஒன்று தான் மைய கதாப்பாத்திரம். விகடனில் வந்த ஜோக் அது. ஒரு வயதானவர் என் மகனைப் பார்த்தீங்களா? என் மகனைப் பார்த்தீங்களா? என்று கண்ணில் படும் நபர்களிடமெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பார். பொறுமையிழந்த ஒருவர், யாருயா இந்த ஆளோட மகன் என்று கேட்பார். அதற்கு இன்னொருவர், சும்மா இருய்யா. அந்த ஆளோட மகன் தான் இந்த ஊரு எம்.எல்.ஏ. என்பார்.

பிறகு ஒரு கதை: ஹீரோவும், அவனது தங்கையும், அவன் அம்மாவும் ஒரு குடும்பம். ஹீரோவின் பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி இருக்கிறார். பாட்டியின் வீட்டிற்கு, ஒரு அழகான பெண் விடுமுறையில் வருகிறார்.ஹீரோவின் தங்கையும், அந்த பெண்ணும் சிநேகிதிகளாகின்றனர். ஹீரோவின் நண்பர் கூட்டம் அவனை அந்த பெண்ணுடன் இணைத்து கேலி பேசுகின்றது. நாளடைவில் ஹீரோ, அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். அந்த பெண் நாளை ஊருக்கு செல்கிறது. இன்று ஹீரோ, தன் தங்கை, அம்மா, பாட்டி, அந்த பெண்ணுடனும் கோவிலுக்கு செல்கிறான். கோயிலின் ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு தேரின் இருளில், ஹீரோ தன் காதலை சொல்கிறான். குடும்பத்தில் அனைவரும் வந்து விட பதிலேதும் சொல்லாமல் அந்த பெண் சென்றுவிடுகிறாள்.

வருடங்கள் ஓடுகின்றன. ஹீரோ டெல்லியில் (ஆம். அப்பொழுதெல்லாம் அமெரிக்கா இவ்வளவு பேமசாக இல்லை.) நல்ல வேலையில் இருக்கின்றான். தங்கைக்கும் திருமணமாகிவிடுகிறது. திருவிழாவிற்கு ஊருக்கு வருகிறான். அந்த பெண்ணும் வந்திருக்கிறாள் தன் கணவனுடன். மறுநாள் கோவிலில், தனிமையில், அதே தேரின் இருளில் இருவரும் எதிர்பாராமல் (எதிர்பார்த்து?) சந்தித்துக்கொள்கின்றனர். அவள் ஒரு கனம் இவனை வெறித்துவிட்டு, “உனக்காக எத்தனை நாள் காத்திருந்தேன். நீ ஏன் வரவில்லை” என்கிறாள்.

(தொடரும்)

5 thoughts on “ஆயிரம் கால் இலக்கியம் – 2

  1. எண்ணம் எனது : வருகைக்கு நன்றி. எழுதுகிறேன்.அனானி: வருகைக்கு நன்றி. விரைவில் எதிர்பாருங்கள் 🙂

    Like

  2. // அவள் ஒரு கனம் இவனை வெறித்துவிட்டு, “உனக்காக எத்தனை நாள் காத்திருந்தேன். நீ ஏன் வரவில்லை” என்கிறாள்.Nuovo cinema Paradiso

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s