பாலத்தின் அந்தப் பக்கம்

எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியைப் படித்தவர்களுக்கு சந்ததி சந்ததியாக தவழ்ந்து செல்லும் கதைக்களம் நினைவில் இருக்கலாம். எனக்கு நெடுங்குருதியை வாசிக்கும் பொழுது சற்று அலுப்பே மேலிட்டது. என்னடா இது கதை அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்கிறது என்று. ஆனாலும் ஆசிரியரின் எழுத்து என்னை கட்டிப்போட்டிருந்தது. வெயில் அவன் கால்களைப்பிடித்து ஏறிக்கொண்டிருந்தது என்று வாசிக்கும் பொழுது நானும் வெயிலாக மாறி நாவலைச்சுற்றி படர்ந்து கொண்டிருந்தேன். எஸ். ராமகிருஷ்ணனின் வாக்கியங்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதியவை.

அதே போன்றதொரு சந்ததி கதை தான் The Glass Palace. Blurb ல் மூன்று சந்ததியினரின் கதை என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரை இது ஐந்து சந்ததியினரின் கதை. ராஜ்குமாரின் அம்மா, ராஜ்குமார், ராஜ்குமாரின் மகன்-நீல், நீலினுடைய மகள் ஜெயா, ஜெயாவின் அமெரிக்காவில் படிக்கும் மகன் என ஐந்து சந்ததியினரின் கதை இது.

பர்மாவில் தொடங்கி, இந்தியாவின் ரத்னகிரியில் தவழ்ந்து, மலேசியாவை நோக்கி படர்ந்து, பிறகு கல்கத்தாவில் கால் பதித்து மறுபடியும் பர்மாவிலே முடியும் கதை The Glass Palace. 540 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் அத்தியாயங்கள் தோறும் The Glass Palace இன் சுவடுகளை தேடிக்கொண்டேயிருந்தேன். அது கடைசி அத்தியாயங்களில் தெரியவருகிறது.

நாவல் தோறும் ஒரு கடினமான இறுக்கம் நம்மை கதையுடன் பிணைக்கிறது. மனிதர்களை மிகுந்த கவனத்தோடு ஆராய்ந்திருக்கிறார். மிகத்துள்ளியமாக கதாப்பாத்திரங்களை செதுக்கியிருக்கிறார். 550 பக்கங்களிலும் ஒரு கதாப்பாத்திரம் பயணிக்க வேண்டுமெனில் அந்த கதாப்பாத்திரம் எவ்வளவு வலிவோடு இருக்கவேண்டும். அவ்வளவு வலிவோடு இருக்கிறார் கதையின் நாயகன் ராஜ்குமார்.

ஏகாதிபத்தியமும், அடக்குமுறையும் பலவாறு நாவல் தோறும் விவாதிக்கப்படுகின்றது. இந்திய சுதந்திரப்போராட்டத்தில் காந்தியின் வழி சரியா அல்லது நேதாஜியின் வழி சரியா என்ற விவாதம் நன்றாக இருந்தது. இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களால் பிற நாடுளின் சுதந்திர போராட்டத்தை அடக்க பயன்படுத்தப்பட்டது விவாதிக்கப்படுகிறது. இந்திய வீரர்களை கைக்கூலிகள் என்றழைப்பது சரியா? இந்திய இராணுவத்தில் இருக்கிறார்கள் ஆனால் இங்கிலாந்திற்காக சண்டைபோடுகிறார்கள். இந்தியாவிற்காக சண்டையிட்டால் அது தேசப்பற்று. இங்கிலாந்திற்காக சண்டையிட்டால் அது தொழில் தானே. விசுவாசம் என்ற ஒற்றைச் சொல்லே அவர்களது விழிகளை கட்டிப்போட்டிருந்திருக்கிறது, நேதாஜி வரும் வரை.

இந்திய வீரர்களின் சுதந்திர தாகம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. அதுவும் மலேசிய வாழ் இந்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) , இந்தியாவை ஒரு முறை கூட பார்க்காமல், போராட்டத்தில் தீவிரமாக இறங்குவது மெய்சிலிர்க்கவைக்கிறது. அவ்வாறான தேசப்பற்று இன்னும் நம்மில் யாருக்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பது ஐயமே! பர்மாவின் அடக்குமுறையும், ஜப்பானின் காலனியலிசமும், இங்கிலாந்தின் ஏகாதிபத்தியமும் கூட விரிவாக ஆராயப்படுகின்றன. பர்மாவின் மன்னர் நாடு கடத்தப்பட்டு தன் மனைவியுடனும் மகள்களுடனும் இந்தியாவில் குடிவைக்கப்படுகின்றனர். மன்னருக்கும், ராணிக்கும் இன்னும் கம்பீரம் இருக்க, மகள் வண்டியோட்டுபவனுடன் சேர்ந்து அவன் குடிசையிலே இருக்கிறாள். எல்லோரும் மனிதர்களே. எனக்கு ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள பாடல் நினைவுக்கு வந்தது, கூடவே பல்புக்கு கீழே ஆடிக்கொண்டிருக்கும் ரஜினியும்.

ஏதேச்சையாகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. செந்தில் தன்னுடைய ப்ளாகில் ஒருமுறை இந்த நாவலைப் பற்றி பதிவு செய்திருந்தார். அதற்கப்புறமே தேடிப்பிடித்து படித்தேன். செந்திலுக்கு நன்றி. நாவல், ஒரு உணர்ச்சிக்குவியல்.

அமிதவ் கோஷ் ஒரு அற்புதமான எழுத்தாளர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அமிதவ்கோஷின் மற்றொரு நாவலான the hungry tide ஐ பார்த்து வைத்திருக்கிறேன்.

இந்த நாவலை படித்து முடித்த கையோடு Jon McGregor எழுதிய so many ways to begin என்ற நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். என்னவோ பிடிப்பு ஏற்படவில்லை. 15 பக்கங்கள் மட்டுமே படித்துவிட்டு நூலகத்தில் ரிட்டன் செய்து விட்டேன்.

சிறிது நாட்களுக்குப் பிறகு Mary Lawson எழுதிய The Other Side Of The Bridge கிடைத்தது. “பாலத்தின் அந்தப் பக்கம்” என்று தான் முதலில் நான் நினைத்தேன். ஆனால் உண்மையில் இது “பாலத்தின் அடிப்புறம்” என்று தான் மொழிபெயர்க்கப் படவேண்டும். நாவல் படித்துக்கொண்டிருந்த பொழுது இதை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. 270 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலை தமிழில் மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

நான் சில நகைச்சுவைப் படங்கள் பார்க்கும் போது வாய்விட்டு சிரித்திருக்கிறேன். உதாரணத்திற்கு பஞ்சதந்திரம்: “அப்படியே தட்டிக்கொடுத்து ஒரு கத சொல்லு ராம்” “ம்..ம்…ஒரு ஊர்ல ராம் ராம்னு ஒரு கேனயன் இருந்தானாம்…” “ஓ காமெடி ஸ்டோரியா…” இந்த வாக்கியங்களை எப்பொழுது கேட்டாலும் சிரிப்பு வரும். காரணம் வாக்கியங்கள் மட்டுமல்ல, இந்த காட்சியை கண்டவர்களால் மட்டுமே நன்றாக இரசித்து சிரிக்க முடியும். வாக்கியங்களை கேட்டவுடன், தேவயாணியும் கமலஹாசனும் கண்ணில் தெரிந்தால் தான் முழுமையாக ரசிக்க வாய்ப்பிருக்கிறது. சிரிக்கவைப்பது என்பது சினிமாவில் எளிது. ஒரு நாவலைப் படித்து, படிக்கும் பொழுது கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரிக்க வைப்பதென்பது மிகவும் கடினம்.

Mary Lawson அதை செய்திருக்கிறார். நாவல் தோறும் நகைச்சுவை இழையோடிக்கொண்டிருக்கிறது என்பதை விட சில இடங்களில் வெடிச்சிரிப்புக்கும் பஞ்சமில்லை. ஒரு இரவு, இந்த நாவலை வைக்க மனமில்லாமல், சிரித்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்தில் படுத்திருந்த சரவணன் நிமிர்ந்து, நிமிர்ந்து பார்த்தார். பிறகு என் சிரிப்பு சத்தம் தாங்க முடியாமல் காதில் இயர் போனை வைத்துக்கொண்டு தூங்கிவிட்டார். மறுநாள் முறைத்தபடி இருந்தார். நான் என்ன செய்யமுடியும். அடக்கமுடியாத மற்ற இரண்டோடு சிரிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது. முடியும் என்றும் தோன்றவில்லை. மேலும் ஏன் அடக்கவேண்டும்?
விளைவுகள். கிடக்கிறது போங்கள்.

இதனால் இதை ஏதோ நகைச்சுவை நாவல் என்று எண்ணி விடாதீர்கள். மனிதர்களை சுற்றிலும் குடும்ப கட்டமைப்புக்குள் சுவையாக பின்னப்பட்ட நாவல் இது. மனிதர்களின் மனங்கள் குரங்கு. ஜெயமோகன் காடு நாவலில் சொல்லியிருப்பார் : தனிமை கிடைத்தவுடன் மனம் அதையே செய்யத்துடிக்கிறது. செய்துமுடித்தபின் ஒரு வெறுமை படர்கிறது என்பார். உண்மையே.

சில விசயங்களை செய்யக்கூடாது என்று நினைப்போம். ஆனால் மனம் அதை நோக்கியே பயணிக்கும். அழகி படத்தில் சயாஜி சிண்டே பார்த்திபனின் வீட்டில் இரவு குடித்து விட்டு வாந்தி எடுத்து வைத்திருப்பார். மறுநாள் காலை எழுந்து, சே எப்படி இந்த நாத்தத்த குடிச்சேன். இனிமே உன்ன செத்தாலும் தொடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே கழுவி விட்டுக்கொண்டிருப்பார். அன்றைய இரவில் மறுபடியும் குடிப்பார். சொல்லிக்குற்றமில்லை. நாம் மனிதர்கள். ரோபோக்கள் அல்ல. ஆனாலும் சிலர் மனித குணத்தை விடுத்து மனதைக் கட்டுப்படுத்தி எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரி வாழ்கிறார்கள். அவர்களை தெய்வம் என்றும் சில சமயம் தெய்வ மச்சான் (நன்றி: கமலஹாசன்) என்றும் போற்றுகிறோம். ரோபோக்கள் தெய்வங்களா?

இளவயதில் ஒருவனைப் பார்த்து காதலுற்று அவன் அழகில், பேச்சுத்திறமையில் தன்னையே பறிகொடுத்து அவனது குழந்தையை தன்னில் சுமக்கிறாள் ஒரு பெண். ஆனால் அவனோ ஊரை விட்டே ஓடிவிடுகிறான். அவள் அவனுடைய அண்ணனை திருமணம் செய்து கொள்கிறாள். நாட்கள் ஓடுகிறது. பதினைந்து வருடங்கள் கழித்து ஓடியவன் திரும்ப வருகிறான். அடிமனதில் அவன் மேல் இருந்த காதல் வெறுப்பையும் மீறி, சூழ்நிலையையும் மீறி, மெல்ல மெல்ல மேலெழும்புகிறது. குழந்தையை கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்த ஒருவனுடன் 15 வருடங்கள் கழித்து காதல் மீண்டும் துளிர்க்குமா? அதுவும் கணவன் இருக்கும் போது? இது சாத்தியமா? என்று எண்ணத்தோன்றுகிறது. சில சமயம் உண்மை பொய்யை விட பயங்கரமானதாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கும். சந்தேகமெனில் நக்கீரனையோ, ஜூவீயையோ ஒரு முறை திரும்பிப்பாருங்கள். நம் நாட்டிலே நடப்பதைப் பார்க்கலாம். இது சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். சரியென்றும் தவறென்றும் சொல்ல நாம் யார்? மனிதர்கள் சூழ்நிலைக்கைதிகள் என்பது தானே உண்மை. என் பிசிக்ஸ் வாத்தியார் சொல்லுவார் : ஒருத்தன (ஒரு மாணவனை) பற்றி முழுமையாக அறிந்து கொள்ள்வேண்டுமென்றால் அவனை அவனது நெருக்கமான நண்பர் குழுவோடு விட்டு பார்க்கவேண்டும். சூழ்நிலைகள் மனிதர்களை புறட்டிப்போட்டுவிடும்.

அண்ணன் தம்பிக்கு இடையேயான சிறுவயது நிகழ்ச்சிகள் மிகுந்த நகைச்சுவையாக இருந்தது. போரின் அவலங்களும், போரில் ஊனமுற்றவர்கள் படும் கொடுமைகளும், போர்கைதிகளின் நாட்டை இழந்த வருத்தமும், அகதி வாழ்க்கையும் மனதை நெருக்குகின்றன. போர் செய்வது, இராணுவத்தில் சேர்வது என்பது ஒரு வேலையா – Profession – அல்லது அதில் தேசப்பற்று ஏதும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. கிட்டத்தட்ட profession ஆகிக்கொண்டு வரும் இந்த பணியில் கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்களின் நிலை?

நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் இந்த நாவலில் உண்டு. கதையில் வரும் அண்ணனின் (ஆர்த்தர்) நண்பன் ஒருவன் (கார்ல்) இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் பங்கு பெற்று கால் கைகளை இழந்து ஊருக்கு திரும்புகிறான். தினமும் ஆர்த்தர் அவனைப் பார்க்கப் போவான். எப்பொழுதும் அவர்களுக்கு இடையில் மவுனத்தை தவிர வேறு மொழி இருக்காது. நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஒரு நாள் ஆர்த்தர் அவனைப் பார்க்கச் செல்லும் போது, கார்ல் தனக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் self இல் இருக்கும் துப்பாக்கியை எடுத்து தான் படுத்திருக்கும் கட்டிலுக்கு அருகில் இருக்கும் மேஜை மேல் வைக்கச்சொல்கிறான். யோசித்த ஆர்த்தரிடம், “எனக்கு போய் எடுப்பதென்பது சிரமம், கீழே விழுந்து சிரமப்பட்டு தவழ்ந்து போய் எடுப்பதற்குள் வெளியே சென்றிருக்கும் அம்மா வந்துவிடுவார்கள், இந்த உதவியை மட்டும் செய்” என்கிறான். ஆர்த்தர் நீண்ட யோசனைக்கு பின் வேக வேகமாக போய் துப்பாக்கியை எடுக்கிறான். அவன் வேகத்தைப் பார்த்த கார்ல் அவசரமில்லை அம்மா வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்கிறான். துப்பாகியை எடுத்து மேஜைமேல் வைத்து விட்டு புறப்படும் ஆர்த்தரிடம் “பரவாயில்லை இன்னும் நேரமிருக்கிறது. உனக்கு கொடுத்த காபியை குடித்துவிட்டு போகலாம்” என்கிறான் கார்ல். ஆர்த்தர் மெதுவாக அமர்ந்து நிதானமாக காபியைக் குடித்துவிட்டுப் போகிறான்.

போர் எப்பொழுதும் Treaty யுடன் முடிவடைவதில்லை. அதன் அவலம் தலைமுறைதோறும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது இல்லையா?

அதற்கப்புறம் Gathering The Water என்ற நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த பதிவில் தண்ணீரை சேகரிக்கலாம்.

Pi

ஜெயமோகனின் காடு நாவலும் ஏழாவது உலகமும் மிக பெரிய உள் விரிவுகளை அடக்கிய நாவல்கள் அல்ல, ஆனால் விஷ்ணுபுரம் அப்படி அல்ல. மதுரை இலக்கியப்பண்ணையில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தப்பின் வாங்காமல் இருக்க இயலவில்லை. பக்கங்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அப்பா மருத்துவமனையில் இருந்த பொழுது நேரத்தை செலவு செய்வதற்காக படிக்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து, தமிழ் அகராதியைக் கையில் (அல்லது தரையில்) வைத்துக்கொண்டு நான் படித்த முதல் தமிழ்நாவல் இது தான் என்று நினைக்கிறேன். நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன்.அப்பா ரிடையர்ட் தமிழாசிரியர் என்பதையும் சில கவிதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் என் அண்ணனுக்கும் – வக்கீலாக பணிபுரிகிறார்- அம்மாவுக்கும், நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

விஷ்ணுபுரம் நாவலை நான் முழுதாக படிக்கவில்லை. 300 பக்கங்கள் வரை கொஞ்சம் பொருமையிருந்தது, அதற்கப்புறம் வாக்கியங்களில் சுற்றி சுற்றி மீள முடியாத மயக்கநிலைக்கே சென்று கொண்டிருந்தேன். ஆதலால் வாசிப்பை துரிதப்படுத்தினேன், skipping pages. ஏனோ நாவலின் முடிவைப் பார்த்துவிட்டால் போதும் என்றிருந்தது. ஆனால் முடிவென்பது இல்லை என்பதே நாவலின் கருப்பொருள். அப்படியிருக்க நாவலுக்கு எப்படி முடிவிருக்கும். தொடங்கிய இடத்திலே முடிகிறது. நாவலில் வரும் விஷ்ணுபுரமும், கோபுரங்களும் மிக மிக அழகு. அதிலும் கோபுரங்களின் கட்டமைப்பு பற்றி மிக விரிவாக விமர்சித்திருப்பது, நம்மை அந்த கோவிலின் அருகிலே கொண்டுசெல்கிறது. மிகத் தேர்ந்த ஒளிப்பதிவாளரின் நேர்த்தியுடன் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. கருடனின் கதையும் புல்லரிக்க செய்கிறது. முழுமையாக வாசிக்காத காரணத்தால் இந்த புத்தகத்தைப் பற்றி விரிவாக பேச இயலாது. ஆனால் விஷ்ணுவின் சிலையும் (அது விஷ்ணுவே இல்லையென்றும் நாவலிலே சொல்லப்படுகிறது) மூன்று வாசல்களும் என் கண் முன்னே இன்னும் நிற்கிறது. மீண்டும் ஒரு முறை – வாய்ப்பும் போதிய நேரமும் கிடைத்தால் – நிச்சயம் மறுபடியும் படிக்க வேண்டும்.

சோம. வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் என்ற பங்குச் சந்தையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் சிறிய – comparative to விஷ்ணுபுரம் – புத்தகம் ஒன்றை படித்தேன். மிக மிக நல்ல புத்தகம். பங்குச் சந்தையில் கால் வைக்க விரும்பும் புதியவர்களை ஊக்கப்படுத்துவதோடு; மிக அழகாக சறுக்கி விழக்கூடிய ஆபத்தையும் உணர்த்துகிறார் ஆசிரியர். நாணயம் விகடனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. வாங்குங்கள். படியுங்கள். களத்தில் இறங்குங்கள். ஆனால் சொல்லித்தெரிவதில்லை “பங்குச்சந்தை” கலை! பட்டுத்தான் தெரியவேணும். என்னுடைய பாஸ் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிச்சென்றுவிட்டார். ரஜினி பாடலில் வரும் : “அஞ்சுக்குள்ள நாலவை. ஆழம் பார்த்து காலவை” என்ற வாக்கியத்தை மட்டும் ஞாபகத்தில் இருத்திக்கொண்டால் போதுமானது.

எங்கள் ஆபீஸ் டவரில் இருக்கும் Private Lending Library யில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது, Life Of Pi என்ற நாவலைப் பார்த்தேன். Man Booker Prize வாங்கிய நாவல் இது. முன்பே பலமுறை பலர் சொல்ல கேள்விப்பட்ட நாவல் தான் இது. எப்பொழுதும் ஒரு மாதம் கால அவகாசம் தரும் Library, இந்த புத்தகத்தை சீரியஸ் ரீடிங் என்று கணக்கில் கொண்டு இரண்டு மாத காலம் அவகாசம் தந்தது. ஆனால் உண்மையைச் சொன்னால் : சீரியஸாக படித்தால், ஆறு மணி நேரத்தில் படித்து விடலாம். ஒரு சனிக்கிழமை இரவு. அவ்வளவே.

நீங்கள் ஆரம்பித்தால் மட்டுமே போதுமானது, நாவல் உங்களை பக்கங்கள் தோறும் கடத்திச் செல்லும், அமைதியாக ஓடும் நதியில் மிதக்கும் மரம் போல நீங்கள் உணர்வீர்கள். இதுவரை நான் படித்திராத கதைக் களம். புதிய உத்தி. அதிரடி க்ளைமாக்ஸ். நான் கொஞ்சம் தத்தி, அதனால் க்ளைமாக்ஸ் அதிரடியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு எப்படியோ! யான் மார்ட்டல் எழுதிய இந்நாவல் பாண்டிச்சேரியில் தொடங்கி கனடாவில் முடிகிறது. ஆசிரியரும் கனடாவைச் சேர்ந்தவரே. கனடாவின் இலக்கியம் வளம் மிக நன்றாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.

ஹீரோ பை (Pi) யின் அப்பா ஒரு மிருகக்காட்சி சாலை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், zoo வை விற்று விட்டு தன் குடும்பத்தாருடன் கனடாவை நோக்கி கப்பலில் பயணிக்கிறார். கப்பல் கவிழ்ந்து விடுகிறது. பை மட்டும் ஒரு Life Boat ல் தப்பிக்கிறான். ஆனால் அந்தோ பரிதாபம், அந்த லைப் போட்டில் ஒரு ஓநாயும், ஒரு வரிக்குதிரையும், ஒரு ஓரங்குட்டானும், ஒரு 140 பவுண்ட் புலியும் இருக்கின்றன. அவை அனைத்தும் அவர்களுடைய மிருகக்காட்சி சாலையில் இருந்தவை. முதலில் புலி அமைதியாக இருக்கிறது. ஓநாய் வரிக்குதிரையை உயிருடன் கடித்து திண்ண ஆரம்பிக்கிறது. பிறகு ஓரங்குட்டானை கொல்கிறது. பை தொடர்ந்து கொல்லப்படாமல் தப்பிக்கிறான். பிறகு புலி விழித்துக் கொள்கிறது. ஒரே அடியில் ஓநாயை வீழ்த்துகிறது. பிறகு ஓநாயையும், எஞ்சிய வரிக்குதிரையின் பாகங்களையும், ஓரங்குட்டானையும் திண்கிறது. அடுத்தது பை தான்.

பை இருநூறுக்கும் மேற்பட்ட நாட்கள் எப்படி கடலில் அந்த மிருகத்திடமிருந்து தப்பித்து கரைசேருகிறான் என்பதே கதை. அதற்குப்பிற்கு ஒரே ஒரு சஸ்பென்ஸ் மட்டுமே இருக்கிறது. கடவுள் நம்பிக்கையையும், தன் நம்பிக்கையையும், வாழ நினைத்தால் வாழலாம் என்பதையும் அறிவுறுத்தும் நாவல் இது. மெல்லிய நகைச்சுவை நாவல் தோறும் பரவிக்கிடக்கிறது, பீச்சிலிருக்கும் மணல் போல. எடுத்துக்காட்டாக அவனுக்கு எப்படி Pi என்ற பெயர் வந்தது என்பது. நான் நாவலை வாங்கும் பொழுது, பை யின் அப்பா ஒரு மிகச்சிறந்த கணித மேதையாக – Pi=3.14 -இருக்கக்கூடும் என்று தான் நினைத்திருந்தேன். படியுங்கள் : A laugh guaranteed.

அப்புறம் நீண்ட நாட்களாக நூறு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு வைத்த The Glass Palace என்ற அற்புதமான நாவலை மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன். அடுத்த பதிவில் Amitav Gosh ஐ சந்திக்கலாம்.

புத்தகப்புழு

இப்பொழுதெல்லாம் சில நிமிடங்கள் இடைவெளி கிடைத்தால் கூட படித்துக்கொண்டிருக்கும் நாவலில் ஒரு சில பக்கங்களையாவது படித்துவிடத் துடிக்கிறேன். சிறிது சிறிதாக ஒரு புத்தகப்புழுவாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ‘புத்தகப்புழு’ என்ற வார்த்தை புத்தகப்பிரியர்களுக்கு தவறான சொல் என்பது என் எண்ணம். புத்தகம் என்ற பறந்து விரிந்த அனு அண்டமெல்லாம் சிதறிக்கெடக்கும் ஒரு உலகில் அலைந்து திரிந்து மூழ்கித் திளைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புழு என்ற சொல் பொருத்தமானதாகத்தெரியவில்லை. மேலும் வாசித்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல, சன் டீவியில் கோலங்கள் பார்ப்பதைப் போல. எத்தனை நபர்கள் புத்தகத்தைக்கண்டால் ஜிஞ்சர் திண்ண மங்கி மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் குமுதம் ஆனந்த விகடன் கூட படிக்க மாட்டான். குமுதத்தை வாங்கையவுடன் வேகவேகமாக படங்களை மட்டுமே பார்ப்பான். அப்புறம் இது தேறாது என்று மார்க்போடுவான். மற்றபடி ஒரு எழுத்து ஒரு வரி கூட படிக்க மாட்டான். இவனுக்கு படிப்பறிவு இருக்கிறதா இல்லையா என்று கூட சமயத்தில் நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நம் கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு கிரிக்கெட் மறந்துபோனது மாதிரி அவனுக்கு வாசிக்க மறந்து போயிருக்கலாம். வாய்ப்பிருக்கிறதில்லியா?

புத்தகப்புழுவாக இருப்பதில் சில தீமைகளும் பல நன்மைகளும் இருக்கின்றன. தீமைகள் என்றால் முக்கியமாக நண்பர்களை இழத்தல். ஆனால் முற்றிலுமாக அல்ல. புத்தகங்களை விடவா நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்? என்னதான் சொல்லுங்கள் புத்தகத்திடம் ஒரு ஐம்பது ரூபாய் கடன் வாங்க முடியுமா என்ன? பிறகு சில பல முக்கியமான காரியங்களை மறத்தல், உதாரணமாக : ஆபீஸ் செல்வது.

நன்மைகள் என்றால் ஏராளம். ஏராளம். உலகத்தில் உள்ள நன்மைதீமைகளையும், மனிதர்களையும், அறிவையும், அனுபவத்தையும் ஒரு மனிதன் பெற வேண்டுமென்றால் ஒரு ஜென்மம் போதாது. இவை அனைத்தையும் பெற வேண்டுமெனில் புத்தகம் மட்டுமே உதவும். ஏன் டிஸ்கவரிச் சேனலும் நேசனல் ஜியோகிராபி சேனலும் இருக்கிறதே? என்று கேட்டால், நம் சுதந்திரம் கெட்டுப்போகிறதே. நம் இஷ்டத்திற்கு நாடுகளை பற்றித்தெரிந்து கொள்ள இயலாதே? அந்த சேனலில் வரும் தகவல்களை மட்டுமே நாம் பெற முடியும். தாய்பேய்க்கு பதில் தாய்லாந்து பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனில் என்ன செய்வது? இப்படி புத்தகத்தின் அருமை பெருமைகளை ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்த பொழுது கடுப்பான என் நண்பன் ஒருவன் (மேற்குறிப்பிட்ட நபர் தான்) மிகுந்த கோபமுடன், புத்தகத்தில ஜிலேபின்னு எழுது வாசிச்சா, ருசி கிடைக்குமாடா என்றான். என்னைக்கேட்டால் சில சமையம் கிடைக்கும் என்று தான் சொல்வேன். நாவல் படித்துக்கொண்டிருக்கும் போது சிரிக்கிறோமே அல்லது சில சமயம் புல்லரிக்கிறதே (இன்று கூட ஜெயமோகனின் கொற்றவையைப் படித்துக்கொண்டிருக்கும் போது முதல் “பழம் பாடல் சொன்னது” என்னை புல்லரிக்க வைத்தது, தொடர்ந்து இரண்டாவதும்) அந்த சுவையை நாம் உணரும் போது ஜிலேபியின் சுவையையும் உணர வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் மட்டுமே.

மேலும் இந்த டீவியின் தொல்லையிலிருந்து தப்பிக்க முடிகிறதே அதுவே பெரிய விசயம். இல்லையேல் விஜய் டீவியில் வரும் “குட்டி தங்கக்கட்டி” என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தையே தான் பத்து நிமிடத்திற்கொருமுறை பார்க்க நேரிடும். போதாக்குறைக்கு “வாடிப்பட்டிக்கு பக்கத்தில” என்ற காத்து கருப்பின் விளம்பரம். என்ன கொடும சரவணா இது?

இந்தியா சென்று திரும்பியதும் home sick லிருந்து தப்பிக்க நிறைய படங்களும் சில புத்தகங்களும் படித்தேன்.

கொஞ்சமாவது நன்றாக இருந்த படம் என்றால் அது : “Texas Chain Saw Massacre : The beginning” மட்டுமே. த்ரில் மற்றும் போன பாகத்தில் வந்தவர்களைப் பற்றிய கதைகள் நன்றாக இருந்தன. சுத்தியலால் அந்த டாக்டரின் முகத்தில் ஓஓஒங்ங்கி அடித்துக் கொல்லும் முதல் காட்சி மனதை உறையச்செய்யும் காட்சி. முகத்திற்கு பக்கத்தில் சுத்தியல் வரும் போது காமிராவை நகர்த்திவிடுவார்கள் என்று நினைத்தது தவறாகிவிட்டது. மேலும் THX ஒலியில் பார்த்ததால் கூட படம் நன்றாக இருந்திருக்கலாம். இந்தியாவில் திரையிடப்பட்டால் நிச்சயம் பாருங்கள்.

மற்றபடி ‘crank’, ‘covenant‘ ‘grudge2’ போன்றவை பரவாயில்லை ரகம். “Grudge 2” படம் பார்த்தவர்கள் காயோகாவை மறந்திருக்க முடியாது.
இந்த படத்தை மிக அருமையான திரில் படம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னைப்பொருத்தவரை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருந்தது. காயோகாவின் ப்ளாஷ்பேக் காட்டப்படுகிறது. சில காட்சிகள் பயமாக இருந்தது. சிறிது நாட்களுக்கு முன் ‘Grudge 1′ படத்தை டீவிடியில் பார்த்தோம். அந்தப் படம் பார்த்தவர்களுக்கு பேய் வரும்பொழுது கூடவே வரும் சத்தம் ஞாபகம் இருக்கும். இந்த சத்தத்தைக்கேட்டு என் நண்பர் வட்டாரம் : என்னடா பேய் ஏப்பம் ஏப்பமா விடுது? என்றனர். பிறகு ஒவ்வொரு முறை ஏப்பம் விடும் பேய் வரும் பொழுதெல்லாம் காமெடி ஸ்டோரிதான்.

crank” ஒரு வித்தியாசமான (by the standards of hollywood) கதை தான். அதாவது விஷம் செலுத்தப்பட்ட ஒரு நபர், சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இதயத்தை துடித்துக்கொண்டேயிருக்க செய்ய வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதெல்லாம் படத்தில் உண்டு. கொஞ்சம் ஓவராக.

“covenant” போகட்டும் விட்டுவிடுங்கள்.

அப்புறம் புது ஜேம்ஸ்பாண்ட் படம். ‘the casino royale’. நிறைய விமர்சனங்கள் Daniel Craig பற்றி. ஏன் நானே சொல்லியிருக்கிறேன். Brossnan இருந்த இடத்தில் இவரா என்று. ‘Munich‘ பார்க்கும் போது கூட : கருமம் கருமம் கிழிஞ்ச பேண்ட் மாதிரி இருக்கான் இவனெல்லாம் ஜேம்ஸ்பாண்டா? என்று கமெண்ட் அடித்திருக்கிறோம்.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. ஜேம்ஸ்பாண்டுக்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார், Daniel Craig. என்ன கம்பீரம், என்ன மிடுக்கு? என்ன நடை? என்ன உடை? ஆனால் உதட்டை எப்பொழுதும் கிஸ்ஸ¤க்கு ரெடி என்பது போலவே வைத்திருப்பது சற்று எரிச்சலைத் தருகிறது. Ask the girls!

படத்தில் வரும் Title Graphics க்கும், அந்த ‘You know my name’ பாடலுக்கும், முதல் chase சண்டைக்காட்சிக்கும், படிக்கட்டில் வரும் சண்டைக்காட்சிக்குமே கொடுத்த காசு சரியாகப்போகிறது. Bond girl? ம்ம்..Bonus. நாங்கள் இந்தப் படத்தி ஏசியாவிலே மிகப்பெரிய திரையில் GV MAX (24.2 M wide) பார்த்தோம். அனுபவம் புதுமை.

பெரிய திரைதான், ஆனால் கோலாலம்பூரில் இருக்கும் iMax திரை போல வராது. அது திரை மட்டுமே ஐந்து மாடிக்கு இருக்கும். இங்கு தான் ‘The Polar Express’ பார்த்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு. இந்தியாவில் iMax ஹைதராபாத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். தெரியவில்லை.

புத்தகங்கள்?? அடுத்த பதிவில். ப்ளீஸ்.