காந்தம்

(தொடர்கதை)

 

3

செல்லம்மா கண் விழித்தாள். குடிசைக்குள் வெளிச்சம் போதுமான அளவுக்கு இருந்தது. சூரியன் உதித்து வெகு நேரமாகிவிட்டதை உணர்ந்தாள். அருகில் படுத்திருந்த பிள்ளைகள் எழுந்து விளையாடப் போய்விட்டன. ராணி மட்டும் இன்னும் தூக்கத்திலிருந்தாள். செல்லம்மா புரண்டு படுத்து கூரையில் தெரிந்த சின்ன சின்ன ஓட்டைகளினூடே தெரியும் வெளிச்ச கீற்றுகளைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். மழை பெய்தால் தான் கஷ்டம். பெய்யாவிடினும் கஷ்டம். தான் இந்த கிராமத்துக்கு வாக்கப்பட்டு வந்து இந்த எட்டு வருடங்களில் ஒரு முறையோ இரு முறையோ தான் மழை பெய்திருந்ததை நினைத்துக்கொண்டாள். அதுவும் கடந்த ஐந்து வருடங்களாக கடும் வரட்சி. மழையும் இல்லை வேலையும் இல்லை. சில சமயங்களில் பக்கத்து கிராமத்து மொட்டை மலையில் கல்லுடைக்கும் வேலையிருக்கும். உழுது அன்னமிட்ட கைகளால் மாணிக்கம் கள்ளச்சாராயம் விற்பதை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வாழ்க்கை நம்மை கேட்டுக்கொண்டா ஓடுகிறது? நாம் ஏற்றுக்கொண்டால் என்ன ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன?

ஏன் மாணிக்கம் இன்னும் வந்திருக்கவில்லை? இல்லை வந்து விட்டு வெளியே சென்று விட்டாரா? எழுந்து உட்கார முயன்றாள். மிகவும் சிரமாக இருந்தது. கஞ்சி இல்லாத மயக்கம் அவளை பின்னால் தள்ளியது. அருகிலிருந்த குத்துக்கால் மரத்தில் சாய்ந்து கால் நீட்டிக்கொண்டாள். வயிறு மிகவும் பெரிதாக இருப்பது போல இருந்தது. குடிசையின் தாழ்ந்த வாசலில் யார் யாரோ நிற்பது போல இருந்தது. மிகவும் தாகமாக இருந்தது.

“டுர் டுர் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று சத்தம் போட்டுக்கொண்டே செந்தில் குடிசைக்குள் நுழைந்தான். அம்மாவைப் பார்த்ததும் அமைதியாக வந்து செல்லம்மாவின் பக்கத்தில் வந்து குத்த வைத்து உட்கார்ந்து கொண்டான். அம்மாவின் கலைப்பான முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்லம்மா அவன் தலையை வருடிக்கொடுத்து கொஞ்சம் தண்ணி கொண்டுவரச்சொல்லி குடித்தாள்.

மடியில் உட்கார்ந்து கொண்டவனின் தலையைக் கோதிக்கொண்டே “அண்ணன் எங்கடா?” என்றாள். “அவன் மந்தல வெளாடுட்டு இருக்கான்” என்றான் செந்தில். “டேய் செந்தில் உனக்கு ராமு மாமா வீடு தெரியும்ல, அங்க போய் மாமா இருந்தார்ன்னா, அப்பா இன்னும் வீட்டுக்கு வரல எங்க போனார்ன்னு தெரியும்மான்னு கேட்டுட்டு வாடா” என்றாள். செந்தில் வேகமாக தலையாட்டிவிட்டு மறுபடியும் டுர் டுர் டுர் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்லிக்கிட்டே வாசலைக்கடந்து சென்றான்.

செல்லம்மா மெதுவாக முட்டியைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள், மயக்கமாக வந்தது. மெல்ல நடந்து வாசலுக்கு வந்தாள். சிறியதும் பெரியதுமாக மக்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேலே பார்த்த செல்லம்மாவுக்கு அச்சர்யம் தாங்கவில்லை. ஆங்காங்கே கரு மேகங்கள் தெரிந்தன.

எதிரே இருந்த குடிசையின் வெளியிலே கால் நீட்டி உட்கார்ந்திருந்த செங்கமலக்கிழவி “இன்னக்கி வந்துரும் ஆத்தா. காத்து சுத்துவட்டா இல்ல பாரு. காலையில இருந்து ஒரே புழுக்கமா வேற இருக்கு. கண்டிப்பா வரும் ஆத்தா” என்றாள். பக்கத்தில் அவள் பொக்கைவாய் அழகையே பார்த்துக்கொண்டிருந்த அவளது மூன்று வயது பேத்தி ராக்கம்மா “என்ன அப்பத்தா வரும்?” என்றாள் ஆர்வமாக. “ஏ சின்னச்சிறுக்கி.. மழ வரப்போகுதுடி..ஊரெல்லாம் குளிரப்போகுது” என்று ஆருடம் சொல்லும் பாணியில் நீட்டி நிறுத்தி சொன்னாள். ராக்கம்மா “மழையா? வானத்திலிருந்து விழுமா” என்றாள் வானத்தைப் பார்த்துக்கொண்டே, அதிர்ந்தவளாக. அவளுக்கு நிச்சயமாக மழை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

செல்லம்மாவுக்கு ஏனோ மனது ஆனந்தத்தில் அதிர்ந்தது. உடனே மாணிக்கத்தை நினைத்து பழைய சோக நிலைக்கு திரும்பியது. அப்படியே கதவில் சாய்ந்து நின்று கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். தூரத்தில் யாரோ தெருவெங்கும் பேசிக்கொண்டு கையிலும் இடுப்பிலும் பையுடன் ஒரு பெண் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். “அட பேச்சியம்மா வரா” என்றாள் சத்தமாக. மறுபடியும் மனம் குதியாட்டம் போடத் தொடங்கியது.

***

காளியம்மன் கோவில் திடலில் புழுதி படர்ந்து கொண்டிருந்தது. மந்தைக்கு வந்த செந்தில அப்படியே நின்று விட்டான். அவனுடைய அண்ணன் குமாரும், ராமு மாமாவின் மகன் மருதுவும் கட்டிப்புரண்டு கொண்டிருந்தார்கள். மற்ற கோலிகுண்டு சிறுவர்கள் இவர்களின் சண்டையைக் கண்டு கொள்ளாமல் தங்களது விளையாட்டில் மிகுந்த மும்முரமாய் இருந்தனர். சில சிறுவர்கள் கீழே உட்கார்ந்து சண்டையையும் வானத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர். எதைப்பார்ப்பது எதைவிடுவது என்கிற பதட்டம் அவர்களது கண்களில் தெரிந்தது.

செந்தில் அவர்கள் பக்கத்தில் சென்று “அண்ணா அண்ணா” என்று கூப்பிட்டான். குமார் நிமிர்ந்து பார்த்து மேலும் தீவிரமாக சண்டையைத் தொடர்ந்தான். அங்கேயிருந்த பிள்ளையார் கோவிலில் உறங்கிக்கொண்டிருந்த பெரிசுகள் சத்தம் தாங்காமல் எழுந்து வந்து சண்டையை விலக்கிவிட்டார்கள்.

குமார் இன்னும் மருதுவை முறைத்துக்கொண்டேயிருந்தான். செந்திலைக் கண்டுகொள்ளாமல் வேகமாகச் சென்று அனாதையாக விடப்பட்ட தனது கோலிக்குண்டை எடுத்து பின்னால் பெரிதும் கிழிந்திருந்த டவுசர் பையில் போட்டுக்கொண்டான். அமைதியாக கோவில் படியில் வந்து உட்கார்ந்து கொண்டான். செந்தில் சத்தம் போடாமல் அவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். செந்தில் குமாரையே பார்த்துக்கொண்டிருந்தான். குமாரின் முட்டிகாலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அப்பா வந்தவுடன் மருதுவுக்கு அடிவாங்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான், செந்தில்.

“அப்பா வீட்டுக்கு வரல தெர்யுமா?” என்றான் செந்தில். குமார் தெரியும் என்பது போல தலையாட்டினான். “ஏண்ணா அவன் கூட சண்டபோட்ட?” என்றான். குமார் பதில் சொல்லவில்லை. தூரத்தில் நின்றபடியே தூங்கிக்கொண்டிருக்கும் வண்டிமாட்டையே பார்த்துக்கொண்டிருந்தான். செந்தில் குமாரின் கையைப் பற்றி “அண்ணா இன்னிக்கு மழ வருமா?” என்றான்.

குமார் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். முன்பைவிட மேகங்கள் நிறைய இருந்தன. வானம் கரு வண்ணமாயிருந்தது. தூங்கிக்கொண்டிருந்த பெரிசுகள் இப்பொழுது எழுந்து உட்கார்ந்து வானத்தைப்பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். மருது தூரத்தில் இடுப்பில் கைவைத்துக்கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

இரண்டு கிழவிகள் காளியம்மனுக்கு முன்னால் கைகளை தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்துகொண்டிருந்தது. “காளியாத்தா எங்க கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு விடிவு கொடு ஆத்தா. இதுக்கு மேலயும் எங்கள சோதிக்காத. புள்ள குட்டியெல்லாம் மழ தண்ணி இல்லாம வாடி வதங்குதுக. கைவிட்டுறாத ஆத்தா” என்று முனகியபடி நெடுஞ்சான்கடையாக விழுந்து கும்பிட்டனர்.

ஏதோ ஞாபகம் வந்தவனைப் போல செந்தில் எழுந்து மறுபடியும் ஓடத்தொடங்கினான். குமார் “எங்கடா போற” என்றான். “ராமு மாமா வீட்டுக்கு” என்று கத்தி சொல்லியபடி மந்தவெளியைக்கடந்து ஒரு சந்துக்குள் புகுந்து மறைந்தான்.

***

“அடி ராக்கம்மா என்னாடி இந்தப்பக்கம்?” என்றாள் செல்லம்மா முகம் நிறைய மகிழ்ச்சியோடு. பொய்யான கோபத்தை முகத்தில் வைத்துக்கொண்ட ராக்கம்மா “நீங்க சொல்லாட்டி எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களாக்கும். எப்படி வந்துட்டேன் பாருங்க. எப்படிண்ணி இருக்கீங்க? முகமெல்லாம் வாடிப்போயிருக்கு. பசங்க எல்லாம் எங்க?” என்றவளின் பேச்சைக்கேட்டவுடனே செல்லம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

“ஐ ராணிகுட்டி தூங்கறாளா? இன்னும் உனக்கு விடியலையாடா செல்லம்” என்று கொண்டுவந்திருந்த பைகளை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு ராணியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள். தூக்கத்திலிருந்து முழித்த ராணி, தனது அழகிய சிறு கண்களால் அதிர்ச்சி காட்டி “அத்த” என்றாள்.

செல்லம்மா ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சிரமப்பட்டு ராக்கம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சில மாதங்களுக்கு முன் வரை சிறு பெண்ணாக தெரிந்த ராக்கம்மாவா இவள் என்று நினைத்துக்கொண்டாள். சட்டென்று திரும்பிய ராணி “பசங்கள எங்கண்ணி? அண்ணன எங்க?” என்றாள்.

“மந்தவெளிலதான் இருப்பான் குமார் நீ அவன பாக்கலியா? உங்க அண்ணன் நேத்து போனவரு இன்ன வரலடி” என்றாள். பிறகு “நீ எப்படிடி இருக்க? நல்லாயிருக்கியா? உன் புருஷன் உன்ன நல்லா வெச்சுக்கிறானா?” என்று நெகிழ்ச்சியான குரலில் கேட்டாள்.

“நான் நல்லாயிருக்கேன் அண்ணி. அவரு நல்லா பாத்துக்குறாருண்ணி” சிறிது இடைவெளி விட்டு “நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல. இப்படி ஒத்த ஆளா நெற மாசத்தோட கஷ்டப்படுறீங்க. வலியெடுக்குதாண்ணி” என்றாள்.

“இல்லடி காலைல கொஞ்சம் இருந்தது. இப்போ இல்ல” என்றாள் செல்லம்மா.

***

குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. “அத்த மட்டும் தான் வீட்ல இருந்தாங்க. வீட்டுக்கு வரேன்டான்னு சொல்லிட்டாங்க” என்று மூச்சு வாங்க சொல்லிவிட்டு குமாரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான் செந்தில். “அத்த கெழங்கு கொடுத்தாங்க” என்று சொல்லியபடி மரவல்லிக்கிழங்கை டவுசர் பையிலிருந்து எடுத்து குமாரிடம் கொடுத்தான். குமார் “எனக்கு வேண்டாம் நீ சாப்டுடா” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

காற்று பலமாக வீசியது. செந்திலின் வெட்டப்படாத நீண்ட முடி காற்றில் அலைந்தது. புழுதி எழுந்து கண்களை அப்பியது. கரு மேகங்கள் கலையத்தொடங்கின. கிழவிகள் வாயடைத்து மௌனமாக வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

***
(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s