உயிர் உடைவதை உணர்கிறேன். தலையெழுத்தை தலைகீழாய் எழுதினேன். தலைகீழாய் எழுதியதைப் படிக்கமுடியாமல் மாய்ந்துபோகிறேன். தலையெழுத்தைப் படிக்கத்தெரிந்த நட்சத்திரம் ஒன்று மேக இதயத்துக்குள் மறைந்துகொண்டது. இதயங்கள் காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன. வடிவங்கள் மாறியவாறு இருக்கின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் நான் தொலைத்த நட்சத்திரத்தை தேடித்தேடி அலைகிறேன். மேகங்கள் என்னை கடத்திச்செல்கின்றன. குயிலொன்று என்னை மேகத்திலிருந்து மீட்டெடுக்கிறது. அந்த குயிலின் பாடல் என்னைப் பற்றிக்கொள்கிறது. குயில் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அந்த ஆலமரத்திலேறி அமர்ந்துகொண்டது. ஆல இலைகள் குயிலின் பாடலை சுவாசித்தன. குயில் பாடுவதை நிறுத்திக் கொண்டது. பாடல்களைத் தேடி வேர்களில் நெடுந்தூரம் பயணம் செய்தேன். அந்த மரத்தின் இலைகளின் நரம்புகளில் அந்தப் பாடல்களைத் தேடித்திரிந்தேன். இலைகள் காற்றில் உதிர்ந்தன. பாடப்பட்ட பாடல்கள் காற்றில் கலந்திருக்கின்றன. காற்றிலிருந்து குரலை மட்டும் பிரிக்கத் தெரிந்த பறவை ஒன்று வேண்டும். இறைவனிடம் கேட்டேன். பிறகு, பறவை வேண்டாம், இந்த இரவை மட்டும் எப்படியேனும் கடத்திவிடு, என்று மீண்டும் வேண்டிக் கொண்டேன். இரவு கனக்கிறது. இறைவன் என்னை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார். இரவு கனவுகளில் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. கனவு, இரவின் கரிய இருளில், சிக்கிக்கொண்டிருந்தது. கனவுகளினூடே பறவை ஒன்று பறந்துவந்தது. அது நான் இழந்த பாடல்களை மீட்டுத்தந்தது. பாடல்கள் அருவியில் நனைந்தன. அருவியின் சத்தம் பாடல்களை நினைவிழக்கச்செய்தது. கனவுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இரவு உப்புக்கரித்தது. உப்புக்கரித்த நினைவுகள் கணங்களை நிறுத்துகின்றன. கடந்துவிட்ட கணங்களிலிருந்து நினைவுகளை சேகரிக்க முயல்கிறேன். சேகரிக்கப்படாத நினைவுகள் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிகின்றன. அனாதையான அந்த நினைவுகள் ரயில் நிலையங்களில் மணி காட்டும் டிஜிட்டல் கடிகாரங்களில் சென்று ஒளிந்து கொண்டன. புள்ளிகளாய் தேய்ந்தன. நினைவிடங்களை விட்டகலாத மூச்சுக்காற்று அங்கேயே சுற்றித்திரிந்தது. ஜான்சன்ஸ் பேபி பவுடரின் மணம் என் மூச்சுக்காற்றை இறுகப்பிடிக்கிறது. என் இதயத்தில் உன்னைக் கண்டதும் அது அங்கேயே ஒழிந்துகொண்டது. என் சிவப்பனுக்கள் பவுடரின் மணத்தை உறிஞ்சிக்கொள்கின்றன. நினைவுகள் என் ரத்தக்குழாய்களுக்குள் இங்கும் அங்கும் திக்குத்தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றன. அவை உறைந்து போகும் நாட்களை எண்ணி காத்துக்கிடக்கின்றன.
Month: June 2007
The Testament Of Gideon Mack and Making of ஹலோ அஸ்விக்குட்டி
என் நண்பர் ஒருவரிடம் “உங்களுக்கு பேய்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டேன். என்னை ஒரு முறை ஆழமாக பார்த்த அவர், சட்டென “இல்லை” என்றார். “ஏன்?” என்றேன். அதற்கு அவர் “இது வரை நான் பேய்களைப் பார்த்ததில்லை. மற்றவர்கள் சொல்வார்களே அது போல உணர்ந்தது கூட இல்லை. சில கதைகளை மட்டுமே கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க நான் பேய்களை எப்படி நம்புவது?” என்றார். “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?” என்றேன் தொடர்ந்து. அவர் சிரித்து விட்டார். “ம்ம்ம்..பேஷா இருக்கே!” என்றார். “இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்மறையான விஷயம் ஒன்று இருக்கிறதல்லவா? பகல் என்றால் இரவு. நல்லவன் நான், என்றால் கெட்டவன் நீங்கள்(!). அதே போல ஒரு நல்ல சக்திக்கு எதிராக ஒரு தீயசக்தி இருக்கவேண்டுமே. அப்படியென்றால், நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்றால், பேய்களையும் நம்பித்தானே ஆகவேண்டும்” என்றேன்.
கொஞ்ச நேரம் யோசித்த அவர், “முத்து வாட் டு யூ வான்ட்?” என்றார். “உங்களுக்கு பேய்கள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா?” “எனக்கு பேய் படங்கள் பார்க்க ரொம்பவும் பிடிக்கும். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு நிறைய பயமாக இருக்கும். ஆனாலும் மறுமுறையும் பேய்ப்படங்கள் பார்ப்பேன். மறுமுறையும் பயப்படுவேன். கடவுள் எனக்கு மன ஆறுதலைத் தருகிறார். தன்னம்பிக்கையைத் தருகிறார். எனவே நான் அவரை நம்புகிறேன். பேய்கள் எனக்கு அச்சத்தைத் தருகின்றன. எனவே நான் அவைகளை நம்பவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். என் மனநிம்மதிக்கு கேடு விளைவிக்கும் ஒன்றை ஏன் நான் வலுக்கட்டாயமாக நம்பவேண்டும்?” என்றார்.
***
“The Testament Of GideonMack” என்றொரு புத்தகம். போன வருடம் புக்கர் பரிசுக்கு (long list) நாமினேட் செய்யப்பட்டது இது. கதை, கிடியன் என்ற பாதிரியாரைப் (Minister Of A Church ministerக்கு தமிழில் வார்த்தை தெரியவில்லை, எனவே பாதிரியார் என்றே சொல்லுகிறேன்!) பற்றியது. நாவல் நம்பிக்கை சார்ந்த ஒன்று. மனிதனின் குணங்களை அலசுகிறது. சம்பவங்களைச் சொல்கிறது. பிற வாதங்களை முன் வைக்கிறது. நம்மை குழப்புகிறது. பிறகு தீர்வை நம்மிடம் விட்டுவிடுகிறது. (அட போங்கப்பா! நாவல் படிச்சப்புறம் ஒரு முடிவு கெடைக்கலேன்னா என்னா அர்த்தம்?ன்னு கேக்கறவங்களுக்கு கண்டிப்பா இந்த நாவல் சரிப்படாது)
மனிதர்களின் குணாதிசயங்கள் மிகவும் விந்தையானவை(ஆமா இவரு ரொம்ப கண்டாரு!). ஒரு விசயத்தை நாம் பிடித்துக்கொள்ள தொடங்கிவிட்டோமேயானால், நமது மனம் பிறர் என்ன சொன்னாலும் கண்டுகொள்வதில்லை. நமக்கு அது உண்மையாகப் படுகிறது. மனம் ஆராய மறுக்கிறது. (சிவாஜி படம் அவ்ளோ un-logical இருந்தப்பவும் கைத்தட்டி பேப்பரகிழிச்சு எறிஞ்சு கத்தினப்பவே எனக்கு தெரியும்டா!) கண்ணால் பார்ப்பது பொய் என்று சும்மாவா சொன்னார்கள்.
***
நாவல் ஒரு புத்தக வெளியீட்டாளரிடமிருந்த ஆரம்பிக்கிறது. அந்த புத்தக வெளியீட்டாளருக்கு ஒரு சுவாரஸ்யமான கையெழுத்து பிரதி கிடைக்கிறது. அந்த பக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு போல இருக்கிறது. அந்த மனிதன் தன் வரலாற்றை தானே சொல்கிறான். புத்தக வெளியீட்டாளரின் நண்பர் ஒரு பத்திரிக்கையாளர்(freelance). அவர் தான் இந்த கைஎழுத்து பிரதியை தனது நண்பரான புத்தக வெளியீட்டாளருக்கு கொடுக்கிறார். அவர் இந்த கைப்பிரதியை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று வெளியீட்டாளரிடம் கோரிக்கை வைக்கிறார்.
நாவலில் அந்த கைப்பிரதி அப்படியே தரப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் பெயர் கிடியன். கிடியனே கதை சொல்கிறார். (self-narrative).
***
கிடியன் ஒரு பாதிரியார். மிகவும் கண்டிப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர். அவருடைய தந்தையுமே ஒரு பாதிரியார் தான். கிடியன் வளரும் போது அவருக்கு பாதிரியார் வேலை பிடிக்கவில்லை. ஏனென்றால் கிடியனுக்கு கடவுளின் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. ஆனால் வளர்ந்து வேலை தேடும் போது வேறு வழியில்லாமல் (அல்லது பிடித்தே!) பாதிரியார் ஆவதற்கு ஒத்துக்கொள்கிறார். கிடியனுக்கு வேலை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது வேறு குழப்பம்.
காலேஜில் படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால் அவள் தன்னுடைய நண்பனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து, வேறு வழியில்லாமல் அவளுடைய தோழியை கிடியன் காதலிக்கிறார்(தலை சுத்துதா, மறுபடியும் ஒரு முறை இந்த வரியைப் படிங்க!). ஆனாலும் அவள் மீது காதல் குறையவேயில்லை. நண்பனும் இவர் காதலித்த பெண்ணும் மணமுடித்துக்கொள்கிறார்கள். இவரும், இவர் காதலித்த பெண்ணின் தோழியும் மணமுடிக்கின்றனர். இருவர் குடும்பமும் ஒரே ஊரில் வசிக்கிறது. (ரொம்ப சிக்கலான விசயத்தை எவ்ளோ சிம்பிளா விளக்கிருக்கான் முத்து. யு ஆர் க்ரேட் டா!)
கிடியனுக்கு காலையில் எழுந்து அல்லது வேலை முடித்து வந்து ஜாக்கிங் செய்வது வழக்கம்(என்ன மாதிரி ரொம்ப சுறுசுறுப்பு. Fitness-Freak!). ஜாக்கிங் பயிற்சியால் மாரத்தான் ஓட்டங்களுக்கும் இவர் செல்வார். அவ்வாறு மாரத்தான் ஓட்டங்களுக்கு செல்லும் போது ,ஸ்பான்ஸர்ஸ் கொடுக்கும் பணத்தை வைத்து நிறைய நல்ல விசயங்களை அந்த ஊருக்கு செய்து வருகிறார். மேலும் சில ரிசர்ச்சுக்கு பணம் வசூலித்துக் கொடுக்கிறார். கிடியனும் அவரது மனைவியும் வாழ்க்கையை ரசிக்கத்துவங்குகிறார்கள். ஒரு நாள் கிடியனின் மனைவி ஒரு விபத்தில் பலியாகிறார். வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கும் போது நேர்ந்த இந்த மிகப்பெரிய இழப்பை கிடியனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இடிந்து போகிறார். ஆனால் வாழ்க்கை ஓட வேண்டுமே? நம் காலம் முடியும் வரையில் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? நம் காலத்தை முடித்துக்கொள்ள நம்மால் முடிந்தாலும், நம்மால் முடியாது என்பது தானே உண்மை!
வாழ்க்கை அவருக்கு ஜாக்கிங்காக ஓடுகிறது. ஜாக்கிங் செல்வதை அவர் வெகுவாக நேசிக்கத்தொடங்குகிறார். அவர் ஜாக்கிங் செல்லும் பாதை நல்ல பச்சை பசுமையாக இருக்கும் (scotland! என்ன Scotlandன்னு ஒரு ஆச்சரியக்குறி? போயிருக்கியா அங்க?). சில இடங்களில் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதி போல இருக்கும். அவருடைய நண்பனின் வீடும் அந்த வழியிலே இருக்கிறது. ஒரு நாள் கிடியன் ஜாக்கிங் செல்லும் போது ஒரு கல்தூணைப் (ஸ்தூபி போன்ற ஒன்று!) பார்க்கிறார். அவ்வாறான கல்தூண்கள் அந்த ஊரிலே கொஞ்சம் தான் இருக்கின்றன. இம்மாதிரியான தூணை அவர் இந்த இடத்தில் இதற்கு முன்னர் (நேற்று கூட) பார்க்கவில்லை. இரவோடு இரவாகவும் இந்ததூணை யாராவது கொண்டுவந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அருகில் சென்று தொட்டுப்பார்க்கிறார். அவரால் நம்பமுடியவில்லை. ஜாக்கிங்கிலிருந்து திரும்பிய கிடியன் தன் நண்பனிடமும் நண்பனின் மனைவியிடமும் சொல்கிறார் அவர்கள் நம்புவதற்கு மறுக்கின்றனர். கடைசியில் நண்பனின் மனைவி மட்டும் ஒரு நாள் இருவரும் சென்று பார்ப்போம் என்று சொல்கிறாள். (ஆனால் கடைசி வரைக்கும் அவளோ வேறுயாரோ அந்த தூணைப் பார்க்கவில்லை!)
(கிடியனும் அவருடைய நண்பனின் மனைவியும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் உறவு கொள்கின்றனர். அவள் இது தான் முதலும் கடைசியும் என்று திட்டவட்டமாக சொல்லிவிடுகிறாள். அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவள் அது போல ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்பது போல் தான் இருக்கிறாள். கிடியனுக்கே இதில் சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த நிகழ்வு ஒரு கனவோ என்று நினைக்கத்தொடங்குகிறார். ஏனென்றால், அவர்கள் இருவரும் தனியே இருப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் பின்னர் கிடைத்தும், அவள் அந்த சம்பவத்தைப் பற்றி ஏதும் பேசியதும் இல்லை, அட்லீஸ்ட் ஒரு சமிக்ஞை கூட காட்டியதில்லை)
இவ்வாறான சூழ்நிலையில் ஒரு நாள் தன் தோழியின் நாய் ஒன்றைக் காப்பாற்ற முயன்று ஒரு ஆற்றுக்குள் விழுந்து விடுகிறார் கிடியன்(இதுக்கு தான் தோழிகள் முன்னாடி ஓவரா சீன் போடக்கூடதுன்றது!).அந்த ஆறு மிகவும் பெரியது ஆழமானது. அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த ஆறு பூமிக்கு அடியில் ஓடும். விழுந்த கிடியன் மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் கரை ஒதுங்குகிறார். மூன்று நாட்கள்! அவர் மூன்று நாட்கள் பூமிக்கு அடியில் இருந்திருக்கிறார் (மீன்கள் மட்டுமே உயிர்வாழக்கூடிய இடம்!), உணவில்லாமல். தலையிலும் காலிலும் பலத்த அடிகளுடன் இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிக விரைவில் தேறுகிறார். மருத்துவர்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். மெடிக்கல் மிராக்கிள் என்கின்றனர். (ஏம்ப்பா தமிழ் படங்கள்ல இந்த டயலாக் வந்தா மட்டும் சிரிக்கறீங்க?)
கிடியன் பூமிக்கு அடியில் இருந்த போது, அங்கே வாழ்ந்துகொண்டிருந்த(!) ஒரு மனிதன் தான் தன்னைக் காப்பாற்றி உணவளித்தான் என்கிறார். அந்த மனிதன் வேறு யாரும் இல்லை, அவன் தான் சாத்தான் என்று குண்டைத்தூக்கிப் போடுகிறார். யாவரும் நம்ப மறுக்கின்றனர். விழுந்ததில் புத்தி பிசகிவிட்டது என்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரைக்கும் கிடியான் நன்றாகவே, தெளிவான மனதுடனே இருப்பதாகப் படுகிறது. கிடியான் தான் சாத்தனை சந்தித்ததை திட்டவட்டமாக நம்புகிறார். சாத்தனுடன் நடந்த உரையாடல்கள் அவருக்கு சட்டென நினைவுக்கு வருகிறது. தன் நண்பனை அழைத்து அவன் முன்னாலே (கிட்டத்தட்ட வாக்குமூலம் போல்! வாக்குமூலத்தின் போது தான் போதையில் இருக்கவில்லை என்பதற்கு சாட்சி அந்த நண்பர்!) பதிந்து வைத்துக்கொள்கிறார். பிறகு அத்தனையையும் தன் கையாலே எழுதுகிறார்.
பிறகு தலைவறைவாகிறார். ஊரை விட்டு வெளியேறி ஒரு விடுதியில் தங்கிவிட்டு, கடைசியாக எழுதியதில் சில திருத்தங்களையும் செய்து விட்டு, கைப்பிரதியை விடுதியிலே விட்டுவிட்டு, அருகிலிருக்கும் ஒரு மலையில் சென்று இறந்து போகிறார். அவர் கைப்பட எழுதிய அவரது கதை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து எடுக்கப்பட்டு பத்திரிக்கை நண்பரின் மூலம் அந்த புத்தக வெளியாட்டளரிடம் கிடைக்கிறது.
புத்தக வெளியீட்டாளர், இந்த கைப்பிரதியைக் கொடுத்த தன் நண்பனை (பத்திரிக்கையாளர்) கிடியன் வாழ்ந்த ஊருக்கு சென்று அங்கே அவருக்கு இருக்கும் ஒரே சொந்தமான அவரது நண்பனின் குடும்பத்தை சந்தித்து உண்மை நிலவரத்தை அறிந்துவருமாறு சொல்கிறார்.
பத்திரிக்கையாளரைச் சந்திக்க முதலில் மறுக்கும் நண்பனின் குடும்பம் பிறகு பேசுவதற்கு ஒத்துக்கொள்கிறது. நண்பனின் மனைவி பேச சம்மதிக்கிறாள். பத்திரிக்கையாளரும் நண்பனின் மனைவியும், கிடியன் பார்த்ததாக சொன்ன அந்த ஸ்தூபி இருக்கும் இடத்திற்கு செல்கிறனர். அப்பொழுது அவள்: ஒரு நாள் இரவு கிடியன் இந்த வழி போவதைப் பார்த்து, தான் பின் தொடர்ந்ததாகச் சொல்கிறாள். “அங்கே அந்த தூண் இருந்ததாக சொல்லப்படுகிற இடத்துக்கு பக்கத்தில் கிடியன் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.(சாத்தான்!) அந்த ஆள் மறைவாக இருந்தார்” என்கிறாள். பத்திரிக்கையாளர் “அப்படியானால் நீங்கள் அந்த தூணைப் பார்த்தீர்களா?” என்கிறார். அதற்கு அவள், “தெரியவில்லை. பார்த்தது போலவும் இருக்கிறது. பார்க்காதது போலவும் இருக்கிறது” என்கிறாள்.
கடைசியாக பத்திரிக்கையாளர் தயங்கி தயங்கி கிடியனுக்கும் அவளுக்கு இருந்த அந்த உறவைப் பற்றி கேட்க்கிறார். அந்த உறவு உண்மையிலே நடந்ததா இல்லை கிடியானின் கற்பணையா? நடந்தது என்றால் ஏன் மீண்டும் ஒரு முறை நடக்கவில்லை? ஏன் அவள் அவ்வாறான ஒரு நிகழ்வை நடந்ததாக காட்டிக்கொள்ளவேயில்லை? என்று கேட்க்கிறார்.
அதிர்ந்து போன அவள், “ஒரு முறையா? அதற்கப்புறம் எத்தனை முறை நாங்கள் உறவு கொண்டுள்ளோம் தெரியுமா?” என்கிறாள்.
குழப்பத்துடன் பத்திரிக்கையாளர் திரும்புகிறார். நாமும் தான்.
இந்த இடம் தான் மிகவும் குழப்பான இடம். ஏன் கிடியான் அப்படி சொன்னார்? இதே போல கதாப்பாத்திரங்களையும் அவைகள் சொல்லும் விசயத்தையும் நம்மால் நம்பமுடியவில்லை. கிடியன் சாத்தானிடம் “ஊரில் ஏன் யாருக்குமே அந்த தூண் தென்படவில்லை” என்று கேட்க்கும் பொழுது, சாத்தான் “அது உனக்காகவே அங்கே வைக்கப்பட்டது” என்கிறது. சாத்தனை நம்ப முடியுமா? நண்பனின் மனைவி பார்த்தது போல இருந்ததாக சொல்கிறாளே?
கேள்விகள் கேள்விகள் கேள்விகள்!
நாவல் படிப்பதற்கு இதமாக, ஒரு சலமில்லாத ஆங்காரமில்லாத அலட்டல் இல்லாத நீரோடை போல இருந்தது. ஆங்காங்கே மெல்லிய சிரிப்பலைகளும் எழாமல் இல்லை. கண்டிப்பாக ஒரு முறை படிக்கலாம். முதல் ஐம்பது பக்கங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பிறகு smooth. (ம்ம்.. மார்க் பொட்டுட்டாருய்யா மார்க் ஆண்டனி!)
***
என்னுடைய ஹலோ அஸ்விக்குட்டி கதையைப் படித்த சிலர் ஏன் இப்படி ஒரேயடியாக tragedyயே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், ஏன் பேய்கதைகளையே கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் என்றும் கேட்டனர். என்னிடம் பதில் இல்லை. அவ்வாறான கதைகள் தான் என்னை எழுதவைக்கிறது. நான் கதைகளை பெரும்பாலும் எழுதுவதில்லை, கதைகள் தான் என்னை எழுதச் சொல்கின்றன. (நௌ, திஸ் இஸ் டூ டூ மச்!)
***
இந்த ஹலோ அஸ்விக்குட்டியில் சிவா தற்கொலை செய்துகொள்வதைப்போன்ற ஒரு சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகில். (இந்த தபா, ஊருக்கு போனபோது உன் மூஞ்ச அவன் கிட்ட காட்டினதான? அதான் தற்கொலை செஞ்சுகிட்டான்!)
சாதிவிட்டு சாதி காதலித்தான் ஒரு பையன். நாம் தான் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் ஆயிற்றே?! அதாவது காதலுக்கு மரியாதை படத்தை முன்னூறு தடவை டீவியில் குடும்பத்தோடு பார்த்து கண்ணீர் விடுவோம், ஆனால் வீட்டில் உண்மையிலே யாராவது தப்பித்தவறி காதலித்து தொலைத்தால், அந்த காதலுக்கு கண்டிப்பாக அவமரியாதை தான். (அடி பிரிச்சுமேஞ்சிருவோம்ல! உங்கள புரிஞ்சுக்கவே முடியலடான்னு விவேக் சும்மாவா சொன்னாரு!)
அவன் வீட்டில் இதற்கு சம்மதிக்கவில்லை. வீட்டின் சம்மதத்தை அவன் எதிர்பார்த்தான். வீட்டுக்குள் செல்லாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் மொட்டை மாடிப்படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். நான்கு நாட்கள். சாப்பிடவேயில்லை. எங்கும் போகவில்லை. அவனுடைய வீட்டிலும் கொஞ்சம் கூப்பிட்டுப்பார்த்தார்கள். ஏனோ சமாதான முயற்சியில் இறங்கவில்லை. அவன் தற்கொலை செய்து கொண்டான்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்கு ஒரு புதுமணத்தம்பதியினர் வருகின்றனர். மனைவி வெளியூரைச் சேர்ந்தவர். கணவனும் தான். ஒரு நாள் திடீரென அந்தப் பெண் (மனைவி!) இறந்து போன அந்தப் பையன் போல பேசத்தொடங்கியிருக்கிறாள்.நான் இங்கே தான் உட்கார்ந்திருந்தேன். இங்கே தான் மருந்துகுடித்தேன் என்று கனகச்சிதமாக சொல்கிறாள். இறந்தவனின் அம்மா வந்து கதறி அழுதிருக்கிறார்.
நான் பார்க்கவில்லை எனினும், இந்த சம்பவத்தை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் பார்த்திருக்கின்றனர். என்னுடைய அக்காவும். நானும் என் அக்காவும் வீட்டுக்கு வெளியே படிக்கட்டில் இரவு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அக்கா இந்தக் கதையை என்னிடம் சொன்னார். அவர் இந்தக் கதயைச் சொல்லிமுடிக்கும் போது (exactly that moment you know!), இறந்து போன அந்த பையனின் அம்மா எங்கள் வீட்டு வழியே நடந்து சென்றார். எங்களைப் பார்த்து சிரித்தார்.
மேலும் ரயில் தண்டவாளத்தில் செல் போன் உபயோகித்ததால் ரயில் வருவதைக்கவனிக்காமல் ஒரு பெண் இறந்து போனார் என்ற செய்தி ரொம்ப நாட்களுக்கு முன்னர் படித்திருந்தேன். இந்தச் செய்தி என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. என்னை ஆழமாக பாதித்தும் விட்டது.
இந்த இரு சம்பவங்களை வைத்து பின்னப்பட்டதுதான் ஹலோ அஸ்விக்குட்டி என்ற கதை. சிலருக்கு இது crap ஆக இருக்கலாம். ஆனால் எனக்கு எழுதும் போது, “நான் அஸ்வினி இல்லடா சிவா” என்று அந்த பெண் சொல்லும் போது, உண்மையிலே புல்லரித்து விட்டது. கொஞ்சம் பயமாகக் கூட போய்விட்டது.
அந்த இரண்டாவது பப் சீனை ரசித்து எழுதினேன்.(ம்ம்ம்க்க்கும். நாங்க ரசிக்கனும்ப்பா!) அதில் வரும் “உன்ன கூட்டிக்கிட்டு கடைக்கு போறேன்” என்ற வரிகள் என்னுடைய வரிகள் இல்லை, புதுப்பேட்டையில் வரும் “புல் பேசும் பூ பேசும்” பாடலில் வரும் வரிகள். (வேற எங்க எங்க இருந்து, எத எத சுட்ட, ஒழுங்கா சொல்லிடு!)
கதை கொஞ்சம் நீளமாக இருந்தாலும் பொறுமையாக வாசித்தவர்களுக்கும், வாசித்து பின்னூட்டம் அளித்தவர்களுக்கும் நன்றிகள். (அப்பாடா ஒருவழியா மொக்கய முடிச்சுட்டான்! சங்கத்த கலைங்கடா! ஆ..என்னாது ஒரு பக்கியவும் காணோம்!)
***
(ஆஹா… இன்னும் முடிக்கலையாடா நீ! கருத்து சொல்லப்போறியா?!)
பேய்களை நம்புவதா வேண்டாமா என்பது வேறு விசயம். ஒரு சுவாரஸ்யத்திற்காக நம்பலாம்!
ஆனால் “நம்பிக்கை தான் கடவுள். பயம் தான் பேய்” என்பது மட்டும் முற்றிலும் உண்மை.
***
The butterfly has lost its wings
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது, இன்று இதை நிறைய தடவை கேட்டு விட்டேன். (ஏனென்று தெரியவில்லை, சில சமயங்களில் மனதுக்கு கஷ்டமாக இருந்தால் இந்த பாடலை repeatஇல் போட்டுவிடுகிறேன்.) தூங்கச் செல்லும் முன் இதை உங்களிடம் பகிர்ந்து கொண்டால் என்னவென்று தோன்றியது. so, இந்த பதிவு.
இசையும், பாடலின் வரிகளும், பாடியவரின் வாய்ஸ¤ம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.
பாடலின் வரிகள்:
World Citizen – I Won’t Be Disappointed
What happened here?
The butterfly has lost its wings
The air’s too thick to breathe
And there’s something in the drinking water.
The sun comes up
The sun comes up and you’re alone
Your sense of purpose come undone
The traffic tails back to the maze on 101
And the news from the sky
Is looking better for today
In every single way
But not for you
World citizen
World citizen
It’s not safe
All the yellow birds are sleeping
Cos the air’s not fit for breathing
It’s not safe
Why can’t we be
Without beginning, without end?
Why can’t we be?
World citizen
World citizen
And if I stop
And talk with you awhile
I’m overwhelmed by the scale
Of everything you feel
The lonely inner state emergency
I want to feel
Until my heart can take no more
And there’s nothing in this world I wouldn’t give
I want to break
The indifference of the days
I want a conscience that will keep me wide awake
I won’t be disappointed
I won’t be disappointed
I won’t be.
I saw a face
It was a face I didn’t know
Her sadness told me everything about my own
Can’t let it be
When least expected there she is
Gone the time and space that separates us
And I’m not safe
I think I need a second skin
No, I’m not safe
World citizen
World citizen
I want to travel by night
Across the steppes and over seas
I want to understand the cost
Of everything that’s lost
I want to pronounce all their names correctly
World citizen
World citizen
I won’t be disappointed
I won’t be.
She doesn’t laugh
We’ve gone from comedy to commerce
And she doesn’t feel the ground she walks upon
I turn away
And I’m not sleeping well at night
And while I know this isn’t right
What can you do?
—
பாடலை இங்கே கேளுங்கள்
Babel என்ற திரைப்படத்தின் soundtrackஇல் இருக்கும் பாடல் இது. படத்தில் வருகிறதா என்று தெரியவில்லை,மறந்து விட்டது.
sivaji – a flash review
எனக்கு ரெண்டு சந்தேகங்கள் இருக்கு. ஒன்னு இந்தப் படத்தோட டைரக்டர் உண்மையிலேயே ஷங்கர் தானா? இந்தப் படத்தில நடிச்சிருக்கிறது உண்மையிலே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானா? ரஜினியை இவ்வளவு இளமையாக, யூத் புல்லாக இது வரை பார்த்ததில்லை. அவ்வளவு ஸ்டைலாக இருக்கிறார். அழகாக இருக்கிறார். படத்தில் இருப்பது ரஜினி மட்டுமே. ஷங்கர் எங்கே இருக்கிறார் என்று எவ்வளவு தேடியும் கடைசிவரைக்கும் கிடைக்கவேயில்லை.
க்ளைமாக்ஸ் காட்சியில் பணத்தைப் பறக்கவிட்டு பைட் எடுத்திருக்கிறார்கள். அதைத்தான் உண்மையிலே செய்திருக்கிறார்கள். பணத்தைப் பறக்கவிட்டு படம் எடுத்திருக்கிறார்கள். மொட்டை ரஜினி சிம்ப்ளி சூப்பர்ப். நான் சிவாஜி இல்ல எம்ஜிஆர் என்று சொல்வது அதிரடி. ஏதோ ஒரு கிராமத்தை முன்னேற்றம் செய்யுமாறு காண்பித்திருக்காலம், அது என்ன தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் கிராமம்? தருமபுரி மட்டும் தான் இன்னும் முனேறாமல் இருக்குதா என்ன? இதெல்லாம் குசும்பு. ஆமாம் தருமபுரி யாரோட தொகுதிப்பா? எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொல்லிருக்கன்ல. இப்பவாவது உண்மைன்னு நம்பறீங்களா?
அப்புறம் ஸ்டைல் பாடல் அட்டகாசம். ரஜினியா இது என்று ஆச்சரியப்படவைக்கும் ஸ்டைல். அதிரடிக்காரனில் நெற்றிப்பொட்டில் குண்டை நிப்பாட்டுவது கொஞ்சம் ஓவர். “என்ன கொடுமை சரவணா?” ரிப்பீட் ஆக வாய்ப்பிருக்கிறது. என்ன கொடுமை சரவணா என்று சொல்வதற்கு படத்தில் நிறைய இருக்கிறது. அந்த ட்ரைவ் இன் தியேட்டர் பைட் மட்டுமே போதும். அப்புறம் “பன்னிதான் கூட்டம் கூட்டமா வரும், சிங்கம் எப்பவும் சிங்கிளாதான் வரும்” பைட்டும் அடக்கடவுளே!
ஸ்டார்டிங்ல ரஜினியை முகமூடி மாட்டி கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரும் போது “ஆகா என்னமோ பண்ணிருக்காய்ங்கய்யா”ன்னு நெனச்சேன். ஆனா படம் முடியும் போது, வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வருது “உங்க ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ப்னிசிங் சரியில்லையேப்பா”.
பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பேசும் ஸீன் நன்றாக இருந்தது. ரஜினி கெட்ட அலம்பல் பண்ணிருக்காரு. நிறைய இடத்தில. ஆனா ப்ளாக்மணிய பத்தி வற்ரதெல்லாம் காமெடியோ காமெடி! தாங்கல ராசா. பாடல்கள் பிரமாதம். செட்டிங்கஸ் கலக்கல். “பல்லேலக்கா பல்லேலக்கா” வை மட்டும் கெட்ட வேஸ்ட் செஞ்சிருக்காங்க. ரஜினி ரொம்ப மெனக்கெட்டிருக்கார். க்ரேட் சேஞ்.
சாலமன்பாப்பையா தன் இரண்டு பெண்களைப் பற்றி கமெண்ட் அடிப்பது ப்ரச்சனைக்குள்ளாகலாம். லேப்டாப்பில் வாய்ஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேர ப்ரேக் பண்ணமுடியாமல் திண்டாடுவதும், அப்புறம் மிமிக்ரி ஆர்டிஸ்டக்கூட்டிட்டு வந்து பேசவெக்கிறதெல்லாம், உண்மையிலே காமெடிதானா? அட போங்கப்பா.
ரஜினி தண்டவாளத்தில் தற்கொலை முயற்சி செய்வதும் ரயில் வரவர பின்னால தாவி தாவி போவதும் அமர்க்களம். “என்ன வெச்சு ஒன்னும் காமெடி கீமடி பண்ணலையே” என்று கேட்பது அழகாக இருக்கிறது.
இதுக்குமேல ஒன்னும் சொல்றதுக்கில்ல. சொன்னா அப்புறம் படத்தில இருக்குற கொஞ்சம் நஞ்சம் சுவராஸ்யமும் போய்டும். படம் பாத்திட்டு வாங்க. அப்புறமா நிறைய பேசலாம்.
“அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான் டேய்” உண்மைதான். ரஜினிக்கு பொருந்தும்.
ஷங்கர் சார் ரொம்ப பிஸியோ, அசிஸ்டெண்ட வெச்சு டைரக்ட் செஞ்சிருக்கீங்க? எவ்வளவு பெரிய சான்ஸ்? எப்படி அசால்டா மிஸ் பண்ணிருக்கீங்க? கதை கிடைக்கலையா என்ன? பசங்க மாஞ்சு மாஞ்சு நெட்ல நெறைய கதை சொன்னாய்ங்கல்ல? அத ஒன்ன சுட்டாவது ஒழுங்கா எடுத்திருக்கலாம்ல?
ஹலோ அஸ்விக்குட்டி
(சிறுகதை)
சென்னை. சோழா செராட்டன். ஜூன் 2000. 02.
“நீயெல்லாம் எதுக்குடா பேச்சிலர்ஸ் பார்ட்டிக்கு வர்ற? தம் அடிக்க மாட்ட, தண்ணியடிக்க மாட்ட, பப்ல கொஞ்சம் அப்படி இப்படி ஆட கூட மாட்ட, சும்மா உக்காந்து சிக்கன் சாப்டறதுக்கு வரணுமாடா?” ராஜா சொல்வதை சிவா கண்டுகொள்ளவேயில்லை. காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. அவன் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெப்பர் சிக்கனை எடுத்து மீண்டும் ரசித்து ருசித்து சாப்பிடத் தொடங்கினான். “நீயெல்லாம்..ஹ்ம்ம்” என்று ராஜா சலித்துக்கொண்டு வேறு விசயத்துக்கு தாவினான். “டேய் மச்சான்” “டேய் மச்சான்” “டேய் டோப்பாத்தலையா” “ம்ம் என்னடாமச்சி” “அங்க பாரு” “எங்க் எங்கடா” “அங்கடா.உனக்கு லெப்ட்ல. அந்த பிங்க் டாப்ஸ்ல சும்மா…ஹ்ம்ம்ம்” “ஆ ஆ ஆ..உன்னத்தான்டா பாக்குறாடா. ராஜா நீ மச்சக்காரன்டா” “டேய் சிவா டொப்பாத்தலையன கூட்டிட்டு போக முடியாது நீ வர்றியா. போய் கொஞ்சம் வறுத்துட்டு வரலாம்” “போடாங்..எனக்கு வேற வேலையில்லையா? உன்னமாதிரின்னு நெனச்சயா? எனக்கு என் தேவதை இருக்கா. நீ போ எக்கேடோ கெட்டு தொலை!” ராஜா சிறிது நேரம் முறைத்து விட்டு, பின் தன் தலையில அடித்துக்கொண்டான். “உன்ன திருத்தவே முடியாதுடா. பெரிய ராமசந்திரமூர்த்தி. உன் அஸ்வி பாரு உன்ன விட்டுட்டு போக போறாளா இல்லையான்னு” “நெவர்!” ராஜா எழுந்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டான். ரொம்ப ஸ்டைலாக நடப்பதாக நினைத்துக்கொண்டு ரொம்ப கேவலமாக நடந்தான். பெண்களின் எதிரில் சென்று அமர்ந்தான். “ஹே ய்யா..” அந்த பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே சிரித்தனர்.
சிவா தனக்குள் சிரித்துக்கொண்டான். செல்போனை எடுத்தான். ஸ்க்ரீனில் பளிச்சென்று ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. பின்னர் பச்சை பட்டனை அழுத்தினான். அஸ்வினி என்று திரையில் தோன்றியது.
ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங்.
“ஹலோ தடியா..” பேரிரைச்சல். “ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்விக்குட்டி” “டேய் செல்லம்”. கால் துண்டிக்கப்பட்டது.
மீண்டும் டயல் செய்தான். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”.
“ஸ்டுபிட் அஸ்வி. என்னைக்குத்தான் நீ பேட்டரிய ஒழுங்கா சார்ஜ் பண்ணிவெக்கப்போறியோ!”
ராப் மியூசிக் காதைப்பிளந்தது. ராஜா ஒரு பெண்ணோடு ஆடிக்கொண்டிருந்தான். அவளது இடுப்பில் ஒரு கை. மற்றொரு கை..சிவா “டிஸ்கஸ்டிங்” என்று முனுமுனுத்தான்.
***
காரியாபட்டி. டிசம்பர். 2000.
இரவு மணி 9:30. எங்கும் இருள் சூழந்திருந்தது. எங்கும் பேரமைதி. காற்று கொஞ்சம் கூட இல்லை. அந்த வீட்டின் முன்னால் இருந்த தென்னை மரம் ஆடாது அசையாது சிவனின் பாட்டை கேட்டது போல இருந்தது. வீட்டினுள் மிக மங்கலான விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. உள்ளே யாரோ இருமும் சத்தம் கேட்டது. “சிவா. டேய் சிவா” வயதான ஒரு பெண்ணின் குரல் மிக சன்னமாக கேட்டது. படிக்கட்டில் நிழல் ஆட அந்த பெண்மனி உள்ளிருந்து வெளியே வந்தார்.
படிக்கட்டில் நின்றவாறு இங்கும் அங்கும் பார்த்தார். பின்னர் வீட்டின் வலது பக்கத்தில் இருந்த படிக்கட்டை நோக்கி சென்றார். படி ஏறப் போனவார் அதிர்ச்சியில் உரைந்தார். அங்கே ஒரு கரிய உருவம் அசையாமல் உட்கார்ந்திருந்தது. சுற்றிலும் புகைமூட்டம். தடுமாறிய அந்த பெண்மணி, எட்டி, விளக்கைப் போட்டார். மிகவும் மங்காலான வெளிச்சம் உட்கார்ந்திருந்த அந்த உருவத்தின் மீது படர்ந்தது. அந்த உருவம் அசைந்து கொடுக்கவில்லை. கண்கள் எங்கோ சொருகியிருந்தன.
“டேய். சிவா. ஏண்டா இப்படி பண்ற? எத்தன தடவடா சொல்லிருக்கேன். ஐயோ. இப்படி கொஞ்சம் கொஞ்சமா உன்ன நீயே அழிச்சிக்கறீயடா? உங்க அப்பனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். சிவா. டேய் சிவா.” “என்னத்த?” “உள்ளவாடா. மாமா வற்ரதுக்குள்ள சாப்பிட்டுட்டு போயிடுடா. அந்த மனுசன் வந்தா கத்துவாரு. வாடா எந்திரிடா” சிவா தடுமாறி எழுந்திருக்கிறான். சிறிய கல் இடறி தொப்பென்று கீழே விழுகிறான்.
“ஐயோ. சிவா. என் கண்ணா. ஏன்டா இப்படி ஆயிட்ட.” அந்த பெண்மணிக்கு கண்களில் நீர் வழிந்துகொண்டேயிருக்கிறது.
***
காரியாபட்டி. டிசம்பர். 12. 2011.
“ஆரத்தி எடுங்கம்மா” “ம்ம்” குலவைசத்தம் கேட்டது ஆங்காங்கே. புதுமணத்தம்பதியினர் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். வாசலில் செக்கச்செவப்பாய் ஆரத்தி. மணமகள் கால்கள் அழகாக செந்நிரத்தில் தடம் பதித்திருந்தது. இருவரும் ஹாலில் சென்று அமர்ந்தனர். மணமகன் மணமகளைப் பார்த்தி ரகசியமாக சிரித்தான். “அஸ்வினி. நீ ரொம்ப அழகா இருக்க தெரியுமா?” மிகவும் சிவந்திருந்த அவளது கண்ணங்கள் மேலும் சிவப்பாயின. அவள் பதிலேதும் கூறாமல் தலையை தாழ்த்திக்கொண்டாள். “டேய். சுரேஷ். ரொம்பத்தான் வழியாத. இந்தா கர்சீப் தொடச்சுக்கோ” என்று சுரேஷின் மாமா கர்சீப்பை எடுத்து நீட்ட, இப்பொழுது சிவந்ததென்னவோ சுரெஷின் கண்ணங்கள். மிகச்சத்தமாக ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.
***
காரியாபட்டி டிசம்பர். 15. 2011.
ம்ம்க்கும் ம்ம்க்கும். சுரேஷ் தொண்டை கமறல் எடுக்கவே, தூக்கத்திலிருந்து விழித்து கண்களைத் திறந்தான். இருட்டு லேசாக படர்ந்திருந்தது. கதவு திறந்திருந்தது. பக்கத்தில் அஸ்வினி இல்லை. தூரத்தில் ஏதோ ஒரு பூச்சியின் ஓசை ரீங்காரமாக கேட்டுக்கொண்டிருந்தது. அஸ்வினி. அஸ்வினி. பதில் இல்லை. பக்கத்திலிருந்த மேசையின் மேலிருந்த கெடிகாரத்தை எடுத்து மணி பார்த்தான். மணி 12:10. ஜன்னல் வழி நிலாவின் மிக மெல்லிய வெளிச்சம் அடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ ஒரு நாய் மிகச் சன்னமாக உளையிட்டது.
சுரேஷ் எழுந்தான். கைலி அவிழ்ந்துவிடவே இறுக்கமாக கட்டிக்கொண்டான். மெதுவாக லைட்டைப் போடாமல் ருமை விட்டு வெளியேறி ஹாலுக்கு வந்தான். ஹால் அமைதியாக இருந்தது. அம்மாவின் ரூமைப் பார்த்தான் பூட்டியிருந்தது. திரும்பி வெளிக்கதவைப் பார்த்தான். கதவு திறந்திருந்தது. மிக மங்கலான வெளிச்சம் பரவிக்கொண்டிருந்து. ஏனோ ஹாலின் அந்த கெடிகாரத்தின் டக் டக் என்ற சத்தம் அவனை அச்சுறுத்துவதாகவே இருந்தது. அஸ்வினி. வேகமாக நடந்து வெளியே சென்றான். ஹாலைக் கடப்பதற்குள் மிகவும் வேர்த்து விட்டது. யாரோ பின் தொடர்வதைப் போல இருக்கவே, சட்டென் திரும்பிப் பார்த்தான். ஒருவரும் இல்லை. வெளி வராண்டவில் ஜன்னல்களுக்கு போடப்பட்டிருந்த திரைச்சீலைகள் மிக மெதுவாக காற்றில் அலைந்து கொண்டிருந்தது.
வெளிக்கதவை அடைந்து படியில் நின்றான். அஸ்வினி என்றான். ஒரு நாயின் மெல்லிய முனகல் கேட்டது. வலதுபக்கம் திரும்பிப் பார்த்த சுரெஷ் திடுகிட்டான். அங்கே மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுக்கு முன்னால் நாலைந்து நாய்கள் மிகவும் மவுனமாக அமர்ந்து படியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. நாய்களின் வாய்யில் எச்சில் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது நீண்ட நாக்கு வெளியேறி பின் மீண்டும் உள் சென்றது.
சுரேஷ் சூ சூ என்றான். ஒரு நாயும் அசைந்து கொடுக்கவில்லை. பின் மிக மெதுவாக படி இருக்கும் இடத்தை நோக்கி சென்றான். நாய்கள் மிக மெதுவாக ஊளையிடத் தொடங்கின. சுரேஷ் நெருங்க நெருங்க அவை மிகப் பயங்கரமாக ஊளையிட்டன. படிக்கு அருகில் வந்த சுரேஷ் திடுக்கிட்டான். அங்கே மேல் படியில் அஸ்வினி உட்கார்ந்திருந்தாள். மிக அமைதியாக. சுரேஷ் சத்தமாக அஸ்வினி என்றான். நாய்கள் இப்பொழுது தான் முழித்துக்கொண்டதைப் போல மிக பயங்கரமாக உறுமின. அஸ்வினி அங்க என்ன பண்ற இறங்கிவா. பதிலில்லை. அஸ்வினி இறங்குமா. பதிலில்லை. அஸ்வினி.
சுரேஷ் படிகளில் வேகவேகமாக ஏறினான். அஸ்வினி வாம்மா. நாய்க்கு பயந்து இங்கயே உட்கார்ந்திட்டியா? வா. பதிலில்லை. சுரேஷ் அவள் கையை பிடித்தான். கை மிகவும் சில்லென்றிருந்தது. டக்கென்று அஸ்வினி திரும்பினாள். அவளது பெரிய கண்கள் வழக்கத்தை விட மிகவும் பெரியதாக இருந்தன. கண்களின் சீற்றத்தைக் கண்டு சுரேஷ் தடுமாறினான். பிறகு சுதாரித்துக்கொண்டு “இந்நேரம் இங்க எங்கம்மா வந்து உட்கார்ந்திருக்க. வா அஸ்வினி. வீட்டுக்குள்ள போகலாம்” “டேய். யாருடா அஸ்வினி? நான் அஸ்வினி இல்லடா. சிவா. இது என்னோட இடம். இங்கதான் நான் இருப்பேன்.” என்று மிக பயங்கரமாக பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு சொன்னாள் அஸ்வினி.
***
தஞ்சாவூர். டிசம்பர் 1999.
அது ஒரு திருவிழா. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும். சாமி இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. இந்த வீட்டின் சொந்த பந்தங்கள் எல்லாம் இந்த திருவிழாவை தவறவிட்டதே இல்லை. என்றைக்குமே. சாமி கும்பிடுவது முக்கியம் என்றாலும் விட்டுப்போன சொந்தத்தை தொடர்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். சிவாவும், அவனுடைய அப்பாவும் அம்மாவும், அவனது தங்கையும் சென்னையிலிருந்து வந்திருக்கின்றனர்.
மேளச்சத்தம் ஒலித்துக்கொண்டேயிருந்தது. சங்கும் சேகண்டி ஓசையும் அந்த சூழ்நிலையில் பக்தியை அதிகப்படுத்தவே செய்தன. சிவா கண்களை மூடி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான். சூடதீபாரதனை காட்டப்பட்டதும் கையை மேலே தூக்கினான்.
பக்கத்தில் யாரோ அழும் சத்தம் கேட்டு திரும்பிப்பர்த்தான். அழகான மருதாணி அணிந்த நீண்ட விரல்கள் மூக்கையும் இதழ்களையும் மறைத்துக்கொண்டிருந்தன. மிக அழகாக செதுக்கப்பட்ட புருவம். இரு புருவங்களுக்கு மத்தியில் மோட்சம் அடைந்து விட்ட கருப்பு பொட்டு. நெற்றியின் ஓரத்தில் கூட முடி. அழகான கழுத்து. கையில் சிறிது சிறிதான பூனை முடி. அவள் அழுவதை நிறுத்தவேயில்லை. சிவா அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கைகளை பிரித்தாள். ஆ. கைக்குள்ள வெச்சு செர்ரி பழம் சாப்பிட்டுட்டு இருந்திருக்காளோ? இல்லை இல்லை செர்ரி பழம் எப்படி கீழே விழாமல் இருக்கும். ஓ. இதழ்களா? ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம். அளவான கூர்மையான மூக்கு. மூக்கு வலப்புரத்தில் சிறிய மூக்குத்தி. கண்ணீரின் ஒற்றைத் துளி அவளது மூக்கின் மேல் ஏறுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. கண்களை திறந்தாள். இரண்டு முறை கண்களை திறந்து மூடினாள். இந்த உலகத்தை இருள் சூழ்ந்து வெளிச்சம் மீண்டும் வந்தது. பிறகு சிவாவைப் பார்த்தாள். வேகமாக கண்களைத் துடைத்துக்கொண்டாள். சொர்கத்திலிருந்து விடை வருத்தத்தில் இருந்த கண்ணீர் துளி, அவள் புறங்கை பட்டு மோட்சம் அடைந்தது. இவனைப் பார்த்தது போல காட்டிக்கொள்ளாமல் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று விட்டாள்.
—
“ஏய் யாரவது போய் கத்தரிப்பான் எடுத்துட்டு வாங்கப்பா” சிவாதான் நின்றுகொண்டிருக்கிறான். அவன் தான் போக வேண்டும். அவன் பேசாமல் நின்றான். “சொல்றாங்கல்ல யாராவது போய் எடுத்திட்டு வாங்க. சிவா போடா அந்த ரூமில இருக்கு போய் எடுத்திட்டு வா” என்றார் சிவாவின் சித்தி. சிவா வேகவேகமாக அருகிலிருந்த ருமிற்குள் சென்றான். எங்கே கத்தரிப்பான் இருக்கிறது என்று தெரியவில்லை. இங்கும் அங்கும் மனதில் படாமல் தேடிக்கொண்டிருந்தான். சரி இல்லையென்று சொல்லிவிடுவோம் என்று நினைத்துகொண்டிருந்த பொழுது, ஒரு தென்றல் உள்ளே நுழைந்தது. கூடவே நூறு சாம்பிரானி, பத்தியின் நறுமனம். பின்னாலேயே அவள் வந்தாள்.
நேரே சிவாவிடம் வந்தாள். சிவாவுக்கு மிக அருகில் இருந்த ஷெல்பில் அழகாக பெரிதாக உட்கார்ந்திருந்தது கத்தரிப்பான். “அதோ அங்கே இருக்கு பாருங்க அதுக்கு பேர் தான் கத்தரிப்பான். அதத்தான் கேக்கறாங்க. கொஞ்சம் எடுத்துக்கொடுங்க” சிவா சற்றும் அசையவில்லை. அவளது கண்கள் மிக மெல்லிதாக திறந்து மூடின. இதழ்கள் சிறிய ரோஜாவைப் போல சுழித்துக்கொண்டன. ரோஜாக்கள் கூட சுழிக்குமா? ஹ்ஹ்ஹ்ம்ம்ம். “எடுக்கறீங்களா இல்லையா?” என்று அவள் தனது சிறிய உள்ளங்கையை விரித்தாள். சிவா பதில் பேசாமல் எடுத்தான். மருதாணி அணிந்த அவளது கைவிரல்கள் மிகவும் அழகாக இருந்தன. உள்ளங்கையில் அழகான மருதாணி கோலங்கள். பூக்களுக்கு கூட கோலங்கள் தேவைப்படுகின்றனவா? பூவின் மீது கத்தரிப்பானை வைக்க மணமில்லாது, அவனே எடுத்து வெளியே சென்றான். பின்னால் அவள் அவனை திட்டுவது மெதுவாக காதில் கேட்டது. என்ன ராகத்தில் பாடுகிறாள் என்று நினைத்துக்கொண்டே வெளியே சென்றான் சிவா.
—
“டேய் சிவா. நாளைக்கு வீட்டவிட்டு எங்கயும் வெளியில போயிடாத.” “ஏன் சித்தி” சிவா அம்மாவின் மடியில் பருத்துக்கொண்டிருந்தான். அம்மா அவனது தலையை கோதிவிட்டுக்கொண்டிருந்தார். சமையல் அறைக்கு வெளியே உட்கார்ந்திருந்தார்கள். “என்னடா தெரியாத மாதிரி கேக்கற? உன்னத்தான் தெக்குவீட்டு பொண்ணுங்க எல்லாம் கட்டம் கட்டி வெச்சுறுக்காளுக” சிவா எனக்கு ஒன்னும் தெரியாதுங்கற மாதிரி அம்மாவைப் பார்த்தான். “நாளைக்கு மஞ்சத்தண்ணி ஊத்தறதுடா. உனக்குத்தான் இங்க நெறைய மொறப்பொண்ணுங்க இருக்குதுங்களே. உன்மேலத்தான் வெரட்டி வெரட்டி ஊத்தப்போறாளுக. ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்றார் இன்னொரு சித்தி “அப்படியா” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் சிவா. “ஆஹா. ஒன்னுமே தெரியாதமாதிரி மூஞ்ச வெச்சுக்கிறான் பாரு. அக்கா உம்மகன மட்டும் நம்பிடாத. அன்னைக்கு அஸ்வினியை கண் கொட்டாம சைட் அடிச்சத நான் மட்டும் தான பார்த்தேன். அவளும் அப்பப்போ பாத்துக்கிறா? டேய் சிவா. என்னடா நடக்குது” என்றார் சித்தி. “யாரு சித்தி அஸ்வினி?” “நடிகர் திலகம் தோத்தார்க்கா. எப்படி நடிக்கறான் பாருக்கா? நீயும் தான பாத்த? இனி மேல் உன் பேரு செவாலியர்டா. இன்னைக்கு ரோஸ் சுடில, வைட் துப்பட்டால ஒரு தேவதை உனக்கு சாம்பார் ஊத்துச்சுல்ல, நீ கூட போதும் போதும்ன்னு உன் முகத்துல லிட்டர் கணக்கா ஜொள்ளு வழிய விட்டயே..அவ பேரு தான் அஸ்வினி” “சரி சரி சித்தி. போதும் மானத்த வாங்காத” “ஏண்டா உனக்கு அஸ்வினிய புடிச்சிருக்குதான?” “அடியே நீ பேசாம இருக்கமாட்டியா?” “நீ சும்மாஇருக்கா. முறைப்பையன் தான். இதுல என்ன இருக்கு” “ஏண்டா உனக்கு புடிச்சிருக்கு தான?” “ம்ம்” “எவ்ளோ” “ரொம்ப.” “எவ்ளோ ரொம்ப” “ரொம்ப ரொம்ப ரொம்ப” “அண்ணன் முகத்தில வெக்கத்த பாரு. இரு நான் அஸ்வினி கிட்ட சொல்றேன்” என்று எழுந்து ஓடினாள் சத்யா, சித்தியின் மகள்.
—
இரவு நிலா மிகவும் அழகாக இருந்தது. மொட்டைமாடியில் சிவா, சிவாவின் அம்மா, சித்தி, இன்னொரு சித்தி, சித்தியின் மகன்கள், மகள்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே உட்கார்ந்திருந்தார்கள். ஏதேதோ கதை ஓடிக்கொண்டிருந்தது. “அண்ணா. எனக்கு இந்த கம்ப்யூட்ட சயின்ஸ் புரியவே மாட்டேங்குதுண்ணா. அது என்ன ஒன்னையும் ஜீரோவையும் மட்டுமே வெச்சுக்கிட்டு கூட்டிக்கிட்டு திரியுராய்ங்க? இதத்தான் நீங்களும் செய்யறீங்களா? இதுக்கு பேரு சாப்ட்வேர் இஞ்சினியராக்கும்?” “ஆடி போட்டன்னா. நாங்க எல்லாம் ப்ரோகிராம் செய்யறோம்டி. சித்தி உன் மகளுக்கு ரொம்பத்தான் வாய்” “ம்ம்..சரி. ஒழுங்கா லெவன்த் பாஸ் பண்ணிருவியாடி?” “என்னண்ணா இப்படி கேட்டுட்ட, உன்னோட ஸ்டுபிட் கம்யூட்டர் சயின்ஸ் தவர எல்லாம் நமக்கு கைவந்தது. அண்ணா அண்ணா அங்க பாரு” அங்கே கொஞ்ச தூரத்தில் மூலையில் இருந்த புகைக்கூண்டின் அருகே கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவள் நின்றிருந்தாள்.
நிலவின் ரம்மியமான வெளிச்சத்தில் அவளது ஒரு பகுதி முகம் மட்டும் அழகாக தெரிந்தது. நிலவை விட மிகவும் பிரகாசமாக இருந்தது. (?!) ஒரு முறை அவள் திரும்பிப் பார்த்தாள். நெஞ்சின் ஊடாக கூர்மையான ஈட்டி ஒன்று பாய்ச்சப்பட்டது போல இருந்தது. வேல் விழியாள். முன் தலையின் கேசம் மெதுவாக காற்றில் ஆடியது. இருமுறை உள்ளங்கைகளை அழகாக கண்ணத்தில் வைத்துக்கொண்டாள்.
“அண்ணா ஜொள்ளு விட்ட்து போதும். ஏண்ணா இப்படி அலையுற? நான் கூப்படறேன் பாரு.”ஏய் அஸ்வினி இங்கவாடி.” “சத்யா. வாடி போடின்னெல்லாம் கூப்பிடக்கூடாது. என்ன இருந்தாலும் உனக்கு அண்ணியில்லையா?” என்றார் சித்தி தன் பங்குக்கு. சத்யா என்னை திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு, மீண்டும் அஸ்வி இங்க வாடி. அம்மா கூப்பிடறாங்க பார். அவளும் அவளுடைய அம்மாவும் வந்தார்கள். சிவா அவள் மேல் வைத்திருந்த கண்களை எடுக்கவேயில்லை. அவள் அம்மா, சிவாவின் அம்மாவிடம் அண்ணி எப்படியிருக்கீங்க என்றார் சிரித்துக்கொண்டே. கூட்டத்துடன் ஐக்கியமானார். பிறகு தம்பிதான் மெட்ராஸ்ல வொர்க் பண்ணுதோ என்றார் சிவாவைப் பார்த்தபடி. அஸ்வினி கூட சென்னைல தான் வொர்க் பண்றா. சிவா அஸ்வினியின் பாதி தாழ்ந்திருந்த இரு முட்டைக்கண்களை விடாமல் பார்த்துக்கொண்டேயிருந்தான். “நீங்க மெட்ராஸ்ல முன்ன இருந்த அதே மாம்பழம் தண்டவாளத்துக்கு பக்கத்துல இருக்குற குவார்ட்டர்ஸ்ல தான இருக்கீங்க?” என்றார் சிவாவின் அம்மா. “ஆமா அண்ணி. ஆனா வீடு மாத்தனும். அவருக்கு சர்வீஸ் முடியப்போது” என்றார் சிரித்துக்கொண்டே. சிறிது நேரத்தில் பாதிதாழ்ந்திருந்த கண்கள் முழுதும் திறந்தன. சிவாவைப் பார்த்தன. சிறிய அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டன. பிறகு மீண்டும் தாழ்ந்து கொண்டன. அடுத்த வினாடி மீண்டும் முழுதும் திறந்தன. இந்த முறை சில வினாடிகள் நிலைத்து நின்று சிவாவைப் பார்த்தன. உதடுகள் மட்டுமா சிரிக்கும்? கண்களும் கூட பல சமயங்களில் சிரிக்கும்.
—
“அஸ்வி, டு யூ லவ் மீ?” “ஸ்டுபிட். என்ன கொஸ்டின் இது? ஐ லவ் யூ சோ மச்” “எவ்ளோ?” “ரொம்ப” “எவ்ளோ ரொம்ப?” “ரொம்ப ரொம்ப” “எவ்ளோ ரொம்ப ரொம்ப” “மடையா. தடியா. என் க்யூட் சீஸ் கேக். என் செல்ல டெடி பியர். என் புஜ்ஜு கண்ணா. இந்த பீச்ல எவ்ளோ மணல் இருக்கு? அவ்ளோ உன்ன நான் லவ் பண்றேன்” சிவா அவளது இரு உள்ளங்கைகளை எடுத்து தன் கண்ணத்தில் வைத்துக்கொண்டான். “என்னடா கண்ணா? சோ செண்டி டுடே? எதுவும் ஸ்டுபிட் தமிழ் மூவி பாத்தியா?” “இல்லடி. லவ் யூ” “லவ் யூ டூ”
***
சென்னை. ராயல் பப். ஜூலை 2000.
சிவா மிதந்து கொண்டிருந்தான். இசை அவனை செலுத்திக்கொண்டிருந்தது. அவனது கால்கள் நிற்பதேயில்லை. கைகள் எதிரே தன்னுடன் ஆடிக்கொண்டிருந்தவளின் இடையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டிருந்தான். “உன்னக்கூட்டிக்கிட்டு கடைக்கு போறேன் உனக்கு வேண்டியத வாங்கித்தாரேன்” அவள் மிகக்குறைந்த அளவே உடைகள் உடுத்தியிருந்தாள். “என் வீட்டுக்குத்தான் கூட வாடி எங்கு போனாலும் கூட வா நி” மங்கிய வெளிச்சம் மிகவும் போதையேற்றியது. “நேத்து உன்ன பாக்கலையே
அட இன்னைக்கின்னம் தூங்கலையே” அவளின் பாடிஸ்ப்ரே கிறங்கடித்தது. “அஸ்வினி” “அஸ்வினி ஐ லவ் யூ” “ஹே பேப். நான் அஸ்வினி இல்ல. ஹேமா. கமான் டேக் இட் ஈசி” அவள் அவனின் கழுத்தை சுற்றி இறுக்கிக்கொண்டாள். “காலையில் என்னாகும் அட கல்யாணம் யாருக்காகும்? காலையில் என்னாகும் அட கல்யாணம் யாருக்காகும்?” சிவாவுக்கு பூமி அதிர்ந்தது. தள்ளாடியது. கண்கள் மிகவும் மங்கலாக தெரிந்தது. அவளது கழுத்தில் மெதுவாக உதடு பதித்தான். “போதையில் புத்திமாறுமா வட்ட நிலாவும் சதுரமாகுமா?” நெஞ்சு வலித்தது. கண்கள் கசிந்தன. அவள் அவனை நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். இசையின் சத்தம் அதிகரித்தது. சிவா விலகினான். அஸ்வினி பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். “என் வீட்டுக்குத்தான் கூட வாடி எங்கு போனாலும் கூட வா நி” ப்ப்ப்ப்பாபாபாய்ய்ய் ஒன் ம்ம்ம்ம்ம்மோர். அஅஅஸ்ஸ்ஸ்ஸ்வ்வ்வ்வி. கம் ஹியர். ஐ யாம் ய்ய்ய்ய்யுவ்வர் ஸ்ஸ்வ்வவீட் ஹ்ஹ்ஹ்ஹ்ஹார்ட். “போதையில் புத்திமாறுமா வட்ட நிலாவும் சதுரமாகுமா?” ஹே..ஹ¥..ஆர் யூ மேன்? ஹக் ஹக் ..ஹக்..டான்ஸிங் வித் மை ஸ்ஸ்வ்வீட்டி. ஓங்கி ஒரு அறை கன்னத்தில் விழுந்தது. சிவா நிலைதடுமாறி கீழே விழுந்தான். ஹேமா தாங்கிப் பிடித்தாள். ஹே சிவா. அஸ்வினி இங்க இல்ல. சி இஸ் சம் அதர் ஸ்டுபிட் கேர்ல். “அஸ்வினி” “ஸ்டாப் இட் சிவா” அதற்குள்ளாக பம்பர்ஸ் சிவாவை அலேக்காக தூக்கி வெளியே எறிந்தனர். சிவா தடுமாறி எழுந்து நின்றான். இன்னக்கு கொஞ்சம் ஸ்பீடா எர்த் ரொட்டேட் ஆகுதுன்னு நினச்சுக்கிட்டான். ஒரு பெண் அருகே வந்தாள். ஹேமாவை விட குறைவான டிரஸ் அனிந்திருந்தாள். ஹாய் ஸ்வீட்டி என்று அவனுடைய சட்டையைபிடித்து இழுத்தாள். சிவா அவளது முகத்துக்கு அருகே இழுக்கப்பட்டான். “அஸ்வினி.” “அஸ்வினி.ஹ¥ இஸ் தாட்? வான கோ ஹோம் பையா?” “ய்யா. ய்யா” அந்தப்பெண் அவனை இழுத்து அனைத்துக்கொண்டாள். ஒரு டாக்ஸியை அழைத்தாள். அஸ்வினி கிட்ட இருந்தும் இப்படித்தான் ஸ்மெல் வரும். “போதையில் புத்திமாறுமா வட்ட நிலாவும் சதுரமாகுமா?” க்ரேட். அவளது கழுத்தில் தஞ்சம் புகுந்தான். ஐ லவ் யூ. “கெட்டப்பின் ஞானம் ஏனம்மா அட கட்டிலில் நியாய தர்மமா?“
ஆகஸ்ட் 2000.
“சிவா. உன்ன மானேஜர் கூப்பிடறார்.” “ஐ நோ மேன். வாட் இட் இஸ் அபவுட்” சிவாவின் கண்கள் சிவந்திருந்தன. சட்டை கலைந்திருந்தது. “ஐ யாம் பீயிங் ·பயர்ட்? இஸின்ட் இட்?” அவன் மௌனமாக இருந்தான். “ஐ நோ” சிவா வருத்தப்படாத. என்னோட கன்ஸல்டண்ட் கிட்ட உன்னோட ரெஸ்யூம் ·பார்வேர்ட் பண்றேன். யூ வில் கெட் எ ஜாப் சூன். ஹவ் ஹோப் மேன்” ஹக் ஹக் ஹக் ஹக். சிவா தன் டிராயரில் தேடி செல்போனையும், இன்னும் சில பேப்பர்களையும் எடுத்துக்கொண்டான். செல்போனை ஆன் செய்தான், ஸ்கிரீனில் அஸ்வினி அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள். ஹக் ஹக் ஹக் ஹக் ஹக் ஹக்.
அக்டோபர் 2000
“ஆண்ட்டி. சாரி என்ன மன்னிசிடுங்க. அதோ அந்த கட்டுமரம் இருக்கு பாருங்க அதுக்கு பக்கத்துல தான் எப்பவுமே படுத்துக்கிடப்பான். எந்த ஒரு நாளும் அவன் என்ன செஞ்சாலும் செய்யாடினாலும் எங்க போனாலும் போகாட்டினாலும் இந்த பீச்சுக்கு இந்த இடத்துக்கு வராம இருக்க மாட்டான். இது தான் அவங்க ரெண்டு பேரும் கடைசியா சந்திச்ச இடம். சாரி என்னால எதுவும் செய்யமுடியல ஆண்ட்டி. அவன் என்ன மீறி போயிட்டான் ஆண்ட்டி” என்று ராஜா அழ ஆரம்பித்தான். “பெத்தவங்க எங்க பேச்சையே கேக்கறதில்ல. நீ சொன்ன எப்படிப்பா கேப்பான். நாங்க வெயிட் பண்றோம். அவன் இங்க வருவான்ல?”
நவம்பர் 2000
“ஏங்க இவன் இப்படியே இருந்தான்னா சென்னையில் கெட்டு சீரழிஞ்சு போயிடுவாங்க. காரியாபட்டில இருக்குற உங்க தங்கச்சி வீட்டுக்கு அனுப்பிடுங்க. அங்க கொஞ்சம் நால் இருந்தான்னா சரியாயிடுவான். அதுக்குள்ளயும் ஒரு நல்ல சம்பந்தமா நாமும் பார்த்தடலாம்”
***
காரியாபட்டி டிசம்பர் 2000.
சிவாவின் மாமா முழித்துப்பார்த்தார். மிகவும் நிசப்தமாக இருந்தது. குளிர்ந்த காற்று மெல்லிசாக வீசியது. ஏனோ அவருக்கு மிகவும் வேர்த்தது. அருகில் இருந்த கெடிகார்த்தில் மணி பார்த்தார். மணி 12:10. அருகில் அவருடைய மனைவி தூங்கிக்கொண்டிருந்தார். நிமிர்ந்து சிவாவின் ரூமைப் பார்த்தார். திறந்திருந்ததைப் போல இருந்தது. மெதுவாக தட்டினார். திறந்திருந்தது. திறந்தார். சிவா. பதில் இல்லை. லைட் போட்டார். யாரும் இல்லை. திரும்பிப் பார்த்தார். வெளிக்கதவு திறந்திருந்தது. ஏனோ பயம் அவரைக் கவ்விக்கொண்டது. மெதுவாக வெளியே வந்தார். சிவா. படிகளில் இறங்கி நின்றார். வலது பக்கம் திரும்பிப் பார்த்தவர். அதிர்ந்தார். அங்கே படிக்கட்டுக்குப் பக்கத்தில் நாலைந்து நாய்கள் முன்னங்கால்களை தாங்கி உட்கார்ந்திருந்தன. அவைகளில் வாயில் எச்சில் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவை யாவும் நிசப்தமாக உட்கார்ந்திருந்தன. சிவாவின் மாமா அதிர்ந்தார். மெதுவாக நடந்தார். சூ. சூ. அவை அசைந்து கொடுக்கவில்லை. சூ சூ. மெதுவாக நடந்தார். ஒரு நாய் மெதுவாக ஊளையிடத்தொடங்கியது. மற்ற நாய்களும் சேர்ந்துகொண்டன. சிவாவின் மாமா மெதுவாக நடந்து படிக்கட்டைப் பார்த்தார். படிகளின் மேலே சிவா அசையாமல் உட்கார்ந்திருந்தான். சிவாவின் மாமா படிகள் ஏறிச்சென்றார். நாய்கள் பயங்கரமாக குறைக்க ஆரம்பித்தன. சிவா. சிவா. டேய் சிவா. சிவாவின் மாமா தொட அவன் சாய்ந்து விழுந்தான். வாயில் நுரை. சிவாவாவாவா. நாய்கள் குரைப்பதை நிறுத்திவிட்டு அமைதியாக வெறித்தன. “ஐயோ சிவா”
***
காரியாபட்டி. டிசம்பர் 14. 2011.
“சொல்லுப்பா உனக்கு என்ன வேணும். ஏன் இந்த சின்ன புள்ள மேல ஏறிகிட்டிருக்க? போயிடுப்பா. அவ வாழவேண்டிய குறுத்து. விட்டுட்டு போயிடுப்பா” பூசாரி அஸ்வினியைப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருந்தார். அஸ்வினி நிலை குத்திய பார்வையோடு உட்கார்ந்திருந்தாள். “போகமாட்டேன். நான் போகமாட்டேன்” அஸ்வினி ஆண் குரலில் பேசிக்கொண்டிருந்தாள். “உனக்கு வேண்டியத கேள் தந்திடரோம். போயிடு. சொல்லு என்ன வேண்டும்” “சொல்லப்போறியா இல்லையா” அஸ்வினி அழ ஆரம்பித்தாள். “எனக்கு என் அம்மாவ பாக்கனும். எனக்கு என் அம்மாவ பாக்கனும். எனக்கு என் அம்மாகூட பேசனும். மன்னிப்பு கேக்கனும். அம்மா வேணும். அம்மா வேணும்” சிவா அழுதுகொண்டிருந்தான். அழுதுகொண்டேயிருந்தான்.
—
காரியாபட்டி. டிசம்பர் 16. 2011.
சிவாவின் அம்மா நிலைகுத்தி நின்றார். அஸ்வினி. நீ என்னோட மருமக அஸ்வினி மாதிரியே இருக்கம்மா. அச்சு அசல் அதே மாதிரி இருக்க. அதே பேர். எப்படி சாத்தியம்? அதுவும் இதே வீட்டுக்கு நீ வந்திருக்க பாரு. ம்ம்ம்ம்..இந்த வீடு என்னோட நாத்தனாரும் அவருடைய வீட்டுக்காரரும் காலம் காலமா இருந்த வீடு. சிவா போயிட்ட பிறகு அவங்களுக்கு இங்க இருக்கவே பிடிக்கல. வீட்ட வித்துட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம் நிறைய பேர் இருந்திருக்காங்க. இப்ப நீங்க வந்திருக்கீங்க. இது வரைக்கு யாரையும் தொந்தரவு செய்யாம இருந்தவன், உன்ன பாத்த பிறகு உன்ன எனக்கு காமிக்கனும்னு நினைச்சிருக்கான். அது தான் என்ன கூப்பிட்டுருக்கான். தைரியமா இரும்மா. இனி அவன் வரமாட்டான். சிவா வரமாட்டான். என் வீட்டுக்கு ஒரு தடவ வந்துட்டு போம்மா. நீ என் மருமக.
***
சென்னை. ஜூன் 02. 2000.
எலக்ட்ரிக் ட்ரெயினை விட்டு கீழே இறங்கினாள் அஸ்வினி. ரிங் ரிங் ரிங் ரிங். நடந்து கொண்டே தனது பையில் துலாவி செல்போனை எடுத்தாள். “ம்ம் சரிடி. ச்சீ போடி. அதெல்லாம் கிடையாது. நாங்க உங்கள மாதிரியெல்லாம் கிடையாது. சரி. ஓகெ..பை பை.” செல் போனை உள்ளே போட்டுவிட்டு, தண்டவாளத்தில் இறங்கி நடந்தாள். இரு தண்டவாளங்களைக் கடந்தால் அந்தப்பக்கம் போய் விடலாம். ரிங். ரிங். ரிங். சிவா தடியன் கால் பண்றான். இவ்ளோ நேரம் எங்க போனானாம்? நின்று கைப்பையில் தேடி செல்போனை எடுத்தாள். ஏ ஏ ஏ பொண்ணு சத்தம் கேட்டது. யாரோ கூப்பிட்டார்கள். கால் ஆன்சர் பண்ணினாள். “தடியா..” சொல்லிக்கொண்டே திரும்பினாள். எதிரே மிக ருகில் எலக்ட்ரிக் ட்ரெயின். மிகுந்த இரைச்சலுடன்.
செல்போன் தூக்கியெறியப்பட்டு ஒரு முள்ளுச்செடிக்கு அருகே சென்று விழுந்தது.உலகம் சுழன்றுகொண்டுதான் இருந்தது.
—
“ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்விக்குட்டி” “டேய் செல்லம்”. கால் துண்டிக்கப்பட்டது.
மீண்டும் டயல் செய்தான். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”.
“ஸ்டுபிட் அஸ்வி. என்னைக்குத்தான் நீ பேட்டரிய ஒழுங்கா சார்ஜ் பண்ணிவெக்கப்போறியோ!”
***
துர்கனவுகளில் சிக்கியிருக்கும் நம் ஜுவாலைகள்
மனிதன் – அல்லது வேறு எந்த உயிரினமானாலும் – வாழ்வைத் தொடங்கும் நேரத்திலே முடித்துக்கொள்ள நினைப்பதில்லை. தன் முகத்தில் தானே காறி உமிழ்வதில்லை. ஏன் இந்த வாழ்க்கை என்று நினைப்பதில்லை. வாழ்வு ஒரு சாபம் என்றும் எண்ணுவதில்லை. அதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படுகிறது. நிறைய தவறுகள் நடக்கவேண்டியிருக்கிறது. கால அவகாசமும் தவறுகளின் வீரியமும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். சுமைகளின் முதல் அழுத்தத்திலே சிலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். விட்டுக் கொடுத்துவிடுகின்றனர். வேறு சிலர் வாழ்வின் இரக்கமில்லாத துர்கனவுகளில் சிக்கி, அவை கனவுகள் என்றே நினைத்து, தங்களுக்குள் இருக்கும் கடைசி ஜுவாலையையும் இழக்கின்றனர். இவர்களுக்கு வாழ்க்கையை எங்கே இழந்தோம், எப்படி இழந்தோம் என்று எப்பொழுதுமே தெரிவதில்லை. வாழ்க்கை, எண்ணிக்கை இல்லா நம் மூதாதயர்களின் குழப்பமான இருண்ட அனுபங்களில் சிக்கி வெளிவரமுடியாத – இயலாத – ஒளியாகவே இருக்கிறது. “அனுபவம்: சுயபுத்தியை இழந்தால்தான் கிடைக்கும், பாதுகாப்பு: சுயகௌரவத்தையும் தன்மானத்தையும் இழந்தால் மட்டுமே கிட்டும், சுயகௌவரவம்: நடைமுறைக்கு சாத்தியமே இல்லை” என்று நம் முன்-அனுபவ “முத்தண்ணாக்கள்” தவறாமல், இடைவிடாமல் திரும்ப திரும்ப எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
எனினும் சிலர் பிடிப்பை விட்டுவிடுவதில்லை, முன்னேற தவறுவதுமில்லை. அவர்கள் தங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணையவிடுவதில்லை. அவர்கள் அந்த தீ தரும் ஒளியை வளர்க்கிறார்கள். அதற்கு வடிவம் கொடுக்கிறார்கள். தீயின் நோக்கத்தை அறிந்து கொள்கிறார்கள். அந்த நோக்கத்திற்கு ஒரு திட்டம் அளிக்கிறார்கள். அந்த திட்டத்தை உண்மையாக்குகிறார்கள். அதன்பின்னர் உள்ளுக்குள் இருக்கும் தீயும் உண்மையாகிறது. வலுப்பெறுகிறது. தன் முழு சக்தியை அடைகிறது.
எதிர்காலம் எவ்வாறு இருப்பினும், ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்வின் உதயத்தில், ஒரு மேன்மையான தொலைநோக்கு சிந்தனையுடன் தான் இருக்கிறான். தன் வாழ்வின் முழு அர்த்தத்தையும் புரிந்துவிட துடிக்கிறான். தன் உள்ளார்ந்த சக்தியை முழுமையாக உபயோகித்து, வாழ்வின் முழு பயனையும் அடைந்துவிட தவிக்கிறான்.
***
—The Fountain Head இல் Ayn Rand எழுதிய முன்னுரையில் இருந்து ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
Thanks: Ayn Rand and Signet.
***
பி.கு: இதில் சொல்லப்பட்டிருக்கின்ற “முத்தண்ணா” கண்டிப்பாக நான் இல்லை.
ஆயிரம்கால் இலக்கியம் – 8
ரமேஷ்-பிரேம் எழுதிய ஒரு ஓரினச்சேர்க்கையைப் பற்றிய கதையை பற்றி நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அந்த கதையில் எனக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா எனபதெல்லாம் வேறு விசயம். அந்த கதையைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்திருந்த திரு. யாத்ரா ரவீந்திரன் அவர்களிடம் விவாதித்த பொழுது, அவர் என்னை விசித்திரமாகவே பார்த்தார். இதில் என்ன இருக்கிறது முத்து என்றார். ஆனால் என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர் சொன்னார், எழுத்தாளர் என்பவர் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்கள். அவர்களின் நோக்கம் சமூகத்தை திருத்த வேண்டும் என்பதல்ல. மேலும் எது குற்றம் என்பது யாருக்குமே தெரியாது. அப்படியிருக்கும் போது திருத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். யோசிக்கவேண்டிய விசயம் தான். ஆனால் ஓரினச்சேர்க்கை தவறா சரியா என்று பார்த்தால், தவறு தான். நான் ஓரினச்சேர்க்கையை கடுமையாக எதிர்ப்பவன். அதைச் சட்டப்பூர்வமாக்குவதையும் கடுமையாக எதிர்ப்பவன். யார் என்ன சொன்னாலும் சரி. எனக்கு எத்தனை கெட்டவார்த்தைகளில் பின்னூட்டம் வந்தாலும் சரி. என் நிலைப்பாடு இதுதான்.
பிரேம்-ரமேஷ் எழுதிய மற்றொரு கதையைப் படிக்க நேர்ந்தது. தீராநதி டிசம்பர் 2006 இதழில் வெளிவந்தது. கதையில் பெயர். பன்றி.
பன்றி என்ற தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ஏதோ யாரையோ கடுமையாக சாடியிருக்கிறார்(கள்) என்று நினைத்தேன். அதுவும் ஒரு வகையில் சரிதான். கதை முடியும் போது உணர்ந்து கொண்டேன். ஆனால் இதை சிறுகதை என்று சொல்லமுடியுமா என்ற யோசனை கதையைப் படித்தபின்னர் தோன்றியது. ஆனால் சிறுகதை என்ற வடிவம் காலந்தோறும் மாறி வந்து கொண்டேயிருந்திருக்கிறது. ஒரு சிறு சம்பவமும் கதையாகிறது. ஆனால் அதுவல்ல விசயம். கதையில் நிறைய வரலாற்று facts இருக்கும் போது அது கட்டுரையோ என்ற எண்ணம் வருகிறது. தீராநதியிலிருந்து ரமேஷ்-பிரேமிடம் கதை கேட்ட போது, அவர்களிடம் சிறுகதை ஏது இருந்திருக்காது, அப்பொழுது எழுதிக்கொண்டிருந்த கட்டுரையை அப்படியே சிறுகதையாக்கி கொடுத்துவிட்டனரோ என்று கூட நினைத்தேன். இருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.
***
சில நாட்களுக்கு – மாதங்களுக்கு- முன்னர் விகடனில் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை ஒன்றைப் படித்தேன். கதையின் பெயர் என்னவென்று வழக்கம்போல் ஞாபகம் இல்லை. கதையைச் சொல்வது ஒரு சிறுவன். பணிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும். அவனும் அவனுடைய தாயாரும், அவனது தகப்பன் வேலை பார்க்கும் ஊருக்கு ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சென்று காத்துக்கிடந்து அவர் கொடுக்கும் பணத்தை வாங்கிவருவார்கள். இது ஒரு சிறுவனின் பார்வையில் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அவனது தந்தை மிகவும் தாமதமாக வருகிறார். ஒரு சில் நாட்கள் இரவு வெகுநேரமாகி விடுகிறது. ஆனால் அவனது தாயார் ஒரு போதும் அவர் காத்திருக்க சொன்ன இடத்தை – பேருந்து நிலையத்தில் ஒரு இடம்- விட்டு வெளியேறினதில்லை. சில சமயங்களில் அவர் மிகவும் தாமதாக வந்து விட்டு, அம்மாவை கண்டபடி திட்டுவதை அவன் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு புரியவே புரியாது. தாமதமாக வந்தவர் அப்பாதானே, பிறகு அவரே அம்மாவைத் திட்டுவானேன் என்று நினைப்பான். ஆனால் எந்தவொரு சமயத்திலும் அவனுடைய அம்மா, அப்பாவை எதிர்த்து பேசியதோ அல்லது நேரமாகிவிட்டால் அவரது அலுவலகத்திற்கோ சென்றதில்லை. இது அவனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தாலும் ஏனென்றும் புரியவில்லை. ஒரு நாள் அம்மா இறந்து போகிறாள். ஏனென்று அவனுக்கு தெரியவில்லை.
சில நாட்கள் கழித்து அவனது அப்பா வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்கிறார். மீண்டும் ஒரு நாள் தனது புது சித்தியுடம் அந்த சிறுவன் அப்பா வேலை பார்க்கும் ஊருக்கு மாசத்தின் முதல் தேதியில் பணம் வாங்குவதற்குப் போகிறான். அவனது சித்தி அவனுக்கு சாப்பிடுவதற்கு சாக்லேட் வாங்கித்தருகிறாள். பிறகு வழக்கம்போல அவனது அப்பா இன்னும் வந்திருக்கவில்லை. அவனது சித்தி அவனிடம் இப்படித்தான் லேட்டாவருவாராடா உங்க அப்பா என்று கேட்கிறாள். அவன் ஆமாம் என்பது போல தலையசைக்கிறான்.பிறகு அவனது சித்தி எழுந்து சென்று தனது கைப்பையில் சிறிய நோட்டைப்போன்ற ஒன்றை எடுத்து அதில் ஒரு பக்கத்தில் எண்ணைக்கண்டுபிடித்து, அப்பாவுக்கு போன் செய்கிறார். பிறகு இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்கிறாள். ஆனால் அவர் வரவில்லை.
பொறுமையிழந்த சித்தி, இவனிடம் டேய் உங்க அப்பா வேலைசெய்யுற ஆபீஸ் உனக்கு தெரியுமா? என்கிறாள். இவன் தெரியும் என்பது போல தலையாட்டியவுடன், ஒரு ரிக்ஷா அமர்த்தி, இருவரும் அப்பா வேலைசெய்யும் ஆபீஸ¤க்குப் போகின்றனர். அவனது அப்பா ஓட்டமும் நடையுமாக வந்து சித்தியையும், அவனையும் கேன்டீனுக்கு அழைத்து சென்று சாப்பிட வாங்கித்தந்து பணத்தைக் கொடுத்து அனுப்புகிறார். அவனுக்கு அப்பா சித்தியுடன் மிகவும் பாசமாக இருப்பது போல இருக்கிறது.
வரும் வழியில் எங்கும் அவன் தன் அம்மா இது போல எல்லாம் ரிக்ஷா அமர்த்தி அப்பாவின் அலுவலகத்துக்கு சென்றதேயில்லையே என்பதைப் பற்றியே நினைத்துக்கொண்டு வருகிறான்.அவனுக்கு ஏனோ சித்தியைப் பிடிக்கவில்லை என்று முடியும் கதை.
திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு இந்த கதை சப்பென்று உப்புச்சப்பில்லாமல் இருக்கும். ஆனால் நிதானமாக வாசிக்கும் சீரியஸ் ரீடர்ஸ்க்கு இந்த கதை நிறைய சிந்தனைகளைக் கிளரிவிடும். நிறைய கேள்விகளை எழுப்பும். ஒரு சிறுகதையையோ, கதையையோ படித்த முடித்தபின்னர் அதைப் பற்றி சிந்திக்க ஏதும் இல்லையெனில் அது வருந்தத்தக்க விசயம்.
***
பன்றியும் அது போலவே தான். ரமேஷ்-பிரேம் பன்றிகளைப் பற்றி நிறைய சொல்கின்றனர். இந்த கதையில் வாக்கியங்கள் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கின்றனர். எனவே கதையை சொல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் கதை என்ற ஒன்றே இல்லை. வெறும் ஒரு சம்பவம் தான். அந்த சம்பவம் என்னவென்றால் : ஒரு பன்றிக் குடும்பம், அதாவது, பன்றியும், அதன் குட்டிகளும் ஒரு லாரியால் நசுக்கப்பட்டு இறக்கின்றன. இதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் தனது பத்திரிக்கை நண்பருக்கு ஒரு கட்டுரை எழுதி செய்தியாக வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறார். அந்த செய்தி வெளியிடப்படவேயில்லை. மறுமுறை அந்த நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது, அவர் தனது நண்பரிடம் ஏன் அந்த செய்தி வெளியிடப்படவில்லை என்று கேட்கும் போது அவர், ” இதை எந்த வகையில் வெளியிடுவது என்று தெரியவில்லை, அதனால் வெளியிடவில்லை” என்கிறார். அதோடு முடிகிறது கதை.
பிரேம்-நரேஷின் நடை மிகவும் நன்றாக இருந்தது. நான் ரசித்த சில பகுதிகளை அப்படியே இங்கு தருகிறேன்.
“கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிய பன்றிகள் தலைமறைவாகி விட்டனவா என்று நினைத்தேன்“
“பன்றிகள், நாய்கள், ஆடுகள், மாடுகள், காகங்கள் இவை எல்லாம் மனித நடமாட்டமுள்ள தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக தென்படவேண்டும். விலங்கினங்கள், பறவையினங்கள் சூழ்ந்திராத போது நம்மை பெருவெறுமை சூழ்ந்துவிடுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் எருமைகளைக் காணும்தோறும் மனதில் உவகை பொங்குகிறது. நான் இன்னும் இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பதின் பாதுகாப்புணர்வை இவை தருகின்றன“
என்னது உவகை பொங்குகிறதா? ஒரு டர்னிங்கில் ஸ்ப்லன்டரில் வேகமாக வருகிறீர்கள், திரும்பியவுடன் அங்கே நமது எருமையார் ஹாயாக நின்று கொண்டு ஷகீலாவின் போஸ்டரையோ அல்லது கம்யூனிஸ்டுகளின் செவிமெடுக்கப்படாத அல்லது சொற்றுக்கு உதவாத கோஷங்கள் கொண்ட போஸ்டரையோ தின்று கொண்டிருக்கின்றன, தின்றதோடு மட்டுமில்லாமல், ஷாக்கில் சடன் பிரேக் அடித்து வியர்த்து விறுவிறுத்து நிற்கும் நம்மை, மெதுவாக மிக மெதுவாக திரும்பிப்பார்த்துவிட்டு, மீண்டும் அதே ஸ்பீடில் போஸ்டரை தின்ன ஆரம்பித்தது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது உவகை பொங்குமோ? பொங்காது என்று சொல்லிவிட்டால், நம்மை பின்நவீனத்துவத்தில் சேர்க்கமாட்டார்களோ என்ற கவலையும் உடன் வருகிறது. (இதில் பின்நவீனத்துவம் எங்கிருந்து வந்தது என்று நிர்மல் அடித்த ஜெர்க்கை என்னால் பார்க்க முடிகிறது!)
“ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளில் ஒன்று வழிதவறியிருந்தால் அதை வீட்டுக்கு எடுத்துச்செல்ல துணியும் மனம், இப்பன்றிக்குட்டியிடம் மட்டும் ஏன் கருணை காட்ட மறுக்கிறது“
“கொட்டும் மழையில் அசையாமல் நடுத்தெருவில் தீவிரமான ஒரு மனோநிலையில் நிற்கும் தனித்த பன்றியைப் பார்த்திருக்கிறேன். நாய்களால் குதறப்பட்டு காது கிழிந்து ரத்தக்காயங்களோடு ஓடிய பன்றியைப் பார்த்திருக்கிறேன். காதுகளில் துளையிட்டோ அல்லது காதுகளில் இரும்பு ஆணியால் ரிவீட் அடிக்கப்பட்டோ உரிமையாளரின் அடையாளம் பொறிக்கப்பட்ட பன்றியைப் பார்த்திருக்கிறேன். யாரோ ஒரு போக்கிரிப் பயலால், உடம்பில் மண்ணென்ணெய் ஊற்றப்பட்டு கொளுத்தப்பட்ட பன்றி எரிந்தபடி, போக்குவரத்து நெரிசலூடாக முக்கியச் சாலையில் ஓடியதைப் பார்த்திருக்கிறேன். சாராயக்கடைகளில் திரியும் பன்றிகளில் ஒன்றைப் பிடித்து அதன் வாயில் சாரயத்தைப் புகட்டியதைப் பார்த்திருக்கிறேன். அதே சாரயக்கடையில் மலம் வழிய பிரக்ஞையற்றுக் கிடந்த ஒருவனின் பின்புறத்தை நக்கி சுத்தம் செய்த பன்றியைப் பார்த்திருக்கிறேன். தெருவில் என்னைப் பார்த்தால் மரியாதையோடு விலகிச்செல்லும் ஒரு பன்றியை எனக்குத் தெரியும். பன்றி ஒரு ஒடுக்கப்பட்ட விலங்கு.”
இது கதை மட்டுமே என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது இதனை ஒரு உவமையாக பாவித்து ஏதாவது ஒரு சமூக அவலத்தின் மீதும் ஏற்றிப்பார்க்கலாம். சமீப கால சிறுகதைகளில் வாசகர்களின் பங்கு அதிகம். சிறுகதைகள் எழுத்தாளருடன் முடிவடையக்கூடாது, வாசகர்களிடமும் தொடரவேண்டும்.
***
குமுதத்தில் (02 ஜூன்,07) ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது, அரசு பதில்கள் பகுதியில்:
கே: தமிழில் சிறுகதை நாவல் வடிவம் காலாவதியானது ஏன்?
பதில்: உலக இலக்கியங்களைப் படிக்காமல் சும்மா படித்தது போல சில பிரபல எழுத்தாளர்கள் ரீல் விட்டதும் மக்களைப் பாதிக்கும் அரசியலைத் தொடாமலேயே அறிவு ஜீவி போல நடித்ததும் ஒரு காரணம்.
பதிலளித்த “அரசு” அறிவுஜீவியோ? சொல்லவேயில்ல!
***
“மல்லிகைக்கிழமைகளில்” ஜெ.பிரான்ஸிஸ் கிருபா எழுதி விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடரில் வந்த ஒரு கவிதை:
தீயாகவா, புயலாகவா
திருக்கை மீன் வாலாகவா
பூவாகவா, புன்னகையாகவா
புத்தம்புது விஷமாகவா
உன் கோபம் எப்படி வருமென்று
எனக்கு தெரியாது.
எங்கிருந்து வரும்
எப்போது வரும்
எவ்வளவு வரும்
உனக்கும் தெரியாது.
அன்பே என்றுதான் சொன்னேன்
கோபித்துக்கொண்டாய்
பேரழகே என்றேன்
கோபம் பெரிசாகிவிட்டது
ஆருயிரே என்றேன்
கோபமே நீயாகிவிட்டாய்.
வெண்ணெய்க் கட்டியாக
அனலில் விழுந்து
உருகித் தொலைத்தேன்
பொல்லாத செல்லக் கள்ளியென்று
மனசுக்குள் முணுமுணுத்தேன்
உற்றுக் கேட்டதும்
உயிர் துள்ளிக் குதித்தது
உன் கண்களில்.
இரண்டாயிரத்து ஏழாவது
முறையாக மீண்டும் பிறந்தேன்.
ஒரு நாளுக்கு என்னை இப்படி
எத்தனை முறை
தொலைக்கிறாய் என்பதை
எண்ணிக்கை வைப்பதில்லை நீ.
ஒருபோதும் மன்னிப்பும் கேட்பதில்லை.
வீட்டிலோ, வெளியிலோ
சாலையிலோ, கோயிலிலோ
திரைச்சாலையிலோ
இந்தியாவிலோ ஜப்பானிலோ
உலகின் எந்த மூலையில்
என்னை நீ தொலைத்தாலும்
கண்டுபிடித்துத் தருவது
என் கடமையாக இருக்க
உனக்கென்ன கவலை?
இந்த கவிதைக்கு அர்த்தம் எழுதலாம் அல்லது விளக்கம் எழுதலாம் என்று நினைத்தேன். பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டேன். எனென்றால் அவரது மல்லிகைக் கிழமைகள் தொடரில் ஓரளவேனும் எனக்கு புரிந்த கவிதை இது மட்டுமே. (போனவாரமெல்லாம் ஒன்றுமே புரியவில்லை.!) இதுக்கும் அர்த்தம் எழுதி யாராவது, டேய் டுபாக்கூர் அது இல்லை அர்த்தம், ஸ்டுபிட் மாதிரி பேசாத, இதுதானாக்கும் அர்த்தம் என்று எதையாவது சொன்னால் அப்புறம் எனக்கு கவிதை படிப்பதற்கு கான்பிடன்ஸே போய்விடும். (ஆ! இதுவே கவிதை மாதிரித்தான இருக்கு. “கவிதை படிக்க கான்·பிடன்ஸ்”!)
இன்னொரு விசயம். என் நண்பன் (கோனபாட்டில் கோவிந்தன்!) என்றைக்குமே புத்தகத்தை தூக்கி படித்ததேயில்லை. நான் பார்த்ததேயில்லை. குமுதம் ஆனந்த விகடன் வாங்கிவந்தவுடனே, அதில் உள்ள கேர்ல்ஸ் பிக்சர்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு மொத்தமாக புத்தகத்திற்கு மார்க் போடுவான். அவ்வளவே. ஆனால் சமீபகாலமாக அவன் விகடன் வந்தவுடன் மல்லிகைக்கிழமையைத் தான் படிக்கிறான். திரும்பத்திரும்ப படிக்கிறான். நான் வேண்டாம்டா இந்த விசபரிட்சை என்று சொல்லுயும் கேட்க்காமல் படித்தான். இப்பொழுது ஏதோ பத்தாவது ரிசல்ட் பாத்து பெயிலாகிவிட்ட மாணவன் போல மிகவும் சோகமாக அழைகிறான். போன வாரம் திடீரென்று என்னை கூப்பிட்டு, மல்லிகைக்கிழமை கவிதையை காட்டி, உனக்கு புரிகிறதா பார் என்றான். நான் ஒரு ஐந்து முறைபடித்தும், புரியவில்லை. கடைசியில் நான் புரியவில்லை என்று சொன்னவுடன் தான் அவனுக்கு நிம்மதி. அவன் மொத்தம் பதினாறு முறை அந்த கவிதையைப் படித்திருக்கிறான். அவனுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியது என்பது போனஸ் தகவல். புரிந்துகொள்ள முயற்சி செய் பின்னால் உதவியாக இருக்கும் என்றேன்.
புரியாமல் இருப்பதால் தான் கவிதைகள், கேர்ல்ஸைப் போல, அழகாக இருக்கின்றனவோ?
***
ச.இ.பா. (சங்க இலக்கிய பாடல்)
நற்றினையில் ஒரு பாடல்:
“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவ தாயின்
மறக்குவேன் கொல்என் காதலன் எனவே.”
“தோழி, நான் சாவுக்கு அஞ்சவில்லை. ஆனால் வேறொன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்துவிட்டால், பிறகு வேறு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்” என்றாளாம்.
***
பிகு: முந்தைய பகுதிகளை side menuவில் பார்க்கவும்.