(குறுநாவல்)
3
எங்க ஊர் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றோம். ஊருக்கு போனஉடன் போன் பண்ணு என்று சொல்லிவிட்டு ராஜேஷ் போய்விட்டான். இவன் கூட வந்தால் நன்றாக இருந்திருக்கும். எவ்வளவு சொன்னாலும் மாட்டேனுட்டான். தனியாகத்தான் போகவேண்டும். மதுரைக்கு போகும் பஸ்ஸை தேட ஆரம்பித்தேன்.
பஸ் கிளம்பிவிட்டிருந்தது. நான் 28ஆவது சீட். எனக்கு அருகில் இருந்த ஜன்னல் சீட் காலியாக இருந்தது. ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்து கடையில் இருந்த டொரினோ பாட்டில்கள் எல்லாம் ஆசிட் பாட்டில்கள் போலத் தோன்றவே, நகர்ந்து பழையபடியே அமர்ந்து கொண்டேன். எதுக்கு வம்பு?!
பஸ் விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. நல்ல இருட்டு. பஸ்ஸ¤க்கு உள்ளேயும் வெளியேயும். பஸ் வேகம் குறைந்தது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எட்டிப்பார்த்தேன். பஸ்ஸின் ஹெட் லாம்ப் வெளிச்சத்தில் ஒரு 10,15 பேர் கையில் எதேதோ வைத்துக்கொண்டிருந்தனர். டிரைவர் இஞ்சினை ஆப் செய்தார். இறங்கி ஓடத்தொடங்கினார். பயணிகள் அனைவரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஓடுவதற்கு தயாராக எழுந்தனர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. அனைவரும் என்னைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள். கதவு சாத்தப்பட்டது. பஸ் எங்கிலும் பெட்ரோல் நெடி. அருகில் இருந்தவர் ஜன்னலை உடைக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வசந்தன் கண் முன் வந்தான். பிள்ளையாரே அந்த ஆட்டோ தாடிக்காரனுக்கு பயந்து குங்குமத்தை அழித்தது தவறுதான். மன்னித்துவிடு என்று வேண்டுகிறேன். பிள்ளையார் சிரிக்கிறார். அதனால் என்ன இந்தா குங்குமம் என்று கை நீட்டுகிறார்.. அதற்குள் எனக்கு அருகில் இருந்தவர் குதித்துவிடுகிறார். அடுத்து குதிக்கப்போகும் மற்றொருவரிடம் பிள்ளையார் குங்குமத்தை குடுக்கிறார். அவன் வாங்கிக்கொள்ளாமல் குதித்து விடுகிறான். அவன் குதித்தவுடன் அவனது கைகள் வெட்டப்படுகிறது. தீ எறிய ஆரம்பிக்கிறது. நான் கதறுகிறேன். பிள்ளையார் துதிக்கையில் காற்று ஊதி, தீயை அணைத்துவிட முயற்சிக்கிறார். நான் கதறுகிறேன். முருகா, ஞான பண்டிதா….விழுப்புரம் விழுப்புரம் டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம். வண்டி 15 நிமிடம் நிற்கும். சத்தம் தெளிவாக கேட்டது. அடப்பாவிகளா பஸ்ஸே எறிந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு டீ காபி ஒரு கேடா!
சுற்றும் முற்றும் பார்த்தேன். பயணிகள் டீ குடிக்க இறங்கிக்கொண்டிருந்தார்கள்.
எழுந்து உட்கார்ந்தேன்.
4
டீ குடித்து விட்டிருந்தேன். கொஞ்சம் தெளிந்தார் போல இருந்தது. பஸ்ஸில் ஏறினேன். என் இருக்கையில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார். எதிர் இருக்கையில் தலையை கவிழ்ந்திருந்தார். அருகில் சென்றேன். ‘சார்’ பதில் இல்லை. ‘சார்’ சார் நிமிர்ந்து பார்த்தார். சார் இல்லை. ‘தம்பி. இது என் இருக்கை. நீங்கள் ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொள்ளுங்கள்’ என்றேன். தம்பி பார்த்தார். கோதுமை நிறம். அழகான முகம். மீசை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. கூர்மையான கண்கள். சிரமப்பட்டு நகர்ந்து உட்கார்ந்தான். நான் என் சீட்டில் அமர்ந்தேன். என்னால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. சிலரது முகம், ஒருமுறை பார்த்தால் மறுமுறையும் பார்க்கத் தோன்றும் காந்தத் தன்மை கொண்டதாக இருக்கும். மறுபடியும் பார்த்தேன். அவன் முகத்தை ஜன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டான்.ம்ம்ம்ம்..என்ன செய்ய..சிலரது முகம் என்னைப்போல இரும்பாய் இருக்கிறது.
பஸ் கிளம்பியது. நடத்துனர் பயணிகள் எண்ணிக்கையை சரி பார்த்தார். சரியாக இருந்திருக்கும் போல, என்னிடம் வந்தார். என்னிடம் எதற்க்காக வருகிறார்? நான் எனது டிக்கெட் இருக்கிறதா என்று என் சட்டைப் பையில் பார்த்தேன். ஐயோ காணவில்லை. எங்கே வைத்தேன். பேண்ட் பாக்கெட்டில். ஐயையோ காணோமே. என்ன செய்ய. எங்கே பொகணும் என்றார். ‘அது…வந்து..’ என்று ஆரம்பித்தேன். ‘மதுரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்…’ என்றது கணீர் குரல். பையன் டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தான். நான் அமைதியானேன். மணி பார்த்தேன். 11:45. அட! இதோ டிக்கெட்டை கடிகாரத்தில் சொருகி வைத்திருக்கிறேன்.ம்ம்..புத்திசாலி! பிழைத்துக்கொள்வாய். என்று நினைத்து கொண்டேன்.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. பஸ் எறிந்த பொழுது நான் என்ன ஆனேன் என்று தெரியவில்லை. இந்த முறை அப்படியெல்லாம் விடக்கூடாது! கடைசி வரை பார்க்கவேண்டும்! இன்னும் நன்றாக கண்களை மூடிக்கொண்டேன். விசும்பும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. கனவில் படம் ஏதும் தெரியவில்லை. சந்தேகம் வரவே கண் முழித்துப் பார்த்தேன். பையன் விசும்பிக்கொண்டிருந்தான். கனவல்ல நிஜம் தான் போலிருக்கிறது. எனக்கு என்னவோ போல் இருந்தது.
சிறுது நேரம் அழுவதும் சிறிது நேரம் அமைதியாக இருப்பதும் என்று இருந்தான் அந்தப்பையன். எனக்கு வருத்தமாக இருந்தது!
‘தம்பி’ பதில் இல்லை. அழுகை நின்று விட்டது. ஸ்விட்ச் வெச்சிருப்பானோ? ‘தம்பி’ ம்ஹீம் அசையவில்லை. ‘யாருப்பா நீ? ஏன் அழுகிற? டிக்கெட் தான் எடுத்துட்டியே? பிறகு எதுக்கு அழுகிற? மேற்கொண்டு ஊருக்கு போக உன்னிடம் பணம் இல்லியா? ஏன் அழுகிற?’ பதில் இல்லை.
‘தம்பி உன்னுடைய சோகத்தை என்னிடம் சொல்லக்கூடாதா’
நிமிர்ந்து பார்த்தான். அந்த இருளிலும் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. ‘நீங்கள் இந்துவா’ என்றான். நான் பதில் ஏதும் சொல்லவில்லை.
‘என் பெயர் நசீர்’ என்றான்.
(தொடரும்)