ஐஸ்லாந்தில் இருக்கும் Eyjafjallajoekull எரிமலை கக்கும் புகையால் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் ஏனைய விமானநிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. சென்ற வியாழக்கிழமையிலிருந்து ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 64000 விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. மில்லியன் கணக்கில் பயணிகள் ஏதும் செய்ய இயழாமல் தவிக்கின்றனர். பயணிகளுக்காக வருத்தப்படும் இந்நேரத்தில், விமானங்கள் தடை செய்யப்பட்டது சரியானதே என்று தோன்றுகிறது; ஏனென்றால் எரிமலைப் புகை விமானிகளின் பார்வைத்திரனைப் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் இன்னும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எரிமலைப்புகை பார்ப்பதற்கு சாதாரண மேகம் போலவே இருப்பதுதான் மிக முக்கியமான பிரச்சனை.கண் பார்வைக்கு மட்டுமில்லை ராடார் பார்வைக்கும் அப்படித்தான் தெரியும்.கண்ணுக்கு எரிமலையின் சாம்பல் தெரியாமல் போனாலும் அவற்றுள் மறைந்திருக்கும் ரசாயனங்கள் விமானத்திற்கு பாதகம் ஏற்படுத்தும்.
விமானத்தின் ஜெட் இஞ்சின் வழியாக உள்ளே புகும் காற்றில் எரிமலைப்புகை இருந்தால் அது எஞ்சினை பழுதடையச்செய்யும். எரிமலை புகையில் இருக்கும் சாம்பலில் பவுடர் போலவும் சின்னச்சின்ன மணல் துகள் போலவும் இக்ஜீசியஸ் பாறைகள் கலந்திருக்கின்றன. விமானத்தின் ஜெட் இஞ்சினின் உள் இருக்கும் வெப்பநிலை 1832 ·பாரன்ஹீட் டிகிரீஸ். இந்த வெப்பநிலையில் அந்த இக்னீசியஸ் பாறைகள் சட்டென உருகிவிடும்.
டர்பைன் வேன்ஸ் (turbine vanes) என்கிற பாகம் தான் விமானத்தை செலுத்தும் ப்ரப்பலருக்குச் செல்லும் காற்று விகிதத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த டர்பைன் வேன்ஸில் உருகிய இக்னீசியஸ் பாறைகள் ஒட்டிக்கொண்டு இன்ஜினை சுத்தமாக நிறுத்திவிடும்.
குறைந்த அளவில் இந்த எரிமலைப் புகை விமானத்தின் மின் சக்தியை பாதித்து விமான கட்டுப்பாட்டுத் தளத்தை பாதித்துவிடும் அபாயம் இருக்கிறது. எரிமலைப்புகை மேகத்தை சாதாரண மேகம் தான் என்று நினைத்து உள்ளே சென்றுவிட்ட பிறகு பார்வை கடுமையாகப் பாதிப்படைந்து விமானிகள் விமானத்தின் வழித்தடத்தை சரியாக கணிக்க இயலாமலும் போய்விடும்.
சில சம்பவங்கள்:
1. 1980இல் 727 மற்றும் DC-8 விமானங்கள் தனித்தனியாக வாஷிங்டனில் இருக்கும் செயின் ஹெலன் எரிமலையிலிருந்து வந்த புகையில் மாட்டிக்கொண்டன. விமானத்தின் முன் கண்ணாடி உடைந்து போனது. இரண்டு விமானங்களும் பாதுகாப்பாகத் தரையிறங்கின.
2.1982 இல் இந்தோனேசியாவில் இருக்கும் Galunggung என்கிற எரிமலைப்புகையில் பல 747கள் சிக்கிக்கொண்டன. கோலாலம்பூரிலிருந்து ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த ஒரு விமானத்தில் நான்கு என்ஜின்கள் செயலிழந்து விட்டன. 36000 அடியிலிருந்து 12500 அடிவரை திடுமென கீழிறங்கிய அந்த விமானத்தின் இன்ஜின் பிறகு முழித்துக்கொண்டது. என்ஜின் பழுதடைந்தாலும் பாதுகாப்பாகத் தரையிறங்கியது அந்த விமானம்.
3.1989இல் புத்தம்புதிய 747-400 Anchorageஇல் இருக்கும் Mt.Redoubtஇன் புகையில் சிக்கிக்கொண்டது. புகை என்ஜினுக்குள் சென்றவுடன் புகையாக மாறினாலும் விமானம் பாதுகாப்பாக Anchorageஇல் தரையிறங்கியது.
இதுபோன்ற சம்பவங்களால் பாதுகாப்பாக விமானங்களை தடைசெய்வது சரியான முடிவாகத்தோன்றுகிறது. எனினும் இன்று ஜெர்மனியின் லுப்தான்சாவும், டச்சின் KLM, ப்ரான்சின் ஏர் ப்ரான்ஸ் மற்றும் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் சோதனை விமானங்களை அனுப்பியது. ஏதும் பிரச்சனை ஏற்படவில்லை. விமானங்கள் பறக்கத்தயாராக இருக்கின்றன.
போனவருடம் recessionஇல் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்தே இன்னும் பல விமான கம்பெனிகள் மீண்டு வராத நிலையில் இப்பொழுது இந்த எரிமலை குழப்பக்கங்கள் அவர்களுக்கு மேலும் பெரிய இழப்பை ஏற்படுத்தும். ஒரு நாளுக்கு 200 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணித்திருக்கின்றனர்.
தற்பொழுது எரிமலைப்புகை வடகிழக்காக திரும்பியிருப்பதால் நாளை மதியம் ஐரோப்பாவில் சில விமானநிலையங்கள் திறக்கப்படலாம் என்று நம்புகின்றனர். நாளை மதியம் Eurocontrol ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கிறது. அதற்கப்புறமே முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Boston.com வெளியிட்டிருக்கும் அற்புதமான படங்கள் இங்கே இருக்கின்றன.
Thanks:MSNBC