நம்ம ஊரரசு இந்த வார விகடனுக்கு கொடுத்திருந்த பேட்டியில் “இயக்குனர் என்றால் பாரதிராஜா தான் நினைவுக்கு வருவார்” என்றார். (ஊரரசு பேட்டியவெல்லாம நீ படிக்கிறன்னு கேக்காதீங்க!). என்னைப் பொருத்தவரையிலும் இது தான் உண்மை. தமிழ் மொழியில் வேறு வேறு தளங்களில் படம் கொடுத்தவர் அவர் மட்டுமே. சிவப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே, ஒரு கைதியின் டைரி, கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய ஆல் டைம் பேவரிட் படம் முதல் மரியாதை தான்.
அவரை ஒரு முறை லேன்ட் மார்க்கில் வைத்து பார்த்திருக்கிறேன். வழக்கம் போல் ஒரு டி சர்டும் ஜீன்சும் போட்டுக்கொண்டு புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் சென்று என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். கை குழுக்கள்களுக்கு அப்பால் கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தோம். திரும்பி வரும் பொழுது ஒரு மிகப் பெரிய இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தது போல இல்லை.
பாரதிராஜா ஒரு சிறந்த ஓவியர் என்பது எனக்கு இன்று தான் தெரிந்தது. அதுவும் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரை வரைந்திருக்கிறார். இதோ பாரதிராஜா வரைந்த எஸ்.ராமகிருஷ்ணனின் படம்.
*
நடிகர் சிவக்குமார் நன்றாகப் படம் வரைவார் என்று தெரியும் ஆனால் நன்றாக கதை அடிப்பார் என்று அண்மையில் தான் தெரியவந்தது. ஏதோ ஒரு பெண்கள் கல்லூரியில் விழிகள் தெரிக்க அவர் மொக்கை போட்டுக்கொண்டிருந்ததை விஜய் டீவியில் பார்க்க நேர்ந்தது. அதில் முக்கியமாக என்னை கடுப்பேற்றிய விசயம்.ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் காண்டம்கள் கொத்து கொத்தாகக் கிடைத்தனவாம். இது என் எல்கேஜி காலத்திலிருந்து மிகவும் பிரபலமான கதை. வேதாளம் புளியமரத்தில் இருப்பதைப் போல.எந்த வேதாளம் எந்தப் புளியமரம் என்று கேட்டுப்பாருங்கள் ஒரு பயலுக்கும் தெரியாது.சிவக்குமாரிடம் எந்த கம்பெனி எந்த வருடம் என்று கேட்டுப்பாருங்கள்!
அப்புறம் பெண்பிள்ளைகளுக்கு அட்வைஸ் வேறு. நீங்கள் ஏன் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்கள். அது துரோகம் இல்லையா – என்பது போல பல பிதற்றலகள்.இவை யாவும் சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டரில் வேலை பார்க்கும் பெண்களை (அதன் மூலமாக ஆண்களை) நோக்கி வீசப்பட்ட கேள்விகள். என்னவோ அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதற்காகத்தான் வேலைக்கே செல்கிறார்கள் என்பதைப் போல.
மேலும் இது (செக்ஸ் பிரச்சனை) என்னவோ சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டர் தொழில்களுக்குத் தான் இருக்கிறது என்பது போல கதைகள் பிண்ணப்படுகின்றன. அப்புறம் இவரைப் போன்ற ராமச்சந்திர மூர்த்திகள் அக்கதைகளைப் பரப்பிவிடுகின்றனர்.
அக்கதைகளைப் பரப்பும் முன் இன்னும் ஜாதகம் பார்த்து வரதட்சனை கொடுத்து கல்யானம் செய்துகொடுக்கும் இந்தச் சமூகத்தில் இம்மாதிரியான செக்ஸ் கதைகள் எத்தகைய விளைவுகளை இருபாலருக்கும் உண்டு பண்ணும் என்று ஸ்ரீல ஸ்ரீ ராமசந்திரமூர்த்திகள் யோசிப்பது நலம்.
*