(சிறுகதை)
வெயில் நடுமண்டையில் சுள்ளென்று இறங்கியது. என் சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். பொங்கல் அன்றைக்கு காப்பு கட்ட வேண்டுமாம். எதற்கு? அது ஏதோ வழக்கம்ப்பா – கட்டிட்டு வான்னா போய் கட்டிட்டு வரவேண்டியது தான? கட்டியாச்சு. வீட்டுக்கு சரி – காட்டுக்குமா கட்டணும்? வீட்டுக்கு நிலைப்படியில கட்டணுமாம். காட்டுக்கு ஏது நிலப்படி? பம்புசெட்டிலா கட்டுவது? எங்க காடு வானம் பாத்த காடு. பம்புசெட்டு ஏது? அந்த ஒத்த மரத்தில கட்டிட்டு வாடா. நல்லவேளை அந்த ஒத்த மரம் இருந்தது – இல்லீன்னா வரப்பு ஓரமா இருக்கிற மொத பருத்திச்செடில கட்டிட்டுவாடான்னு சொல்லிருப்பாங்க. மரம் கேட்டுச்சு – டேய் எனக்கெதுக்குடா கட்ற? எனக்குத் தெரியாதுப்பா. கட்டச்சொன்னாங்க கட்டினேன். அடுத்த பஸ்ஸு ரெண்டு மணிக்குத்தானாம். அதுவரைக்கும் இங்க நான் என்ன செய்யறது? இல்ல தெரியாமத்தேன் கேக்கறேன் – பொங்கல்ன்னா கிராமத்தில தான விஷேசமா இருக்கணும்? உழவர் திருநாள் தான? பொண்ணுங்க மஞ்சத்தண்ணி கிஞ்சத்தண்ணி ஊத்துவாங்கல்ல? அதெல்லாம் பாரதிராஜா படத்தில தான் போலிருக்கு. இப்படியா கப்சிப்புன்னு இருக்கும்? மந்தையில மட்டும் ரெண்டு பெருசுங்க உக்காந்து பேசிட்டிருந்துச்சுங்க. அதத்தவிர வேறு சம்பவம் ஏதும் என் கண்ணுக்கு சிக்கி நடக்கல. நகரத்தில இருக்கிற நாம தான் வழக்கத்தையும் சம்பிரதாயத்தையும் தவறாம கடைப்பிடிக்கிறோம்னு நினைக்கிறேன். நமக்கு கொண்டாட பண்டிகை வேணும். அவ்வளவுதான். கொஞ்ச நேரம் யாராவது டவுனுக்கு போறாங்களான்னு நின்னு பாத்தேன் – ஒரு ஈ காக்கா கூட இன்னிக்கு டவுனு பக்கம் போற மாதிரி தெரியல. சரி வுட்றா வண்டியன்னு நடயக் கட்டிட்டேன். வெயில் இப்படி மண்டையப்பிக்கும்னு நெனச்சுப் பாக்கல. இன்னும் ஒன்றரைக் கிலோமீட்டர் நடக்கனும். படத்தில தான் கிராமம் பசுமையா இருக்கு – நேர்ல? ஒரு மரத்தோட நிழல விட்டா அடுத்த மர நிழல் வர்றதுக்கு 10 நிமிஷமாகுது. வழியில – தனியா – ஒரு வீடு இருந்துச்சு. வீட்டுக்கு வெளியில ஒரு ஆள் குச்சிய வெச்சு பல்ல வெளக்கிட்டு இருந்தாரு. என்னையவே பாத்திட்டிருந்தாரு. கிட்டத்தட்ட ஒரு நூறு மீட்டருக்கு முன்னருந்து பாக்கறாரு. அவர க்ராஸ் பண்ணிட்டுப்போறப்பா – வாயில இருக்கிற குச்சிய வெளில எடுக்காம – என்னையவே ஃபாலோ பண்ணி அவரோட ஃபேஸ் திரும்பிச்சு. கொஞ்சம் டெரர்ராத்தான் இருந்துச்சு. அப்பாடா அந்தாளக் கடந்தாச்சு. ஏய். தம்பி. என்னயவா கூப்பிடறார்? இந்தாப்பா. எச்சிலை முழுங்கினேன். தம்பி. இந்தாப்பா. திரும்பிப்பார்த்தேன். கையகாமிச்சு வான்னுசொன்னார். மெதுவா நடந்தேன். நீ முருகனோட தம்பியா? ஆமா. அட. வா. வா. டீ சாப்பிட்டுப் போ. இல்ல பரவாயில்ல. நீங்க. உங்க அண்ணனுக்கு ஃப்ரண்டு தான். பேரு? பூபதி. உள்ள வா. டீ சாப்பிட்டுப் போகலாம். நானே உன்ன வண்டில வெளக்கில இறக்கிவிட்டிர்றேன். ஹீரோ ஹோண்டா. சிடி 100. வெளக்குதான? இல்ல கள்ளுப்பட்டிக்கா? இல்லண்ணே வெளக்குல விட்டாப்போதும். ஜெயவிலாஸ் பிடிச்சுப் போயிடுவேன். ஜெயவிலாஸா? இப்பெல்லாம் கவர்மெண்ட்டு பஸ்ஸுகூட வெளக்குல நிக்குது. கவலப்படாத. உள்ள வா.
*
உட்கார இடம் கிடைக்கவில்லை. ஒரு கம்பியில் சாய்ந்து கொண்டு கண்டக்டர் ஸ்டேஜ் க்ளோஸ் செய்யும் அழகை ரசித்துக்கொண்டே வந்தேன். தினமும் பஸ்ஸில் கல்லூரிக்கோ ஸ்கூலுக்கோ சென்றிருந்தீர்கள் என்றால் கண்டக்டர்கள் மீது உங்களுக்குத் தனி மரியாதை வந்திருக்கும். நேர்மாறாக நடப்பதற்கும் சாத்தியமிருக்கிறது. பெரும்பாலும் கண்டக்டர்களை பிடிக்காமல் போவதற்கு காரணம் – சில்லரை. ஆலங்குடி திருப்பத்தில் கூட கண்டக்டர் கருஞ்சிறுத்தை மாதிரி அசையாமல் நின்றுகொண்டு கடமையே கண்ணாக எழுதிக்கொண்டிருந்தார். இவ்வளவு ஆட்டத்திலும் எப்படி கிறுக்காமல் எழுதமுடிகிறது. பேப்பரையும், பேப்பர் வைத்து எழுத உதவிய அந்த பேப்பர் சைஸ் சின்ன அட்டையையும், பேனாவையும், கொத்து கொத்தாக கலர் கலராக இருக்கும் டிக்கெட்டுகளையும் ஒரு சேர தன் தோள் பையில் தூக்கிப்போட்டார். சுண்டு விரலில் விசில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. வேகமாக நடந்து படிக்குச் சென்றவர். மதுரை மதுரை மதுரை என்று கத்த ஆரம்பித்தார். கள்ளுப்பட்டி வந்துவிட்டிருந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் ஒரு இடம் காலியானது. பின் படிக்குப் பக்கத்தில் ஒரு சீட் மொத்தமாக காலியானது. அங்கே போகலாம் என்று மனம் சொல்லியது. இங்கிருந்து அங்க போறதுக்குள்ள யாராவது பின் சீட் வழியா ஏறி அங்க உக்காந்துட்டாங்கன்னா? எதுக்கு வம்பு இந்த சீட்டும் போயிடப்போகுதுன்னு – சட்டென்று உட்கார்ந்து கொண்டேன். உட்கார்ந்தப்பின் அந்த சீட்டைத் திரும்பிப்பார்த்தேன். இன்னும் காலியாகத்தான் இருந்தது. ம்ச்சு..அங்கேயே போயிருக்கலாமோ? ஜன்னலோர சீட். தனியாக உட்காரலாம். பஸ்ஸில் எல்லோரும் தனியாகவே உட்கார விரும்புகிறார்கள் என்று யாரோ சொன்னதாக நினைவு. கி.ரா? ஜெமோ? சுந்தரராமசாமி? கி.ரா. தான்னு நினைக்கிறேன். என் பக்கத்தில் ஒருவர் முன் சீட்டின் கம்பியில் கையை வைத்து தலையை கைமேல் வைத்து சொர்க்கலோகத்தில் இருந்தார். குடுத்துவைத்தவர்கள். பஸ்ஸில ஏறினவுடன் எப்படித்தான் தூக்கம் வருதோ? அதெல்லாம் வாங்கிவந்த வரம்டா என்று அண்ணன் சொல்லுவார். அது வரம் இல்லை. சாபம். பஸ்ஸில் நடக்கும் பல சுவராஸ்யங்களை நீங்கள் கண்டுகளிக்க முடியாது. எனக்கு பஸ் பிரயாணம் சுவாரஸ்யம். நீண்டதூர பிரயாணத்தைவிட டவுன் பஸ் பிரயாணம் இன்னும் சுவாரஸ்யம். ஸ்டாப்புக்கு ஸ்டாப் மக்கள் ஏறுவார்கள் இறங்குவார்கள். அவர்கள் யார்? உருவத்தை வைத்து என்ன செய்கிறார்கள் என்று கணிக்க முயலுவேன். கூட்டம் குறைந்த பஸ்களில் அவர்கள் இடம் தேடி உட்காருவதைப் பார்ப்பதே வேடிக்கையாக இருக்கும். காலியான இருக்கைகளில் எப்படி இருக்கையைத் தேர்வு செய்கிறார்கள். நிறைய காலி இருக்கைகள் இருக்கும் பொழுது வெகு சிலரே சட்டென்று முடிவெடுக்கின்றனர். பலர் படியில் ஏறியவுடனே எங்கு உட்காருவது என்று யோசிக்கத்தொடங்கி விடுவார்கள். அவர்களது கண்களில் அதைப் பார்க்கமுடியும். யார் பக்கத்தில் உட்காரப்போகிறோம் என்பதே முக்கியமான ஒன்று. நான் என் பக்கத்தில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன். முகத்தைப் பார்க்க முடியவில்லை. பஸ்ஸின் ஆட்டத்துக்கு ஏற்ப அவர் உடலும் ஆடிக்கொண்டிருந்தது. இந்தப்பக்க சீட்டில் ஒரு வயதான அம்மா உட்கார்ந்திருந்தார். கையில் ஏதோ புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தார். என்ன புத்தகம் என்று பார்க்க முயற்சித்தேன். ரமணிச்சந்திரனாக இருக்குமோ? பாலகுமாரன்? அவர் பக்கத்தில் ஒரு வயதானவர். ஜன்னலோரமாக தலைவைத்து வெளியே பார்த்துக்கொண்டுவந்தார். ஹஸ்பெண்டாக இருக்குமோ? நம்மூரில் தான புருஷன் பொண்ட்டாடியா இருந்தாலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில பக்கத்து பக்கத்து சீட்ல பஸ்ல உக்காந்து வருவோம். ஒரு மணி நேரமானாலும் பக்கத்தில உக்கார்ந்திருப்பவர் ஹஸ்பெண்டான்னு சமயத்தில உங்களால கண்டுபிடிக்கமுடியாது. அவருக்கு இறுமல் வந்து, இந்தம்மா சடசடன்னும் நாவல கீழவிட்டு பையில அவசர அவசரமா தேடி தண்ணிப்பாட்டில எடுக்கும் போதுதான் உங்களால கண்டுபிடிக்கமுடியும். இந்தாளுக்கு இறுமல் வர்றமாதிரியும் தெரியல. அதுக்கு முன்சீட்டில ஒரு பெண். தூங்கிக்கொண்டு வந்தது. எப்படி இவர்களால் தூங்கமுடியுது?
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்திப்பொழுதில் வந்துவிடு…
இளையராஜா காரணமாக இருப்பாரோ? இனி திருமங்கலம் வரைக்கும் வேறு நிறுத்தம் இல்லை. நாமும் தூங்கினால் என்ன? முன்சீட் கம்பியில் கையை வைத்து கையில் நெற்றியை வைத்து படுத்தேன். சும்மா உட்கார்ந்திருந்தப்பக்கூட பஸ் இவ்வளவு குலுங்கினதாகத் தெரியவில்லை.
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு…
*
எவ்வளவு முயன்றும் தூங்கமுடியவில்லை. ஏதோ நாற்றம் வேறு. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருப்பவரை நினைத்து பொறாமையாக இருக்கிறது. கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன். எண்ணத்தில் போதைவர எங்கெங்கோ நீந்துகின்றேன். என்ன நாற்றம் இது? சாராயநெடியா? பக்கத்திலிருப்பவர் குடித்திருப்பாரோ? நிமிர்ந்து அவரைத் திரும்பிப்பார்த்தேன். ஷிட். படக்கென்று தூக்கிப்போட்டது. பயம் என் உடலெங்கும் பரவியது. பக்கத்திலிருப்பவரின் தலை என்னைப்பார்த்துத் திரும்பியிருந்தது. கண்கள் நிலைகுத்தியிருந்தன. வாட் த ****. சடாரென்று எழுந்து நின்றேன். என் கைகள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. கால்கள் பலவீனமானது போல் இருந்தன. அடுத்த சீட் அம்மாவும் தடாரென்று எழுந்துவிட்டார். அடுத்த அடுத்த சீட்களில் முழித்திருந்த ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து நின்றனர். கண்டக்டர் எல்லோரையும் விலக்கிக்கொண்டு வந்தார். வந்தவர் அப்படியே நின்றுவிட்டார். என்னைப் பார்த்தார். அவர் முகம் முழுவதும் பயம் அப்பியிருந்தது. எனக்கு இன்னும் உதறல் நின்றபாடில்லை. வேகமாக பஸ்ஸின் முற்பகுதிக்குச் சென்றார். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாரு நின்றிருந்தனர். அந்த அம்மாவிற்கு பக்கத்திலிருந்தவரும் இப்பொழுது எழுந்து நின்று விட்டார். பஸ் சடாரென்று வேகம் குறைந்தது. பின் ரோட்டின் ஓரத்தில் ஒதுங்கியது. பின் நின்றது . ஆங்காங்கே பேச்சு சத்தம் கேட்டது. ஒரு குழந்தை மிகுந்த சத்தமெடுத்து அழ ஆரம்பித்தது. எல்லோரும் என்னைப் பார்ப்பது போன்றிருந்தது. ஆனால் யாரும் என்னைப் பார்க்கவில்லை. டிரைவர் வந்தார். பின்னாலேயே கண்டக்டரும் வந்தார். எங்க ஏறினாப்ல? ஶ்ரீவில்லிபுத்தூர் பஸ்டாண்டில ஏறி உக்காந்திருந்தாப்ல. கம்பில தல வெச்சு தூங்கிட்டிருந்தாரு. எழுப்பி டிக்கெட் குடுத்தேன். எங்க போறாப்ல? மதுரை. டிரைவர் ஏதும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். மூச்சிருக்கான்னு பாருங்கப்பான்னு ஒருவர் சொன்னார். கூட்டம் மொத்தமும் அவரைப் பார்த்தது. இல்ல ஒருவேளை மூச்சு இருந்துச்சுன்னா? எல்லோரும் என்னைப் பார்த்தனர். எனக்கு இன்னும் உதறல் நின்றபாடில்லை. மேலும் உதறல் அதிகரித்தது. நான் ஒரு மிமீ கூட அசையவில்லை. டிரைவர் முன் நகர்ந்து மூக்கினருகில் கை வைத்துப் பார்த்தார். பிறகு ஒன்றும் சொல்லாமல் அந்த நபரின் முகத்தினருகே தன் முகத்தைக் கொண்டுபோய் ஏதோ முகர்ந்து பார்த்தார். ஏதோ மருந்து குடிச்சிருக்கார். டிக்கெட் கொடுக்கும்போதே ஒருமாதிரி கண்ணெல்லாம் சிவந்திருந்தது. குடிச்சிருக்காருன்னு நினைச்சுட்டேன். டிரைவர் ஒன்றும் பேசவில்லை. கழுத்தில் கிடந்த கர்சீப்பை எடுத்து முகத்தை நன்றாகத் துடைத்துக்கொண்டார். பிறகு மணி பார்த்தார். திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் போகனும். கண்டக்டர் சரிதான் என்பது போல தலையாட்டினார். அப்புறம் டிரைவர் உரத்த குரலில் எல்லோரும் கேட்கும்படி சொன்னார்: திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிட்டு அப்புறம் தான் யாரும் எங்கயும் போகமுடியும். அங்காங்கே பேச்சுசத்தம் கேட்டது. பள்ளிக்கூடம் போற பிள்ளைக இருக்கு. அங்கு ஒரு பெண் பச்சைகலர் ஸ்கூள் யூனிபார்ம் அணிந்து நின்றுகொண்டிருந்தது. பொங்கல் அன்னைக்கு என்னய்யா ஸ்கூளு? அதான? யாரும் ஏதும் பேசவில்லை. கண்டக்டரும் டிரைவரும் பஸ்ஸின் முற்பகுதிக்கு சென்றனர். கண்டக்டர் அந்தப் பெண்ணிடம் சென்று ஏதோ சொன்னார்.
கொஞ்ச நேரத்தில் பஸ் புறப்பட்டது. பேச்சுசத்தம் அதிகரித்தது. எல்லோரும் அவரவர் இருக்கையில் உட்கார்ந்து விட்டனர். சிலர் இன்னும் எட்டிப்பார்த்தபடி இருந்தனர். தம்பி பின்னாடி இடமிருக்கு போய் உக்காருப்பா என்று ஒருவர் சொன்னார். அந்த அம்மாவையும் அந்த அய்யாவையும் காணவில்லை. தேடுவது சிரமமாக இருந்தது. பஸ்ஸின் பின் சீட்டுக்கு மெதுவாகப் போனேன். பின் சீட்டுக்கு முன் இருக்கையில் அந்த அம்மாவும் அய்யாவும் உட்கார்ந்திருந்தனர். அந்த அம்மா தண்ணிப்பாட்டிலை மூடிக்கொண்டிருந்தார். தண்ணி வேணுமாப்பான்னு என்னைப் பார்த்துக்கேட்டார். வேண்டாம் என்று தலையாட்டினேன். நான் உட்கார்ந்தவுடன் அந்த ஐயா என்னைத்திரும்பிப்பார்த்தார்.
*
போலீஸ் ஸ்டேஷனில் அதிகமாக யாரையும் விசாரிக்கவில்லை. பாடியை மட்டும் இறக்கிவைத்துக்கொண்டனர். ஒரு மூலையில் கரும்பிளாஷ்டிக் பேப்பரால் மூடப்பட்டிருந்தது. அனாதையாய். பஸ் புறப்பட்டது. யாரிவர் என்று இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவராக இருப்பாரோ? இல்ல மதுரக்காரரா? புஸ் புறப்பட்டது. ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். அதிசயமாக ஜன்னல் சீட்டும் அதற்கு அடுத்த இடமும் காலியாக இருந்தது. வேகமாக ஓடிச்சென்று அமர்ந்து கொண்டேன். எல்லோரும் என்னையே பார்த்துகொண்டிருந்தது போல இருந்தது. இது அவர் உட்கார்ந்த இடம். எனக்குத் தெரியும். பரவாயில்லை. எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. எப்பொழுதுமா இந்த இடம் காலியாக இருக்கப்போகிறது. நாளைக்கு யாராவது உட்காருவார்கள் தானே?
*
படக்கென்று முழித்தேன். தூங்கிவிட்டேனா? இன்னும் மதுரை வரவில்லை. சட்டென்று யோசனை தோன்றியது. சீட்டின் இடுக்கில் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று பார்த்தேன். ம்ஹூம். ஏதேனும் துப்பு வைத்திருப்பாரா? ஒருவேளை.. மெதுவாக கீழே உட்கார்ந்து சீட்டின் அடியில் பார்த்தேன். இருட்டாக இருந்தது. எழுந்து ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து லைட்டரை எடுத்து ஆன் செய்தேன். மீண்டும் கீழே சென்றேன். கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. தெளிவாக ஏதும் தெரியவில்லை. கையை வைத்து தடவிப்பார்த்தேன். ஏதும் தட்டுப்படவில்லை. அடுத்த சீட்டின் அடியிலும் பார்த்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். ஏனோ டிரைவர் பாடல் ஏதும் போடவில்லை. பஸ்ஸே கப்சிப்பென்றிருந்தது. வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன். என்ன இருக்கிறது பார்க்க? ஒருவேளை விவசாயியாக இருப்பாரோ? கடன் தொல்லை? லவ் பெயிலியர்? ஆளப்பாத்தா லவ் பண்ற ஆள் மாதிரி தெரியலையே. சட்டென்று திரும்பி சீட்டின் மேற்பகுதியும் உட்காரும் பகுதியும் இணையும் இடத்தில் விரல்களை நுழைத்துப் பார்த்தேன். ம்ஹூம். அடுத்த சீட்டிலும் அப்படியே செய்தேன். ம்ஹு.. ஷிட்..எதோ பேப்பர் போல் இருக்கிறது…மிகச்சிறியதாக மடிக்கப்பட்ட காகிதம்…பிரித்தேன்… தன்ராஜ் கெமிக்கல்ஸ்.. தேனி…பாரிரத்னா.. கர்டாப் ஹைட்ரோ க்ளோரைட் 4G.. விலை: எழுபத்தி ஏழு ரூபாய்.
***
டேய் மாமு.. இங்க என்னடா பண்ற? எறங்கல? ஷிட்.. முத்து. என் நண்பன். என் வீட்டிற்குப் பக்கத்தில் தான் இருக்கிறான். டபுள் விசில். பஸ் புறப்பட்டது. திருப்பறங்குன்றம். நான் இறங்கியிருந்திருக்க வேண்டும். இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்ததில் இறங்காமல் விட்டுவிட்டேன். மதுரைக்குப் போறேன்டா. எதுக்கு? டீசன்ஸிங்கறது கொஞ்சம் கூட கெடயாத பசங்க. எதுக்குவேணா போவேன்.. உங்கிட்ட சொல்லனுமா – மனசில நெனச்சுக்கிட்டேன். நீ எங்க போற? பொங்கல் நல்வாழ்த்துக்கள்டா. ம்ம். பொங்கல் சாப்டியா? இன்னும் இல்லடா. ஆமா எங்கிருந்து வர்ற? ஊருக்குப் போயிருந்தேன். எதுக்கு? ம்ம்ச்சு… காப்பு கட்றதுக்குடா.. என்ன கட்றதுக்கு? காப்பு. ம்ம்.. மதுரைக்கு எதுக்குடா போற? தேவர் மகனுக்கா? முறைத்துப்பார்த்தேன். பாண்டியனுக்கா? ஏண்டா முறைக்கிற? இல்லன்னா இல்லன்னு சொல்லு. நீ எங்கடா போற? நானா? போடிக்குப் போறேன். போடியா? எதுக்கு? பத்திரிக்கை வெக்கிறதுக்குடா.. நேத்துத்தாணடா உங்கிட்ட சொன்னேன்.. அண்ணன் கல்யாணத்துக்கு.. நீதான் வரமாட்டேன்னுட்ட.. வர்றியா? ஆமா நீ எதுக்குடா மதுரைக்குப் போற? ஷீபாவப் பாக்கறதுக்கா? எஸ் எஸ் ஐயும் இன்னிக்கு இருக்காதே.. மறுபடியும் முறைத்தேன்.. கோமதியப் பாக்கப்போறேண்டா.. சும்மா அடித்துவிட்டேன்.. அவன என்னத்துக்கு இந்நேரத்தில பாக்கப்போற? எல் ஐ சி லேப் ரெக்கார்ட் வாங்கணும்.. லீவுல எழுதி முடிச்சிடலாம்னு நினைக்கிறேன்.. (முத்து முகத்தில் அதிர்ச்சி) டேய் எப்பலேர்ந்துடா இவ்ளோ நல்லவனா ஆன? ரெக்கார்ட் நோட்டெல்லாம் லீவுல எழுதனும்னு சொல்ற?… ஆமா நீ எங்க போற? டேய் எத்தினி வாட்டிடா கேப்ப? போடி. என்னாச்சு உனக்கு? ரெக்கார்ட் நோட் வாங்கப்போறாப்பல தெரியலையே.. சரி ரெக்கார்ட் நோட் அப்புறம் வாங்கிக்கிலாம்.. போடி எங்கூட வர்றியா? தேனிலருந்து போடிக்கு எவ்வளவு தூரம்? ம்ம்.. 200 கிமீ.. பக்கத்திலதாண்டா.. எதுக்கு கேக்கற? .. தேனிக்குப் போகணுமா? .. நானும் தேனிக்குப் போகணும்.. அங்கொரு ரெண்டு மூணு வீடு இருக்கு.. என்னது தேனில ரெண்டு மூணு வீடுதான் இருக்கா? ஹ்ம்.. மெதுவாக திரும்பிப்பார்த்தான்.. இந்த மொக்க காமெடில்லாம் ஷீபாகிட்ட சொல்லு.. மொக்க பீஸு.. விழுந்து விழுந்து சிரிக்கும்.. ஆமா நீ எதுக்கு தேனிய நோண்டற?
***
இது ஆகராப்ல தெரியல. இவரு பெரிய துப்பறியும் சாம்பு. இதவெச்சுக்கிட்டு தேனில எங்க போய்டா தேடுவ?… டீ கிளாஸ மொத ஆட்றத நிறுத்து. நீ ஆட்ற ஆட்டுல உங்கிளாஸ்லருந்து டீ எங்கிளாஸுக்கு வந்திரும்போல…
இல்ல அந்தக்கடையில் போயி விசாரிச்சா.. என்ன டக்குன்னு கடைக்காரர்: தம்பி அவரா..நேர போயி லெப்ட்ல கட் பண்ணுங்க.. செகப்பா இருக்கும் ஒரு வீடு.. அதுதான் அவரு வீடு.. தம்பி கொஞ்சம் நில்லுங்க..அவரு பேரு கூட ஏதோ பழனிச்சாமின்னு நினைக்கிறேன்.. அப்படீன்னு சொல்லுவாருன்னு நெனச்சியா..லூசாடா நீ.. ஒரு நாளைக்கு எத்தனை பேர் அவர் கடைக்கு வர்றாங்களோ…டேய்.. இப்போ ஆட்றத நிறுத்தப்போறியா இல்லியா.. நாவேற வெள்ளச்சட்ட போட்றுக்கேன்.. டேய் நிறுத்துடா.. ஒரு வேளை நீ சொல்ற மாதிரி அவர் சொன்னார்னா.. என்ன மணிரத்னம் படத்தில வர்ற மாதிரி சுருக்கமா டயலாக் பேசிட்டு நிமிராம குணிஞ்சே நின்னேன்னா.. பேக்ரௌண்ட்ல இளையராஜா மியூசிக் போடுவார்ன்னு பாத்தியா.. நெஜ உலகத்துக்கு வாடா.. பஸ் கெளம்பப்போகுது வா..
***
தன்ராஜ் கெமிகல்ஸ்
தம்பி ஓனர் இல்லியா..
என்னப்பாத்தா ஓனர் மாதிரி தெரியலையா..
தமாஷ் பண்ணாதீங்க தம்பி.. ஓனர கூப்பிடுங்க..
யோவ்.. நாந்தான்யா ஓனர்.. என்ன வேணும் சொல்லுய்யா..
கொஞ்சம் தயங்கி.. நான் அந்த பில்லை எடுத்து நீட்டினேன்..
ஆமா.. இங்க தான் வாங்கினது.. என்னப்போ..
ம்ம்..அது…இத யாரு வாங்கினாங்கன்னு..தெரியுமா?
ஏன் கேக்கறீங்க?
சும்மா தான்..
டேய்… போய் சுசீந்திரன் கடையில் இத குடுத்துட்டு வா..ஓடு..ஓடு..
பையன் இறங்கிப்போனான்..
சொல்லுங்க என்ன வேணும்..
நான் அவரிடம் பில்லைக் காட்டினேன்..
என்ன வேணும்..
இத யார் வாங்கினான்னு தெரியுமா?
..
ஏன் என்னாச்சு?
அது..
சொல்லுங்க தம்பி.. என்னாச்சு?
அது வந்து.. அவரு இறந்துட்டாரு..
[நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்]
முத்து தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்த குஷ்புவின் போஸ்டரை வெச்சகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.. ஆனால் அவன் காதுகள் இங்கு தான் இருக்கின்றன என எனக்குத் தெரியும்..
[விடிந்துவிட்ட பொழுதில் கூட
வின்மீனைப் பார்க்கிறேன்]
ஒரு லாரி மிகுந்த சத்தத்துடன் கடந்து சென்றது.. கடுமையான வெயில்..
பில் புக் ரெஜிஸ்டரை எடுத்து வந்தார்.. எதேதோ தேடினார்.. புரட்டிப் புரட்டிப் பார்த்தார்..
வாங்கின ஆள் எனக்கு ஞாபகம் இருக்கு.. ஆனா அவர் யாருன்னு எனக்குத் தெரியாது.. விவசாயம் பத்தி நல்லா தெரிஞ்சுவெச்சிருந்தார்.. ஊர் எங்கன்னு கேட்டப்போ போடின்னு சொன்னார்.. ஆனா நீங்க சொல்றதக்கேக்கறப்போ அது உண்மையான்னு தெரியல..
[இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்]
ஆமா..உங்களுக்கு எப்படி இது கெடச்சது?
பஸ்ல எனக்குப் பக்கத்து சீட்ல.. உக்காந்தபடியே இறந்து கிடந்தார்.. திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சிருக்காங்க.. இந்த பில் சீட்டு இடுக்கில் கிடைத்தது..
கஷ்டமா இருக்கு தம்பி.. ஆனா இதுக்கு மேல உங்களுக்கு நான் உதவி பண்ண முடியாது..
பில்..
நானே வெச்சுக்கிறேன் தம்பி.. போலீஸ் கேஸுன்னு பின்னாடி..
தலையாட்டிவிட்டு கீழிறங்கினேன்..
***
ஒரு வேளை அவரு போடியாத்தான் இருப்பாரோ?
எனக்கென்னமோ பொய்யாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்..
ஏன்..
கண்டிப்பா உண்மை சொல்லிருக்க மாட்டார்..
அதத்தாண்டா முன்னாடியும் சொன்ன.. ஏன்னு கேட்டேன்..
சரி..அப்படியே போடின்னாலும்.. போடில எங்க போய் தேடுவ..
அது இல்ல பிர்ச்சனை.. ப்ரச்சனை அவரு போடியா இல்லியாங்கறதுதான்..
சரி வா முதல்ல வந்த வேலையை முடிச்சிடலாம்.. ரெண்டே வீடு தான்.. டக்குன்னு வெச்சிட்டு வந்திடுவோம்..
***
நாலு புரோட்டா..ரெண்டு ப்லேட் பிரியாணி..
எண்பத்திரெண்டு ரூபாய்..
நூறு ரூபாய் கொடுத்தேன்..
[பத்து ரூபாயை மடிக்கும் போது.. ஓரத்தில் பச்சை இங்கில் ஏதோ கிறுக்கப்பட்டிருந்தது..]
டேய்.. ஒரு வேளை அவரு கொடுத்த ரூபா நோட்ல ஏதும் க்ளு வெச்சிருப்பாரோ..
என்னது.. [திடுக்கிட்டு முழித்தான் முத்து]
ரூபா நோட்ல க்ளூவா?
நான் வேகமாக இறங்கி நடக்க ஆரம்பித்தேன்..
பின்னாடியே ஒடி வந்தான் முத்து..
தன்ராஜ் கெமிகல்ஸ்
சார்..
என்ன தம்பி என்ன வேணும்..
அவரு ஒரு வேளை உங்களுக்கு கொடுத்த ரூபா நோட்டில எதுனாச்சும் எழுதியிருந்தா?
எவரு? நீங்க யாரு?
சார்..என்ன சார்.. இப்போ தான வந்தோம்.. அந்த பில்..
எந்த பில்? நீங்க யாரு? என்ன வேணும் உங்களுக்கு?
முத்து என் கையைப் பிடித்தான்..
அண்னே..எங்ககிட்டவா.. அந்த பில்லோட ஜெராக்ஸ் காப்பி வெச்சிருக்கோம்.. காட்டணுமா?
எங்க காட்டுங்க..
எதுக்கு காட்டணும்.. ஒன்னு நாங்க சொல்றத கேளுங்க.. இல்ல.. நேர திருமங்கலம்.. போலீஸ் ஸ்டேஷன் தான்..
தம்பி.. நானே கடன உடன வாங்கி இப்போத்தான் இந்த கடய ஆரம்பிச்சிருக்கேன்.. போலீஸ் அது இதுன்னு இழுத்துவிட்டிராதீங்க தம்பி.. வியாபாரம் நடக்குற நேரம்..
ஒரு ஆளையும் காணோம்.. என்ன வியாபாரம் நடக்குது? சரி விசயத்துக்கு வருவோம்.. நீ சொல்றா மாப்ள..
நேத்து தான வாங்கினதா சொன்னீங்க?
ஆமா..எவ்ளோ கொடுத்தார்?
நூறூ ரூபாய்..
எப்படிக்கொடுத்தார்? அம்பது ரூபாவா? பத்துரூபாவா?
ஒரே நோட்டு..
எப்படித்தெரியும்? எதுனாச்சும் சொல்லி எங்கள கழட்டிவிடப் பாக்கறீங்களா?
தம்பி..ஞாபகம் இருக்கு தம்பி… 35 வருஷமா வியாபாரத்தில இருக்கேன்.. கல்லால உக்காத்தீங்கன்னா கொஞ்ச நாள்லயே பழகிரும்..முகமும் அவங்க கொடுத்த நோட்டும்..செருப்புத்தைக்கிறங்க செருப்பையும் காலையும் ஞாபகம் வெச்சிருக்கிற மாதிரி..
நல்லாத்தான் பேசறீங்க.. உங்க கல்லாவ திறந்து உள்ள இருக்கிற எல்லா நூறு ரூபா நோட்டையும் எடுங்க..
ஏதோ புலம்பிக்கொண்டே சென்றார்..
கையில் கொத்தாக நோட்டுகளுடன் வந்தார்..
ஒத்துக்கறேன்.. உங்க கடையில் வியாபாரம் நடக்குதுன்னு..
நான் நோட்டுகள் ஒன்றாக பார்த்தேன்..ஏதேதோ கிறுக்கப்பட்டிருந்தன.. ஐந்து நோட்டுகள் தேறின.. முத்து ஐந்நூறு ரூபாயை நீட்டினான்..
எடுத்திட்டு வரும் போது ஏதும் கீழ விழுந்திருக்கானு பாத்திட்டு வந்திடுங்க..
அவர் முறைத்தவாரு சென்றார்..
பின் சிரித்தபடியே ஒரு நோட்டுடன் வந்தார்..
சொன்னேன்ல..
ஆனா சார் எங்ககிட்ட வேற காசில்லையே..
அவர் டக்கென்று நோட்டை மடித்தார்.. எவ்ளோ ஃபாஸ்டா புரிஞ்சுக்கிறாங்கப்பா..
டேய் மாப்ள போய் ஒரு நூறு ரூபா நோட்ட மட்டும் ஜெராக்ஸ் எடுத்திட்டு ஓடியா.. நான் இங்க இருக்கேன்..
தம்பி.. ஜெராக்ஸ் எடுக்கறதுலையே குறியா இருக்கீங்களே.. கடை ஏதும் வெச்சிருக்கீங்களா?
***
ஜெராக்ஸ் எடுக்கப்போகும் போது, இந்தாளோட கடப்பையன பாத்தேன்..
ஓ டுபாகூர் ஓனரா?
அவன் ஒரு விசயம் சொன்னான். இறந்து போன ஆள் ஒரு மஞ்சப்பையை விட்டிட்டுப் போயிருக்கார்..
ஷிட்.. கடக்காரர் நம்ம கிட்ட மறச்சிட்டாரு பாரு.. ஆமா அந்தப் பையனுக்கு எப்படி அவரு தான்னு தெரியும்..
அந்த ஆள் பின்னாடியே அத கொடுக்க ஓடிருக்கான்.. ஒரு தெரு தள்ளி.. அந்த ஆளக் காணோமாம்..
என்ன மாயமாயிட்டாரா?
கொஞ்சநேரம் தேடிட்டு.. கண்டுபிடிக்க முடியாம கடைக்கு வந்திட்டானாம்..
என்ன இருந்துச்சாம் பையில?
ஒரு அன்-ரூல்ட் ஏ4 ஷீட்.. ஒரு பேனா.. அவ்வளவு தான்..
பத்தி எழுத்தாளரா இருந்திருப்பாரோ?
இன்னொரு விஷயமும் சொன்னான்.. அந்த மஞ்சப்பையில மல்லிகை ஜுவல்லர்ஸ் திருப்பரங்குன்றம்னு போட்டிருந்துச்சாம்.. அதனால அவரு திருப்பரங்குன்றத்து ஆள் தான்னு நெனச்சிட்டிருந்திருக்காங்க..
பாரேன் இத்தனைய மறச்சிருக்காரு அந்தாளு.. வா போய் அந்த பைய வாங்கிக் பாத்திட்டுவோம்..
அந்தப்பையன் தயவு செஞ்சு கேக்காதீங்கன்னு கெஞ்சிக்கேட்டுக்கிட்டான்.. ஏன் சொன்னன்னு அந்த ஆள் அடிப்பாராம்..
பின்ன கொஞ்சுவாரா.. சரி விடு.. ஆனா செத்துப்போன ஆள் ரொம்பவும் கொழப்புறாரே.. ஶ்ரீவில்லிபுத்தூர்ல ஏறிருக்கார்.. மதுரைக்குப் போற பஸ்ஸில ஏறிருக்கார்.. தேனில வந்து மருந்து வாங்கிருக்கார்..போடின்னு சொல்லிருக்கார்..
எந்த ஊரு தான் அந்தாளு?
***
இல்ல சித்தி இருக்கட்டும்.. கெளம்புறோம்..இன்னொரு நாள் வர்றேன்..
போடிக்கு எத்தன வருஷம் கழிச்சு வந்திருக்க.. சாப்பிடாம அனுப்பிச்சேன்னு தெரிஞ்சது.. அக்கா கொன்றும்.. உக்காரு தோச ஊத்தித் தாரேன்.. தம்பி யாரு?
ஃப்ரண்டு சித்தி.. பேரு சுதாகர்..
உன் காலேஜ் தானா?
இல்ல.. அது ஒரு அல்லக்கை காலேஜ்..
ம்ம் என்ன?
இல்ல அப்படி ஒன்னும் பெரிய காலேஜ் இல்ல..
(டேய்.. நான் தியாகராஜா காலேஜ்.. நீ மெப்கோ.. எதுடா அல்லக்கை காலேஜ்?)
(மூடிட்டு உக்காருடா.. இது உன் சித்தி வீடா.. இல்ல என் சித்தி வீடா..)
அடடே.. முத்து.. வாப்பா.. இப்பத்தான் வழி தெரிஞ்சுதா? பத்திரிக்கை வெக்கவா? அப்பா அம்மா எல்லாம் நல்லாருக்காங்களல்ல?
நல்லாருக்காங்க சித்தப்பா..
உக்காருங்க உக்காருங்க..
ஏம்மா.. சுடுதண்ணி வெச்சாச்சா.. வெளில நின்றவாரே கேட்டார்..
ஒரு கேதம்.. பத்து நிமிஷத்தில் குளிச்சிட்டு வந்திடுறேன்.. நீங்க உக்காருங்க..
(மிக்ஸி அரைக்கும் சத்தம்)
***
என்னடா.. படிப்பெல்லாம் எப்படிப் போகுது? பாஸ் பண்ணிருவியா?
நான் தான் காலேஜ் ப்ர்ஸ்ட் சித்தி..
(நான் இறுமினேன்..)
(டேய்..ஓவர் ஆக்ட் உடம்புக்கு ஆகாது.. தண்ணியக்குடி தண்ணியக்குடி)
(தோசை சுடும் சத்தம்.. )
மணி இன்னும் ஸ்கூள் விட்டு வரல?
அவனுக்கு காய்ச்சள்.. ரெண்டு நாளா.. மேலே தூங்கிட்டிருக்கான்.. இப்போதான் தூங்கினான்..
சரி சித்தி.. கெளம்புறதுக்குள்ள முழிச்சா பாத்துட்டுப்போறேன்.. அவனுக்கு கொஞ்சம் காமிக்ஸ் எடுத்திட்டு வந்தேன்.. டீவி மேல வெக்கறேன்.. ஒரு சின்ன வீடியோ கேமும் வெச்சிருக்கேன்..
ம்ம்.. சரிப்பா..
தட தடவென யாரொ மாடியிலிருந்து இறங்கிவரும் சத்தம்..
மணி.. உடம்பு முழுக்கவும் வேர்த்திருந்தது.. அம்மா..அம்மா என்று கத்தியவாரே எங்களைக் கடந்து கிச்சனுக்குள் சென்றான்.. எங்களைப் பார்த்த மாதிரியே தெரியவில்லை..
சித்தி ஓடி வந்து அவனைப் பிடித்துக்கொண்டார்.. ஆறாவது படிக்கிற பையன்.. காய்ச்சல் தான? ஏன் இப்படி பயப்படுறான்..
சோபாவில் அவனைப் படுக்கவைத்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.. தலையை தடவிவிட்டுக்கொண்டேயிருந்தார்..
என்ன சித்தி ரொம்ப காய்ச்சலா?
ஷ்ஷ் என்பது போல சைகை காட்டினார்..
முத்து தலையாட்டினான்.
என்னைப்பார்த்து ஃபேனைக் குறைத்துவைக்குமாரு சொன்னார்..
நான் எழுந்து குறைத்துவைத்துவிட்டு வந்தேன்..
வீடு அமைதியாக இருந்தது.. மின் விசிறியின் சத்தம் மட்டும்..
கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டான்..
மெதுவாக எழுந்து.. கிச்சனுக்கு வா என்றார்..
***
நானும் முத்துவும் டைனிங் டேபிளில் உட்கார்ந்தோம்..
மேலே மணி பெரிதாக சிரித்துக்கொண்டிருந்தான்..
நாங்களே இன்னிக்கு திருப்பரங்குன்றம் வரலாம்னு நெனச்சிருந்தோம்..
ஏன்? என்னாச்சு சித்தி?
மணிக்காகத்தான்.. மணியும் நானும் கொஞ்சநாள் உங்க வீட்ல இருக்கலாம்னு ப்ளான்..
தாராளமா சித்தி..ஏதும் பிரச்சனையா?
பிரச்சனை ஒன்னும் இல்ல.. அவனோட டீச்சர் ஒன்னு.. இவன் கிட்ட ரொம்ப பாசமா இருக்கும்.. நமக்கும் தெரிஞ்ச பொண்ணுதான்.. மண்ணெண்ணய குடிச்சு செத்துபோச்சு..நேத்துதான்.. காலைல..
அதுலருந்து இவனுக்கு காய்ச்சல்.. ஒழுங்கா தூங்கமாட்டேங்கிறான்.. தூக்கத்தில பயந்து பயந்து கத்தறான்..
சரி சித்தி.. எங்ககூடவே வந்திடுங்க..
சித்தப்பா கார்ல விடுறேன்னு சொல்லிருக்கார்.. சேர்ந்தே போயிடலாம்..
***
வாஷ்பேசினில்..
என்னடா எங்க பாத்தாலும் சூசைடா இருக்கு..
ஸ்டூடண்ட்ஸ் தானடா மார்க் பத்தலைன்னு ஸூசைட் பண்ணிக்குவாங்க.. இங்க டீச்சர் எதுக்குடா சூசைட் பண்ணிக்குச்சு?
இதுக்கும் அந்தாளுக்கும் சம்பந்தம் இருக்குமோ?
லவ் பெயிலியரா இருக்குமோ?
கேளேண்டா உன் சித்தப்பாட்ட..
கேக்கறேன்.. பொறு..
என்னடா அவங்களோடவா போற..
ஆமா.. நீ வரலயா?
நாம போடில கொஞ்சம் தேடலாம்னு பாத்தேன்..
இவனொருத்தன்.. காலைலருந்தே ஒன்னும் சரியில்ல.. அவன் மருந்த குடிச்சிட்டான்.. இவ மண்ணென்ணய குடிச்சிட்டான்னு.. போகணும் நெனக்கறவங்க போயிட்டுப்போறாங்க.. இதுல நீ என்ன துப்பு துலக்கற?
அப்ப அவர் யாருன்னு?
ம்ம்..போலீஸ் பாத்துக்கும்… எப்படியும் ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சிடும்.. இவருக்குத் தெரிஞ்சவங்க யாராவது ஆளக்காணோம்னு தகவல் கொடுத்திருப்பாங்க..
ம்ம்..
ரெண்டு நாள் கழிச்சு திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரிச்சேன்னா உண்மையென்னன்னு தெரிஞ்சுக்கலாம்..
எதுக்கு என்னய டவுசர கழட்டி ஒக்கார வெக்கறதுக்கா?
பயமிருக்குல்ல.. அப்புறம் என்ன பெரிய ஜேம்ஸ்பாண்ட் மாதிரி ஆக்ட் கொடுக்கற?
இல்ல.. அவருக்கும் டீச்சருக்கும் சம்பந்தம் இருந்தா.. அவரோட பாடி திருமங்கலத்தில இருக்கிறது..
சம்பந்தம் இருந்தாத்தான?
இருந்துச்சுன்னா?
இவனொருத்தன்..
***
மாருதி 800. எல்லோருக்கும் இடம் தாராளமாய் இல்லை. சித்தப்பா ட்ரைவ் செய்து கொண்டிருந்தார். எல்லா ஜன்னல்களும் திறந்திருந்தன. என் ஜன்னலின் வழியே காற்று மிக வேகமாக வீசிக்கொண்டிருந்தது. ஜன்னலை மூடி விடலாமா என்று யோசித்தேன்.
உலகம் எனக்கென்றும் விளங்காதது..
உறவே எனக்கின்று விளங்கானது..
அடடா முந்தானை சிறையானது..
இதுவே என் வாழ்வில் முறையானது..
பாறை ஒன்றின் மேலே
ஒரு பூவாய் முளைத்தாயே..
சித்தப்பா டேப்பை ஆஃப் செய்தார். சட்டென்று அமைதி. தூங்கிட்டானா? ம்ம் வண்டியை டீக்கடையோரம் நிறுத்தினார். முத்து உங்களுக்கு என்ன வேணா வாங்கிக்கங்க, எனக்கு ஒரு டீ, சித்திக்கு ஒரு பால். அந்தக் குளிரில் டீ தேவாமிர்தமாக இருந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் சில வண்டிகளைத்தவிர வேறு சத்தம் இல்லை. அமைதி. டீச்சருக்கு என்னாச்சு சித்தப்பா? ம்ம்ம்… இல்ல ஏன் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்கன்னு கேட்டேன்.. டேய் சின்னப்பையன் மாதிரி சும்மாருக்கமாட்ட? யாரு இவிங்களா சின்னப்பசங்க? சித்தப்பா ஒன்றும் பேசாமல் இரண்டு முறை டீயை உறிஞ்சினார். முத்து ஒரு கோல்ட் ப்ளேக்ஸ் வாங்கிட்டுவா. சித்தியைப் பார்த்து இன்னைக்கு ஒருநாள் மட்டும் என்று கெஞ்சினார்.
இழுத்து ரசித்து முதல் புகையை வெளியேவிட்டார். காருக்குள் இருந்த புகையை தட்டி வெளியே அனுப்பிட முயற்சிசெய்தார். வாழ்க்கை எப்படி ஒரு செகண்ட்ல தடம் மாறுதுங்கறதுக்கு டீச்சர் தான் உதாரணம். நமக்கு கெடச்சிருக்கிற வாழ்க்கை இப்படியே எப்பவுமே இருக்கும்னு நாம நினைக்கிறோம். அதனால தான் அத முழுசா அனுபவிக்கிறதில்ல. பிள்ளைங்களோட விளையாடறதில்ல. அப்பா அம்மா கூட உக்காந்து சிரிச்சு பேசறதில்ல. பொண்டாட்டி புருஷன்கிட்டயோ புருஷன் பொண்டாட்டி கிட்டயோ அன்பை காட்டிக்கிறதில்ல. ஒரு குழம்பு நல்லாருந்துச்சுன்னாக்கூட நல்லாருக்குமான்னு ஒரு வார்த்த சொல்லிக்கிறதில்ல. டீச்சர் எனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான். எனக்கு ஒருவகையில முறை கூட. ஆன வயசில ரொம்ப சின்னப்பொண்ணு. டீச்சர் ட்ரெயினிங் இப்போத்தான் முடிச்சது. கோல்ட் மெடலிஸ்ட். கெட்டினா மாமனத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நின்னு கட்டுச்சு. மாமன்ங்கறது டீச்சரோட அம்மாவோட தம்பி. அவன் ரொம்ப படிக்காதவன். ஏதோ வேலைக்குப் போயிட்டிருந்தான். டீச்சரோட அம்மாவுக்கு இந்தக்கல்யாணத்துல இஷ்டம் இல்ல. ஆனா மகளோட ஆசைக்கு குறுக்க நிக்க முடியல. வாழ்க்கை கொஞ்சகாலத்துக்கு சந்தோஷமா போயிட்டிருந்தது. அவங்க ரெண்டு பேருக்கும் இடையே சண்டை ஆரம்பிச்சுது. இவன் ஒழுங்கான வேலைக்கும் போறதில்ல. தினமும் சண்டை. அப்போ அவன் எங்கிட்டத்தான் கணக்கெழுதிட்டிருந்தான். சரி சண்டையில்லாம புருஷன் பொண்டாட்டி இருக்க முடியுமா என்ன? ஆனா அவங்க சண்டைக்கு காரணம் அவனுக்கு வேலை இல்லாதது மட்டும் இல்ல.
***
போடி.
ரெண்டு நாளைக்கு முன்.
மணி 8:10 காலை. டீச்சர் வீடு.
அம்மா டிஃபன் பாக்ஸ் வெச்சியா இல்லியா?
வெச்சிட்டேண்டி.
என்ன வெச்சிருக்க?
பொங்கல்..
மாமா எங்க?
எனக்கென்ன தெரியும்? எங்க போனானோ வெட்டிப்பய..
கொஞ்சம் வாய மூடறியா?
என்னாச்சுடி நேத்து? என்ன சொன்னா டாக்டரம்மா?
ஒன்னுமில்ல..
ஒன்னுமில்லன்னா? என்னடி சொன்னா?
ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல.. விடேன்..
உம்பேச்சத்தானடி கேக்கேறேன் ஒரு வருஷமா..
..
ஏண்டி அழற?
..
நீ வேற கம்முன்னு இரும்மா… தூண்டிவிடாத..
(டைனிங் டேபிளில் கைவைத்து முகம் புதைத்துக்கொள்கிறாள். தோள்கள் குலுங்குகின்றன)
அம்மா தலையைத் தடவிவிட்டுக்கொண்டே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்..
சட்டென்று எழுந்து.. விசுக்கென்று வெளியேறினாள்.. கைப்பையை தூக்கிக்கொண்டி..
வசந்தி…என்னடி சொல்லாமக்கொல்லாம போறவ.. போயிட்டுவாறேன்னு சொல்லிட்டுப்போடி..
வசந்தி ஏதும் சொல்லவில்லை. அவள் நடந்து தெருமுனையைக் கடக்கும் வரையிலும் பார்த்துக்கொண்டேயிருந்தார்.
***
மணி 11 காலை. ஹச்.கே.எம் ஹைஸ்கூள். போடி.
8 ஆம் வகுப்பு ஆ பிரிவு.
ம்ம்.. போதும் உக்கார். அடுத்து வாசி.
பாக்டீரியா ஒரு செல்லால் ஆன ஒரு நுண்ணுயிர் ஆகும். அவை நுண்ணுயிர் தொகுதியைச் சார்ந்தது.
வசந்தி எழுந்து வேகமாக பின் பெஞ்சுக்குச் செல்கிறார்..
கணேஷ் எந்திரி..
(கணேஷ் மெதுவாக எழுந்திருக்கிறான்)
என்ன எழுதற?
அது வந்து டீச்சர்.. டீச்சர்..
எத்தனவாட்டி சொல்றது.. என் க்ளாஸ்ல மத்த க்ளாஸ் வீட்டுப்பாடம் எழுதாத எழுதாதன்னு..
….
அறிவில்ல.. மண்டையில என்ன களிமண்ணா இருக்கு?
டீச்சர்..
என்னடா முறைக்கிற?
உக்காரு.. இன்னொருதடவ எழுதின.. நடக்கறதே வேற..
நீ எதுக்குடா நிப்பாட்டின.. வாசி..
பாக்ட்டீரியாவைக் குறித்த அறிவியல் பாக்டீரியாலஜி என்றழைக்கப்படுகிறது..
எதுக்குடா சிரிச்ச?
அவன் கணேஷைப் பார்க்கிறான்..
என்னடா பண்ணான்?
…
சொல்லுடா..
…
என்ன வக்கன காமிச்சானா?
..
திமிர் பிடிச்சது..
அடுத்தவன் வாசி…
பாக்டீரியாவை 1675ஆம் ஆண்டு டச்சு அறிவியல் அறிஞரான ஆண்டன் வான் லூவன்ஹூக் என்பவர் கூட்டு நுண்ணோக்கியின் மூலமாகக் கண்டறிந்தார்..
டேய் கணேஷ் நீ இன்னும் எழுதிட்டா இருக்க..
(டேபிளில் இருந்த ஸ்கேலை எடுக்கிறார்)
(ஓட்டமும் நடையுமாக கணேஷின் டெஸ்குக்குப் போகிறார்)
எழுந்திருடா.. (முகம் சிவக்கிறது)
என்னப்பாத்தா என்ன கேணடீச்சர் மாதிரி தெரியுதா..
(காலில் அடிக்கிறார்)
பாவம் பாவம்னு விட்டுக்கிட்டே போனா..
(சரமாரியாக காலில் அடி விழுகிறது)
ஐயோ டீச்சர்.. வேணாம் டீச்சர்..
(அடி நின்ற பாடில்லை..)
டீச்சர்.. டீச்சர்..
(முதுகில் விழுகிறது)
வக்கன காட்டுவியா?
(மேலும் முதுகில் விழுகிறது..)
(மேலும் முதுகில் விழுகிறது..)
நோட்ட எடுத்திட்டு வெளில போ..முட்டி போடு..இந்த பீரியட் முடியறவரைக்கும்..
(வேகமாக நடந்து சென்று.. ஸ்கேலை டேபிளில் தூக்கிப்போடுகிறார்..)
(டெஸ்கில் சாய்ந்து நின்று கொள்கிறார்..)
அடுத்து வாசி..
அதன் பிறகு லூயி பாஸ்டியர், ராபர்த் கோச்..
(கணேஷ் முதுகைத் தடவிக்கொண்டே அழுதுகொண்டே மெதுவாக வெளியே போகிறான்)
***
மதியம் 1:30 ஹச்.கே.எம் ஹைஸ்கூள்.
ஹெட்மாஸ்டர் ரூம்.
ஐயா..
எட்டாவது படிக்கிற கணேஷோட அப்பா வந்திருக்கிறார். உங்கள பாக்கணுமாம்..
எதுக்காம்..
தெரியல.. ஆனா கோபமா இருக்கிற மாதிரி இருக்கார்..
எனக்கு க்ளாஸ் இருக்கே.. கொஞ்ச நேரம் வெயிட் பண்னச்சொல்லு.. க்ளாஸ் முடிச்சிட்டு வந்திடறேன்.. நேத்தும் க்ளாஸுக்குப் போகல.. இல்லீன்னா நாளைக்கு வரச்சொல்லு..
சரிங்கையா..
***
மதியம் 4:30 ஹெச்.கே.எம் ஹைஸ்கூள்.
எட்டாம் வகுப்பு அ பிரிவு.
வசந்தி டீச்சர்.
ம்ம் அடுத்து வாசி.
புறச்சவ்வுடைய செல்லின் பகுதிப் பொருள்களான கோல்கை உறுப்புகள்..
ப்யூன் வேகமாக் உள்ளே வருகிறார்.
டீச்சர். உங்கள ஹெட்மாஸ்டர் கூப்பிடறார்.
க்ளாஸ்ல இருக்கேன் தெரியல? முடிச்சிட்டு வர்றேன்னு சொல்லு..
இல்ல டீச்சர். கையோட கூட்டிட்டுவரச்சொன்னார்.
எழுந்து தடாரெனு புத்தகத்தை டேபிள் மீது போடுகிறார்..
சடசடவென்று வெளியேறுகிறார்.
***
மதியம் 4:33 ஹெச்.கே.எம் ஹைஸ்கூள்.
ஹெட்மாஸ்டர் ரூம்.
கதவைத்திறந்த வசந்தி அதிர்ச்சி அடைந்தார். அங்கே ஹெட்மாஸ்டருடன் ஒரு லேடி காண்ஸ்டபிள் உட்கார்ந்திருந்தார்.
மேடம் கொஞ்சம் கனிவு காட்டலாமே..
என்ன சார் நீங்களே இப்படி சொல்லிக்கிட்டு.. இந்தம்மாதானா? போட்டு அந்த அடி அடிச்சிருக்கு.. முதுகெல்லாம் வாரு வாரா இருக்கு சார்.. பையனப்பெத்தவ அழுகிறா..
வசந்திக்கு கை நடுங்குகிறது. முகம் வெளுக்கிறது.
இருந்தாலும்.. பசங்கள அடிக்கிறது சகஜம்.. அதுக்காகவா போலீஸ் கம்ப்ளெய்ண்ட்.. பாவம் டீச்சர்..
என்ன சார் பாவம் கீவம்னு? யாரோ பெத்து வளத்து ஸ்கூளுக்கு படிக்க அனுப்பிச்சா.. இப்படி மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கச்சொல்லுச்சா?
வசந்திக்கு வேர்த்து ஊத்துகிறது..
காண்ஸ்டபிள் வசந்தியை மேலும் கீழுமாக பாத்துவிட்டு.. நட போகலாம்..
வசந்தி அழுகிறார். சார்.. சார்.. தெரியாமப் பண்ணிட்டேன் சார்.. மன்னிச்சு விட்றசொல்லுங்க சார்.. ப்ளீஸ் ஸார்..
உஷ் வாயமூடு.. கம்முன்னு வந்தீன்னா.. யாருக்கும் ஒன்னும் தெரியாது.. வெளங்கெல்லாம் மாட்ட வெச்சிடாத..
ஐயோ.. வேணாம் மேடம்.. வேணுமின்னே செய்யல மேடம்.. விட்ருங்க மேடம்..
இண்ஸ்பெக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. கூட்டிட்டு வரச்சொல்லிட்டார்.. வந்துரு.. ஒன்னும் ஆகாது.. சும்மாதான்.. இனிமே இப்படி செய்யமாட்டேன் சார்னு சொல்லிட்டேன்னா ஒன்னும் ஆகாது.. அழுது கத்தி நீயே எல்லோருக்கும் காட்டிக்கொடுத்திடாத..
(வசந்தியின் கையப் பிடித்தார் காண்ஸ்டபிள்)
சார். சார்…
மேடம் நானும் வரலாமில்ல..
ஓ எஸ்.. வாங்க..
(வசந்தியின் கண்களில் நீர் வழிந்தோடுகிறது)
***
போடி. காவல் நிலையம்.
மணி 4:47 மாலை.
இண்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளே நுழைகிறார்.
எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்.
வசந்தியின் அம்மா அழுதுகொண்டேயிருக்கிறார். வசந்தியின் கண்கள் அழுதழுது வீங்கியிருக்கின்றன.
ரூமுக்குள் செல்கிறார் இன்ஸ்பெக்டர்.
வசந்தி. ராஜா. கணேஷ். மட்டும் உள்ள போங்க. ஐயா கூப்பிடுறார்.
நானும் வர்றேன்..
உங்கள கூப்பிடல..
ஹலோ.. நான் தான் ஸ்கூளுக்கு ஹெட்மாஸ்டர்..
அது ஸ்கூள்ல.. இங்கில்ல.. கம்முன்னு உக்காருங்க..
வசந்தியின் அம்மா: ஐயா நான் போகலாங்களா? (அழுகிறார்..)
காது செவிடா கெழவி? என்ன சொன்னேன்? ம்ம்?
சின்னப்பொண்ணுய்யா.. தெரியாம செஞ்சிருச்சு..
வாயமூடிட்டு உக்காரு கெழவி…
*
உம்பேரென்ன?
வ்…வ்…வ…
என்ன வ்வ்வுன்னுட்டு நாய் மாதிரி? பேரென்னடி?
ஸ்..ஸ்..ஸ்…ஸார்..வ்வ்..வ்வ்..
என்னடி முனங்குற?
வ்..வ..ஸ்..ந்தி (தலையை கீழே போட்டு அழுகிறாள்)
அவன் எதுக்கு இப்படி போட்டு அடிச்சிருக்க?
….
நீயா பெத்த?
…
(டக்குன்னு எழுந்திருக்கிறார்)
(பக்கத்தில் வருகிறார்)
டீச்சர்ன்னா? என்ன வேணா செய்யலாமா?
(லேடி காண்ஸ்டபிளை கண் காட்டுகிறார்)
லேடி காண்ஸ்டபிள் வந்து.. வசந்தியின் முதுகில் ஓங்கி ஒரு அறை வைக்கிறார்..
(வசந்தி இதை எதிர்பார்க்கவில்லை.. அதிர்ச்சி தாளாமல்.. சட்டென்று கீழே முட்டி போட்டு உட்கார்ந்துவிடுகிறார்.. கேவி கேவி அழுகிறார்)
(பயத்தில் கால்கள் நடுங்கின…நிற்க முடியவில்ல)..
(லேடி காண்ஸ்டபிள் தூக்கி விடுகிறார்)
யோவ்.. நீ ஒரு ஆளுய்யா.. ஸ்கூள்ல ஏதோ டீச்சர் அடிச்சதுன்னா.. அதுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்க வந்திட்ட..
உன் மவன் என்ன பொறுக்கித்தனம் பண்ணினானோ..
(கணேஷ் விக்கித்து நின்று கொண்டிருந்தான்.. அவனுடைய கால்களும் நடுங்கின)
ஐயோ இல்ல சார்..
சரி போ.. இத்தோட விட்று..
சார்..
போன்னு சொல்றேனில்ல..
காண்ஸ்டபிள் டீச்சர கூட்டிட்டுப் போங்க..
வசந்தி நடக்க முடியாமல் நடந்து செல்கிறார்..
***
மணி அதிகாலை மூன்று.
வசந்தி மெதுவாக சமையலறையில் நுழைகிறாள்.
மண்ணெண்ணெய் கேனை எடுக்கிறாள்.
மூடியைத் திறந்து. மடக். மடக். மடக்கென்று குடிக்கிறாள்.
அப்படியே கீழே சரிகிறாள்.
அழுகை காட்டாறாக ஓடுகிறது.
அவள் கடைசியாகச் சொன்ன வார்த்தை. மாமா.
***
கார் அமைதியாக பயனிக்கிறது. காற்று இன்னும் அசுரத்தனமாக காருக்குள் வந்துகொண்டிருந்தது.
சித்தப்பா. கேசட் மாற்றினார்.
பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே
வென்னிலா வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே…..
சித்தப்பா?
ம்ம்..
வசந்தி டீச்சரோட வீட்டுக்காரர் இப்போ எங்கே?
காணோம். ரெண்டு நாளாச்சு.. இந்நேரம் எங்க செத்துக்கெடக்கானோ..
***
சிறுகதை மாதிரி தெரியலயே, நாவல் மாதிரியாட்டம் இருக்குதே.
LikeLike
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு சுவாரஷ்யமான கதை படிச்சேன்.. இது உண்மை கதையா என்னன்னு தெரியல.. சொன்ன விதம் நல்லா இருந்தது. நன்றி.
LikeLike
interesting story…. but quite lengthy…
LikeLike