அமேசான் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அலெக்சா – டிஜிட்டல் உதவியாளர் – பற்றிய விளம்பரம் அது. அலெக்சாவுக்கு குரல் போய்விட்டது. தற்காலிகமாகப் பேச முடியவில்லை என்பது போன்ற சித்தரிப்பு. நிறைய பிரபலங்கள் இந்த விளம்பரத்தில் நடித்திருந்தனர் – அமெசானின் சீ ஈ ஓ ஜெஃப் பெஸோஸ் உட்பட.
அந்த விளம்பரம் அலெக்சா என்ன பேச முடியும் என்பதைப் பற்றியதாக இருந்தாலும் – நிறைய டிஜிட்டல் உதவியாளர்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் நம் வீட்டிற்குள் வந்துவிட்ட இந்தக் கால கட்டத்தில், முக்கியமான கேள்வி, அலெக்சாவால் நாம் பேசுவதிலிருந்து என்னவெல்லாம் ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்பதே.
அமெசானும் கூகுளுமே இன்றைய நிலையில் இது போன்ற சாதனங்கள் விற்பனையில் முன்னோடியாக இருக்கின்றன. அவர்கள் சொல்வது என்னவென்றால்: நீங்கள் “ஹே அலெக்சா” என்றோ “ஓகே கூகுள்” என்றோ சொன்ன பிறகே, நீங்கள் பேசுவதைக் கேட்டுப் பதிந்து கொள்ள ஆரம்பிக்கும் என்று கூறுகின்றனர்.
ஆனால் இவர்கள் விண்ணப்பித்துள்ள – பெரும்பாலும் நிலுவையிலுள்ள – காப்புரிமைகள் (patent) இந்த மாதிரியான சாதனங்கள் நம் பேசும் பேச்சுக்களையும் செய்யும் செயல்களையும் கண்காணிக்கவும் கேட்கவும் முடியும் என்று அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவ்வாறு சேகரிக்கபடும் விசயங்களால், அந்த நபர்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் கண்டுபிடித்து, பிறகு அதை விளம்பரங்களுக்கும், அந்த நபர்கள் வாங்குவதற்கு பொருட்களைப் பரிந்துரை செய்யவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு காப்புரிமை விண்ணப்பத்தில் அமெசான், தனது குரல் தெரிவு அல்காரிதத்தை எப்படி டேப்லட், ஈ புக் ரீடர்ஸ் (கிண்டில்?) போன்றவற்றில் பயன்படுத்தி, அதை பயன்படுத்துபவர்கள் பேசுவதை லைவ்வாக கண்காணித்து, அவர்கள் love, bought, like போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் பொழுது பதிவு செய்யப்பட்ட பேச்சுகளை எப்படி ஆய்வு செய்து அந்த டேட்டாவைப் பயன்படுத்தும் என்று விவரித்திருக்கிறது. அந்த விண்ணப்பத்தோடு இணைக்கப்பட்ட ஒரு வரைபடத்தில் எப்படி இரு நண்பர்களுக்குள்ளான தொலைபேசி உரையாடலின் முடிவில் ஒருவர் சான் டியாகோ ஜூவுக்கு டிக்கெட்டுக்கான அஃபரையும் மற்றொருவர் மதாந்திர வைன் க்ளப் மெமர்ஷிப்பிற்கான விளம்பரத்தையும் காண்பார்கள் என்று விவரித்திருக்கிறது.
கூகுளின் (ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் தயாரிக்கும் நெஸ்ட் லேப்ஸின் உரிமையாளர்) சில காப்புரிமை விண்ணப்பங்களில் இவ்வாறு சொல்கிறது: ஒலிகளை மானிட்டர் செய்வதன் மூலம் ஒரு குழந்தையை அது செய்யும் சேட்டைகளைக் கண்கானிக்க முடியும் என்கிறது. பேச்சை வைத்து முதலில் குழந்தை இருக்கிறது என்று கண்டுபிடித்து பிறகு பேசுகிற தொனியை வைத்து எச்சரிக்கை கூட செய்யமுடியும் என்கிறது.
வேறு ஒரு விண்ணப்பத்தில் தனி நபர்களுக்கு தகுந்தார்போல தகவல்கள் தரும் நோக்கில் பேசுபவரின் மனநிலையை “அவருடைய பேச்சின் சத்தத்தை வைத்தும், அவர் சுவாசத்தை வைத்தும், அழுகையை, இன்னும் பிறவற்றை வைத்தும்” பேசுபவரின் உடல் நலத்தை “அவர் இறுமுகிறாரா தும்முகிறாரா போன்றவற்றை வைத்து” கண்டுபிடிக்க முடியும் என்கிறது.
அதே விண்ணப்பத்தில், ஒரு நபரின் வீட்டில் கீழே கிடக்கும் டீ சர்ட்டில் இருக்கும் வில் ஸ்மித்தின் படத்தை கண்டுகொண்டு அந்த நபர் வில் ஸ்மித்தை இணையத்தில் தேடிய வரலாறை வைத்து, “இந்தாப்பா தம்பி, உனக்கு வில் ஸ்மிதைப் பிடிக்கும் போலத் தெரியுது, உங்க பக்கத்து தேட்டர்ல புதுசா வில் ஸ்மித் படம் ஓடிட்டிருக்கு, ஓடிப் போய் பாரு” என்று சொல்ல முடியும் என்கிறார்கள்.
அமசானும் கூகுளும் எங்களுக்கு வாடிக்கையாளர்களின் ப்ரைவசி முக்கியம், அவர்களின் ப்ரைவசியே முக்கியம் என்று சொல்லி வருகின்றன.
ஆப்பில் தன் பங்குக்கு ஹோம் பாட் என்கிற வஸ்துவை அறிமுகம் செய்திருக்கிறது. ஃபேஸ்புக் இந்த மே மாதத்தில் இது போன்ற ஒரு வஸ்துவை அறிமுகம் செய்யலாம் என்று ப்ளூம்பர்க் சொல்லுகிறது.
கூகுளும் அமசானும் இந்த சாதனங்களைப் பயன் படுத்துவோரின் அனுமதியின்றி (அவர்கள் கூப்பிட்டோ அல்லது பட்டனை அமுக்கியோ) எதையும் பதிவு செய்ய மட்டோம் என்கிறது. மேலும் பதிவு செய்ததை இணையத்துக்கு அனுப்பும் பொழுது (streaming) லைட் எரிந்து கொண்டிருக்கும் அதனைப் பார்த்து நீங்கள் உஷாராகிக்கொள்ளலாம் என்கிறது. மேலும் இணையத்தில் இருக்கும் பதிவுசெய்யப்பட்ட குரல்களை நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் டெலீட் செய்யலாம் என்றும் கூறுகிறது.
அமசான் நாங்கள் ஒரு போதும் பதிவுப் செய்த பேச்சுகளை வேறு கம்பெனிகளுக்கு கொடுக்க மாட்டோம் என்கிறது. கூகுள் பொதுவாக உங்கள் பேச்சுகளை நாங்கள் வேறு கம்பெனிகளுக்கு கொடுக்க மாட்டோம் ஆனால் எழுத்து வடிவத்தில் கொடுப்போம் என்கிறது.
The Electronic Privacy Information Center, இணையத்தில் இணைந்திருக்கும் சாதனங்களுக்கு இன்னும் கடினமான விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்கிறது. தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன, சேகரிக்கப்பட்ட தகவல்களை எப்படி ஆய்வு செய்கின்றனர் என்பதையும் ஆய்வின் முடிவை எப்படி எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தெளிவாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறது.