நாச்சியார் – ஒரு நிமிட பார்வை

நாச்சியார்

பாலாவின் படம். அப்படியா என்ன? இந்தப் படத்தை யாருக்காக எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஜோவுக்காகவா, ஜீவிக்காகவா அல்லது நமக்காகவா? ஒரு சீன் கூட சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

பொருளாதாரத்தின் அடிதட்டில் தினக்கூலி வேலை செய்யும் ஒரு இளைஞன். அதே போன்றொதொரு நிலையில் ஒரு சிறிய பெண். மைனர் பெண். இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒரு எதிர்பாராத சந்திப்பில் அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வீட்டில் வைத்து இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அந்தப் பெண் கருவுருகிறாள். மைனர் பெண்ணைக் கெடுத்த குற்றத்திற்கு பையனை போலீஸ் கைது செய்கிறது. ஜோ கேஸுக்குள் எண்ட்ரி. டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்ததில் அந்தப் பையனுக்கும் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. பிறகு யார் காரணம்? அந்தப் பெண்ணிற்கும் அந்தப் பையனுக்கும் இந்த விஷயம் தெரிந்ததா? அந்தப் பையன் ஏற்றுக் கொண்டாரா? போன்ற அதிபயங்கர அதிநவீன முடிச்சுகளை பால அவிழ்த்தாரா?இல்லை ஜோ கண்டுபிடித்தாரா என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

கெட்ட வார்த்தை பேசும், யாரையும் மதிக்காத எல்லோரையும் தூக்கிப் போட்டு மிதிக்கும் போலீஸாக ஜோ. போலீஸே சட்டத்தை மதிக்கலேன்னா பொது ஜனம் எப்படி மதிக்கும்? மேகம் கருக்குது பாடல் ஒரு கணம் தோன்றி மறைந்தது. அந்த ஜோவா இது என எனக்கும் கேட்க ஆசை தான். ஆனால் அதே ஜோ தான். ஜீவி? அனுராக் காஷ்யப் கூப்பிட்டிருக்கிறாராமே? ஆனால் பரவாயில்லை கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்துபவர் அந்தச் சிறிய பெண் இவானா தான். துப்பறியும் கதையில் படம் பார்ப்பவர்களை குழப்புகிறேன் என்று அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டின் ஓனர் போலிஸையும் இழுத்து விட்டிருப்பது காமடி. ப்ரீ க்ளைமேக்ஸில் ஜோ வழங்கும் தண்டனை திகில் என்று சொல்ல ஆசைதான். க்ளைமேக்ஸ் அர்ஜுன் ரெட்டி க்ளைமேக்ஸை விட பெரிய காமெடி.

வேறு வேலை இல்லையெனில் இன்னும் பார்க்காதவர்கள் பார்க்கலாம்.

ஆமாம் படத்திற்கு ஏன் நாச்சியார் என்று பெயர்?

Leave a comment