நசீர் (குறுநாவல்) (மொத்தமும்)

முன்னுரை:
நான் சென்னையில் 2001 ஆம் ஆண்டு வேலை செய்யத் தொடங்கிய போது எழுதிய குறுநாவல் இது. என் அறை நண்பர்கள் இதை விரும்பிப் படிப்பார்கள். என் நண்பன் நவநீதகிருஷ்ணன் தான் எனது முதல் ரீடர். ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் வாங்கி படித்து விடுவான். நான் முழுவதுமாக எழுதி முடித்த ஒரே தொடர் கதை இது. இதை அப்படியே இங்கு கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்ய நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது மொத்தமாக கொடுக்கிறேன்.

1
மூனு நாள் லீவு

‘மூனு நாள் லீவு தெரியுமா?’ என்றான் ராஜேஷ். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘விளையாடுறியா! வீட்டுக்கு போக கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம், உனக்கு மூனுநாள் லீவு கேட்கிறதா?” என்றேன் சிரித்துக்கொண்டே. ‘இல்லடா மூனுநாள் லீவாம். MD சொன்னார்’ என்றான். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம் மலேசியாவிற்கு புரோகிராம் செய்து கொடுக்கும் நிறுவனம். வேலை பலு அதிகம். அப்படியிருக்க மூனுநாள் லீவு என்பது இயலாத காரியம். ‘சரி! எதற்காக லீவு?’ என்றேன். ‘டிசம்பர் ஆறு வருதுல்ல அதுக்குத்தான்’ என்றான் ராஜேஷ். எனக்கு பகீர் என்றது. டிசம்பர் ஆறுக்கெல்லாமா மூனு நாள் லீவு விடுவார்கள். எதற்காக விடுமுறை விடவேண்டும். ஏன் இப்படி செய்கிறார்கள். ‘மலேசியாவில் ரம்ஜான் கொண்டாடுகிறார்களாம். அதனால் நமக்கு இங்கே மூனுநாள் லீவுடா’ என்றான். ‘ஓ ரம்ஜானா..அதற்குத்தான் லீவா…’ ச்சே நான் எதற்கு வேண்டாததையெல்லாம் கற்பனை செய்து கொள்கிறேன். வீட்டிற்குப் போகலாமா! என்னுடைய ஊர் மதுரைக்கு பக்கமாக உள்ள ஒரு கிராமம். கிராமம் என்றாலும் சற்றே பெரிய கிராமம். அரசியல் கூட்டங்களுக்கும், சாதிக் கூட்டங்களுக்கும், மத போதகர்களுக்கும், ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பெயர் போன ஊர். மதுரைக்கு அருகில் இருப்பதால் கூடுதல் அங்கீகாரம். வீட்டிற்கு போய் ஒரு மாதம் ஆகி விட்டதால் டிசம்பர் ஐந்து கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

இரவு அறையில் வசந்தன் வந்திருந்தான். தானும் ஊருக்கு போக வேண்டும் என்றான். ‘எப்படா கிளம்பற’ என்றேன். ‘வெள்ளிக்கிழமை இரவு. நீ எப்ப போற’ ‘நான் டிசம்பர் ஐந்து. வியாழன் இரவு போகிறேன்’ ‘உனக்கும் ரம்ஜான் அன்று லீவு தானே. நீயும் வியாழக்கிழமையே கிளம்பினால் நாம சேர்ந்தே போகலாம்லடா’ ‘இல்லடா நான் வரல. மறுநாள் டிசம்பர் 6. நான் வரலப்பா’ எனக்கு என்னவோ போல இருந்தது. பய்மாகவும் இருந்தது. எதுவும் அசம்பாவிதமாக நடந்து விடுமோ. நாம போகும் பஸ்ஸை திடீரென்று ஒரு பதினைந்து பேர் சூழ்ந்து கொண்டு கதவை அடைத்து விட்டு தீ வைத்து சென்று விடுவார்களோ. ஐயையோ வேண்டாம். வேண்டாம். பஸ் வேண்டாம். டிரெயினிலே போகலாம். டிரெயினா? அது பஸ்ஸைவிட பாதகமாயிற்றே. ஒரே ஒரு காந்தக்கல் போதுமே. ச்சே ஏன் இப்படி நான் நினைக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. வருவது வரட்டும். நான் டிசம்பர் 5 கண்டிப்பாக ஊருக்கு போவேன். இதைவிட்டால் எனக்கு வேறு லீவு கிடைக்காது. லீவு போனால் வேறு லீவு வரும். ஆனால்..ச்சே..நல்லதையே நினைப்போம். பேப்பரை புரட்டினேன். டிரெயினை கவிழ்க்க சதி! தீவிரவாதிகள் பிடிபட்டனர்! செய்தியை படித்தேன். பஸ்ஸில் போவது என்று முடிவு செய்து கொண்டேன். வசந்தனை பார்த்தேன். வேறொரு பேப்பரில் ஆழ்ந்திருந்தான்.

2
வேண்டுதலும் பயமும்

மணி 5:30. வேலை முடிந்து கிளம்பினேன். ராஜேஷ் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் என்பதால், அவனும் என்னுடன் வந்தான். அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக்கொண்டேன். ராஜேஷ¤ம் தான். பிள்ளையாரிடம் அன்று வேண்டுதல் பலமாக வைத்தேன். ஏன் என்றே தெரியவில்லை. நிறைய நேரம் சாமி கும்பிட்டு விட்டேன். உக்கி வேறு. எப்பொழுதும் மூன்று தான். இன்று மூன்று அதிகமாக போட்டேன். குங்குமமும் திருநீரும் இட்டுக்கொண்டேன். ராஜேஷப் பார்த்தேன். அவனைக் காணவில்லை. இவனுக்கு இதே வேலை…ச்சே..தேடினேன். பக்கத்துக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தான். பாதி டீ குடித்துவிட்டிருந்தான். நிறைய நேரம் ஆகிவிட்டிருந்தது போல! ‘என்னடா பலமான வேண்டுதல் போல தெரியுது!’ ‘ஆமா…சும்மாவா… ஊர் போய் சேரனுமில..ஒரு டீ சொல்லு..’

ஆட்டோ பிடித்தோம். உள்ளே சென்று உட்கார்ந்தேன். ஆட்டோ நகர்ந்தது. ராஜேஷ் ஒன்றுமே பேசவில்லை. ரியர்வியூ மிரரில் ஆட்டோ ஓட்டுனரின் முகம் தெரிந்தது. தாடியெல்லம் நிறைய வைத்திருந்தார். கொஞ்சம் முரடாகத்தான் இருந்தார். எனக்கு என்னவோ ஒஸாமா ஞாபகம் வந்தது. ஆட்டோவை வேறு வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். கொஞ்சம் மெதுவாக சென்றால் தேவலாம் போல தோன்றியது. சட்டென்று அவர் என்னை திரும்பிப்பார்த்தார். என்னை முறைப்பது போல தோன்றவே, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். கொஞ்சம் நகர்ந்து ஆட்டோவின் இடது ஓரமாக அமர்ந்தேன். கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தேன். சினிமா போஸ்டர்க்ள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். படம் ஓடுதோ இல்லியோ போஸ்டர் ஓடுது. ஆட்டோ சிக்னலில் நின்றது. பம்பாய் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மனிஷாவைக்கூட பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பினேன். கண்ணாடி தெரிந்தது. இப்பொழுது கண்ணாடியில் எனது முகம். திருநீரும் குங்குமமும் நிறைய இட்டுக்கொண்டிருந்தேன். குங்குமம் மட்டும் பெரிதாக தெரிந்தது. ஆட்டோக்காரர் நிமிர்ந்து பார்த்தார். நான் வேகவேகமாக குங்குமத்தை அழித்தேன்.

இப்பொழுது பிள்ளையார் குங்குமத்தை அழித்துவிட்டோமே என்ற பயம் வேறு சேர்ந்து கொண்டது.

3
தீயும் பிள்ளையாரும்

எங்க ஊர் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றோம். ஊருக்கு போனஉடன் போன் பண்ணு என்று சொல்லிவிட்டு ராஜேஷ் போய்விட்டான். இவன் கூட வந்தால் நன்றாக இருந்திருக்கும். எவ்வளவு சொன்னாலும் மாட்டேனுட்டான். தனியாகத்தான் போகவேண்டும். மதுரைக்கு போகும் பஸ்ஸை தேட ஆரம்பித்தேன்.

பஸ் கிளம்பிவிட்டிருந்தது. நான் 28ஆவது சீட். எனக்கு அருகில் இருந்த ஜன்னல் சீட் காலியாக இருந்தது. ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்து கடையில் இருந்த டொரினோ பாட்டில்கள் எல்லாம் ஆசிட் பாட்டில்கள் போலத் தோன்றவே, நகர்ந்து பழையபடியே அமர்ந்து கொண்டேன். எதுக்கு வம்பு?!

பஸ் விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. நல்ல இருட்டு. பஸ்ஸ¤க்கு உள்ளேயும் வெளியேயும். பஸ் வேகம் குறைந்தது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எட்டிப்பார்த்தேன். பஸ்ஸின் ஹெட் லாம்ப் வெளிச்சத்தில் ஒரு 10,15 பேர் கையில் எதேதோ வைத்துக்கொண்டிருந்தனர். டிரைவர் இஞ்சினை ஆப் செய்தார். இறங்கி ஓடத்தொடங்கினார். பயணிகள் அனைவரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஓடுவதற்கு தயாராக எழுந்தனர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. அனைவரும் என்னைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள். கதவு சாத்தப்பட்டது. பஸ் எங்கிலும் பெட்ரோல் நெடி. அருகில் இருந்தவர் ஜன்னலை உடைக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வசந்தன் கண் முன் வந்தான். பிள்ளையாரே அந்த ஆட்டோ தாடிக்காரனுக்கு பயந்து குங்குமத்தை அழித்தது தவறுதான். மன்னித்துவிடு என்று வேண்டுகிறேன். பிள்ளையார் சிரிக்கிறார். அதனால் என்ன இந்தா குங்குமம் என்று கை நீட்டுகிறார்.. அதற்குள் எனக்கு அருகில் இருந்தவர் குதித்துவிடுகிறார். அடுத்து குதிக்கப்போகும் மற்றொருவரிடம் பிள்ளையார் குங்குமத்தை குடுக்கிறார். அவன் வாங்கிக்கொள்ளாமல் குதித்து விடுகிறான். அவன் குதித்தவுடன் அவனது கைகள் வெட்டப்படுகிறது. தீ எறிய ஆரம்பிக்கிறது. நான் கதறுகிறேன். பிள்ளையார் துதிக்கையில் காற்று ஊதி, தீயை அணைத்துவிட முயற்சிக்கிறார். நான் கதறுகிறேன். முருகா, ஞான பண்டிதா….விழுப்புரம் விழுப்புரம் டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம். வண்டி 15 நிமிடம் நிற்கும். சத்தம் தெளிவாக கேட்டது. அடப்பாவிகளா பஸ்ஸே எறிந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு டீ காபி ஒரு கேடா!

சுற்றும் முற்றும் பார்த்தேன். பயணிகள் டீ குடிக்க இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

எழுந்து உட்கார்ந்தேன்.

4
அழும் பையன்

டீ குடித்து விட்டிருந்தேன். கொஞ்சம் தெளிந்தார் போல இருந்தது. பஸ்ஸில் ஏறினேன். என் இருக்கையில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார். எதிர் இருக்கையில் தலையை கவிழ்ந்திருந்தார். அருகில் சென்றேன். ‘சார்’ பதில் இல்லை. ‘சார்’ சார் நிமிர்ந்து பார்த்தார். சார் இல்லை. ‘தம்பி. இது என் இருக்கை. நீங்கள் ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொள்ளுங்கள்’ என்றேன். தம்பி பார்த்தார். கோதுமை நிறம். அழகான முகம். மீசை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. கூர்மையான கண்கள். சிரமப்பட்டு நகர்ந்து உட்கார்ந்தான். நான் என் சீட்டில் அமர்ந்தேன். என்னால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. சிலரது முகம், ஒருமுறை பார்த்தால் மறுமுறையும் பார்க்கத் தோன்றும் காந்தத் தன்மை கொண்டதாக இருக்கும். மறுபடியும் பார்த்தேன். அவன் முகத்தை ஜன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டான்.ம்ம்ம்ம்..என்ன செய்ய..சிலரது முகம் என்னைப்போல இரும்பாய் இருக்கிறது.

பஸ் கிளம்பியது. நடத்துனர் பயணிகள் எண்ணிக்கையை சரி பார்த்தார். சரியாக இருந்திருக்கும் போல, என்னிடம் வந்தார். என்னிடம் எதற்க்காக வருகிறார்? நான் எனது டிக்கெட் இருக்கிறதா என்று என் சட்டைப் பையில் பார்த்தேன். ஐயோ காணவில்லை. எங்கே வைத்தேன். பேண்ட் பாக்கெட்டில். ஐயையோ காணோமே. என்ன செய்ய. எங்கே பொகணும் என்றார். ‘அது…வந்து..’ என்று ஆரம்பித்தேன். ‘மதுரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்…’ என்றது கணீர் குரல். பையன் டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தான். நான் அமைதியானேன். மணி பார்த்தேன். 11:45. அட! இதோ டிக்கெட்டை கடிகாரத்தில் சொருகி வைத்திருக்கிறேன்.ம்ம்..புத்திசாலி! பிழைத்துக்கொள்வாய். என்று நினைத்து கொண்டேன்.

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. பஸ் எறிந்த பொழுது நான் என்ன ஆனேன் என்று தெரியவில்லை. இந்த முறை அப்படியெல்லாம் விடக்கூடாது! கடைசி வரை பார்க்கவேண்டும்! இன்னும் நன்றாக கண்களை மூடிக்கொண்டேன். விசும்பும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. கனவில் படம் ஏதும் தெரியவில்லை. சந்தேகம் வரவே கண் முழித்துப் பார்த்தேன். பையன் விசும்பிக்கொண்டிருந்தான். கனவல்ல நிஜம் தான் போலிருக்கிறது. எனக்கு என்னவோ போல் இருந்தது.

சிறுது நேரம் அழுவதும் சிறிது நேரம் அமைதியாக இருப்பதும் என்று இருந்தான் அந்தப்பையன். எனக்கு வருத்தமாக இருந்தது!

‘தம்பி’ பதில் இல்லை. அழுகை நின்று விட்டது. ஸ்விட்ச் வெச்சிருப்பானோ? ‘தம்பி’ ம்ஹீம் அசையவில்லை. ‘யாருப்பா நீ? ஏன் அழுகிற? டிக்கெட் தான் எடுத்துட்டியே? பிறகு எதுக்கு அழுகிற? மேற்கொண்டு ஊருக்கு போக உன்னிடம் பணம் இல்லியா? ஏன் அழுகிற?’ பதில் இல்லை.

‘தம்பி உன்னுடைய சோகத்தை என்னிடம் சொல்லக்கூடாதா’

நிமிர்ந்து பார்த்தான். அந்த இருளிலும் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. ‘நீங்கள் இந்துவா’ என்றான். நான் பதில் ஏதும் சொல்லவில்லை.

‘என் பெயர் நசீர்’ என்றான்.

5

சலீமும் பாலுவும்

மணி 4:30. பள்ளி முடிய போகிறது. நசீர் மறு நாள் லீவு என்ற சந்தோசத்தில் வீட்டிற்கு போவதற்கு தயாராக இருந்தான். ஆசிரியர் பாடத்தை முடித்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார். ‘பசங்களா. நாளைக்கு விநாயகர் சதுர்த்தி! நாளைக்கு மறுநாள் பிள்ளையார் ஊர்வலம் வர இருக்கிறது! கலவரம் ஏதும் வராமல் இருப்பது நல்லது!” நசீர் பிள்ளையாரின் வரலாற்றை முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளையாருக்கும் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிய வாய்ப்புண்டு. ஜின்னா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அன்றைய நாள் முடிவுக்கு வந்தது.

‘நசீர்! நாளைக்கு லீவு தானே. வாப்பா கடையில் செத்த ஒத்தாசையா இருக்கவேண்டியது தானே. இந்தா டீ வெச்சிருக்கேன், குடிச்சிட்டு வாப்பாவுக்கும் கொண்டுபோய் கொடு”

கடையில் ஏறிக்கொண்டே நசீர் கேட்டான் “வாப்பா எங்கே?” “தொலுகைக்குப் போயிருக்கிறாரப்பா. உட்கார்’ ‘இந்தாங்க சிச்சா, டீ குடிங்க’ டீயை அங்கிருந்த ஒரு காலி டம்பளரில் வாங்கிக்கொண்டே, ‘நாளைக்கு லீவாப்பா’ என்று கேட்டுவைத்தார்.

வாப்பா சிறிது நேரம் கழித்து வந்தார். பெயிண்ட் வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருந்தது. அவர்களது கடை இரும்பு வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. பெயிண்ட் விற்பனையும் உண்டு.

‘பெயிண்டெல்லாம் எங்க போகுது தெரியுமா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார், சிச்சா. தெரியும் என்பது போல தலையை ஆட்டினார் வாப்பா. ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. நசீர் எங்கே போகிறது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

‘நாளைக்கு ஊர்வலம் வருது, கடையை அடைச்சிரலாம்ன்னு சொல்றேன்” சிச்சா விடுவதாக தெரியவில்லை.

‘எதுக்கு அடைக்கனும்கிறேன்! அவுக ஒரு துலுக்கன் கடையின்னு பாத்தா பெயிண்ட் வாங்கிட்டு போறாக? நாம் வியாபார். ஊர்வலம் நடந்தா நடக்கட்டுங்கிறேன். நாம நோன்பு இருக்கிறோமில்ல. சப்பரம் கட்டரோமில்ல. ஊர்வலம் வருகிறோமில்ல. அது போலத்தான்ங்கிறேன்! நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறேன்!”

‘சலீம் பாய்!’ குரல் கேட்டுத் திரும்பினார் வாப்பா. ‘வாங்க பாலு நாயக்கரே! வாங்க! என்ன விசயம்! என்னை தேடிட்டு கடை வரைக்கும் வந்திருக்கீங்க! என்ன சேதி! நல்ல சேதிங்கறேன். டேய் நசீர். சித்தப்பாக்கு டீ, பன்னு வாங்கியாடா. உக்காரு பாலு!”

பாலு உட்கார்ந்தார். ‘என்ன சலீம் வீட்டுக்கும் கடைக்கும் எத்தன வாட்டி அலையுறது! உன்னப்பாக்கவே முடியல! என் பொண்ணுக்கு கல்யாணம்..அதான்…”

“கூப்பிட வந்தீராக்கும். நான் வரமாட்டேனா! கல்யாணத்தன்னைக்கு நான் தான் முதல் ஆள். வனஜா என் பொண்ணு பாலு! இன்னிக்கு கடையில கூட்டம் அதிகம். இல்லைன்னா இப்பவே வந்திருப்பேன்! பாத்திமாவ போகச்சொல்லியிருந்தேனே”

சீனி டீ குடித்து முடித்திருந்தார். “இன்னும் நிறைய இடம் போகணும். கொஞ்சப்பேருக்கு பத்திரிக்கை வைக்க விட்டுப்போயிடுச்சு. கால் தான் வலிக்குது”

“டேய் நசீர். சித்தப்பாகூட போய்ட்டு வா. சைக்கிள் எடுத்துக்கோடா.” சலீம் நசீரை உடன் அனுப்பிவைத்தார்.

படியிறங்கிய பாலு நின்று, “அண்ணி எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். இரவு வர தாமதம் ஆகும் என்று உங்களிடம் சொல்லச்சொன்னார்கள். அப்ப வரேன் சலீம்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். நசீர் அங்கிருந்த சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு, பெடலை மிதிக்க ஆரம்பித்தான். சக்கரம் சுற்றத்தொடங்கியது.

வாப்பா சிச்சாவிடம் திரும்பினார். ‘பாரு! தாயா பிள்ளையா சகோதரனா பழகுறோம்! வேறு படுத்திப் பார்க்கக் கூடாதுங்கறேன்!’ என்று சிரித்தார்.

சிச்சாவும் சிரித்து வைத்தார்.

6
விநாயகர் சிலை

35 அடி கணபதி சிலை கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகிலிருந்து பார்க்கும் பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. விநாயகர் கையில் நிறைய லட்டுகளுடன் அமர்ந்திருந்தார். பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. நேரம் செல்ல செல்ல வருவார்கள் போல. ‘கணபதி என்றிட கவலை தீர்ந்திடும்…’ சீர்காழி கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்தார். அருகில் வயிறு ஒட்டிய நிலையில் பரிதாபமாக கையில் வெறும் தட்டுடன் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய பார்வை விநாயகரின் கையில் இருந்த லட்டுகளின் மீதே இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து விநாயகர் தான் சாப்பிட்டது போக, தனக்கும் சில லட்டுகள் கொடுப்பார் என்று அவள் நினைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

சிறுவர்கள் சிலர் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள். பக்தர்கள் சிலர் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தனர். சில தொப்பித் தலைகளும் தெரிந்தன. பிள்ளையாருக்கு பாதுகாப்பு. வழிப்போக்கர்கள் சிலர் நின்று, நிமிர்ந்து பார்த்து, அதிசயித்து சென்றனர். அவர்களின் முகங்கள் இதை எப்படி தூக்கிக்கொண்டு போய் கரைப்பார்கள் என்கிற தீவிர சிந்தனையை உடையதாக இருந்தன.

கூட்டம் திடீரென்று சலசலத்தது. அவர்களுக்கெல்லாம் தலைவர் போல இருந்தவர் வேகவேகமாக வந்து கொண்டிருந்தார். கையில் சில மாலைகளும், பிரசாத தட்டுகளும் இருந்தன. உடன் புரோகிதர்கள் சிலரும் வந்தனர். பூஜை ஆரம்பம் ஆனது.

பூஜை நடப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் பிரசாதம் வழங்கப்படும் என்று மைக்கில் அறிவிக்கப்பட்டது. சிறுமி ஆர்வமானாள். இப்பொழுது அவளைப் போலவே நிறைய சிறுவர்களும் சிறுமிகளும் கைகளில் தட்டுகளுடன் அங்கே குழிமியிருந்தனர்.

பக்தர்களிடத்திலிருந்து கணபதி கோஷம் வலுவாக எழுந்துகொண்டிருந்தது.

பூஜை முடிவுற்றது. பிரசாதம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. சிறுமி முண்டியடித்துக்கொண்டு சென்றாள்.

அங்கே ஒரு அவசரக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. கணபதியை கரைப்பது பற்றியும் அவர் ஊர்வலம் செல்லவிருக்கும் பாதை பற்றியும் தலைவர் மற்றவர்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டிருந்தார்.

“இங்கிருந்து கிளம்பி அக்ரஹாரத் தெரு தாண்டி, குறுக்குத் தெரு வழியாக செல்கிறோம்’

‘அப்புறம்’

“கீழத்தெரு வழியாக மெயின் ரோட்டை அடைந்து, பெரிய ரத வீதி வருகிறோம்’

‘இதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடுமே..அப்புறம்’

‘சுண்ணாம்பு காலவாசல் வழியாக மசூதி தெருவுக்குள் நுழைகிறோம்’

‘மசூதி தெருவா? வேண்டாம் படப்படித் தெருவழியாக போய்விடுவோம்’

‘படப்படி தெரு வழியே போக முடியாது தலைவரே. இந்த வருடம் சிலை கொஞ்சம் பெரியது. கரெண்டு கம்பிகளையெல்லாம் கழற்ற வேண்டும். படப்படித் தெருவை விட்டு வெளியேறும் போது இருக்கும் அந்த குறுகலான பாதையில் லாரி போகமுடியாது.’

அங்கே சலசலப்பு அதிகமானது. இளவட்டங்கள் கத்தத் தொடங்கியிருந்தனர். அதெப்படி? ஏன் பயப்படவேண்டும்? என்கிற கேள்விகள் எழுந்தன.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் அங்கி சுற்றி இங்கு சுற்றி மசூதி தெருவுக்குள் நுழையும் நேரம் அவர்கள் தொலுகை முடிந்து திரும்பும் நேரம். ஏதும் அசம்பாவிதம் நடக்கக் கூடாதே!’

‘அதெல்லாம் ஒன்றும் நடக்காது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றனர் இளவட்டங்கள்.

இளவட்டங்களின் ஆர்வத்தைப் பார்த்து தலைவர் மகிழ்ந்தாலும், கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. பிள்ளையார் அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார். “ஆமா பாலு எங்க? வருவாரா நாளைக்கு?” “வருவார் தலைவா. அவர் பொண்ணுக்கு கல்யாணம் நாளை மறுநாள். ஆனா கண்டிப்பா அன்னைக்கு சாயங்காலம் வந்திடுவேன்னு சொல்லியிருக்கார்”

7
தூது செல்வதராடி?

“உருகிடும் போது தூது செல்வதாரடி” ஜானகி இனிய குரலில் உருகிக்கொண்டிருந்தார். சலீம் கல்யாண மண்டபத்தில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அனைத்து வேலைகளையும் அவரே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வது போல இருந்தது.

நசீர் வரவேற்பிடத்தில் நின்று கொண்டிருந்தான். பாத்திமா வனஜாவை மேலும் அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தார்.

சந்தோசத்தையெல்லாம் மீறி பாலு குடும்பத்தினரின் முகத்தில் கவலை ரேகை படர்ந்திருப்பதை சலீம் கண்டு கொண்டார்.

எங்கே தேடினாலும்ன் பாலுவைக் காணவில்லை.

‘அண்ணி. பாலு எங்கே? இந்நேரத்தில் எங்கே போனார்?” என்று பாலுவின் மனைவியிடம் விசாரித்தார். ‘இங்கதான் இருந்தார் கொஞ்சம் நல்லா பாருங்களேன்’ ‘இல்லை. நாம் ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவரைக் காணவில்லை.மேலும் உங்கள் அனைவரது முகத்திலும் சந்தாசத்திற்கு பதில் கவலை தெரிகிறதே. என்ன விசயம் என்னிடம் சொல்லக்கூடாதா?’

‘அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா. அவர் விரைவில் வந்துவிடுவார்.’ அவரது தலை கவிழ்ந்தது. சலீமை பார்க்க அவரது விழிகள் மறுத்தன. சலீம் விடவில்லை.

‘இல்லை ஏதோ இருக்கிறது. சொல்லுங்கள். பாலு எங்கே?’ பாலுவின் மனைவி மெதுவாக பேச துடங்கினார். அவரது குரல் உடைந்திருந்தது. ‘கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள். நாங்கள் இரண்டையுமே செய்தோம். வனஜாவின் திருமணம் எதிர்பாராத ஒன்று. உங்களுக்கே அது தெரியும்’ தலை கவிழ்ந்தேயிருந்தது. அழுதுவிடுவார் போலிருந்தது.

‘அங்கே இங்கே புரட்டி ஒருவழியாக சமாளித்து விட்டோம். இன்னும் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இன்று மதியத்திற்குள் கொடுக்கவேண்டும். அவர் உங்களை மேலும் தொந்தரவு செய்ய கூடாது என்று கூறிவிட்டார்’ சலீம் அமைதியாக இருந்தார். ‘நேற்று இரவு ஒருவர் தருவதாக சொல்லியிருந்தார். ஆனால் கடைசியில் கையை விரித்துவிட்டார். என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை’ தலை நிமிர்ந்து சலீமை பார்த்தார். கண்கள் பளபளத்தது.

‘நான் ஒரு ரெண்டு மணி நேரத்தில் வருகிறேன். பாலு வந்தால் இங்கேயே இருக்கச் சொல்லுங்கள்’ சலீம் விரைந்தார். சலீமும் பெரிய மிராசுதாரர் அல்ல. நேரே தனது மனைவியிடம் சென்றார். விவரத்தை சொன்னார். ‘உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்’ பாத்திமா மறுப்பேதும் சொல்லவில்லை. நசீர் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான்.

8
இரவு நேரத்து டீ

பஸ் திருச்சியை தொட்டுக்கொண்டிருந்தது. டிசம்பர் மாதக் குளிர் காற்று மெல்ல வருடிக்கொண்டிருந்தது. பஸ் மித வேகத்தில் மிதந்து கொண்டிருந்தது. டிரைவர் இசை பிரியர் போலத் தெரியுது. இளையராஜா கரைந்து உருகி பெட்ரோலுக்கு பதில் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தார்.’கண்ணே பட்டுக்கவா’ என்று கமலஹாசன் அம்பிகாவை கொஞ்சி கொண்டிருந்தார்.எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. சூழ்நிலை இறுக்கம் காரணமாக என்னால் ரசிக்க முடியவில்லை.

‘திருச்சி இறங்குகிறவர்கள் இறங்கவும். வண்டி பத்து நிமிஷம் இங்கே நிற்கும்’
‘நசீர் உனக்கு ஏதும் வேண்டுமா. நான் டீ குடிக்க போறேன். வர்றியா?’
என்னை ஒரு முறை நிதானமாக பார்த்தவன். ‘சரி’ என்றான்.

‘ரெண்டு டீ போடுப்பா’ ‘ஏலக்கா இருக்கா’ பதிலில்லை. நசீரிடம் திரும்பினேன்.
‘உங்க வாப்பா முப்பதாயிரம் ரூபாய்க்கு என்ன செய்தார்’
நசீர் மீண்டும் ஆரம்பித்தான்.
‘பாலு சிச்சா ரொம்ப நல்லவர். நான் லீவு நாட்களில் அவர் வீட்டில் தான் இருப்பேன். வனஜா அக்கா எனக்கு பாடம் சொல்லித்தருவார்கள். வாப்பாவுக்கும் பாலு சிச்சாவுக்கும் இருக்கும் நட்பு சாதாரண நட்பு அல்ல. அது இரத்த சம்பந்த பட்டது’
நான் புரியாமல் பார்த்தேன்.
‘இந்தா சார் டீ. ஏலக்கா இல்ல சார்’
தலையை ஆட்டிக்கொண்டே டீ யை வாங்கி நசீரிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு. நான் ஒன்றை நுகர்ந்து பார்த்தேன். டீயின் இளஞ்சூடு விரல்களில் பரவுவதை ரசித்துக்கொண்டே ஒரு சிப் பருகினேன். சுகர் கொஞ்சம் தூக்கல் தான். நசீர் தொடர்ந்தான்.

‘வாப்பாவுக்கும் சிச்சாவுக்கும் ரத்த சம்பந்தம் உண்டு’
‘வாப்பாவும் சிச்சாவும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். அப்பலேருந்தே அவர்களது நட்பும் பலப்பட்டு வந்திருக்கிறது’
‘வாப்பாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனாலும் அல்லாஹ் எங்களை சோதித்தார்’
‘அவ்வப்போது வாப்பா வயிற்று வலி என்று கத்திக்கொண்டு கதறுவார். அம்மா மாத்திரை எடுத்துக்கொடுக்கும் அந்த கொஞ்ச நேரத்துக்குள் வலி சரியாகப் போய்விடும். ஒரு நாள் வலி அதிகமாகிவிட்டது. வாப்பா தரையில் புரண்டு புரண்டு கத்தினார். வாப்பா அழுது நான் பார்த்ததேயில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.’
‘வாப்பாவை சோதித்த டாக்டர் அம்மாவை திட்டியே விட்டார். இவ்வளவு நாள் ஏன் சிகிச்சை எடுக்கவில்லை. இப்பொழுது நிலமை ரொம்ப மோசமாகிவிட்டது என்றார்’

நான் டீ கிளாசை வைத்தேன். அவன் டீ அப்படியே இருந்தது. ‘நசீர் டீ குடிப்பா, ஆறிடப்போகுது’
நசீர் டீ குடித்துக்கொண்டே தொடர்ந்தான்.

‘கிட்னியில் கற்கள் இருக்கிறது என்றும். நிலமை ரொம்பவும் முற்றிவிட்டது என்றும் இப்பொழுது வேறு வழியில்லை. கிட்னி யாரேனும் டொனேட் செய்யவேண்டும் என்றார் டாக்டர்’ ‘தொடர்ந்து அவர் அதற்கு லட்சக்கணக்கில் செலவும் செய்யவேண்டும் என்றார் அவர்’
‘எங்கள் உறவுக்காரர்களை கேட்டோம். அவர்கள் வழக்கம் போல கைவிரித்துவிட்டார்கள்.’ என் சொந்த சிச்சாவுக்கும் வாப்பாவுக்கும் ஒரே ரத்த குரூப் தான் என்றாலும், சிச்சா மறுத்துவிட்டார். யார் தான் தன் ஒரு கிட்னியை கொடுக்க உடனே மனபூர்வமாக சம்மதிப்பார்கள்?’
‘எப்படியோ விசயம் தெரிந்து பாலு சிச்சா ஆஸ்பத்திரிக்கு வந்தார். வாப்பாவின் நிலமையை பார்த்ததும் அவருக்கு அழுகையே வந்துவிட்டது. என்னால் முடிந்த வரைக்கும் பணம் திரட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். பாலு சிச்சா ஒன்றும் பெரிய பணக்காரர் அல்ல..’

யாரோ என்னை தொட்டு கூப்பிடுவது போலத்தோன்றவே..திரும்பினேன். எங்கள் பஸ் கண்டக்டர்.

‘யோவ்..உங்க தாத்தா விட்டு பஸ்ஸா?எவ்வளவு நேரம்யா ஆகுறது? ஒத்த டீய வாங்கி ஒம்பது மணி நேரமா குடிக்கிற? உனக்காக எவ்வளவு நேரமய்யா வெயிட் பண்றது?’
‘ம்ம்..நீங்க வர்ற வரைக்கு நாங்க வெயிட் பண்றோமில்ல?’ என்றேன்
‘உன்னையெல்லாம் அப்படியே விட்டுட்டு போயிருக்கனும்யா.வா..வந்து சேரு’
கண்டக்டர் நகர்ந்தார். நாங்களும் பின் தொடர்ந்தோம்.

டிசம்பர் குளிரிலும் பஸ் சூடாக இருந்தது. உட்கார்ந்திருந்த பயணிகள் எங்களை எரித்து விடுவதைப் போல பார்த்தனர். ‘வந்துட்டாருய்யா முதலமைச்சரு’ கமெண்ட் வேறு. நாங்கள் அமைதியாக போய் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். பயணம் தொடர்ந்தது. லைட்கள் ஆப் செய்யப்பட்டு இருள் எங்களை சூழ்ந்து கொண்டது.

9
உயிர்காப்பான் தோழன்

பாலு சிச்சா மிகவும் சோர்வாய் வந்து அமர்ந்தார். அவரது இயலாமை அவரது சோர்வில் தெரிந்தது. தன்னால் தன் நண்பனை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் முகத்திற்கு இறுக்கத்தை கொடுத்திருந்தது. வாப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர் கிளம்பும் வரையிலும் ஏதும் பேசவில்லை. நானும் பாலு சிச்சாவும் டாக்டரை பார்க்கப்போனோம். டாக்டர் ‘இன்னும் ஓரிரு நாட்களில் ஆபரேஷன் செய்யவில்லை என்றால்..’ நசீர் அழுக ஆரம்பித்திருந்தான். நான் தடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆரம்பித்தான். டாக்டர் திடீரென்று உங்கள் ரத்த குரூப் என்ன என்றார். பாலு சிச்சா A+ என்றார். ‘நீங்கள் கிட்னி கொடுக்க தயாரா’ என்றார் டாக்டர். பாலு சிச்சாவின் முகம் மலர்ந்தது. ‘தயார்’ என்றார் பாலு சிச்சா. அம்மா டப்பென்று பாலுசிச்சாவின் காலில் விழுந்து விட்டார்.

எங்கள் உறவினர்களும் மறுத்த விசயத்தை எங்கள் பாலு சிச்சா செய்து காட்டினார். வாப்பா பிழைத்துக்கொண்டார். எங்கெங்கொ பிரட்டி வைத்திருந்த கொஞ்ச காசையும் டாக்டரிடம் கொடுப்பதற்கு சென்ற பொழுது, அவர் மறுத்துவிட்டார். ‘நீங்கள் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும். நண்பனை காப்பாற்ற கிட்னியும் ரத்தமும் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் தியாகத்தில் நானும் பங்கு பெற்றுக்கொள்கிறேன். எனக்கு பீஸ் ஏதுவும் வேண்டாம்’ என்றார். பாலு சிச்சா மிகவும் வற்புறுத்தியதால் மிகக் குறைந்த அளவு பணத்தை மட்டும் அவர் பெற்றுக்கொண்டார்.

‘தன் உயிரைக் காப்பாற்றிய நண்பனுக்கு தன் கடையை அடகு வைத்து முப்பதாயிரம் ரூபாய் கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை எங்கள் வாப்பாவுக்கு.’
‘சரிதான் என்றேன்’
நசீர் தொடர்ந்தான். ‘ஒரு வழியாக வனஜா அக்காவின் திருமணம் நடந்து முடிந்தது. மாப்பிள்ளை பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினியர். சென்னையில் தான் வேலை செய்கிறார்’
‘பெயர் தெரியுமா’ என்றேன்.
ரொம்ப நேரம் யோசித்தவன், கடைசியில் தெரியாது என்று சொல்லிவிட்டான்.

பஸ் நின்றது. லைட்கள் போடப்பட்டன. நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இப்பொழுது முன்பிருந்ததைப் போல பயமில்லை என்றாலும் ஆர்வத்தோடு பார்த்தேன்.
நசீரை விலக்கி விட்டு ஜன்னலை எட்டி யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தேன். ம்ஹ¥ம் யாருமில்லை. ஒருவன் பஸ்ஸிலிருந்து இறங்கி வேகமாக ஓடி புதருக்கு அருகில் நின்றான். கண்டக்டர் கத்த தொடங்கியிருந்தார்.

‘திருச்சியில் பஸ் நின்ன போது என்னய்யா பண்ண? சும்மா தூங்கறது அப்புறம் சின்ன பையன் மாதிரி பஸ்ஸ நிப்பாட்ட சொல்லிட்டு போறது.’
‘அவசரமாக இருந்தால் என்ன செய்வது? பஸ்ஸ நிப்பாட்டிட்டு வெளில போறானெ அத நினைச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க கண்டக்டர் சார்’ ஒருவர் கமெண்ட் அடிக்க கண்டக்டர் கப்சிப் ஆனார். எனக்கு சிரிப்பு வந்தது. போனவர் திரும்பிவந்தார். முகத்தில் அரைக்கிலோ அசடு வழிந்து கொண்டிருந்தது.

லைட்கள் அணைக்கப்பட்டன. பஸ் நகர்ந்த்து.

10
ஊர்வலம் கிளம்பியது

‘வானம் விடியவே வானம் வெடிக்கலாம் ரோசி ரோசி’ பாட்டு சூழ்நிலையை மேலும் அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்தது. இளசுகள் செமர்த்தியாக ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். அதில் ‘இந்தபடை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா!’ கமெண்ட் வேறு. தலைவர் குஷியாக இருந்தார். பிள்ளையாரை ஊர்வலம் எடுத்துச்செல்லும் லாரி மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது ஒரு லாரி என்பதே அருகில் சென்று பூக்களை விலக்கினால் தான் தெரியும். சூடம் கொளுத்தப்பட்டது. பூசனி உடைக்கப்பட்டது. சிதறு காய்கள் நாலா பக்கமும் சிதறின. சிறுவர்களும் சிறுமிகளும் உடைந்த தேங்காய் சில் களை எடுக்க இங்குமங்கும் ஓடினர்.

‘கிளம்பலாமாப்பா…’ தலைவர் கேட்டார்.
குலவைச் சத்தமும் பாட்டு சத்தமும் பட்டாசு வெடிகளும் காதை பிளக்க கணபதியை தூக்க வந்தனர் இளவட்டங்கள். பாலுவும் கூட்டத்தோடு இணைந்து கொண்டார். இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்க பாலுவும் மற்றவர்களும் சேர்ந்து வேல் வேல் வெற்றிவேல் என்று கத்தத் தொடங்கினர். தலைவர் பாலுவைப் பார்த்து சிரித்தார். பிள்ளையாரின் அடிப்பாகத்தில் இரும்புக் கம்பிகள் வைத்து கட்டப்பட்டிருந்தது. அந்த கம்பிகளை பிடித்துதான் பிள்ளையாரை தூக்கவேண்டும். பிள்ளையார் ஆனந்தமாக சிரித்துக்கொண்டிருந்தார். உற்சாக வெள்ளத்தில் மக்கள் தூக்கினர். மிகுந்த சிரமத்துக்கு பின்னும் தூக்கமுடியவில்லை. பாலு இன்னும் சிலரை தூக்குவதற்கு அழைத்துக்கொண்டிருந்தார். தலைவரின் முகம் கவலைக்குள்ளானது. மேலும் சிலர் இணைந்து கொண்டனர். கூட்டம் முழுவதும் தனது ஒட்டு மொத்த பலத்தையும் சேர்த்து தூக்க பிள்ளையார் வளைந்து கொடுத்தார். சிலை நகர்ந்தது. மிகுந்த சிரமத்துக்கு பிறகு, சிலை வண்டியை சென்றடைந்தது. பாலுவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. இளைஞர்கள் சோர்ந்து விட்டனர். இருந்தாலும் உற்சாகத்துடன் ஊர்வலம் தொடங்கியது. தொப்பி தலைகள் தென்பட்டன.

சிலை அக்ரஹாரத்தெருவை அடைந்தது. ஆங்காங்கே தேங்காய் “கண்கள்” வைக்கப்பட்டிருந்தன. பிள்ளையார் அங்கெல்லாம் நிறுத்தப்பட்டார். தேங்காய் உடைக்கப்பட்டது. மாலைகள் போடப்பட்டன.

ஊர்வலம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. பாலு வட்டாரம் மிகுந்த உற்சாகமாய இருந்தது. பாலு இப்பொழுது வண்டியின் மேல் இருந்தார். தலைவரும் பாலு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். ஒருவன் வேகமாய் ஓடிவந்து லாரியில் தாவி ஏறினான். தலைவரின் காதருகில் சென்று கிசுகிசுத்தான்.

‘நம்ம மாரியப்பன் இருக்கான்ல…’ என்றான்.
‘மாரியப்பன்..எந்த மாரியப்பன்..’
‘அதான் தலைவரே..உங்க எதிரி..நம்ம கடைக்கு..’
‘ஆமா அதுக்கு என்ன..’
‘அவன் பெரியரத வீதியில் தானே ஒரு ‘கண்’ வைத்துக்கொண்டு அங்கே பிள்ளையார் நிற்க வேண்டும் என்கிறானாம்’
‘அதெப்படி. அவன் அவன் இஷ்டப்படி சிலை நிற்குமா?’
‘இல்ல தலைவரே. நிக்கலைன்னா அவன் பிரச்சனையைக் கிளப்ப தயாராக ஆட்களை வைத்துக்கொண்டிருக்கிறானாம்’
‘அப்படியா. அதனால் என்ன..சிலை எப்பொழுதும் நிற்கும் இடங்களில் தான் நிற்கும். புதிதாக வைக்கப்படப்போகும் ‘கண்கள்’ நேற்றே நமக்கு தெரிவிக்கப்பட்டு விட்டன. சிலை சரியான நேரத்தில் கரைக்கப்படவேண்டும். புரியுதா’
அவன் சென்று விட்டான்.
தலைவரின் முகம் இனம்புரியாத ஒரு உணர்வில் இருந்தது.

பாலு எவ்வளவு முயன்றும் அவருக்கு பெரியரத வீதி என்பதை தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை பாலு குழப்பத்தில் இருந்தாலும் ஏதோ நடக்கப்போவதை அவர் உள்ளம் சொன்னது.

11
மாரியப்பன் என்ன செய்தான்?

வாப்பாவும் நசீரும் தொலுகைக்கு தயாரானார்கள். வீட்டை விட்டு இறங்கி மசூதி தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினர். வாப்பாவுக்கு என்னவோ போல் தோன்றவே, ‘நசீர் இருடா! நான் போய் வீட்டில் தண்ணீர் குடித்து வருகிறேன்’ என்று சொல்லி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ‘வாப்பா இரு நானும் வரேன்’

வீட்டை அடைந்தார்கள். ‘பாத்திமா..பாத்திமா’ ‘என்னங்க என்ன ஆச்சு’ ‘கொஞ்சம் தண்ணீர் கொடுமா. நெஞ்சை என்னவோ போல் செய்கிறது. தண்ணீர் குடித்துவிட்டு எழுந்திருத்தார். ‘செத்த உக்காந்திட்டு போங்க. நசீர் ·பேனைப் போடு’ என்றார் பாத்திமா.
கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு மசூதிக்கு கிளம்பினர்.

*

சிலை குறுக்குத்தெருவைத் தாண்டி பெரியரத வீதியில், மாரியப்பன் கண்ணுக்கு முந்தைய கண்ணில் சிலை நின்று கொண்டிருந்தது. கிளம்பிய பொழுது இருந்த கூட்டத்தை விட இப்பொழுது கூட்டம் குறைந்திருந்தது போல இருந்தது. தொண்டர்களும் உற்சாகம் குறைந்து காணப்பட்டனர். தலைவர் குழப்பத்தில் இருந்தார். தூரத்தில் மாரியப்பன் தெரிந்தான். தலைவரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. பாலு உற்சாகம் குறையாமல் இருந்தார். தேங்காய் உடைப்பு முடிந்து வண்டி கிளம்பியது.

ஏனோ டிரைவர் புதிய வேகத்துடன் வண்டியை ஓட்டினர். தலைவரின் ஆட்கள் புது உற்சாகம் அடைந்திருந்தனர். கூட்டம் சலசலத்தது. மாரியப்பன் கண்ணுக்கு அருகில் வந்ததும் தலைவர் என்ன நினைத்தாரோ..

‘நிறுத்துங்கள் நிறுத்துங்கள்’ என்று கத்தினார். அவரின் சத்தம் மற்ற சந்தங்களில் அடிபட்டு போனது. வண்டி நிற்கவில்லை. தலைவர் மறுபடியும் கத்தினார். பாலுவும் சேர்ந்து கத்தவே, டிரைவரின் காதுகளுக்கு கொஞ்சம் நேரம் கழித்துத்தான் சென்றடைந்தது. வண்டி மாரியப்பன் ‘கண்’னைத் தாண்டி நின்றது.

மாரியப்பனின் கோஷ்டி கோபம் கொண்டது. ‘பாத்தீங்களா தலைவா. வேணும்னே எங்க கொண்டு போய் நிப்பாட்டி இருக்காங்கன்னு. இவிங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது’ என்று மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்தனர்.

பிள்ளையார் சிரித்தவாறு இருந்தார். கூட்டம் சலசலத்தது. பாலு பதற்றமானார். தலைவரின் முகம் வெளிரிப்போனது.

மாரியப்பன், ‘அதான் நிப்பாட்டிட்டாங்கல்ல, கடவுளைத் தேடி நாமதான் போகணும். தேங்காய் மாலையெல்லாம் எடுங்க..நாம் அங்க போவோம். மற்றதெல்லாம் உள்ள வையுங்க’

மாரியப்பன் தேங்காய் உடைத்து நன்றாக வேண்டிக்கொண்டார். தலைவர் மாரியப்பனை பார்த்து சிரித்தார். மாரியப்பனும் பதிலுக்கு சிரித்து வைத்தார். பாலு உற்சாகமானார்.

12
தீயும் உதவியும்

தலைவரின் கவனம் முழுவது பிள்ளையாரை தடையின்றி கரைக்கவேண்டும் என்பதிலே இருந்தது. பெரிய ரத வீதியை கடந்து கொண்டிருந்தது சிலை. சுண்ணாம்பு காளவாசல் தொடங்கி மசூதி தெரு முடியும் வரை முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி.

மசூதி தெரு முடிந்து விட்டால் ஆற்றை அடைந்து விடலாம். மசூதி தெரு கொஞ்சம் பெரிய தெரு. ஊரை விட்டு வெளியே இருக்கும் தெரு. ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. ஆற்றுக்கு அருகில் என்பதால் வீடுகள் அதிகமாக இருக்காது.

தலைவர் கூட்டத்தை திரும்பிப் பார்த்தார். கூட்டம் முன்பை விட கனிசமாக குறைந்திருந்தது. தலைவர் அதுவும் நல்லதுக்கு தான் என்று நினைத்துக்கொண்டார். கூட்டம் சோர்வாக இருந்தது. ஆற்றை தொட்டுவிட்டால் பிள்ளையாரை கரைப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இதுவரை சண்டை சச்சரவு இன்றி கடந்து வந்துவிட்டோம் பிள்ளையாரப்பா மிச்ச பயணத்தையும் நன்றாக முடித்து வையப்பா’ தலைவர் வேண்டிக்கொண்டார்.

பாலு எதையும் கண்டுகொள்ளவில்லை. பெண்ணின் திருமணம் நன்றாக நடந்து முடிந்து விட்டது கூட காரணமாக இருக்கலாம்.

ஏதோ தீய்ந்த நெடி காற்றில் படர்ந்திருந்ததை அனைவரும் கண்டுகொண்டனர். பாலுவுக்கும் அந்த நெடி அடிக்கவே பாலு தலைவரைப் பார்த்தார்.

வண்டி சுண்ணாம்பு காளவாசலுக்குள் நுழைந்தது. மக்களின் கூக்குரல்கள் ஓங்காரமாய் கேட்டது. தூரத்தில் புகை மண்டலம் தெரிந்தது. பாலுவுக்கு சட்டென்று புரிந்துவிட்டது.

காளவாசலில் குடிசை வீடுகள் அதிகம். எப்படியோ தீ பற்றிக்கொண்டது. மக்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ‘அல்லாஹ் நம்மை சோதிக்கிறாரப்பா’ என்று கதறிக்கொண்டே ஒரு முதியவர் ஒரு பெரிய வாளி நிறைய தண்ணீரை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்.

தொலுகை நேரம் என்பதால் ஆண்கள் அங்கே அதிகமாக இல்லை. பெண்கள் குடங்களை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். எங்கும் அல்லாஹ் அல்லாஹ் என்ற சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எழுந்து ஓட சக்தி இல்லாத ஒரு முதியவர், தொலுக ஆரம்பித்தார்.

மாரியப்பன் லாரியில் தாவி ஏறினான். தலைவரிடம் ‘நீங்கள் பயணத்தை நிறுத்த வேண்டாம். கொஞ்சம் இளைஞர்களை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். பிற இளைஞர்களை நானும் பாலுவும் கூட்டிக்கொண்டு தீயை அணைக்க முற்படுகிறோம். பிள்ளையார் சரியான நேரத்தில் கரைக்கப்படவேண்டும் . நீங்கள் பயணத்தை தொடருங்கள்’ சொல்லிய வேகத்தில் லாரியை விட்டு இறங்கி மாரியப்பனும் பாலுவும் ஓடத்தொடங்கினர். இளைஞர்கள் சிலர் அவர்களுடன் இணைந்துகொண்டனர்.

தலைவர் பெருமிதத்துடன் பிள்ளையாரை பார்த்தார். பிள்ளையார் இன்னும் அதே சிரிப்புடன் காணப்பட்டார்.

அங்கே ஒரு மதநல்லினக்கம் பெருத்த கூக்குரல்களுக்கிடையே மிக மவுனமாய் நடந்தேரிக்கொண்டிருந்தது.

ஊர்வலம் முன்பை விட வேகமாக செல்லத் தொடங்கியது.

13
சோதனை தீர்ந்தது

சிலை காளவாசல் தெருவை கடந்தது. காளவாசல் தெருவுக்கும் மசூதி தெருவுக்கும் இடையே குறுகிய பாதை ஒன்று இருக்கிறது. அதை கடந்து தான் லாரி செல்லவேண்டும். மசூதி தெரு காலியாக இருந்தது. தெருவில் அனைவரும் தீயை அணைப்பதில் மும்முரமாக இருந்ததால், தெரு வெறிச்சோடிக் கிடந்தது.

‘டிரைவர் அந்த இடத்துல கொஞ்சம் பார்த்து மெதுவா போப்பா’ என்று சொன்ன மறுவிநாடி லாரி ஒரு பெருத்த சத்தம் கொடுத்துவிட்டு நின்றது..

‘மெதுவா போன்னு சொன்னா..மொத்தமா நிப்பாட்டிபுட்டானே..’ என்று சிரித்துக்கொண்டார் தலைவர்.

டிரைவர் வண்டியை ஆன் செய்தார். சில உறுமல்களுக்கு பிறகு இஞ்சின் தானே அணைந்தது. தலைவர் எட்டிப் பார்த்தார்.

மறுபடியும் உறுமல்கள் மறுபடியும் அமைதி. தலைவர் கலவரமானார். பிள்ளையாரை வேண்டிக்கொண்டார்.

மறுபடியும் உறுமல். இந்த முறை உறுமல் நீண்டு கொண்டே சென்றது. பின் லாரி பெரிய மலைப்பாம்பை போல சத்தம் கொடுத்துவிட்டு மொத்தமாய் உட்கார்ந்தது.

பிள்ளையார் ஏனோ இன்று தீர்மானமாய் இருந்தார். தலைவர் மணியை பார்த்தார். இன்னும் இருபது நிமிடத்திற்குள் ஆற்றங்கரையை எட்டவேண்டும்.

டிரைவர் இறங்கி வந்தார், ‘என்னன்னு தெரியல தலைவரே..பாக்கறேன்’ என்று சொல்லிவிட்டு முன்னால் சென்றார். கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும் டிரைவர் வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய முயன்றார். இந்த முறை ஸ்டார்ட்டே ஆகவில்லை போல. உறுமலும் இல்லை..மலைப்பாம்பு மூச்சும் இல்லை.

தலைவர் வானத்தை பார்த்தார். பிறகு பிள்ளையாரைப் பார்த்தார். பிறகு கூட்டத்தை பார்த்தார். தலைவர் உற்சாகத்தை குறைக்க விரும்பவில்லை. ‘ஆற்றங்கரை அருகில் தான் இருக்கிறது. தூக்கி கொண்டு சென்று விடலாம்’ என்றார். இளவட்டங்கள் சற்று யோசித்தன.

தொலுகை முடிந்து ஆட்கள் சிலர் மசூதியை விட்டு வெளியே வந்தனர். தீ பிடித்த செய்தி தெரிந்திருக்க வேண்டும் அவர்களது நடையில் அவசரம் தெரிந்தது.

இளவட்டங்கள் உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு சிலையை தூக்க முயன்றனர். பிள்ளையார் அசைந்து கொடுக்கவில்லை. நிறைய லட்டுகள் சாப்பிட்டிருப்பார் போல. மிகவும் கனமாக இருந்தார். அடுத்தமுறை சுண்டலை கொஞ்சம் குறைக்கவேண்டும் என்று முன்னால் தூக்கிக்கொண்டிருந்தவர் சொன்னார். சிரிப்பொலி எழுந்தது. மிகுந்த சிரமத்துக்கு பிறகு பிள்ளையாரை லாரியிலிருந்து இறக்கி மசூதி தெருவுக்குள் நடக்க ஆரம்பித்தனர். மிகவும் கனமாக இருந்தது. இப்படி நடந்தால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்த தலைவர் வேகமாக நடங்கள் என்று கட்டளை இட்டார். கூட்டம் தடுமாறியது.

மேலும் பலர் மசூதியிலிருந்து வெளியேறினர். சிலையைக் கண்டு ஒதுங்கி நின்றனர். சிலை தள்ளாடியது. மக்களும் தான். அவர்களால் தூக்க முடியவில்லை. யாரேனும் உதவிக்கு வந்தால் தேவலாம் போல தோன்றியது அவர்களுக்கு. ஆனால் பலர் தீயை அணைக்க சென்று விட்ட பிறகு, ஆட்கள் அவ்வளவாக இல்லை.

தொலுகை முடித்த அமைதி அவர்களின் முகத்தில் தெரிந்தது. சிலை தள்ளாடுவதையும் மக்களையும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் தீ வேறு எறிகிறதே என்று நினைத்துக்கொண்டிருந்தனர். சிலர் கிடைத்த இடைவெளியில் தீயை அணைக்க ஓடினர்.

சிலை மேலும் தள்ளாடியது. எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழலாம் என்ற நிலையில் இருந்தது. தலைவர் கலங்கினார். சிலையை தூக்கிக்கொண்டிருந்த ஒருவன் கனம் தாங்கமாட்டாமல் கீழே விழுந்தான். விழுந்ததில் மேலும் சிலை தடுமாற்றம் கண்டது. ‘பிள்ளையாரப்பா..வேலா’ என்ற கோஷங்கள் காதை பிளந்தன.

சலீம் பாயும் நசீரும் மசூதியை விட்டு வெளியேறினர். சிலை தடுமாறிக்கொண்டிருந்ததை கவனித்த சலீம் பதற்றமானார். ஓடிச் சென்று சிலைக்கு தோள் கொடுத்தார். நசீரும் ஓடினான். அதுவரை தயங்கிக்கொண்டிருந்த மற்றவர்களும் சலீம்மின் செயல் பார்த்து அவர்களும் சிலையை தாங்கிப்பிடித்தனர்.

தலைவர் மகிழ்ச்சியில் துள்ளினர். இளைஞர்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர். பிள்ளையார் கம்பீரமாக நிமிர்ந்து நின்றார். பிள்ளையாரின் முகத்தில் இப்பொழுது சிரிப்பு மாறி ஒரு வகையான பெருமிதம் குடி கொண்டிருந்தது.

சிலை வேகமாக ஆற்றை நோக்கி முன்னேறியது.

14
பிரிவு

என்னடா இது எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது இவன் இவ்வளவு எளிதாக சொல்கிறான்? எனக்கு பிரமிப்பாக இருந்தது. இப்படியும் நடக்க வாய்ப்புண்டா? ஆனால் இரு விசயம் கேள்விப்பட்டதுண்டு. என் தாத்தா ஒரு முறை மிக எளிதான கேள்வி ஒன்றைக் கேட்டார். ‘பூமி ஏன் சுற்றுகிறது தெரியுமா?’ எனக்கு சிரிப்பு தான் வந்தது. ‘என்ன தாத்தா உன் காலம் என்று நினைப்பா. நான் இதை எனது ஆறாம் வகுப்பிலேயே படித்துவிட்டேனாக்கும்’ என்றேன் அவர் விடவில்லை. ‘பரவாயில்லை சொல்லப்பா’ என்றார். ‘பூமி சுற்றுவது ஈர்ப்பு விசையால் தான்’ என்று சொல்லிவிட்டு கலிலியோ போல ஒரு பார்வை பார்த்தேன். கலிலியோவை நான் பார்த்ததில்லை என்பது வேறு விசயம்.

தாத்தா சிரித்து விட்டு தொடர்ந்தார். பூமி உருவான காலம் தொட்டு பூமியில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. பூகோள இராசாயன மாற்றங்கள் பலவும் தோன்றிவிட்டன மனித குலத்தை வேறோடு அழிக்கும் தீய சக்திகளும் தோன்றிவிட்டன. பிறகும் இன்று வரை இந்த பூமி அழியாமல் சுற்றிக்கொண்டேயிருப்பது இந்த உலகில் தன் நலன் பாராட்டாமல் பிறர் நலம் பேணும் நல்லவர்கள் சிலர் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான்’ என்று தன் லெக்சரை முடித்துக்கொண்டார் என் தாத்தா.

‘மாட்டுத்தாவணி இறங்குகிறவர்கள் இறங்கவும்’ கண்டக்டரின் கனமான குரல் காதில் விழுந்தது. ‘அட அதற்குள்ளாக மாட்டுத்தாவணி வந்துவிட்டதா’ மணி பார்த்தேன். காலை 5:45. இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தது அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. கண்கள் எரிய ஆரம்பித்தன.

ஆனால் எல்லாவற்றையும் விட ஒரு நிம்மதியும் சந்தோஷமும் பெருமையும் என் உள்ளத்தில் தோன்றியது. வீட்டிற்கு போகப் போகிறோம் என்கிற சந்தோஷமும் உடன் சேர்ந்து கொண்டது. இறங்க ஆயத்தமானேன். நசீரும் தயாராகிக்கொண்டிருந்தான். ‘நீயும் இங்கே தான் இறங்க வேண்டுமா’ என்றேன் தலையை மட்டும் ஆட்டினான். இறங்கும் பொழுது கண்டக்டர் என்னைப்பார்த்து சிரித்தார். நானும் சிரித்துக்கொண்டேன்.

‘சார் ஆட்டோ, ஆட்டோ சார்’
‘வேண்டாம்ப்பா. ஆட்டோ வேணாம்’
‘எங்க சார் போகணும்’
‘இல்ல ஆட்டோ வேணாம்’
‘எங்க போகணும் அதச் சொல்லு சார்’
‘ஆட்டோ வேண்டாமின்னு சொல்றேன்ல’ சுள்ளென்று விழுந்தேன்.
‘ஏன் சார் கோபப்படுற. பஸ் இன்னும் அரைமணி கழிச்சு தான். ஆட்டோல போணா நீயும் வேகமா போயிடுவ எனக்கும் சவாரி கிடச்ச மாதிரி இருக்குமேன்னு கேட்டா இப்படி கோபப்படுறியே’
நசீர் எனக்கும் முன்னால் சென்று கொண்டிருந்தான். நான் வேகமாக நடை போட்டேன்.
இன்னொரு ஆட்டோக்காரர் நெருங்கினார்.
‘எங்க சார் போகணும்?’
எனக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேற ‘மாவிலிபட்டி’ என்றேன். ஆட்டோக்காரன் ‘மாவிலிபட்டியா’ என்று என்னை மேலும் கீழும் பார்த்தான் ‘இல்ல வராது’ என்று சொல்லிவிட்டு நிற்க கூட இல்லை போயேவிட்டான். ‘எனக்கு தெரியும்!’ மாவிலிபட்டிக்கு வரமாட்டார்கள் என்று மதுரைக்கு மேற்கே உள்ளடங்கி இருக்கும் கிராமம் அது. பாதை கரடுமுரடாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். நானா ஆட்டோ கேட்டேன். அவனா வந்தான். கேட்டான். முடியாதுன்னுட்டான். சே!

நசீர் வேகவேகமாக சென்றுகொண்டிருந்தான். ஒரு இடத்தில் நின்றான். நானும் சென்று அவன் அருகில் நின்றேன். அவனுடைய பஸ் இங்கே தான் நிற்கும் போல. எனக்கு இங்கே அல்ல. நான் அடுத்த ப்ளாட்பாரத்திற்கு செல்லவேண்டும். இங்கு பொதுவாக என்ன பஸ்கள் நிற்கும் என்று யோசித்தேன். மினி பஸ்கள் மட்டுமே கண்களுக்கு தெரிந்தன.

‘நசீர் உனக்கு எந்த ஊர்’ என்றேன். நசீர் என்னை பார்த்தான். ‘இல்ல எங்க போகணும் நீ’ என்றேன்.
‘புதுப்பட்டி’ என்றான்.
‘ஓகோ’ ஏதோ புதுப்பட்டி தெரிந்தமாதிரி.
‘எந்த புதுபட்டி?’ புதுப்பட்டிக்கு இனிசியல் வேறு இருக்கா? நல்லா கேக்குறாய்ங்கடா டீட்டெயிலு.
‘T.புதுப்பட்டி’ அட இனிசியல் இருக்கு போல!
‘ஓ T.புதுப்பட்டியா’ எனக்கு T.புதுப்பட்டியும் தெரியாது.
பையன் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான். ஆலம்பட்டி என்ற போர்டு போட்ட ஒரு மினி பஸ் ஒன்று வந்து நின்றது. என்ன பையன் புதுப்பட்டி என்று சொல்லிவிட்டு ஆலம்பட்டிக்கு போகும் பேருந்தில் ஏறினான்? ‘ஒரு வேளை புதுபட்டி ஆலம்பட்டி செல்லும் வழியில் இருக்கலாம்!’ ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு.

ஆனாலும் இந்த பையன் ரொம்ப மோசம். இரவு முழுவதும் பேசியிருக்கிறேன். ஒரு டீ வேறு வாங்கிக்கொடுத்திருக்கிறேன். ஒரு டாட்டா கூட சொல்லாமல் செல்கிறானே! டாட்டா கூட வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு சிரிப்பாவது சிரிக்கலாமே! அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பஸ்ஸின் அருகில் சென்றான். ‘ஏதோ கேட்டான். பின் சரியென்றான். பஸ்ஸின் படியை நோக்கி நடந்தான். ம்ஹீம் என்னை கண்டுகொள்ளவில்லை. படியில் ஏறியவன் சட்டென்று என்னை திரும்பிப் பார்த்தான். சிரித்தான்.

படிகளில் ஏறினான். நான் திரும்பி எங்கள் ப்ளாட்பாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

15
கதை சொல்பவனின் சிந்தனை

நீண்ட நாள் பழகிய நண்பனை சட்டென்று பிரிந்து விட்டதை போன்று உணர்ந்தேன். ஏன் அப்படி?

‘சார் ஆட்டோ வேணுமா’
ஆஹா என் மேல எவ்வளவு அக்கரை உங்களுக்கு? விடவே மாட்டீங்களா! தைரியமாக கேட்கலாம்.
‘ஆட்டோ மாவிலிபட்டிக்கு வருமா’ நிறுத்தி நிதானமாக கேட்டேன்.
‘மாவிலிபட்டிக்கெல்லாம் வராது. விளக்கு வரை வேணும்னா போகலாம்’
‘ஒன்னுசெய். விளக்கு வரைக்கு போய் நீ நின்னுக்க. என்ன கூப்பிடாத’
‘ஓ சாரு மாவிலிபட்டிக்கே போகணுமா? போ போ இன்னிக்கு எவனும் வரமாட்டான்’
‘வராட்டி போங்க. பஸ்ல போய்க்கிறேன்’
‘பஸ்ஸா. நீ இன்னிக்கு பூராவும் நின்றாலும் உனக்கு பஸ் வராது!’
அடப்பாவி வழியக்க வந்து சாபம் கொடுத்துவிட்டு போகிறாயே நீர் வாழ்க உன் சுற்றம் வாழ்க!

இன்றைக்கு ஏதோ புதியதாய் இருப்பது போல இருக்கிறது. நசீருடன் பேசியதாய் இருக்கலாம். அவன் சொன்ன சம்பவங்கள் கூட காரணமாக இருக்கலாம். என் எண்ணங்களை நிறையவே மாற்றிவிட்டன அவனது சம்பவங்கள். இந்துக்கள் முஸ்லீம்களின் துன்பங்களை தங்களது துண்பங்களாக எண்ணிக்கொள்வதும், இந்துக்கள் கஷ்டப்படும் பொழுது சட்டென்று முஸ்லீம் மக்கள் தோள் கொடுப்பதும்! நடக்குமா!

அடப்பாவி நடந்திருக்கிறதே! ஏதோ கதை போல யோசிக்கிற?!

ஏன் நடக்காது? அவன் இந்து இவன் முஸ்லீம் இவன் கிறுஸ்துவன் என்பதை விடுத்து அவனும் நம்மை போல இந்த பூமியில் பிறந்து அல்லலுறும் ஒரு மனிதன் என்று நினைத்தால் நான் ஏன் உதவ மாட்டோம்?

மதம் என்பது ஒரு அடையாளம் தானே! மனிதன் மதம் என்கிற விசயத்தை பீட்டர் இங்கிலாண்ட் என்கிற சட்டையை போல உபயோகிக்க வேண்டும். போட்டுக்கொள்வது பெரிதல்ல. அதை எளிதாக கழட்டவும் தெரிய வேண்டும். சட்டையை போட்டுக்கொண்டேயிருப்பது எவ்வளவு கஷ்டம்? குளிக்கும் போது போட்டுக்கொண்டா குளிக்கிறோம்? கழட்டிவிடுவதில்லை? மதத்தை எப்பொழுது கழட்டனும்? பிற மதத்தினரிடம் பழகும் போது.

மதம் என்பது எதற்காக உருவாக்கப்பட்டது? வாழ்க்கை என்னும் மிகப் பெரிய அலைகள் கொண்ட சமுத்திரத்தை கடக்க மனிதனுக்கு உதவுவதற்காக மனிதால் உருவாக்கப் பட்ட. கவலைகள் கஷ்டங்கள் என்ற மிகப்பெரிய அலைகள் அடிக்கும் பொழுது அந்த அலைகளில் இருந்து தப்பிப்பதற்காக அல்லது தப்பிக்க தைரியம் கொள்வதற்காக ‘பிள்ளையாரப்பா என்னை காப்பாற்றுப்பா’ என்று கூறுவதற்காகவும் ‘பிள்ளையார் நம்மை காப்பாற்றுவார்’ என்று தன்னம்பிக்கையை உருவாக்குவதற்காகவுமே உருவாக்கட்டவை.

நாம் பிள்ளையாரை அழைப்பது போலவே அவர்கள் அல்லாவையும் வேறு சிலர் இயேசுவையும் சிலர் புத்தரையும் அழைக்கிறார்கள்.

இன்னும் சிலர் பிரேமானந்தாவைக் கூட அழைக்கிறார்களே அது ஏன்?

எனக்கு பீட்டர் இங்கிலாண்ட் பிடித்திருக்கிறது. சிலருக்கு சோடியாக் சட்டை பிடித்திருக்கிறது. அதற்காக சோடியாக் சட்டை போட்டவனை எல்லாம் நீ ஏன்டா சோடியாக் சட்டை போட்டாய் என்று அடிக்க முடியுமா?

இந்த முறை ஊருக்கு போய் முதலில் சட்டை எடுக்கவேண்டும். என்ன சட்டையா? ஏதோ ஒரு சட்டை. ஆனால் இந்த வசந்தன் ஏன் இப்படி இருக்கிறான். அவன் தான் என்னை குழப்பினான். இந்த முறை அவனைப்பார்த்து நடந்தவை எல்லாம் சொல்லவேண்டும். நான் கண்ட கனவிலிருந்து நசீர் அழுததையும் சேர்த்து…

ஆமாம் நசீர் ஏன் அழுதான்? நான் கேட்கவேயில்லையே? எப்படி மறந்தேன்? இப்படி பாதியிலே விட்டுவிட்டானே!

ஐயையோ! அவன் எதுக்காக அழுதான்? எனக்கு தெரியவேண்டுமே. அவனை கடைசியாக பார்த்த இடத்தை நோக்கி வேகவேகமாக நடந்தேன்.

16
எதுக்காக அழுதான் நசீர்?

எனக்கிருக்கும் ஞாபகமறதி மிகவும் பெரியது. என்னை சபித்துக்கொண்டே அவன் நின்றிருந்த இடத்திற்கு வந்தேன். நான் தான் மறந்து விட்டேன். அவனாவது சொல்லியிருக்க வேண்டாமா. அதே அந்த இடம் தானே. ஆனால் மினி பஸ்ஸை காணவில்லையே. பஸ் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அருகில் இருந்தவரிடம் விசாரிக்கலாம் என்று சென்றேன்.

‘இங்கே பஸ் ஒன்று நின்று கொண்டிருந்ததே!’ என்றேன். திரும்பிப்பார்த்தார். பஸ் நின்றுகொண்டிருந்தது. ‘அப்புறம் இதுக்கு பேர் என்ன?’ என்றார் பஸ்ஸைக்காட்டி.
‘அதில்ல சார்..அதுவந்து ஒரு மினி பஸ்..’
‘பஸ் வந்து நின்னா நின்னுட்டேயிருப்பானா? ஆள் சேர்ந்திடுச்சுன்னா எடுத்துட்டு போயிடுவான்..அதுதான் வாழ்க்கை’ என்றார்.
செம விரக்தியில் இருந்திருப்பார் போல.

பஸ் போயிடுச்சா. நசீரும் போயிட்டானா. ஏன் அழுதான் என்று கேட்கவேயில்லையே.
திடீரென்று பின்னாலிருந்து ‘நான் இங்கிருக்கிறேன்’ என்று சொல்வானோ? திரும்பி பார்த்தேன். ம்ஹீம்.

எதற்காக அழுதிருப்பான்? சரி! நாமே ஒரு முடிவுக்கு வருவோம். நசீர் படிப்பதற்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தான். வந்த இடத்தில் ஒழுங்காக படிக்காமல் ஊரைச் சுற்றி பாடத்தில் பெயில் ஆகிவிட்டான். அதனால் தான் வீட்டிற்கு அழுது கொண்டே செல்கிறான்.

‘உம் புத்தி உன்னைய விட்டு எங்க போகும்’ ஆனா கோர்வையா வருதே! ஆனா இதுக்கெல்லாம் போய் அழுவாங்களா? இந்த பரிட்சை போனா அடுத்த பரிட்சை. அவனை பார்த்த பெயில் ஆகிறவனை போல தெரியவில்லையே.

‘என்னா சார் இங்கயே சுத்திட்டு இருக்க! பஸ் வரலையா? தனியா வேற பேசிட்டு இருக்க’ ஆட்டோக்காரன்.
‘அட இருய்யா. நீ வேற’
பேசாமல்..அது என்ன ஊர்..ம்ம்ம்..புதுபட்டிக்கே போய்விடலாமா? ‘ஆனால் வீட்டில் அம்மா தேடுவார்களே!’ ஒன்னு செய்வோம், மினி பஸ் போறதால ஊர் பக்கதுல எங்கேயோ தான் இருக்கும். வீட்டுக்கு போன் பண்ணி ·ப்ரண்ட் வீட்டுக்கு போவதாய் சொல்லிவிட்டு புதுபட்டிக்கு போயிட்டு வந்துடலாம். மாதவா எங்கேயோ போயிட்டடா!

நம்பர்களை ப்ரஸ் செய்து, காத்திருந்தேன். ரிங் போய்கொண்டேயிருந்தது. யாரும் எடுக்கவில்லை, மறுபடியும் ரீடயல் செய்தேன். மறுபடியும் ரிங் சவுண்டு. ரீடயல்.இந்த முறை என்கேஜுடு ட்டோன். என்ன ஆச்சு? ஏன் யாரும் எடுக்கவில்லை.

‘என்னா சார் ரிங் போகலியா?’ வாய்யா வா.
‘ம்ம்ம்.. என்றவாரு வெளியே வந்தேன்’
பஸ்ஸ¤க்காக காத்திருக்க முடியாது. ஆட்டோ பிடித்து போய்விடலாம்.
‘ஏனப்பா..’
‘முடியாது சார்’ சட்டென்று பதில் வந்தது.
நான் இன்னும் கேட்கவேயில்லையே.
‘இல்லப்பா புதுபட்டிக்கு போகணும்’
‘புதுப்பட்டியா.. 90 ரூபாய் ஆகும்’
அநியாயம் தெரியதுன்னா ஏமாத்தப் பாக்குறார்.
‘ஏம்ப்பா.. இந்த ஆலமப்ட்டிக்கிட்ட இருக்கிற புதுப்பட்டிக்கா 90 ரூபாய்’
எப்படி மடக்கினேன்!
‘ஓ ஆலம்பட்டி புதுபட்டியா நான் Tபுதுபட்டின்னுல்ல நினைச்சேன். ஆட்டோ வராது’
‘இல்ல இல்ல Tபுதுபட்டிதான்’
‘என்கிட்டியே டபாய்கிறியே சார். நான் என்ன உன்ன ஏமாத்தவாபோறேன்? உக்காரு சார். 50 ரூபாய் கொடுசார்’ பேசாமல் ஏறி உட்கார்ந்தேன்.
ஆட்டோ கிளம்பியது.

17
நம்ம நாட்ட பிடிச்ச சனி

‘ஆமா சார்! நீ எதுக்கு Tபுதுப்பட்டிக்கு போற? பத்திரிக்கைகாரனா? எந்த பத்திரிக்கை? ஆனந்த விகடனா?’
‘பத்திரிக்கையா? அதெல்லாம் ஒன்னும் இல்லங்க., ஒரு ப்ரண்டை பார்க்க போறேன்’
‘ஓகோ! அப்படியா! நீ நீட்டா டிரஸ் போட்டுட்டு பின்னாடி பை போட்டுட்டு திரு திருன்னு முழிச்சிட்டு இருந்தியா..நான் கூட பத்திரிக்கைகாரனோன்னு நினைச்சிட்டேன்’
என்னது திருதிருன்னு முழிச்சனா?
‘கோவிச்சுக்காத சார். உண்மைய சொல்லிப்புட்டேன்’
இது வேறையா?
‘ஆனா சார் நேத்திலிருந்தே பத்திரிக்கை காரங்க சார் தான் நிறைய பேர் அங்க போறாங்க. நான் கூட நேத்து சாயங்ககாலம் ரெண்டு பேரை அங்க கொண்டு போய் இறக்கி விட்டேன்’
என்ன சொல்கிறான் இவன்? ‘எதுக்கு பத்திரிக்கைகாரங்க நிறைய பேர் அங்க போறாங்க?’
‘எல்லா இடத்திலயும் மதக்கலவரம் நடந்திட்டு இருக்கறப்போ இந்த மாதிரி கிராமங்கள் இருக்கிறதால தான் மனசுக்கு தெம்பா இருக்கு’
எங்கேயோ இடிக்குதே!
‘நீ என்ன சார் சொல்ற?!’
நான் என்ன சொல்ல?
‘ஆனா இது மாதிரித்தான் இருக்கணும்! தலைவரே சொல்லியிருக்கார் ‘ஜாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் உன்னைத் தொடுமா’ அதில ஜாதிங்கறதை எடுத்திட்டு மதம்ன்னு போடணும் சார். என்ன நான் சொல்றது! கரெக்ட் தான?’
எனக்கு டென்ஷன் ஏறியது.
‘என்னய்யா சொல்ற’
‘ஏன் சார் கோபப்படுற? பொறுமையா கேட்டா நான் சொல்லமாட்டேனா?’
‘ம்ம்..நேரம்..சொல்லுப்பா’
‘இந்த ஊர்ல..ம்ஹ¥ம் இந்த மாநிலத்தில..ம்ஹ¥ம்..இந்த நாட்ல..ம்ஹ¥ம்..இந்த உலகத்தில..எங்கேனாச்சும் நீ கேட்டிருக்கியா சார் இத?’
‘எதப்பா?’
‘முஸ்லீம்கள் பிள்ளையார் தூக்கின கதை?’
‘அட நம்ம கதை’
ஆட்டோக்காரன் திரும்பி பார்த்தான்.
‘ஓ நீ சினிமாகாரனா? இந்த கதைய வெச்சு படம் பண்ண போறியா?’
‘அட இல்லப்பா! நீ மேற்கொண்டு சொல்லு’
‘அதுல என்ன கூத்துன்னா? இந்துக்கள் பிள்ளையார் ஊர்வலத்தை விட்டுட்டு முஸ்லீம் தெருவில எறிஞ்ச தீய அமத்துனதுதான்’
‘இது தான் எனக்கு தெரியுமே’
ஆட்டோக்காரனுக்கு நிஜமாகவே கோபம் வந்திருக்க வேண்டும்.
‘சரி! அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு சொல்லு சார்’
‘அது தானப்பா தெரியாது!’
முறைத்தான்.
‘அன்னைக்கு நடந்த தீ விபத்தில தன் உயிரையும் பணையமா வெச்சு நெறைய இந்துக்கள் முஸ்லீம்களை காப்பாற்றியிருக்காங்க. அதுல ஒருத்தருக்கு பயங்கரமான தீ காயம். அதுல முஸ்லீம் பிள்ளையார் தூக்கினாங்கன்னு சொன்னேனுல்ல அதுல் ஒருத்தர் தனது வயிற்றுவலியைக் கூட பொருட்படுத்தாமல் கனமாக பொருட்களை தூக்ககூடாதுங்கறது தெரிஞ்சும், இந்துக்கள் கஷ்டப்படுவதை பார்த்து தானும் பிள்ளையாரை தூக்கியிருக்கிறார்’
‘ஆனா சார் மனுஷன் செம ஆளு சார். தூக்க ஆரம்பிச்ச உடனே அவருக்கு வலி அதிகமாயிருக்கு. மனுஷன் ஆத்துபடுகைக்கு போற வரைக்கும் ஒன்னுமே சொல்லலியாம். கரைச்ச பிறகு தான் புரண்டு புரண்டு அழுதிருக்கார்’
‘இது நடந்து மூனு நாலு மாசம் ஆச்சு சார். இது வரைக்கும் அவங்க உயிர் ஊசலாடிட்டு இருந்து நேத்து மதியம் தான்…’
நான் ஸ்தம்பித்தேன்.
‘ரெண்டு பேருமே திக் ப்ரண்ட்ஸாம் சார்’ ‘ரெண்டு பேருமே ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் முன்ன பின்ன தான்..’
‘அப்படியா’ என்றேன் அதிர்ச்சி தாளாமல்.
‘அதுல அந்த முஸ்லீமோட பையன் சென்னையில இருக்கானாம்..யாரையோ பாத்து பணம் புரட்ட போனானாம்..அவன் வரும் வரைக்கும் அவனுக்காக ஊரே காத்திட்டு இருக்கு சார்’
‘போய் பாரு சார். ஊரே அழுது புலம்பிட்டு இருக்கு சார். கூட்டம் கூடிட்டே இருக்கு சார். அக்கம் பக்கம் ஊர்ல இருந்தெல்லாம் வந்திட்டிருக்காங்க சார்.’
‘ஆனா இது நம்ம நாட்ட பிடிச்ச சனி சார். பாரதில ஆரம்பிச்சி இன்ன வரைக்கு..உயிரோட இருக்கறவரைக்கும் ஒரு பய கண்டுக்கமாட்டான்..’
‘எது எப்படியோ சார்..எதுக்குடா கலவரம் பண்ணலாம்னு காரணம் தேடிட்டு இருக்கறவங்க மத்தில..இந்த ரெண்டு நண்பர்களால அந்த கிராமமே ஒன்னு சேர்ந்து கண்ணீர் சிந்திட்டு இருக்குசார்’
‘என்ன சார் பேசாமலே வர்ற?’

18
பிறகு என்ன் —– சிலைன்னு கேக்கறேன்?

‘இங்க இப்படி இருக்கு! ஆனா சார் நீ மொதோ போகணும்னு நெனச்சியே மாவிலிபட்டி! அங்க என்னடான்னா ஒரு ரத்த ஆறே ஓடிட்டு இருக்கு!’
‘என்னது ரத்த ஆறா?’
‘ஆமா சார் ஜாதிக்கலவரம் சார்’
‘என்னது ஜாதி கலவரமா?’
‘ஆமா அதான் நீ கூப்பிட்டப்போ நான் வரமாட்டேன்னுட்டேன்’
‘அடப்பாவி இத மொதல்லய்யே சொல்லியிருக்கக்கூடாதா. ஆட்டோவ திருப்புயா’
‘என்னது ஆட்டோவ திருப்பனுமா? எங்க சார் போகணும்?’
‘மாவிலிபட்டிக்கு’
‘ஐயோ நான் வரலை. நீ எதுக்கு சார் அங்க போற?’
‘அது என் சொந்த ஊரய்யா’
‘சார் சார் நான் வரலை சார் என்ன உட்ரு சார்’
‘யோவ் உனக்கு 200ரூபாய் தாரேன்..இல்ல முன்னூறு ரூபா தாரேன்..ப்ளீஸ் என்ன மாவிலி பட்டிக்கு கொண்டுபோய் விட்ருய்யா’
‘இல்ல சார் அது வந்து சார்’
‘அந்த விளக்கு வரைக்குமாவது வாயேன்’
‘சரி சார் உனக்காக அந்த விளக்கு வரைக்கும் வாரேன்’
‘சரி’
‘நல்லா கேட்டுக்கோ சார். விளக்கு வரைக்கும் தான்’
‘சரிப்பா வேகமா போ’
ஆட்டோ திரும்பியது.
‘ப்ளீஸ் கொஞ்சம் வேகமா போயேன்’
ஆட்டோ வேகம் பிடித்தது.
அதுதான் போன் பண்ணப்போ யாருமே எடுக்கலையா? பிள்ளையாரப்பா நீதான் காப்பாத்தனும்.
‘பயப்படாத சார் அதெல்லாம் ஒன்னும் நடக்காது’
ஒரு STD பூத் தெரியவே, ‘கொஞ்சம் நிறுத்துப்பா ஒரு போன் பண்ணி பார்த்துக்கறேன்’

நம்பர்களை டயல் செய்து காத்திருந்தேன். வியர்வைத் துளி ஒன்று என் மூக்கின் மீது நின்று கொண்டிருந்தது.
ரிங் போனது. யாரோ எடுத்தார்கள். அப்பாடா.
‘ஹலோ? யாரு சிவசா?’
‘சிவசா?’
‘ஹ்ம்ம்..மாவிலிபட்டிதானே?’
‘இல்ல ராங்க நம்பர்’ டொக்.

‘டென்சன் ஆகாம நம்பர போடு சார்’
மறுபடியும் ரிங் டோன். ஒன். டூ. த்ரீ.
ம்ஹ¥ம்..

மறுபடியும் ரிங்.
ம்ஹ¥ம்.

‘சார் ஊருக்கே போயிடலாம் என்ன சொல்ற நீ’
ஆட்டோ வேகம் பிடித்தது.

முருகா. பிள்ளையாரப்பா. அல்லாஹ். ஜீசஸ்.
‘என்ன பிரச்சனையாம்ப்பா?’
‘இவனுங்களுக்கு என்ன சார் வேலை? இவனுங்களே சிலையை வெப்பானுங்க. இவனுங்களே சிலையை உடைப்பானுங்க. பிறகு அதுக்கு கலவரம் வேற பண்ணுவாங்க’
‘நேத்து சார் ஒரு முழு பஸ்ஸையே எறிச்சிருக்கானுங்க’
‘இவனுங்களுக்கெல்லாம் பஸ்ஸே விடக்கூடாது சார். சிலையா சார் இவனுங்களுக்கு சோறு போடப்போகுது. நாம உழைச்சா நமக்கு சாப்பாடு.’
‘நீ ஆட்டோவில ஏறுன சார்…உங்கிட்ட நான் என்ன ஜாதின்னு கேட்டனா சார்? இல்ல நீ தான் கேட்டியா?’
‘மொதல்ல ஊர்ல இருக்கிற சிலையெல்லாம் எடுக்கணும் சார். நல்ல மனுஷங்களுக்கு சிலை வெக்கனும் சார்’
‘இந்த ஊர்ல ரெண்டு பேர் செத்தாங்களே அவங்களுக்கு வெக்கனும் சார் சிலை’
‘நீயே சொல்லு சார். காந்திக்கு இங்கே எத்தன ஊர்ல சார் சிலை இருக்கு’
‘வேணாம் வேணாம் சிலையே வேணாம்’
‘சிலை வெச்சுட்டாப்ல? காந்தி சிலைய பாத்து பாத்து எவனும் பொய் சொல்றத உட்ருவானா சார்’
‘அட பொய்ய உடு சார். மொதல்ல தண்ணியடிக்கிறத உட சொல்லு சார்’
‘அதெல்லாம் ஒன்னும் —- மாட்டாங்க..பிறகு என்ன் —– சிலைன்னு கேக்கறேன்’
‘தோ..இந்த மாதிரி அடிச்சிக்கினு சாவறதுக்கு தான்’
‘அரசியல் கட்சிக்காரய்ங்க சொன்னய்ங்கன்ன இவிங்களுக்கு எங்க சார் போச்சு புத்தி. சாராயக்கடையில் பூந்துனு இருக்கு சார் புத்தி’
‘என்ன சார் பேசாமலஏ வர்ற’
‘அட நீ ஒன்னு சார்! ஒன்னும் ஆவாது கவலைய உடு சார்’

போலீஸ் தொப்பி தெரிந்தது. ஆட்டோ நிறுத்தப்பட்டது.
‘எங்க போற’ போலீஸ் கேட்டார்.
‘மாவிலிபட்டி சார். இந்த சார் அந்த ஊராம்..பாவம் பயந்துட்டு போறாரு’
‘அதெல்லாம் போக முடியாது. நீ இவர இங்க இறக்கி விட்டுட்டு போகலாம்’
‘சார்’
‘போய்யாங்கறேனில்ல’
காசு கொடுத்துவிட்டு நான் இறங்கினேன்.
ஆட்டோக்காரர் ‘அதெல்லாம் ஒன்னும் பயப்படதா சார். போயிட்டுவா சார்’ என்று சொல்லிவிட்டு ஆட்டோவை திருப்பி போய்விட்டார்.

‘நீ எந்த ஊரு’
‘அதான் சொன்னாருல்ல’
போலீஸ் முறைத்தார்.
‘நீ சொல்லமாட்டியோ’
‘மாவிலிபட்டி’
‘எங்க போயிட்டு வர்ற’
‘ஊர்ல இருந்த வர்றேன்’
‘டேய் எல்லாரும் ஊர்ல இருந்துதான் வருவாய்ங்க.பின்ன காட்ல இருந்தா வருவாய்ங்க’
‘சென்னை’
‘பையில என்ன’
‘டிரஸ். புக்ஸ்’
‘ஆயுதம் எதுவும் வெச்சிருக்கியா?’
‘ஆ..ஆயுதமா..இ…இல்ல’
‘எப்படி நம்புறது’
நான் முழித்தேன்.
‘பையை திற’

19
பாட்டியும் வரவில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை.

இன்ஸ்பெக்டர் பையை திறந்து பார்த்தார். அழுக்கு துணிகளும், The Glass Palace புத்தகமும், புதுமைப்பித்தன் சிறுகதை தொகுப்பும் இருந்தது. புதுமைப்பித்தன் சிறுகதை தொகுப்பை எடுத்து இரண்டு மூன்று நிமிடங்கள் பார்த்தார்.
‘சோம்பேறியா இருப்ப போல தெரியுது’
‘அழுக்கு துணியெல்லாம் வீட்டுக்கு எடுத்திட்டு போற’
‘சார் வீட்டுக்கு போகணும்’
‘உன்னைய நான் என்ன புடிச்சா வெச்சிருக்கேன். ஓடு’
முழித்தேன்.
‘சென்னையில எங்க வேலை பாக்குற’
சொன்னேன்.
‘என்னவா இருக்க’
சாப்ட்வேர் இஞ்சினியர்.
‘எம்மகனும் தான் இஞ்சினியர் படிக்கறான். உன்னமாதிரி இல்ல. கம்ப்யூட்டர் இஞ்சினியர். இப்பவெல்லாம் அது படிச்சாத்தான் ஈசியா வேலை கிடைக்குதாம்’
ஓ அப்படியா.
‘சார் நான் கிளம்பலாமா’
‘பாத்து போ. ஓடு. கூட்டம் கும்பல் வந்தா பிழைப்பது உன் சாமர்த்தியம்’

எனக்கு விட்டால் போதும் போலத் தோன்றியது. ஓட்டமும் நடையுமாக நடக்கத்தொடங்கினேன். திரும்பிக்கூட பார்க்கவில்லை.
தூரத்தில் மாவிலிபட்டி விளக்கு தெரிந்தது. வேகத்தை கூட்டினேன். ஓடத்தொடங்கினேன். மூச்சு வாங்கியது.

விளக்கிலிருந்து ஊருக்கு பிரியும் பாதையில் திரும்பினேன். பயங்கர நிசப்தம்.
இன்னும் எப்படியும் இரண்டு கிலோமீட்டர் தூரம் போகணும்.
பிள்ளையார் கோவில் தெரிந்தது. அவசரஅவசரமாக கும்பிட்டுக்கொண்டு திருநீர் பூசிக்கொண்டேன். கீழ் மாவிலிபட்டிக்கு கொஞ்ச நேரம் தான். அங்கு சென்றுவிட்டால் ஆள் நடமாட்டம் தெரியும்.

என்னால் முடியவில்லை. சுடுகாட்டு பிட்சில கொளுத்தற வெயில்ல மணிக்கணக்கா கிரிக்கெட் ஆடியவன் தான். இப்ப உக்காந்து உக்காந்து இப்படி கொஞ்சதூரம் ஓடினா கூட முடியல. தண்ணீர் கிடைச்சா தேவலாம் போல இருந்தது. கீழ் மாவிலிபட்டிக்கு போயிட்டா எதாவது வீட்ல தண்ணி வாங்கி குடிக்கலாம்.

இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். இங்கே ஒரு பெட்டிக்கடை இருக்கனுமே. கிழே சில மரக்கட்டைகள் மட்டுமே தென்பட்டன. சுகவனம் டீ ஸ்டால் என்ற போர்டு கீழே கிடந்தது. இந்த கடை வெச்சிருந்த தாத்தா இப்ப என்ன செய்வார் என்கிற யோசனை என்னுள் எழுந்தது. அவருக்கும் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம்?

கொஞ்ச தூரத்தில் வீடுகள் தென்பட்டன. முதலாக தென்பட்ட வீட்டின் வாசற்படியில் ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தாள். பாட்டிகளின் முகத்தில் எப்பொழுதும் தோன்றியபடி இருக்கும் சோகம் அவர் முகத்தில் தெரிந்தது.
‘பாட்டி’
‘பாட்டி’
பாட்டி மெதுவாக நிமிர்ந்து பார்த்தது.
‘கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா’
‘இரு ராசா தாரேன்..’
பாட்டி எழுந்தார்.
‘ஏய் கிழவி! அவென் என்ன ஆளுகன்னு தெரியுமா? பாத்தா மாவிலிபட்டிக்காரன் மாதிரி இருக்கான்.’
‘யாரா இருந்தா என்னம்மா..பாவம் தவிச்ச வாயிக்கு..’
‘போ போயி மோந்து கொடு. நல்லா சொம்பு நெறைய குடிச்சிட்டு உம் புள்ளையோட இன்னொரு கையையும் வெட்டட்டும்’
கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். பாட்டியும் வரவில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை..
பாவம் பாட்டி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.
நடக்க ஆரம்பித்தேன்.

‘ஓ! ரெண்டு ஊரு சண்டையா மாறிடுச்சா. அதோ அங்கே தெரிகிறதே அது என்ன?’ எனக்கு புரியவில்ல. அருகில் சென்றவுடன் கவனித்தேன்.
எரிக்கப்பட்ட ஒரு பஸ். வெறும் கூடு மட்டுமே இருந்தது. பஸ்ஸை சுற்றி வந்து பார்த்தேன். இதோ இங்கே கீழே கிடப்பது என்ன? குனிந்து பார்த்தேன்.
குமட்டிக்கொண்டு வந்தது. ‘கடவுளே’ சட்டென்று திரும்பிக்கொண்டேன். உலகம் வேகமாக சுற்ற ஆரம்பித்தது. காக்கை ஒன்று தூரத்தில் கரைந்து கொண்டேயிருந்தது.
கண்ணை திறந்து பார்த்த பொழுது அங்கே பாதி எறிந்த குடிசை. ஓடி விடு என்று உள் மனசு எச்சரித்தது.

ஓட ஆரம்பித்தேன். அதோ! அதோ! யாரோ சிலர் உட்கார்ந்திருக்கிறார்களே.
அவர்கள் என்னையே பார்ப்பது போல இருந்தது.
கையில் என்ன அது. அறுவா.
என் கால்கள் நின்றன. இப்பொழுது அவர்கள் என்னை கூர்ந்து பார்த்து அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டனர். ஒருவன் எழுந்தான்.
வழியில் வைத்துக்கொண்ட பிள்ளையார் விபூதி வியர்வையில் இந்நேரம் கரைந்திருக்கும்.
ஓடிவிடு. ம்ஹ¥ம் கால்கள் ஒத்துழைக்கவில்லை.
பைக் சத்தம் கேட்டது.
நான் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
திரும்பிய நேரத்தில் இவன் ஏதாவது செய்து விட்டால்?
பைக் சத்தம் இப்பொழுது துள்ளியமாக கேட்டது. அருகில் வந்துவிட்டது போல. ஆப் செய்யப்பட்டது.
அவர்கள் ஒவ்வொருவராக கலைய ஆரம்பித்தனர்.
திரும்பிப்பார்த்தேன். போலீஸ்.

‘பேக்க அங்கயே விட்டுட்டு ஓடியாந்துட்ட. நாங்க என்ன கூரியர் சர்வீஸ் பண்றமா’
‘இந்த உன் பேக். வண்டியில ஏறு’
நான் முழித்தேன்.
‘ஐயா பைய குடுத்திட்டு உன்ன வீட்ல பத்திரமா கொண்டுபோய் விட்டுட்டு வரச்சொன்னார்’
‘வண்டியில் ஏறு’

இன்னொரு பைக் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன்.
‘வாங்க வக்கீல் சார்’ போலீஸ் சொன்னார்.
எங்க அண்ணன்.
‘ஆமா ஏட்டையா. என் தம்பி தான். ஏன்டா இவ்வளவு நேரம். வா வண்டியில ஏறு’
‘சரி ஏட்டையா. தாங்க்ஸ். இன்ஸ்பெக்டர்ட்ட கேட்டேன்னு சொல்லுங்க. அப்ப நாங்க கிளம்புறோம்’

பையை வாங்கிக்கொண்டேன். போலீஸை பார்த்து சிரித்தேன். வண்டி புறப்பட்டது.

குளிர்ந்த காற்று மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது. காக்கை இன்னும் எங்கிருந்தோ கரைந்து கொண்டேயிருந்தது.

(முற்றும்)

Disclaimer: இந்த கதையில் வரும் பெயர்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் மற்றும் சம்பவங்கள் யாவும் கற்பனையே.

நசீர் 5-6

5

மணி 4:30. பள்ளி முடிய போகிறது. நசீர் மறு நாள் லீவு என்ற சந்தோசத்தில் வீட்டிற்கு போவதற்கு தயாராக இருந்தான். ஆசிரியர் பாடத்தை முடித்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார். ‘பசங்களா. நாளைக்கு விநாயகர் சதுர்த்தி! நாளைக்கு மறுநாள் பிள்ளையார் ஊர்வலம் வர இருக்கிறது! கலவரம் ஏதும் வராமல் இருப்பது நல்லது!” நசீர் பிள்ளையாரின் வரலாற்றை முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளையாருக்கும் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிய வாய்ப்புண்டு. ஜின்னா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அன்றைய நாள் முடிவுக்கு வந்தது.

‘நசீர்! நாளைக்கு லீவு தானே. வாப்பா கடையில் செத்த ஒத்தாசையா இருக்கவேண்டியது தானே. இந்தா டீ வெச்சிருக்கேன், குடிச்சிட்டு வாப்பாவுக்கும் கொண்டுபோய் கொடு”

கடையில் ஏறிக்கொண்டே நசீர் கேட்டான் “வாப்பா எங்கே?” “தொலுகைக்குப் போயிருக்கிறாரப்பா. உட்கார்’ ‘இந்தாங்க சிச்சா, டீ குடிங்க’ டீயை அங்கிருந்த ஒரு காலி டம்பளரில் வாங்கிக்கொண்டே, ‘நாளைக்கு லீவாப்பா’ என்று கேட்டுவைத்தார்.

வாப்பா சிறிது நேரம் கழித்து வந்தார். பெயிண்ட் வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருந்தது. அவர்களது கடை இரும்பு வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. பெயிண்ட் விற்பனையும் உண்டு.

‘பெயிண்டெல்லாம் எங்க போகுது தெரியுமா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார், சிச்சா. தெரியும் என்பது போல தலையை ஆட்டினார் வாப்பா. ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. நசீர் எங்கே போகிறது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

‘நாளைக்கு ஊர்வலம் வருது, கடையை அடைச்சிரலாம்ன்னு சொல்றேன்” சிச்சா விடுவதாக தெரியவில்லை.

‘எதுக்கு அடைக்கனும்கிறேன்! அவுக ஒரு துலுக்கன் கடையின்னு பாத்தா பெயிண்ட் வாங்கிட்டு போறாக? நாம் வியாபார். ஊர்வலம் நடந்தா நடக்கட்டுங்கிறேன். நாம நோன்பு இருக்கிறோமில்ல. சப்பரம் கட்டரோமில்ல. ஊர்வலம் வருகிறோமில்ல. அது போலத்தான்ங்கிறேன்! நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறேன்!”

‘சலீம் பாய்!’ குரல் கேட்டுத் திரும்பினார் வாப்பா. ‘வாங்க பாலு நாயக்கரே! வாங்க! என்ன விசயம்! என்னை தேடிட்டு கடை வரைக்கும் வந்திருக்கீங்க! என்ன சேதி! நல்ல சேதிங்கறேன். டேய் நசீர். சித்தப்பாக்கு டீ, பன்னு வாங்கியாடா. உக்காரு பாலு!”

பாலு உட்கார்ந்தார். ‘என்ன சலீம் வீட்டுக்கும் கடைக்கும் எத்தன வாட்டி அலையுறது! உன்னப்பாக்கவே முடியல! என் பொண்ணுக்கு கல்யாணம்..அதான்…”

“கூப்பிட வந்தீராக்கும். நான் வரமாட்டேனா! கல்யாணத்தன்னைக்கு நான் தான் முதல் ஆள். வனஜா என் பொண்ணு பாலு! இன்னிக்கு கடையில கூட்டம் அதிகம். இல்லைன்னா இப்பவே வந்திருப்பேன்! பாத்திமாவ போகச்சொல்லியிருந்தேனே”

சீனி டீ குடித்து முடித்திருந்தார். “இன்னும் நிறைய இடம் போகணும். கொஞ்சப்பேருக்கு பத்திரிக்கை வைக்க விட்டுப்போயிடுச்சு. கால் தான் வலிக்குது”

“டேய் நசீர். சித்தப்பாகூட போய்ட்டு வா. சைக்கிள் எடுத்துக்கோடா.” சலீம் நசீரை உடன் அனுப்பிவைத்தார்.

படியிறங்கிய பாலு நின்று, “அண்ணி எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். இரவு வர தாமதம் ஆகும் என்று உங்களிடம் சொல்லச்சொன்னார்கள். அப்ப வரேன் சலீம்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். நசீர் அங்கிருந்த சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு, பெடலை மிதிக்க ஆரம்பித்தான். சக்கரம் சுற்றத்தொடங்கியது.

வாப்பா சிச்சாவிடம் திரும்பினார். ‘பாரு! தாயா பிள்ளையா சகோதரனா பழகுறோம்! வேறு படுத்திப் பார்க்கக் கூடாதுங்கறேன்!’ என்று சிரித்தார்.

சிச்சாவும் சிரித்து வைத்தார்.

6

35 அடி கணபதி சிலை கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகிலிருந்து பார்க்கும் பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. விநாயகர் கையில் நிறைய லட்டுகளுடன் அமர்ந்திருந்தார். பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. நேரம் செல்ல செல்ல வருவார்கள் போல. ‘கணபதி என்றிட கவலை தீர்ந்திடும்…’ சீர்காழி கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்தார். அருகில் வயிறு ஒட்டிய நிலையில் பரிதாபமாக கையில் வெறும் தட்டுடன் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய பார்வை விநாயகரின் கையில் இருந்த லட்டுகளின் மீதே இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து விநாயகர் தான் சாப்பிட்டது போக, தனக்கும் சில லட்டுகள் கொடுப்பார் என்று அவள் நினைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

சிறுவர்கள் சிலர் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள். பக்தர்கள் சிலர் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தனர். சில தொப்பித் தலைகளும் தெரிந்தன. பிள்ளையாருக்கு பாதுகாப்பு. வழிப்போக்கர்கள் சிலர் நின்று, நிமிர்ந்து பார்த்து, அதிசயித்து சென்றனர். அவர்களின் முகங்கள் இதை எப்படி தூக்கிக்கொண்டு போய் கரைப்பார்கள் என்கிற தீவிர சிந்தனையை உடையதாக இருந்தன.

கூட்டம் திடீரென்று சலசலத்தது. அவர்களுக்கெல்லாம் தலைவர் போல இருந்தவர் வேகவேகமாக வந்து கொண்டிருந்தார். கையில் சில மாலைகளும், பிரசாத தட்டுகளும் இருந்தன. உடன் புரோகிதர்கள் சிலரும் வந்தனர். பூஜை ஆரம்பம் ஆனது.

பூஜை நடப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் பிரசாதம் வழங்கப்படும் என்று மைக்கில் அறிவிக்கப்பட்டது. சிறுமி ஆர்வமானாள். இப்பொழுது அவளைப் போலவே நிறைய சிறுவர்களும் சிறுமிகளும் கைகளில் தட்டுகளுடன் அங்கே குழிமியிருந்தனர்.

பக்தர்களிடத்திலிருந்து கணபதி கோஷம் வலுவாக எழுந்துகொண்டிருந்தது.

பூஜை முடிவுற்றது. பிரசாதம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. சிறுமி முண்டியடித்துக்கொண்டு சென்றாள்.

அங்கே ஒரு அவசரக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. கணபதியை கரைப்பது பற்றியும் அவர் ஊர்வலம் செல்லவிருக்கும் பாதை பற்றியும் தலைவர் மற்றவர்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டிருந்தார்.

“இங்கிருந்து கிளம்பி அக்ரஹாரத் தெரு தாண்டி, குறுக்குத் தெரு வழியாக செல்கிறோம்’

‘அப்புறம்’

“கீழத்தெரு வழியாக மெயின் ரோட்டை அடைந்து, பெரிய ரத வீதி வருகிறோம்’

‘இதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடுமே..அப்புறம்’

‘சுண்ணாம்பு காலவாசல் வழியாக மசூதி தெருவுக்குள் நுழைகிறோம்’

‘மசூதி தெருவா? வேண்டாம் படப்படித் தெருவழியாக போய்விடுவோம்’

‘படப்படி தெரு வழியே போக முடியாது தலைவரே. இந்த வருடம் சிலை கொஞ்சம் பெரியது. கரெண்டு கம்பிகளையெல்லாம் கழற்ற வேண்டும். படப்படித் தெருவை விட்டு வெளியேறும் போது இருக்கும் அந்த குறுகலான பாதையில் லாரி போகமுடியாது.’

அங்கே சலசலப்பு அதிகமானது. இளவட்டங்கள் கத்தத் தொடங்கியிருந்தனர். அதெப்படி? ஏன் பயப்படவேண்டும்? என்கிற கேள்விகள் எழுந்தன.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் அங்கி சுற்றி இங்கு சுற்றி மசூதி தெருவுக்குள் நுழையும் நேரம் அவர்கள் தொலுகை முடிந்து திரும்பும் நேரம். ஏதும் அசம்பாவிதம் நடக்கக் கூடாதே!’

‘அதெல்லாம் ஒன்றும் நடக்காது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றனர் இளவட்டங்கள்.

இளவட்டங்களின் ஆர்வத்தைப் பார்த்து தலைவர் மகிழ்ந்தாலும், கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. பிள்ளையார் அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார். “ஆமா பாலு எங்க? வருவாரா நாளைக்கு?” “வருவார் தலைவா. அவர் பொண்ணுக்கு கல்யாணம் நாளை மறுநாள். ஆனா கண்டிப்பா அன்னைக்கு சாயங்காலம் வந்திடுவேன்னு சொல்லியிருக்கார்”

(தொடரும்)

நசீர் 3-4

(குறுநாவல்)

3
எங்க ஊர் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றோம். ஊருக்கு போனஉடன் போன் பண்ணு என்று சொல்லிவிட்டு ராஜேஷ் போய்விட்டான். இவன் கூட வந்தால் நன்றாக இருந்திருக்கும். எவ்வளவு சொன்னாலும் மாட்டேனுட்டான். தனியாகத்தான் போகவேண்டும். மதுரைக்கு போகும் பஸ்ஸை தேட ஆரம்பித்தேன்.

பஸ் கிளம்பிவிட்டிருந்தது. நான் 28ஆவது சீட். எனக்கு அருகில் இருந்த ஜன்னல் சீட் காலியாக இருந்தது. ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்து கடையில் இருந்த டொரினோ பாட்டில்கள் எல்லாம் ஆசிட் பாட்டில்கள் போலத் தோன்றவே, நகர்ந்து பழையபடியே அமர்ந்து கொண்டேன். எதுக்கு வம்பு?!

பஸ் விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. நல்ல இருட்டு. பஸ்ஸ¤க்கு உள்ளேயும் வெளியேயும். பஸ் வேகம் குறைந்தது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எட்டிப்பார்த்தேன். பஸ்ஸின் ஹெட் லாம்ப் வெளிச்சத்தில் ஒரு 10,15 பேர் கையில் எதேதோ வைத்துக்கொண்டிருந்தனர். டிரைவர் இஞ்சினை ஆப் செய்தார். இறங்கி ஓடத்தொடங்கினார். பயணிகள் அனைவரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஓடுவதற்கு தயாராக எழுந்தனர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. அனைவரும் என்னைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள். கதவு சாத்தப்பட்டது. பஸ் எங்கிலும் பெட்ரோல் நெடி. அருகில் இருந்தவர் ஜன்னலை உடைக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வசந்தன் கண் முன் வந்தான். பிள்ளையாரே அந்த ஆட்டோ தாடிக்காரனுக்கு பயந்து குங்குமத்தை அழித்தது தவறுதான். மன்னித்துவிடு என்று வேண்டுகிறேன். பிள்ளையார் சிரிக்கிறார். அதனால் என்ன இந்தா குங்குமம் என்று கை நீட்டுகிறார்.. அதற்குள் எனக்கு அருகில் இருந்தவர் குதித்துவிடுகிறார். அடுத்து குதிக்கப்போகும் மற்றொருவரிடம் பிள்ளையார் குங்குமத்தை குடுக்கிறார். அவன் வாங்கிக்கொள்ளாமல் குதித்து விடுகிறான். அவன் குதித்தவுடன் அவனது கைகள் வெட்டப்படுகிறது. தீ எறிய ஆரம்பிக்கிறது. நான் கதறுகிறேன். பிள்ளையார் துதிக்கையில் காற்று ஊதி, தீயை அணைத்துவிட முயற்சிக்கிறார். நான் கதறுகிறேன். முருகா, ஞான பண்டிதா….விழுப்புரம் விழுப்புரம் டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம். வண்டி 15 நிமிடம் நிற்கும். சத்தம் தெளிவாக கேட்டது. அடப்பாவிகளா பஸ்ஸே எறிந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு டீ காபி ஒரு கேடா!

சுற்றும் முற்றும் பார்த்தேன். பயணிகள் டீ குடிக்க இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

எழுந்து உட்கார்ந்தேன்.

4

டீ குடித்து விட்டிருந்தேன். கொஞ்சம் தெளிந்தார் போல இருந்தது. பஸ்ஸில் ஏறினேன். என் இருக்கையில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார். எதிர் இருக்கையில் தலையை கவிழ்ந்திருந்தார். அருகில் சென்றேன். ‘சார்’ பதில் இல்லை. ‘சார்’ சார் நிமிர்ந்து பார்த்தார். சார் இல்லை. ‘தம்பி. இது என் இருக்கை. நீங்கள் ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொள்ளுங்கள்’ என்றேன். தம்பி பார்த்தார். கோதுமை நிறம். அழகான முகம். மீசை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. கூர்மையான கண்கள். சிரமப்பட்டு நகர்ந்து உட்கார்ந்தான். நான் என் சீட்டில் அமர்ந்தேன். என்னால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. சிலரது முகம், ஒருமுறை பார்த்தால் மறுமுறையும் பார்க்கத் தோன்றும் காந்தத் தன்மை கொண்டதாக இருக்கும். மறுபடியும் பார்த்தேன். அவன் முகத்தை ஜன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டான்.ம்ம்ம்ம்..என்ன செய்ய..சிலரது முகம் என்னைப்போல இரும்பாய் இருக்கிறது.

பஸ் கிளம்பியது. நடத்துனர் பயணிகள் எண்ணிக்கையை சரி பார்த்தார். சரியாக இருந்திருக்கும் போல, என்னிடம் வந்தார். என்னிடம் எதற்க்காக வருகிறார்? நான் எனது டிக்கெட் இருக்கிறதா என்று என் சட்டைப் பையில் பார்த்தேன். ஐயோ காணவில்லை. எங்கே வைத்தேன். பேண்ட் பாக்கெட்டில். ஐயையோ காணோமே. என்ன செய்ய. எங்கே பொகணும் என்றார். ‘அது…வந்து..’ என்று ஆரம்பித்தேன். ‘மதுரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்…’ என்றது கணீர் குரல். பையன் டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தான். நான் அமைதியானேன். மணி பார்த்தேன். 11:45. அட! இதோ டிக்கெட்டை கடிகாரத்தில் சொருகி வைத்திருக்கிறேன்.ம்ம்..புத்திசாலி! பிழைத்துக்கொள்வாய். என்று நினைத்து கொண்டேன்.

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. பஸ் எறிந்த பொழுது நான் என்ன ஆனேன் என்று தெரியவில்லை. இந்த முறை அப்படியெல்லாம் விடக்கூடாது! கடைசி வரை பார்க்கவேண்டும்! இன்னும் நன்றாக கண்களை மூடிக்கொண்டேன். விசும்பும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. கனவில் படம் ஏதும் தெரியவில்லை. சந்தேகம் வரவே கண் முழித்துப் பார்த்தேன். பையன் விசும்பிக்கொண்டிருந்தான். கனவல்ல நிஜம் தான் போலிருக்கிறது. எனக்கு என்னவோ போல் இருந்தது.

சிறுது நேரம் அழுவதும் சிறிது நேரம் அமைதியாக இருப்பதும் என்று இருந்தான் அந்தப்பையன். எனக்கு வருத்தமாக இருந்தது!

‘தம்பி’ பதில் இல்லை. அழுகை நின்று விட்டது. ஸ்விட்ச் வெச்சிருப்பானோ? ‘தம்பி’ ம்ஹீம் அசையவில்லை. ‘யாருப்பா நீ? ஏன் அழுகிற? டிக்கெட் தான் எடுத்துட்டியே? பிறகு எதுக்கு அழுகிற? மேற்கொண்டு ஊருக்கு போக உன்னிடம் பணம் இல்லியா? ஏன் அழுகிற?’ பதில் இல்லை.

‘தம்பி உன்னுடைய சோகத்தை என்னிடம் சொல்லக்கூடாதா’

நிமிர்ந்து பார்த்தான். அந்த இருளிலும் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. ‘நீங்கள் இந்துவா’ என்றான். நான் பதில் ஏதும் சொல்லவில்லை.

‘என் பெயர் நசீர்’ என்றான்.

(தொடரும்)

நசீர் 1-2

(குறுநாவல்)

முன்னுரை:
நான் சென்னையில் 2001 ஆம் ஆண்டு வேலை செய்யத் தொடங்கிய போது எழுதிய குறுநாவல் இது. என் அறை நண்பர்கள் இதை விரும்பிப் படிப்பார்கள். என் நண்பன் நவநீதகிருஷ்ணன் தான் எனது முதல் ரீடர். ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் வாங்கி படித்து விடுவான். நான் முழுவதுமாக எழுதி முடித்த ஒரே தொடர் கதை இது. இதை அப்படியே இங்கு கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்ய இருக்கிறேன்.

1

‘மூனு நாள் லீவு தெரியுமா?’ என்றான் ராஜேஷ். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘விளையாடுறியா! வீட்டுக்கு போக கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம், உனக்கு மூனுநாள் லீவு கேட்கிறதா?” என்றேன் சிரித்துக்கொண்டே. ‘இல்லடா மூனுநாள் லீவாம். MD சொன்னார்’ என்றான். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம் மலேசியாவிற்கு புரோகிராம் செய்து கொடுக்கும் நிறுவனம். வேலை பலு அதிகம். அப்படியிருக்க மூனுநாள் லீவு என்பது இயலாத காரியம். ‘சரி! எதற்காக லீவு?’ என்றேன். ‘டிசம்பர் ஆறு வருதுல்ல அதுக்குத்தான்’ என்றான் ராஜேஷ். எனக்கு பகீர் என்றது. டிசம்பர் ஆறுக்கெல்லாமா மூனு நாள் லீவு விடுவார்கள். எதற்காக விடுமுறை விடவேண்டும். ஏன் இப்படி செய்கிறார்கள். ‘மலேசியாவில் ரம்ஜான் கொண்டாடுகிறார்களாம். அதனால் நமக்கு இங்கே மூனுநாள் லீவுடா’ என்றான். ‘ஓ ரம்ஜானா..அதற்குத்தான் லீவா…’ ச்சே நான் எதற்கு வேண்டாததையெல்லாம் கற்பனை செய்து கொள்கிறேன். வீட்டிற்குப் போகலாமா! என்னுடைய ஊர் மதுரைக்கு பக்கமாக உள்ள ஒரு கிராமம். கிராமம் என்றாலும் சற்றே பெரிய கிராமம். அரசியல் கூட்டங்களுக்கும், சாதிக் கூட்டங்களுக்கும், மத போதகர்களுக்கும், ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பெயர் போன ஊர். மதுரைக்கு அருகில் இருப்பதால் கூடுதல் அங்கீகாரம். வீட்டிற்கு போய் ஒரு மாதம் ஆகி விட்டதால் டிசம்பர் ஐந்து கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

இரவு அறையில் வசந்தன் வந்திருந்தான். தானும் ஊருக்கு போக வேண்டும் என்றான். ‘எப்படா கிளம்பற’ என்றேன். ‘வெள்ளிக்கிழமை இரவு. நீ எப்ப போற’ ‘நான் டிசம்பர் ஐந்து. வியாழன் இரவு போகிறேன்’ ‘உனக்கும் ரம்ஜான் அன்று லீவு தானே. நீயும் வியாழக்கிழமையே கிளம்பினால் நாம சேர்ந்தே போகலாம்லடா’ ‘இல்லடா நான் வரல. மறுநாள் டிசம்பர் 6. நான் வரலப்பா’ எனக்கு என்னவோ போல இருந்தது. பய்மாகவும் இருந்தது. எதுவும் அசம்பாவிதமாக நடந்து விடுமோ. நாம போகும் பஸ்ஸை திடீரென்று ஒரு பதினைந்து பேர் சூழ்ந்து கொண்டு கதவை அடைத்து விட்டு தீ வைத்து சென்று விடுவார்களோ. ஐயையோ வேண்டாம். வேண்டாம். பஸ் வேண்டாம். டிரெயினிலே போகலாம். டிரெயினா? அது பஸ்ஸைவிட பாதகமாயிற்றே. ஒரே ஒரு காந்தக்கல் போதுமே. ச்சே ஏன் இப்படி நான் நினைக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. வருவது வரட்டும். நான் டிசம்பர் 5 கண்டிப்பாக ஊருக்கு போவேன். இதைவிட்டால் எனக்கு வேறு லீவு கிடைக்காது. லீவு போனால் வேறு லீவு வரும். ஆனால்..ச்சே..நல்லதையே நினைப்போம். பேப்பரை புரட்டினேன். டிரெயினை கவிழ்க்க சதி! தீவிரவாதிகள் பிடிபட்டனர்! செய்தியை படித்தேன். பஸ்ஸில் போவது என்று முடிவு செய்து கொண்டேன். வசந்தனை பார்த்தேன். வேறொரு பேப்பரில் ஆழ்ந்திருந்தான்.

2
மணி 5:30. வேலை முடிந்து கிளம்பினேன். ராஜேஷ் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் என்பதால், அவனும் என்னுடன் வந்தான். அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக்கொண்டேன். ராஜேஷ¤ம் தான். பிள்ளையாரிடம் அன்று வேண்டுதல் பலமாக வைத்தேன். ஏன் என்றே தெரியவில்லை. நிறைய நேரம் சாமி கும்பிட்டு விட்டேன். உக்கி வேறு. எப்பொழுதும் மூன்று தான். இன்று மூன்று அதிகமாக போட்டேன். குங்குமமும் திருநீரும் இட்டுக்கொண்டேன். ராஜேஷப் பார்த்தேன். அவனைக் காணவில்லை. இவனுக்கு இதே வேலை…ச்சே..தேடினேன். பக்கத்துக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தான். பாதி டீ குடித்துவிட்டிருந்தான். நிறைய நேரம் ஆகிவிட்டிருந்தது போல! ‘என்னடா பலமான வேண்டுதல் போல தெரியுது!’ ‘ஆமா…சும்மாவா… ஊர் போய் சேரனுமில..ஒரு டீ சொல்லு..’

ஆட்டோ பிடித்தோம். உள்ளே சென்று உட்கார்ந்தேன். ஆட்டோ நகர்ந்தது. ராஜேஷ் ஒன்றுமே பேசவில்லை. ரியர்வியூ மிரரில் ஆட்டோ ஓட்டுனரின் முகம் தெரிந்தது. தாடியெல்லம் நிறைய வைத்திருந்தார். கொஞ்சம் முரடாகத்தான் இருந்தார். எனக்கு என்னவோ ஒஸாமா ஞாபகம் வந்தது. ஆட்டோவை வேறு வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். கொஞ்சம் மெதுவாக சென்றால் தேவலாம் போல தோன்றியது. சட்டென்று அவர் என்னை திரும்பிப்பார்த்தார். என்னை முறைப்பது போல தோன்றவே, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். கொஞ்சம் நகர்ந்து ஆட்டோவின் இடது ஓரமாக அமர்ந்தேன். கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தேன். சினிமா போஸ்டர்க்ள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். படம் ஓடுதோ இல்லியோ போஸ்டர் ஓடுது. ஆட்டோ சிக்னலில் நின்றது. பம்பாய் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மனிஷாவைக்கூட பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பினேன். கண்ணாடி தெரிந்தது. இப்பொழுது கண்ணாடியில் எனது முகம். திருநீரும் குங்குமமும் நிறைய இட்டுக்கொண்டிருந்தேன். குங்குமம் மட்டும் பெரிதாக தெரிந்தது. ஆட்டோக்காரர் நிமிர்ந்து பார்த்தார். நான் வேகவேகமாக குங்குமத்தை அழித்தேன்.

இப்பொழுது பிள்ளையார் குங்குமத்தை அழித்துவிட்டோமே என்ற பயம் வேறு சேர்ந்து கொண்டது.

(தொடரும்)

காந்தம்-9

முன்னும் பின்னும்.
4

இரவு வெக்கையாக இருந்தது. காற்று கொஞ்சம் கூட இல்லை. அந்த மொட்டைமலையில் இருந்த ஒற்றை ஆலமரம் என்ன செய்வதென்று தெரியாமல், தனக்கு கீழே குழுமியிருந்த சிறுவர்களை எரிச்சலோடு பார்த்தது. இன்றைக்கும் தூக்கம் போச்சா என்று அது நினைத்துக்கொண்டது போல.சிறுவர்கள் பல வயதில் இருந்தனர். ஒரு சில பெரிய பையன்கள் கூட அந்த கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் எல்லோரும் எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தனர். அவர்கள் குழுமியிருந்த இடத்தில் நடுநாயகமாக சுள்ளிகளால் தீ மூட்டப்பட்டிருந்தது. அந்த தீ மிக மெதுவாக எரிந்துகொண்டிருந்தது. சிலர் கொண்டுவந்திருந்த சாக்கு பைகளை விரித்து படுத்து வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தனர். அவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த சிலர் பாதியிலே எண்களை மறந்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் நேற்று பார்த்த நட்சத்திரம் இன்றும் அதே இடத்தில் இருக்கிறதா என்று தேடத்துடங்கினர். கூட்டத்திலிருந்து காளி எழுந்தான்.

படுத்துக்கொண்டிருந்தவர்கள் எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள். எல்லோரும் காளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். “என்ன படம்டா காளி? மகிழன் நடிச்ச படமா?” “இல்லை” “பின்ன?” “கணேசனா?” “ம்ம்” “பொறு பொறு நாஞ்சொல்றேன்” “ம்ம்” “மனோகரா.சரியா?” “இல்ல” “பின்ன?” “நடிக்கறத பார். பிறகு சொல்லு”

காளி குரலை கணைத்துக்கொண்டான். ஏதோ சண்டைக்கு தயாராக நிற்பவன் போல விரைத்து நின்றான். அவன் முகம் பரவசம் அடைந்தது போல இருந்தது.

“சிங்கத்திருநாடே நீ சிலந்திக்காடாய் மாறியது எப்போது?” “பராசக்தி டா. எனக்கு தெரியும். எனக்கு தெரியும்.” என்று கத்தினான் ஒருவன். கொஞ்சம் வளர்ந்திருந்த சிறுவர்கள் அவன் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தனர், “சும்மா பாருடா அவசரக்குடுக்க” அவன் தலையைத் தடவிக்கொண்டே உட்கார்ந்தான். அவன் குட்டியவனை இரண்டுமுறை திரும்பி முறைத்தான்.


“சிங்கத்திருநாடே நீ சிலந்திக்காடாய் மாறியது எப்போது?
வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே..நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாள்களாக?
வீரப்பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே நீ வீதிகளிலே விபச்சாரிகளைத் திரியவிட்டு உன் விழிகளை மூடிக்கொண்டது ஏன்? ஏன்?
வானத்தை முட்டும் மாளிகைகள்! மானத்தை இழந்த மனிதர்கள்! உயர்ந்த கோபுரங்கள்! தாழ்ந்த உள்ளங்கள்!”

காளி கைகளை அசைத்து வீராவேசமாக பேச கூட்டம் ஆழ்ந்து ரசித்துக்கொண்டிருந்தது. சில சிறுவர்கள் கைத்தட்டிக்கொண்டனர்.

“நான் கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக.
பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல்வேஷமாகி விட்டதை கண்டிப்பதற்காக.”

காளி தலையை தாழ்த்தி எறிந்து கொண்டிருந்த நெருப்பையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அனைவரும் அமைதியாய் இருந்தனர்.

“பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பகதி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள்..ஓடினாள்..வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்”

கைதட்டல் காதைப்பிளந்தது. அருகிலிருந்த மரத்திலிருந்த சிறுசிறு பறவைகள் முழித்துக்கொண்டன. இந்த வசனத்தை காளி நூறாவது முறையாக சொல்வதைக் கேட்ட ஆலமரம் தலையைச் சிலுப்பி தன் கொந்தளிப்பைக் காட்டியது. காற்று மெதுவாக வீசியது. சுள்ளிகள் தீர்ந்துபோய் விட்டமையால் நெருப்பு அணைந்து கரிய புகை மட்டும் மேலெழும்பிக்கொண்டிருந்தது.

தூரத்தில் இருட்டில் முடங்கிக்கிடந்த ஒரு தேசாந்திரி கண்கொட்டாமல் காளியையே பார்த்துக்கொண்டிருந்தார்.

***

ஆல் இந்தியா ரேடியோ. அகில இந்திய வானொலி நிலையம். செய்தி அறிக்கை தொடர்கிறது. காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட திருமதி.இந்திராகாந்தி, இன்று, இந்திரா காங்கிரஸ் என்ற புதிய தேசியக்கட்சியைத் தொடங்கினார். விவசாயத்துறை அமைச்சராக பதவிவகித்த திரு.ஜக்ஜீவன் ராம் இந்திராக காங்கிரஸ¤க்கு தலைவராக நியமிக்கப்பட்டார். நாளை மறுநாள் நடக்கவிருக்கும்..

“ம்ம்..அந்தம்மா தெகிரியமான பொம்பளையப்பா..யாரும் ஒன்னும் —-முடியாது” தனது வேட்டியின் மடிப்பில் ஒளிந்துகொண்டிருந்த பொடிட்டப்பாவை எடுத்து டப் டப் என்று அதன் தலையில் தட்டினார், வேலுச்சாமி. வேலுச்சாமியின் கைகள் மிகவும் மெலிந்திருந்தன. புறங்கையின் நரம்புகள் மிகத்தடிமனான சரடு போல ஓடிக்கொண்டிருந்தன. கைகளில் அடர்த்தியான சுருள்சுருளாக வெள்ளைமுடிகள். கண்கள் மிகவும் சிறுத்து ஒருவிதமான தளர்வோடு இருந்தன. சட்டையணியாத மார்பில் வெள்ளையும் கருப்புமாக முடிகள் மண்டிக்கிடந்தன. தலையில் முடி அடர்த்தியாக, சிறிதளவு கூட எண்ணெய் பார்க்காமல், சிக்காக இருந்தது. குடிக்கத்தண்ணீருக்கே பத்துமைல் தூரம் நடக்கும் போது, தலைக்கு எண்ணெய் முக்கியமா என்ன?

“யேவ், யாரது போறவ? அம்முத்தாயா?” “ம்ம்..ஆமாங் மாமோய். என்ன மாமனுக்கு இப்போத்தான் பொழுது விடிஞ்சுச்சாக்கும்?” “ஏபுள்ள. ….கழுவ தண்ணியில்லீன்னாலும் எகத்தாளத்துக்கு ஒன்னும் கொரச்சல் இருக்காது..எங்க போறவ விடுக்கு விடுக்குன்னு?” “ம்ம்ம்..கலெக்டராபீஸ¤க்கு கையெழுத்துப்போட போறேன் மாமா..வாறியளா?” “அடி……. எங்கடி போறவன்னா எகத்தாளம் கேக்குதா?” “மாமரத்துப்பட்டியில கல்லொடைக்க ஆள் தேடுறாகளாம் மாமோய்..அதான் போறேன்..பிள்ளைங்க வயிறு நிறையனும்ல..இன்னியும் மழைய நம்பி உக்காந்திருக்கமுடியாது மாமோய்..” “ம்ம்..மானம்பாத்து வாயப்பொளந்து கெடக்குற காடுக என்னக்கி மழதண்ணியப்பாக்கப் போதுகளோ தெரியல..போதாயி..போ..பொழப்பபாக்கனும்ல..அதுயாரு கூட ராக்கம்மாவா?” “ஆமா மாமோய்..அவுகளும் கல்லொடைக்கத்தாம் போயிருக்காக..என்னிய வரப்பெடாதுன்னுதான் சொன்னாக..ஹ்ம்..போனா கத்துவாக..நான் போறேன் மாமா” “அதுயாரு காளியா?” “ஆமா மாமா..டேய் காளி தாத்தா கூப்படறாக பாரு போய் என்னான்டு கேளு” “சரி மாமா நாங்க வாறோம். செத்த இந்த பயல பாத்துக்கோங்க..வெயில அலையவிடாதீக..”

காளி வேண்டாவெறுப்பாக நடந்து வந்து, வேலுச்சாமியின் அருகில் நின்றான். ஒன்றும் பேசாமல், என்ன என்பது போல பார்த்தான்.வேலுச்சாமி ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் பார்த்தவர், “மூக்கையன் கடையில போயி கொஞ்சம் பொடி நான் கேட்டேன்னு வாங்கியா..” என்றார். காளி, வேலுச்சாமியில் கையில் இருந்த காலி பொடிட்டப்பாவை வாங்கிக்கொண்டு ஓட்டம்பிடித்தான்.

***

“ம்ம்..மூக்கையன் கடையில இல்ல..அந்த அக்காதான் இருந்தாங்க..இந்தாங்க..” வேலுச்சாமி பொடி டப்பாவை வாங்கிக்கொண்டு, மீண்டும் இரண்டு மூன்றுமுறை அதன் தலையில் தட்டினார், பிறகு நிதானமாக, மூடியைத் திறந்து, பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து லாவகமாக அதிலிருந்து பொடியை இரண்டு விரல்களாலும் எடுத்தார், இரண்டு முறை கையை உதறினார். பிறகு இன்னொரு கையால், பொடி அடைத்து பொடி அடைத்தே பெரிதாகிப்போயிருந்த மூக்கின் வலது புறத்தை அடைத்துக்கொண்டு, இடது புறத்தில் பொடியைத் திணித்து, இரண்டு மூன்று முறை உறிஞ்சினார். காளி அந்த உறிஞ்சலில் தான் ஈர்க்கப்படுவதைப் போல உணர்ந்தான். எதற்கும் பக்கதிலிருந்த தூணைப் பிடித்துக்கொள்வது நல்லது என்று தோன்றியது அவனுக்கு. பிறகு இடதுபுறத்தை அடைத்துக்கொண்டு, வலது புறத்தில், அதே போல, மீதமிருந்த பொடியைத் திணித்து, உறிஞ்சிக்கொண்டார். கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த, காளியை பார்த்து, “என்னடா பாக்குற?” என்றார் சிரித்துக்கொண்டே, இப்பொழுது அவரது குரல் கணமாக இருந்தது போல தோன்றியது காளிக்கு. மீண்டும் வலது புறத்தையும் இடது புறத்தையும் ஒரு தடவை விரல்களால் அடைத்து, விடுவித்தார். பிறகு காளியிடம், “எங்க கைய காட்டு” என்றார். காளி முடியாது என்று மறுத்து ஓடப்பார்த்தான். வேலுச்சாமி லாவகமாக அவனைப் பிடித்து நிறுத்தினார், வலது கையை மடக்கி, அவனை இறுக்கமாக, ஓட விடாமல், பிடித்துக்கொண்டு, நன்றாக இறுக்கமாக மூடியிருந்த இடது கையை விடுவித்தார். உள்ளே கொஞ்சம் மூக்குப் பொடி இருந்தது. அதை தட்டிவிட்டார் வேலுச்சாமி. மூக்குப்பொடி மண்ணோடு கலந்தது. இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த பொடியை தனது அழுக்கான வேட்டியில் துடைத்துக்கொண்டார். “இந்த வயசில உனக்கு பொடி கேக்குதா?” “இல்ல தாத்தா, சும்மா எப்படி இருக்குன்னு..” “…பயலே..அதுக்கெல்லாம் இன்னும் வயசிருக்குடா..இப்படி உக்கார்”

காளி அங்கிருந்த திண்டில் ஏறி உட்கார்ந்து கொண்டான். சூரியன் உச்சத்திற்கு வந்திருந்தது. வெயில் பளபளத்தது. வெக்கை அந்த மடத்தை வெகுவாக ஆக்கிரமித்திருந்தது. ஆங்காங்கே காக்கைகள் கத்திக்கொண்டிருந்தன. எங்கும் தண்ணீர் வற்றிவிட்ட இந்த ஊரில் ஏன் காக்கைகள் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்று காளிக்கு புரியவேயில்லை. அந்த சமயம் பார்த்து “நச்” என்று ஒரு தும்மல் வந்தது அவனுக்கு. தும்மல், அந்த மடத்தின் தூண்களில் மோதி, விட்டத்தை அடைந்து, சுவற்றில் அறைந்து, உள்ளே சாந்தமாக, தூசியும் நூலாம்படையும் மண்டிக்கிடந்தும், எழுந்து ஓடாமல், இன்னும் அப்படியே எனக்கென்ன வந்தது என்று, உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரின் துதிக்கையில் பட்டு, வெளியே விழுந்தடித்துக்கொண்டு ஓடியது. தும்மலின் சத்தத்தால், சிறிதும் பாதிக்கப்படாமல், அங்கே உறங்கிக்கொண்டிருந்தனர், சில கடின உழைப்பாளிகள். வெகு சிலர், திரும்பிப்படுத்து, சிறு சலசலப்பை ஏற்படுத்தினர். மற்றபடி எப்பழுதும் போலவே அன்றும், அந்த ஊர் மிகவும் அமைதியாகவே இருந்தது.

காளி சிறுது தூரத்தில், நிலத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஒற்றை மாட்டுவண்டியயே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். மாடு எங்கே சென்றிருக்கும்? அருகில் தேடினான். எங்கும் காணவில்லை. “நல்லா வசனம் பேசுவியாமே?” “ம்ம்..என்ன தாத்தா?” “நல்லா, சத்தமா, கணேசன் மாதிரி அழுத்தமா வசனம் பேசுவியாமே?” “ம்ம்ம்..பேசுவேன்..ஏன் தாத்தா,அந்த ஊர்ல, நாம தண்ணியெடுக்கப்போவமில்ல அந்த ஊர்ல மட்டும் எப்படி தண்ணியிருக்கு?” “ம்ம்” வேலுச்சாமி மடியிலிருந்து பீடி ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டார். வெளியேறிய பீடிப்புகையை அழுத்தமாக சுவாசித்தான் காளி. ஓசி பீடிப்புகை. “எங்க, மனோகரா கணேசன் மாதிரி பேசு பாப்போம்” “ஏன் நாமா நெதமும் அம்புட்டு தூரம் நடக்கனும்? அங்க இருக்குற தண்ணிய வாக்கா போட்டு இங்க கொண்டுவர முடியாதா?” வேலுச்சாமி மெலிதாக இருமினார். வெளியேறிய பீடிப்புகையை, மீண்டும் அழுத்தமாக உறிஞ்சிக்கொண்டான் காளி. “ஏந்தாத்தா முடியாதா?” வேலுச்சாமி கைகளால் காளியின் தலையை வருடினார். “ரொம்ப செலவாகும்டா..ரொம்ப செலவாகும்” “உங்களுக்கு ஒரு கால் எப்படி ஒடஞ்சது? சண்டையிலயா?” “ம்ம்” “வெட்டிட்டாங்களா?” “ம்ம்” “ஐயோ..எப்படி? கத்திய வெச்சா?” “ம்ம்” “எந்த சண்டையில?” “ம்ம்” “ம்ம் எந்த சண்டையில தாத்தா?” “ம்ம்” “துப்பாக்கி வெச்சிருந்திருப்பீங்கல்ல?” “ம்ம்” “பின்ன எப்படி அவங்கள் வெட்டவிட்டீங்க? துப்பாக்கிய வெச்சு சுட்டிருக்கலாம்ல?” “ம்ம்” வேலுச்சாமி மீண்டும் இருமுறை இருமினார். ஒன்றும் பேசாமல் கீழே கிடந்த சற்றே பெரிய கணமான கல்லையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். “குமார் சொல்றான்..ம்ம்..குமார் சொல்றான்.. உங்க வீட்ல பட்டாளத்துல கொடுத்த துப்பாக்கி வெச்சிருக்கீங்களாம்” “ம்ம்ம்” “நெஜமா வெச்சிருக்கீங்களா?” “ம்ம்” மீண்டும் இருமினார். நெஞ்சை நீவி விட்டுக்கொண்டார். “எனக்கு காட்டுவீங்களா?” “ம்ம்” “போலாமா? இப்பவே?” இறுமினார். “போலாமா?” அமைதி. “தாத்தா கொஞ்ச நேரம் இங்கன உக்காந்திட்டிருக்கேன். நீ போய் வெளையாடு..போ..அப்புறமா போலாம்” “எனக்கு துப்பாக்கி அப்புறமா காட்டுவீங்களா?” “ம்ம்” “சத்தியமா?” “ம்ம்”

காளி எழுந்து, இடது காலை முன் வைத்து, பிறகு வலது காலை மெதுவாக எடுத்துவைத்து, நாட்டியமாடியபடி அழகாக ஓடுவதையே, வேலுச்சாமி பார்த்துக்கொண்டிருந்தார். மிகவும் சோர்வாக இருந்த அவரது கண்கள், மிகமெதுவாக, மிகமிக மெதுவாக, மீதமிருந்த தன் பாதி வலதுகாலைப் பார்த்தன. தளர்வாக அருகிலிருந்த தூணில் சாய்ந்துகொண்டார். பீடியின் நெருப்பு வெறுமனே எறிந்துகொண்டிருந்தது, அங்கே படர்ந்திருந்த வெயிலைப்போல. வெறும் வெயிலைப் போல.

தூரத்தில், பாறையைத் தகர்க்கும் வெடியின் ஒலி நான்கு திசைகளிலும் பரவி, மிகச் சன்னமாக ஒலித்து அடங்கியது. எங்கோ பெயர் தெரியாத ஒரு பறவை புழுக்கம் தாங்க மாட்டாமல் மெதுவாக ஏதோ சொல்லியது. வேலுச்சாமியின் கண்கள் மூடிக்கொண்டன.

***

காளி யாருமில்லாத ஒரு சந்தில் நுழைந்தான். கூடவே குமார். பூட்டியிருந்த அந்த வீட்டின் வாசலில் அவனும் குமாரும் உட்கார்ந்துகொண்டனர். காளி டவுசர் பையில் கைவிட்டு, ஒரு சிறிய மடிக்கப்பட்டிருந்த தாளை எடுத்தான். உள்ளே அடர் அரக்கு நிரத்தில் கொஞ்சம் மூக்குபொடி. “கையிலயும் கொஞ்சம் வெச்சிருந்தேன், பட்டாளத்துத்தாத்தா பாத்திருச்சு. பட்டாளத்துல இருந்ததில்ல.சும்மாவா” என்று சிரித்துக்கொண்டான் காளி. “கொஞ்சம் போடுடா.தும்மவரும்டா” என்றான் குமார். காளி அவனைக் கண்டுகொள்ளாமல், பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து, இலாவகமாக மூக்குப்பொடியை எடுத்து, மூக்கில் வைத்துக்கொண்டான். அவ்வளவுதான். “ஐயோ அம்மா. எறியுதே.” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்”

இரண்டு காக்கைகள் காளி தும்முவதையே, அருகிலிருந்த மரத்திலிருந்து வெறித்துக்கொண்டிருந்தன. ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டன.

***

ஓவியம்: ramki

(தொடரும்)

காந்தம்-8

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

முன்னும் பின்னும்.
3

சென்னை. எழும்பூர் ரயில் நிலையம்.

“…திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்ப்ரஸ் இன்னும் சிறிது நேரத்தில் முதலாவது ப்ளாட்பாரத்திலிருந்து புறப்படும்” இதே வரிகளை மீண்டும் அந்தப்பெண் ஹிந்தியில் சொல்ல ஆரம்பித்தார். அந்த இடமே மிகவும் நெருக்கடியாக இருந்தது. பயணிகளும் பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் ப்ளாட்பாரத்தை ஆக்கரமிப்பு செய்து கொண்டிருந்தனர். கோவர்த்தன் அந்த சிறிய புத்தகக்கடையில் நுழைந்து அங்கிருந்த சொற்ப புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தார். நக்கீரன், ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன், துக்ளக், குமுதம், ஜூவி, அவுட்லுக், ·ப்ரண்ட் லைன், த வீக், பிஸினஸ் வேர்ல்ட் என்று சிக்கின அனைத்தையும் எடுத்துக்கொண்டார். கவுண்டரில் வந்து பில் கட்டியபொழுது கவுண்டரில் இருந்த அந்த பையன் இவரை அடையாளம் கண்டுகொண்டான். “கோ. சார்” என்றான். கோவர்த்தன் சிரித்து தலையாட்டிவிட்டு “நம்ப பத்திரிக்கை வந்திருக்குமே” என்றார். “ஆமா சார் இப்போ தான் வந்தது. இன்னும் பண்டில் பிரிக்கல. வேணுமா சார்?” “ம்ம் ஒன்னு கொடு” அந்த பையன் கீழே குனிந்து இன்னும் பிரிக்கப்படாத பண்டலைப் பிரித்து “நான்காவது தூண்” என்ற கவர்ச்சிகரமான பத்திரிக்கையை எடுத்து நீட்டினான். கோவர்த்தன் அதை வாங்கிக்கொண்டு அதற்கும் சேர்த்து பில் கட்டினார். கோவர்த்தன் அந்த “நான்காவது தூண்” பத்திரிக்கையை உற்றுப்பார்த்தார். “அணி மாறும் கட்சிகள். ஜெயிக்கப்போவது யார்?” – அரசியல் வித்தகர் கோ வின் பிரத்தியேக கட்டுரை என்ற தலைப்பு கனத்த செந்நிரத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. கோ தனக்குள் சிரித்துக்கொண்டார். கல்லாவிலிருந்த அந்த பையன் கேட்டான் “சார் இது உங்க பத்திரிக்கை. நீங்களே வாங்கறீங்களே சார்?”. “என் பத்திரிக்கையை நானே வாங்கலீனா வேற யார் வாங்குவா?” என்று தனது பானியில் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு “அதில்லப்பா, எப்பொழுதும் கொண்டுவருவேன். இன்னிக்கு மறந்துட்டேன். நெல்லைய பிடிக்கனும் வரட்டா” என்று சொல்லிவிட்டு கீழிறங்கி தனது கோச்சுக்கு சென்றார்.A3.

2 டயர் ஏசி கோச்சில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இரண்டு மூன்று பேர் மட்டுமே இருந்தனர். இவருக்கு எதிரே உட்கார்ந்திருந்தவர் வந்தவுடன் இவரைக் கண்டுகொண்டு சிரித்தார். கோ தனது பெட்டியிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் தலையணையை எடுத்து காற்று ஊதி பெரிதாக்கினார். பிறகு அதை தனது முதுகுக்கு கொடுத்து நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். வாங்கின புத்தகங்களை ஒவ்வொன்றாக வேகமாக திருப்ப ஆரம்பித்தார். இன்னும் பரிட்சைக்கு இரண்டு நிமிடங்களே இருக்கிறது என்கிற பொழுது ஒரு மாணவன் எப்படி திருப்புவானோ அப்படி திருப்பினார் அவர். ஒரு கால் மணி நேரத்தில் அத்தனை பத்திரிக்கைகளையும் ஒரு சுற்று படித்திருந்தார். தனது மிகப்பெரிய கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டு, மௌனமாக சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு தனது பேக்கைத் திறந்து அதிலிருந்து பார்சல் ஒன்றை எடுத்து பிரித்தார். இட்லியின் வாடை மூக்கைத் துளைக்க, எதிரே உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தார். அவர் ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்தார்.

இட்லியின் வாசனை அவரையும் சென்றடைந்திருக்க வேண்டும். அவர் நிமிர்ந்து பார்த்தார். ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். தலை நிறைய முடி. சுருள் சுருளாக. பெரிய கண்ணாடி. இறங்கு மீசை. முள் முள்ளாக மூன்று நாள் தாடி. கூர்மையான மூக்கு. ஒள்ளியான ஆனால் திடகாத்திரமான தேகம். வெள்ளை சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழட்டிவிட்டிருந்ததால், கழுத்தில் இருந்த புலிநகம் அழகாக தெரிந்தது. கோ-வைப் பார்த்து புன்னகைத்தார்.

“இட்லி சாப்படறீங்களா?” “இல்ல Mr.கோ. நான் வீட்டிலேயே சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க” “இதுவும் வீட்ல பண்ணதுதான். என் பெண்டாட்டி எப்பவுமே அதிகமாத்தான் வெச்சுவிடுவா. உங்களுக்கும் இருக்கு. ரெண்டு இட்லி சாப்பிடுங்களேன்” “பரவாயில்ல கோ சார். எனக்கு பசி இல்ல. நான் பேசிட்டிருக்கேன். நீங்க சாப்பிடுங்க. பைதவே, என் பெயர் சிவா.” சிவா தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி பக்கத்தில் வைத்தார். கோ தன் தலையை திருப்பி சாய்வாக வைத்துக்கொண்டு அந்த புத்தகத்தின் பெயரைப் படிக்க முயற்சித்தார் “இன்டர் லிங்கிங் ஆப் ரிவர்ஸ்.”.சற்று வியப்பாக சிவாவைப் பார்த்தார். சிவா புத்தகத்தை எடுத்து கோ-விடம் கொடுத்தார். “இப்போ தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்” என்றார்.

கடைசி இட்லியை சாப்பிட்டு முடிக்கும் போது “சோ, நீங்க இந்திய ஆறுகளையெல்லாம் ஒன்றாக சேர்க்க முடியும்னு நினைக்கிறீங்க?” “முடியும். முடியாதென்பது எதுவும் இல்லை. ஆனால் உங்க அளவுக்கு இதில் எனக்கு விசயம் தெரியாது. just reading. thats it”

***

ரயில் சீரான வேகத்தோடு சென்று கொண்டிருந்தது. ரயிலின் தாலாட்டலில் அனைவரும் தூங்கிப்போயிருந்தனர். கோவர்த்தனுக்கு அடிவயிறு முட்டிக்கொண்டு வந்தது. ரயிலின் குலுங்களில் மேலும் அது அதிகமானது. சரி எழுந்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவராய் தனது கண்ணாடியைத் தேடி எடுத்து அணிந்து கொண்டார். எழுந்து உட்கார்ந்தார். எதிரே, சிவா ஒரு சின்ன டேபிள் லேம்பின் துணையுடன் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தார். கோ எழுந்த சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்து சிரித்தார். கோ வெறுமனே சிரித்துவிட்டு எழுந்து சென்றார்.

***

“என்ன சிவா சார், பெரிய படிப்பாளியா இருப்பீங்க போல இருக்கு? இப்போ என்ன புத்தகம்? அதே interliking of rivers தானா?” என்று கேட்டக்கொண்டே மீண்டும் தன் படுக்கைக்கு வந்தார் கோ. சிவா தன் கையில் வைத்திருந்த அழகான போர்ஸீலியன் கோப்பையிலிருந்து காபியை உறிஞ்சிக்கொண்டே, “ம்ம்..very intersting” என்றார். “என்ன சொல்றாங்க அந்த புத்தகத்தில?” “ம்ம் இன்னவரைக்கும் ஒன்னும் பெரிசா இல்ல. ஆனா ஒரு லட்சத்து அறுபதினாயிரம் கோடி ரூபாய் செலவாகும்ங்கறது மட்டும் புரியுது..காபி சாப்படறீங்களா?” “இல்ல. நீங்க சாப்பிடுங்க. பரவாயில்ல” “நான் travel பண்ணும் போது எப்பவுமே flaskல காபி எடுத்துட்டு போவேன். நைட்ல இப்பவெல்லாம் எனக்கு தூக்கம் வற்ரதேயில்ல. இன்னும் காபி நிறைய இருக்கு. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. dont be shy” “குளிருக்கு சூடா காபி குடிச்சா நல்லா தான் இருக்கும். ம்ம்ம்..கொடுங்க”

flaskஐ திறந்து அதன் மூடியில் கொஞ்சம் காபியை ஊற்றி கோவிடம் கொடுத்தார் சிவா. “நான் எப்போதுமே ப்ளாக் காபி தான். நீங்களும் டயாபடீஸ் பேஷண்ட் தான். உங்களுக்கும் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்” “வாவ். நான் டயாபடீஸ் பேஷண்ட்ங்கறதுகூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கு..ம்ம்” “என்ன சார் இப்படி கேட்டுட்டிங்க? எவ்வளவு பெரிய எழுத்தாளர் நீங்க? எவ்வளவு அரசியல் ஞானம். எவ்வளவு ராஜதந்திரம். கிட்டத்தட்ட ஒரு கிங்மேக்கர் நீங்க. உங்களப்பத்தி தெரியாம இருக்குமா?” “என்ன சிவா என்ன ரொம்ப புகழறீங்க” கோ காபியை முகர்ந்து விட்டு, முதல் மடக்கை ரசித்து விழுங்கினார்.

ரயில் வேறொரு ரயிலுக்காக காத்திருந்தது.

***

பணம் ஒரு பிரச்சனை தான் என்றாலும் நதிகளை இணைக்கறதில வேறு சில ஜியோகரபிகள் பிரச்சனைகள் இருக்குங்கறத நிறைய பேர் மறந்திடறாங்க” காபியைக் குடித்துமுடித்து flaskக்கின் மூடியை சிவாவிடம் கொடுத்தார் கோவர்த்தன். சிவா மூடியை வாங்கி மெதுவாக flaskஐ மூடினார். கண்ணாடியைக் கழற்றினார்.

“உன்ன மாதிரி ஆட்கள் இருக்கறவரைக்கும் எதுவுமே பிரச்சனை தான் கோ” கோ சட்டென நிமிர்ந்து பார்த்தார். “வாட்?” “50 கோடி நீ வாழ்க்கையில பாக்காத பணம் இல்ல?” “என்ன சொல்ற?” “என்ன சொல்றனா? ஹ¤ம்..50 கோடி கோவர்த்தன். 50 கோடி.” “யார் நீ?” “செல்வி ஞாபகம் இருக்கா?” “ய்ய்ய்யாய்யார் ந்நீ” “ரொம்ப சின்ன பொண்ணுல்ல அவ? நல்லாயிருந்துச்சா அன்னிக்கு? அங்கிள் அங்கிள்ன்னு உன்மேல எவ்ளோ பாசமா இருந்தா அவ?” “நீ நீ” கோ கையை தூக்க முயற்சித்தார் முடியவில்லை. “என்ன பாக்குற? உன்னால இனிமே கையையோ காலையோ அசைக்க முடியாது. எங்க try பண்ணு” “த் த் த் த் ..ன்..ன்..ன்” கோவின் கண்கள் பிதுங்கின. “ம்ம்..இப்போ எப்படி இருக்கு? Are you alright?” “த் த் த் த் த் த்” சிவா தனது சுருள் முடியை கழற்றி கீழே வைத்தார். முன் தலை வழுக்கை, ஜன்னலில் வழிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் மின்னியது. “சூ.. சூ.. சூ..” “பரவாயில்லையே..இன்னும் என்ன நீ மறக்கல. yes. the same old stupid surya” “நீ.. நீ..” “உன்னால பேச முடியாது கண்ணா. என்கிட்ட காபி வாங்கி குடிக்கறதுக்கு முன்ன நீ யோசிச்சிருக்கனும். நல்ல ஜாலியா என்ஜாய் பண்ணு. உன் கூட்டாளிகள உனக்கு துணைக்கு அனுப்பி வெக்கறேன். Goodbye.”

கோ-வுக்கு ரத்தகுழாய்கள் வெடித்துவிடுவது போல இருந்தது. வாயில் சூடாக செக்கச்சிவப்பாய் ஒரு திரவம் வெளியேறியது. கண்கள் செருகின. “டாடி என்ன காப்பாதுங்க டாடி. ப்ளீஸ் அங்கிள் வேண்டாம் அங்கிள். வேண்டாம் அங்கிள். எனக்கு பயமா இருக்கு அங்கிள்.டாடி.டாடி.டாடி..” என்று ஒரு சிறுமி அழும் சத்தம் மட்டும் அவர் காதில் ரீங்காராமய் ஒலித்துக்கொண்டிருந்தது. கண்கள் நிலைகுத்தின.

ரயில் சிவப்புவிளக்கைப் பார்த்ததும் நின்றது.

***

சிவா கீழிறங்கினார். கையில் வைத்திருந்த மிகச்சிரிய டார்ச் லைட்டை உபயோகித்து தண்டவாளத்தை கடந்தார். கடும் இருட்டு. சிறிது தூரம் நடந்து சென்று முட் புதர்களைக் கடந்தார். நடந்து கொண்டேயிருந்தார். மேலே நிமிர்ந்து நிலாவைப் பார்த்தார். சிரித்துக்கொண்டார். செல்போனை எடுத்து மெஸேஜ் கொடுத்தார். காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் மோட்டார் பைக் ஒன்று வந்து நின்றது. மோட்டார் பைக்கில் வந்தவன் வேகவேகமாக ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு, கீழிறங்கி, சிவாவின் கைகளை குலுக்கி கட்டியணைத்துக்கொண்டான், அவன் நா தழுதழுத்தது, “வணக்கம் தலைவா. என் பெயர் ஜீவா. போகலாம்” என்றான்.

அந்த அமைதியான இரவின் ரம்மியத்தை குத்தி கிழித்துக்கொண்டு சென்றது அந்த மோட்டார் பைக்.

***

காந்தம்-7

(தொடர்கதை)

(இதற்கு முந்தய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

முன்னும் பின்னும்.
2

டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டன்டன்டன்டன் டன்டடகடடன்டடகடடன்டடகட பிபீபிபீபிபீபீ………டன்டடகட டன்டடகட டன்டடகடடன்டடகட டன் டன் டன் பிபீபிபீபிபீபீ..

சங்கு சேகண்டி முழங்கவே
சலங்கைச் சத்தம் கேட்கவே
வீச்சருவா தூக்கிக்கிட்டு
வெள்ளக் குதிரை மேலே
ஆடி வாரான் பாடிவாரான்
எங்க பெரிய கருப்பன் தானே

“ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்..பாட்டு மறந்துபோச்சுடா…அப்புறம் என்னடா வரும்?”
“போதும். போதும். நீ என்னிக்கு ஒழுங்கா பாடிருக்க? சாமிக்கு அருள் வந்திடுச்சு.”

காளி தன் வெட்டப்படாத சடைமுடியை இங்கும் அங்கும் ஆட்டியபடி முழியைப் பிதுக்கி, நாக்கை வெளியே மடக்கி வைத்து, கையில் அருவா பிடித்திருப்பதைப் போல ஒரு வாழை மட்டையை பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் குதித்துக்கொண்டிருந்தான். காளிக்கு பணிரெண்டு வயது. காளி கொஞ்சம் வளர்ந்திருந்தான். பிறந்த பொழுது எப்படி இருந்தானோ அதே கரிய நிறம், ஒல்லியான தேகம். ஆனால் அந்த சிறிய கண்களின் வசீகரம் சற்று கூடி இருப்பது போல இருந்தது. கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்தான். மேலே சட்டை ஏதும் போட்டிருக்கவில்லை. கழுத்தில் அப்பாவின் புலிநகம் அதே மினுக்கோடு இருந்தது.

விலா எழும்பு தெரிய வயிற்றை எக்கி அடித்தொண்டையிலிருந்து காளி கர்ஜித்தான், “டேய் கருப்பன் வந்திருக்கன்டா” “கருப்பா”..அருகிலிருந்த குமார் காளியின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டான் “கருப்பா எங்களயெல்லாம் காப்பாத்தி கொடுப்பா” “ம்ம்..காப்பாத்தறேன்டா..காப்பாத்தறேன்” காளியின் டவுசர் இடுப்பில் நிற்காமல் கீழிறங்கியது. அருகிலிருந்த சிறுமிகள் சிரித்தனர். “கருப்பா டவுசர் அவுறுது பார்” காளி கையிலிருந்த வாழை மட்டையை கீழே போட்டுவிட்டு டவுசரை இருக்கிப் பிடித்து முடிச்சு போட்டான். பிறகு மீண்டும் கீழே போட்ட வாழை மட்டையை குனிந்து எடுத்து கையில் அருவா போல வைத்துக்கொண்டான். இதையெல்லாம் செல்வி பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் வர ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். ஒரு ஓரத்தில் கத்தரிப்பூ நிறத்தில் பூப்போட்ட சீட்டி பாவாடை அணிந்து சோகமே உருவாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள் செல்வி.

“ம்ம்..ஒவ்வொருத்தரா வாங்கப்பா” பூசாரி பக்தர்களை அழைத்தார். சிறுவர்கள் முட்டிமோதிக்கொண்டனர். எல்லோரும் உட்கார்ந்து கொண்டனர். யாரும் எழுந்திருக்கவில்லை. “ம்ம்..அருள் வாக்கு வாங்க ஒவ்வொரு ஆளா வாங்கப்பா” ம்ம்..ஹ¥ம்..ஒருத்தன் கூட எழுந்திருக்கவில்லை. “டேய்……….” காளி மறுபடியும் கத்தவே, ஒரு சிறுவன் எழுந்தான்.

ஏன்டா பாடபொஸ்தகத்திலெல்லாம் ஆறு ஏரின்னு ஏதேதோ சொல்றாய்ங்கல்ல அதெல்லாம்
எங்கடா இருக்கு?

மெதுவாக நடந்து காளியின் அருகே வந்தான். “காளி..” சட்டென்று இயல்பு நிலைக்கு வந்த காளி, வாழை மட்டையை வைத்து அவனை நங்கென்று தலையில் தட்டினான், “அண்ணேன்னு சொல்றா” பிறகு மீண்டும் “ம்ம்ம்ம்ம்” என்று ஆடத்துடங்கினான். அந்த சிறுவன் தலையை தடவிக்கொண்டே “காளியண்ணே..” என்றான். இப்பொழுது பூசாரி போல பக்கத்தில் நின்றிருந்த குமார் காளியிடமிருந்து வாழைமட்டையை பிடுங்கி சிறுவனின் தலையில் மீண்டும் ஒருமுறை நங்கென்று அடித்தான் “அண்ணனா, மூஞ்சப்பாரு..கருப்பான்னு சொல்லுடா சடத்தலையா”. கடுப்பான சிறுவன் தலையை தடவிக்கொண்டே “வோய் குமாரு கொமாரு ஓந்தலை மட்டும் நல்ல தலையா..போடா முட்டைத் தலையா” குமாரின் தலை முட்டை அகலவாக்கில் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும், பின்னால் வீங்கியது போல. சமாதன முயற்சியில் இறங்கிய கருப்பசாமி சாந்தமாக “பக்தா என்ன வேண்டும் கேள்” என்றது.

ம்ம்…சாமி..சாமி..இந்த சேகர் இருக்கியான்ல சேகர்..அவென் எம் பம்பரத்த..ம்ம்..ஆக்கர் ஆடிச்சு ஆக்கர் அடிச்சு ஒடச்சுபுடறயான்..நீ அவென் பம்பரத்த..ம்ம்..ம்…ம்…ஒளிச்சுவெச்சுடு..”

“ம்ம்..காப்பாத்தி கொடுக்கறனப்பா..உம் பம்பரத்த காப்பாத்தி கொடுக்கறனப்பா.” என்று காளி கண்களை மூடிக்கொண்டு ஒரு ஆட்டம் போட்டு, குமார் பிள்ளையார் கோயிலிருந்து ஆட்டயபோட்டுட்டு வந்து கையில் வைத்திருந்த திருநீரை எடுத்து, அந்த சிறுவனின் நெற்றியில் பூசினான். காளி “ம்ம்ம்ம்ம்ம்..” என்று உடலை குலுக்கினான். சிறுவனும் தன் பங்குக்கு ஆடத்தொடங்க, குமார் அவனை நிறுத்தி, நீயெல்லாம் ஆடக்கூடாது, போ போய் உக்கார் இல்லீண்ணா சேகர விட்டு ஆக்கர் அடிக்க சொல்லுவேன் என்றதும் அவன் சத்தம் போடாமல் தன் இடத்தில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

அடுத்து ஒவ்வொருத்தராய் வந்து அருள் வாக்கு வாங்கிக்கொண்டனர். காளி இன்னும் விட்டபாடில்லை, விடாமல் ஆடிக்கொண்டிருந்தான் குமார் “போதும் சாமி போதும்” என்றும் கேட்காமல் சங்மங் என்று குதித்துக்கொண்டிருந்தான். “டேய்..யாராவது கத்தரிப்பூ கலர்ல பாவாட சட்ட போட்டவங்க இருந்தா வரச்சொல்லுடா” என்றான். குமார், சுற்றும் முற்றும் பார்த்தான், பிறகு செல்வியைப் பார்த்தான். புரிந்து கொண்டவன், காளியிடம் திரும்பி “அடியேய்..உனக்கு ரப்பு தான்டி..” என்று சொல்லிவிட்டு, “ஏத்தா கெழவி”..”டேய் செல்விடா” “ம்ம்க்கும் தெரியுது தெரியுது..ஏத்தா செலவி..இங்க வா..சாமி கூப்பிடுது பாரு”

முதலில் வரமாட்டேன் என்று மறுத்தவள் பிறகு என்ன நினைத்தாளோ மிக மெதுவாக எழுந்து வந்தாள். ஆடிக்கொண்டிருந்த காளியின் முன்னர் வந்து நின்றாள். குமார், “ஏன் சோகமா இருக்க? எதுவா இருந்தாலும் நம்ப கருப்பன் கிட்ட சொல்லு, தீத்து வெச்சுடும்” என்றான். காளி சிரித்தபடி ஆடிக்கொண்டிருந்தான்.

தயங்கியபடிக்கு நின்று கொண்டிருந்தவள், பிறகு மெதுவாக “காளி.காளி.. என்ன என்ன அந்த கணக்கு வாத்தியார் அடிச்சிட்டாருடா. இங்கபாரு..” என்று உள்ளங்கையை விரித்துக்காட்டினாள். உள்ளங்கையில் வரிகள். காளி மிகக்கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டான். “டேய் வாத்தி..” என்று கத்தினான், பிறகு செல்வியிடம் திரும்பி “எதுக்கு உன்ன அந்த வாத்தி அடிச்சான்?” என்றான். செல்வி அழத்தொடங்கினாள். அவளது கண்களில் சிறு சிறு துளிகள் துளிர்த்தன. காளி இப்பொழுது ஆடவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். “என் கணக்கு நோட்டு தொலஞ்சுபோச்சு..வேற நோட்டு வாங்க ஐயா துட்டு கொடுக்கல..இன்னிக்கு கூட வாத்தியார் அடிச்சாரு தெரியுமா?” என்றாள் கேவியபடி. காளி இந்த உலகத்திலே இல்லை.

“டேய் குமாரு அந்த வாத்தியானா நாளைக்கு..வேணா வேணாம் இன்னிக்கே ஒருவழி பண்ணிடுவோம்டா.. செல்வி அதுக்குமுன்ன உனக்கொரு வழி சொல்லட்டா” என்றான் காளி. செல்வி அழுவதை நிறுத்துவிட்டு, “என்னடா?” என்றாள். “பக்கத்துல வா காதில சொல்றேன்” “ம்ம்” செல்வி கண்ணீரைத்துடைத்துக்கொண்டே காளியின் அருகில் சென்றாள். காளி அவளது காதுகளுக்கு அருகில் சென்றான், செல்வி கண்ணத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே காத்திருந்தாள், காளி பச்சக் என்று செல்வியின் கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்தான். பிறகு திரும்பிப்பார்க்காமல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான். ஏற்கனவே குமார் காளியின் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான்.

செல்வி கீழே விழுந்து மண்ணில் புரண்டு அழ ஆரம்பித்தாள். போடா காளி தக்காளி என்றாள் மிகச்சத்தமாக.

***

“டேய் காளி அங்க ஒன்னு இருக்கு பாருடா” என்றான் குமார். காளி பாய்ந்து சென்று அதை எடுத்து தன் டவுசர் பையில் போட்டுக்கொண்டான். குமார் தரையில் ஒரு இடம் பாக்கியில்லாமல் தவழ்ந்தபடி தேடினான். காளி அவனுக்கு அருகில் நின்று கொண்டு பரவலாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். பிறகு ஏதும் கிடைக்காமல் “டேய் குமார் நாம சாவடிக்கு போவோம்டா. பெரிசுக எல்லாம் தூங்கிருக்குங்க” என்று காளி சொல்ல இருவரும் மந்ததையை விட்டு சாவடிக்கு நடையைக் கட்டினர்.

சாவடியில் அந்த காலை பதினோரு மணி வெயிலையும் பொருட்படுத்தாமல் நாலைந்து வழுக்கைத் தலை பெரிசுகள் தூங்கிக்கொண்டிருந்தனர். பிள்ளையார் சத்தமில்லாமல் உட்கார்ந்திருந்தார். காளியும் குமாரும் படிகளிலும் சாவடிக்கு கீழேயும் தெடினர். நல்ல வேட்டை. நிறைய கிடைத்தது. இருவரும் சிரித்துக்கொண்டனர். பிறகு வேகவேகமாக நடக்கத்தொடங்கினர். ஊரணியைக் கடந்து மொட்டைமலையில் ஏறி, கோவிலுக்கு பின்னால் சென்று அங்கிருந்த திண்டில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டனர்.

காளி பையில் கைவிட்டு சேகரித்ததில் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். துண்டு பீடி. குமாரும் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். காளி டவுசர் பையில் கைவிட்டு ஒரு தீப்பெட்டியை எடுத்து அதில் மீதமிருந்த இரண்டு தீக்குச்சிகளில் ஒன்றை எடுத்தான். வாயில் துண்டுபீடியை வைத்துக்கொண்டு குமார் காளிக்கு ஏதோ சமிக்ஞை காட்டினான். காளி என்னவென்று கேட்க, காத்தடிக்குது அந்தப்பக்கம் திரும்பி பத்தவை என்றான். காளி குமாரின் மதிநுட்பத்தை வியந்தவாறு சுவற்றுப்பக்கம் திரும்பி தனது பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். அவனது பீடி மிகவும் சிறியதாக இருந்தது. கஞ்சப்பிசினாரி பயலுக கடைசிவரைக்கும் இழுத்துட்டுத்தான் போடறாய்ங்க என்றான் புகையை வெளியே விட்டுக்கொண்டே. பிறகு குமாரின் பீடியைப் பற்றவைத்தான். இருவரும் ரசித்து புகைக்க ஆரம்பித்தனர்.

காற்று பீடியைக் கரைத்துக்கொண்டிருந்தது. காளியின் முன்னந்தலையில் விழுந்த அவனது நீண்ட தலைமுடி காற்றில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. அவன் அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து பார்க்கும் போது அருகிலிருந்த நிறைய கிராமங்கள் தெரிந்தன. கடினமான வெயில் எங்கும் படர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பொட்டக்காடு மட்டுமே தெரிந்தது. தூரத்தில் யாரோ வெடிவைத்து பாறையைத் தகர்க்கும் சத்தம் கேட்டது.

காளி ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி குமாரிடம் கேட்டான் “ஏன்டா பாடபொஸ்தகத்திலெல்லாம் ஆறு ஏரின்னு ஏதேதோ சொல்றாய்ங்கல்ல அதெல்லாம் எங்கடா இருக்கு?” குமார் தனக்கு-எதுவும்-தெரியாது-தான்-எதையும்-ஒளித்தும்வைக்கவில்லை என்பதைப் போல ஒரு பாவனை காட்டிவிட்டு அடுத்த துண்டுபீடியை எடுத்து வாயில் வைத்து அணையப்போகும் பீடியின் நெருப்பில் அதைப் பற்றவைத்துக்கொண்டான்.

காளி ஏதும் பேசாமல் வெயிலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பீடிப்புகை காற்றில் எழும்பி கரைந்து கொண்டிருந்தது.

***

இருள் பூச்சியின் சத்தம் கனமாக கேட்டது. அது நிலவின் ஒளி போல தூங்கும் பொழுது வருகிறது. காலையில் எழுந்தால் நிலவைப் போலவே காணாமல் போய்விடுகிறது என்று யோசித்துக்கொண்டே காளி ஒரு பக்கமாக சாய்ந்து கால்களை மடக்கி கைகளை கால்களுக்கும் முகத்துகும் நடுவை வைத்துக்கொண்டு கண்களை மூடிப் படுத்திருந்தான். ராக்கம்மா அவனுக்கு அருகில் படுத்திருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு முழித்துக்கொண்டு எழுந்தாள். ரங்கன் வந்தான். ராக்கம்மாவின் தலைமுடியை முடிந்துகொண்டு “சாப்படறியா?” என்றாள். “ம்ம்..இருக்கறத போடு” என்றவாரே உட்கார்ந்தான். பிறகு “எங்க உன் செல்ல மருமவன் தூங்கிட்டானா? இன்னிக்கு அவன் மொட்டமலையில் உட்கார்ந்து பீடி குடிச்சத எங்கூட்டாளிக பாத்திருக்காய்ங்க. காலையில் எந்திரிக்கட்டும் அவனுக்கு இருக்கு” என்றான். ராக்கு ஒரு சட்டி நிறைய கூழ் போன்ற ஏதோ ஒன்றையும் மிளகாய் இரண்டும் எடுத்து வந்து அவனருகில் வைத்துவிட்டு, அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். “இந்தா பேசாம சாப்பிடு. நீ பண்ணாத சேட்டையையா உன் மருமவன் செய்யறான்?”

***

காளி எழுந்து பார்த்தான். அனைவரும் தூங்கிவிட்டிருந்தனர். ராக்குவும் ரங்கனும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். காளி மெதுவாக எழுந்து ஓசைப்படாமல் கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தான். வெம்மையான காற்று அவன் முகத்தில் அறைந்தது. மெதுவாக நடக்க ஆரம்பித்தான். குமார் வீட்டைக்கடக்கும் போது உதட்டைக்குவித்து மெதுவாக ஒரு விசில் அடித்தான். இரண்டு மூன்று நிமிடங்களில் குமார் வெளியே வந்தான்.

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். கொஞ்சம் தூரம் சென்றதும், இன்னும் சில பையன்கள் சேர்ந்துகொண்டனர். சிலர் கைகளில் சாக்குகளும் கிழிந்து நைந்து போன பழைய போர்வைகளும் இருந்தன. அவர்கள் ஊரணியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

காளி இன்னிக்கு என்ன படம்டா?” என்றான் கொஞ்சம் குட்டையாக இருந்தவன்.

***
(காந்தம் ஈர்க்கும்)

ஓவியம்: ராம்கி

காந்தம் – 6

6

இரண்டாம் அத்தியாயம்.
முன்னும். பின்னும்.

1

2006. டிசம்பர் 31. லக்சம்பர்க்.

ஹோட்டல் சோ·பிடெல். அதிகாலை நான்கு மணி.

மிக மெல்லிய மஞ்சள் வெளிச்சம் அந்தப் பெரிய அறை முழுதும் அப்பிக்கிடந்தது. ஹீட்டரின் மெல்லிய சூடு கனத்த தரை விரிப்புகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த கடைசி குளிர் காற்றையும் விரட்டிக்கொண்டிருந்தது. கனத்த மௌனம் வெளியே பரவிக்கிடந்த குளிர் போல அறையை சூழ்ந்திருந்தது. அறையின் ஓரத்தில் விலைஉயர்ந்த சீலைகளை உடுத்தியிருந்த ஜன்னல், அங்கிருந்த மிகப்பெரிய கட்டிலில் கனத்த கம்பளிக்குள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த மனிதனையே பொறாமையாகப் பார்த்தது. கட்டிலுக்கு அருகிலிருந்த மேஜையிலிருந்த டிஜிட்டல் கடிகாரம் 4:01 என்று காட்டியது. ரெடியோ உயிர்பெற்றது. கம்பளிக்குள் சிறு அசைவுகள் தென்பட்டன.

ட்ரிங். ட்ரிங். ட்ரிங். ட்ரிங்.
கம்பளிக்குள்ளிருந்து ஒல்லியான நீண்ட கை ஒன்று மிக மெதுவாக வெளியே வந்து கூவிக்கொண்டிருந்து டெலிபோனை எடுத்தது. “குட்மார்னிங் மிஸ்டர்.சிவா. திஸ் இஸ் யுவர் வேக் அப் கால். பான்ஜோயர்..” டொக். மறுபடியும் கை கம்பளிக்குள் சென்றுகொண்டது.

கனத்த மௌனம். அடுத்த இரண்டு நொடிகளில் அந்த உருவம் கம்பளியை விலக்கிக்கொண்டு எழுந்தது. அவர் ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். முன் தலை வழுக்கை. பின்னால் நிறைய வெள்ளை முடி. கருப்பாய் இருந்தார். அடர்ந்த வெள்ளை மீசையும், பத்து நாள் கூர்மையான தாடியும் கொண்டிருந்தார். கண்களைத் திறக்காமல் மேஜை மேல் இருந்த தனது பிடிஏ வை எடுத்தது, ஆன் செய்தார். திரையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. 13 அல்லது 14 வயது இருக்கும். கண்களைத் திறந்தார்.வைத்த கண் வாங்காமல் சில நொடிகள் அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஷவரின் இளஞ்சூடான நீர் நெற்றியை நனைத்து அவரது கூர்மையான மூக்கில் இறங்கி, கழுத்தில் இருந்த புலி நகக் கயிற்றை சுத்தமாக நனைத்தது. ஒல்லியான ஆனால் திடகாத்திரமான தேகம்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் பளீர் வெள்ளை நிற சட்டைக்கும், பூட் கட் அடர் நீல கார்ப்பென்டர் ஜீன்ஸ¤க்கும் மாறியிருந்தார். தான் வைத்திருந்த ஒரு சாக்லேட் ரோலர் ஹஸ்பப்பீஸ் பேக்கேஜை நிமிர்த்திவைத்துவிட்டு, தனது சந்தன க்ரம்ப்ளரை திறந்து உள்ளே பாஸ்போர்ட் மற்றும் அத்தியாவசிய டாக்குமண்ட்ஸ்களை சரிபார்த்துக்கொண்டார். கருப்பு நிற ஐபாட் ஸ்·புள் ஒன்றை எடுத்து உயிரூட்டினார். அதன் கியூட் இயர் ஸ்பீக்கர்ஸை எடுத்து காதுகளுக்கு கொடுத்தார். ஐபாட் கார்ப்பென்டர் ஜீன்ஸின் முன் பாக்கெட்டில் தஞ்சம் அடைந்தது. மணி பார்த்துக்கொண்டார். ·ப்ளைட் 6:45 க்குத்தான். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

ஐபாடில் டிஎம்எஸ் “அழகென்ற சொல்லுக்கு முருகா” என்று உருகிக்கொண்டிருந்தார். கீழே சென்று, விமான நிலையத்திற்கு செல்வதற்கு, ஸட்டில் பஸ் வருவதற்குள் ஒரு காபி சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

***

காலை மணி 9:00 ப்ராங்க்பர்ட் விமானநிலையம். அல்·ப்ரெடோ எஸ்ப்ரஸோ பார்.

லக்ஸம்பர்க்கிலிருந்து ப்ராங்க்பர்ட்டுக்கு கனெக்டிங் ·ப்ளைட். இனி சென்னை செல்வதற்கான அடுத்த ப்ளைட்டுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. சூடான எஸ்ப்ரஸோ டேபிளில் நுரை ததும்பிக்கொண்டிருந்தது. சிவா தனது க்ரம்ப்ளரைத் திறந்து உள்ளிருந்து தனது மடிக்கணினியை எடுத்து வை-·பையோடு கனெக்ட் செய்தார். தனது பேங்கின் இணையதளத்திற்கு சென்று கடைசியாக வயர் செய்யப்பட்ட தொகையை சரிபார்த்தார். தனது வாழ்நாளின் மொத்த சொத்து. பெருமூச்சு விட்டுக்கொண்டார். ஹாட்மெயில் லாக் இன் செய்தார். ஒரு புதிய மெயில். மெசேஜ் டைட்டில்: “தலைவா. ஏற்பாடுகள் தயார்.”

கணினியை மூடிவைத்தார். எஸ்ப்ரஸோவை எடுத்து மிக மெதுவாக நுரையை பருகினார்.

மேலே ·ப்ளைட் சார்ட்டில் எழுத்துக்கள் வேகமாக மாறியது. லுப்தான்சா. எம்.ஏ.ஏ. கவுண்டர் 4. 11:45.

***

புகை மூட்டமாக இருக்கிறது. அல்லது பனி மூட்டமா? இது என்ன இடம். நான் எங்கிருக்கிறேன். ·ப்ளைட் இன்னும் வரவில்லையா? அல்லது ·ப்ளைட் நடுவானத்தில் சிதறிவிட்டதா? நான் மேக கூட்டத்தில் நடக்கிறேனா? யார் அது? அதோ. அங்கே. இந்த பனி மூட்டத்தில் எனக்கு எதுவுமே தெரியவில்லை. யாரோ அங்கு நிற்பது போலத்தான் தெரிகிறது. நிழலாடுகிறது. ஹலோ யார் நீங்க? நான் அவனையே பின் தொடர்கிறேன். இல்லை அவளா? இல்லையில்லை அவன் தான். கிட்டே நெருங்கிவிட்டேன். பனி விலகுகிறது. அவன் சிரித்தவாறு நின்று கொண்டிருக்கிறான். வசீகரமான புன்னகை. என்னுடைய அதே கூர்மையான மூக்கு. முகத்தில் சுருக்கங்கள் இல்லை. சிறிய கண்கள். ஆம் எல்லோரும் சொல்லும் பவர்புள் ஐய்ஸ். பட் வெரி டிபரண்ட் ·பேஸ். சார்.

·ப்ளைட்டின் மிக மெல்லிய ஆனால் அழுத்தமான சத்தம். காதுகள் அடைத்துக்கொள்ளும் சுகமான அனுபவம். கண் திரையை விலக்கினேன். விமானப்பணிப் பெண். அழகாகச் சிரித்தாள். எனி சா·ப்ட் டிரிங்ஸ் சார்.ம்ம். எஸ். ஒன் க்ளாஸ் ஆப் ஆரஞ்ச் ஜூஸ் ப்ளீஸ். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் ஹாய் என்றார்.

“ஐயாம் அபிஜித் சர்க்கார் ப்ரம் வெஸ்ட் பெங்கால்.” “க்ளாட் டூ மீட் யூ. ஐயாம் சிவா.” “நைஸ் டு மீட் யூ டூ” “சிவா. வாட் யூ டூ இன் ஜெர்மனி?” “ஐ வாஸ் ஹியர் ·பார் க்வயட் எ லாங் டைம். ·பார் தர்ட்டி இயர்ஸ். ஐ வ்வோன் ·ப்யூ ஸ்டீல் ப்ளான்ட்ஸ் ஹியர். ஜஸ்ட் அ விசிட் டு இன்டியா” “ஒ. ரியலி க்ரேட். ஐ ஜஸ்ட் கேம் ·பார் எ டூர்” “ஒ. தாட்ஸ் நைஸ் மிஸ்டர். அபிஜித்”

சிவா ஆரஞ்சு ஜீஸை சிறிது பருகினார். மறுபடியும் புகை மூட்டம்.

***

இமிக்ரேசன் பாரத்தை பூர்த்தி செய்து எதிரே இருந்த வலையில் வைத்தார் சிவா. பாத்ரூம் போவதற்கு எழுந்தார். “மிஸ்டர். அபிஜித், இ·ப் யூ குட் ப்ளீஸ்” “ய்யா. ஸ்யூர்” அபிஜித் எழுந்து வழிவிட்டார்.
அபிஜித் சிவா நடந்து செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு தனது சீட்டில் அமர்ந்து கொண்டார். சிவாவின் இருக்கைக்கு நேரே இருந்த வலைப்பவுச்சில் சிவாவின் இமிக்ரேசன் கார்ட் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சட்டென்று எடுத்தார். பிரித்தார். மேலே பெயருக்குப் பக்கத்தில் : காளி மாணிக்கம் என்றிருந்தது. அபிஜித் சத்தம் போடாமல் இமிக்ரேசன் கார்ட்டை இருந்த இடத்தில் வைத்தார்.

***

“யூ லுக்ட் வெரி டிஸ்டர்ப்ட் வைல் யூ வேர் ஸ்லீப்பிங். எனி ப்ராப்ளம் மிஸ்டர். சிவா?” யோகர்ட்டின் கடைசி துளிகளையும் பருகிக்கொண்டே அபிஜித் கேட்டார். “நோ நோ. ஐயாம் பெர்பெ·க்ட்லி ஆல்ரைட். ஜஸ்ட் நாட் இன·ப் ஸ்லீப். தாங்க்ஸ் அபிஜித்” சிவா தனது ஸ்பூனில் கனிசமான ப்ரைட் ரைஸ்ஸை எடுத்துக்கொண்டிருந்தார். “எனிவே ஐ வில் கெட்டவுன் அட் பாம்பே. இட்ஸ் ரியலி எ ப்ளஸர் டு மீட் யூ சிவா” “மீ டூ அபிஜித்”

வெளியே வானம் மிகவும் பிரகாசமாக இருந்தது. சுத்தமாக. சிவாவுக்கு பிடித்தமான மெல்லிய நீல நிறத்தில்.

***
சென்னை. இரவு மணி பதினொன்று நாற்பது.

“அண்ணா ஏர்ப்போர்ட் உங்களை அன்புடன் வரவேற்கிறது” அழகிய தமிழ் குரல் பயணிகளை வரவேற்றுக்கொண்டிருந்தது. சிவா இமிக்ரேசன் க்யூவில் நின்று கொண்டிருந்தார். அலுவலர் சிவாவின் பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்தார். மெதுவாக பக்கத்தில் இருந்த மற்றொரு அலுவலரிடம் பேசிக்கொண்டே எழுந்து நின்றார். பிறகு ஏதும் பேசாமல் சிவாவையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு “வெல்க்கம் ஹோம் சார்” என்று சொல்லி சிரித்தார், பிறகு பாஸ்ப்போர்ட்டில் ச்சாப் அடித்துக் கொடுத்தார்.

சிவா பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு சிரித்து விட்டு வெளியே வந்தார். பாஸ்போர்ட்டை பிரித்து உள்ளேயிருந்த சிறிய பேப்பரை எடுத்தார். அதில் “தலைவா வருக” என்றிருந்தது. சிவா சட்டென்று அந்த பேப்பரை எடுத்து கசக்கி சுக்கலாக கிழித்து அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். திரும்பி அந்த அலுவலரைப் பார்த்தார். அந்த அலுவலர் இன்னும் சிவாவையே பார்த்துக்கொண்டிருந்தார். சல்யூட் அடித்தார்.

***

வெளியேறியவுடன் சிவா என்ற பெயர்பலகையைப் பார்த்தார். கூலிங் க்ளாஸை எடுத்து அணிந்து கொண்டார். வேகமாக நடந்தார்.
பெயர் பலகையை வைத்திருந்த ட்ரைவர் சிவாவிடமிருந்து ஒரு லக்கேஜை வாங்கிக்கொண்டு அவரோடு ஓட்டமும் நடையுமாக சென்றார்.சிறிது தூரத்தில் பார்க் செய்யப்பட்டிருந்த வெள்ளை ப்ரீமியர் பத்மினியில் சென்று ஏறிக்கொண்டார். ட்ரைவர் லக்கேஜை பின்னால் வைத்துவிட்டு ஓடோடி வந்து முன் சீட்டில் ஏறிக்கொண்டார். கதவை மூடினார். தொப்பியைக் கழற்றி சீட்டில் வைத்துவிட்டு, திரும்பி சிவாவைப் பார்த்தார். ட்ரைவரின் கண்கள் கலங்கியிருந்தன. நா தழுதழுத்தது. தலைவா என்றார். சிவா ஒன்றும் பேசாமல் கிளம்பலாம் என்று ஜாடை காட்டினார். ப்ரீமியர் ஸ்டார்ட் ஆனது.

காருக்குள் கண்ணாடிக்கு மேல் சூர்யா என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. சிவா சிரித்துக்கொண்டே, “இன்னும் இந்த பெயரை தமிழ்நாட்டில் யார் ஞாபகம் வெச்சிருக்காங்க சத்யா?” என்றார். “நிறைய பேர் இருக்காங்க தலைவா. உங்கமேல உண்மையான பாசமும் நன்றியும் இருக்கிற நிறைய பேர் இன்னும் தமிழ்நாட்டில இருக்காங்க தலைவா.”

தாம்பரம் மெயின் ரோட்டில் நுழைந்த ப்ரீமியர் பத்மினி வேகம் பிடித்தது.

***

(தொடரும்)

காந்தம்

(தொடர்கதை)
5

“ராக்கு எந்திரிடி” என்கிற வார்த்தைகள் அவளது மனதில் எழுந்து தொண்டையிலே நின்று கொண்டது. கைகள் மிக வேகமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன. அவள் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த தண்ணீர் செம்பு அவளது ஆக்ரோஷமான கைகள் பட்டு உருண்டோடியது. சத்தம் கேட்டு ராக்கு பதறி விழித்தாள்.

“அண்ணி என்னண்ணி ஆச்சு? ஐயோ கடவுளே” என்று அடித்துக்கொண்டு எழுந்தாள். சத்தத்தில் முழித்த செந்தில் ஏதும் புரியாமல் அழ ஆரம்பித்தான். ராக்கு செய்வது தெரியாமல் இரும்புக்கம்பி ஏதும் கிடக்கிறதா என்று தேடினாள். சாவியைத் தேடினாள். ஒன்றுமில்லாத வீட்டிற்கு சாவி எதற்கு? வெளியே ஓடிப்போய் எதிர் வீட்டு கிழவியின் பாக்கு இடிக்கும் சிறிய உரலை வாங்கி வந்தாள்.

“செந்தில் ஓடிப்போய் தெக்குவீட்டுக் கிழவிய கூட்டிட்டு வாடா” என்றாள். செந்தில் வெளியேறி ஓடினான். தெக்குவீட்டுக்கிழவியை போய் கூப்பிடவேண்டும் என்பது மட்டும் தான் அவனுக்கு தெரிந்தது. நடக்கப்போவது பற்றி அவன் எதையுமே அறிந்திருக்கவில்லை. யார் தான் அறிவார்?

மழை விட்டேனா பார் என்று சுழற்றி சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது. செந்திலின் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தெருவெங்கும் இருந்தது. மழை வராதா என்று காத்துக்கிடந்த மக்கள் மழை வந்ததும் வீடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். மழை மக்களைக் காணாமல் தெருவெங்கும் ஓடித்திரிந்தது.

“ர்ர்ர்..ர்ர்ர்…க்க்க்க்கு..க்க்..க்க்…க்க்..கா..க்கா…ள்ள்ள்..ளி..ய்ய்” செல்லம்மாவின் பற்கள் கிட்டித்துக்கொண்டன. நாக்கு எழவில்லை. கைகள் எதையோ விடாபிடியாக பிடித்துக்கொண்டிருப்பதைப் போல இருந்தது. அவள் கண்கள் உறக்கத்திலிருக்கும் காளியையே பார்த்துக்கொண்டிருந்தது. கண்களில் நீர்த்துளி பெறுக்கெடுத்தது. கால்கள் இழுத்துக்கொள்வதை நிறுத்திக்கொண்டன.

சட்டென்று அனைத்தும் இளகியது. கண்கள் குத்திட்டு நின்றன. அவை கூரையின் இடுக்கில் தெரிந்த சிறிய துவாரத்தையே உற்றுப் பார்த்தவாறு இருந்தன.

“ஐயோ அண்ணி..” என்ற சத்தம் ஊரெங்கும் ஒலித்தது. எதிர் வீட்டுக் கிழவி அசையாமல் உட்கார்ந்திருந்தாள். சிறையில் மாணிக்கம் திடுக்கென்று விழித்தான். அவன் முகம் வியர்வையால் நனைந்திருந்தது.

***

“டேய் என்னடா அழுதிட்டேயிருக்க? என் செல்லம்ல கண்ணுல பால குடிச்சிடு ராசா” என்று சங்கில் பாலை ஊற்றி காளிக்கு குடுத்துவிட முயற்சிசெய்து கொண்டிருந்தாள் ராக்காம்மா. செந்திலும், குமாரும் வெளியே விளையாடச்சென்றிருந்தனர். பக்கத்தில் ராணி உட்கார்ந்தவாறு காளியையும் ராக்குவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். ராக்குவின் வீட்டுக்காரன் ரங்கன் அடுப்பில் எதையோ கொதிக்கவிட்டுக்கொண்டிருந்தான். அவன் காளியை சமாதானப் படுத்த அங்கிருந்தவாரே ஏதேதோ விசித்திரமான ஒலி எழுப்பிக்கொண்டிருந்தான். ரங்கனுக்கு காளி என்றால் உயிர். செல்லம்மா இறந்துவிட்ட பிறகு இவர்கள் அனைவரும் தங்களது கிராமத்துக்கு திரும்பிவிட்டிருந்தனர். வாழ்க்கை மெல்ல பிடிபடத்தொடங்கியது. ராக்கு குழந்தைகளை சமாளிக்கக் கற்றுக்கொண்டாள். குமாரும், செந்திலும் சொன்னதையெல்லாம் கேட்டு சமர்த்தாக இருந்தனர். அவர்களுக்கு எல்லாமே புரிந்தது போலவும் எதுவுமே புரியாதது போலவும் இருந்தது.

வாசலில் நிழலடவே ராக்கு யார் என்று நிமிர்ந்து பார்த்தாள். “அண்ணே….வாண்ணே..எப்பண்ணே வந்த” காளியை அனைத்தவாறு பதற்றம்கலந்த மகிழ்ச்சியுடன் எழுந்தாள். சங்கு உருண்டோடியது.

***

“ஏண்ணே போற போறங்கற? எங்களோடவே இருந்திடவேண்டியது தானண்ணே. இந்த குழந்தைகள வெச்சுக்கிட்டு எங்கண்ணே போவ? எப்படி காப்பாத்துவ?” ராக்குவின் குரல் தழுதழுத்தது. பேசமுடியாமல் கேவிகேவி அழுதாள். “மாமா சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. சம்பந்தகாரர் வீட்டில இருக்கம்னு நினைக்காதீங்க. நான் உங்களை அப்படி நினைக்கல. உங்க குழந்தைகளையும் நான் அப்படி நினைக்கல. நாம ரெண்டு பேருமே சேர்ந்து விவசாயம் செய்யுவோம். வாரத வெச்சு சாப்டுவோம். எங்கள விட்டுட்டு குழந்தைகள கூட்டிட்டு போகாதீங்க மாமா” என்றான் ரங்கன். ரங்கனின் ஆத்தாகிழவி “அட ஆமாப்பா இரப்பா இங்கனயே..எங்க போயிட்டு என்ன பண்ணுவ?” என்றாள். ஆனால் இவை எதையுமே கேட்கும் மனநிலையில் இல்லை மாணிக்கம்.

“இல்லத்தா நான் போறேன். ஆந்திராப்பக்கம் எங்கிட்டாவது போய் பொழச்சுக்கறேன். உன் வாழ்க்கை உன்னோட. நீ ஏன் தேவையில்லாத பாரத்த தூக்கி சுமக்கற. கிடைக்கறது எதுவோ அது எங்களோடயே இருக்கட்டும். நீ கஷ்டப்படாத ஆத்தா” என்றான். “அண்ணே உன் குழந்தைகள் எனக்கு பாரம்மாண்ணே. ஏண்ணே இப்படி பேசுற?” “இல்லத்தா நான் போறேன். நீங்க பாத்து பிழச்சுக்கிடுங்க” “அண்ணே காளிய மட்டுமாவது எங்கிட்ட விட்டுட்டு போண்ணே. இந்த சின்ன பயல வெச்சுக்கிட்டு என்ன பண்ணுவ நீ? அவனுக்கு கஷ்டம் உனக்கும் கஷ்டம். அண்ணே தயவு செஞ்சு காளிய எங்கிட்ட கொடுத்துடுண்ணே” ரங்கன் காளியை அனைத்தவாறு இருந்தான். அவன் கண்களில் ஏனோ நீர்துளி ஒன்று தோன்றியது.

***

“ஆம். உதித்துவிட்டது. கடைசியில் உதித்தேவிட்டது. குமுறும் எரிமலையாய். கொந்தளிக்கும் கடலாய். உறுமும் புலியாய் உப்பரிகைத்தீயாய் கடைசியில் எழுந்தேவிட்டது செஞ்சுடர். இந்த சுடர் ஏழைகளின் வீடுகளிலே சூழ்ந்திருக்கும் இருளை என்றைக்குமாக அகற்றும். நமது தளபதி தமிழ் இருக்கும் வரையிலும் அன்புத் தொண்டர்கள் உக்கிரமாக இயங்கும்வரையிலும், மக்களான உங்களது மகத்தான ஆதரவு இருக்கும் வரையிலும் இந்த சுடர் அநீதிக்கு எதிராக எரிந்துகொண்டேயிருக்கும். இனி யாரும் எம்மக்களை சுரண்டவிடமாட்டோம்” மகிழன், தமிழின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார். தமிழ் தன்க்குள் சிரித்துக்கொண்டார். “..இன்று உதித்த மறுமலர்ச்சி கழகம் மேன்மேலும் வளரட்டும் என்று கூறி தளபதி தமிழ் அவர்களை பேசவருமாறு அழைக்கிறேன்” என்று முடித்தார் ம.கவின் நிறுவனர் மறைமலை. அவர் வாயில் வழிந்தோடிய வெற்றிலைச் சாற்றை துடைத்துக்கொண்டே இரு கைகளை நீட்டி தமிழை அழைத்தார்.

தமிழ் கம்பீரமாக எழுந்து மறைமலையை நோக்கி நடந்து வந்து அவரது அகன்ற கைகளில் அடங்கிக்கொண்டார். இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர். மறை தமிழின் முதுகைத் தட்டிக்கொடுத்தார். கூட்டம் கட்டுக்கடங்காமல் கரகோஷம் எழுப்பியது.

மறைமலை மெதுவாக நடந்து சென்று மகிழனின் பக்கத்தில் இருந்த காலியான இடத்திற்கு சென்றார். மகிழன் பவ்யமாக எழுந்து நின்று கும்பிட்டார். “அட உக்காருங்க தம்பி. எப்ப வந்தீங்க?” “கொடியேத்தும் போது வந்தேண்ணே. ஷ¥ட்டிங்கில கொஞ்சம் நேரமாயிடுச்சு. மன்னிக்கனும்.” என்றார் மகிழன். “அட அதனால என்ன தம்பி. என் காலம் முடிஞ்சது. இனி என் அன்புத் தம்பிங்க நீங்க ரெண்டுபேரும் இருக்கீங்க. இது உங்க கட்சி இனிமேல். அடுத்து நீங்க தான் பேசனும்” என்றார் மறைமலை.

மகிழன் சிரித்துவிட்டு கூட்டத்தை நோக்கி ஆழ்ந்த பார்வையை வீசினார். கூட்டம் முழுதும் மகிழனையே பார்த்துக்கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருந்த தமிழ் நிறுத்திவிட்டு மகிழனைப் பார்த்தார். பின் சிரித்துவிட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து திருக்குறளைச் சொல்ல ஆரம்பித்தார்.

***

நீண்ட செம்மன் சாலை கண்ணுக்கெட்டியதூரம் வரை வரண்டு கிடந்தது. ஆங்காங்கே பணை மரங்கள் சிலைபோல அசையாமல் நின்று கொண்டிருந்தன. “போதும்மா நீ உன் வீட்டுக்கு போ. இனி நான் போய்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் மாணிக்கம். தோளில் ராணி தூங்கிக்கொண்டிருந்தாள். இடக்கையில் செந்திலும். செந்தில் கையை குமாரும் பிடித்தவாறு அவர்கள் சென்றனர். சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது. செம்மனின் நிறம் சூரிய கதிர்களால் மேலும் பொன்னாக மின்னின. காலை குளிரில் மண் நடப்பதுக்கு இதமாக இருந்தது. நேரம் போக போக இதே மணல் சுட்டு பொசுக்க ஆரம்பித்துவிடும். செந்திலும், குமாரும் தாங்குவார்களா? அவர்களது பிஞ்சுக் கால்கள் இவை எதையும் அறியாமல் அப்பாவின் நிழலில் நடந்துகொண்டிருந்தனர்.

கொஞ்ச தூரம் நடந்ததும் மாணிக்கம் நின்றார். குமாரையும் செந்திலையும் அங்கேயே விட்டு விட்டு, ராணியை தோளில் சுமந்தபடி ராக்குவை நோக்கி திரும்பி வந்தார். தன் கழுத்தில் கிடந்த புலி நகம் கொண்ட கருப்புக் கயிறை கழற்றி ராக்குவின் கைகளில் சுகமாக கண் மூடி ஆழந்த உறக்கத்திலிருந்த காளியின் கழுத்தில் போட்டார். கீழே குணிந்து காளியின் சின்ன கண்ணத்தில் முத்தமிட்டார். “நீ நல்லாயிருப்படா” என்று தழுதழுப்பான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடக்கத்துடங்கினார்.

சூரியன் கிட்டத்தட்ட உதித்துவிட்டது.

***
(தொடரும்)

காந்தம்


(தொடர்கதை)

4

காலையில் இருந்த பரபரப்பும் எதிர்பார்ப்பும் முற்றிலும் கிராமத்தை விட்டு விலகி, அங்கிருந்த மொட்டை மலையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஏதோ நடக்கப்போகிறது என்று ஆசையோடு காத்திருந்த குழந்தைகள், வழக்கம் போல ஏமாற்றத்துடன் வீட்டினுள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். கிழவிகள் இன்னும் காளியம்மாவை அழைத்துக்கொண்டிருந்தனர். மேகங்கள் நிறைய தூரம் போயிருக்காது என்பது அவர்களுடைய எண்ணம். அழைத்து அழைத்து காளியம்மாவைக் காணாத கிழவிகள், அவளை நிந்திக்கத் தொடங்கினர். இந்த மழைக்காக எவ்வளவு வருடங்கள் காத்திருந்தாயிற்று? இன்னும் மழையை கடவுளாகத் தான் எண்ணிக்கொண்டிருக்க வேண்டுமா? அவர்களைப் பொருத்தவரை கப்பைக்கிழங்கு தான் கடவுள்.

வீட்டினுள் குமார், அத்தை ராக்கம்மா கொண்டுவந்திருந்த கொய்யா பழத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வாயில் முறுக்கு சில்லுசில்லாக உடைந்து கொண்டிருந்தது. அத்தையின் மேல் மிகுந்த பாசம் உண்டானது போல இருந்தது. செந்தில் தூங்கிப்போயிருந்தான். ராணி அவள் வைத்திருந்த எப்பொழுதோ வாங்கின உடைந்த மர பொம்மையை வைத்து ஏதோ அவளுக்கு மட்டும் புரிகிற மொழியில் பொம்மையை கொஞ்சிக்கொண்டிருந்தாள். ராக்கம்மா அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த சோற்றில் ஒரு சில பருக்கைகளை எடுத்து வெந்திருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நேரம் பிடிக்கவேண்டும். பக்கத்தில் ஒரு காலை நீட்டி மறு காலை மடக்கி புளி கரைத்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா. செல்லம்மாவின் முகத்தில் சோகமும் பயமும் அப்பிக்கிடந்தன. மிகவும் சோர்வாக இருந்தாள். எனினும் ராக்கம்மாவின் வருகை கொஞ்சம் ஆறுதல் அளிக்கவே செய்தது. மாணிக்கம் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

வெளியே அடித்துக்கொண்டிருந்த காற்றின் ஓசை குடிசையின் சிறிய துவாரங்களின் ஊடாக புகுந்து மிகுந்த இரைச்சலைக் குடுத்துக்கொண்டிருந்தது. “ஏன் இப்படி பேய்க்காத்தா அடிக்குது?” என்றாள் ராக்கம்மா சலித்துக்கொண்டே. நறுக்கி வைத்திருந்த வெண்டைக்காயை எடுத்து கொதித்துக் கொண்டிருந்த நீரில் போட்டாள்.கையில் தெரித்து விழுந்த ஒரு சில துளிகளை சேலை தலைப்பில் துடைத்துக்கொண்டாள்.ஏதும் பேசாமல் இருந்த செல்லம்மா ,”ராக்கு, பயமா இருக்குடி” என்றாள்.

ராக்கம்மா தனது அண்ணியின் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருப்பவள். அவளைப் போல தைரியசாலியை அவள் பார்த்ததில்லை. மிகுந்த சிரமப்பட்ட நேரத்தில் கூட அவளுடைய தைரியம் எல்லோருக்கும் தெம்பைக்கொடுக்கும். ராக்கம்மாவின் திருமணத்திற்கு செல்லம்மா எடுத்துக்கொண்ட சிரத்தைகள் ரொம்ப பெரியவை. வேறு குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் ஒரு தாயைப் போல இருந்து ராக்கம்மா விரும்பிய -ஏன அதற்கு மேலானதொரு- வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தாள். திருமணம் செய்து வந்த நாளிலிருந்து ராக்கம்மா மணமுடித்து செல்லும் வரை இருவரும் நெருங்கிய தோழிகள் போலவே இருந்தனர். இன்றளவும் அந்த நட்பு சிறு கீரல் கூட விழாமல் அப்படியே இருக்கிறது.

செல்லம்மாவின் பயத்தை அறிந்தவளாக ராக்கம்மா: “ஒன்னும் பயப்படாதீங்க அண்ணி. அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது. அவர் ஜம்முன்னு நாளைக்கு காலையில சாப்பிட ஏதாவது குடுடி பசிக்குதுன்னு வந்து நிப்பாரு பாருங்க” என்றாள். செல்லம்மா சிரித்துக்கொண்டாள். “ஏண்ணி விரக்தியா சிரிக்கிறீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். முருகன் இருக்கான். பாத்துப்பான்” என்றாள்.

அடுப்பின் மிக மங்கிய வெளிச்சத்திலும், முருகனின் சிரிப்பில் தெரிந்த சாந்தம், அவர்களை கவ்விக்கொள்வதாக இருந்தது.

***

ந்த நிமிடமும் திரிவிளக்கு அனைந்து விடலாம் என்று தோன்றியது. மெல்லிய காற்றில் அது இங்கேயும் அங்கேயும் என்ன செய்வதென்று தெரியாமல் ஆடிக்கொண்டிருந்தது. சில சமயம் இதோ மங்கிவிட்டேன் அணையப்போகிறேன் என்று சொல்வது போல கூனி குறுகும். அடுத்த நொடியிலே என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது போல ஒரே சீராய் நேர் கோட்டில் கம்பீரமாக நின்று ஒளிவிடும். விதியின் கைகளில் சிக்கிய மனிதர்களைப் போல, அடுத்த நொடியின் தீவிரத்தையும் திருப்பத்தையும் அறியாமல் அது இருந்தது.

“ராக்கு” “ராக்கு” என்று, தூங்கிவிடும் குழந்தைகளை எழுப்பிவிடாமல், மிக அமைதியாக ராக்குவை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தாள் செல்லம்மா. அயர்ந்த தூக்கத்திலிருந்த ராக்கு இரண்டு மூன்று முறை அழைத்தபிறகு, வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள். “என்ன அண்ணி தூங்கலையா?” என்றாள் தூக்கம் கலையாத கண்களை இடுக்கிக்கொண்டு. “இல்லடி. வலிக்குதுடி” என்றாள் செல்லம்மா. “கொஞ்சம் தண்னி கொடுடி” என்றாள். ராக்கு சட்டென்று எழுந்து ஓட்டமாக நடந்து, பானையை இருட்டில் தேடி அடிமட்டத்தில் கிடந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து விட்டு, என்ன செய்வதென்று தெரியாமல், அருகிலிருந்த மரக்கட்டையில் சாய்ந்து பயமாய் அண்ணியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். “அண்ணி, நான் தெக்குவீட்டு கிழவிய போய் கூட்டிட்டு வரவா?” என்றாள் ராக்கு.

செல்லம்மா, “ம்..ம்..வேகமா போடி. அப்படியே செந்திலையும், குமாரையும் தூக்கிட்டு போய் கவிஅக்கா வீட்ல படுக்கபோட்டுடி” “ராணி?” “ராணி முழிச்சா அழுவா. இங்கேயே இருக்கட்டும்” என்றாள் செல்லம்மா.

ராக்கு குமாரை எழுப்பி கையைப்பிடித்துக்கொண்டு, செந்திலை தோளில் போட்டுக்கொண்டு கதவுக்கொண்டியை விடுவித்துக்கொண்டு மெதுவாக வெளியே வந்தாள். குளிர்ந்த காற்று அவள் முகத்தை தாக்கியது. சில்லிட்டவள் வானத்தைப் பார்த்தாள். மிகுந்த நிசப்தத்துடன் நட்சத்திரங்கள் ஏதுமின்றி கரிய போர்வையை போர்த்தியது போல மர்மமாய் அவளைப் பார்த்தது வானம்.

தூரத்தில் நாய் குளிரில் முனகும் ஓசை கேட்டது. எதிர் குடிசையில், கிழவி கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு இவர்கள் வீட்டையே பார்த்துக்கொண்டு குத்தவைத்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய விழிகள் இமைக்காமல் இருந்தன.

ராக்கு வேகவேகமாக நடந்தாள். அரை தூக்கத்தில் குமார் “அத்தை எங்க போறோம்?” என்றான். கல் தடுக்கி கீழே விழுந்தான். பின் எழுந்து கொண்டு ஒன்றும் பேசாமல் நடந்தான்.

***

மின்னல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமத்தை ரசித்து ரசித்து படம் பிடித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது இடி ஓசையும் மிகச் சன்னமாக கேட்டது. குளிர்ந்த காற்று மிக மெதுவாய் வீசிக்கொண்டிருந்தது. எதிர்வீட்டு கிழவி வானத்தையும் செல்லம்மாவின் வீட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது மகன் கூரையை ஒரு கையில் பிடித்தவாறு நின்று பீடிப் புகையை விட்டுக்கொண்டிருந்தான். அவனது மனைவி செல்லம்மாவின் வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். மேலும் சில பெண்களும் இருந்தனர். அவர்கள் எதற்காகவோ இறைவனை வேண்டிக்கொண்டிருந்தனர்.

தெக்கு வீட்டு கிழவி செல்லம்மாவின் பாதங்களை தேய்த்துவிட்டுக்கொண்டிருந்தாள். ராக்கு செல்லம்மாவின் கைகளை நீவிவிட்டுக்கொண்டிருந்தாள். செல்லம்மா ராக்குவையே பார்த்துக்கொண்டிருந்தாள். செல்லம்மா அனுபவிக்கும் வலி அவளது கண்களின் வழியாக ராக்குவை அடைந்தது. ராக்குவின் வாய் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது. “கட்டு கட்டு கதறிடக்கட்டு” என்ற வரிகள் தெக்கு வீட்டு கிழவிக்கு கேட்டது. ராணி அங்கிருந்த ஏதோ ஒரு பெண்ணின் மடியில் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் இதை ஏதும் அறிந்திருக்கவில்லை.

ஒரு சில வீடுகள் முழித்துக்கொண்டன. மின்னலையும் இடியையும், குடிசைகளை விட்டு வெளியேறி, ஆர்வமாய் பார்த்தனர். வெகு சிலர் காளியம்மன் கோவிலை நோக்கி கை உயர்த்திகும்பிட்டனர். வெகு சிலர் குத்துக்காலிட்டு அவரவர் வாசல் படியிலே உட்கார்ந்து கொண்டனர். இப்பொழுது காற்று சுத்தமாக நின்றுவிட்டிருந்தது. எங்கும் நிசப்தம்.

செல்லம்மாவின் எதிர்வீட்டு வாசலில் மவுனமாக வெறித்துக்கொண்டிருந்த கிழவியின் கோடுகள் நிறைந்த முகம் சற்றே விரிந்தது. கோடுகள் பெரிதானது போல இருந்தது. அவளது உளர்ந்த விரிந்த உதடுகள் லேசாக புண்முறுவல் பூத்தன. பின் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். புகைப்பதை நிறுத்தி விட்டு, அவளது மகன், அவளை விசித்திரமாக சற்றே பயத்துடன் பார்த்தான். சில்லென்ற மழைத்துளி ஒன்று அவனது புறங்கையில் விழுந்தது. அவன் சிலிர்த்து வானத்தைப் பார்த்தான். மேலும் சில மழைத்துளிகள் அவனது நெற்றியில் இறங்கின.

செல்லம்மாவின் வீட்டினுள் மிகுந்த சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு குழந்தையின் அழுகுரல் அந்த தெருவெங்கும் ஒலித்தது. கிழவி மிகுந்த சந்தோஷத்துடன் குதித்துக்கொண்டே “ராசா” என்று கதறிக்கொண்டே செல்லம்மாவின் வீட்டுக்குள் நுழைந்தாள். மண்ணின் ஈர வாசனை அவர்களது நாசிகள் எங்கும் நிறைந்திருந்தது.

***

ழை நின்றபாடில்லை. இடியும் மின்னலுமாக மழை மொத்தமாக சேர்த்து வைத்து அடித்தது. ஆழ்ந்த ஓசையுடன் காற்று விடாமல் அடித்துக்கொண்டேயிருந்தது. எப்பொழுது கூரை பிய்த்துக்கொள்ளும் என்று பயங்கொள்ளும் அளவுக்கு கூரை சத்தமிட்டுக்கொண்டிருந்தது. கூரையில் இருந்த சில ஓட்டைகள் வழியாக மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. குமார் பேயரைந்தது போல ஒரு மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மழையும். புயலும். மின்னலும். இடியும்.

அவ்வப்போது சில துளிகள் செல்லம்மாவின் வலது கண்ணத்தில் தெரித்தது. செல்லம்மா தனது குழந்தையை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ராக்கு கீழே படுத்து காற்றின் இரைச்சலை கவனிப்பது போல கிடக்கும் தனது புது மருமகனின் தலையை கோதிக்கொண்டிருந்தாள். பழைய சேலையில் சுற்றப்பட்டிருந்தவனை அள்ளி எடுத்தாள். “என் ராசா” என்று அழுத்தமாக அவனது பிஞ்சுக் கண்ணத்தில் முத்தம் பதித்தாள். “அண்ணி நான் இவனுக்கு முன்னவே பேர் வெச்சுட்டேன்.” “என்ன பேருடி வெச்சுருக்க உன் ஆச மருமவனுக்கு” “ம்ம்..ஆச மருமவன் தான்..தெக்குவீட்டு கெழவிய கூப்பிட்டு வரும்போதே காளியம்மாவ கும்பிட்டுதான் வந்தேன். மருமக பொறந்தா காளியம்மான்னு வெக்கிறேன். மருமகன் பொறந்தா காளின்னு வெக்கிறேன்னு. அதனால இவன் பேரு காளி. கா…ளி..” என்றாள். குமாரும் சேர்ந்து கொண்டு “கா…..ளி…” என்றான்.

காளி கருப்பாக, ஒடிசலாக இருந்தான். ஆனால் அவன் முழித்து வீரிட்டு அழுகும் போது அவனது கண்கள் பளபளப்பாக கூர்மையாக இருந்தது. அழுகையால் கூட கண்களில் பளபளப்பு வந்திருக்கலாம்.

***

ழை வலுத்துக்கொண்டே போனது. குளிர் அதிகரித்தது. வீட்டில் யாவரும் உறங்கியிருந்தனர். ராக்கம்மாவும் தான். மருமகனைக் கொஞ்சி கொஞ்சி அலுத்துப் போயிருந்தாள். குமார் வெறும் தரையில் படுத்திருந்தான். ராணி நன்றாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். செல்லம்மாவின் உடல் சில்லிட்டிருந்தது. கைவிரல்கள் மிகவும் குளிராயிருந்தது. அவளுக்கு உடலெங்கும் நடுக்கமெடுப்பதைப் போன்று இருந்தது. கால்கள் இழுத்துக்கொண்டன. அவள் மிகுந்த பயத்துடன் கூரையிலிருந்து வழியும் மழைத்துளிகளை வெறித்த வண்ணம் இருந்தாள்.ராக்குவை அழைக்க நினைத்தாள். வார்த்தை தொண்டையிலே நின்று கொண்டது. ராக்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

திடீரென்று, செல்லம்மாவின் கைகள் ஒரே சீராக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன.

***

(தொடரும்)

முந்தைய பகுதிகள்: