உறங்கும் பெண்

(சிறுகதை)

சுவாத் தலை குணிந்தாள், “என்னை கூறுபோட்டு என் மீது படிந்த கறையை வேகமாகத் துடையுங்கள்” என்று தன் தாயிடமும் தந்தையிடமும் தன் மூன்று சகோதரர்களிடமும் அவள் விழுந்து மன்றாடினாள். அவளுடைய தந்தை அமைதியாகவும் அழுத்தமாகவும் கேட்டார்” அப்படி என்னதான் நடந்தது. விளக்கமாகச் சொல்”. சுவாத்தினுடைய குரல் தளுதளுத்தது. “எனக்கு நடந்ததை நீங்கள் யாரும் நம்பப்போவதில்லை. நீங்கள் நம்பாமலிருந்தாலும் எனக்கு நடந்தது நடந்ததுதான்”

தந்தை மிகவும் கடினமான குரலில் “என்ன நடந்தது என்பதை எங்களுக்கு தெளிவாக எதையும் மறைக்காமல் சொல்” என்றார். சுவாத் தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கமாக சொல்லத்தொடங்கினாள்.

சென்ற இரவில் எப்பொழுதும்போல அவள் தன் அறையை பூட்டிவிட்டு தூங்கப்போனாள். அவள் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, வேறு உயிரனங்கள் ஏதும் இல்லாத ஏதோ ஒரு பூங்காவில் தான் நடந்துகொண்டிருப்பதைக் கண்டாள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு இளைஞன் அவளை தாக்கினான். அவளுக்கு அவன் யாரென தெரியவில்லை. அவன் இதுவரையில் எங்கே பதுங்கியிருந்தான் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை. அவன் அவளை கீழே விழ்த்தினான். அவள் மீது படர்ந்து அவளது ஆடைகளை கிழித்தெரிந்தான். அவளுடைய இறைஞ்சல்களையும்; அபய குரல்களையும்; அவர்கள் இருவரின் முகங்களையும் நனைத்துவிட்ட அவளுடைய கண்ணீரையும் அவன் கண்டுகொள்ளவும் இல்லை செவிமெடுக்கவும் இல்லை. அவனுக்கு தேவையானவற்றை அவளிடமிருந்து அவன் எடுத்துக்கொண்டான்.

அப்புறம் அவளுக்கு இரண்டாவது கனவு வந்தது. ஜனசந்தடி நிறைந்த தெரு ஒன்றில் அவள் நடந்துகொண்டிருந்தாள். அப்பொழுது முன்பு கனவில் வந்த அதே இளைஞன் அவள் முன் திடீரென குதித்து அங்கிருந்த எல்லோர் முன்னிலையிலும் அவளை பலாத்காரம் செய்தான். அரங்கேறிய பலாத்காரத்தை பார்ப்பதை அங்கிருந்த ஒருவரும் நிறுத்தவில்லை. அப்புறம் அவளுக்கு மூன்றாவது கனவு வந்தது. அவள் அவளுடைய தாத்தாவின் கல்லறைக்கு அன்று சென்றிருந்தாள். சூரத்-அல்-·பாத்திகாவை வாசித்து தாத்தாவின் ஆன்மாவை நினைத்து பிரார்த்தித்துக்கொண்டிருக்கும் பொழுது, அதே வாலிபன் அவள் முன் மீண்டும் தோன்றி அவளை மூன்று முறை பலாத்காரம் செய்ததைக் கண்டு அவள் அதிர்ச்சியுற்றாள். அவன் சிரித்துக்கொண்டே சொன்னான், சுற்றுப்புறச்சூழலின் அழகியல் தான் எனக்கு இவ்வாறான சக்தி தருகிறது.

அவளுடைய தந்தை அவளிடம் “அவன் யார் என்று உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். “அவன் யார் என்று எனக்கு தெரியாது. இதற்கு முன் என் வாழ்க்கையில் அவனை நான் பார்த்ததேயில்லை. அவனை கனவில் மட்டுமே பார்த்திருக்கும் பொழுது எப்படி நான் அவனை அறிந்திருக்கமுடியும்? ஆனால் இன்னொருமுறை அவனை நான் நேரில் பார்த்தால் கண்டிப்பாக அடையாளம் கண்டுகொள்வேன். ஏனென்றால் அவனுடைய முகத்தை என்னால் மறக்கமுடியாது” என்றாள் அவள்.

“சரி. நீ கனவு முடிந்து எழுந்திருக்கும் பொழுது என்ன நடந்தது?” என்றார் அவளுடைய தந்தை.
அவள் சொன்னாள் : “நான் என்னுடைய படுக்கையில் படுத்திருந்தேன். நான் அணிந்திருந்த உடை கிழிந்திருந்தது. என்னுடைய உடல் முழுவது ரத்தம் படர்ந்திருந்தது. ஆங்காங்கே நகக்கீறல்களும் பற்களை உபயோகித்து கடித்த தடங்களும் இருந்தன.”

அவளுடைய அன்னை சொன்னாள் “இவள் என்னுடைய மகள். இவளை நான் நன்றாக அறிவேன். இவள் ஆழமாக தூங்குகிறவள். பீரங்கி குண்டுகளின் சத்தங்கள் கூட இவளை எழுப்பிவிட முடியாது. நடந்து முடிந்த அனைத்திற்கும் தூக்கத்துக்கும் கனவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவள் தூங்கிவிட்ட பிறகு யாரோ ஒரு வாலிபன் அறைக்குள் ரகசியமாக நுழைந்து இவளை நாசம் பண்ணியிருக்கவேண்டும். ஆம் அதுதான் நடந்திருக்கும்”.

“நான்கு ஆண்கள் இருக்கும் இந்த வீட்டினுள் அப்படி நுழைய இந்த பகுதியில் இருக்கும் எந்த ஆணுக்கு துணிச்சல் இருக்கிறது?” என்று சுவாத்தின் தந்தை கர்ஜித்தார்.

சுவாத்தின் மூன்று சகோதரர்கள் கடும் கோபம் அடைந்து கத்தத்தொடங்கினார்கள். “அந்த இளைஞன் மட்டும் எங்கள் கையில் கிடைத்தால் அவனை துண்டுதுண்டாக வெட்டுவோம். வெட்டப்பட்ட ஒவ்வொரு துண்டும் உலர்ந்த திராட்சை பழங்களை விட மிகச்சிறியதாக இருக்கும்” என்று சூளுரைத்தனர்.

சுவாத் தன் அன்னையை பார்த்து “நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த ளிளைஞனை எனக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால் இந்த பகுதியிலிருக்கும் அனைத்து இளைஞர்களையும் நான் அறிவேன்” என்றாள் சந்தேகமாக.

சுவாத்தினுடைய தந்தை கேட்டார் “அது இருக்கட்டும். அவன் உன்னை பலாத்காரம் செய்யும் பொழுது ஒரு மானமுள்ள பெண் செய்வது போல நீ அவனை தடுத்து நிறுத்தினாயா? கத்தி கூப்பாடு போட்டாயா?”

“நான் தடுத்தேன். என்னால் முடிந்தமட்டும் சத்தமாக கத்தினேன். கதறினேன். கெஞ்சினேன். ஆனால் அவன் சிரித்தான். சிரித்துக்கொண்டே அவன் என்னிடம் நாம் கனவுலகில் இருக்கிறோம். உறக்கத்திலிருப்பவர்களின் உலகத்தை விழித்திருப்பவர்கள் அறியமாட்டார்கள் என்றானப்பா” என்றாள்.

நீண்ட யோசனைக்குப்பிறகு சுவாத்தின் தந்தை உடைந்த குரலில் நடந்ததை பற்றி அவள் யாரிடமும் மூச்சுவிடக்கூடாது என்று சுவாத்தை எச்சரித்தார்.

ஆனால் சுவாத்துக்கு நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியிலிருக்கும் வேறு பெண்களுக்கும் நடக்கும்; ஆண்கள் சிறுமைப்படுத்தப்படுவர்; அவர்களை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க இயலாத ஒரு கையறுநிலைக்கு அந்த ஆண்கள் தள்ளப்படுவார்கள்; எனவே இதற்கு தீர்வாக அவர்கள் தங்களது பெண்டு பிள்ளைகளை தூங்கவிடாமல் தடுப்பார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோற்றுத்தான் போகும். ஏனென்றால் பெண்கள் தூங்குவதற்கு கடமைப்பட்டவர்கள். தூக்கத்தில் அவர்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள். கிழிந்த உடையுடன் தூக்கத்திலிருந்து அவர்கள் விழித்தெழுவார்கள்.

*

-எஸ்.ராமகிருஷ்ணன் தனது வலைபக்கத்தில் இந்த Zakaria Tamer எழுதிய The Sleeping Woman என்கிற இந்த கதயை குறிப்பிடிருந்தார். அதை யாரெனும் பொழுபெயர்த்துத் தருமாறும் கேட்டிருந்தார். என்னால் முடிந்தவரையில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

நீ தொலைத்த எல்லாமுமாய் நானிருக்கிறேன்

நரகம் என்னும் ஆற்றின் வழியாக நான் சொர்கத்திற்கு துடுப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்:
அழகிய மோகினி, இது இரவு.
துடுப்பு ஒர் இதயம்; அது கண்ணாடி அலைகளை ஊடுருவிச்செல்கிறது…

நீ தொலைத்த எல்லாமுமாய் நானிருக்கிறேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய்.
உன் வரலாற்றின் வழிநெடுகிலும் என் நினைவுகள் உதித்துக்கொண்டேயிருக்கும்.
மன்னிப்பதற்கு எதுவும் இல்லை. நீ என்னை மன்னிக்க மாட்டாய்.
என் ரணங்களை நான் என்னிடமிருந்தே மறைத்துக்கொள்கிறேன். என் ரணங்களை நான் மட்டுமே அறிவேன்.
எல்லாவற்றையும் மன்னிக்கலாம். நீ என்னை மன்னிக்க முடியாது.

எவ்வாறேனும், எப்படியேனும் நீ என்னுடையவளாகிவிட்டால், இந்த உலகத்தில் என்னால் சாதிக்க முடியாதது என்று ஏதேனும் இருக்குமா என்ன?

-Translated from The Country Without a Post Office by Agha Shahid Ali.

ஊசியை வைத்துக் கிணறு தோண்டு

எழுதுவது, என்று சொன்னவுடன், என் நினைவுக்கு வருவது, நாவலோ, கதையோ, கவிதையோ அல்லது இலக்கியமோ அல்ல. அது ஒரு மனிதனைப்பற்றியது. ஒரு அறைக்குள், தன்னந்தனியே, அந்த அறையின் நிசப்தத்தில் தன்னைத்தானே அடைத்துக்கொண்டு, தன்னையும், தன்னுள் ஏற்படும் நிழல்களையும் வைத்து ஒரு உலகத்தை – வார்த்தைகளால் ஆன உலகத்தை, தன் உலகத்தை- உருவாக்குகிறவனைப் பற்றியது. எழுத்தாளன் என்பன் வருடக்கணக்கில் பொறுமையாக, மிகப் பொறுமையாக காத்திருந்து, தன்னுள் இருக்கும் இன்னொருவனை – இன்னொரு உலகத்தை – அறிந்து கொள்ள முயல்பவன். அந்த உலகமே அவனை எழுத்தாளனாக்கும். அவன் அவனாக மட்டுமே இருக்கும் உலகம் அது. அந்த எழுத்தாளன் – அல்லது பெண் எழுத்தாளர் – டைப்ரைட்டரையோ, அல்லது கம்ப்யூட்டரையோ அல்லது பேனாவை உபயோகப்படுத்தியோ – நான் கடந்த 30 வருடங்களாக செய்துகொண்டிருப்பதைப்போல- எழுதலாம். அவன் எழுதும்போது காபியோ, டீயோ குடிக்கலாம் அல்லது சிகரெட் புகைக்கலாம். சில சமயங்களில் எழுந்து ஜன்னல் வழியாக தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்க்கலாம். இல்லை இன்னும் அதிர்ஷ்டக்காரன் என்றால் மரங்களையோ, இயற்கைக்காட்சியையோ ரசிக்கலாம். இல்லை வெறுமனே சுவற்றை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவன் கவிதையோ, நாவலோ, நாடகங்களோ எழுதலாம் – என்னைப்போல.மிதைத்தவிர மற்ற பிற வித்தியாசங்கள் அவன் தனிமையில் உட்கார்ந்து, தன்னைத்தானே நோக்கும், அந்த சிரமமான; மிக முக்கியமான நிகழ்ச்சிக்குப் பின்னே தான் நடக்கும். எழுதுவது என்பது தன்னைத்தானே பார்க்கும் அந்த பார்வையை வார்த்தைகளாக மாற்றுவது. அவன் அவனுள்ளே சென்ற பிறகு பிறக்கும் அந்த புதிய உலகத்தை ஆழ்ந்து படிப்பது : நிதானமாக, பொறுமையாக, மனநிறைவுடன் சந்தோஷமாக.

பல நாட்களாக, பல மாதங்களாக, பல வருடங்களாக, என் மேஜையில் உட்கார்ந்து, காலியாக கிடக்கும் என் எழுதப்படாத பக்கங்களில் சிறிது சிறிதாக – ஒரு பாலத்தையோ அல்லது கோவிலையோ, செங்கல் செங்கலாக ரசித்து செதுக்குபவர்களைப் போல -வார்த்தைகளைக் கோர்க்கும் போது, நான் என்னுள் இருக்கும் இன்னொருவனை உணர்ந்துகொண்டதாக உணர்வேன். எழுத்தாளர்களான எங்களுக்கு வார்த்தைகளே செங்கற்கள். நாங்கள் அவற்றை எங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, அவைகளுக்குள்ளான உறவுகளை உணர்ந்து, தொலைதூரத்திலிருந்து பார்த்து, மிக அருகில்; எங்கள் விரல்களைக்கொண்டோ, பேனா முனைகளைக்கொண்டோ வருடிக்கொடுத்து, சரசமாடி, எடையிட்டு, இங்கும் அங்கும் மாற்றியிட்டு அழகுபார்த்து, வருடக்கணக்கில், பொறுமையாக, நம்பிக்கையுடன், எங்கள் உலகத்தை சிருஷ்டிக்கிறோம்.

எழுத்தாளனுடைய ரகசியம் மனவெழுச்சி – அது எங்கிருந்து கிடைக்கிறது என்பது புதிராகவே இருந்தாலும்- அல்ல, அது அவனுடைய பொறுமை மற்றும் பிடிவாத குணம். அந்த அழகிய துருக்கிய பழமொழி – ஊசியை வைத்துக் கிணறு தோண்டு – எழுத்தாளர்களை மனதில் வைத்து சொல்லப்பட்டது என்றே நினைக்கிறேன்.

– சமீபத்தில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் நோபல் பரிசு பெற்றபிறகு பேசியது. என்னால் முடிந்தவரைக்கும் தமிழ் படுத்தியிருக்கிறேன்.

முழுமையான உரையை இங்கே காணலாம்.

செம்மறியாடுகள் கத்திக்கொண்டிருக்கவில்லை.

சல்மான் ருஷ்டியின் த க்ரௌண்ட் பினீத் ஹெர் ·பீட் என்ற நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் பொழுது மிகவும் ரசிக்கத்தக்க வாக்கியங்களை படிக்க நேர்ந்தது. அதை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்ற விபரீத எண்ணம் தோன்றவே, நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள். ஆங்கில வெர்ஷன் இங்கே இருக்கிறது. சில வாக்கியங்களை நீக்கியதற்கு மன்னிக்கவும். சில அர்த்தங்களையும் மாற்றியிருக்கிறேன்.

சில வியாதிகள் பல பெரிய மனித சமுதாயங்களை சீரழிக்கின்றன, பின்னாளில் அத்தகைய வியாதிகள் முன்னெப்பொழுதும் இருந்திருக்கவில்லை என்பதை உணர்கிறோம். ஆண்களும் பெண்களும் தாம் சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட நினைவுகளை திரும்பப்பெருகின்றனர். ஐயோ, இல்லை, அவர்கள் திரும்பப்பெறவில்லை. அவர்கள் தங்கள் பெற்றோர்களை மிகவும் அன்பு செலுத்துபவர்களாகவும், பெற்றோர்களே இவ்வுலகில் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள் என்றும் நினைத்துக்கொள்கின்றனர். மிகப்பெரிய அளவில் சமுதாய படுகொலைகள் நடைபெறுகின்றன. இல்லை நடைபெறவேயில்லை. அனு கழிவுகள் கண்டங்களின் பெறும் பகுதிகளை மாசுபடுத்துகின்றன. அசுத்தமாக்குகின்றன. சுற்றுச்சூழலைக்கெடுக்கின்றன. நாம் “பாதி-உயிர்” கோட்பாட்டை அறிந்துகொள்கிறோம். ஆனால் ஒரே நொடியில் சட்டென்று அனைத்து அசுத்தங்களும் மறைகின்றன. சுற்றுச்சூழல் முன்னெப்போதும் போல சுத்தமாகவே இருக்கிறது. இப்பொழுது செம்மறியாடுகள் கத்திக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் சந்தோஷமாக செம்மறியாட்டின் தொடைக்கறியை சப்புக்கொட்டி சாப்பிடுங்கள்.

பூலோக வரைபடங்கள் தவறாக இருக்கின்றன. எல்லைக்கோடுகள் பிரச்சனைக்குள்ளான தேசங்களில் ஒரு பாம்பைப் போல நெளிந்து கொண்டும், வளைந்து கொண்டும் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. பாதைகள், தாம் நேற்று வரை சென்றுகொண்டிருந்த இடங்களுக்கு இனி எப்போதும் செல்லப்போவதில்லை. ஒரு ஏரி திடீரென்று காணாமல் போகிறது. மலைகள் சிகரங்களாகின்றன. பிறகு மறுபடியும் குன்றுகளாகின்றன. மிகவும் புகழ்பெற்ற புத்தகங்கள் யாரும் எதிர்பாறாத முடிவுகளைப் அடைகின்றன. கருப்பு-வெள்ளை திரைப்படங்களிலிருந்து வானவில்லாய் வண்ணங்கள் வெடித்துச் சிதறுகின்றன. கலை என்பது ஒரு பித்தலாட்டமே. ஏமாற்றுவேலையே. அதி நவீன புறத்தோற்றமே உண்மை. திடம். செத்துப்போனவர்கள் தர்மசங்கடத்துக்குள்ளாக்குகிறார்கள். எவருமே செத்துப்போகவில்லை.

நீங்கள் ஒரு விளையாட்டு ரசிகர். ஆனால் நீங்கள் ஒவ்வொருமுறை விளையாட்டை பார்க்கும்பொழுதும், விதிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஐ! உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. இல்லை உங்களுக்கு கிடைக்கவில்லை.அவள் ஜனாதிபதிக்கு பவுடர் அடித்துவிட்டாள். அவளுடைய கனவுகளில் அவள் பல மாயங்கள் செய்பவளாயிருந்தாள். நீங்கள் ஒரு காமக்கடவுள். நீங்கள் ஒரு காம அடிமை. அவள் சாகத்தான் வேண்டும். அவள் ஒரு மோசமான பெண். [சமாதனம் செய்ய முற்படாத உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை, சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறுபடும் ஒரு வித்தியாசமான பார்வையாகவும் இருக்கலாம்]. உங்களுக்கு கேன்சர் இல்லை. ஏப்ரல் ·பூல். ஆமாம். உங்களுக்கு கேன்சர் இருக்கிறது. நைஜிரியாவிலிருக்கும் அந்த நல்ல மனிதன் ஒரு கொலைகாரன். அல்ஜிரியாவிலிருக்கும் அந்த கொலைகாரன் ஒரு நல்ல மனிதன். அந்த பைத்தியகார கொலைகாரன் அமேரிக்காவின் மீது பற்றுள்ளவன். அந்த அமேரிக்க பைத்தியகாரன் கொலையின் மீது பற்றுள்ளவன். அங்கோரன் காடுகளில் செத்துக்கொண்டிருப்பது போல் பாட்டா? அல்லது வெறும் நோல் நாட்டா?

கீழே சொல்லபட்டிருப்பவையெல்லாம் உங்களுக்கு கேடுகளை விளைவிக்கக்கூடியவை: காமம், மிக உயரமான கட்டிடங்கள், சாக்லேட், உடற்பயிற்சியை புறக்கணித்தல்,சர்வாதிகாரம்,இனவெறி. இல்லை, எதிர்மாறாக இருக்கிறது. பிரம்மச்சரியம் மூளையை பாதிக்கும். மிக உயர்ந்த கட்டிடங்கள் நம்மை கடவுளுக்கு வெகு அருகில் கொண்டு செல்லும், ஒரு சாக்லேட் கட்டி ஒரு நாளைக்கு என்ற விகிதம், குழந்தைகளின் பாடம் படிக்கும் திறமையை முன்னேற்றுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சி கொல்லும். சர்வாதிகாரம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எனவே உங்கள் கலாச்சார-கட்டுபட்டி விதிகளை, யோசனைகளை என் சாம்ராஜ்ஜியத்திற்கு உள்ளே கொண்டுவராததற்கு மிக்க நன்றி. போய்வாருங்கள். பிறகு, இனவெறி. நாம் இதைப்பற்றி ரொம்பவும் பிரசங்கம் செய்ய வேண்டாம். ஒரு கடுமையான ஜமுக்காளத்திற்கு அடியே மக்கி மறைந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் வெட்ட வெளியே அப்பட்டமாக இருப்பது தான் நல்லது
இல்லையா?. அந்த தீவிரவாதி ஒரு மிதவாதி. அந்த உலகளாவிய உரிமை கலாச்சாரத்தை சார்ந்திருக்கிறது. இந்த பெண் கலாச்சாரத்தை சார்ந்து சந்தோஷமாக இருக்கிறாள்.படங்கள் பொய் சொல்லாது. இந்த பிம்பம் பொய்யானது. போலியானது. பத்திரிக்கையை சுதந்திரமாக்குங்கள். மூக்கை நுழைக்கும் பத்திரிக்கையாளர்களை தடை செய்யுங்கள். நவீனம் செத்துவிட்டது. கௌவ்ரவம் மடிந்துவிட்டது. ஹையா, இவையெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நம்மை பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்த நட்சத்திரம் வளர்கிறது. இல்லை அவள் தேய்கிறாள். விழுகிறாள். நாம் ஒன்பது மணிக்கு சாப்பிட்டோம். நாம் எட்டு மணிக்கு சாப்பிட்டோம். நீங்கள் நேரத்திற்கு வந்தீர்கள். இல்லை. நீங்கள் தாமதாமாக வந்தீர்கள்.கிழக்கு தான் மேற்கு. உயர்வு தான் தாழ்வு. ஆம் தான் இல்லை. உள்ளே தான் வெளியே. உண்மைகளெல்லாம் பொய்கள். வெறுப்புதான் காதல். அன்பு. இரண்டும் இரண்டும் சேர்ந்து ஐந்தைக் கொடுக்கிறது. எல்லாம் நன்மைக்கே, இந்த மிக நல்லதாக இருக்ககூடிய உலகத்தில்.

இசை நம்மையும், நம் காதலையும் காப்பாற்றும்.

Translated from Salman Rushdie’s The Ground Beneath Her Feet.