Bhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்

போப்பால் பேரழிவைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு ஆனால் அறிந்ததில்லை. அதைப் பற்றி படித்ததில்லை. படிக்கும் ஆர்வமும் இருந்ததில்லை. அது ஏதோ மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றே நினைத்திருந்தேன். ஒரு பேரழிவு எப்படிப்பட்டதாயிருக்கும் என்று யோசிக்கத்தெரியவில்லை. உண்மையில் பேரழிவுகள் உலகம்தோரும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால் பேரழிவுகளுக்குப் பிறகு ஒரு அரசு அந்த அழிவில் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி அந்த அழிவிலிருந்து வெளிக்கொணர்ந்தது என்பது மிக முக்கியம்.

ஸ்வரூப்பா முகர்ஜியின் புத்தகத்தை எதேச்சையாக சிங்கப்பூர் நூலகத்தில் பார்த்து அதை எடுத்து படிக்கும் வரை போப்பால் பேரழிவு என்னுள் பெரிய அதிர்வை உண்டுபண்ணும் என்று நான் நினைக்கவில்லை. அதைத் தமிழில் எழுதவேண்டும் என்கிற எண்ணமும் அதற்குப்பிறகுதான் தோன்றியது. மொழிபெயர்ப்பு எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் போப்பால் பேரழிவைப்பற்றி நானே எழுதும் அளவுக்கு கள ஆய்வு செய்ய எனக்கு நேரம் கிடையாது. அலுவலகம் முடித்து வந்த பிறகு கிடைக்கும் சொற்ப நேரத்தில் எழுதவேண்டும், மேலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை.

சில கதைகளின் கரு மனதில் தோன்றிவிடும். ஆனால் அது வளர்ந்து கதையாக மலர வெகு நாட்களாகும். சில சமயம் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் கதையாக வளர்ந்து விட்ட பின் அது மண்டைக்குள் தங்காது. அது வெளி வந்தே தீரவேண்டும். எனது வடமிழந்த தேர் சிறுகதை இவ்வகையைச் சேர்ந்தது. இந்தக்கதையின் கரு எனக்கு ஆறு வருடங்களுக்கு முன் தெரியும். நான் பாரீசுக்கு அலுவலகப் பணி நிமித்தமாக சென்றிருந்த பொழுது, அலுவலகத்திலிருந்து மாலை கடுங்குளிரில் நடந்து வந்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில் முழுக் கதையாக உருமாறியது. அதற்குப்பின் அதை என்னுள் வைத்திருக்க இயலவில்லை. கடும்பணிச்சுமைக்கு மத்தியிலும் பத்து நாட்கள் நிதமும் இரவு ஒருமணி நேரம் செலவழித்து கதையை எழுதிமுடித்தேன்.

அப்படி ஒரு நிலைக்கு போப்பால் பேரழிவைப் படித்தப் பிறகு நான் தள்ளப்பட்டேன். சரி வேறு வழியில்லை – மொழிபெயர்ப்பே சாலச்சிறந்தது என்கிற முடிவுக்கு வந்தேன். முதல் அத்தியாயம் எழுதியது 2006ல். கடைசி அத்தியாயம் எழுதியது 2009ல். மூன்று வருடங்கள் எழுதியிருக்கிறேன் – 🙂 என்னுடைய மிகச்சிறந்த எழுத்து இல்லை இது. ஆனால் போப்பால் பேரழிவைப்பற்றியும் அதற்குப்பின்னால் இருந்த வெளிநாட்டு கார்ப்பரேட் பண முதலைகளையும் அவர்களுக்கு பாதுகாப்பளித்த உள்ளூர் அரசியல்வாதிகளையும் பற்றிய சிறு தெளிவு இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு உண்டாக்கினால் அது போதும் எனக்கு.

இதன் மின் புத்தகம்:

https://dl.dropboxusercontent.com/u/91280476/Bhopal%20Gas%20Tragedy.pdf

 

முத்து. மே 18 2014.

 

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 9 (முடிந்தது)

3 டிசம்பர் 2005

இந்த தேதி நம்மில், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தவிற வேறு எதையாவது நினைவு படுத்துகிறதா?

ஆனால் மிகவும் முக்கியமான நாள் இது. இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னர் சிறு குழந்தைகள் – சிறுவர்களும் சிறுமிகளும் – மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட ஒரு வாயுவால் பாதிக்கப்பட்டனர். இன்றைக்கு இந்த சிறுமிகளும் சிறுவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வழந்திருப்பார்கள். பிறக்கப்போகும் இந்த குழந்தைகள் குறைகளோடு பிறப்பார்களா? விஷவாயுவின் நச்சுத்தன்மை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்துகொண்டு பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்குமா? இது வரை மறுக்கப்பட்ட இந்த விசயத்தை புள்ளிவிபரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவருமா?

போப்பால் பேரிடர் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதா?மார்ச் 21 2001 அன்று கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் தீப்பிடித்துக்கொண்டது. அந்தத் தீ அருகில் இருந்த 32 குடிசைகளை சிதைத்தது. அங்கு வாழ்ந்தவர்கள் மிளகாய் எறிந்து கருகும் வாடையை சுவாசித்ததாகச் சொன்னார்கள். அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எறிந்துகொண்டிருந்த தீ அவர்களை முச்சுத்திணறடித்தது அவர்கள் சுவாசிக்க இயலாமல் தொண்டை அடைக்க டிசம்பர் 3 1984 ஐ நினைவுகூர்ந்தனர். வரலாறு திரும்பியது.

பிப்ரவரி 2001இல் டவ் கெமிக்கல்ஸ் (DOW) என்கிற மிசிக்கனைச் சேர்ந்த நிறுவனம் 11.6 பில்லியன் டாலர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி உலகின் இரண்டாவது பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக மாறியது. ஆனால் டவ் போப்பாலில் நடந்து முடிந்த துயரச்சம்பவத்துக்கு எந்த அளவிலும் பொறுப்பேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. கொடுக்கப்பட்ட 470 மில்லியன் டாலர் தான் இறுதியான இழப்பீட்டுத் தொகை, UCC அதைக் கொடுத்துவிட்டது எனவே அது சம்பந்தமான எந்த இழப்பீடும் இனி நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. டவ்வின் முக்கியமான மேலாளார் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் மனித நேயத்துக்காக மட்டுமே சில விசயங்களை செய்துகொண்டிருக்கிறோம், இதைக் கொண்டு நாங்கள் இழப்பீடு தருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்”.

ஆனால் இதே நிறுவனம் டெக்ஸாஸில் இருக்கும் UC நிறுவனத்தை வாங்கி ஒருவருடத்துக்குள் அப்பொழுது UCயின் மேல் தொடரப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் சம்பந்தப்பட்ட வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால் இந்த நிறுவனத்துக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டமானது. டவ் டெக்ஸாஸில் இருந்த UCஐ வாங்குவதற்கு முன்னர் இந்த வழக்கு சம்பந்தமாக ஏதும் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கவில்லை அதனால் தான் நாங்கள் வாங்கியவுடன் நடந்துகொண்டிருந்த வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தோம், ஆனால் போப்பாலில் நடந்தது வேறுமாதிரி. அங்கு ஏற்கனவே நாங்கள் வாங்குவதற்கு முன்னரே ஒரு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டாயிற்று என்று நிஜத்தை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டது.

அதேசமயத்தில் 23 மே 2002 இல், இந்திய அரசின் சார்பாக, சிபிஐ போப்பாலின் நீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தது:வாரன் ஆன்டர்சன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றங்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே அது. பத்துவருட கடுங்காவல் தண்டனைக்கு உரியதான கொலைக்குற்றத்திலிருந்து கீழிறக்கி இரண்டு வருட தண்டனை மட்டுமே கொடுக்கக்கூடிய குற்றங்களை மட்டுமே சுமத்தவேண்டும் என்கிற கோரிக்கை அது.

29 ஆகஸ்ட் 2002 அன்று நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. ஆன்டர்சனைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகிவிட்ட அவர் இதுவரையில் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.எனவே தண்டனையைக் குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை முட்டாள்த்தனமானது என்றது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிதிக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று கொண்டாடப்பட்டது.

இந்தத் துயரசம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆனபொழுது எல்லோருடைய மனநிலையும் கொண்டாட்டத்துக்கு மாறியிருந்தது. மார்ச் 2004 அன்று அமெரிக்க ·பெடரல் கோர்ட் UCCயை பாதிப்படைந்த இடத்தை சர்வதேசத் தரத்தில் சுத்தாமாக்க முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மத்தியப்பிரதேச மாநில அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் இந்தமாதிரியான வேலை செய்வதற்கு தங்களிடம் பணமோ தொழில்நுட்பவசதியோ இல்லையென்று சொல்லிவிட்டது. ·பெடர்ல் நீதிமன்றம், ஒரு அந்நிய நாட்டின் நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இவ்வாறான சுத்தப்படுத்தும் காரியம் செய்வதை இந்தியா அனுமதிக்கிறதா என்று கேட்டிருந்தது. கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் துயரசம்பவத்தில் தப்பிப்பிழைத்த மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் இந்திய அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டது.

இதுவொரு முக்கியமான முடிவு. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு “மூன்றாம் உலகத்தை” சேர்ந்த நாட்டில் தான் செய்து விட்ட தவறுக்கு பரிகாரம் செய்ய வற்புறுத்தப்பட்டது இதுவே முதல்முறை. 1989 இல் கொடுத்த இழப்பீட்டுத் தொகைக்குப் பிறகு நடந்துமுடிந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கத் தேவையில்லை என்கிற UCCயின் வாதம் இனி ஒருபோதும் செல்லாது.

19 ஜீலை 2004 அன்று மேலுமொரு வெற்றி கிடைத்தது.இந்திய உச்சநீதி மன்றம் மீதமிருக்கும் இழப்பீட்டுத்தொகையான 1500 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட 5,66,876 மக்களும் பிரித்துக்கொடுக்குமாறு வழியுறுத்தியது. நீதிக்காக இருபது வருடங்கள் காத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று என்பது நம்மில் பலருக்குத் தோன்றலாம், ஆனால் பாதிப்படைந்த மக்களுக்கு இது பல சோதனைகளுக்குப் பிறகு போராடிய அவர்களது மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.

Wall Street Journalஇல் அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களின் பல மேலாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருவதாக சொல்லப்பட்டது. முதன்முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்று வளர்ந்துவரும் மூன்றாம் உலகத்தில் தான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறது என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்ட அன்று, UCCயின் பங்குகள் இரண்டு டாலர்கள் உயர்ந்தது. நிறுவனத்தின் சொத்து அப்படியே இருக்கிறது என்று மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சராசரியாக பாதிப்படைந்த ஒரு நபர் வெறும் 500 டாலர்கள் மட்டுமே பெற்றதை நினைத்து அவர்கள் யாரும் வறுத்தப்படவில்லை. இந்த 500 டாலர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச்செலவுக்குக் கூட போதாது என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

லாப நோக்கோடு அலையும் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு காலத்தில் உலகையே அடிமையாக்கிவிடும் என்கிற அபாயகரமான உண்மையை நம்மில் பலரும் வசதியாக மறந்துவிடுகிறோம். நிறுவனத்தின் வெற்றிக்கு முன்பு மனிதநேயம் பொருட்டேயல்ல என்கிற படு பயங்கர தத்துவத்தை நாம் தீனி போட்டு வளர்த்துவருகிறோம்.

பூச்சிக்கொள்ளி மருந்துகளால் கேன்சர் வரும். எனவே அவை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகச் சுதந்திரமாக அது விற்கப்படுகிறது. டர்ஸ்பன் (Dursban) என்கிற பூச்சிக்கொள்ளி மருந்து குழந்தைகளுக்கு மூளை பாதிப்பை உண்டாக்கும் என்பதை தெரிந்திருந்தும் DOW நிறுவனம் அதை கவலைப்படாமல் சுதந்திரமாக விற்றுவருகிறது. டூபான்ட் (DuPont) நிறுவனம் ஓசோன் படலத்தை சிதைத்து தோல் கேன்சரை உருவாக்கும் chloroflurocorbans என்கிற ரசாயனத்தை உருவாக்கத்தான் செய்கிறது. பாலூட்டும் அன்னை தன் குழந்தைக்கு டையாக்ஸினை அவளறியாமலே புகட்டிக்கொண்டிருக்கிறாள். நம் உடலை நாமே கடுப்படுத்தவியலாத ஒரு புதிய வன்முறையை நாம் உருவாக்கிவிட்டோம்.

“ரசாயன தொழிலில் ஒரு ஹிரோஷிமா” வான போப்பால் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்டு ஒரு தன்னார்வ புரட்சி இயக்கமாக வளர்ந்து போராட்ட குணத்தையும் எதிர்ப்பு சக்தியையும் தன்னுள் அடக்கி வருடங்கள் பல கடந்த பின்னும் அந்த இயக்கம் இன்னும் அதே மூர்க்கத்துடன் இயங்கி வருகிறது.

போப்பால் தன் பெண்களை அவர்களது சிறையிலிருந்து மீட்டுக்கொண்டுவர ஒரு காரணியாக இருந்தது. அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்காக்களில் கூடி போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு அணியை அவர்கள் உலகம் முழுவதிலும் உருவாக்கிவிட்டிருந்தனர். அவர்கள் தங்களது குரல்கள் சத்தமாகவும் சுத்தமாகவும் ஒலிக்கவேண்டும் என்று விரும்பினர். அதையே செய்தும் காட்டினர்.

சுற்றுப்புற சூழ்நிலைக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படும் Goldman Environment பரிசு, பாதிப்படைந்த மக்களின் நீதிக்கு போராடியதற்காக, ரஷிடா பி (Rashida Bi) மற்றும் சம்பா தேவி சுக்லா(Champa Devi Shukla) ஆகிய இரு பெண்களுக்கும் ஏப்ரல் 2004 இல் கொடுக்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் இந்த இரு பெண்களும் கீழ் வருமாறு பேசினர்:
டவ் நிறுவனம் தான் இன்னும் நீண்டுகொண்டிருக்கும் அந்த துயரசம்பவத்துக்கு பொறுபேர்க்க வேண்டும் என்கிற தீர்ப்பு வந்த அந்த நாள் உலகம் முழுவதும் இருக்கும் சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.அந்த நாளில் இருந்து நச்சுத்தன்மை மிகுந்த ரசாயனத்தை தயாரிக்கும் எந்த நிறுவனமும் மனிதநேயத்துக்கு முன் லாப நோக்கத்தை முன்வைப்பதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். நாங்கள் அடிபனிந்து போகிறவர்கள் அல்ல. இந்த உலகத்தின் வாழ்வாதாரத்தையும் உயிரின் ஆதாரத்தையும் அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதன்மூலம் நாங்கள் இருட்டை வென்றிடுவோம்.

குரல்கள்:
போப்பாலில் நடந்த துயரசம்பவத்துக்கு ஈடாக போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை மட்டுமே ஒப்பிடமுடியும். இந்த சம்பவம் நடந்த அன்று போப்பால் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் வெளியாகிய 45 டன் MICஇல் போஸ்ஜீன்(phosgene) சிறிதளவு கலந்திருக்கிறது. போஸ்ஜீன் முதலாம் உலகயுத்தத்திலும், இரண்டாம உலக யுத்தத்திலும் மேலும் ஈரான் – ஈராக் யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனத்தின் தன்மையையும் அது கனிசனமான அளவு சுற்றுப்புறத்தில் கலந்திருப்பதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், இதனுடைய விளைவுகள் இன்னும் பல காலத்துக்கு தொடர்ந்துகொண்டிருக்கும். திட்டவட்டமான ஒரு இழப்பின் மதிப்பீட்டுக்கு வர இயலாது என்பது உண்மை.
18 டிசம்பர் 1984 அன்று டெல்லி அறிவியல் கழகம் பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு அறிக்கை.

டிசம்பர் 3

இறந்துவிட்டவர்களை நினைவு கூர்வதோடு மட்டுமில்லாமல், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நீதிக்காகவும் இனி பிறக்கப்போகும் குழந்தைகளின் நலனுக்காவும் போராட வேண்டும் என்கிற உறுதியை இந்த நாளில் நாம் எடுக்கவேண்டும்.

**
(முடிந்தது)
மூலம்: BHOPAL GAS TRAGEDY- THE WORST INDUSTRIAL DISASTER IN HUMAN HISTORY By SUROOPA MUKHERJEE.

யார் முழித்திருக்க போகிறார்கள் – 7

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மொத்தத்தில் இது எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. பன்னாட்டு நிறுவனங்களின் அமைப்பு, மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்ட போதும், அவற்றை குற்றம் சுமத்தமுடியாததாய் இருப்பதை இந்த வழக்கு அப்பட்டமாய் உலகுக்கு உணர்த்தியது.

UCC பழியை சராசரியாக பிரித்துக்கொடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. கடைசியில், நடந்து முடிந்த துயரத்துக்கு UCC காரணமாக இருந்தால், அதே அளவு பழி மத்தியபிரதேச அரசுக்கும் மாநில அரசுக்கும் போய் சேரவேண்டும் என்று UCC கணக்கிட்டது. பழியை பிரித்துக்கொள்வது புத்திசாலித்தனம். இழப்பீட்டுத் தொகையையும் கணிசமாக குறைக்கலாமே!

உதாரணத்துக்கு:

  1. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய சட்டதிட்டங்கள் ஏன் அவற்றை கட்டுப்படுத்தவில்லை?
  2. மிக நுணுக்கமான தொழில் நுட்ப திட்டங்கள் கொடுக்கப்படாமல் இருந்த பொழுதும் ஏன் MIC தொழிற்சாலையை நிறுவ அரசு சம்மதித்தது?
  3. லைசன்ஸ் ஏன் வழங்கப்பட்டது?
  4. Design Transfer Agreement என்ற ஒன்று இருக்கிறதே, அது எப்படி செயற்திட்டத்திற்கு மட்டும் UCCஐ பொறுப்பாக்கிவிட்டு, அதன் பின்விளைவுகளுக்கு பொறுப்பாக்காமல் விட்டது?
  5. மருத்துவ உதவி, பொது அறிவிப்பு முறை மற்றும் மக்களை வெளியேற்றும் திட்டங்கள் ஏன் முதன்மை செயற்திட்டத்தோடு இணைக்கப்படவில்லை?
  6. தொழிற்சாலையை பரிசோதிக்க வந்த அதிகாரிகள், UCCயின் பிரதிநிதிகள் சொன்ன தகவல்களை, ஏன் அப்படியே முழுவதுமாக நம்பினார்கள்?
  7. ஒரு பேராபத்தை விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைக்கு பாதுகாப்பு அம்சங்கள் கண்டிப்பாக தேவையான ஒன்று தானே? அதை ஏன் இந்திய அதிகாரிகள் சரிவர கண்காணிக்கவில்லை?

முக்கியமாக, அக்டோபர் 1984இல், தொழிற்சாலைக்கு மிக அருகில், அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி குடியேறியவர்களுக்கு, சட்டபூர்வமாக பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை சட்டமன்றம் நிறைவேற்றியது. தொழிற்சாலை வந்தபிறகு, மிகுந்த ஆபத்தான பகுதியாக மாறிவிட்ட இந்த குடியிருப்புகளை காலிசெய்ய முயலாமல், அதற்கு எதிர்மறையாக, அரசு அவர்களுக்கு பட்டாக்கள் வழங்கியது ஏன்?

போப்பால் ஆக்ட் இழப்பீட்டை பெறுவதற்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்த போதும், அரசாங்கத்தின் அசட்டையான செயல்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களை பாதித்தது. இறந்தவர்களின் புள்ளிவிபரங்கள், மற்றும் காயமடைந்தவர்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் அவர்களது காயங்களின் முழு தன்மை போன்றவற்றை சேகரிக்கும் வேலையை அரசாங்கம் சரிவரச்செய்யவில்லை.ஆம், அரசாங்கம் தன் வேலையை, பாதிப்பு ஏற்படும் முன்னரும் சரியாக செய்யவில்லை, பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் சரியாக செய்யவில்லை.

இந்தியாவின் பெட்டிசன், போப்பாலில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் இழப்பின் மிகச்சரியான அளவை சுட்டிக்காட்டத் தவறிவிட்டது, என்பதை UCC உடனடியாக நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியது. விஷவாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிக்கையின் வெளியிடப்பட்ட எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இறந்தவர்களின் எண்ணிக்கை : 1,760. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 30,000 – 40,000. வழக்கின் அனைத்து விசாரிப்புகளின் போதும் இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. சுப்ரீம் கோர்ட் 1989இல் இறுதி தீர்ப்பு வழங்கியவரை இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. பாதிக்கப்பட்டவர்களில் மிகச்சிறய -மிகமிகச்சிறிய- விழுக்காட்டினரே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர். எனவே, விடுபட்ட எஞ்சிய மற்ற மக்களுக்கு எந்த ஒரு தீர்ப்பையும் நீதிமன்றம் கொடுக்க இயலவில்லை. சொல்லுங்கள். ஒழுங்காக கணக்கெடுப்பது அவ்வளவு கடினமான வேலையா? அதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய கணக்கு?

இந்திய பெட்டிசனின் மிகப்பெரிய பலவீனம் இது. சுப்ரீம் கோர்ட் ஒரு மிகக்குறைவான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு வழிவகை செய்ததோடு மட்டுமில்லாது,இழப்பீட்டுத் தொகை மட்டுமே போதும் வேறு எந்த தண்டனையும் தேவையில்லை என்கிற மனப்போக்கு உருவாக காரணமாகவும் இருந்தது.UCC தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் சரமாரியாக மறுத்தது. அது சொன்ன காரணங்கள் : குற்றங்கள் தெளிவாக இல்லை. புள்ளிவிபரங்கள் தவறு.

“தான் குற்றம் செய்ததை ஒத்துக்கொள்ளக்கூடாது” என்பதில் UCC கவனமாக இருந்தது. நடந்த பேரிடருக்கு தண்டனையாக இழப்பீட்டுத்தொகையைக் கொடுக்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தது. ஆம். அது குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை – மிக குறைந்த இழப்பீட்டுத்தொகை – வழங்கத்தயாராக இருந்தது, ஆனால் ஏற்பட்ட இழப்புக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்க தயாராக இல்லை.

இந்தியாவும் தன்னால் இந்த வழக்கில் ஜெயிக்க இயலாது என்பதையே உலகுக்கு காட்ட விரும்பியது.

ஒன்று: பாதிக்கப்பட்டவர்கள் துன்பத்தில் உலன்று கொண்டிருக்கும் போது, அவர்கள் சிறிது சிறிதாக செத்துக்கொண்டிருக்கும் போது, இந்த வழக்கை முடிக்காமல் UCCயுடன் சண்டையிட்டுக்கொண்டேயிருப்பது.

இரண்டு: UCC கொடுக்க இருக்கும் இழப்பீட்டுத் தொகையையும், நிபந்தனைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஏப்ரல் 4 1987

நியூயார்க்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முழுதாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட பொழுதும் UCC இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. ஏப்ரல் 4 1987 அன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி M.W. Deo, UCCஐ இடைக்கால இணக்க நிவாரணமாக 270 மில்லியன் டாலர் வழங்க உத்தரவிட்டது.நீதிபதியின் இந்த யோசனை, ஒரு தனிநபர் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக, தொடர்ந்த வழக்கின் எதிரொலியே ஆகும். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில், இறுதி இழப்பீட்டுத் தொகை வரும் வரையில், உதவியாக இருக்கட்டுமே என்ற எண்ணம் தான்.

துரதிர்ஷ்டவசமாக சில சட்ட சிக்கல்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சனையை உண்டுபண்ணின. நாடகத்தின் அடுத்த காட்சி முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜபல்பூர் நீதிமன்றத்துக்கு இடம்மாறியது. அங்கே மீண்டும் சட்ட பிரச்சனைகள் அலசப்பட்டன, எப்பொழுதும் இருக்கும் நீதிமன்றத்தின் காலதாமதங்களும் உடன் சேர்ந்துகொண்டன. கடைசியாக UCC எந்தவொரு இடைக்கால நிவாரணத்தொகையையும் வழங்க மறுத்தது.

ஒரு பேரிடர் இயற்கையால் (அல்லது கடவுளால்!!) ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் நிவாரணத்தொகை பல திசைகளிலிருந்தும் இருந்து குவிந்தவண்ணம் இருக்கிறது. ஆனால் அதே பேரிடர் மனிதானால் ஏற்பட்டது என்றால், அனைத்து திசைகளையும் கதவுகளையும் அரசியல் அடைத்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக சட்டம் மற்றும் அரசியல் என்னும் கடினமான வலையில் சிக்கிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது தொலைதூரத்தில் தெரியும் காணல் நீராகவே இருந்தது.

பிப்ரவரி 14 1989

குரூரமான இந்த சட்டத்தின் யுத்தம், நான்கு வருடங்கள் நான்கு வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்தன. கடைசியாக பிப்ரவரி 14 1989 அன்று இந்த நாடக அரங்கின் திரை கடைசியாக இறக்கப்பட்டது, நாடகம் முடிந்தது. இரு தரப்பினரும் நீதிமன்றம் விதித்த இழப்பீட்டுத்தொகையை ஒத்துக்கொண்டன. அதற்குள்ளாக அரங்கு இந்தியாவின் மிக உயர்ந்த சட்டகோயிலாக கருதப்படும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாறியிருந்தது. UCC 470 மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. போப்பால் மாவட்ட நீதிமன்றத்தில் முதன்முதலில் 1986இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டபொழுது இழப்பீட்டுத் தொகையாக கோரப்பட்டது எவ்வளவு தெரியுமா? 3 பில்லியன் டாலர். சுப்ரிம் கோர்ட் இழப்பீட்டுத் தொகையை கனிசமாக குறைத்திருந்தது.

அதிர்ச்சி அலைகள் ஏமாற்றத்துடன் நாட்டை சுற்றி சுற்றி வந்தன. கூச்சலும் சத்தமும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் சத்தமாக கேட்டது. கண்டனப் பேரணிகள் போப்பாலிலும் டெல்லியிலும் நடந்தன. இழப்பீட்டுத் தொகை ஒரு துரோகம். இரண்டாவது விபத்து என்று வர்ணிக்கப்பட்டது. இந்த மாதிரியான தேவையில்லாத சமரச உடன்படிக்கைக்கு என்ன காரணம்?

போப்பால் வழக்கு இரண்டும் காரணிகளைச் சார்ந்திருந்தது – நஷ்டயீடு மற்றும் பொறுப்பு. வேறு வார்த்தைகளில் சொல்லுவதாக இருந்தால், எவ்வளவு பணம் இந்த பேரிடரை ஈடு செய்யும்? நடந்த விபத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

நஷடயீடும், பொறுப்பும் இரண்டு வெவ்வேறு காரணிகள் அல்ல. ஒன்றை ஒன்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த விதிக்கு எதிர்மாறாக இழப்பீட்டு தொகை மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டும் முற்றிலும் வேறு வேறு என்பதைத் தான் தீர்ப்பு நிரூபித்தது. UCC ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கத்தயார், ஆனால் ஒரு நிபந்தனை, UCCக்கு எதிரான அனைத்து சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தள்ளூபடி செய்யவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அப்படி தள்ளுபடி செய்யவில்லை என்றால் UCC நஷ்டயீடு வழங்காது. நஷ்ட ஈடு வழங்கினால், குற்றம் உறுதிப்பட்டது என்பது தானே அர்த்தம்? அதென்ன நஷ்ட ஈடு வழங்குவேன், பொறுப்பு ஏற்க மாட்டேன் என்பது?

UCC ஆரம்பத்திலிருந்தே ஒரு நஷ்டயீட்டுத் தொகை வழங்குவதில் ஆர்வமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால் அது அவர்களின் தந்திரங்களில் ஒன்று. இந்தியா நியூயார்க்கில் முதன் முதலில் வழக்கு பதிவு செய்ததற்கு முன்பே, UCC ரூபாய். 300 கோடி – அறுபது கோடியை உடனடியாக வழங்குவது என்றும், அடுத்த முப்பது வருடத்திற்கு 8 கோடி வருடா வருடம் வழங்குவது என்றும்- தருவதற்கு தயாராக இருந்தது. நீதிமன்றத்துக்கு வெளியே நஷ்டயீடு கொடுத்து வழக்கை முடித்துவிடுவதற்கான முயற்சி எப்பொழுதும் நடந்துவந்தேயிருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் வழக்கு முடிவுக்கு வந்தபொழுது, UCC தான் ஜெயித்தது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் விபத்துக்கு அது எந்தவகையிலும் பொறுப்பேற்கவில்லையே!

இந்த வழக்கை அமெரிக்காவின் புகழ் பெற்ற மற்றொரு வழக்குடன் ஒப்பிடலாம். எக்ஸானுக்கு (Exxon) சொந்தமான எண்ணெய்க் கப்பல், கடலில் 10 மில்லியன் கேலன் எண்ணெய் சிந்திய வழக்கு அது. இது நடந்தது 1989, இடம் அலாஸ்கா. இந்த விபத்தில் யாரும் உயிரிலக்கவில்லை, ஆனால் எக்ஸான் 5 பில்லியன் டால்ர்களை இழப்பீடாக வழங்கியது. கணக்கிட்டால் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நீர்நாய்க்கும் 940$ வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் விஷ வாயுவால் வாழ்க்கை முழுவதற்கும் ஊணமாக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா? ஒவ்வொருவருக்கும் 500$.

அமெரிக்க நீர்நாயிலும் கேவலமானவனா இந்தியன்?

(தொடரும்)

யார் முழித்திருக்க போகிறார்கள் – 6

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மே 12 1986

மே 12 1986 அன்று யூனியன் கார்பைடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீதிபதி ஜான் F கீனன் (John F Keenan), வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். ஆனால், வழக்கை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க முடியாது என்ற அவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, வழக்கை இந்தியாவுக்கு மாற்றுமாறு தீர்ப்பு வழங்கினார். மேலோட்டமாக பார்க்கும் போது, நீதிமன்றம் இந்தியாவிற்கு சாதமாக பாரபட்சமாக நடந்து கொண்டது போல் தெரியும். பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு சரியான நீதி வாங்கித்தர இந்தியாவுக்கு இது சரியான சந்தர்ப்பமாக அமையும் என்றும் நீதிபதி கூறினார். இது ஒருவகையில் UCCக்கு சாதகமே. வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் வாழ்க்கைத்தரம் தாழ்ந்திருப்பதால், இந்திய நீதிமன்றம் வழங்கும் பாதிப்பிற்கான இழப்பிடு -அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது- மிகவும் குறைவாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

நீதிபதி கீனனின் தீர்ப்பு இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திராமல், தாமே ஒரு இழப்பீட்டு தொகைக்கு, பேச்சுவார்த்தையின் மூலம் வந்தடைவதற்கு இந்த தீர்ப்பு அடித்தளமாக அமைந்தது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம்: UCCயின் அமெரிக்க அலுவலகத்தின் மேல் குற்றம் சுமத்தி நிரூபிப்பது மிகவும் கடினம். நடந்த பேரிழப்புக்கு UCIL தான் காரணம் ஏனென்றால் UCIL, முற்றிலும் இந்தியர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்றார்கள். UCILஇன் மொத்த தொழிலாளர்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காட்டினருக்கே அமெரிக்காவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், UCCக்கு UCILஇன் மீது முழுக்கட்டுப்பாடு இருந்தாலும், அது இந்தியாவின் சட்டதிட்டத்துக் கட்டுப்பட்டதே என்றும் அவர்கள் கூறினார்கள்.

எனவே பேச்சுவார்த்தையே மிக வேகமான ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற ஒரு பிம்பம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கு இடையே சுமூகமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு நீதிமன்றம் போராடியிருக்கிறது என்று நீதிபதி கூறினார். ஆனால், என்ன ஆனாலும், UCC, 350 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒரு பைசா கூட கொடுக்கத் தயாராக இல்லை என்பதை அவர் கூறவில்லை. அது என்ன 350 மில்லியன் டாலர் கணக்கு, வேறொன்றுமில்லை, அது UCCக்கு கிடைக்கும் இன்சூரன்ஸ் தொகை. ஒரு செட்டில்மெண்ட் தொகை மட்டும் தானா என்ற கோஷம் யாராலும் எங்கும் எழுப்பப்படவேயில்லை. நீதி என்ற வார்த்தை சிறிது சிறிதாக பின்னுக்கு தள்ளப்பட்டு மறக்கடிக்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே, இந்த போப்பால் வழக்கில், ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் இன்னொரு நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை எப்படி கணக்கிடமுடியும், என்ற ஆட்சேபத்திற்குறிய வாதம் இருந்துவந்தது. இந்தியா ஒரு ஏழை நாடாக இருப்பதால், இங்கு வாழ்க்கைத் தரம்; சொத்து; வளம்; உடல்நலம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விசயங்கள்; கண்டிப்பாக மிகுந்த வேறுபாட்டுடன் -அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது- இருக்கும். “இந்த வேறுபாடுகளையெல்லாம் மீறி நாம் நமது வாழ்க்கைத்தரம் மற்றும் நமக்கிருக்கும் கொள்கைகளை அவர்கள் மீது திணிக்கவேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி.

ஆனால் இந்த வேறுபாடுகளை மனதில் கொண்டுதான் UCC போப்பாலில் பாதுகாப்பு வியூகத்தை கவனக்குறைவாக தரம் குறைந்ததாக அமைத்ததா? ஆனால் இவ்வாறான கேள்வி எழும் என்பதை நீதிபதி நன்கு உணர்ந்திருந்தவர் போல ,”இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலை மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை இந்தியா உணர்ந்திருந்தும் இது கொடுக்கும் வருவாய் அவர்களுக்கு தேவையானதாக இருந்த பட்சத்திலே அவர்கள் இந்த தொழிற்சாலையை நிறுவ ஒப்புக்கொண்டார்கள்” என்றார். அவர் சொன்னதற்கான அர்த்தம் என்னவென்றால்: “வளர்ந்து வரும் நாடான இந்தியா, ஒரு வல்லரசின் ஆபத்தான் தொழில்நுட்பத்தை அரவணைத்துக்கொள்ள தயாராக இருக்கும் பட்சத்தில், அந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும் இழப்பிற்கும் இந்தியாவே பொறுப்பு ஆகும்

இந்த தீர்ப்பின் அதிர்ச்சியான் விசயம் என்னவென்றால், தீர்ப்பு UCCயின் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஆதராவாக இருந்தது என்பதே. ஆனால் உலக நாடுகளின் துணையுடன் உலகநாடுகளுக்கு எல்லாம் ஏற்படவிருக்கும் ஒரு பொதுப்பிரச்சனையை மனதில் கொண்டு இந்தியா முன் வைத்த வாதம் கண்டுகொள்ளப்படவில்லை. நீதிபதி இந்த பிரச்சனையை ஒரு தனிப்பட்ட கம்பெனியின் பிரச்சனையாக மட்டுமே அனுகினார். இது மொத்த மனித இனத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொதுபிரச்சனையாக அவர் அறிய தவறினார்.

தீடிரென்று, இழப்பின் தீவிரமும் எண்ணிக்கையும், மிக அதிகமாக இருந்த பொழுதிலும், போப்பால் பிரச்சனை ஒரு உள்ளூர் பிரச்சனையாக மாறிப்போனது. இனிமேல் அந்த கம்பெனியாச்சு மக்களாச்சு என்றே எல்லோரும் நினைத்தனர். உலகின் மிகப் பயங்கரமான ஒரு பேரிடர், உலகமக்களையெல்லம் பாதிக்கக்கூடிய பின்விளைவுகளைக் கொண்ட பேரிடர், உலகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள், பல்லாயிரம் மக்களை பலிவாங்கியும், இன்னும் பல்லாயிரம் மக்களை பாதித்திருக்கும் இந்தப் பேரிடர், அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகத்தின் முன் தனது முக்கியத்துவத்தை இழந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அமெரிக்க நீதிபதியின் பார்வையில், வர்த்தகம் மனித உரிமையை வென்றுவிட்டது.

ஏழைக்கு மனித உரிமையாவது? மண்ணாங்கட்டியாவது?!

ஹமிதியா (Hamidia) மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சத்பதி (Dr.A.Satpathy, forensic expert) கையில் பிடித்திருக்கும் இந்த பெரிய புகைப்படம், இன்னும் அடையாளம் காணப்படாத மற்றும் யாராலும் சொந்தம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத மக்களின் புகைப்படங்களைக் காட்டுகிறது. டாக்டர் சத்பதி விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பிரேதங்களைப் பரிசோதனை செய்திருக்கிறார். அவர் பாதிக்கப்பட்டவர்கள் 27 விதமான வேறு வேறு விஷ இரசாயனப் பொருட்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கண்டறிந்தார். அவர்கள் விஷத்தன்மை மிகுந்த நச்சு வாயுக்களால் -அவற்றை சுவாசித்ததால் – தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் இவ்வளவு இரசாயனப் பொருட்கள் எப்படி வந்தன என்பதனை விளக்குவதற்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

செப்டம்பர் 5 1986

செப்டம்பர் 5 1986 அன்று இந்தியா நியூயார்க் நகரிலிருந்து வழக்கை போப்பால் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டது.

வழக்கம்போல, UCC, தனது சட்ட தந்திரங்களால், நீதிமன்றத்தை “மறுப்பு” கணைகளால் தாக்கியவன்னம் இருந்தது. ஒரு பூச்சிக்கொல்லி தொழிற்சாலை நிறுவுவதன் மூலம் ஏற்படவிருக்கும் ஆபத்தை தாங்கள் எந்தக் காலத்திலும் மாநில ஆரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ மறைத்ததில்லை என்று UCC சத்தியம் செய்யாத குறையாக சொன்னது. மேலும் MIC அப்படியொன்றும் மிகப்பயங்கரமானது அல்ல என்றும் கூறியது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடத்தில் தொழிற்சாலை நிறுவியதை மறுத்தது. நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் (1969-1974) விதிக்கப்பட்ட பன்நாட்டு ஒருங்கிணைப்பு விதிகளை மீறியதை மறுத்தது. விசவாயு கசிந்ததை மறுத்தது. அது ஒரு தொழிலாளியிம் நாசவேலை என்று தடாலடியாக பல்டி அடித்தது.

கடைசியாக, அவர்களில் இருப்பையே அவர்கள் நிராகரித்தார்கள்!! இந்திய வழக்கறிஞர்கள் UCCஐப் பற்றிக்குறிப்பிடும் போது,”மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்” என்று கூறியிருந்தார்கள். இதைப் பயன்படுத்திய UCC அப்படியாருமே இல்லை என்றது. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு அதற்கு வேறுவேறு அர்த்தங்கள் கற்பித்து வழக்கை திசைதிருப்புவது வழக்கறிஞர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இது சிலேடையின் உச்சக்கட்டம். UCC கண்ணுக்குப்புலப்படாத ஒரு அமெரிக்க வர்த்தகம். அவர்கள் மற்ற நாடுகளில் இருக்கும் சில பெரிய நிறுவனங்களில் சில பங்குகளை மட்டுமே வைத்திருந்தனர். அவ்வாறான வேற்று நாட்டு நிறுவனங்களில் ஒன்று தான் UCIL என்று கூத்தடித்தனர்.

போப்பால் தொழிற்சாலையில் தினமும் நடக்கும் விசயங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை காட்டிக்கொள்ள விரும்பியது UCC. அப்படியிருக்க நேர்ந்த இந்த பேரிடருக்கு எப்படி UCC பொறுப்பாகமுடியும் என்று பாவமாக கேட்டது UCC. ஆனால் எவ்வளவு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாலும் உண்மை அதுவல்ல. UCILஇன் எந்த ஒரு பாலிசியும், செலவுதிட்டமும், செலவும், நிறுவனத்தின் எந்த ஒரு அறிக்கையும், டான்பரியில் (Danbury) இருக்கும் UCCயின் தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் வாங்கவேண்டும். இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் கடினமான வேலை.

(தொடரும்)

thanks : swaroopa mukarjee

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 5

ஏப்ரல் 8 1985

ஏப்ரல் 8 1985 அன்று இந்திய அரசாங்கம் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்கு எதிராக நியுயார்க் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் நடந்த பேரிடருக்கு UCC -யே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. குற்றம் நான்கு அம்சங்களைக்கொண்டது : உருப்படாத திட்டம், பழுதடைந்த தொழில்நுட்பம், பயிற்சியின்மை மற்றும் தொழிற்சாலையில் முறையான மேற்பார்வையின்மை.

அமேரிக்காவுக்கு இந்த வழக்கை எடுத்துச்சென்றதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை – அமேரிக்காவவுக்கு இதேபோல் பேரிடர்களில் இருக்கும் அனுபவம். இவ்வாறான சுற்றுச்சூழல் அழிவுக்கு வழிவகுத்த பேரிடர்களுக்கு எதிராக அவர்களது சட்டம் கடுமையாக இருப்பதும், இதைப் பயன்படுத்தி ஒரு நல்ல மிகப் பெரிய இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. மேலும் போப்பால் பேரிடர் உலகம் முழுதும் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய சர்வதேசவிஷயமாக கருதப்பட்டது, அதனால் ஒரு சர்வதேசச்சந்தை இந்தியாவுக்கு தேவைப்பட்டது. வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) கூட ஒரு சந்தர்ப்பத்தில் “போப்பால் உலகத்தையே மாற்றிவிட்டது, அமேரிக்காவையும் வேறு தொழிற்சாலைகளும் இனி தானகவே மாறிவிடும்” என்று ஒத்துக்கொண்டார். இது இனி அமெரிக்கா இரட்டை தரம் (நியதி) – முதல் நியதி அவர்களுக்கு, இரண்டாவது அவர்கள் அல்லாத ஆனால் அவர்கள் தொழிற்தொடங்கியிருக்கும் மற்ற நாடுகளில், சொல்லப்போனால் இன்னும் முன்னேறாத நாடுகளில் – வைத்துக்கொள்ள முடியாதபடி பார்த்துக்கொள்வதற்கு – உறுதிசெய்துகொள்ள – ஒரு வாய்ப்பளித்தாய் இருந்தது.

ஒரு நல்ல சிறந்த தீர்ப்பையே அனைவரும் எதிர்பார்த்தனர். எது நடந்ததோ அது நடந்து விட்டது அதை மாற்ற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் இதன் மூலம் கண்டறியப்பட்ட படிப்பினைகளை உலகத்தின் கவனத்துக் கொண்டுவரும் முயற்சியாக இந்த வழக்கு இருக்கும் என்று நம்பப்பட்டது. அமேரிக்க மக்களின் கவனத்துக்கு இந்த வழக்கை கொண்டுவருவதன் மூலம் அவர்களது வாழ்க்கையும் எவ்வளவு அபாயங்களுக்கு மத்தியில் இருக்கிறது -போப்பால் மக்களைப் போல- என்பதையும் அவர்களுக்கு உணரச்செய்யலாம்.

ஆனால் UCC -யின் எதிர்வினையோ இந்த நீதிமன்றம் வசதியற்றதாய் இருக்கிறது என்பதாய் இருந்தது. அமெரிக்கர்களின் வரிப்பணமும் பொன்னான நேரமும் தேவையில்லாத ஒரு வழக்கில் -அதுவும் எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் ஏற்பட்டதொரு பேரிடரை- அநியாயத்துக்கு வீணடிக்கப்படுகிறது என்று கூறினர். மேலும் அவர்கள் சாட்சிகள் அனைத்தும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது என்றும் சாட்சியங்களோ போப்பாலில் இருக்கிறது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய அவர்கள் கோரிக்கை வைத்தனர்.













இறந்த 20000 மக்கள் சார்பாகவோ, நிரந்தரமாக வாழ்க்கைமுழுதும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், அதிகாரபூர்வமாக எந்த நினைவுச்சின்னமும் வைக்கப்படவில்லை. தாயும் சேயும் இருக்கிற இந்த சிலை ருத் வாட்டர்மேன் (Ruth Watermann) என்பவரால் போப்பாலில் இருக்கும் கார்ப்பைடு தொழிற்சாலையின் வாசலில் வைக்கப்பட்டது.

டிசம்பர் 3 1985

ஒரு வருடம் கழித்து. நகரமே மிகுந்த கோபத்தில் இருந்தது. காலையில் மக்கள் கோவிலிலும், மசூதியிலும், தேவாலையங்களிலும் வணங்கினர். ஆனால் பிறகு பல தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களும் கண்டன ஆர்ப்பட்டங்களிலும் தர்னாவிலும் ஈடுபட்டனர். வாரன் ஆன்டர்சனின் உருவபொம்மைகள் தெருவெங்கும் கொழுத்தப்பட்டன. தொழிற்சாலையை சூறையாடவும் தீவைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களும் தர்னாக்களும் ஒரு குறியீடாக மட்டுமே இருந்தன, இதனால் அவர்கள் பெரிதாக எந்த லாபத்தையும் அடையவில்லை.

ஆனால், இந்த நாள், இதை விட ஒரு முக்கியமான சம்பவத்தை தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருந்தது. கடைசியாக 1.8 மில்லியன் டாலர் இழப்பீட்டுத்தொகை கொடுப்பது என்று முடிவு -UCIL- செய்யப்பட்டது. மேலும் அட்குறைப்பு செய்யப்பட்டது, தொடர்ந்து தொழிற்சாலையே மூடப்பட்டது.

ஒரு தொழிற்சாலையில் விபத்து நடந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவர்களாக இருப்பர். வேலையிழந்தவர்கள். வேலை செய்யமுடியாதவர்கள். வாயு கசவுக்குப்பின் வேலையிழந்தவர்கள் இருந்தனர். இன்னும் சிலர், காயங்கள் அவர்களை ஊனப்படுத்தி இனி வாழ்க்கையிலே என்றும் கடினமான வேலை செய்யமுடியாதவாறு செய்திருப்பதை, நாளடைவில் கண்டனர்.

யாரைக்குறை சொல்வது என்பதைக்கூட இந்தமாதிரியான பேரிடர்கள் குழப்பிவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை எல்லோரும் கைவிட்டபிறகு, அவர்கள் யார்மீது கோபப்படுவார்கள்? ஆண்டுகள் பறந்து கொண்டிருந்தன, ஒவ்வொரு ஆண்டு நினைவின் போதும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் யாரும் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தாமல் -ஏற்படுத்த முயற்சிக்காமல்- இருக்கும் போது, அவர்களுடைய கோபம் வாரன் ஆன்டர்சன் மேலிருந்து முதலமைச்சர், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் மேல் திரும்பியது.

அதேசமயத்தில் மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக என்ன செய்துகொண்டிருந்தது? மறுவாழ்வுக்கான போர்டுகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருமுனையிலும், விளம்பர போர்டுகளில், அன்று பிரதமமந்திரியாக இருந்த ராஜீவ்காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கே முதலுரிமை என்று சொல்லியவாறு கையசைத்து சிரித்துக்கொண்டிருந்தார். அரசு தயாரித்த திட்டங்கள், விளம்பரங்கள் மூலம் தினசரிகளில் திணிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் மேலிருந்த பார்வை நாளடைவில் மாறத்தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்களை எதிரிகளாக பொதுமக்கள் பார்க்கத்தொடங்கினர். அவர்கள் தான் இழப்பீட்டு தொகை கேட்டு சுரண்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டனர். இழப்பீட்டு தொகை வழங்கப்படும் இடங்களில் இருக்கும் அதிகாரிகள் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களை குற்றம்சாட்டுபவர்களாக இருந்தனர்.

கிட்டத்தட்ட எல்லா சட்டபத்திரிக்கைகளிலும் இழப்பீட்டுத் தொகை என்பது ஒரு அசிங்கமான வார்த்தையாக உருப்பெற்றது, இழப்பீட்டுத்தொகையை வழங்கப்போவது என்னவோ வேறுயாரோ. இழப்பீட்டுத் தொகை வழங்கப்போவது UCC தான் என்பதை அனைவரும் மறந்திருந்தனர் -மறக்கடிப்பட்டிருந்தனர். 20000 மக்கள் UCC-யின் கவனக்குறைவால் கொல்லப்பட்டிருந்த உண்மையை அனைவரும் மறந்திருந்தனர். 300,000 போப்பால் மக்கள் மீண்டு வரமுடியாத துயரங்களில் சிக்கிக் தவித்துக்கொண்டிருப்பதை அனைவரும் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருந்தனர்.

(தொடரும். அதிவிரைவில்!)

மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 4

டிசம்பர் 16 1984

டாங்க் E16 -ல் இருந்த பதினைந்து டன் மிக் (MIC) இன்னும் திகிலூட்டவே செய்தது. அதை எப்படி விட்டொழிப்பது என்பதை பற்றி பலரும் பலவாறு யோசனை கூறினர். அதை மிகப் பெரிய ட்ரம்களில் அடைத்து அதன் தாய் கம்பெனிக்கே அனுப்பிடலாம். இல்லையேல், பெரிய குழாய்வழியாக காஸ்டிக் சோடா வாயுவை பயன்படுத்தி அதை நீர்த்தப்படுத்தலாம். இல்லையேல் அதை எரித்து (சோதனைக்கு உட்பட்டு) அதிகம் தீங்கில்லாத வேறொரு வாயுவாக மாற்றலாம். ஒருவழியாக இறுதியாக மிக்கை நீர்த்தப்படுத்தி செவின் (Sevin) என்ற பூச்சிகொல்லி மருந்தாக உருமாற்றம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதை செய்யவிருக்கிற பல நிபுணர்கள் கொண்ட குழுவின் தலைமை விஞ்ஞானி, இதில் கிடைக்கும் பொருளாதார இலாபத்தை பற்றி ஒரு பத்திரிக்கை சந்திப்பில் இவ்வாறு மக்களுக்கு எடுத்துக்கூறினார்: “இந்த விசயத்தை மொத்தமாக பொருளாதார இலாபத்தை மனதில் வைத்து அனுகவேண்டும். எந்த ஒரு தொழில் நுட்ப சோதனையிலும் ஆபத்து கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆபத்தில்லாமல் எந்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அடையமுடியாது. நாம் அபாயங்களை குறைக்க மட்டுமே முடியும்”. பீகாரின் முதலமைச்சர் ரேடியோவில் இந்த முறை – மிக்கை செவினாக மாற்றுவது – மிகவும் பாதுகாப்பனதும், மற்றும் சாத்தியமான ஒன்று என்று மக்களுக்கு நம்பிக்கையளித்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் இந்த செயல் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை பயன்படுத்தி எந்தவித பக்கவிளைவுகளும் சேதமும் தீங்கும் இல்லாமல் மிகவும் கவனமாக செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

பாதுகாப்பு வழிமுறைகள் என்று சொல்லப்படுவது ஆறு வெவ்வேறான பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கியது. இந்த ஆறு பாதுகாப்பு அம்சங்களில் ஐந்து பாதுகாப்பு அம்சங்கள் டிசம்பர் மூன்றாம் தேதி வேலைசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இந்த முறை அவை ஆறும் நன்றாக வேலை செய்கின்றன -தொடர்ந்து வேலை செய்யும் – என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இவை எப்பொழுதும் -டிசம்பர் மூன்றாம் தேதிகூட – ஒழுங்காக வேலை செய்துகொண்டுதான் இருந்திருக்கும், இதற்கு பொறுப்பானவர்கள் நினைத்திருந்தால். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கட்டுக்குள் கொண்டுவர, ஒழுங்காக வேலை செய்யவைக்க அவர்களுக்கு கொஞ்சநாட்கள் தான் பிடித்தது. இந்த ஐந்து பாதுகாப்பு அம்சங்களுடன், ஆறாவது அம்சமாக ஒன்று சேர்க்கப்பட்டது, அது : இவை அனைத்தையும் மீறி இதை செயல்படுத்தும் நாளன்று ஏதேனும் தவறு ஏற்பட்டால், தண்ணீர் தெளிக்க ஹெலிகாப்டர்கள் தயாராக நிறுத்தப்படும்.

டிசம்பர் பதினாறாம் தேதி, மிக்கை நீர்த்தப்படுத்தும் முயற்சிக்கு உறுதுனையாகவும், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கமும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட UCIL -ன் ஐந்து சீனியர் அலுவலர்கள் விடுவிக்கப்பட்டனர். அமெரிக்க தொழில்நுட்ப ஆலோசர்கள் தொழிற்சாலைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது, ஏனென்றால் அவர்கள் சாட்சியங்களை கலைத்து விடக்கூடும். ஆனால் அவர்களில் ஒருவர், அலோசனைகள் வழங்குவதற்கு, ஆபரேசன் ·பெயித் (Operation Faith) குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இந்த முறை எந்த தவறும் நடக்கவில்லை. மிக் வெற்றிகரமாக நீர்த்தப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் போப்பாலுக்கு திரும்பி வரத் துடங்கினர். ஆனால் பொது மக்களின் தலைகளில் பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருந்தன. இந்த நீர்த்தப்படுத்தும் செயல் மூலம் தயாரிக்கப்பட்ட செவினின் ரூபாய் மதிப்பு இரண்டரைக் கோடி. ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட செவின் என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. அது பரிமுதல் செய்யப்பட்டதா இல்லை சந்தையில் விற்கப்பட்டதா? ஆபரேஷன் ·பெயித் செய்லபடுத்தப்படுவதற்கு பொதுப் பணம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், இதன் மூலம் அடையப்பெற்ற இலாபம் என்ன ஆனது? அந்த இரண்டரைக்கோடி எங்கே சென்றது?

ஆபரேஷன் ·பெயித் நிறைய நிறைய நோக்கங்களைக் கொண்டது. அது மாநில அரசின் மக்களைக்-காக்கும் வேஷத்தை செவ்வனே பூர்த்தி செய்தது. மிகப்பெரிய வேலையை நாங்கள் எந்த விளைவுகளும் இன்றி செய்து விட்டோம் என்று தம்பட்டம் அடிக்க வழி செய்தது. பாருங்கள் எங்கள் தொழிற்சாலையில் எந்தவித கோளாறும் இல்லை என்று UCC சொல்வதற்கு இது வாய்ப்பளித்தது. இந்த தொழிற்சாலை செவின் உற்பத்தி செய்வதற்காக கட்டப்பட்டது. அது எந்தவித பிரச்சனையும் இன்றி செய்யமுடிகிறது. நீங்களே பார்த்தீர்கள். தவறு எங்கே நடந்தது என்றால் இயந்திரங்களை இயக்குவதில் தான் இருக்கிறது. இயந்திரங்களை இயக்குவது இந்திய அதிகாரிகள் (UCIL) கையில் இருக்கிறது – என்று UCC கூறுவதற்கு இந்த செயல் வாய்ப்பளித்தது. மேலும் மத்திய அரசு, மற்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு இதன் மூலம் நல்ல சமிக்ஞை அளிக்க முடிந்தது. இந்திய அரசு வெளிநாட்டு முதலீட்டை எந்தக்காரணம் கொண்டும் இழக்கத் தயாராக இல்லை.

கடைசியில் இந்த செயல் அனைவருக்கும் ஒரு திடமளித்தது – அரசுக்கு, தொழிற்சாலைகளுக்கு, அதிகாரிகளுக்கு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதனால் ஒரு துளி இலாபம் கூட கிடையாது. வேறு வழியில், மற்றுமொறு துயர சம்பம், இதே போல், பின்னாளில் நடந்தேறுவதற்கு அடித்தளமாக இந்த செயல் அமைந்தது.


பாதிக்கப்பட்ட மக்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்கள் மிக ஏழை குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அவர்கள் தொழிற்சாலைக்கு மிக அருகில் வசித்தவர்கள். கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும், இந்தப் படத்தில் இருப்பதைப் போல, வாழ்க்கை முழுவதும் ஊனமாக இருக்கப்போகிற ஏதேனும் ஒருவர் இருக்கிறார்.

மார்ச் 29 1985

ந்த துயரச்சம்பவம் நடந்தேறிய உடனே, போப்பல் பல பணம்பறிக்கும் கும்பல்களுக்கு புகழிடமாக அமைந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு, உலகத்தின் மிகப்பெரிய வழக்கில், மிகப்பெரிய ஒரு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வந்திருக்கும், வழக்கறிஞ்கர்களை சந்திக்க போப்பால் தயாராகவே இல்லை. பெற்றுத்தரும் இழப்பீட்டுத் தொகையில் 33 விழுக்காடு சம்பளம். அயிரக்கணக்கான பெருவிரல் ரேகைகளை கையில் வைத்துக்கொண்டு, அவர்கள் 186,000 வழக்குகளை, பல அமெரிக்க மாவட்டங்களில் பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களை இந்த “ambulance chasers” -களிடமிருந்து (ஆம். இந்த வழக்கறிஞர்கள் அமெரிக்காவில் இப்படித்தான் அழைக்கப்பட்டனர்!) காப்பாற்ற இந்திய அரசு 29 மார்ச் அன்று ஒரு சட்டம் இயற்றியது. அது Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act என்பதாகும். இந்த சட்டம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் -மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிறாக ஒன்றும் செய்ய இயலாதவர்கள் – சார்பாக அரசு வாதாட -வழக்கு பதிவு செய்ய – வாய்ப்பளித்தது.

(தொடரும். அதிவிரைவில்!)

மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 3

டிசம்பர் 4, 1984

UCIL இன் மானேஜேர் ஜே.முகுந்த் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஐந்து பேர் டிசம்பர் மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். தொழிற்சாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது, CBI விசாரணையை ஆரம்பித்தது.

அதேசமயத்தில், அமேரிக்காவில், டிசம்பர் மூன்றாம் தேதி பின்னிரவில், டான்பரியில், கனெக்டிக்கட்டில் இருக்கும் Union Carbide Corporation (UCC) தலைமை அலுவலகத்தில், ஒரு டெலக்ஸ் பிரின்டர் சட்டென்று உயிர்பெற்றது. போப்பால் பிரிவில் ஒரு வால்வ் பழுதடைந்து விட்டது என்றும் உயிர்பலி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்ற மிகச்சுருக்கமான தகவலைக்கொண்டிருந்தது அது. பின்னர் செய்தி பெரிய அளவில் கசிய ஆரம்பிக்க அந்த ராட்சத தொழிற்சாலை அதிர்ச்சியில் உரைந்தது.

“போப்பாலில் நடந்து மிகவும் எதிர்பாறாத ஒன்று. இதுக்கு முன்னர் இது போல் எதுவும் நடந்ததில்லை. மேலும் உலகத்திலே பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்களிடம் தான் சிறப்பாக இருக்கிறது” என்பது தான் முதன் முதலில் UCC வெளியிட்ட அறிக்கை. UCC பீதியில் உரைந்திருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை. அமெரிக்காவை இந்தச் செய்தி சென்றடைந்த சில மணி நேரத்திலே, MIC தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் விர்ஜீனியாவில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைகள் நிறுத்தப்பட்டன.

செவ்வாய்கிழமை காலை 4:30 மணியளவில் சில முக்கியமான உயர்மட்ட அதிகாரிகள், இழந்த UCC யின் கவுரவத்தை சீர் படுத்த மிகப் பெரிய அளவிலான பிரச்சாரத்தைத் துவக்கியிருந்தனர். போப்பாலில் பலியானவர்களுக்காக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் ஆறாம் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்கு UCC யின் அனைத்து அலுவலகத்திலும் கொடி அரைக்கம்பத்திலே பறந்தது.

UCC பலரின் நிர்பந்தத்திற்குப் பிறகு “இவ்வளவு பெரிய அளவிலான சேதம் விளையக்கூடும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை” என்று ஒத்துக்கொண்டது. ஆனால் போப்பாலில் என்ன தவறு நடந்தது என்பதைக் கூற மறுத்தது. உயர் மட்ட அதிகாரிகளிலிருந்து, டாக்டர்ஸ், மானேஜர்ஸ், பொறியாளர்கள் என அனைவருமே வாய் திறக்கவில்லை. அதே சமயத்தில், UCC, அமேரிக்காவில் இது போல நடக்க வாய்பில்லை என்று தொடர்ந்து உறுதியளித்துக்கொண்டிருந்தது, விர்ஜினியாவில் மிக அதி நவீன பாதுகாப்பு விசயங்கள் இருக்கிறது பயப்படத்தேவையில்லை என்றது.

உலகநாடுகள் கடுமையாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டன. Breziero, France இல் இருந்த, UCC க்கு சொந்தமான, MIC ஐ வைத்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது. மக்கள் அதை மீண்டும் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரேசில் MIC சேமிப்பைத் தடைசெய்தது. Livingston, Scotland, UCC கொடுத்திருந்த, புதிய தொழிற்சாலை தொடங்கும் திட்டம் ஒன்றை நிராகரித்தது.

அடுத்த மூன்று நாட்களில் UCC பங்குகளின் விலை வால்மார்ட்டில் சடசடவென சரிய ஆரம்பித்தது. இதனால் UCC க்கு ஏற்பட்ட நஷ்டம் ஏறக்குறைய முன்னூறு மில்லியன் டாலர். ஆனாலும் UCC தான் திவாலாகி விட்டதாக ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்திருந்த பேட்டியிலும் எந்தவித பதட்டத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. “எங்களுக்கு இருக்கும் இன்சூரன்ஸ் மற்றும் பிற வருமானங்கள் நன்றாகவே இருக்கின்றன. எங்களது தற்போதைய நிதி நிலவரம் சுபிட்சமாகவே இருக்கிறது” என்றே கூறினார்கள். உலகம் இதை நம்பியது. உடனே பங்கு சந்தையில், UCC யின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

டிசம்பர் 7, 1984

அப்பொழுது வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) தான் UCC யின் சேர்மேனாக இருந்தார். அவர் டிசம்பர் 7, வெள்ளியன்று இந்த சம்பவத்தை விசாரனை செய்ய போப்பால் வந்தடைந்தார். “எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பாகச் செய்வோம்” என்று அவர் அமெரிக்கா புறப்படும் முன்னர் உறுதியளித்தார்.

அவருக்கு டெல்லியில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது, போப்பாலுக்கு அவர் பாதுகாப்பாக அழைத்துச்ச்செல்லப்பட்டார். அவர் போப்பாலை வந்தடைந்ததும் போலீஸ் அவரை கைது செய்தது. UCC யின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால், நடந்து முடிந்த துயர சம்பவத்துக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கருதப்பட்டது.

UCIL இன் கெஸ்ட் கவுஸ்சில், அவர் ஆறு மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்து, இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அவர் டெல்லிக்கு மீண்டும் ரகசியமாக அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து யூனியன் கார்பைடுக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் அவரை பத்திரமாக அவரது சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றது. அதற்கப்புறம் அவர் நீதிமன்றத்திற்கு வரவேயில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று நமது நீதிமன்றம் அறிவித்தது.

டிசம்பர் 10, 1984

அமெரிக்காவுக்கு திரும்பியவுடன் வாரன் ஆன்டர்சன், டிசம்பர் பத்தாம் தேதி ஒரு பத்திரிக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். “இந்தியாவில் உயிரிழந்தவர்களுக்கு சரியான தொகை இழப்பீடாக வழங்கப்படும். இதனால் கம்பெனியின் நிதி நிலவரம் எந்த விதத்திலும் மோசம் அடையாது” என்றார். அவர் இரண்டு விசயங்களை திரும்பத் திரும்ப சொன்னார். ஒன்று: இந்த துயர சம்பவத்தால் கம்பெனி எந்த விதத்திலும் பாதிப்படையாது. இரண்டு: இந்தியாவில் நடந்த – சந்தேகமில்லாமல் உலகத்திலே நடந்த மிக மோசமான – விபத்துக்கு கம்பெனி எந்த வகையிலும் பொறுப்பல்ல.

1945 ஆம் ஆண்டு ஒரு சாதரண சேல்ஸ் மேனாக வேலையில் சேர்ந்த வாரன் ஆன்டர்சன் 1982 இல் அந்த கம்பெனியின் CEO வாக வள்ர்ச்சியடைந்திருந்தார். ஒரு
சேர்மேனாக அவர், கம்பெனியின் செல்வாக்கை உறுதியாக மற்றும் வெற்றிகரமாகவே நிலைநாட்டினார்.

மற்ற தொழிற்சாலைகள் போலவே UCC யும் உற்பத்தியை மனதில் கொண்டே இயங்கிவந்தது. அவர்களது தயாரிப்பை, அவர்கள் தங்களது கணக்கு புத்தகத்தின் எண்ணற்ற படங்களாக, கிராப்பாகத்தான் கண்டார்கள். இந்த தொழிலில் உயிர் பலி இருக்கும் பட்சத்தில், லாபக்கணக்கிலிருந்து சில எண்களை மட்டுமே கழிப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை.

டிசம்பர் 12, 1984

மறுபுறம், போப்பால் அரசுக்கு பிரச்சனைகள் மேலும் மேலும் குவிந்தவாறு இருந்தது. மக்களின் பட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது. யாரைத்தான் நம்புவது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நம்பிக்கையற்ற குழப்பான ஒரு இருண்ட வாழ்க்கையை அவர்கள் மௌனமாக கழித்துக்கொண்டிருந்தனர்.UCC யின் இன்னொரு டாங்க்கிலிருந்த -E611- பதினைந்து டன் MIC எப்படி அழிப்பது -அல்லது நீர்த்தப்படுத்துவது- என்பதே மாநில அரசின் தற்போதைய தலையாய வேலையாக இருந்தது. டிசம்பர் 12 அன்று, ஆபரேசன் பெயித் (operation faith) என்ற திட்டம் முதலமைச்சர் அர்ஜுன் சிங்கால் அறிவிக்கப்பட்டது. இது உண்மையைச் சொல்லப்போனால், டாங்கிலிருந்த MIC ஐ அழிப்பதற்காவே -or rather neutralize- ஏற்படுத்தப்பட்டது. டிசம்பர் 16 அன்று செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆபரேசன் பெயித் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையூட்டுவதற்கு முயற்சித்தது. பள்ளி கல்லூரிகள் டிசம்பர் 23 வரை திறக்கப்படவில்லை. இந்த MIC ஐ நீர்த்தப்படுத்து செயலைப் பற்றி மிகப்பெரிய அளவில் ரேடியோ மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. மக்களின் நம்பிக்கையைத் திரும்பப்பெற தொழிற்சாலைக்கு அருகிலிருந்த மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு முகாம்கள் அமைக்கும் பணி கவனமாக செய்யப்பட்டது.

ஏற்கனவே மனதளவில் பாதி இறந்திருந்த போப்பால் மக்கள் யாரிடமும் நம்பிக்கை வைக்க தயாராக இல்லை. துன்பத்தை நேரில் கண்டு அனுபவித்த மக்கள் ரேடியோ சொல்வதையா கெட்க்கப்போகிறார்கள். அவர்கள் எங்கெங்கோ ஓடினார்கள். பஸ் கூரையிலும், ரயில் கூரையிலும், ஏன் ரயில் பெட்டிகளை இணைக்கும் சங்கிலிகளில் கூட அவர்கள் பயணம் செய்தனர். ஆஸ்பத்திரிகளிலிருந்து நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படாமலேயே மாயமாய் மறைந்தனர். மக்கள், தங்கள் வாழ்க்கை முழுதும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை, வங்கிகளிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறினர். பெட்ரோல் பம்புகளின் நீண்ட வரிசைகளில் அவர்கள் தவமாய் காத்துக் கிடந்தனர். நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உலகத்தின் பல திசைகளிலிருந்து வந்திருந்த மக்கள் ஒரேயடியாக போப்பாலைக் காலி செய்தனர். சிலர் தங்களது சொந்தங்களை ஏதும் எழுதப்படாத சமாதிகளில் விட்டுச்சென்றனர்.

UCC க்கு அருகில் வாழ்ந்தவர்களுக்காக பதினோறு முகாம்கள் அமைக்கப்பட்டன. ஆனால் ஏழையிலும் ஏழைகளே -நகரத்தை விட்டு வெளியேற இயலாதவர்களே- இந்த முகாம்களில் தங்கினர். ஆபரேசன் பெய்த்தைப் பற்றிய விளம்பர போர்டுகள், காலியான வீதிகளில், பேய்களைப்போல காவல் காத்துக்கொண்டு, கொடிய தனிமையில் சோகத்தோடு நின்றுகொண்டிருந்தன.

ஆபரேசன் பெயித் பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட யாருமற்ற தனிமையிலே தான் நடந்தது. அரசு அலுவலகங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகள் பணியாளர்களை நகரத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க அவர்கள்து விடுமுறைகளை ரத்து செய்தன. ஆனால் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தப்பியோடும் மக்கள் அதிகாரிகளின் சம்மதத்திற்காக காத்துக்கிடக்கவில்லை. அன்று மட்டும் எழுபதினாயிரம் மக்கள் நகரத்தைக் காலி செய்தனர் என்று அரசு அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது.

(தொடரும்)

 

நன்றி: Suroopa Mukherjee

Translated from Suroopa Mukherjee’s BHOPAL GAS TRAGEDY : The Worst Industrial Disaster in Human History.

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 2

தொழிற்சாலைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தொகை அடர்ந்த பகுதியில், மக்கள் வீட்டுக்குள்ளே தான் இருந்தனர், நல்ல உறக்கத்தில். தூரத்து இடியின் ஓசை போல ஒரு சத்தம் அவர்களை தூக்கத்திலிருந்து விடுவித்தது, மற்றொரு தூக்கத்தை நோக்கி அழைத்தது. அவர்கள் மெதுவாக வீடுகளை விட்டு வெளியேறியபோது பயம் கலந்த அலறல் சத்தத்தையே கேட்டனர். சிறிது தூரத்தில் தொழிற்சாலைக்கு மேல் வெண் மேகங்களைக் கண்டனர். எங்கோ தீ பிடித்திருக்கிறது என்று தவறாக எண்ணிக்கொண்டனர். கூர்ந்து கவனித்தவர்கள் மட்டுமே தொழிற்சாலைக்கு வெளியே பைப்பின் வழியே நச்சுப்புகை வெளியேறிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர்.

பிளாட்பாரத்தில் பாதுகாப்பின்றி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் முதலில் உயிரிழந்தனர். அதில் ஏனையோர் குழந்தைகள். மறுநாள் காலை அவர்களது உடல்கள் போர்வைகளால் மூடப்பட்டிருந்தது. ஊயிரிழந்தப்பின் பாதுகாப்பு. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றோர்கள் – ஓடி தப்பிக்க முடியாதவர்கள்- பெரிய எண்ணிக்கையின் மாண்டனர்.

முடிந்தவர்கள், ஓடினர். கூக்குரலிட்டு, தட்டுத்தடுமாறி, அருகில் இருந்தவர்களை இழுத்துக்கொண்டு அவர்கள் எந்த திசைகளிலெல்லாம் ஓடமுடியுமோ, அந்த திசைகள் எங்கும் ஓடினர். குழப்பத்தில் சிலர் தொழிற்சாலையை நோக்கி ஓடினர் – நச்சுபுகையின் பிறப்பிடத்தை நோக்கி.

அதற்கப்புறம் அந்த நகரம் தான் இது வரை சந்தித்திராத மிகப்பெரிய குழப்பத்தை சந்தித்தது. குடும்பங்கள் பிரிந்தன. மிக வேகமாக ஓட முடியாதவர்கள் எஞ்சி நின்றனர். பெண்கள் சாலைகளில் விழுந்து கிடந்தனர். பீதியில் கண்மூடித்தனமாக ஓடியதில் குழந்தைகள் நசுக்கப்பட்டனர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு எதிர்திசையில் வந்தவர்களை முட்டித்தள்ளினர். சிலர் லாரிகளிலும், டெம்போக்களிலும், ஆட்டோவிலும், ரிக்ஷாவிலும் ஏறினர். வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஏறிக்கொண்டனர். அவர்களது கார்கள் வழியெங்கும் பீதியடைந்த கும்பல்களால் வழி மறிக்கப்பட்டன. அவர்கள் கார்களின் மேல் ஏற முற்பட்டனர். அதற்கப்புறம் சில நேரத்தில் இராணுவம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது.

இராணுவம் தங்களால் முடிந்தவரை மக்களை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். வாகனங்கள் ஏற்படுத்திக்கொடுத்தனர். முதல் இரண்டு நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊரை விட்டு வெளியேறினர்.

போபாலின் வெளிபுறத்தில் பலர் உடல் பாதிக்கப்பட்டு பயத்துடன் உரைந்து கிடந்தனர்.தனிமையில் கைவிடப்பட்ட அவர்கள் தங்களது உறவுகளைத்தேடி அலைந்தனர். கோபமடைந்த சில மக்கள் மருத்துவமனை நோக்கி நடந்தனர். ஹமீதியா மருத்துவமனை (Hamidia Hospital) முதல் நாளிலே 25000 பாதிக்கப்பட்ட மக்களை சிகிச்சைக்குள்ளாக்க முயன்றது. அது எந்த வகையிலும் அந்த மருத்துவமனையால் சமாளிக்க முடியாத எண்ணிக்கை. தொடர்ந்து வேலை செய்த கலைப்படைந்த மருத்துவர்கள் தங்களால் முயன்றதை இயன்றதை செய்தனர். அருகிலிருந்த காந்தி மருத்துவ கல்லூரியில் (Gandhi Medical College) உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் எழுப்பி உதவிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழப்பத்தில் மருத்துவர்கள் பலருக்கு இறப்பு சான்றிதழ் (Death Certificate) வழங்க மறந்தனர். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்னர் மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

இரவு முழுதும் நகர்ந்த புகை ஏரியை நோக்கி சென்றது. ஏரி தனது ஈரப்பதத்தால் புகையின் நச்சுத்தன்மையை தளர்வடையச் செய்தது. சொல்லப்போனால் எஞ்சியிருந்த மக்களை காப்பாற்றியது அந்த ஏரி தான்.

இந்த பேரிடர் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது காலை ஒரு மணிக்குப் பின்னர் தான். ரோந்துப் பணியிலிருந்த காவலர் ஒருவர் தனது கன்ட்ரோல் ரூமிற்கு வயர் லெஸ் செய்தி அனுப்பினார். கன்ட்ரோல் ரூமிலிருந்து எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. எஸ்.பி சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தார்.

அதிர்ச்சியும் குழப்பமும் எங்கும் நிறைந்திருந்தது. யாருக்கும் என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. புகையின் இயல்பினை யாரும் அறிந்திருக்கவில்லை.தீயணைப்பு படையினரும், டாக்டர்களும், ஆம்புலன்ஸ்களும் துரிதமாக செயல்பட்டும், மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தனர். அவர்களது சேவைகள் பல முறை துண்டிக்கப்பட்டன. மாணவர்களிடமும், இராணுவத்திடமும், காவல்துறையினரும், இன்னபிற மக்களின் சேவைகள் ஒருங்கிணைப்பின்றி சிதறிக்கிடந்தன. இணைக்க யாரும் இல்லை. ஆனால் அவர்களது சேவைகளில் துணிச்சலும், தீர்க்கமும், சோர்வின்மையும் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் எவரிடத்திலிருந்து உதவி உடனடியாக கிடைத்திருக்க வேண்டுமோ அவர்கள் மிகுந்த அமைதியைக்கடைப்பிடித்தனர். UCIL ஐ தொடர்பு கொள்ள முயன்ற டாக்டர்களும், காவல்துறையினரும் தொடந்து தொடர்பு கொள்ள முடியாமல் திண்டாடினர். அவர்களிடமிருந்து பதிலே இல்லை. சொல்லப்போனால் யாரைத்தொடர்பு கொள்வது, அங்கே தான் யாருமே இல்லையே. பெரும்பாலான தொழிலாளர்கள் இடத்தை காலி செய்திருந்தனர். அடுத்த சில நாட்களுக்கு UCIL தனது மௌன பாதையைத் தொடர்ந்தது.

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் மத்தியபிரதேச அரசே குழப்பமடைந்தது போலிருந்தது. முதலில் மக்கள் பயப்படத்தேவையில்லை என்று பொது அறிவிப்பு வெளியானது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பிறகு காலை இரண்டு மணியளவில், காவலர்கள் மக்களை உடனே ஊரைக் காலிசெய்யுமாறு கூறினர். அதற்குப்பிறகு நடந்த குழப்பத்தில் போலீசார் இரண்டு விசயத்தை மக்களுக்கு அறிவுறுத்தத்தவறினர். அது, முதலில், மூக்கைச் சுற்றியும், வாயைச் சுற்றியும் ஒரு ஈரத்துண்டைக் கட்டிக்கொள்வது. மற்றொன்று, காற்று வீசும் திசைக்கு எதிரே ஓடுவது.

இந்த நாளில் பிறந்த ஒரு பெண் குழந்தை – படத்தில் இருப்பவர்- “கேஸ் தேவி” என்றழைக்கப்படுகிறார். இவருக்கு தற்போது 21 வயதாகிறது.

எத்தனை மக்கள் அந்த இரவில் மாண்டனர்? திட்டவட்டமாக எதுவும் கூற இயலாது. UCIL ஐ சுற்றியிருந்த பகுதிகளில் – ஜெயபிரகாஷ் நகர், சோலா கேச்சி, காஜி கெம்ப் மற்றும் நிஷாத் பூர் – தான் இழப்பு அதிகமாக இருந்தது. இவர்கள் தொழிற்சாலையிலிருந்து 200-300 மீட்டர் தொலைவிலேதான் இருந்தனர். அரசு காட்டிய எண்ணிக்கை 2000. புதைப்பதற்கு பயன்படுத்தப் பட்ட துணிகளின் எண்ணிக்கை, 8000 மக்கள் இறந்திருக்ககூடும் என்று சொல்கிறது. அதற்கப்புறம் வாரம், மாதம், வருடக்கணக்காக இறந்த பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டியது.

உண்மையாக, அன்றைய பெரிய பிரச்சனை இறந்தவர்கள் அல்ல. பின்னாட்களில் அவர்கள் அடையாளம் காணப்படாமல். யாரும் சொந்தம் கொண்டாடாமல், மொத்தமாக புதைக்கப்பட்டனர். எரிப்பதற்கு மரம் இல்லாமல் போகவே மண்ணென்னெய் ஊற்றி இறந்தவர்களை எரித்தனர். இடம் பத்தாமல் ஏற்கனவே, எப்போதோ புதைத்த இடங்களைத் தோண்டினர்.

ஆனால் தொடர்ந்து உயிரோடிருந்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மூச்சுதிணறல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, சில சமயம் கண் பார்வையைப் பறிகொடுத்து, அவர்கள் ஒரு முடிவேயில்லாத ஒரு கொடிய கனவை கடந்து கொண்டிருந்தனர்.

அடுத்த சில நாளில் அரசு மறுபடியும் மறுபடியும் உணவு, காற்று மற்றும் தண்ணீர் சுத்தமாகி விட்டது என்று அறிவித்துக்கொண்டேயிருந்தது. ஆனால் உண்மையாக இவை சோதனைகு உட்படுத்தப்படவில்லை. 1600 க்கும் மேற்பட்ட விலங்குகள் -நாய்கள், மாடுகள் மற்றும் ஆடுகள்- இறந்தன. விலங்குகளின் அழுகிக்கொண்டிருக்கும் உடல்கள் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயத்துடன் இருந்தன. முடிவாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பத்து புல்டோசரின் துணையுடன் அவை புதைக்கப்பட்டன. பிளீச்சிங் பவுடரும், காஸ்டிக் சோடாவும் காற்றின் நச்சுத்தண்மையை நீக்க தூவப்பட்டன.

ஆல்-இண்டியா-ரேடியோ இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு போப்பாலில் நிலமை கட்டுக்குள் வந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் போப்பால் மக்கள் குடித்த தண்ணீர் தூய்மையாக இருந்ததா? மற்றொரு கசிவு ஏற்படுமா? உடம்பில் MIC இனால் ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமா அல்லது தற்காலிகமாகத்தான் இருக்குமா? உண்மையான பதில்கள் மக்களுக்கு கிடைக்க வில்லை. யாருக்கும் தெரியவில்லை.

பீதியடைந்திருந்த மக்கள் யார் என்ன சொன்னாலும் உடனே நம்பினர். சின்னச்சின்ன வதந்திகள் கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் மறுபடியும் இலக்கில்லாமல் ஓடத்தொடங்கினர். மக்கள் உஜைனுக்கும், சேகோருக்கும், இந்தோருக்கும் ஓடினர். அங்கே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். போப்பால் வெறுமை அதிகரித்தது. அது பேய் நகரமாக மாறியது.

 

யார் முழித்திருக்கப் போகிறார்கள் -1

டிசம்பர் 3 1984

அது ஒரு குளிர்ந்த இரவு. போபால் நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. பலர் குளிருக்கு இதமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். அந்த இரவில் யார் முழித்திருக்கப்போகிறார்கள்? அந்த இரவுக்கு அப்புறம் யார் முழித்திருக்கப்போகிறார்கள்? 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை யூனியன் கார்பைடு இந்தியாவில் என்றைக்கும் போல இரவு பணி துரிதமாக நடந்துகொண்டிருந்தது.

நடுஇரவுக்கு மேல் திடீரென்று பெரும் குழப்பம் ஏற்படப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது.மெத்தில் ஐசோ செனேட் (MIC) யூனிட்டில் வேலை பார்க்கும் ஒரு நபர் என்றைக்கும் இல்லாத ஒரு அமானுஷ்ய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை அறிகிறார்.. E610 என்றழைக்கப்பட்ட டேங்கில் அழுத்தம் மிக வேகமாக உயர்ந்து கொண்டே சென்றது. E610 இல் தான் கொலைகார திரவம் : MIC இருந்தது. அவன் பார்த்துக்கொண்டேயிருக்கும் போது, அழுத்தம் சட சட வென்று உயர்ந்து அபாய எல்லையைத் தாண்டியது.

ஆபரேட்டருக்கு செய்தி போனது. அதிக வெப்பத்திலும், அழுத்தத்திலும் MIC திரவ நிலையிலிருந்து ஆவியாகி டேங்கை விட்டு வெளியேறிவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் அவருடைய மேலதிகாரிக்கு உடனே தகவல் அனுப்பினார். தொலிற்சாலைக்குள் அபாய எச்சரிக்கை ஒலித்தது. ஊழியர்கள் E610 க்கு விரைந்தனர். ஆனால் நிலமை கைமீறி விட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். டேங்கின் அருகேகூட யாரும் செல்ல முடியாதபடி டேங்கின் வெப்பநிலை அதிகரித்திருந்தது. தண்ணீர் தெளித்து வெப்பத்தை தனிக்க முயன்றனர், ஆனால் ஒன்றும் உபயோகமில்லை.

நாற்பது அடிக்கு எட்டடி இருந்த அந்த மிகப்பெரிய டேங்கின் சில பகுதி பூமிக்கு அடியே இருந்தது. மேலே சிமென்ட் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. நாற்பது டன் MIC அதில் அடைக்கப்பட்டிருந்தது – அலாவுதீனின் பூதம் போல – அது வெளியே வர துடித்துக்கொண்டிருந்தது. 0 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைக்கப்பட வேண்டிய திரவம் 250 டிகிரியை செல்சியஸை தொட்டுவிட்டது. டேங்க் மிகப் பயங்கரமாக அதிர ஆரம்பித்தது. கான்கிரீட் உடைய ஆரம்பித்தது. ஊழியர்கள் இடத்தை விட்டு தப்பியோடினர்.

ஆனால் அதற்குள்ளாக சேப்டி வால்வ் உடைந்து, விஷவாயு 70 அடி பைப்பில் வெளியேறியது. அது பிறகு Gas Scrubber க்கு செல்லும். பொதுவாக இது அவ்வளவு பயங்கரமாக, அபத்து விளைவிக்கக்கூடியதாக இருந்திருக்காது. ஏனென்றால் ஸ்க்ரப்பரில் வெளியிடப்படும் காஸ்டிக் சோடா (Caustic) குழம்பு MIC இன் விசத்தன்மையை நீக்கியிருக்க வேண்டும்.ஆனால் துரதிர்ஷ்டமான அந்த இரவில் ஸ்க்ரப்பர் வேலை செய்ய வில்லை. பராமரிப்புக்காக (maintainance) அது நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும் விஷத்தன்மையும், நச்சுத்தன்மையும் கொண்ட வாயுக்களைத் தயாரிக்கும் இவ்வாறான தொழிற்சாலைகளில் பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வகுக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும், ஆபத்தை எதிர்பார்த்து. ஆனால் UCIL லில் இருந்த ஐந்து வகையான பாதுகாப்பு வழிகள் அனைத்தும், அந்த இரவு வேலை செய்யவில்லை.

நன்றாக உறக்கத்திலிருந்த போபால் மக்களுக்கு தெரியாமல், அடர்த்தியான வெள்ளை விஷ வாயு காற்றில் அமைதியாக பரவிக்கொண்டிருந்தது. திங்கட்கிழமை, அதிகாலை 12:20 மணியிலிருந்து காலை இரண்டு மணி வரை, டேங்க் E610 தொடர்ச்சியாக நச்சுத்தன்மை கொண்ட வாயுவை சந்தோஷமாக வெளியேற்றிக்கொண்டிருந்தது.

ஊழியர்களுக்கு இந்த மாதிரி ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படவேண்டும் என்று முன் கூட்டியே சொல்லித்தரப்பட்டிருந்தது. அவர்களுக்கு விஷ வாயு மேகங்களுக்கு எதிர் திசையில் ஓட வேண்டும் என்று நன்றாகத்தெரியும். எனினும் போப்பால் மக்களுக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் தெரியாது, ஏனென்றால பொது அபாய எச்சரிக்கை காலை ஒரு மணிக்கு அப்புறம் தான் – அதுவும் சில வினாடிகள் மட்டுமே – ஒலித்தது. கடைசியாக இரண்டு மணிக்கு மேல் தான் அபாய மணி முழு வீச்சில் ஒலித்தது. ஆனால் அதற்குள்ளாக பாதி போப்பால் மக்கள் ஓட ஆரம்பித்திருந்தனர்.

பைப்பிலிருந்து வாயு மிக அதிகமான வேகத்தில் வெளியேறிக்கொண்டிருந்தது. முதலில் இரவு மிகுந்த அமைதியாக, காற்று இல்லாமல் தான் இருந்தது. ஆனால் விதி வலியது. சீக்கிரமே ஒரு மெல்லிய காற்று 12 கி.மீ வேகத்தில் வடகிழக்காக வீசத் தொடங்கியது. அது விஷவாயுவை தொழிற்சாலைக்கு அருகே மிக நெருக்கமாக குடியிருந்த மக்களை நோக்கி நகர்த்தியது, மேலும் அதற்குப் பிறகு ரெயில்வே லைனை ஒட்டியும், பழைய போபாலை நோக்கியும் கொண்டு சென்றது.

போப்பாலுக்கு வரும் முக்கிய பிரமுகரின் வருகைக்காக ரெயிவேஸ்டேசனில் காத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்டேசன் மாஸ்டர். அவர் அபாயத்தை உணர்ந்து போப்பாலை நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில்களை நிறுத்துவதற்கு விரைந்தார். ஆனால் லக்னௌவ்-பாம்பே விரைவு ரெயில் போப்பாலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதிகாலை 1:10 மணிக்கு, அந்த ரயில் போப்பாலை வந்தடைந்தது. ரயில் பயணிகள் ரெயில்வே ஸ்டேசனில் நிரம்பியிருந்த விஷ வாயு புகை மண்டலத்தில் காலடி எடுத்துவைத்தனர்.

என்றைக்குமில்லாமல் அன்றைக்கு மிகவும் குளிராக இருந்தது. வெப்பநிலை 12 டிகிரி செல்சியசுக்கும் 15 டிகிரி செல்சியசுக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே புகைபடிந்திருந்த காற்று மண்டலம், விஷ வாயு ஆவியாகமல் தடுத்துக்கொண்டிருந்தது. மேலும் விஷவாயு காற்றை விட இரண்டரை மடங்கு அதிக எடை கொண்டதாக இருந்தது. அதனால் அது சற்று தாழ்வாகவே பரவிக்கொண்டிருந்தது. தரைக்கு மிக பக்கத்தில் தவழ்ந்து கொண்டு சத்தமின்று குடிசைகளுக்குள் நுழைந்துகொண்டிருந்தது.

நன்றி: Suroopa Mukherjee

(தொடரும்)