ஒழிவு தெவசத்தே களி

சினிமா விமர்சனம்

Off-day-1140x687

சாதியை சொல்லாதே/சாதியை கேட்காதே/ஆனால் ஏதும் செய்யாதே/சாதியை மறப்பதற்கு என்று ஐயப்ப பனிக்கர் எழுதினார். ஆர் உன்னி எழுதிய ஒழிவு தெவசத்தே களி என்கிற சிறுகதையை வைத்து சனல் குமார் சசிதரன் டைரக்ட் செய்த படம் இது. ஒழிவு தெவசத்தே களி என்றால் ஓய்வு நாளில் விளையாட்டு என்று பொருள். கேரளாவில் சாதி மக்களின் வாழ்க்கையில், அதிகார அடுக்கில், அரசியல் மட்டத்தில் எப்படி ஊடுறுவியிருக்கிறது என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம்.

ஆயிர வருட பழமையை எதிர்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.அதை மாற்ற முயற்சிக்கும் பொழுது பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும். அது தான் எனக்கு நடந்தது. ஆனால் இந்த போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களிடம் உரையாட விவாதம் செய்ய இது தான் சந்தர்ப்பம். இல்லாவிட்டல் இந்த சமூகம் இருக்கிற இடத்திலே தேங்கிவிடும்.

என்று செக்ஸி துர்கா படத்தினால் தான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் சனல் குமார் சசிதரன்.

Director_Sanal_Kumar_Sasidharan

சனல் குமார் சசிதரன் ஒரு வழக்கறிஞர். மாணவ காலத்தில் அவர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியின் மாணவ கிளை. பிறகு கருத்து வேறுபாட்டால் பாஜாகாவிலிருந்து வெளியேறி பாஜாகாவை தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார். க்ரௌட் ஃபண்ட் மூலம் மலையாளத்தின் முதல் க்ரௌட் ஃபண்டட் சினிமாவை இயக்கினார்.

*

கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்றைய கடைசி சில மணி நேரங்களில் ஒழிவு தெவசத்தே களி படம் தொடங்குகிறது. அந்தப் பெருங்கூச்சலிலிருந்து விலகி ஐந்து நண்பர்கள் ஓடைப் பக்கம் ஒதுங்குகின்றனர். ஓடையின் ஓரம் அமர்ந்து அவர்கள் பல கதைகள் பேசுகின்றனர். நடக்கவிருக்கும் தேர்தல் பற்றியும் அரசியல் பற்றியும் வேறு சில ஜோக்குகள் அடித்துக்கொண்டும் பொழுதைப் போக்குகிறார்கள். நாளை தேர்தல் தினம். மேலும் குடிப்பதற்கு சரக்கு எங்கும் கிடைக்கவும் செய்யாது. நாளைய ஓய்வு தினத்தை எப்படிக் கொண்டாடுவது கழிப்பது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

அவர்கள் காட்டுக்குள் இருக்கும் தனிமையான பழைய பெரிய வீட்டில் எப்படி ஓய்வு தினத்தைக் கழித்தார்கள் என்பது மீதிப் படம். அவர்களுடைய ஆழ்மனதையும் உள்ளுணர்வுகளையும் அது வெளிக் கொண்டுவரும் கொடூர குணங்களையும் இப்படம் காட்டுகிறது. அந்த வீட்டில் அவர்களுக்கு குடி ஒன்றே பிரதானம். சமைப்பதற்கு ஒரு பெண் இருக்கிறார். குடியினூடே அவர்களது விவாதம் எமர்ஜென்சி பற்றியும் துபாய் குடிபெயற்சி பற்றியும் அரசியல், ஜனநாயகம் என்று முடிவில் சாதியை முன்னிலைப்படுத்தி நடக்கவிருக்கும் ஒரு சோக நிகழ்ச்சிக்கு அச்சாரமாக அமைகிறது. ஒரு சின்ன சச்சரவு சண்டையாக முடியும் பொழுது அவர்களுள் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனே பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஐந்து நண்பர்களுள் தர்மன் பணக்காரன் திமிர்ப்பிடித்தவன். நண்பரளுக்குள்ளே மதிப்பையும் மரியாதையையும் பணத்தாலும் பேச்சுத்திரணாலும் பெருகிறான். ஆனல் திருமேனி ஒரு ஐயர். அவனுக்கு இயல்காகவே மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. வினயன் ஜனநாயக நெறிமுறைகளைப் பேசுகிறான், தர்மனின் திமிரை எதிர்த்து சண்டையிடுகிறான். தாசனிடம் பாட்டாளி வர்க்க மனப்பாண்மை இருக்கிறது. அசோகன் பாசாங்குக்காரன்.

மரமேறி பலாப்பலம் பறிப்பதாகட்டும் கறிக்குழம்பிற்காக கோழியை பிடித்து அடிப்பதாகட்டும் இப்படி எந்த எடுபிடி வேலையாகட்டும் அவர்களுள் கருப்பு நிறத்தவனான தாசன் (வேலைக்காரன் என்று பொருள்) என்பவனே முடிவில் செய்ய வேண்டியிருக்கிறது. ஏன் அவர்களுடைய சண்டைகளைக்கும் அவனே சமாதானம் போகவேண்டியிருக்கிறது. எதிர்ப்பார்த்தபடி அவன் ஒருவனே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான்.

பேச்சினூடே தாசனின் கருப்பு நிறம் கேலிக்குட்படுத்தப்படுகிறது. அவனது நணபர்களே அவனை கருப்பு என்று கேலி செய்து அதை விளையாட்டு என்கின்றனர். அவர்கள் கேலி செய்வது அவனது நிறத்தை அல்ல – அவனது சாதியை. பொறுமையிழந்த தாசன் எழுந்து “நான் பிறக்கும் பொழுது கருப்பு. வளரும் பொழுது நான் கருப்பு. சூரிய வெளிச்சத்தில் நான் விளையாடும் பொழுது நான் கருப்பு. நோய்வாய்ப்படும் பொழுது நான் கருப்பு. சாகும் பொழுது நான் கருப்பு. நீ.. நீ பிறக்கும் பொழுது..” என்கிற பாடலை அவன் பாடுகிறான். அனைவரும் எழுந்து வெளியேறி விடுகின்றனர். பால்கனியில் சென்று நின்றுகொள்கின்றனர். அதாவது அவர்கள் எவ்வளவு பகடி செய்தாலும், தாசன் பொறுமையாக இருக்கவேண்டும். விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அவன் சிறு எதிர்ப்பு காட்டிவிட்டாலும் மற்றவர்களுக்கு அது பிடிப்பதில்லை.

ozhivudivasathe-kali-380

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மற்றொருவர் அவர்களுக்கு சமைத்துக்கொடுக்கும் பெண் கீதா – படத்திலிருக்கும் ஒரே பெண். வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் – தாசனைத் தவிர – அவள் மீது ஒரு கண் இருக்கிறது. அனைவரும் அவளை அவர்களுடைய வழிகளில் அடைய முயற்சிசெய்கின்றனர். சின்னச் சின்ன சமிஞ்சைகளின் மூலம், மறைமுகமான பேச்சின் மூலம், ஆனால் கட்டாயப்படுத்தாமல் அவளை அவர்களின் ஆசைக்கு இழுக்கப்பார்க்கிறார்கள். அவர்களுள் பெரியவன் போல இருக்கும் ஒருவன், தருமன், அவளைக் கைபிடித்து இழுக்க, அவள் ஓங்கி ஒரு அறை விடுகிறாள். தரையில் அரிவாளால் ஓங்கி வெட்டி ஆண்வர்க்கதினரின் மேலிருக்கும் பெண்களின் கோபத்தைக் காட்டுகிறாள்.

“என்ன அரசியல், அது ஆண்களின் விளையாட்டு” என்று அவள் சொல்லும் பொழுது இந்த நாட்டில் பெண்களின்  உலகமும் பெண்களுடைய மொத்த பிரச்சனைகளும் ஒட்டு மொத்தமாக ஆளும் ஆண் வர்க்கத்தால் நிராகரிக்கப்படுகிறதென்பதை தெளிவாகச் சொல்லுகிறாள். உதாரணம்: தெருத் தெருவுக்கு கோயில் இருக்கும் இந்நாட்டில் பெண்கள் அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க இடம் வேண்டும் என்பதை ஆளும் ஆண் அதிகாரவர்க்கம் எப்படி புரிந்துகொள்ளும்? இந்நாட்டில் ஆளும் மந்திரிகூட அவசரத்துக்கு காரைவிட்டிறங்கி நின்றவாறு சிறுநீர் கழித்து எளிதாக சென்றுவிடுவார் – அவர் எப்படி பெண்களுடைய பிரச்சனையைப் புரிந்துகொள்ள இயலும்?

இத்தனைக்கும் சமையற்காரி போல தாசன் வெளியாள் இல்லை. மாறாக அவன் அந்த நெடுநாளைய நட்பு வட்டத்தில் ஒரு ஆள். அந்த நட்புவட்டம் அவனை உள்ளுக்குள் ஏற்றுக்கொண்டது போலத் தெரிந்தாலும், அவனை வெளியிலேயும் அவர்களுக்கு கீழேயுமே வைத்திருக்கிறது.

நேரம் ஆக ஆக வெறுமனே நண்பர்களுக்குள்ளேயான தண்ணிப் பார்ட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விளையாட்டாக உருமாறுகிறது . அதிகாரமும் வன்மமும் வெறியும் கொண்ட விளையாட்டு. அவர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது அவர்கள் விளையாடிய விளையாட்டு. சீட்டுப் போட்டு அவர்களுள் யார் அரசனாவது, யார் மந்திரியாவது, யார் போலீஸாவது, யார் திருடனாவது, யார் நீதிபதியாவது என்று அவர்களுக்குள்ளே முடிவு செய்துகொள்கிறார்கள். சீட்டுப் போடுகிறார்களே தவிர அந்த அந்தச் சாதியினார் அந்த விளையாட்டில் தங்களுக்கென்ன பங்கு என்று அவர்களாவே முடிவு செய்கின்றனர். வெள்ளையாக இருப்பவன் அவனாகவே நீதிபதியாகிக் கொள்கிறான். கடைசியில் கருப்பாக இருப்பவனுக்கே திருடன் ரோல் கிடைக்கிறது. அவன் மறுத்துப் பார்க்கிறான் – ஆனால் விளையாட்டு தானே என்று அவனைச் சமாதானப்படுத்துகின்றனர். இந்த விளையாட்டும் விளையாடும் நபர்களும் நமது ஜனநாயகத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் வர்னாசிரம அடுக்குகளையே பிரதிபலிக்கின்றனர்.

friends

விளையாட்டில் நீதிபதி தவறு செய்யும் பொழுது அவர்களுக்குள் பேசி நீதிபதிக்கு எந்த தண்டனையும் கிடைக்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். நீதிபதியை எப்படி தண்டிப்பது? நீதிபதியாக உட்கார்ந்திருக்கும் சாதியைச் சேர்ந்தவரை எப்படி தண்டிப்பது? அவரைத் தண்டிப்பது மகாப்பாவம் ஆகாதோ? அதே போல ராஜா தவறு செய்து பிடிபடும் பொழுது ராஜாவுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யலாகாது என்று அனைவரும் எடுத்துச் சொல்கின்றனர். மந்திரி தவறு செய்து பிடிபடும் பொழுது மாறாக அவனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் அந்த தண்டனையிலிருந்து வெளிவர சொற்ப அபராதம் மட்டுமே வழங்கப்படுகிறது. போலீஸ் தவறு செய்து பிடிபடும்பொழுது அவனுக்கு மிகச்சிறிய தண்டனையும் பிறகு அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதையும் மந்திரியும் நீதிபதியுமே சொல்கின்றனர். ராஜா கண்டுகொள்வதில்லை. ஆனால் திருடன் – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் – தவறு செய்து பிடிபடும்பொழுது அவனைக் காப்பாற்ற யாரும் இல்லை. அவனுக்கு இருப்பதிலே கொடுமையான தண்டனை கொடுக்கப்படுகிறது. அதிலிருந்த அவன் மீள வாய்ப்பேயில்லை. அவனை அதிலிருந்து வெளியேற்றிவிட யாரும் முன்வருவதில்லை. இந்த விளையாட்டிலும் அப்படியே. யாரும் அவனைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. முடிவில் அந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.

இந்தப் படத்தின் கடைசிக் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்துவிடும். சாதீயம் மீதும் சாதி சார்ந்த சமூக படிநிலைகள் மீதும் அனல்கக்கும் கேள்விகளை அவர்களைக் கேட்கத் தூண்டும். அந்த கடைசிக் காட்சியில் பார்ப்பவர்கள் ஒன்று தண்டனை பெறுபவராகவோ அல்லது தண்டனை கொடுப்பவர்களுல் ஒருவராகவோத்தான் இருக்க முடியும்.