தேன்கூடு போட்டி : காடனேரி விளக்கு (சிறுகதை)

காடனேரி விளக்கு (சிறுகதை)

நின்று கொண்டிருந்த பஸ்ஸின் இரைச்சல் அந்த இரவின் நிசப்தத்தை ஒரு ஈட்டி போல் குத்தி கிழித்துக் கொண்டிருந்தது. நாய்கள் எழுந்து நின்று வேடிக்கை பார்த்து விட்டு மறுபடியும் படுத்துக்கொண்டன. சில நாய்கள் எங்கள் தூக்கத்தை ஏன் கெடுத்துத்தொலைக்கிறீர்கள் என்று பதிலுக்கு ஊளையிடத்தொடங்கின. நாளை விடிகாலை ஆண்டாளை தரிசிக்க அந்த பேருந்தில் சென்று கொண்டிருக்கும் சில பக்தர்கள் தூக்கத்திலிருந்து விழித்து பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்க இயலாமல் பெரிய கொட்டாவிகளை விட்டுக்கொண்டிருந்தனர்.’அமைதிக்கு பெயர் தான் சாந்தி’ என்ற பாடல் சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தது, சன்னமாக. டிரைவர் ரோட்டை விட்டு சற்று தொலைவில் இருந்த கிணற்றில் கண்டக்டர் நீர் இறைப்பதையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

குடத்துடன் கண்டக்டர் ஓட்டமும் நடையுமாக வந்து, டிரைவரிடம் கீழே இருந்தபடி கொடுத்துவிட்டு, பின் வாசல் வழியாக பஸ்ஸில் ஏறிக்கொண்டார். பஸ் புறப்பட்டது.

கம்பியில் சாய்ந்த கொண்டே கையிலிருந்த இன்வாய்ஸ் பேப்பரை நிரப்பிக்கொண்டு வந்தவர், ஆட்களை எண்ணத்தொடங்கினார்.

இன்வாய்ஸ் பேப்பரை மடித்து கைப்பையில் வைத்து விட்டு, பின்னால் வந்தவர் அங்கே உட்கார்ந்திருந்த சிவப்பு சட்டை நபரிடம், ‘நீங்க எங்க ஏறுநீங்க’ என்றார். அவர் ‘T.கல்லுப்பட்டி’ என்றார். கண்டக்டர் சந்தேகமாக பார்த்துக்கொண்டே ‘எங்கே இறங்கனும்?’ என்றார். ‘காடனேரி விளக்கு’ என்றார் சிவப்பு சட்டை நபர். ‘டிக்கெட் வாங்கிட்டீங்களா?’ ‘ம்ம்.ம்ம்.’ என்று பையில் கை விட்டவரை ‘அடுத்த ஸ்டாப் தானே, எழுந்து நில்லுங்க விசில் கொடுக்கறேன்’ என்று சொல்லிவிட்டு முன்னால் நகர்ந்து சென்று காலியாக இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

டிரைவரின் தலைக்கு மேல் பயணிகளைப் பார்த்துக்கொண்டிருந்த கடிகாரம் 11:30 என்றது. பயணிகள் ‘தேவதை இளம் தேவி’ என்ற பாடலைக்கூட இரசிக்காமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

***

காடனேரி விளக்கு. பஸ் மிகுந்த இரைச்சலுடன் புறப்பட்டது. பஸ்ஸிலிருந்து இறங்கிய செந்தில் அங்கேயே நின்று தனக்கு முன்னால் ஒரு பாம்பைப் போல நீண்டு வளைந்து கிடக்கும் தார் ரோட்டையே பார்த்துக்கொண்டு நின்றான். காடனேரி விளக்கிலிருந்து தன் கிராமமான காடனேரிக்கு செல்ல மூன்று கிலோமீட்டர் நடக்கவேண்டும். வாட்சைப்பார்த்துக் கொண்டான். மணி 11:45. ரோட்டில் ஆள் அரவம் சுத்தமாக இல்லை. இருட்டு கடுமையாக படர்ந்திருந்தது. மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

செந்தில் காடனேரியில் தான் பிறந்தான். பண்ணிரண்டு வயது வரை காடனேரியிலே வளர்ந்தான். பிறகு குடும்பம் மதுரைக்கு மாறியவுடன் இந்த பத்து வருடங்களில் காடனேரியை மறந்தே போனான். ஆனால் காடனேரி விளக்கிலிருந்து காடனேரிக்கு செல்லும் ரோட்டில் இருந்த அந்த மிகப்பெரிய ஆலமரமும், அதற்கு பின்னாலிருந்த சுடுகாடும், அப்பத்தாவின் பேய்க் கதைகளும் மனதில் அப்படியே பதிந்துவிட்டன. சரியான நேரத்தில் வெளிவரத்துடிக்கின்றன.

அவனையுமறியாமல் ‘ராஜ ராஜ சோழன் நான்’ பாடல் வாயிலிருந்து வெளிப்பட்டது. ஓணான் ஒன்று காலுக்கடியில் புகுந்து ஓடியது. செந்திலை சிலீர் என்ற பயம் கலந்த உணர்ச்சி தாக்கி உடம்பெல்லாம் புல்லரிக்க செய்தது. நடப்பதை நிறுத்தி விட்டு பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை. தெளிவான நிசப்தம்.

யாராவது வந்தால் தேவலாம் போல இருந்தது. பால் வண்டி, மணல் லாரி அல்லது சிப்ட் முடிந்து திரும்புகிறவர்கள் என யாராவது உடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பயமாவது விலகும்.

காற்று கூட நின்று விட்டிருந்தது. ஏதேதோ சம்பந்தாசம்பந்தமில்லாத பாடலை வாய் முனுமுனுத்துக் கொண்டே வந்தது. கல்லுப்பட்டி லட்சுமி டாக்கீஸில் இரண்டாம் ஆட்டம் பார்த்திருக்க கூடாதோ? நேரத்தோடு வந்திருந்தால் ஒழுங்காக இந்நேரம் வீடு போய் சேர்ந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். சிவப்பு கலர் பேய்க்கு விருப்பமான கலரா? நான் சிவப்பு சட்டை வேறு போட்டிருக்கிறேனே. இவ்வளவு கருமையான இருட்டில் வெள்ளை வெளேர் என்று பேயொன்று வந்தால் தூரத்திலே தெரிந்துவிடாதா என்ன? பின்னால் வந்துவிட்டால். பேய் முதுகில் தானே அடிக்குமென்பார்கள்? சட்டென்று திரும்பிப்பார்த்தான். யாருமில்லை. எங்குமிருக்கும் காற்றைத்தவிர. தூரத்தில் சைக்கிளில் யாரோ வருவதைப்போல இருந்தது. உண்மைதானா? கண்களை நம்ப முடியாமல் பார்த்தான். உண்மைதான். சைக்கிளில் யாரோ வந்து கொண்டிருந்தார்கள். அருகில் வரட்டும் லிப்ட் கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

சைக்கிளில் வந்தவர் இவனைப்பார்த்ததும் நிறுத்தினார். அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். செந்தில் அவரிடம் ‘அண்ணே நான் காடனேரி வரைக்கும் போகனும், கொஞ்சம் செக்கிளிலே கொண்டுபோய் இறக்கிவிட்டுடறீங்களா? இருட்டில நடக்க பயமாயிருக்கு’ என்றான். அவர் ‘காடனேரியா? காடனேரியில எந்த வீட்டுக்குப்போகனும்?’ என்றார். ‘ஆசாரி வீட்டுக்கு’ என்றான் செந்தில். அவர் சிறிது நேரம் அமைதியாய் அவனைப்பார்த்துவிட்டு. பிறகு ‘சரி முன்னால் ஏறிக்க’ என்றார். பின்னால் ஏதோ மூட்டையிருந்தது. செந்தில் ஏறப்போகும் பொழுது, ‘கொஞ்சம் பொறு’ என்றவர், ஹேண்ட்பாரைப்பிடித்து முன் டயரை அமுக்கிப்பார்த்தார். பின ‘தம்பி, முன் டயரில காத்து இருக்கான்னு பாரு’ என்றார். டயர் பங்சர்.

‘அண்ணே. நீங்களும் காடனேரி தானா?’ என்றான் செந்தில் நடந்து கொண்டே. ‘இல்லப்பா. நான் கீழக்காடனேரி. ம். ஆசாரி வீட்டுக்கு என்ன விசயமா வந்திருக்க?’ என்றார் சைக்கிளைத் தள்ளிக்கோண்டே. மூட்டை பத்திரமாக் பின் கேரியரில் உட்கார்ந்திருந்தது. ‘அக்கா கல்யாணத்திற்கு தாலி செய்யக்கொடுத்திருந்தோம். அவங்கதான் காலம்காலமா எங்க குடும்பத்திற்கு தாலி செஞ்சு கொடுப்பாங்கலாம். நாளைக்கு வாங்கிட்டு மத்தியான பஸ்ஸிலே போய்டுவேன்’ என்றான். கொஞ்ச நேரம் அமைதி. இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

‘அண்ணே உங்க பேரு என்னண்ணே?’ என்று செந்தில் படர்ந்திருந்த அமைதிக்கு முற்றுப்புள்ளி வைக்கபார்த்தான். அவர் எதையோ தேடும் பாவணையில் இருந்தவர், திடீரென செந்தில் பக்கம் திரும்பி, ‘என்னப்பா? பேரா? ஆறுமுகம்’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் தேடத்தொடங்கினார். ஆந்தை ஒன்று கருவேல மரத்தில் உட்கார்ந்து கொண்டு இவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. மறுபடியும் அமைதி. சைக்கிள் டயர்கள் கல்லில் ஏறி இறங்கும் சத்தத்தை தவிர வேறு சத்தங்கள் இல்லை.

‘அண்ணே, என்னண்ணே தேடுறீங்க?’ என்றான் செந்தில். ‘ம்..ம்.. ஒன்னுமில்லப்பா.’ என்றவர், மறுபடியும் சுற்றும் முற்றும் பார்த்தார்.

கொஞ்ச தூரத்தில் ஆலமரம் தெரிந்தது. மேகச்சிறையில் விடுபட்ட நிலவு கொஞ்சம் வெளிச்சத்தைக் கொடுத்தது. உடன் ஒருவர் வந்து கொண்டிருந்தாலும் ஆலமரம் திகிலூட்டவே செய்தது.

திடீரென்று, ‘டேய். நீ அங்க தான் இருக்கியா? உன்னக் கொல்லாம விடமாட்டேன்டா’ என்று சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு மூட்டைக்குள் கைவிட்டு அறிவாளை எடுத்துக்கொண்டு ரோட்டைவிட்டு கீழிறங்கி ஓடினார் ஆறுமுகம். ரோட்டின் ஓரத்தில் பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் தண்ணீரில் அவர் கால் மிதித்து ஓடும் சத்தம் பயங்கரமாக கேட்டது. செந்தில் ஒன்றும் புரியாமல் விழித்தான். போய்விடலாம் என்று நினைத்தவனின் கால்கள் தூரத்தில் தெரியும் ஆலமரத்தைப் பார்த்தவுடன் நடக்க மறுத்தன.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு ஆறுமுகம், அவர் ஓடிச்சென்ற பாதையிலிருந்து வேகவேகமாக வெளிப்பட்டார். கையில் அறுவாள் இல்லை. வாய்க்காலில் இறங்கி வேகவேகமாக தண்ணீரை அள்ளி அள்ளி குடித்தார். செந்தில் அருகில் சென்று அவரை ‘அண்ணே’ என்று அழைத்தான். நிமிர்ந்த அவர் இவனைப்பார்த்துக்கொண்டே தொப்பென்று வாய்க்காலில் நிலைகுப்புற விழுந்தார். விக்கித்து நின்ற செந்தில் மறுபடியும் ‘அண்ணே’ என்றான். பதிலில்லை. மெதுவாக வாய்க்காலில் இறங்கினான். அவர் சலனமில்லாமல் படுத்துக்கிடந்தார். மூச்சிருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. பகீரென்றது. தூக்க முயற்சித்தான். முடியவில்லை. வேக வேகமாக ரோட்டில் ஏறி ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவன் வேகமாக நடந்ததில் ஆலமரத்தை தாண்டியதைக்கூட அவன் கவனிக்கவில்லை. யாராவது தெனபடுகிறார்களா என்று அவன் கண்கன் தேடிக்கொண்டிருந்தன.

சிறிய பாலம் போன்று இருந்த திண்டில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அருகில் சென்று ‘ஐயா’ என்று அழைத்தான். கம்பளிப்போர்வைக்குள் உடலை மறைத்துக்கொண்டிருந்தவர் சிறிது நேரம் கழித்து திரும்பினார். அவர் வாயில் பீடி புகைந்து கொண்டிருந்தது.’ஐயா ஒருத்தர் ஆலமரத்திற்கு பக்கத்தில வாய்க்கால்ல மூச்சு பேச்சில்லாம விழுந்து கிடக்கிறார். கொஞ்சம் உதவி செஞ்சீங்கன்னா தூக்கிரலாம்’ என்றான். அவன் இவனை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்து விட்டு, கம்பளியை விலக்கினார். ஒரு கை இல்லை. கம்பளியை மூடிக்கொண்டு மறுபடியும் திரும்பிக்கொண்டார். பீடிப்புகை மட்டும் வானத்தை நோக்கி மேலெழும்பிக்கொண்டிருந்தது.

செந்தில் மீண்டும் நடக்க ஆரம்பித்தான். கீழக்காடனேரியை கொஞ்ச நேரத்தில் தொட்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது, ஒத்தையாக நின்ற பொட்டிக்கடையின் கீழே ஒருவன் குத்தவவைத்து உட்கார்ந்திருந்தான்.

‘ஐயா ஒருத்தர் வாய்க்காலில்….’ என்று செந்தில் சொல்வதற்குள் அவன், ‘ அவன்கிட்டயிருந்துதான் நான் தப்பிச்சு ஓடியாறேன். என்ன பார்த்தானா கொன்னுபோடுவான்’ என்று சொல்லிவிட்டு தலையைப்பிடித்துகொண்டு கீழே பார்த்தான். அப்பொழுதுதான் செந்தில் கவனித்தான் கீழே குளமாக வாந்தி. செந்தில் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அவன் மீண்டும் மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.

தூரத்தில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகள் மட்டும் நடந்து வந்து கொண்டிருந்தனர். குழந்தைகளின் உடம்பில் பொட்டுத்துணியில்லை. இந்த பெண்ணிடம் உதவி கேட்கலாமா என்று தயங்கிய செந்திலிடம், அந்த பெண், ‘தம்பி, வழியில யாரையாவது சைக்கிள்ல பார்த்தியாப்பா?’ என்றாள். ‘ம்ம்..ஆறுமுகன்னு ஒருத்தர் வந்தார். இப்போ பேச்சு மூச்சில்லாம வாய்க்கல்ல விழுந்துகிடக்கிறார். அனேகமா..’ என்று முடிப்பதற்குள் ‘ஐயோ என்னங்க..எத்தன தடவ சொன்னேன்…’ என்று சொல்லிக்கொண்டே ஓடினாள். குழந்தைகளும் பின்னாலேயே ஓடின. ஒரு குழந்தை செந்திலை திரும்பிப்பார்த்தது.

முதலில் ஓடாமல் நின்று கொண்டிருந்த செந்தில், பிறகு என்ன நினைத்தானோ அவர்கள் பின்னால் ஓட ஆரம்பித்தான்.

***

காடனேரி விளக்கு. தன்னை இறக்கிவிட்ட பஸ் செல்வதையே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. யாராவது கண்டிப்பாக சைக்கிளில் வருவார்கள், தொத்திக்கொண்டு போய்விடலாம் என்று நினைத்து அங்கிருந்த பஸ்ஸ்டாண்ட் திண்டிலே உட்கார்ந்து விட்டான்.

சைக்கிளில் ஒருவர் வரவும், கை நீட்டினான். அவர் நிறுத்தவே, ‘அண்ணே காடனேரியில இறக்கி விட்டுடறீங்களா?” ‘பின்னால மூட்டையிருக்கு முன்னால ஏறிக்கோ’ என்றார் அவர். பாண்டி ஏறி உட்கார்ந்துகொண்டான்.

சைக்கிள் நபரிடமிருந்து சாரய நெடி தூக்கலாக அடித்தது. பாண்டி நாவில் எச்சில் ஊரியது. ‘அன்ணே, ஆலமரத்து சுடுகாட்ட தாண்டி இருக்கில கிணறு. அதுக்கு பின்னால இப்ப சாரயம் விக்கிறாய்ங்க பாத்தீங்களா?” என்றான். ‘அப்படியா? போனதில்லையேப்பா” என்றார் சைக்கிள் நபர். ‘அண்ணே இப்ப போவோமா. ஒரே ஒரு ரவுண்டு மட்டும் குடிச்சிட்டு உடனே போயிடலாம்” என்றான் பாண்டி. “இல்லப்பா, ஏற்கனவே நிறைய குடிச்சிட்டேன். வீட்ல கடங்காரி திட்டுவா” என்றார். “அக்காவ பத்தி பின்னாடி கவலப்படலாம். நீ மொதோ சைக்கிள அங்க விடுண்ணே” என்றான் தூரத்தில் தெரிந்த ஆலமரத்தைப் பார்த்துக்கோண்டே.

பாண்டியும், சைக்கிள் நபருக்கும் போதை தலைக்கேறியிருந்தது. இருவரும் ஏதேதோ உளரிக்கொண்டிருந்தனர். சைக்கிள் நபர் தன் பெயர் ஆறுமுகம் என்றும், தன் மனைவி தன்னை குடிக்ககூடாது என்று நச்சரிப்பதாகவும் கொல்லிக்கொண்டிருந்தவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபரிடம் சத்தமாக, “கொஞ்சம் ஊறுகா இருந்தா கொடுடா” என்றார். அந்த நபர் முறைத்துப் பார்த்துக்கொண்டே, மீதமிருந்த ஊறுகாயை இடது கையால் எடுத்துக்கொடுத்தார். ‘என்னா நொட்டாங்கையில் தார? இன்னொரு கை என்ன கள புடுங்குதா?” என்று சொல்லிக்கொண்டே ஊறுகாயை வாங்கினார் ஆறுமுகம். பாண்டி “அவன் ஒத்தக்கையண்ணே. சோத்தாங்கை அவனுக்கில்ல” என்று சொல்லி பயங்கரமாக சிரித்தான். ஒத்த கையன் முறைத்துக்கொண்டே பாட்டிலை முழுவதுமாக் குடித்து முடித்தான். “ஐயோ அம்மா” என்று அங்கே குடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் வயிற்றைப்பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். அவன் துடிதுடித்து அழுவதைக்கண்டு கிணற்றுத் தவளைகளெல்லாம் பதுங்கிக்கொண்டன. அனைவரும் பீதியில் உரைந்தனர். அடித்த போதை இறங்குவதை போல இருந்தது. தொடர்ந்து நிறைய பேர் வயித்தை பிடித்துக்கொண்டு விழுந்தனர்.ஒத்தக்கையன் வயிற்றைப் பிடித்தவாறு எழுந்து சென்றான்

ஆறுமுகம் தான் குடித்துப்போட்ட மூன்று பாட்டில்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் ஆறுமுகத்திற்கு வயிற்றைப்புரட்டிக்கொண்டு வந்தது. பிறகு பயங்கரமாக வலித்தது. பாண்டி’ அண்ணே சாரயத்தில விஷம் கலந்திருச்சு போல இருக்குண்ணே” என்றவன் “ஐயோ அம்மா” என்று வயிற்றைப்பிடித்துக்கொண்டான்.

ஆறுமுகம் “ஐயோ. இப்போ என்ன செய்வேன்?” என்றவர், ” நான் வரமாட்டேன்னு சொல்லியும் நீ தாண்டா வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்த?” என்று பாண்டியை ஓங்கி ஒரு மிதி விட்டார். பாண்டி எழுந்து வயிற்றைப்பிடித்துக்கொண்டே ஓடினான்.

ஆறுமுகம் “ஐயோ, பிள்ள குட்டிகள யாரு காப்பாத்துவா? உன்னக்கொல்லாமா விடமாட்டேன்டா” என்று அவனை விரட்டிக்கொண்டு வந்தவர், வாய்க்காலில் தண்ணீரைப்பார்த்ததும், வேக வேகமாக அள்ளி அள்ளிக்குடித்தார். பிறகு பொத்தென்று வாய்க்காலில் விழுந்தார்.

பாண்டி வயிற்றைப்பிடித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான். ஒத்தகையன் பாலத்தின் திண்டில் சாய்ந்து கிடந்தான். உயிர் போகும் அளவுக்கு கத்திக்கொண்டிருந்தான். பாண்டியால் வெகுதூரம் ஓட முடியவில்லை. வயிற்று வலி மிகப்பயங்கரமாக இருந்தது. பொட்டிக்கடையருகே நின்று சோடா வாங்கி குடித்தவன், குத்த வைத்து உட்கார்ந்து வாந்தியெடுக்க ஆரம்பித்தான். கை கால்களை உதைத்துக்கொண்டு கத்தினான். பிறகு மரத்தில் இவனுக்கு போட்டியாக கரைந்து கொண்டிருந்த காகத்தை இமைக்காமல் வெறிக்கத்தொடங்கினான்.

‘ஐயோ.. என்னங்க..எத்தனை தடவ சொன்னேன். குடிக்காதீங்க குடிக்காதீங்கன்னு” என்று கத்திக்கொண்டே ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் பின்னாலேயே இரண்டு குழந்தைகள் பொட்டுத்துணியில்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு குழந்தை திரும்பி பாண்டியைப் பார்த்தது.

***

“ஐயோ எத்தனை தடவை சொன்னேன்..” என்று சொல்லிக்கொண்டே ஓடினாள் அந்தப் பெண். குழந்தைகளும் கூட ஓடினர். முதலில் ஓடாமல் இருந்த செந்தில் ஓட ஆரம்பித்தான்.

அந்த பெண் வாய்க்காலில் விழுந்துகிடந்த ஆறுமுகத்தை நெருங்கினாள். “ஐயோ எங்கள விட்டுட்டு போய்டீங்களா? இந்த பிள்ளைகளை வெச்சு நான் எப்படி காப்பாத்துவேன்” என்று கதறிக்கொண்டே தூரத்தில் தெரிந்த கிணற்றைப் பார்த்தாள்.

செந்தில் செய்வதறியாமல் திகைத்து நின்றான். அந்த பெண் கிணற்றை நோக்கி ஓட அரம்பித்தது. குழந்தைகளும் பின்னாலேயே ஒடினர். செந்தில் “ஐயோ வேணாம். தற்கொலை செய்துக்காதீங்க” என்று அவர்களை தடுத்து விடும் நோக்கத்தோடு ஓடினான்.

திடீரென்று அந்த பெண், மற்றும் குழந்தைகளைக் காணவில்லை. ஓடிய சுவடே தெரியவில்லை. எங்கும் நிசப்தம். செந்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். ‘ஷ்..ஷ்’ என்ற சத்தம் கேட்கவே, கீழே பார்த்தான். ஒரு கரு நாகப்பாம்பு படமெடுத்து நின்று கொண்டிருந்தது.

***

கண்டக்டரின் விசில் சத்தம் கேட்டு பஸ் நின்றது. ‘ராஜா மகள் புது ரோஜா மலர்’ பாடல் சத்தமாக கேட்டது. கண்டக்டர் எழுந்து, ‘ஏய் யாருப்பா காடனேரி விளக்கு கேட்டது. சட்டுன்னு இறங்குப்பா’ என்றார். யாரும் எழுந்திருக்கவில்லை. இறங்கவில்லை.

எரிச்சலடைந்த கண்டக்டர் ‘அதுக்குள்ள தூங்கிட்டானா?’ என்று எழுந்து பின்னால் வந்தார், ‘ஏம்பா இங்க ஒரு சிவப்பு சட்டை உட்கார்ந்திருந்தானே. காடனேரி விளக்கு இறங்கனும்னு சொன்னானே. எங்க காணோம்?” என்றார்.

‘பஸ் வேற எங்கவும் நிக்கவேயில்ல. அவன் எங்க இறங்கினான்? எப்படி மாயமானான்?’ என்று யோசித்துக்கொண்டே, இன்வாய்சை எடுத்துப் பார்த்துவிட்டு பயணிகளை எண்ணினார். சரியாக இருந்தது. கண்டக்டர் குழம்பியவாறு டபுள் விசில் கொடுத்தார்.

***

15-09-2006 அன்று கடைசிப்பகுதிக்கு முந்தைய பகுதி சேர்க்கப்பட்டது.

கதம்பம்

சென்ற சில நாட்களாக – வாரங்களாக – நான் இரசித்த கவிதைகள், ஜோக்குகள்,பாடல்கள் போன்றவை. நீங்கள் படித்திருக்கலாம்.

ஒரு காதல் கவிதை :

தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
மதிப்பிடப்படுவதாக
செய்திகள் சொல்கின்றன
ஆனால். இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில் தான்

விகடனில் வந்த ஒரு கேள்வி:

“நாங்கள்லாம் மொத ஷோவே பார்த்துட்டம்ல!” ங்கிறதைக் காட்டுறதுக்காகவே, தியேட்டர்ல முன் ஸீட்ல உட்கார்ந்துக்கிட்டு ‘டக்குன்னு குத்திருவான் பாரேன்’, ‘அடுத்த ஸீன்ல இருக்குடி இவனுக்கு ஆப்பு’ ‘பாட்டு போடப்போறாய்ங்கடா’ன்னு ஸீனுக்கு ஸீன் டிரெய்லர் ஓட்டி டார்ச்சர் பண்றானுங்களே முந்திரி பக்கோடா காதருங்க..இந்த இம்சை ஏன்டா?

மற்றொரு கேள்வி:

லவ்வருக்கு போன் பேசுற பூரா பூனைப் பயலுகளும் ‘அப்புறம் அப்புறம்’ ங்கிறதை மட்டுமே ஆயிரத்தெட்டு தடவை யூஸ் பண்றானுங்களே. வொய்? வொய்? ராத்திரி எட்டு மணிக்கு மேலே பொண்ணுங்க எந்த கால் பேசினாலும் ஹஸ்கி வாய்ஸ்லயே பேசுறாங்களே, வொய்மா வொய்?

அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா!

ஒரு கொரளு: ஒரு வெளக்கம்.

கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

யாராச்சும் நீ லவ்ஸ் வுட சொல்லோ நாலு ஜெனம் சத்தய்ச்சினுதான் போவும், அது ரப்ச்சர் கெடியாதும்மே! லவ்ஸ¤க்கே அதாம்மே கிரிகிரி!

மெய்யாலுமா?

மற்றொரு குபீர் சிரிப்பு செய்தி : தினமலரில் வந்தது!! ஆனாலும் தினமலருக்கு நக்கல் ஜாஸ்திபா!

மற்றொரு யோசிக்கவைத்த கவிதை:

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை

சிந்தனை புதிது. என் தோழி ஒருத்தி இதெல்லாம் கவிதையாடா? என்றாள். அழகாக இருந்தால் எல்லாமே கவிதைதான், இல்லையா?

சமீபத்தில் கேட்ட சினிமா பாடலொன்று என் மனதை மிகவும் பாதித்தது. மிகுந்த சமூக பொறுப்புணர்வோடு பாடிக்கொண்டுவந்த கவிஞர், திடீரென்று இவ்வாறு சொல்லுகிறார்.

பாடல் : என்னம்மா தேவி ஜக்கம்மா
படம் : தம்பி

யார் எழுதியது என்று தெரியவில்லை.

விவசாயம் செய்யுன்னா
வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயித்தான்
ஒட்டகம் மேய்க்கிறான்

என்ன வார்த்தைகள் இவை? இதற்குப்பெயர் சமூகப்பொறுப்புணர்வா? நக்கலும் நையாண்டியும் அல்லவா மேலோங்கி நிற்கிறது? விவாசாயம் நல்ல வருமானம் தருகின்ற தொழிலாக இருந்தால் யார் அதை விட்டுவிட்டு ஒட்டகம் மேய்க்கப்போகப்போகிறார்கள்? விவாசயம் முக்கியமானது, நான் கடைசி வரை விவாசயம் மட்டுமே செய்துகொண்டிருப்பேன் என்று சொல்லிக்கொண்டு கூல் சட்டியை ஏந்திக்கொண்டிருக்கலாம் தான். நீங்கள் (சினமாக்காரர்கள்) என்ன செய்வீர்கள்? நெய்வேலியில் கருப்புசட்டை அணிந்து கொண்டு ஊர்வலம் போவீர்கள், பிறகு, அப்புறம்? உலக சினிமாவில் முதல் முறையாக என்று துபாய் பாலைவனத்தில் அதே ஒட்டகங்களோடு – கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பைஜாமா குர்தா சகிதம் – டூயட் பாட போய்விடுவீர்கள். பிறகு கூல் சட்டியை யார் நிறப்புவது? நீங்கள் சினிமாக்காரர்கள். காதல் கத்தரிக்காய் வெண்டைகாய் என்று அரைத்த மாவையே அரைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருங்கள். வெளிநாட்டில் உட்கார்ந்து, சொந்த பந்தம் மனைவி மக்கள் என்று அத்தனையும் விட்டு தம்முடைய அடுத்த சந்ததியினராவது நன்றாக இருக்கவேண்டும் என்று உழைத்து – கவனிக்க, உழைத்து – கொண்டிருக்கும் மக்களின் புண்பட்ட மனதை மேலும் மேலும் ரணமாக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும்.

மற்றுமொரு பாடல், சித்ரா மிக அருமையாக பாடியிருக்கிறார்.
படம்: பொய்.

என்ன தொலைத்தாய்
எதனைத் தொலைத்தாய்

தமிழைத் தொலைத்த
தலைமுறை போலே
தண்ணீர் தொலைத்த
தமிழகம் போலே
வருடம் தொலைத்த
வாலிபன் போலே
கருணையைத் தொலைத்த
கடவுளைப் போலே

வீரம் தொலைத்த
வாளைப்போலே
ஈரம் தொலைத்த
நிலத்தைப் போலே
கிழக்கு தொலைத்த
சூரியன் போலே
எல்லை தொலைத்த
தேசம் போலே

என்ன தொலைத்தாய்
நீ
எதனைத் தொலைத்தாய்?

இங்கே பாடலைக்கேளுங்கள்.

என்னுடைய ரோடங்கும் நயாகராக்கள் என்ற பதிவின் கருத்தை(!) ஒட்டிய
கவிதை ஒன்றை இந்த வார தீராநதியில் படிக்க நேர்ந்தது.

ஒரு மின்னல்

சமதரையிலிருந்து
மூன்றடி உயர்த்தித்தான் கட்டினேன்

சுவர்களில்
இட்டு வைக்கும் எச்சங்களைத்
தினமும் துடைத்து அள்ளுகிறேன்

சிறுமழை பெய்யினும்
தேங்கும் நீரில் வீடு தெப்பம்

எல்லாப் புறமும்
பசும்பாசிக் கொடிகள் ஏறுகின்றன
கிறுக்கல் வடிவ நீர்ப்பூச்சிகள்
எப்போதும் வீட்டையே சுற்றுகின்றன

இரவெல்லாம்
தவளைகள் கத்தித் தொலைக்கின்றன

இன்று அதிகாலை
கதவைத் திறந்தபோது
வாசலில் தலைவைத்துச்
சுகமாய்த் தூங்கி கொண்டிருந்தது
அந்த பாம்பு

சலனத்தில்
அது ஒரு மின்னலெனச்
சற்றே புரண்டு படுக்கையில்
என்க்கு புரிந்தது

அதன் வீட்டுக்குள் எனதுவீடு

.

-பெருமாள்முருகன்

காந்தம் : நாவல் (1)

காந்தம் : நாவல்

பாகம் 1 : கிழக்கு

1953

1

ஏட்டையா போலீஸ் ஸ்டேஷனை விட்டு ரோட்டில் இறங்கி, வெகுதூரம் நடந்துவிட்டிருந்த போதும், உடன் வந்த காண்ஸ்டபிளிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது விசித்திரமாக இருந்தது. குளிருக்கு இதமாக காதுகளை சுற்றிலும் மப்ளரால் கட்டியிருந்ததால் கூட இருக்கலாம். குளிர் இன்று மிக அதிகமாக இருந்தது. ஏட்டையா கால்சட்டைப் பையை துலாவி, பீடிக்கட்டு ஒன்றை எடுத்து, ஒரு பீடியை வாயில் வைத்துக்கொண்டார். சட்டைப்பையில் துலாவி தீப்பெட்டியை எடுத்து, பீடியை பற்ற வைத்துக்கொண்டார். தீக்குச்சியின் நெருப்பு முகத்திற்கு இதமாக இருந்தது. மிகவும் இரசித்து முதல் இழுப்பை இழுத்துக்கொண்டார். புகையை வெளியே விடும் பொழுது மட்டும் ஏனோ வானத்தைப் பார்த்துக் கொண்டார். அவர் விடும் புகை நட்சத்திரங்களை சென்றடையுமா என்ன? இல்லை வெளியேறும் புகை தன்னை மெதுவாக நட்சத்திரங்களுக்கு அருகே அழைத்துச் செல்கிறது என்றும் நினைத்துக்கொண்டிருக்கலாம். ‘அண்ணே’ என்ற ஹெட்காண்ஸ்டபிளின் குரல் கேட்டு, மறுபடியும் கால்சட்டைப் பையைத் துலாவினார்.

ரோடெங்கும் இருவரின் லத்தி ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் எரிச்சான்பட்டியை அடையும் போது மணி இரவு ஒன்பதை எட்டிவிட்டது. ‘அண்ணே கீழத்தெருவுக்கு இப்படி குறுக்கே போகலாம்’ என்றார் காண்ஸ்டபிள். அனையபோகும் பீடியை சாலையின் ஓரம் எறிந்தார் ஏட்டையா. வறண்டு போய், புதர் மண்டிக்கிடந்த குழாயடியில் படுத்துக்கொண்டிருந்த செவலை நாயொன்று விழித்துக்கொண்டு ‘கர்’ என்றது. இருவரின் லத்திகளையும் பார்த்து பின் வாங்கியது. அங்கிருந்த வேறு சில நாய்களும் தூங்கியிருக்கவில்லை. மேகமில்லாத வானத்தையே வெறித்துக்கொண்டு சோகமாய் படுத்துக்கிடந்தன.

அந்த தெருவின் கடைசிக் கூரை வீட்டின் முன் வந்து நின்றார் ஏட்டையா. அங்கொன்றும், இங்கொன்றுமாய் மனிதர்கள் வெளியே, அந்த குளிரிலும் படுத்துக்கிடந்தனர். தூரத்தில் ஊளையிடும் நாய்களின் ஓசையின்றி வேறு சத்தங்கள் இல்லை. வீட்டின் கூரைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. காண்ஸ்டபிள் இருமுறை கதவைத் தட்டிவிட்டு, பின் ‘செல்லம்மா’ என்று கூப்பிட்டார். கதவு சாத்திதான் வைக்கப்பட்டிருந்தது. பதில் இல்லாததால் மறுபடியும் ‘செல்லம்மா’ என்றார் காண்ஸ்டபிள், இந்த முறை கொஞ்சம் சத்தமாக. உள்ளே யாரோ எழுந்து உட்காரும் சத்தம் சன்னமாக கேட்டது, காண்ஸ்டபிள் தன் காலுக்கு கீழே உடைந்து கிடந்த மண்சட்டியையே வெறித்துக்கொண்டிருந்தார். சிதிலங்களில் மண் மட்டுமே அப்பிக்கிடந்தது. யாரோ மெதுவாக நடந்து வந்து கதவைத்திறந்தார்கள்.

மிகவும் ஒடிசலான நிறைமாத கர்பினி பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். சேலையால் முகத்தை துடைத்துக்கொண்டு, கண் விழித்து மிகவும் சிரமப்பட்டு பார்த்து, அடையாளம் கண்டுகொண்டபின் ,’ஐயா நீங்களா? என்னங்கையா இந்த நேரத்தில?’ ‘செல்லம்மா, உன் கிட்ட ஒரு விசயம் சொல்லனும், உன் புருஷன் மாணிக்கம் வீட்ல இருக்கானா?’ ‘ஆமாங்கையா வீட்ல தான் இருக்காரு. தூங்கிட்டு இருக்காருய்யா. இன்னைக்கு எங்கையும் போகல’ ‘ம்..ம்.. சரி. இன்னைக்கு அவன எங்கையும் போக வேணாமுன்னு சொல்லு. இன்னைக்கு கெடுபிடி அதிகம். சுட்டுத்தள்ள உத்தரவு வந்திருக்கு. அதையும் மீறி உன் புருஷன் போனான்னா, என்னால காப்பாத்த முடியாது. நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன். இனி உன்பாடு’

செல்லம்மா எதுவும் பேசாமல் ஏட்டையாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு மெதுவாக ‘சரிங்கைய்யா போகாம பார்த்துக்கிறேன்’ என்றாள். ‘எத்தனை மாசம்?’ ‘இன்னும் ஒருவாரத்தில ஆயிடும் போல இருக்குங்கய்யா’ என்றாள் பெரிதாக இருந்த வயிற்றைத் தடவிக்கொண்டே. ‘சரிம்மா நாங்க வாறோம்!’ ‘அண்ணே, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு…’ என்றவள் முடிக்காமல் தரையைப் பார்த்தாள். ஏட்டையா சிரித்துக் கொண்டு, காண்ஸ்டபிளோடு தெருவில் இறங்கி நடந்தார், கால் சட்டைப்பையைத் துலாவிக்கொண்டே.

செல்லம்மா வெகு நேரம் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே நின்றாள். பிள்ளை அழும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்தாள். சின்னவள் ராணி எழுந்து உட்கார்ந்து அழத்தொடங்கியிருந்தாள். பெரியவன் குமாரும், செந்திலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மாணிக்கம் சற்று தள்ளி படுத்திருந்தான். ‘என்னம்மா பசிக்குதா?’ ராணி ‘ம்..ம்..’ என்று தலையாட்டினாள். செல்லம்மா அவளை வாரி அனைத்து தூக்கிக் கொண்டாள். கண்ணத்திலும், நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டு, இடுப்பில் வைத்துக்கொண்டாள். மூலையில் இருந்த மண் பானையை துலாவி, கொஞ்சம் தண்ணீர் எடுத்து ராணிக்கு கொடுத்தாள். முதலில் மறுத்து தலையாட்டிய ராணி, பிறகு கொஞ்சம் குடித்து விட்டு, அம்மாவின் தோழில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

ராணியை மடியில் போட்டு தட்டிக்கொடுத்துக் கொண்டே, செல்லம்மா உட்கார்ந்திருந்தாள். ராணி தூங்கிவிட்டிருந்தாள். மண் சுவற்றில் முருகன் படம் தொங்கிக்கொண்டிருந்தது. செல்லம்மா கண்கொட்டாமல் முருகனையே வெறித்துக்கொண்டிருந்தாள். கண்ணீர் பெருகி வழிந்துகொண்டிருந்தது. மாணிக்கம் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

ராணியை தரையில் போட்டுவிட்டு தானும் படுத்துக்கொண்டாள் செல்லம்மா. ராணியின் அழகு முகத்தியே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென்று தூங்கிப்போனாள்.

சிறிது நேரம் கழித்து, மாணிக்கம் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். முருகன் அழகாக சிரித்துக்கொண்டிருந்தான்.

(தொடரும்)

ஆயிரம் கால் இலக்கியம் – 3

 

‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவத்தை புரிந்துகொள்ளக்கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.

அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’ அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கியவடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.

சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.

பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக்கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக்கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருப்போம்.

இவை ஏதும் சிறுகதைகள் அல்ல.

புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.

அது என்ன?

அதை கதையின் முடிப்பில் உள்ள ‘திருப்பம்’ என்றும் சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் ‘twist’ என்று சொல்கிறார்கள்.

அதாவது ஒரு சிறிய கதையை சிறு கதையாக ஆக்குவது திருப்பம்தான். ‘சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை’ என்று எளிமையாக வரையறை செய்யாலாம்.

-சிங்கப்பூரில் ஜெயமோகன் சிறுகதைப்பட்டறையில் பேசியது.

காக்கா வடை சுட்ட கதையை சமீபத்தில் கணையாழியில் படிக்க நேர்ந்தது. அதில் என்ன படிக்கவேண்டியதிருக்கிறது என்கிறீர்களா? அடுத்த பகுதியில் இதைப் பார்ப்போம்.

ஜெயமோகனின் நிறைய கதைகள் சுஜாதாவின் கதைகளைப் போல அதிரடித் திருப்பம் கொண்டிராது. ஆனால் ஒரு மெல்லிய திருப்பம் கண்டிப்பாக இருக்கும். சில சமயங்களில் அது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். சில சமையங்களில் மிக மெல்லிய மனஅதிர்வைக்கொடுக்கும். ‘ தேவகி சித்தியின் டைரி ‘ யைப் போல. ஜெயமோகன் சிறுகதைத் தொகுப்பை படிக்க எடுத்த பொழுது, கதை-பக்கம் (index) வரிசையில், தேவகி சித்தியின் டைரிதான் என் கண்களை சட்டென்று கவர்ந்தது. சித்தி டைரியில் என்ன எழுதியிருப்பார் என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்! ஆனால் பெரும்பாலும் இவ்வகையான வாக்கியத் தலைப்புகள், அதிலும் மர்மம் மிகுந்த தலைப்புகள், பலரது கவனத்தைக் கவரும். கௌதம் எழுதிய ‘ ஒரு நண்பனின் நிஜம் ‘ தலைப்பை போல.

தேவகி சித்தி ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாக்கப்பட்டு அவருகிறாள். அந்த குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு மகன்கள் உண்டு. தேவகிச் சித்தி இரண்டாம் மகனுக்கு மணமுடிக்கப்பட்டு அந்த வீட்டிற்கு வருகிறாள். தேவகி சித்தி பட்டணத்தில் படித்தவள். திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு சென்று கொண்டிருப்பவள். ஒரு பெண் சொந்தக்காலில் நிற்பது, இன்னொரு – சொந்த காலில் நிற்காத – பெண்ணிற்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை. இருவருமே அடிமைகளாக இருந்துவிட்டால் சந்தோஷம் தான்! அந்த வீட்டில் சும்மா இருக்கும் மூத்த மருமகளுக்கு தேவகிச் சித்தியைக் கண்டாலே பிடிப்பதில்லை. அதிலும் குறிப்பாக தேவகி சித்தி டைரி எழுதி வருவது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. சித்தி டைரி எழுதிக்கொண்டிருக்கிறாள் என்ற விசயத்தைக் கண்டுபிடிப்பது மூத்த மருமகளின் மூத்த மகன். முதல் பேரன்.

தேவகிச் சித்தி அந்த டைரியில் என்ன எழுதியிருப்பாள் என்று அனைவரின் – முதல் மருமகள், அப்பா (மாமனார்), அம்மா(மாமியார்) – தலையையும் குடைகிறது. அவள் இல்லாத நேரங்களில் அவள் அறையை சோதனை போடுகிறார்கள். டைரி கிடைக்கவில்லை. அன்று தேவகிச்சித்தி டைரியை பீரோவில் வைத்து பூட்டி சாவியை கைப்பையில் போட்டுக் கொண்டு போய் விடுகிறாள். டைரி கிடைக்காததைக் காட்டிலும் அவள் சாவியை கைப்பையில் போட்டுக்கொண்டு போனது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.

அன்று மாலை முதல் மகன் வந்தவுடன் முதல் மருமகள் டைரி பேச்சை எடுக்கிறாள். பிரச்சனை அலசப்படுகிறது. முதல்-மகன் முதலில் இது ஒரு பிரச்சனையா என்று நினைத்தவர், பிறகு அப்பா அம்மாவின் நிர்பந்தத்தால் தன் தம்பியை – தேவகி சித்தியின் கணவன் – அழைத்து விசாரனை செய்கிறார். தேவகிசித்தியின் கணவன் முதலில் இதை எப்படி அண்ணா அவளிடம் கேட்பது என்று தயங்கி பிறகு குடும்பத்தின் நிர்பந்தத்தால், தேவகியை அழைத்து டைரியைப் பற்றி கேட்கிறார். அவர் தேவகிசித்தியை ‘தேவு’ என்று அழைப்பது குறிப்பித்தக்கது.

தேவகிச்சித்தியும் டைரியை சபை முன்னர் எடுத்துக்காட்டுகிறாள். அப்பா (மாமனார்) அதை அனைவரின் முன்னால் வாசித்துக்க்காட்டச் சொல்கிறார். தேவகி பதறுகிறாள். வாசிக்கக் கூடாது என்று அடம் பண்ணுகிறாள். அது என்னுடையது. அதை யாருக்கும் காட்டமாட்டேன் என்கிறாள். மற்றவர்கள் – சித்தியின் கணவன் உட்பட – கோபம் அடைகின்றனர். ஒன்றும் இல்லையென்றால் வாசித்துக்காட்டவேணிடியது தானே. சித்தி சாமி மேல் சத்தியமாக அதில் ஒன்றும் இல்லை என்றும், வாசிக்கமட்டும் வேண்டாம் என்றும் சொல்கிறாள். முதல் மருமகள் அதற்குள் சித்தியிடமிருந்து லாவகமாக டைரியைப் பிடுங்கிவிடுகிறாள். தேவகி வெறி கொண்டார்போல ஓடிச்சென்று அவளிடமிருந்து பிடுங்கி, சமையலறைக்குள் சென்று கதவைச்சாத்திக்கொள்கிறாள். உள்ளிருந்து மண்ணென்ணெய் வாசனையும்,கருகிய வாசனையும் வருகிறது. அனைவரும் கலவரமடைந்து கதவைத்தட்டுகிறார்கள். சிறுது நேரத்திற்கு பின்னர் சித்தி மதுவாக கதவைத்திறந்து கொண்டு வெளியே வருகிறாள். டைரி எரிந்து சாம்பலாகக் கிடக்கிறது. தேவகியின் கணவர் கடுங்கோபத்திற்குள்ளாகிறார். தேவகியை கடுமையான வார்த்திகளால் திட்டுகிறார். அவளைக்கொண்டுபோய் அவளது தந்தையின் வீட்டில் விட்டு விடுகிறான். யார் யாரோ வந்து சமாதானம் செய்கின்றனர்.

இந்த கதையைச் சொல்லிக்கொண்டு வந்த கதை சொல்லி – முதல் பேரன் – இவ்வாறு முடிக்கிறான்:

தேவகிச்சித்தியை சித்தப்பா விவாகரத்து செய்துவிட்ட விசயம் அவர் மூன்று வருடம் கழித்து மறுமணம் செய்து கொண்ட பொழுது தான் தெரியவந்தது.”
கதை சொல்லியைப் போலவே, டைரியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது கடைசிவரை எனக்கும் தெரியாமலே போனது. மறுமுறை ஜெயமோகனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கேட்க வேண்டும். அவருக்கு மட்டும் தெரியுமா என்ன?

‘looking into ones diary is looking into ones bathroom’ என்று யாரோ சொன்னதாய் ஞாபகம். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் யார் கண்ணிலும் படாமல் வைத்திருக்கமுடியுமா என்ன? இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுதுதான் தமிழகத்தில் டைரி எழுதும் பழக்கம் எப்பொழுதிலிருந்து இருந்திருக்கிம் என்ற எண்ணம் தோன்றியது. மொழி எப்பொழுது எழுத்து வடிவம் பெற்றதோ அப்பொழுதிலிருந்து இருந்திருக்கவேண்டும். திருக்குறள் கூட திருவள்ளுவரின் டைரிக்குறிப்பாக இருக்கலாம். எனக்கு போன வருடம் வரை டைரி எழுதும் பழக்கம் இருந்தது. இப்பொழுது விட்டுவிட்டேன்.

சமீபத்தில் சுஜாதாவின் சிறுகதையொன்று குமுதத்திலே வெளிவந்திருந்தது. மிகவும் நன்றாக இருந்தது. கொடுத்த ஒரு டாலர் அந்த ஒரு கதைக்கே தகும்.

கதை சொல்லுபவர் அழுக்கு சட்டையும், அழுக்கு பேண்ட்டும், அறுந்த ரப்பர் செருப்புமாய் டோன்ட் கேர் பார்ட்டி. பீச்சில் உட்கார்ந்து புத்தகம் படிப்பது வாடிக்கை. அவர் தினமும் , ஒரு பணக்காரர் – தோரனையிலே தெரிகிறது, காரில் வந்து இறங்குவதும், டிரைவர் வந்து கதவைத்திறக்கும் வரையில் உள்ளேயே அமர்ந்திருப்பதுமே சொல்கிறது – வாக்கிங் வருவதைப் பார்க்கிறார். தினமும் ஒரே மாதிரியாக காரை விட்டு இறங்கி, ஒரே அளவு தூரம் நடந்து, ஒரே பெஞ்சில் உட்கார்வதே வழக்கம். ஒரு நாள் அவர் வாக்கிங்முடித்து விட்டு பெஞ்சில் வந்து உட்காரும் பொழுது நம்ம அறுந்த ரப்பர் செறுப்பு ( இனி அ.ர.செ) அதே பெஞ்சில் உட்கார்ந்து வெகு உன்னிப்பாய் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறது. செல்வந்தருக்கு மிகுந்த எரிச்சலாகப் போய்விடுகிறது. அ.ர.செ யின் தன்னுடன் பொருந்தாத தோற்றம் ‘உச்’ கொட்ட வைக்கிறது. ‘உச்’ கேட்ட அ.ர.செ பெஞ்ச் என்ன இவன் பாட்டன் சொத்தா என்று எங்கேயும் போகாமல் அங்கேயே உட்கார்ந்து கொள்கிறது. அன்று மட்டுமல்ல, அடுத்த நாளும் அதே பெஞ்சில் வேண்டுமென்றே வந்து உட்கார்ந்து கொள்கிறது. செல்வந்தர் அடுத்த பெஞ்சை ட்ரைப் பண்ணிப்பார்க்கிறார். அது கொஞ்சம் தூரமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். வேறு வழியில்லாம அதே பெஞ்சில் அ.ர.செ யுடன் உட்கார்ந்து கொள்கிறார். முதலில் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்ட செல்வந்தர், பிறகு புன்னகைக்க ஆரம்பிக்கிறார். அவர்களுக்குள் இனம்புரியாத நட்பு உருவாகிறது. அடுத்த சில நாட்களில் அ.ர.செ வரவில்லையென்றால், எங்கே இன்னும் காணோம் என்று தேடாஅரம்பித்துவிடுகிறார் செல்வந்தர்.

ஒரு நாள், செல்வந்தரும், அ.ர.செ யும் பெஞ்சில் உட்கார்ந்திருந்த பொழுது, மற்றொரு கார் வந்து நிற்கிறது. டிரைவர் இறங்கிவந்து ‘அம்மா பணம் கேட்டார்கள்’ என்கிறான். அதான் நிறைய கிரடிட்கார்டுகள் வைத்திருப்பார்களே. எங்கே தொலைத்தார்களாம் என்று நக்கலாக கேட்கிறார் செல்வந்தர். கிரடிட் கார்டு முடிந்து விட்டது என்றும் இப்பொழுது அம்மா 30,000 ரூபாய் கேட்கிறார்கள் என்கிறான். கோபமடைந்த செல்வந்தர் கொடுக்கமுடியாது போ என்கறு சொல்லி அனுப்பிவிடுகிறார்.

பிறகு அருகில் அமர்ந்திருக்கும் அ.ர.செயிடம் அந்த அம்மா தன் மனைவி என்றும் . தன் மனைவியும் மனனும் சரியான பணப்பேய்கள் என்றும் சொல்கிறார். அ.ர.செ. பணம் கேட்டால் குடுத்துவிடவேண்டியது தானே, உங்ளிடம் தான் நிறைய இருக்கிறதே என்கிறது. அவளாக வந்து கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன் என்கிறார் செல்வந்தர். பணம் ஒரு பிரச்சனையில்லை என்றும் தான்னிடம் நிறைய சொத்துக்கள் இருக்கின்றதென்றும், பினாமி பேரிலும் நிறைய சொத்துக்கள் இருக்கின்றதென்றும், எங்கெங்கே என்னெவென்ன இருக்கிறது என்ற விபரங்களையும் கூறுகிறார். சொத்தின் மேலேயே தன் மனைவிக்கும் மனனுக்கும் ஆசை என்றும் கூறுகிறார். அ.ர.செ, அப்படியென்றால், உங்க மகனையும், மனைவியையும் பழிவாங்க உங்க வரிப்பணத்தை கட்டிவிடுங்கள். உங்கள் பாதி சொத்துக்கள் குறைந்துவிடும். மனைவிவும், மகனும் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறது. கோபமடைந்த செல்வந்தர் அனைவரும் ஒழுங்காக வரி கட்டுகிறார்களா? நான் மட்டும் ஏன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வரியாக கட்ட்வேண்டும் என்றும் சொல்கிறார்.

கடலை வண்டி வருகிறது. அ.ர.செ. செல்வந்தருக்கு கடலை வாங்கிக்கொடுக்கிறது. முதலில் மறுத்த செல்வந்தர் பிறகு இதையும் எப்படியிருக்கிறதென்று பார்த்து விடுவோமே என்று வாங்கிகொண்டு, கடலைக்கு பணம் கொடுக்க 1000 ரூபாய் நோட்டை எடுக்கிறார். சிரித்துக்கொண்டே அ.ர.செ யே கடலைக்கு பணம் கொடுத்துவிடுகிறது. கடலை சாப்பிட்டுக்கொண்டே செல்வந்தர், உங்களுக்கு என்ன ஜாலிதான், பிக்கல் பிடுங்கல் இல்லாம இங்க வந்து புத்தகத்த தூக்கிவச்சுக்கிட்டு உட்கார்ந்திடுறீங்க என்கிறார். அதற்கு அரசெ, என் பாடு உங்களுக்கென்ன தெரியும்? நான் கவர்மெண்ட் வேலையில இருக்கிறவன். பாதி மாசத்திலே சம்பளம் தீர்ந்து போய் விடுகிறது. அதற்கப்புறம் பெண்டாட்டியிடம் தான் கேட்க வேணிடியிருக்கிறது என்றும் சொல்கிறது.

செல்வந்தர் கவர்மெண்ட் வேலையா என்று அறுந்த செருப்பையும், கிழிந்த சட்டையும் பார்த்துக்கொண்டே கேட்கிறார். அரசெ , நம்ப முடியலையா? அறுந்த செருப்பை பார்க்கறீங்களா? வேலைக்காக வேஷம் போடவேண்டியதிருக்கிறது. நான் சென்ட்ரல் போர்ட் எம்ப்ளாயி. இன்கம்டாக்ஸ் டிவிசனல் டைரக்டராக இருக்கிறேன். வருகிறேன், என்று சொல்லிக்கொண்டே எழுந்து செல்கிறது.

நீங்கள் இந்த முடிவை முன்கூட்டியே யூகித்திருந்தீர்கள் என்றால் அது முற்றிலும் என்னுடைய தவறே. சுஜாதா சற்றும் யூகத்திற்கு இடம் தராமல் கதையை நகர்த்திச் சென்றார்.

அதே வார விகடனில், நான் இரசித்த ஹி.ஹி.கூ.

தம்மடிச்சா கேன்சராம்
தண்ணியடிச்சா அல்சராம்
கூல்டிரிங்க்ஸ் பூராம்
பாய்ஸ்சனாம்
கொழாப்புட்டு தின்னுபுட்டு
குந்திக்கடா கோவிந்து

மற்றொரு கதை: இதை நான் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னர் படித்ததென்று நினைக்கிறேன். திடீரென்று இந்த நொடியில் தான் நினைவுக்கு வந்தது. குமுதத்தில் வந்தது.

ஆஸ்பத்திரியில் ஒருவர் மயக்க நிலையிலிருந்து கண் விழிக்கிறார். எழுந்தவர் தன் மனைவியையும் மகனையும் எங்கே என்று தேடுகிறார். நர்ஸ் இவர் கண்விழித்ததைப் பார்த்து, இதோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கிறேன் என்று சொல்லு சென்று விடுகிறாள். சரி என்று இவர், மேசையில் இருக்கும் வார இதழை எடுக்கிறார். அதில், இந்த படத்திற்கு அப்புறம் ரஜினி அரசியலில் குதிப்பாரா? வீரப்பனை பிடித்து விடுவோம் என்று அதிரடிப்படை சபதம். காவேரி பேச்சுவார்த்தைக்கு மந்திரிகள் டெல்லி பயணம் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கிறார்.

சிறிது நேரத்தில் அவர் மனைவி உள்ளே வருகிறாள். மனைவியைப்பார்த்தது மெலிந்து விட்டாள் என்று நினைத்துக்கொள்கிறார். அவள் பின்னாலேயே வாலிபன் ஒருவன் வருகிறான். அவனைப்பார்த்து சும்மா சிரித்துவிட்டு, ‘நம்ப பையன் சுகு எங்கம்மா?’ என்று தன் மனைவியைப்பார்த்து கேட்கிறார். மனைவி உடனே ‘இவன் தான் நம்ப பையன்’ என்று வாலிபனைக் காட்டுகிறாள். ‘நீங்க கோமாவுல இருந்த இந்த பத்து வருசத்தில தடிமாடு மாதிரி நல்லா வளர்ந்திட்டான்.’ என்கிறாள். அவர் அதிர்ந்து போய் வார இதழைப் பார்க்கிறார்.

இப்பொழுது, பத்து வருடங்களாகியும் செய்திகள் மாறாமல் இருக்கின்றன என்று சொல்லமுடியாதுதான். சரியா?

(தொடரும்)

கன்ட்ரோல்-ஆல்ட்டர்-டெலீட்

சோழ சாம்ராஜ்ஜியத்தின் பின்னனியில் புனையப்பட்ட நாவலில் – பொன்னியின் செல்வனாகட்டும் அல்லது உடையார் ஆகட்டும் – சோழப்பேரரசின் வலிமையும், பெருமையும், சிறுமை – இருக்குங்கால் – யும் அறியப்படும். குடும்ப வியாபரம் சம்பந்தமான நாவல்களில் வியாபாரமும், குடும்பத்தால் ஏற்படும் சிக்கல்களும், குடும்பத்தால் சிக்கல்கள் தீர்வதையும் காணலாம். துறவியர் சம்பந்தமான நாவல்களில் அவர்களது தன்னைப் புறக்கனித்தலை -self denial – அறிந்துகொள்ளலாம். துப்பறியும் நாவல்களில் சகட்டுமேனிக்கு திருப்பங்கள் – யூகிக்க முடிந்ததோ, யூகிக்க முடியாததோ – இருக்கலாம். மென்பொருள் சார்ந்த நாவல்களில் என்ன இருக்கலாம்? லன்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தாய்லாந்து, மசாஜ்பார்லர்கள் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட காதல்கள்??!!!

மூன்றுவிரல் நாவலைப் பற்றி நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழில் மென்பொருள் துறையை பின்புலமாக கொண்ட முதல் புனைவு நாவல் என்றும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். வாசிக்கும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிட்டியது. ஒரே மூச்சில் வாசித்துவிடும் நாவல் அல்ல இது. விடாமல் நம்மை படிக்கச்சொல்லும் மர்மங்கள் நிறைந்ததல்ல. முடிச்சுகள் இல்லை. ஆனால் கதாசிரியரின் பறந்து விரிந்த நகைச்சுவை திறன் இருக்கிறது. பல வாக்கியங்கள் பல அர்த்தங்கள் தொனிந்தவை : டபுள் மீனிங்?! – புதுமைப்பித்தன் இயல்பு நிலையைச் சொல்வதில் தவறில்லை என்றிருக்கிறார் – அவை சட்டென்று நம்மை மெல்லிய புன்னகை சிந்த வைப்பவை. ஒரு யூத் ·புல்லான நடை. சுஜாதாத்தனம். அது தான் நம்மை படிக்கத்தூண்டுகிறது. அதே சமயம், மென்பொருளை நிறைய சேர்க்காமல், அனைவரும் படிக்கவேண்டும் என்று நினைத்து எழுதியிருக்கிறார். ஹீரோ மென்பொருள் வல்லுநர். அவ்வளவே. கதையில் டெக்னிக்கல் சமாசாரம் ரொம்ப குறைவு. சிங்கில்டன் கிளாஸ் – singleton class – கிளையன்ட் சைன் ஆப், யூ.எம்.எல், புரபோசல் என்று ஆங்காங்கே நம்ப மேட்டர்.

என்னை மறந்து சிரித்த இடம் :
நம்ப ஹீரோ லண்டன் வந்து ஒருவாரம் ஆகிவிட்டது:

வந்த ஒரு வாரத்தில் தெருவோர முத்தம், ரயிலுக்குக் காத்துக் கொண்டிருக்கும்போது முத்தம், ரயில்பெட்டி முத்தம், டாக்சிக்குள் முத்தம், டெலிபோன் கூண்டுக்குள் முத்தம், கே.எப்.சி. யில் கோழிக்கறி சேர்த்த பர்கருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு குறுந்தாடி முதலாளி சிலையின் மேல் சாய்ந்தபடிக்கு அவசர முத்தம் என்று சகலமான உதட்டு ஒத்தடங்களையும் பார்த்து இச்சென்று சத்தம் எங்கேயாவது கேட்டால் போய்யா புண்ணாக்கு என்று வேலையைத் தொடரப்பழகிபோயிருந்த சுதர்சனுக்கு…..

நீங்கள் சிரிக்கவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்?. பெரும்பாலும், வெளிநாட்டுக்கு செல்லும் எல்லா இளைஞர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மற்றொரு இயல்பான நகைச்சுவை,

கண்ணாத்தா சுதர்சனின் டீம் மெம்பர்.
கண்ணாத்தா அவனுக்கு முன்னால் ஒரு கத்தைக் காகிதத்தை பரப்பிக்கொண்டு உட்கார்ந்தாள்.

‘சுதர்சன் உனக்கு கல்யாணமா? எப்போ?’

‘நீ ஒரு தப்பும் இல்லாம கோட் எப்ப எழுதறியோ அதுக்கு அடுத்த நாள்’

‘இந்த ஜென்மம் முழுக்க நீ பிரம்மச்சாரியா இருக்க வேண்டியதுதான்’

எச்சரிக்கை : கதை மற்றும் முடிவும் சொல்லியிருக்கிறேன்.

லண்டன் செல்லும் -மென் பொருளை கொடுத்துவிட்டு, க்ளையன்டிடம் கையழுத்து வாங்கி வரவேண்டும் -நம்மூர் மென்பொருள் வல்லுநர், சுதர்சன், அங்கே ஒரு பெண்ணை -சந்தியா -பார்த்து, பார்த்தவுடன் லவ்வத்தொடங்குகிறார். அவளும் லண்டனின் செயர்கைத்தனம் மற்றும் அம்மா, வளர்ப்பு அப்பாவின் நிராகரிப்பால், இவனைக்கண்டவுடன் ஒட்டிக்கொள்கிறார். அவள் இந்தியா வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.அவளும் நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையிலிருப்பவள் தான்.

தற்செயலாக விமானத்தில் உடன்பயனிக்கும் நண்பர் ஒருவர், தான் ஆரம்பிக்கபோகும் புது மென்பொருள் அலுவலகத்திற்கு சுதர்சனை அழைக்க, சுதர்சனும் ஒத்துக்கொள்கிறார். சந்தியாவுக்கும் அதே அலுவலகத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. சுதர்சன் இந்தியா திரும்பியிருக்கையில், அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு சொந்தத்திலே ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளும் வீட்டில் வளைய வருகிறாள். சுதர்சனை அவளுக்கு நிறைய -லிப் கிஸ் அடிக்கும் அளவிற்கு – பிடிக்கிறது. சுதர்சனுக்கும் தான். ஆனால் சந்தியா வேறு மனசாட்சியாய் பயமுறுத்துகிறாள். தலைக்கு மேல் முட்டை பல்பாயிருந்து மிரட்டுகிறாள். சுதர்சன் சந்தியாவைப்பற்றி சொல்லாமலே தாய்லாந்து கிளம்புகிறான். சந்தியாவும் தாய்லாந்து வரவேண்டும் என்பது ஏற்பாடு.

தாய்லாந்தில் புராஜெக்ட் மென்னியைப்பிடிக்கிறது. வீட்டில் பார்த்தபெண்ணிற்கு இவன் சரியாக பதில் சொல்லாமல் நழுவுவதை அறிந்து; அவள் தீர்மானமாய் கேட்கிறாள். அவளிடம் சந்தியாவைப்பற்றி சொல்லிவிடுகிறான். அவள் அழுகிறாள். பிறகு இன்னொரு மென்பொருள் வல்லுநருக்கு மணமுடிக்கப்பட்டு அமெரிக்கா செல்கிறாள்.

சுதர்ஷன் டீம் லீடராக இருக்கிறான். சுதர்சனின் டீமில் கண்ணாத்தா என்றொரு பெண் இருக்கிறாள். இருவரும் நண்பர்களாகப் பழகுகின்றனர். கண்ணாத்தா அறிமுகம் செய்யப்படும் பொழுதே நமக்கு -எனக்கு- சுதர்சன் இவளைத்தான் மணமுடிக்கப் போகிறான் என்று தெரிந்துவிடுகிறது. தாய்லாந்து வருவதற்கு முன் சந்தியா வேலை நிமித்தமாக அமெரிக்கா போக வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அங்கே world trade center தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலியாகிறாள். இந்த ஒரு இடம் மட்டுமே யாரும் எதிர்பாறாதது. மிக மெல்லிய ஆனால் அதிர்வைத்தரும் ஷாக். நன்றாக இணைத்திருக்கிறார்.

சில நாட்கள் பித்து பிடித்தார்போல் திரியும் சுதர்ஷன், பிறகு வீட்டிற்கு சொல்லாமல் கண்ணாத்தாவைக் கரம் பிடிக்கிறான்.

அமெரிக்காவுக்கு செல்கிறான். மறுபடியும் புரோகிராமராக. முடிவு தான் எனக்கு பிடிக்கவில்லை.

புரோகிராமராக சென்றவன் சிறிது நாட்களில் வேலை இழக்கிறான். மேலும் பல நாட்கள் வேலைக்கு மனு போடுகிறான். வேலை கிடைத்தபாடில்லை. பிறகு ஒரு நாள் தனக்கு வீட்டில் பார்த்த பெண்ணை பார்க்கிறான். அவள் ரெஸ்டாரெண்ட் ஒன்று வைத்திருக்கிறாள். அவளுடைய ரெஸ்டாரெண்டில் சாம்பார் ஊற்றிக்கொண்டு காலத்தை கழிக்கிறான்.
கன்ட்ரோல் – ஆல்ட் – டெலீட் போட்டு வாழ்க்கையை முதலிலிருந்து தொடங்கலாம் என்ற கனவோடு.

ctrl-alt-del : மூன்று விரல்.

கரு: [இதுவாகத்தான் இருக்கவேண்டும்]
வாழ்க்கை நிற்காது. அவ்வப்போது சண்டித்தனம் செய்யும்.
கன்ட்ரோல்-ஆல்ட்டர்-டெலீட்.
திரும்ப இயக்கம்.
ஏதேதோ இழந்து போயிருக்கலாம். ஆனால் என்ன? முதலில் இருந்து தொடங்கவேண்டியது தான்.

ஜாலியாக படிக்கலாம். இளமையாக இருக்கிறது.

புத்தக விபரம்:
பெயர் : மூன்று விரல்
ஆசிரியர் : இரா. முருகன்
வெளியீடு : சபரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 145

குப்பையைக் கிளறுவது கோழியல்ல

திருப்பூர் நண்பர் ஒருவர் சொன்ன தகவல் ஒன்று அதிர்ச்சியாக இருந்தது. “கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மூடப்பட்ட பல ஆலைகள் திறக்கப்பட்டு, இப்போது ஜரூராக நடந்துகொண்டு இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான சிறுமிகளைக் கொண்டுவந்து பணியில் அமர்த்தியுள்ளார்கள். மூன்று வருட ஒப்பந்தம். மிகவும் மோசமான உணவோடு, அடிப்படை வசதிகூட இல்லாத இடங்களில் அந்தக் குழந்தைகள் தங்கவைக்கப்படுகிறார்கள். தவிர, அந்த மூன்று வருடமும் அந்தச் சிறுமிகள், ஆலைக்கு வெளியே எங்கும் செல்ல முடியாது. இந்த மூன்று வருடச் சிறை வாழ்க்கை முடிந்து, அவர்கள் வீட்டுக்குப் போகும்போது, கையில் 30,000 ரூபாயும், திருமணம் செய்துகொள்ளத் தாலியும் கொடுக்கிறார்கள். இந்த நவீன குழந்தைக் கொத்தடிமைத் தொழிலுக்கு ‘சுமங்கலி’ என்று பெயரும் வைத்துள்ளார்கள் ” என்று வேதனையோடு குறிப்பிட்டார் அந்த நண்பர்.

“தல வாரிப் பொட்டுவெச்சு பள்ளிக்கூடம் போக நின்னேன்
மல போல தட வந்தது. ஏ…அம்மாவே தட மேல தட சொன்னது…”
பள்ளிக்கூடம் செல்ல முடியாத ஒரு குழந்தையின் ஏக்கம் தொக்கி நிற்கிற இந்தப் பாடல் வரிகள் மனதைப் பிசைகின்றன.

சாலைகளின் ஓரத்தில் நடந்து செல்லும்போதோ, ஓட்டலில் சாப்பிடும் போதோ, உறவினரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகும்போதோ, சிக்னலுக்காக வாகனத்தில் காத்திருக்கும்போதோ நீங்கள் கவனித்திருக்கலாம்..கலையாத கனவுகளோடும், தீராத ஏக்கங்களோடும், இளம் வயதுக்கே உரிய சந்தோஷத்தைத் தொலைத்துவிட்ட விழிகளோடும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புச் சுமையோடும் ஜீவனற்று நடமாடிக்கொண்டு இருக்கும் பலப் பல குழந்தைகளை.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், வேலைக்கு அமர்த்தப்படுகிற 14 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைத் தொழிலாளர்கள்தான். பஞ்சு ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் என்று அந்த எந்த ஒரு அபாயகரமான தொழில்கள் எவை எவை என்பதை இன்னும் நம்முடைய சட்டங்கள் வரையறுத்துச் சொல்லவில்லை. அதனால் விதவிதமாக அரசாங்கத்தை ஏமாற்றிக் குழந்தைகளைத் தொழிலில் அமர்த்தும் கொடுமை நடந்துகொண்டு இருக்கிறது.

விடுதிகள், உணவகங்களில் மட்டுமல்ல வீட்டு வேலைக்குக்கூடச் சிறுவர்களை அமர்த்துவது குற்றம்தான்.

இந்தியாவில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.சி.மேத்தா ஒரு தீர்ப்பில் ‘குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது தெரிந்தால், அமர்த்தியவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 20,000 ரூபாய் அபராதம் வாங்கி, அரசாங்கமும் இன்னொரு 20,000 ரூபாய் போட்டு, அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்படி வேலை கொடுக்க முடியாவிட்டால், இன்னும் 5,000 ரூபாய் போட்டு, 18-வயது வரை அந்தக் குழந்தைக்கு உதவ வேண்டும்’ என்று ஒரு டிரஸ்ட் துவங்கச் சொன்னார். அது என்ன ஆயிற்று என இன்று வரை யாருக்கும் தெரியாது.

20.8.06 விகடன் இதழிலிருந்து.

சுஜாதா குறிப்பிட்ட கவிதை ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது,

குப்பையைக்
கிளறுவது கோழியல்ல
கோணிப்பையுடன் சிறுவன்.

தீர்வு?

நான் சென்னையில் இருக்கும் பொழுது நான் மற்றும் எனது நண்பர்கள் அசோக், நவநீதன், சிவா, கெம்பு மற்றும் எனது அலுவலக நண்பர்கள் சிலர் சேர்ந்து ஸ்பீட் என்ற ஒரு அமைப்பு தொடங்கினோம்.
SPEED – Society for Poverty Eradication and Educational Development. நாங்கள் ரெஜிஸ்டர் செய்யவில்லை. ஆனால் மாதா மாதம் உறுப்பினர்கள் அனைவரும் கொஞ்சம் பணம் போடுவோம். மே மாத இறுதியில் அந்த பணத்தை மொத்தமாக திரட்டி படிப்பதற்கு பணமில்லாத குழந்தைகளுக்கு உதவியிருக்கிறோம்.

இரண்டு வருடம் மட்டுமே ஒழுங்காக செயல்படுத்தினோம். அடுத்து அவரவருக்கு அவர் அவர் கஷ்டங்கள், வேலைகள் மற்றும் டி.வி.டி கள்.

நான் இதை செய்து கொண்டிருப்பதை அறிந்து (நான் சொல்லாமலே) எனது CTO என்னை அவர் அறைக்கு அழைத்து, உடனடியாக ரூ.1000 கொடுத்தார். எனது சக அலுவலர் நான் இந்த திட்டத்தை விளக்கிக்கொண்டிருக்கையில், சட்டென்று நல்ல திட்டம் முத்து, இந்தா என்னுடைய இந்த மாத கட்டணம் என்று ரூ. 100 எடுத்துக்கொடுத்தார்.

மக்கள் என்றைக்குமே உதவுவதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள். தங்களால் முடிந்தவரை உடவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கினைத்து – தண்ணீருக்கு அணை போல – செயல்படுத்தத் தான் முடியவில்லை. [இதுவும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை]

சரி. குழந்தை படிப்பதற்கு பணம் கட்டியாகிவிட்டது. அவர்களின் தலையில் இருக்கும் குடும்ப பாரத்தை எப்படி இறக்கிவைப்பது? அடுத்தகட்ட பிரச்சனையும் இருக்கிறது.

அரசாங்கத்திற்கு மட்டும் தான் அக்கறை வேண்டுமா? குழந்தைகளின் மீதான நமது அக்கறை அவ்வளவுதானா?

ரோடெங்கும் நயாகராக்கள்

எண்ணம் எனது : ஆகாசம் பதிவை படித்தேன். அதன் தொடர்ச்சியாக!!

(ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால் கவிதைதானே? பார்த்திபன் கூட ஒரு படத்திலே சொல்லுவார். )

ரோடெங்கும் நயாகராக்கள்:

பெய்யென பெய்யுமா
மழை?
திறந்திடு என்றால்
திறக்குமா அணை?

மழை பொய்க்கும்
ஆச்சரியமில்லை.
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு பெய்யும்
மழை
நல்லார் : மரம்?

சென்னை முழுதும்
நல்லார்கள் – சில
நாட்களுக்கு மட்டும்!
நல்லார் பலர் உளரேல்
வேண்டாமெனினும்
வற்றாமல் தேங்கும்
மழை

மழையின் வீடுகளை
ஆக்கிரமித்தோம்.
நம் வீடுகளை
மழை ஆக்கிரமித்தது.
இலாபமில்லை
இருவருக்கும்!

ஏரி தெருக்கள்
எருமை கார்கள்
முதலை மனிதர்கள்

ரோடெங்கும் நயாகராக்கள்!

மழை. தெருவிலே கிடக்கிறது.
அதற்கு அப்பார்ட்மெண்ட்
பழக்கமில்லை.
லிப்ட் ஏறத்தெரியாது.

**

த்ராயிருப்பில்
வருடந்தோரும்
வெள்ளம்.
தே. கள்ளுப்பட்டியில்
வருடந்தோரும்
வரட்சி.

நீர் சேகரிப்பா?
கலர் டீவியா?
ஏரியில் ‘செல்வி’
தெரியுமா?
எட்டிப்பார். தெரியும்.

நதி நீர் இணைப்பு?
(உண்ணாவிரதமா?
இந்தமுறையும்
கூட்டம் வருமா?)
கனவு இன்·பினிடி.
1 கோடி / 0.

மின்சாரம் தருகிறோம்.
அனு சக்தி தயாரிக்கிறோம்.
விளைவுகள் எங்களுக்கு.
பயன் எல்லோருக்கும்.
மந்திரிகளும் தருகிறோம்.
கண்ணீரும் தருகிறோம்
பண்டமாற்று முறையில்
தண்ணீர் தாருங்கள்.

**

ஞ்சி நிற்பது
கூல் சட்டிகளும்
விவசாயிகளின்
கண்ணீரும் தான்.
கண்ணீர் சேமிப்புத்திட்டம்
ஒன்றை அறிவியுங்கள்.
சேமிக்காதவர்களுக்கு
அபராதம் நிச்சயம்.
சேமித்தவர்களுக்கு?
கண்ணீரில்
பயிர் விளையுமா?
நெல் உப்புகரிக்குமா?

கையேந்துகிறார்கள்.
கண்ணீர் சிந்துகிறார்கள்.
போராட்டம் நடத்துகிறார்கள்.
உண்ணாவிரதம் ஷ்பெசல்.
நேரடி ஒளிபரப்பு.
விவசாயிகளின் துயரம்?
யாருக்குவேணும்.
ப்ரைம்டைமில் இடமில்லை.
(பிறகு கோழி வெடக்கோழி
எப்போ போடுவதாம்?)

**

ணை திறக்குமா?
தன்னலம் அனைவருக்கும்
பொது.

நாம்
குழாயடி சண்டைகளை
நிறுத்தியிருக்கிறோமா?

**

செம்மறியாடுகள் கத்திக்கொண்டிருக்கவில்லை.

சல்மான் ருஷ்டியின் த க்ரௌண்ட் பினீத் ஹெர் ·பீட் என்ற நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் பொழுது மிகவும் ரசிக்கத்தக்க வாக்கியங்களை படிக்க நேர்ந்தது. அதை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்ற விபரீத எண்ணம் தோன்றவே, நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள். ஆங்கில வெர்ஷன் இங்கே இருக்கிறது. சில வாக்கியங்களை நீக்கியதற்கு மன்னிக்கவும். சில அர்த்தங்களையும் மாற்றியிருக்கிறேன்.

சில வியாதிகள் பல பெரிய மனித சமுதாயங்களை சீரழிக்கின்றன, பின்னாளில் அத்தகைய வியாதிகள் முன்னெப்பொழுதும் இருந்திருக்கவில்லை என்பதை உணர்கிறோம். ஆண்களும் பெண்களும் தாம் சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட நினைவுகளை திரும்பப்பெருகின்றனர். ஐயோ, இல்லை, அவர்கள் திரும்பப்பெறவில்லை. அவர்கள் தங்கள் பெற்றோர்களை மிகவும் அன்பு செலுத்துபவர்களாகவும், பெற்றோர்களே இவ்வுலகில் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள் என்றும் நினைத்துக்கொள்கின்றனர். மிகப்பெரிய அளவில் சமுதாய படுகொலைகள் நடைபெறுகின்றன. இல்லை நடைபெறவேயில்லை. அனு கழிவுகள் கண்டங்களின் பெறும் பகுதிகளை மாசுபடுத்துகின்றன. அசுத்தமாக்குகின்றன. சுற்றுச்சூழலைக்கெடுக்கின்றன. நாம் “பாதி-உயிர்” கோட்பாட்டை அறிந்துகொள்கிறோம். ஆனால் ஒரே நொடியில் சட்டென்று அனைத்து அசுத்தங்களும் மறைகின்றன. சுற்றுச்சூழல் முன்னெப்போதும் போல சுத்தமாகவே இருக்கிறது. இப்பொழுது செம்மறியாடுகள் கத்திக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் சந்தோஷமாக செம்மறியாட்டின் தொடைக்கறியை சப்புக்கொட்டி சாப்பிடுங்கள்.

பூலோக வரைபடங்கள் தவறாக இருக்கின்றன. எல்லைக்கோடுகள் பிரச்சனைக்குள்ளான தேசங்களில் ஒரு பாம்பைப் போல நெளிந்து கொண்டும், வளைந்து கொண்டும் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. பாதைகள், தாம் நேற்று வரை சென்றுகொண்டிருந்த இடங்களுக்கு இனி எப்போதும் செல்லப்போவதில்லை. ஒரு ஏரி திடீரென்று காணாமல் போகிறது. மலைகள் சிகரங்களாகின்றன. பிறகு மறுபடியும் குன்றுகளாகின்றன. மிகவும் புகழ்பெற்ற புத்தகங்கள் யாரும் எதிர்பாறாத முடிவுகளைப் அடைகின்றன. கருப்பு-வெள்ளை திரைப்படங்களிலிருந்து வானவில்லாய் வண்ணங்கள் வெடித்துச் சிதறுகின்றன. கலை என்பது ஒரு பித்தலாட்டமே. ஏமாற்றுவேலையே. அதி நவீன புறத்தோற்றமே உண்மை. திடம். செத்துப்போனவர்கள் தர்மசங்கடத்துக்குள்ளாக்குகிறார்கள். எவருமே செத்துப்போகவில்லை.

நீங்கள் ஒரு விளையாட்டு ரசிகர். ஆனால் நீங்கள் ஒவ்வொருமுறை விளையாட்டை பார்க்கும்பொழுதும், விதிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஐ! உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. இல்லை உங்களுக்கு கிடைக்கவில்லை.அவள் ஜனாதிபதிக்கு பவுடர் அடித்துவிட்டாள். அவளுடைய கனவுகளில் அவள் பல மாயங்கள் செய்பவளாயிருந்தாள். நீங்கள் ஒரு காமக்கடவுள். நீங்கள் ஒரு காம அடிமை. அவள் சாகத்தான் வேண்டும். அவள் ஒரு மோசமான பெண். [சமாதனம் செய்ய முற்படாத உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை, சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறுபடும் ஒரு வித்தியாசமான பார்வையாகவும் இருக்கலாம்]. உங்களுக்கு கேன்சர் இல்லை. ஏப்ரல் ·பூல். ஆமாம். உங்களுக்கு கேன்சர் இருக்கிறது. நைஜிரியாவிலிருக்கும் அந்த நல்ல மனிதன் ஒரு கொலைகாரன். அல்ஜிரியாவிலிருக்கும் அந்த கொலைகாரன் ஒரு நல்ல மனிதன். அந்த பைத்தியகார கொலைகாரன் அமேரிக்காவின் மீது பற்றுள்ளவன். அந்த அமேரிக்க பைத்தியகாரன் கொலையின் மீது பற்றுள்ளவன். அங்கோரன் காடுகளில் செத்துக்கொண்டிருப்பது போல் பாட்டா? அல்லது வெறும் நோல் நாட்டா?

கீழே சொல்லபட்டிருப்பவையெல்லாம் உங்களுக்கு கேடுகளை விளைவிக்கக்கூடியவை: காமம், மிக உயரமான கட்டிடங்கள், சாக்லேட், உடற்பயிற்சியை புறக்கணித்தல்,சர்வாதிகாரம்,இனவெறி. இல்லை, எதிர்மாறாக இருக்கிறது. பிரம்மச்சரியம் மூளையை பாதிக்கும். மிக உயர்ந்த கட்டிடங்கள் நம்மை கடவுளுக்கு வெகு அருகில் கொண்டு செல்லும், ஒரு சாக்லேட் கட்டி ஒரு நாளைக்கு என்ற விகிதம், குழந்தைகளின் பாடம் படிக்கும் திறமையை முன்னேற்றுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சி கொல்லும். சர்வாதிகாரம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எனவே உங்கள் கலாச்சார-கட்டுபட்டி விதிகளை, யோசனைகளை என் சாம்ராஜ்ஜியத்திற்கு உள்ளே கொண்டுவராததற்கு மிக்க நன்றி. போய்வாருங்கள். பிறகு, இனவெறி. நாம் இதைப்பற்றி ரொம்பவும் பிரசங்கம் செய்ய வேண்டாம். ஒரு கடுமையான ஜமுக்காளத்திற்கு அடியே மக்கி மறைந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் வெட்ட வெளியே அப்பட்டமாக இருப்பது தான் நல்லது
இல்லையா?. அந்த தீவிரவாதி ஒரு மிதவாதி. அந்த உலகளாவிய உரிமை கலாச்சாரத்தை சார்ந்திருக்கிறது. இந்த பெண் கலாச்சாரத்தை சார்ந்து சந்தோஷமாக இருக்கிறாள்.படங்கள் பொய் சொல்லாது. இந்த பிம்பம் பொய்யானது. போலியானது. பத்திரிக்கையை சுதந்திரமாக்குங்கள். மூக்கை நுழைக்கும் பத்திரிக்கையாளர்களை தடை செய்யுங்கள். நவீனம் செத்துவிட்டது. கௌவ்ரவம் மடிந்துவிட்டது. ஹையா, இவையெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நம்மை பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்த நட்சத்திரம் வளர்கிறது. இல்லை அவள் தேய்கிறாள். விழுகிறாள். நாம் ஒன்பது மணிக்கு சாப்பிட்டோம். நாம் எட்டு மணிக்கு சாப்பிட்டோம். நீங்கள் நேரத்திற்கு வந்தீர்கள். இல்லை. நீங்கள் தாமதாமாக வந்தீர்கள்.கிழக்கு தான் மேற்கு. உயர்வு தான் தாழ்வு. ஆம் தான் இல்லை. உள்ளே தான் வெளியே. உண்மைகளெல்லாம் பொய்கள். வெறுப்புதான் காதல். அன்பு. இரண்டும் இரண்டும் சேர்ந்து ஐந்தைக் கொடுக்கிறது. எல்லாம் நன்மைக்கே, இந்த மிக நல்லதாக இருக்ககூடிய உலகத்தில்.

இசை நம்மையும், நம் காதலையும் காப்பாற்றும்.

Translated from Salman Rushdie’s The Ground Beneath Her Feet.

ஆயிரம் கால் இலக்கியம் – 2

 

கோணங்கி பக்கங்கள் என்ற ஒரு தொடர் இப்பொழுது குமுதத்தில் வந்துகொண்டிருக்கிறது. நான் இப்பொழுதெல்லாம் குமுதம் காசு கொடுத்து வாங்குவதில்லை. வலையிலே படித்துவிடுகிறேன். மேலும் காசு கொடுத்து வாங்குவதற்கு அதில் ஏதேனும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை – நமீதாவின் படங்களைத்தவிர. ஆனாலும் என்னுடன் தங்கியிருக்கும் நண்பர் ஒருவர் அவ்வப்பொழுது குமுதம் வாங்கிவருவார். அப்பொழுது தான் சாருநிவேதிதாவின் இலக்கியத்தொண்டு பற்றி அறிந்துகொள்ள நேர்ந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்னால் சாருநிவேதிதா – கோணல் பக்கத்தில் – சென்னையில் எந்த எந்த பார்களில் – பைவ் ஸ்டார், திரி ஸ்டார் – உற்சாகபாணம் எவ்வளவு விலை என்பதை ஆராய்ச்சி செய்து தொகுத்து வழங்கியிருந்தார். (பி.ஹச்.டி செய்யப்போகிறார் என்றும் கேள்வி. டாக்டர் பட்டம் கூட கிடைக்கலாம்) யாரும் படிக்காமல் விட்டுவிடக்கூடும் – யாரும் இந்த அற்புத தகவலால் பயன் பெறாமல் போய்விடுவார்கள் – என்று நினைத்து , விலைப்பட்டியலை நன்றாக கட்டம் கட்டி இருந்தார்கள். அடுத்தவாரம் அவர் ரஜினிகாந்தோடு தண்ணியடித்த விசயத்தையும் – பல ஆண்டு காலம் ஆகியும் -மறக்காமல் சொல்லியிருந்தார். ரஜினியின் ஆரம்பகால தண்ணியடிக்கும் முறை நமக்கு இதன் மூலம் தெரியவந்தது பாக்கியமே. விலைமதிப்பில்லாத தகவல் அல்லவா இது. போனஸாக ரஜினி தற்பொழுது தண்ணயடிப்பதில்லை என்று தன் நண்பர் ஒருவர் – அவர் ரஜினிக்கும் நண்பர்- சொன்னதாக சொல்லியிருந்தார். அதற்கப்புறம் கோணங்கி பக்கங்களை படிக்கும் வாய்ப்பு -பாக்கியம்- எனக்கு இன்று வரை கிடைக்கவில்லை. ஆனால் நண்பர்கள் பலர், சாருநிவேதிதா, இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமானவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது ஒரு படைப்பையும் நான் படிக்காதது எனது துரதிர்ஷ்டமே.

இந்தவார குமுதத்தில் – சும்மா விளையாட்டுக்காக – எண்ணியதில் மொத்தம் 57 பெண்கள் – நடிகைகள் – படங்கள். பல செய்திகளில் – செய்தி? – நடிகைகளின் படங்கள், அங்கே இடம்பெற்றிருக்கும் செய்திக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை. பாய்ஸ் திரைப்படத்தில், விவேக் கேட்கும் கேள்வி எனக்கு ஞாபகத்திற்கு வந்தது : “பம்ப் செட் விளம்பரத்திற்கு ரம்பா தேவையா?’

இரண்டு குமிழிகள்
இணையும் தருணத்தில்
காணாமல் போகின்றன
இரண்டுமே..
மலர்கிறது ஒரு தாமரை

அதற்காக இவ்வாறான புரியாத கவிதைகளைத்தான் போடவேண்டும் என்றில்லை. சில பயனுள்ள தகவல்களையும் சொல்லலாம் : பரத் – ஜெனிலீயா காதலா? என்பதைப் போல.
(விசயம் தெரியாதவர்கள் சென்றவார விகடன் படிக்கவும்)

எனக்கு விகடன், குமுதத்தில் வரும் சிறு கதைகள் மிகவும் பிடிக்கும். அவை ஒரு வித்தியாசமான – நாம் எதிர்பார்க்காத – முடிவைக் கொண்டிருக்கும் காரணத்தால் கூட இருக்கலாம். சில சமையங்களில் கதை படிக்கும்பொழுதே – முடிவை யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். ஆனால் பல சமையங்களில் அந்த முடிவு நான் நினைத்திருந்த முடிவாக இருக்காது. வெகு நாட்கள் – கி. ராஜநாரயணனின் சிறுகதை தொகுப்பை – படிக்கும் வரையில் நான் சிறுகதைகள் என்றால் யாரும் எதிர்பாராத முடிவோடு தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இவ்வாற கதைகளில் – நான் படித்த – கதைகளில் எனக்கு நீண்ட நாட்களாக நினைவில் இருக்கும் ஒரு சிறுகதை : குமுதத்தில் வந்ததென்று நினைக்கிறேன். தலைப்பு ஞாபகமில்லை. எழுதியவரும் ஞாபகமில்லை.

பி.எஸ்.சி முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல், டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து, தம் அடித்து கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருக்கிறார் நமது ஹீரோ. அவ்வாறு ஒரு நாள், தம் அடித்துக்கொண்டிருக்கும் பொழுது, பஸ்ஸில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறார். அவளால் ஈர்க்கப்பட்டு (இயற்கைதானே?) பஸ்ஸில் தொற்றிக்கொள்கிறார். அவள் இறங்கும்பொழுது அவளுடனே இறங்கி அவள் பின்னாலேயே செல்கிறார், வீட்டைக்கண்டுபிடிக்கிறார்(ன்). அப்புறம் கொஞ்ச நாட்கள் அவள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கிறான். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத அந்த பெண், பிற்பாடு நம்ப ஹீரோவை லுக் விட ஆரம்பிக்கிறார்(ள்). அப்புறம் காதல் பற்றிக்கொள்கிறது. இருவரும் உருகி உருகி காதலிக்கின்றனர். அவளும் பி.எஸ்.சி படித்தவள்.

ஒரு நாள் திருச்சியில் இருவருக்கும் இண்டர்வியு வரவே இருவரும் பஸ்ஸில் திருச்சி பயணிக்கின்றனர். துவரங்குறிச்சி வரையிலும் தனித்தனியாக உட்கார்ந்திருந்து விட்டு, அதற்கப்புறம் சேர்ந்து உட்கார்ந்து கொள்கின்றனர். தமது திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் வருகின்றனர்.
இண்டர்வியூ முடிந்து, இருவரும் சினிமாவுக்குப் போகின்றனர். இண்டர்வியூவில் இருவரும் பாஸ் செய்திருக்கவில்லை. சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, தியேட்டரில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி வர, மக்கள் அனைவரும் பயந்தடித்துக்கொண்டு ஓடுகின்றனர். ஹீரோவும், ஹீரோயினும் கூட ஓட, ஹீரோயின் தடுமாறி கீழே விழுகிறாள், ஹீரோ தாங்கிப்பிடித்து விடுகிறார்(ஹீரோவாச்சே?).

மறுபடியும் திருச்சியிலிருந்து பஸ் பிடித்து, துவரங்குறிச்சி வரையிலும் ஒன்றாக அமர்ந்திருந்து, அ தற்கு பிறகு தனித்தனியாக அமர்ந்து சமர்த்தாக வீடு வந்து சேர்கின்றனர்.

ஹீரோ, இண்டர்வியூவில் பெயிலானதை நினைத்து (படம் முழுக்க பார்க்க இயலாததால்?) சோகத்துடன் தூங்கிவிடுகிறார்.

மறுநாள் காலை எழுகிறார். வீட்டிலிருக்கும் அண்ணன், அம்மா, அப்பா, தங்கை யாரும் தன்னுடன் பேச மறுப்பதை அறிகிறான். அம்மா கோபமாக வேறு இருக்கிறார். குழப்பத்துடன் அண்ணனைக் கேட்க, அவன் பதில் பேசாது, அன்றைய செய்தித்தாளை எடுத்துக்கொடுக்கிறான்.
ஹீரோ பேப்பரை பிரித்துப்பார்க்கிறான், அங்கே:

“திருச்சி தியேட்டரில் வெடிகுண்டு புரளி.
தடுக்கி விழுந்த காதலியை தாங்கிப்பிடித்த காதலன்”

என்று கொட்டையெழுத்தில் நம்ப ஹீரோ-ஹீரோயின் போட்டவோடு செய்தி வெளியாகியிருந்தது. அங்கே ஹீரோ ஹீரோயினை ஸ்டைலாக தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நாட்களுக்கு முன்னாள், சிங்கப்பூர் வந்திருந்த, ஜெயமோகன் அவர்களின் பேச்சை கேட்க – அல்லது சிறுகதை பட்டறைக்கு – போயிருந்தேன். அப்பொழுது சிறுகதையின் முக்கியமான ஒன்றாக அவர் குறிப்பிட்டது – சிறுகதையின் முடிவு. ஒரு சஸ்பென்ஸ். அவிழும் ஒரு முடிச்சு. பல சிறுகதைகளில் அதைப்பார்க்கலாம். ( சில படங்கள் கூட சிறுகதைகள் போன்ற ஒரு அதிபயங்கர முடிவோடு இருக்கும். அந்த முடிவுக்காகவே ஒவ்வொரு காட்சியும் காத்திருக்கும். அவ்வாறான ஒரு படம் : the sixth sense.)

இந்த வார விகடனில் கூட ஒரு நிமிடக் கதைகள் சில பிரசுரமாகியிருந்தன. அதில் ஒன்று:

“அம்மா! நல்லவர்னு இவ்ளோ நாளும் நம்பிக்கிட்டிருக்கியே உன் புருசன் அதுதான் என் அருமை அப்பா..அவரோட யோக்கியதை தெரியுமா உனக்கு?”

“என்னடி ஆர்த்தி சொல்ற?”

“அந்த அசிங்கத்தை ஏன் கேட்கிற? நேத்து நான் ஸ்கூல்ல இருந்து சீக்கிரமே வந்துட்டேன். போக்கிடமேயில்லாம பல வருசம் நம்ப வீட்லயே விழுந்து கிடக்கிறாளே நம்ப வீட்டு வேலைக்காரி கஸ்தூரி. அவளோடு நெருக்கமா..பெட்ரூம்ல உன் புருசன்..சே!”

“பதறாதே ஆர்த்தி. சுருக்கமா சொன்னா புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். இந்த வீட்ல வேலைக்காரியா வந்து சேர்ந்தது கஸ்தோரி இல்ல. நான் தான்”

நாலே நாலு வாக்கியம். ஒரு திருப்பம். ஒரு நிமிடம். ஒரு கதை. நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதை விட சுவையாக இருந்தது இந்த கார்ட்டூன்:

அப்புறம், கல்கியில் ஒருமுறை: நாடக தொனியில் ஒரு சிறுகதை பிரசுரமாகியிருந்தது. மிகுந்த நக்கலான – சுவையான, ஹாஸ்யமான – சிறுகதை அது. அதை பத்திரப்படுத்தி நீண்டகாலம் வைத்திருந்தேன். கதையின் பெயரும் எழுதியவரும் நினைவில் இல்லை.

அந்த சிறுகதையின் கரு இதுதான்:
நாம் வாழ்க்கையின் அனைத்து தருனங்களிலும் – அல்லது வாழ்க்கை முழுவதும் – ஏதோ ஒரு வரிசையில் -க்யூவில்- நின்று கொண்டிருக்கிறோம்.

செம நக்கல் பண்ணியிருந்தார் எழுதியவர். புரோமோசனுக்காக காத்திருக்கும் அலுவலர்களிடம், பாஸ்(boss) வந்து, ‘ம்..ம்.. எல்லோரும் எழுந்திருங்க. குதிங்க. யார் நன்றாக குதிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் புரோமசன்’ என்று கூறுவது உச்சகட்டம். மாட்டின் கண்ணில் எம்.ஜி.ஆர். தெரிகிறார் என்று க்யூ நிற்பதாகவும் ஏகத்துக்கும் கிண்டல் செய்திருப்பார்.

இந்தியாவில் எதற்கு க்யூவில் நின்றாலும் – பிள்ளையார் பால் குடிப்பதைப் பார்க்க க்யூவில் நின்றது எனக்கு நினைவிருக்கிறது – பஸ்ஸ¤க்கு க்யூவில் நிறக மாட்டோம். சென்னை பாஷையில் : ‘அச்சு புச்சு ஏறுடா’. சிங்கப்பூரில் பஸ்ஸ¤க்கு க்யூவில் நிற்க வேண்டியுள்ளது. இங்கே க்யூவிற்கா பஞ்சம். மதிய சாப்பாட்டிற்கும் க்யூவில் தான் நிற்க வேண்டும். நாம் வேண்டாமென்றாலும் சில அதி முக்கியமான – இன்னைக்கு சாம்பார் எடுக்கலாமா?பாவற்காய் எடுக்கலாமா? சிக்கன் எடுக்கலாமா? அதோ எந்த வகையிலும் சேராமல் இருக்கிறதே அந்த கூட்டு,அது என்ன? ம்..ம்…புடலங்காய் – வாக்குவாதங்களை கேட்க முடியும். பழக்கமாகிவிட்ட இந்த பழக்கம், இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மட்டும் – மிகவும் விசித்திரமாக இருக்கும். முதன் முதலில் சென்னை வந்து – என் அண்ணனுடன் – டி. நகர் சரவணபவனில் சாப்பிட சென்று, க்யூவில் நின்றது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

நான் பள்ளி படிக்கும் பொழுது – பதினோரம் வகுப்பு – தொண்டர் படை என்ற நாடகத்திற்கு இந்த -க்யூ- கருவைத்தான் எடுத்துக்கொண்டேன். என் நாடகத்தில் மக்கள் அனைவரும் ஒரே க்யூவில் நிற்பார்கள். ஆனால் வேறு வேறு காரணங்கள் சொல்லுவார்கள். வேலையில்லா திண்டாட்டத்தை, அரசுக்கு (சரத்குமார் இல்லை. அரசாங்கம்!) உணர்த்த (ஏதோ, அரசுக்கு இந்த விசயம் தெரியாமலே இருந்ததுபோல!) இளைஞர்கள் நகரின் நடுவே நீண்ட க்யூவில் நிற்பார்கள். அரசின் அடக்குமுறையால் அது புரட்சியாக மாறும். இப்படியாக காமடிக்கரு : கம்யூனிஸ்ட் கதையாக ஆனது. அந்த நாடகத்தில் விகடனில் வந்த கார்டூன் ஒன்று தான் மைய கதாப்பாத்திரம். விகடனில் வந்த ஜோக் அது. ஒரு வயதானவர் என் மகனைப் பார்த்தீங்களா? என் மகனைப் பார்த்தீங்களா? என்று கண்ணில் படும் நபர்களிடமெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பார். பொறுமையிழந்த ஒருவர், யாருயா இந்த ஆளோட மகன் என்று கேட்பார். அதற்கு இன்னொருவர், சும்மா இருய்யா. அந்த ஆளோட மகன் தான் இந்த ஊரு எம்.எல்.ஏ. என்பார்.

பிறகு ஒரு கதை: ஹீரோவும், அவனது தங்கையும், அவன் அம்மாவும் ஒரு குடும்பம். ஹீரோவின் பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி இருக்கிறார். பாட்டியின் வீட்டிற்கு, ஒரு அழகான பெண் விடுமுறையில் வருகிறார்.ஹீரோவின் தங்கையும், அந்த பெண்ணும் சிநேகிதிகளாகின்றனர். ஹீரோவின் நண்பர் கூட்டம் அவனை அந்த பெண்ணுடன் இணைத்து கேலி பேசுகின்றது. நாளடைவில் ஹீரோ, அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். அந்த பெண் நாளை ஊருக்கு செல்கிறது. இன்று ஹீரோ, தன் தங்கை, அம்மா, பாட்டி, அந்த பெண்ணுடனும் கோவிலுக்கு செல்கிறான். கோயிலின் ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு தேரின் இருளில், ஹீரோ தன் காதலை சொல்கிறான். குடும்பத்தில் அனைவரும் வந்து விட பதிலேதும் சொல்லாமல் அந்த பெண் சென்றுவிடுகிறாள்.

வருடங்கள் ஓடுகின்றன. ஹீரோ டெல்லியில் (ஆம். அப்பொழுதெல்லாம் அமெரிக்கா இவ்வளவு பேமசாக இல்லை.) நல்ல வேலையில் இருக்கின்றான். தங்கைக்கும் திருமணமாகிவிடுகிறது. திருவிழாவிற்கு ஊருக்கு வருகிறான். அந்த பெண்ணும் வந்திருக்கிறாள் தன் கணவனுடன். மறுநாள் கோவிலில், தனிமையில், அதே தேரின் இருளில் இருவரும் எதிர்பாராமல் (எதிர்பார்த்து?) சந்தித்துக்கொள்கின்றனர். அவள் ஒரு கனம் இவனை வெறித்துவிட்டு, “உனக்காக எத்தனை நாள் காத்திருந்தேன். நீ ஏன் வரவில்லை” என்கிறாள்.

(தொடரும்)

தேன்கூடு-போட்டி : தொலைவு

(சிறுகதை)

பிப்ரவரி 2 2003
கோடாங்கிபுரம்


கருப்பாயிதாயி, தனது முதுமையைப் பற்றி பெரிதும் அலடிக்கொள்ளவில்லை. அந்த சுட்டெரிக்கும் சூரியனையும் கண்டுகொள்ளவில்லை. சூரியன் தான் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து, மேலும் சூடானான். கருப்பாயி 50 வயதை தாண்டியவள், என்றாலும் இடைவிடாத உழைப்பு அவளை மேலும் மேலும் வலுவாக்கிக்கொண்டேயிருக்கிறது. மேலக்கோணார்புரத்திலிருந்து, மலேசியாவிலிருக்கும் தன் மகன் செல்லையாவின் குரலைக் கேட்க, இந்த வேகாத வெயிலில் தன் அண்ணன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கிறாள். மேலக்கோணார்புரத்தில் போன் வசதி கிடையாது. மலேசியாவிலிருக்கும் செல்லையா தன் மாமாவின் வீட்டிற்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பேசுவான். கருப்பாயி வாழ்க்கையில் எதைத் தவறவிடுகிறாளோ இல்லையோ, முதல் ஞாயிற்றுக்கிழமையை தவறவிட்டதில்லை. செல்லையாவும் தான்.

படி ஏறியவுடன், கருப்பாயி தன் அண்ணனிடம் செல்லையா இன்னும் போன் செய்திருக்கவில்லை என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள். மதனியிடம் ஒரு டம்பளர் மோர் வாங்கிக் குடித்துவிட்டு, கருமை நிறத்தில் சாந்தசொரூபியாய் அமர்ந்திருக்கும் டெலிபோனையே வெறித்துக்கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் மதியம் 12:00 மணிக்கு ‘டான்’ – டிரிங் – என்று போன் செய்துவிடுவான் செல்லையா. இன்று மணி மூன்றைத்தாண்டிக்கொண்டிருந்தது. மதனி சாப்பிட அழைத்ததும், ஒப்புக்கு ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் வந்து டெலிபோன் அருகில் அமர்ந்துகொண்டாள்.

மணி ஆறாகியது. மாலை ஏழாகியது. பக்கத்து வீட்டு முனியனைக் கூப்பிடச்சொல்லி, கெஞ்சிய ‘காலை’த் தவிற வேறு ஒரு ‘காலும்’ வரவில்லை.

‘ஏதாவது வேலையா இருந்திருப்பான்மா, கவலைப்படாதே’ என்று தேற்றிய அண்ணனுக்கு செவிசாய்க்கவில்லை.

இரவு தங்கிவிட்டு, காலை செல்லலாம் என்று வற்புறுத்திய அண்ணிக்கு, தாரணி வீட்டில் தனியாக இருப்பாள் என்ற காரணத்தைக் காட்டி, வெற்று மனதோடும், கனத்த மவுனத்தோடும் மறுபடியும், மேலக்கோணார்புரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், சோர்வோடு.

மார்ச் 2 2003
கோடாங்கிபுரம்.

மாலை மணி ஆறாகியும் செல்லையாவிடமிருந்து போன் வரவில்லை.

மார்ச் 6 2003
மேலக்கோணார்புரம்.

யாரோ அழைக்கும் சப்தம் கேட்டு தாரணி வீட்டு வாசலுக்கு வந்தாள். ‘ஆத்தா இல்லையா?’ ‘இல்ல. என்ன விசயம்?’ ‘உங்க அண்ணன் செல்லையா மலேசியாவிலேருந்து கூப்பிட்டிருந்தானாம். நல்லா இருக்கானாம். அடுத்த மாசம் மொதோ ஞாயிற்றுக் கிழமை கூப்பிடறேன்னு சொன்னானாம். கோடாங்கிபுரத்திலிருந்து ராமையா சொல்லி அனுப்பிச்சாரு’ என்று சொல்லிவிட்டு விறுவிறு வென்று நடந்து சென்றார், வந்தவர்.

ஏப்ரல் 6 2003
கோடாங்கிபுரம்.

கருப்பாயி, போனையே வெறித்துக்கொண்டிருந்தாள். ‘அட இங்கன வந்து உக்காரு தாயி, அவன் போன் பண்ணுவான்’ கூப்பிட்ட அண்ணனையும் கண்டுகொள்ளவில்லை.
மணி அடித்தது.

‘யாரு செல்லையாவா?’
‘ஆமாப்பா, ஆத்தாதேன் பேசுறேன். நல்லாயிருக்கியா ராசா?’
‘நான் நல்லாயிருக்கேஞ்சாமி. நீ நல்லாயிருக்கியாய்யா?’
‘சாப்பிட்டியா ராசா?’
‘நல்லா சாப்பிடனும் தம்பி. என்னய்யா சாப்ட?’
‘நல்லா கோழி கீழிய வாங்கி திங்கப்படாது?’
‘ஆத்தா நல்லாயிருக்கேன் ராசா. தாரணியும் நல்லாயிருக்கு. அவதேன் நெடு நெடுன்னு வளர்ந்து நிக்கிறா’
‘அத பாத்துக்கிடலாம்யா. நீ கவலைப்படாத!’
‘குரல் ஏன்யா ஒரு மாதிரி கரகரன்னு இருக்கு. உடம்புகிடம்புக்கு சரியில்லையா?’
‘உடம்ப பார்த்துக்க ராசா! தொலவட்டுல இருக்குற பய! எங்களப்பத்தி கவலப்படாத’
‘ஏன்யா? தம்பியா?’
‘தம்பி நல்லாயிருக்கான்யா. காலு இப்ப பரவாயில்ல!’
‘ஏதோ ஆபரேசன் பண்ணனும்னு சொன்னாங்கல்ல’
சரிப்பா’
‘சரிப்பா. கொண்டு போய் காமிக்கறேன்’
‘எனக்கு அனுப்பறது இருக்கட்டும். நீ உன் செலவுக்கு வெச்சுக்கையா.’
‘சரிப்பா. இருபதினாயிரமா. சரி ராசா’
‘உடம்ப பாத்துக்க ராசா’
‘தம்பி கிட்ட சொல்றேன். சரிப்பா’
‘தாரணி நல்லாயிருக்காப்பா’
‘வெச்சிடுறேன். நல்லா சாப்பிடு ராசா’

ஆகஸ்ட் 3 2003
கோடாங்கிபுரம்.

….
‘மழைக்கு வீடெல்லாம் ஒழுகிப்போச்சுப்பா. ராத்திரியெல்லாம் நின்னுகிட்டேயிருந்தோம்’
‘அதுகிடக்கட்டும்யா. பாத்துகிடலாம்’
‘ரொம்ப செல்வாகுமேய்யா’
‘கூரையப்பிரிச்சிட்டு ஓடுமட்டும் போட்டுக்குவோம்யா. சொன்னா கேளு ராசா. இழுத்துப்போட்டுக்கிடாத’
‘சரிப்பா’
‘நீ உன் செலவுக்கும் கொஞ்சம் வெச்சுக்கப்பா’
‘சரி ராசா’

நவம்பர் 2 2003
கோடாங்கிபுரம்.

‘டாக்டர் இன்னும் கொஞ்ச நாள்ல கால் சரியாயிடும்னு சொல்லியிருக்காருய்யா. மருந்து தொடர்ந்து சாப்பிடச் சொல்லியிருக்காரு’
‘ம்ம்..கொஞ்சம் கொஞ்சம் நடக்குறானய்யா’
‘ஓடு போட்டாச்சுப்பா’
‘ஏன்யா குரல் ஒரு மாதிரி இருக்கு. முன்ன மாதிரி கலகலன்னு பேசமாட்டேங்கிறியே?’
‘ஊரு புடிக்கலைன்னா வந்திடு ராசா’
‘சொல்லுய்யா. ஏன்யா பேசாம இருக்க?’
‘வாங்குன கடனையெல்லாம் நான் அடைக்கிறேன்யா. நீ எதுக்கு ராசா கவலைப்படுற?’
‘தாரணி நல்லாயிருக்காப்பா. அடுத்த தடவ கூட்டியாறேன்’

டிசம்பர் 7 2003
கோடாங்கிபுரம்

‘அண்ணே. எப்படிண்ணே இருக்க?’
‘நல்லாயிருக்கண்ணே. தம்பி நல்லாயிருக்காண்ணே’
‘கொஞ்சம் நடக்குறாண்ணே’
‘சாப்பிட்டேண்ணே. நீ என்ன சாப்பிட்ட?’
‘நல்லா சாப்பிடுண்ணே’
‘அழலண்ணே’
‘இல்லண்ணே அழலண்ணே’ (அழுகிறாள்)

‘ஏ கழுத! ஏன் அழுகுற?’ கருப்பாயி போனை மகளிடமிருந்து வாங்குகிறாள்.

‘கோணாருக்கு கொடுத்தாச்சுப்பா.’
‘ஆமாய்யா. இன்னும் 30 பாக்கி இருக்கு’
‘அது வந்துகிட்டேதான் இருக்கு. மசமசன்னு வளர்ந்து நிக்கறாளே’
‘30,40 பவுன் கேக்காறாங்கய்யா.’
‘நமக்கு சரிப்பட்டு வராதுய்யா’
‘வேணாம்யா. அகலக்காலு வெக்கவேணாம்’
‘கவர்மெண்ட் மாப்பிள்ளைதான் பாக்கனுமா. வேற ஏதாவது பாப்பம்யா’
‘நீ எஞ்சாமி கஷ்டப்படுற?’
‘சரிய்யா. உன் இஷ்டம்’
‘தாரணி இங்க வா.அண்ணன் கூப்பிடறான் பாரு’

மே 2 2004
கோடாங்கிபுரம்.

‘அண்ணே நீ வாண்ணே. நீ வந்தாத்தேன் நான் கல்யாணம் பண்ணுவேன்’
‘போண்ணே’
‘அழலண்ணே’
‘அழலண்ணே’ (அழுகிறாள்)

கருப்பாயி போனை வாங்குகிறாள்.
‘ஜூன் 14 முகூர்த்தம் வச்சிருக்குய்யா’
‘அவளுக்கு சந்தோசம் தான். புடிச்சிருக்கு புடிச்சிருக்கு’
‘கவர்மெண்ட் மாப்பிள்ளை, கசக்குதா என்ன?’
‘ஏஞ்சாமி ரொம்ப வேலையோ? ஒரெட்டு வந்திட்டுபோயேன்’
‘ஏன்யா. ஆமாய்யா’
‘அதான் அனுப்பிச்சிருக்கல்லய்யா?’
‘சரிய்யா’
‘உடம்ப பார்த்துக்கராசா’
‘உடம்புக்கு முடியல்லையா? குரல் ஏன் கரகரன்னு இருக்கு?’

டிசம்பர் 5 2004
கோடாங்கிபுரம்.

‘முடிச்சாச்சுய்யா. எல்லா கடனும் முடிச்சாச்சு.’
‘பாயுக்கும் கொடுத்தாச்சு’
‘நீ தான்யா செஞ்சுகாட்டியிருக்க’
‘ஒரெட்டு வந்திட்டுப் போயேன்’
‘வேலை அதிகமா இருக்கா?’
‘வேலை வேலைன்னு உடம்பக்கெடுத்துக்காத’

ஜனவரி 2 2005
கோடாங்கிபுரம்.

மணி மாலை ஆறு ஆகியும் போன் வராமல், போனையே வெறித்துக்கொண்டிருக்கிறாள்.

பிப்ரவரி 6 2005
கோடாங்கிபுரம்

கருப்பாயி போனையே வெறித்துக்கொண்டிருக்கிறாள்.

***

சனவரி 5 2003
சன்பெங். கோலாலம்பூர்.

ராஜா அந்த ரூமின் கதவைத்திறந்தான். ரூம் லைட் போடப்படவில்லை. லைட்டரை உபயோகித்து சுவிட்சைப் போட்டான். அறை பிரகாசமாகிறது.
செல்லையா ஓரத்தில் சுருண்டு படுத்திருந்தான்.
‘டேய் செல்லையா. எழுந்திரு’
செல்லையா அழுது வீங்கிய கண்களோடு ராஜவை ஏறிட்டுப்பார்த்தான்.
‘இந்தாடா சாப்பிடு’ ராஜா ஒரு புரோட்டா பார்சலைக்கொடுத்தான். அவன் வாங்காததால் அதைக்கீழே வைத்துவிட்டு, அவனுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டான்.
‘சாப்பிடு டா. எதுக்கு வயித்த பட்டினி போடற?’
நிறைய வற்புறுத்தலுக்குபிறகு, செல்லையா பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். சிறிது நேரத்திலேயே அழ ஆரம்பித்தான்.
‘என் ஆத்தா சாப்புட்டுச்சா என்னான்னு தெரியல்லையே. ஊர்ல கடன உடன வாங்கி இங்க வந்தேன், கட்டட வேலைன்னு சொன்னாங்க. ஆனா டேபிள் கிளீன் பண்ணேன். இப்ப அதுவும் போச்சு. வேலையில்லாமா சம்பளமில்லாம கடனை எப்படி அடைப்பேன். கால் ஆனியிருக்கிற தம்பிக்கு எப்படி வைத்தியம் பார்ப்பேன். தங்கச்சிய எப்படி கரையேத்துவேன். ஆத்தா ஒத்தையில கஷ்டப்படுது ராஜா’
கண்களைத் துடைத்துக்கொண்டு புரோட்டாவையே வெறித்துக்கொண்டிருந்தான் செல்லையா.
‘ம்ம்.. கவலைப்படாதடா. செக்கியூரிட்டி வேலை ஒன்னு இருக்கு. எனக்கு தெரிஞ்ச இடம் தான். கொஞ்ச நாள் அங்க வேலை செய்யி. பிறகு பார்த்துக்கலாம். முதல்ல சாப்பிடு, எதுக்கும் கவலைப்படாத. இங்க வார எல்லார் பாடும் இபப்டித்தேன்’ ராஜா சொல்லிவிட்டு விட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்த மங்கலான விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சனவரி 6 2003
சன்பெங். கோலாலம்பூர்.
சுனங்கா கோண்டோமினியம்
. மாலை மணி 6

செல்லையா தனக்கு கொஞ்சமும் பொருந்தாத செக்யூரிட்டி உடையை அணிந்து கொண்டு, கோண்டோவின் வாசலில் நின்றான். கோண்டோவின் முகப்பில் இருக்கும் அறையின் உள்ளேயிருந்த மற்ற இரு செக்யூரிட்டிகளும், வெளியே தலையை நீட்டி இவனை அழைத்தனர். அவர்கள் இவனுக்கு எதிர்மாறாய் நல்ல அகலமாக இருந்தனர். கண்கள் இரத்த சிவப்பாக இருந்தது. கைகளில் கருகருவென்று முடி அடரிந்திருந்தது.

விசாரிப்புகள் முடிந்தபிறகு ரவுண்ட்ஸ் போகச் சொன்னார்கள். செல்லையா கோண்டோவைச்சுற்றிலும் நடந்து, அதன் அமைப்பை உணர்ந்து கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தான். விதம் விதமான மலேசியத்தயாரிப்பு கார்கள். விதம் விதமான பைக்குகள். சினிமாவில் ஐரோப்பிய புல் வெளிகளில் விஜய், அசினைப் பின்னால் வைத்துக்கொண்டு ஓட்டி வருவதைப்போல. செல்லையா தொட்டுபார்த்துக்கொண்டான்.

கோண்டோவின் பின்புறம் கார்கிளீன் பண்ணும் செட் ஒன்று இருந்தது. ‘பாபா கிச்சுத்தா’ பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. நாலைந்து இந்திய இளைஞர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

கோண்டோவில் கார்கள் வந்தவன்னம் இருந்தன. கேட் திறந்து விடுவதே பெரிய வேலையாக இருந்தது. அவனும் மற்ற ஒரு செக்யூரிட்டி மட்டுமே இருந்தார்கள். இன்னொரு செக்யூரிட்டி செல்லையாவை சிகரெட் வாங்கிவர நாலாவது மாடியில் இருக்கும் கடைக்கு அனுப்பினார்.

மணி 12:00 இரவு.
கார் வரத்து குறைந்துவிட்டது. மற்றொரு செக்யூரிட்டியின் குரட்டை காதைப்பிளந்தது. பிளாக் லேபிள் ஒன்று காலியாக இருந்தது. ‘எங்கம்மா உங்கம்மா’ பாடல் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது. நேயர் விருப்பமாம். எந்த மடையன் இராத்திரி 12 மணிக்கு இந்த பாட்டைக்கேட்கிறானென்று தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டான். இண்டர்காம் ஒலித்தது. நாலாவது மாடியின் கடைப்பையன் அழைத்தான்.

லிப்டைவிட்டு வெளியேறி நாலவது மாடியில் நுழைந்ததுமே சத்தம் பயங்கரமாக கேட்டது. உடைந்த பாட்டில் துண்டுகள், இவன் கனத்த பூட்ஸ் காலில் மிதிபட்டு மேலும் சில்லாகியது. தரையெங்கும் பாட்டில் சிதிலங்கள். செல்லையா மெதுவாக நடந்து கடையின் அருகே சென்றான். அங்கு தடிதடியாக ஆறு பேர், போதையில் தாருமாறாக விளையாடிக்கொண்டிருந்தனர். கடையின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

முதலில் செல்லையாவை அவர்கள் சட்டைசெய்யவில்லை. செல்லையா எச்சரித்தான். அவர்கள் அடங்கவில்லை. ஒருவன் இவனை அடிக்க கை ஓங்கவும், செல்லையா போலிசுக்கு போகிறேன் என்று கடையின் உள்ளே சென்று போனைத்தேடி நம்பரை அழுத்தினான். சற்று நேரம் வெறித்துப் பார்த்த அவர்கள், ஒவ்வருவராக வெளியேறினர். ‘நீங்க மொதல்லையே போலிசுக்கு போக வேண்டியதுதான?’ என்று கடைக்காரரை கேட்டுவிட்டு, கீழே வந்தான், செல்லையா, முதல் நாள் வேலையை வெற்றிகரமாக முடித்த திருப்தியோடு.

‘காதோடுதான் நான் பேசுவேன்’ பாடல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. மணி இரண்டு அடித்தது. தொப்பியை எடுத்து மாட்டிக்கோண்டு, லத்தியை எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ¤க்கு தயாரானான்.

குளிர் அதிகமாக இருந்தது. நாளைக்கு ஜாக்கெட் கேட்டு வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆத்தா இந்நேரம் தூங்கியிருக்கும் என்று நினைத்துக்கொண்டான். கார்கள் அமைதியாக நின்றன. அந்த மணியிலும் ஒருவன் காரை கிளப்பும் ஓசை கேட்டது. கோண்டோவின் பின்புரம் வந்தான். கார் கிளீன் செட் அமைதியாக இருந்தது. அங்கு சற்று ஈரமாக இருந்தது. சில இரவுப்பறவைகளின் சத்தங்களைத் தவிர வேற எந்த சத்தமும் இல்லை. கார் செட்டுக்குப் பக்கத்தில் ஏதோ நிழல் தெரியவே, சற்று நின்று கவனித்தான். மறைவிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. நாலாவது மாடியில் பார்த்தது போலத் தோன்றவே, ‘ஏய்…நீ என்ன இங்க..’ என்று கேட்டு முடிப்பதற்குள், பின் மண்டையில் கனமாக தாக்கப்பட்டதை உணர்ந்தான். திரும்பிப் பார்க்க நினைத்தான் முடியவில்லை. நினைவு தப்பிக்கொண்டிருந்தது. கீழே விழுந்தான். ஆத்தாவின் முகம் வானமெங்மும் நிறைந்திருந்தது. ஒரு உருவம் ஸ்பேனர் பொன்ற தடியான ஒன்றை தன் முகத்துக்கு நேரே ஓங்குவது மங்கலாகத்தெரிந்தது. ‘ராஜா’ என்று சன்னமாக கூப்பிட்டான். பின் சுத்தம்.

***

மார்ச் 6 2003.
கோலாலம்பூர்.

ராஜா, தொலைபேசியில் எண்களை டயல் செய்து, காதுக்கு கொடுத்தான்,
‘கோடாங்கிபுரமா? மாமா நான் தான், செல்லையா பேசுறேன்.’

***

சேர்ப்பு: 21-08-2006

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் இங்கே சென்று வாக்களிக்கவும்.
http://www.thenkoodu.com/survey/2006-08/