வந்துட்டாருன்னா? வரமாட்டாருண்ணே. வந்துட்டாருன்னா?

 

தாத்தா ஏற்கனவே உக்காந்துட்டாரு.
எழுந்தாலும் அவரு வீட்லையே அவரு சமாளிக்கவேண்டிய பிரச்சனை நிறைய இருக்கு..
பாட்டிய உக்காரவெச்சாச்சு.
அடுத்து யாரு?
பாட்டிக்கு அப்புறம் அவுங்க வீட்டில யாருமே இல்லீண்ணே..
டேய் ஐஸ்ப்ரூட் மண்டையா.. பாட்டிக்கும் தாத்தாவுக்கும் அப்புறம் இந்த எலிஸ்நாட்ல யாருடா இருக்கா?
வாட்டர்டேங்க் இருக்காருல்ல?
அவரா? அவரு காமெடி பீசு தம்பி. போன தடவ நம்மகூடவே சேர்ந்துகிட்டாரு.. அவர போயி பெரிசுபண்ணிக்கிட்டு..
மாரத்தான் மன்னர்?
ஹா ஹா ஹா.. சிரிப்பு வருது தம்பி..
உட்கட்டர்?
டேய் முள்ளங்கி மண்டையா.. காமெடி பண்றதுக்கு அளவில்லையா?
அப்புறம்.
அப்புறம் நாம தாண்ணே
நாமதானா?
ஆமாண்ணே. நாமும் நம்ம டமஸ்கிருதாவும்தாண்ணே
எப்பூடி பள்ளிகூடத்துல நம்ப டமஸ்கிருதாவ நொழச்சோம் பாத்தியா?
செம செம செமண்ணே..
டமஸ்கிருதா வாரம்.. டமஸ்கிருதா மாதம்.. ஏன் டமஸ்கிருதா நொடி கொடி கூட வெப்போம்… நாடு நம்பதுடா..
ஆமாண்ணே.. நாடு நம்பது..
டேய்..அவரு இருக்காருல்ல? மறந்துட்டியா?
அவரா? இருபது வருஷம் ஆச்சு.. இனிமே அவரு வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன?
வந்துட்டாருன்னா?
வரமாட்டாருண்ணே
வந்துட்டாருன்னா?
அண்ணே.. பயமாருக்குண்ணே..
அவருக்குப்பின்னாடியும் நம்ப ஆட்கள்தானடா இருக்காங்க?
ஆமாண்ணே.. இருந்தாலும் அவரு நம்ப வழிக்கு வரமாட்டாருண்ணே..
ஐயைய்யோ இப்ப என்னடா பண்றது?
அவரு வந்தாருன்னா.. அவருதாண்ணே.. அடுத்து..
அவரையும் காமெடி பீஸாக்கிருவோம்..
எப்படிண்ணே..
சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க நீங்க வருவீங்களா மாட்டீங்களா அப்புடீன்னு கேப்போம்..
(சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க நீங்க இனிமே என்ன பண்ணப்போறீங்க.. என்ன பண்ணப்போறீங்க – எக்கோ அடிக்குது)
அண்ணே அவரு வந்தா என்ன வராட்டினா நமக்கு என்ன?
டேய்.. தயிர்சாத மண்டையா.. வந்துட்டாருன்னா எலிஸ் கெட்டியா பிடிச்சிகிடுவாய்ங்கடா.. அப்புறம் நாம என்ன பண்றது? பயமாருக்குல்ல..
ஆமாண்ணே..
கேப்போம்.. நெருக்கி பிடிப்போம்.. சட்டுன்னு ‘இல்ல வரமாட்டேன்னுட்டாருன்னா’. நமக்கு நல்லது தான?
பொதுஜனம் கேக்குற கேள்விக்கெல்லாம் அவரு கண்டிப்பா பதில் சொல்லனுமா என்ன? அது அவரு பெர்சனல் இல்லியா? தவிர அவருக்கே ப்ளான் இல்லாம இருக்கலாம் இல்லியா? அவர சொல்லு சொல்லுன்னு கேக்கறது கொஞ்சம் ஒவரா இல்ல?
டேய் சுட்ட அப்பள பண்டையா.. என்னடா பேசுற.. நீ யாரு கட்சி?
இளமையில உண்ணாமலை படத்த உண்ணாம ஒம்பது வாட்டி பாத்திருக்கேண்ணே..
பாரு.. அதுக்கு.. கொள்கை வேற உண்மை வேற..
இல்லண்ணே.. நீங்க சாப்ட்வேர் எஞ்சினியருன்னு வெச்சுக்கோங்க.. உங்கிட்டவந்து நீங்க இந்த கம்பெனில எத்தன நாள் இருப்பீங்க? அடுத்து இன்ஃபோசிஸ் போவீங்களான்னு பக்கத்துல உக்காந்திட்டிருக்கறவன் நச்சரிச்சிக்கிட்டே இருக்கான்னு வெச்சுக்கோங்க.. உங்களுக்கு கடுப்பாகுமா ஆகாதா? தவிர அந்த கேள்விக்கு நீங்க ஏன் பதில் சொல்லனும்?
டேய் தயிர்வட மண்டையா.. என்னடா நியாயமெல்லாம் பேசுற? நாமெல்லாம் அப்படிபட்ட ஆட்களா?
சொல்லுங்கண்ணே..
டேய் தப்புதான்.. கேக்கக்கூடாதுதான்.. ஆனா வயித்தகலக்குதுல்ல.. வரமாட்டாருன்னு தெரிஞ்சிட்டா அடுத்த வேலைய பாக்கலாம்ல.. வருவாருன்னா அவர எப்படி காமெடி பீஸாக்குறதுன்னு பாப்போம்.. அதனால ப்ரஷர் பண்ணுவோம்..
ப்ரஷர் பண்ணா? அவரு சொல்லனுமா?
டேய்.. வெங்காயம்-இல்லாத மண்டையா.. மீடியா நம்ம கிட்ட இருக்குடா..
சோ?
இந்த மக்கள் என்னைக்குடா சொந்தமா சிந்திச்சிருக்காய்ங்க?
ஹலோ.. இந்த எலெக்ஷன் ரிசல்ட் மறந்துபோச்சா? சுனாமி எல்லைக்குள்ளேயே வரல..
அது வேற.. நாளாகும்டா.. ஆனா லஞ்ச ஒழிப்புன்னு நம்ப தம்பிகுஜாரே ஆரம்பிச்சப்போ எல்லாரும் எப்படி நாம சொன்னதையே சொல்லிட்டிருந்தானுங்க? அது சாத்தியமா? இதுல இருக்குற ஓட்டை என்னன்னு யோசிச்சானுங்களா? மந்திரிச்சுவிட்டமாதிரி மெழுகுவர்த்திய தூக்கிட்டு திரியல?
ஆமா..
அத விடு.. இப்ப எல்லோரும் கூட்டணும் வகுக்கனும்னு வெளக்கமாத்த தூக்கிட்டு அலையல? இதெல்லாம் சரிப்படாதுன்னு பிறந்த குழந்தைக்குகூட தெரியும்.. ஆனா யோசிச்சானுங்களா..
ம்ம்..
அது மாதிரிதான்.. நாம ஆரம்பிச்சிவெப்போம்.. கேப்போம்.. எல்லாரும் நம்பகூட சேர்ந்துகிடுவாங்க.. யாரும் யோசிக்கமாட்டானுங்க.. அந்தாள் எதுக்கு பதில் சொல்லனும்.. வர்றதும் வராததும் அவர் விருப்பமில்ல.. அப்படின்னு யோசிக்கமாட்டானுவ..
ம்ம்..
காமெடி பண்ணுவோம்.. அவர பிடிக்காதவங்க கிட்ட அவர பத்தி பேட்டி எடுப்போம்.. அவரு வரலாமா கூடாதான்னு கேப்போம்.. அத கொட்ட எழுத்தில போட்டு நம்பாளுங்க பத்திரிக்கையையும் விப்போம்..
ம்ம்..
எல்லாரும் நெருக்கியடிச்சு கேக்கும்போது.. அவரு பதில் சொல்லித்தானே ஆகனும்.. வரமாட்டேன் ஆளவிடுங்கடான்னு சொல்லித்தானே ஆகனும்..
வர்ரேன்னு சொல்லிட்டாருன்னா?
ஹா ஹா ஹா அப்படியெல்லாம் சொல்லமாட்டாரு..
சொல்லிட்டாருன்னா?
வயித்தகலக்காதடா தம்பி..
வர்ரேன்னுதான் சொல்லுவாரு..
வரட்டும்..அப்ப அவரு கூட சேர்ந்துக்குவோம்.. அதிகாரத்தில ஒட்டிக்கிட்டு நாம அதிகாரமைய்யமா ஆயிடுவோம்.. இது நமக்கு சொல்லியா தரணும்.. ரெண்டாயிரம் வருஷமா நாம செய்யிறதுதான..
ஹா ஹா ஹா ஹா..
ஹா ஹா ஹா ஹா..

*

மதம் – குழந்தைகளின் மீதான வன்முறை

The Indian Clerk என்கிற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். David Leavitt எழுதியது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் Non-Fiction வகையான புத்தகங்கள் படிப்பதால் நாவல் படிப்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. நாவல் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. (மீண்டும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு அற்புதமான நாவல் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்களேன்!)

நான் வாரம் ஒரு புத்தகம் படிக்கிறேன் என்று வைத்துக்கொண்டால் என் வாழ்நாள் முழுவதிலும் நான் சில ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே படித்திருப்பேன் – இது உலகத்தில் கிடைக்கப்பெறும் புத்தகங்களின் எண்ணிக்கையில் சொற்பம் தான். தந்திரம் என்னவென்றால் – படிக்கவேண்டிய ப்த்தகங்களைத் தெரிந்து வைத்திருப்பதே! (The trick is to know which books to read!)
– கார்ல் சாகன்

நூலகத்தில் இந்த நாவலைப் பார்த்த பொழுதே நினைத்தேன் இது அவரைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இது அவரைப்பற்றிய நாவலே தான்!

யார் அவர்? யூகியுங்கள் பார்ப்போம். (Clue – நாவலின் பெயர் The Indian Clerk :))

இந்த நாவல் கணித மேதை ராமனுஜர் பற்றியது ஆனால் இங்கிலாந்தின் கணிதமேதையான G.H.Hardyஐ சுற்றிப் பிண்ணப்பட்டுள்ளது. வெறும் ஐம்பது பக்கங்கள் மட்டுமே படித்துள்ள நிலையில் நாவலைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

நாவலில் வரும் ஒரு கேள்வி என்னைக் கவர்ந்தது:

ஒரு ஊரில் உள்ள ஒரு பார்பர் அந்த ஊரில் தானே முகச்சவரம் செய்து கொள்ளாத எல்லோருக்கும் முகச்சவரம் செய்துவிடுகிறார். அப்படியென்றால் அவருக்கு அவரே முகச்சவரம் செய்துகொள்வாரா?

***

சமீபத்தில் நான் படித்துமுடித்த வேறொரு புத்தகம் Christopher Hitchens எழுதிய god is not great. ஹிட்சன்ஸ் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையாளர். ஒரு தேர்ந்த debater. யூ டியூபில் அவரது debate வீடியோக்களைத் தேடிப்பாருங்கள். அவருக்கு இருப்பது மூளையா இல்லை என்சைக்லோப்பீடியாவா என்று தெரியவில்லை. எப்படி ரஷ்யாவின் மூலையில் நடந்த சம்பவங்களைக் கூட சரியான சந்தர்ப்பத்தில் எடுத்து விட முடிகிறது? அவருக்கு எதிராக வாதம் செய்பவர் என்றைக்குமே பாவம் தான் – ஹிட்சன்ஸ் முன்னால் அவர் முட்டாளாகத்தான் தெரிவார்.

Richard Dawkins உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு விஞ்ஞானி. இன்று உலகத்தில் இருக்கும் மிகச் சிறந்த கடவுள் மறுப்பாளர்களில் மிக முக்கியமானவர். அவரது எல்லாப் புத்தகங்களுமே அற்புதமானவை. (விஜய் டீவியின் மன்மதன் அம்பு நிகழ்ச்சியில் கோபிநாத்திடம் கமலஹாசன் தான் தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எனச் சொன்னது Richard Dawkins எழுதிய The Greatest Show on Earth என்கிற புத்தகம் தான். கமலஹாசன் ஆனால் எதோ வேறு ஒரு பெயர் சொன்னார்!) ஆரம்பமாக The God Delusion என்கிற அவரது புத்தகத்தை நான் பரிந்துரை செய்வேன். (தற்பொழுது தி.க.வினர் இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்). பிறகு The Blind Watchmaker.

Richard Dawkins தனது இந்த வருடத்தின் ஹீரோ Christopher Hitchens தான் என்று சொல்லியிருக்கிறார்.

God is not great பலவகையில் ஒரு அருமையான புத்தகம். பொறுமையாக படித்தீர்கள் என்றால் இது ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுக்கும். (நீங்கள் விழித்துக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்! தூங்குவது போல நடிக்கக் கூடாது!)

மதம் என்பது குழந்தைகளின் மீதான வன்முறை

என்று சொல்கிறார் Hitchens.

பதினெட்டு வயதுக்கு அப்புறம், குழந்தைகளுக்கு நாம் நம்முடைய மதத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுத்திருந்தோம் என்றால் இந்த உலகம் முற்றிலுமாக வேறுமாதிரி இருந்திருக்கும்.

எப்படி ஐய்யா மதம் குழந்தைகளின் மீதான் வன்முறையாகும்?

ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு இந்து. நீங்கள் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிறிஸ்தவர் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தினமும் வேத பாடங்கள் சொல்லிக்கொடுத்து ஹிந்துவாக வளர்க்கிறீர்கள். (அல்லது அப்படியேதும் ப்ரத்யேகமாக சொல்லிக்கொடுக்காவிடிலும் நீங்கள் கும்பிடும் கடவுளையே உங்கள் குழந்தைக்கு நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்)ஆனால் உங்கள் குழந்தை பக்கத்திலிருக்கும் கிறிஸ்தவரின் வீட்டுக்கு சென்று பழகுவதால் அவரது மதத்தால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பழக்கங்களை கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறது. பைபிள் தான் படிக்கிறது. கிறிஸ்துவனாக மாறப்போகிறேன் என்று சொல்கிறது.

அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஐயையோ பாழாப்போன பக்கத்து வீட்டுக்காரன் என் குழந்தையின் பச்ச மனச கலச்சு இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கானே அப்படீன்னு புலம்ப மாட்டீர்கள்?!

பக்கத்து வீட்டுக்காரன் செய்வது உங்கள் குழந்தையின் மீதான வன்முறை என்றால், நீங்கள் செய்வது?!

***

நான் ஆ·பீஸிலிருந்து வரும் பொழுது ரயிலில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு வந்தேன். அப்பொழுது அவர் தன் இரண்டு வயது மகளை ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாகவும். அந்தப் பள்ளியில் இடம் கிடைக்கவேண்டும் என்றால் அட்மிஷன் தெதிக்கு முந்தின நாள் இரவு முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும் என்று சொன்னார். அப்படியென்ன அந்த பள்ளியில் விஷேசம் என்றேன். ஸ்லோகம் எல்லாம் சொல்லித்தருகிறார்கள். சாப்பாட்டுக்கு முன்னால் சாமி கும்பிடச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.

அத்துடன் நில்லாது என்னையும் என் மகளை அந்த பள்ளியில் சேர்த்துவிடுமாறு சொன்னார். நான் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை என்றேன். திடுக்கிட்டுப் பார்த்தவர் ஒருவாரு சமாளித்து பேச்சைத் தொடர்ந்தார். பிறகு சைடு கேப்பில “இப்போ நீங்க கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்க நான் என்ன உங்களுக்கு மதிப்பு கொடுக்காமலா போயிடப்போறேன்” என்றார்.

சட்டென்று நான் “இப்போ நீங்க கடவுள் இருக்கார்ன்னு சொல்றீங்க நான் என்ன உங்கள மதிக்காமலா போயிட்டேன்” என்றேன். அத்துடன் அவர் கப்சிப்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் எப்படி வெளிப்படையாக தாங்கள் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் என்று சொல்லிக்கொள்ள இயலவில்லையோ அதே நிலையில் இன்று கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள்

என்று யாரோ சொல்லியிருந்தார்கள். மிகச் சரி.

***

நீங்கள் ஹாயாக பீச்சில் குளித்துக்கொண்டிருக்கிறீர். திடுமென சுனாமி வந்துவிடுகிறது. நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ள ஓடுகிறீர்கள். நீங்களாகவே ஓடி தப்பிக்க முடியாது. உங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருக்கிறது. உங்களின் இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்று இருக்கிறது. பக்கத்தில் அறிவியலின் கண்டுபிடிப்பான புத்தம் புதிதாக அதிவேகமாகச் செல்லும் கார் ஒன்று இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?

1. கடவுளே என்னைக் காப்பாற்று. சுனாமியை நிறுத்திவிடு என்று அந்தப் படத்தைக் கும்பிடுவீர்களா? (ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை நினைவில் கொள்க!)
2. அந்தக் காரில் ஏறிக்கொண்டு அறிவியலின் துணைகொண்டு தப்பிப்பீர்களா?

(அந்த அறிவியலை மனிதன் கண்டுபிடிக்க காரணமாக இருந்ததே கடவுள் தானே என்கிற மிக மொன்னையான பதிலைத் தரக்கூடாது!)

***

சில வருடங்களுக்கு முன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்த பொழுது – சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது – ஒரு ஆந்திராக்காரர் தமிழர்களைப் பற்றி கமெண்ட் ஒன்று அடித்துக்கொண்டிருந்தார். “கல்யாணப்பத்திரிக்கையில் கட்சித் தலைவர்களின் படங்களைப் போய் போடுகிறார்கள் இவர்கள். அதெப்படி கல்யாணப் பத்திரிக்கையில் கூட கட்சித் தலைவர்களின் படங்களைப் போடுகிறீர்கள்? கணேஷ் ஷிவாவைப் போன்ற கடவுள்களின் படங்களைத்தானே போடவேண்டும்?!” என்று நக்கலாகச் சிரித்தார்.

அங்கிருந்த ஒரு கடவுள் மறுப்பாளர் “கட்சித் தலைவர்களின் படங்களைப் போட்டாலாவது அவர்கள் கல்யாணத்திற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது!” என்று படக்கென்று சொன்னார். எல்லோரும் கப்சிப்.

முற்றிலும் உண்மை. 🙂

***

குரல்வலைப் பக்கங்கள்

(புதிய பெயர், bureaucracy, பரிணாமவளர்ச்சித் தத்துவம், Intelligent Creator, உலகம் தட்டை, ஆன்மா, முன்பிறவிப் பாவங்கள்)

இது எப்பொழுதும் நான் எழுதும் படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி வகையறா பதிவு தான். பொதுப்படையான பெயர் ஒன்று வைத்திருக்கிறேன்.Just rebranding.புதிய பெயர். மைக்ரோசாப்ட் windows vistaவை rebrand செய்து windows 7 என்று பெயர் மாற்றி, அமோக விற்பனை செய்யவில்லையா? சிங்கப்பூர்க்காரர்கள் க்யூவில் நிறகத் தயங்காதவர்கள். ஐ·போன் 3GS வந்தபொழுது 50 டாலர் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுப் பிறகும் மணிக்கணக்காக க்யூவில் நின்று வாங்கிய மக்களை எனக்குத் தெரியும். அதேபோல windows 7 வந்தபொழுதும் இங்கே மக்கள் க்யூவில் நின்று (உட்கார்ந்து; ரெஸ்ட் எடுத்து) வாங்கியதை டீவியில் பெரிதாகக் காட்டிக்கொண்டிருந்தனர்.ஹாரிப்பாட்டர் வந்தாலும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க; windows 7ஐயும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க. நம்ம ஊர்ல அரசியல் மீட்டிங்குக்கு காசும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்ப்பது போல இங்க டாலர்ஸ¤ம் நூடுல்ஸ¤ம் கொடுத்து க்யூவில நிக்க சொல்றாய்ங்களோ?

***

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் எம்பசிக்குச் சென்றிருந்தேன்; எதற்கு என்று ஞாபகமில்லை. க்யூ நம்பர் எடுத்துவிட்டு பொழுது போகாமல் அங்கிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய பேர் கேட்கும் கேள்வி பாரம் எங்கிருக்கிறது என்பது தான். அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. டென்சன். ஏன் டென்சன்? Afterall நீங்கள் உங்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக உட்கார்ந்திருக்கும் அலுவலர்களைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள். சிரிக்காதீர்கள்.

அப்படி நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தைக் கவனித்தேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் தனது க்யூ நம்பர் வந்தவுடன் வேகமாக எழுந்து நடந்து வந்தார். அவரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அங்கே கண்ணாடிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அலுவலரிடம் தான் ரெடியாக வைத்திருந்த அந்த பேப்பர்களைக் கொடுத்தார். வாங்கிய அந்தப் பெண் அதே வேகத்தோடு அந்தப் பேப்பர்களைத் தூக்கிப்போட்டார். தூக்கிப்போட்டார். ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. பதற்றத்துடன் அந்த ஆள் அந்தப் பேப்பர்களை எடுத்து பேப்பர் க்ளிப்பை எடுத்துவிட்டு மீண்டும் கொடுத்தார்.

***

இந்தியன் எம்பசியில் அன்று என் வேலையை முடித்துக்கொண்டு ஆபீஸ¤க்குச் செல்ல டாக்ஸி பிடித்தேன்.கொஞ்ச நேரம் கழித்து டாக்ஸி ஓட்டுனர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: உள்ளே இருக்கும் அலுவலர்களும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? பிறகு ஏன் அவர்கள் உங்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. டாக்ஸி டிரைவர் ஒரு சைனீஸ். நீங்கள் எதற்கு அங்கே போயிருந்தீர்கள் என்றேன். இந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது அதற்காக விசாவுக்காச் சென்றிருந்தேன் என்றார். அடிக்கடி இந்தியா போய் வருவாராம்.

பிறகு இந்தியாவைப் பற்றி அவரே பெசத்துடங்கினார். இந்தியாவில கல்வி நல்லாயிருக்கு என்றார். பிரிட்டிஷ்காரர்களின் பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்றார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் மூன்று விசயங்களைக் கொடுத்திருக்கிறது என்றார். என்ன என்று கேட்டேன்: கல்வி, ரயில்வே நெட்வொர்க் மற்றும் அதிகாரத்துவம் (bureaucracy).

***
ரொம்ப நாட்களுக்கு முன் இந்தியாவில் இருக்கும் பொழுது என் தோழி ஒருவரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். தோழியின் கணவரின் அப்பா ஒரு ஜட்ஜ். கிண்டி ரேஸ் கோர்ஸில் அவர்களது ரிஷப்சன் நடந்தது. அவ்வளவு பெரிய பணக்கார கும்பலில் நானும் எனது நண்பனும் கேட்ப்பாரற்று நின்று கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி இன்று வரையிலும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்கிறது.

அங்கே இரண்டு ஜீவராசிகளும் இன்ன பிற ஜீவராசிகளும் இருந்தன. அதில் ஒரு ஜீவராசி நிமிர்ந்த நன் நடை கொண்டிருந்தார். மற்றொரு ஜீவராசி கேள்விக்குறி போல வளைந்து நின்று கொண்டிருந்தது. இவர்களைத் தவிர மற்ற சிலரும் கேள்விக்குறி போல இல்லையென்றாலும் அதற்கு இணையாக குணிய முயற்சி செய்துகொண்டிருந்தனர். அந்த கும்பல் எங்களைக் கடக்கும் பொழுது, நாங்க பாட்டுக்கு செவனேன்னு மரத்து அடியில நின்னுட்டு இருக்கோம், ஒரு அல்லக்கை என்னைப் பார்த்து தள்ளு தள்ளுன்னுச்சு. ஏய் இருப்பா என்ன விசயம்னு கேக்கும் போது தான் தெரிந்தது அந்த நிமிர்ந்த நன்னடை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாம்; அப்ப அந்தக் கேள்விக்குறி யாருன்னு கேட்டப்போ அவர் ஏதோ பெரிய லாயரோ என்னவோ என்று சொன்னது அந்த அல்லக்கை. இதற்குப்பெயர் தான் அதிகாரத்துவம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.

அவரது வீட்டிலும் எல்லோரும் அவரிடம் கேள்விக்குறி போல வளைந்து கொண்டு வாழ்வார்களோ?ஐயோ பாவம்.

***

இதே போலத்தான் சாமியார்களும் அவர்கள் முன்னால் (சாஷ்டாங்கமாக) விழுந்து வணங்கும் சில மக்களும்.

***

டிசம்பர் 20 2005இல் ஜான் ஜோன்ஸ் II என்கிற Harrisburg, Pennsylvaniaவைச் சேர்ந்த ஜட்ஜ், Kitz-miller et al vs Dover Area School District et al என்கிற வழக்கில் மிக முக்கியமானதொரு தீர்ப்பைச் சொன்னார். வழக்கு எதைப்பற்றியது என்றால்: அமெரிக்க மாணவர்கள் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எப்படி படிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றியது.

வழக்கு என்ன;முழு வழக்கைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதன் சாராம்சம் இங்கே:

டாரிவினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் இன்னும் முழுமையாக உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. அது வெறும் தத்துவம் தான் அதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை (பொய்!). Intelligent design என்பது டார்வீனியத் தத்துவத்துக்கு நேர்மாறானது. அது என்னவென்றால் மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் என்பது. மனிதனை மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் கடவுள் தான் உருவாக்கினார் என்பதை விளக்கும் Of Pandas and People என்கிற புத்தகத்தை மாணவர்கள் படிக்கும் படி அறிவுறுத்துகிறோம். எல்லாத் தத்துவங்களையும் திறந்த அறிவோடு எதிற்கொள்வதைப் போல இதையும் மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதை அறிவியல் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு பாடத்துக்கு முன் வாசித்துக்காட்டவேண்டும் என்று டோவர் ஹை ஸ்கூல் ஒரு சட்டம் பிறப்பித்தது. ஒன்பது ஸ்கூல் போர்ட் மெம்பர்களில் இரண்டு பேர் ரிசைன் செய்து விட்டனர். பல ஆசிரியர்கள் இதை வாசிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். வழக்கு செப்டம்பர் 26 2005 அன்று ஆரம்பித்தது.

க்ரிஸ்த்மஸ¤க்கு ஐந்து நாளைக்கு முன்னர் நீதிமதி அந்த தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது. தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நடந்ததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்த நூற்றாண்டில். பரிணாம வளர்ச்சியை நம்பாமல் ஒரு intelligent designer (கடவுள்) தான் மக்களை உருவாக்கினார் என்று நம்புபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் இந்த உலகத்தில். ஏதோ ஒன்றை நம்புவதற்கு எங்கோ ஒரு கும்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிய டாக்குமென்டரியை இங்கே பார்க்கலாம்.

இன்னும் உலகம் தட்டை தான் என்று நம்பும் கும்பல் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். World is flat என்றொரு புத்தகத்தை Thomas L Friedman எழுதினாரே; அதைப் பற்றி நான் சொல்லவில்லை. உண்மையிலே உலகம் உருண்டையாக இல்லை தட்டையாகத் தான் இருக்கிறது என்று சத்தியமடித்துச் சொல்கிறார்கள். World is weird.

உங்கள் நம்பிக்கை உங்களோடு; அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா வீட்டில் உட்காராமல், அறிவியலின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறீர்கள்?

காமெடியன் Dave Allenஇன் இந்த வீடியோவைப் பாருங்கள். கண்டிப்பாகப் பாருங்கள். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

***

இது போன்ற ஒரு விசயத்தை விஜய் டீவியில் “நடந்தது என்ன”வில் பார்த்தேன். ஏதோ ஒரு சாமியாரைப் பற்றி நம்ம நீயா நானா கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சாமியார் நூற்றியிருபது வயது வரை மனிதன் வாழ்வது எப்படி என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதோட நில்லாமல் ஆன்மா மறுபிறவி என்று ஏகத்துக்கும் உளறினார். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் சாவைச் சந்திக்கும் பொழுது நம்மை சித்ரவதை செய்யும் என்றார். அவரைச் சந்திக்க சென்றவர்: அப்ப பிறந்த உடனே இறக்கும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்; அவர்கள் தான் பாவமே செய்யவில்லையே என்றார். அதற்கு முன்பிறவியில் செய்த பாவங்கள் இருக்கிறது இல்ல? என்றார். புல்ஷிட்.

இது போன்ற சாமியார்களின் அசட்டுத்தனமான பேட்டிகளை விஜய் டீவி ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது.

***

ஸோ சீரியஸ் டுடே!? இணையத்தில் எங்கோ படித்தது.
உலகம் flatன்னு எப்படி நம்பறீங்க? அதான் ப்ளாட் ப்ளாட்டா ப்ளாட்டு போட்டு விக்கறோம்ல!

***

அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள்!

ஒரு குழ‌ந்தை அப்பாவிட‌ம் வ‌ந்த‌து. அப்பா அன்று மிகுந்த‌ க‌ளைப்புட‌ன் இருந்தார்.
“அப்பா அப்பா அண்ட‌ம் எவ்வாறு உருவான‌து?”
ஒரு நிமிட‌ம் யோசித்த‌ அப்பா, கேள்வி காதில் விழாத‌து போல‌, “ம்ம்ம் என்னடா செல்ல‌ம்” என்கிறார்.
“ம்ம்..அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள் அப்பா?”
“அண்ட‌த்தை க‌ட‌வுள் உருவாக்கினார்டா செல்ல‌ம். ம்ம்..எங்க‌ ஹோல்ட் யுவ‌ர் ஹேன்ட்ஸ் டுகெத‌ர்..ப்ரே நௌ..”
குழ‌ந்தை சொன்ன‌து போல‌ ப்ரே செய்கிற‌து.
அப்பா டீவியைப் போடுகிறார். அன்றைய‌ தின‌த்தில் இருநூறாவ‌து முறையாக‌ ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌டும் அந்த‌க்கால‌ம் இந்த‌க்கால‌ம் நிக‌ழ்ச்சியின் ட்ரெய்ல‌ரைப் பார்த்து அப்பா ல‌யித்துக்கொண்டிருந்த‌ பொழுது, மீண்டும் அந்த‌க் குழ‌ந்தை கேட்கிற‌து, “அப்பா..க‌ட‌வுளை யார் உருவாக்கினார்க‌ள்?”
அப்பா சொல்கிறார் “க‌ட‌வுள் எப்பொழுதுமே இருக்கிறார்!”

ச‌த்திய‌மாக‌ நான் சிறுவ‌னாக‌ இருந்த‌ பொழுது இந்த‌க் கேள்விக‌ளை நான் கேட்ட‌தில்லை. ந‌ம்மில் பல‌ரும் இந்த‌க் கேள்விக‌ளைக் கேட்டிருக்க‌மாட்டோம். முத‌ல் கேள்வியைக் கேட்டிருந்தாலும் இர‌ண்டாவ‌து கேள்வியை கேட்டிருப்போமா என்ப‌து ச‌ந்தேக‌மே. ஏன் நாம் இவ்வாறான‌ கேள்விக‌ளைக் கேட்க‌வில்லை என்ப‌து என‌க்குப் புரிய‌வில்லை.

நாம் ந‌ம‌க்கு புல‌ப்ப‌டாத‌ அல்ல‌து அறிவுக்கு எட்டாத‌ விச‌ய‌ங்களை க‌ட‌வுளிட‌ம் விட்டுவிடுகிறோம். ஆனால் அது மாபெரும் த‌வ‌று இல்லியா? தி மார்ச் ஆஃப் த‌ பென்குயின்ஸ் என்றொரு திரைப்ப‌ட‌ம் இருக்கிற‌து. உல‌க‌த்தில் உள்ள‌ எல்லா பென்குயின்க‌ளும் இன‌ப்பெருக்க‌ம் செய்து கொள்ள‌ ஒரே ஒரு இட‌த்துக்குத் தான் போகுமாம். போகும் பாதையில் ந‌ம‌க்கு இருப்ப‌து போல‌ வ‌ச‌தியாக‌ மைல்க‌ல்க‌ள் அவைக‌ளுக்கு இருக்காது. மேலும் இன்று எங்கு ப‌னி விழும் நாளை எங்கு ப‌னி விழும் என்று ஆண்ட‌வனுக்கே தெரியாம‌ல் இருக்கும் பொழுது பென்குயின்க‌ளுக்கு தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை. அந்த‌ ப‌னிக்காட்டில் அவை மிக‌ நுண்ணிய‌மாக‌ க‌ண‌க்கிட்டு த‌ங்க‌ள‌து இன‌ப்பெருக்க‌ இட‌த்தை அடைகின்ற‌ன‌. இது எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து? இன்ஸ்டிங்க்ட் என்கிற‌து அறிவிய‌ல்.

ஆனால் ஒரு ஆர்தோடாக்ஸிட‌ம் கேட்டால் க‌ட‌வுள் அழைத்துச்செல்கிறார் என்று பெருமையாக‌ அவ‌ர் சொல்ல‌க்கூடும். இந்த‌ ஒரு பொதுவான‌ ப‌திலால் அன்றைய‌ தின‌ம் நாம் த‌ப்பித்துக்கொள்ள‌லாம்; ஆனால் கேள்வி கேட்ப்பவ‌ரின் இன்ன‌ பிற‌ தொட‌ர்ச்சியான‌ கேள்விக‌ளை இந்த‌ ப‌தில் முட‌க்கிப்போடுகிற‌து. அல்ல‌து கேள்வி கேட்ட‌வ‌ர் மீண்டும் அதே கேள்விக்கு வ‌ந்து நிற்க‌லாம்:க‌ட‌வுளுக்கு எப்ப‌டி வ‌ழி தெரியும்? அப்பொழுது அந்த‌ ஆர்தோடாக்ஸ் அப்பா என்ன‌ சொல்வார்: க‌ட‌வுளுக்கு எல்லாம் தெரியும்!

இவ்வாறான‌ பொதுவான‌ ப‌தில்க‌ளால் கேட்‌ப்ப‌வ‌ரை ம‌ட்டும் நாம் முட‌க்கிப்போடுவ‌தில்லை; அறிவிய‌லையே முட‌க்கிப்போடுகிறோம். எப்ப‌டி பென்குயின் த‌ன‌து இன‌ப்பெருக்க‌ இட‌த்தை க‌ண்ட‌டைகிற‌து என்ப‌த‌ற்கான‌ தேட‌ல் வேறு ஏதாவ‌தொரு புதிய‌ க‌ண்டுபிடிப்புக்கு வ‌ழிவ‌குக்க‌க் கூடும் இல்லியா?

என‌வே அப்பாக்க‌ளே அம்மாக்க‌ளே உங்க‌ளுக்கு ப‌தில்க‌ள் தெரியாவிடிலும் ப‌ர‌வாயில்லை; குழ‌ந்தைக‌ளை த‌வ‌றாக‌ வ‌ழிந‌ட‌த்தாதீர்க‌ள், ப்ளீஸ். தெரியாவிடில் என‌க்கு தெரியாத‌ப்பா, ப‌டித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லுங்க‌ள். பிற‌கு க‌ண்டிப்பாக‌ ப‌டித்துவிட்டு அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கிச் சொல்லுங்க‌ள்.

அடுத்த‌முறை அப்பா இந்த‌ அப்ரோச் ட்ரை ப‌ண்ண‌லாம் (ச‌ரியான‌ ப‌தில் தெரியாவிடில்)
“அப்பா அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள் அப்பா?”
“அண்ட‌ம் எப்பொழுதுமே இருக்கிற‌துடா செல்ல‌ம்”

அட்லீஸ்ட் ந‌டுவில் இருக்கும் அந்த‌ ஒரு கேள்வியை அப்பா மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம் இல்லியா?

படித்த முட்டாள்கள்

படித்த முட்டாள்களே, ப்ளீஸ் உங்கள் முட்டாள் தனத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.

True Known என்றொரு முட்டாள், ஏதோ ஒரு தேவையில்லாத விசயத்தை தொகுத்து மீண்டும் மீண்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது IP Addressஐ கண்டுபிடித்து cyber-crimeஇல் புகார் செய்வது அவ்வளவு ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. (புகார் செய்தால் ‘போப்பா போய் பிள்ளைகள படிக்கப்போடு’ என்று சொல்வார்கள் என்பது நிச்சயம்!) அது எனக்கு தேவையில்லாத வேலையும் கூட. அவர் தான் ஏதோ பொழுதுபோகாமல் அனுப்புகிறார் என்றால், அதற்கு பதிலாக ccயில் இருக்கிற எல்லாரும் “remove my mailid” என்று ccயில் இருக்கிற மற்ற எல்லோருக்கும் “reply all” போட்டால் என்ன அர்த்தம்? உங்கள் சம்மதத்தை கேட்டுக்கொண்டா எல்லாரும் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் remove my id ன்னு சொன்னா உங்க ஈமெயில் ஐடியை நீக்கி விடவா போகிறார்கள்? Be sensible. ஏன் இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் சகட்டுமானிக்கு spam அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள்? சுத்த சின்னபிள்ள தனமால்ல இருக்கு. True Known அனுப்பறது ஒரு மெயில், இவிங்க பதிலுக்கு அனுப்புறது நாப்பதிரெண்டு மெயில். கஷ்டம்.

2008இல் என்னென்ன நடக்கலாம்?

வலைப்பூ நண்பர்களுக்கு, என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டிலாவது, உறக்கமின்றி, எதை எழுதித் தொலைக்கலாம், என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும், வலைப்பூ நண்பர்களுக்கு (எனக்கும் சேத்துதான்!) நல்ல சுகமான உறக்கம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஏனோ எனக்கு Avril Lavigneயின் “Chill out whatcha yelling’ for?” வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

***
சர்வேசன் நடத்திய சிறுகதைப்போட்டி பற்றி தெரியாமல் இருந்து விட்டிருக்கிறேன். நேற்றைக்கு தான் தெரியும். ஏதோ நான் எழுதியிருந்தால், முதல் பரிசு கிடைத்திருக்கும், என்பதற்காக நான் சொல்லலீங்க, அப்படியாச்சும் ஒரு சிறுகதை எழுதியிருப்பன்ல? சில சமயம் இப்படித்தான், என்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியாமல், பூனை போல கண்களை மூடிக்கொண்டிருப்பேன். விழித்துக்கொள்ளும் போது, நன்றாக விடிந்திருக்கும். And obviously, I would have missed all the fun! எப்படியும் இந்த வாரத்திற்குள் ஒரு சிறுகதை எழுதி போஸ்ட் செய்ய முயற்சிக்கிறேன். (ஐயோ! என்று நீங்கள் கத்துவது எனக்கு கேட்கவில்லை!)

***

சர்வேசன், உங்கள் சர்வேக்களுக்கு, நீங்கள் zohoவை பயன்படுத்தலாமே? zoho creator try பண்ணியிருக்கீங்களா? இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaint பக்கத்திற்கு நான் zoho creatorஐ பயன்படுத்தி இருக்கிறேன். (இன்னும் வெளியிடவில்லை! உங்களுக்கு exclusive preview!) அந்த பக்கத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம். zoho creatorஐ பயன்படுத்தி நீங்கள் நிமிடத்தில் ஒரு web page create செய்து விடலாம். we can create validation scripts and lot of other things also. And you can also design the view for the datas entered by the users, as you wish! Really nice! And it can be embedded with in blogger! Try it. If you know it previously, then sorry, for my late point out!

***
இரண்டு நாட்கள் விடுமுறையில் நான் நிறைய டீவி பார்த்தேன். (ஒரு டீவி தான் நிறைய program பார்த்தேன். உஷாரா இருக்க வேண்டியிருக்கு.) அதில கஜேந்திரான்னு ஒரு படம் காட்டப்பட்டது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கம். நம்ப விஜயகாந்த் சார் நடிச்சது. ஐயோ காமெடி தாங்கல. ஏற்கனவே நரசிம்மாவின் டிரான்ஸ்பார்முக்கே ஷாக் அடிக்கும் சீனப் பாத்து, பழங்காநத்தம் தியேட்டரில இருந்து, பின்னங்கால் பிடறில படற அளவுக்கு ஓடிவந்தது எனக்கு இன்னும் பசுமையா நினைப்புல இருந்தும், எந்த தைரியத்தில, டீவி சேனல மாத்தாம இருந்தேன்னு, எனக்கு இன்னும் புரியவேமாட்டேங்குது. ஆனாலும் எனக்கு தைரியம் ஜாஸ்திபா.
விஜயகாந்த் intro scene. வில்லன்களுடன் சண்டை போடவேண்டும். ரமணா படத்தில “டேய் அடங்குடா. உங்க அண்ணனோட ரெட்டைக்கைய ஒத்தக்கையா ஆக்குனவரே அவர்தாண்டா” டயலாக் சொல்லுவார்ல, அவர்தான் அடியாட்களின் தலைவன். (ரமணா நல்ல படம் என்பதை யாரும் மறுக்கமுடியாது!). அவர் கத்திய எடுத்து விஜயகாந்த கிழிச்சிடுவார். ரத்தம் வந்திடும். கத்தில ரத்தம் ஒட்டிட்டு இருக்கும். யாரோட ரத்தம்? விஜயகாந்தோட ரத்தம். கூலா, விஜயகாந்த் சிகரெட் எடுத்து வாய்ல வைப்பார். சிகரெட்டை பத்தவெக்க தீப்பெட்டி இருக்காது. அதையும் அடியாட்களின் தலைவனே சொல்வான்: சிகரெட்டை பத்த வைக்க வத்திப்பட்டி வேணும்ல என்கிட்ட இல்லீல்ல என்ன செய்வ?! (சண்டை போட வந்தீங்களா? சிகரெட் பத்தவைக்க வந்தீங்களா?!) உடனே நம்ப தலை ஒரு சிரிப்பு சிரிப்பார். பிறகு இவருடைய ரத்தம் பட்ட கத்தி இருக்குல்ல, அத எடுத்து ரத்தம் சிகரெட்ல படற மாதிரி சும்மா வெப்பார், சிகரெட் பத்திக்கும்!
அப்புறம் மீசை மேல கைய வெப்பார். “என் மீசை மேல கைய வெச்சா என்ன ஆகும்னு தெரியுமா?” ன்னு கேட்டுட்டே, மீசைய சும்மா சுண்டி விடுவார், அடியாட்களில் ஒருத்தன், சும்மா பல்டி அடிச்சு தூரமா போய் விழுவான்.

***

உங்க safetyக்காத்தான் சொல்றேன், அவர் அரசியல் கூட்டத்தில பேச வந்தா, பக்கத்தில கிக்கத்தில போய்டாதீங்க. மீசைய சுண்டி கிண்டி விட்டுறப்போறாரு. தூரமாவே நின்னுக்குங்க.

***

கடந்த சில வாரங்களில் Orhan Pamuk எழுதிய Snow, Douglas Adams எழுதிய Hitchhikers Guide To Galaxy, சா.கந்தசாமி எழுதிய தொலைந்துபோனவர்கள் படித்து முடித்தேன். Aldous Huxley எழுதிய Brave New World படிக்க எடுத்தேன். பிடிபடவில்லை. பிறகு Haruki Murakami எழுதிய Hard-boiled wonderland and the End of the world இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே Haruki Murakami எழுதிய Norwegian Wood படித்திருக்கிறேன். எனக்கு அவரது எழுத்து நடை, அலட்டல் மற்றும் அலங்காரம் இல்லாத வாக்கியங்கள், மிகவும் பிடித்திருந்தன. Norwegian Wood படித்து முடித்ததும், The windup birds chronicle வாங்கினேன். இந்தியா சென்றிருந்த பொழுது, நேரம் கிடைத்தால், படிப்பதற்காக எடுத்துச்சென்றிருந்தேன். ஒரு பக்கம் கூட படிக்கவில்லை. புத்தகமும் எங்கே போனதென்று தெரியவில்லை. தலைமறைவாகி விட்டது.

இந்த வருடம் மட்டும் மூன்று புத்தகங்களை தொலைத்திருக்கிறேன்: Orhan Pamuk எழுதிய Istanbul:memories of a city எங்கே போனது என்றே தெரியவில்லை. Geroge Orwell எழுதிய 1984 cabஇல் தொலைத்துவிட்டேன். அப்புறம் இந்த windup bird.
***

தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்பும், புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுப்பும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில், எனக்கு தாவரங்களின் உரையாடல் என்கிற சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இவருக்கு கதைக் களம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. எனக்கு பிடித்திருந்த மற்றொரு கதை “ஒரு தலைகீழ் கதை“. ஆயிரம் கால் இலக்கியத்தின் அடுத்த பகுதியில் இந்த கதைகளைப் பற்றி எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

தாவரங்களின் உரையாடல் என்கிற கதையின் போக்கில் இருந்த மற்றொரு சிறுகதையை காலச்சுவடில் படிக்க நேர்ந்தது. அது யுவன் சந்திரசேகரின் “உள்ளோசை கேட்பவர்கள்” என்கிற சிறுகதை. சிறுகதை அல்ல நெடுங்கதை தான்.

***

இந்த வருடம் தான் நான் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். என்னென்ன புத்தகங்கள் என்று என் நினைவில் இருக்கிற அளவிற்கு யோசித்து ஒரு பதிவு போடுகிறேன். நிறைய சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். (இந்த list முடியாது!) கொஞ்சம் technology கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய விசயங்கள் செய்யவேண்டும் என்று நினைத்து செய்யாமல் விட்டிருக்கிறேன். செய்யாமல் விட்ட அனைத்தையும் இந்த புது வருடத்தில் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். உங்களுக்கும், நீங்கள் நினைத்தது எல்லாவற்றையும் செய்து முடிக்கக்கூடிய மன வலுவையும் உடல் வலுவையும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

***
2008 இல் என்ன என்ன நடக்கும்? நடக்கலாம்?

1. ஸ்ருதியில் லக்ஷ்மண், தசாவதாரம் தோல்வியைத் தழுவியிருக்கலாம் என்று எழுதியிருந்தார். அது நடக்காது என்றே நினைக்கிறேன். நடக்கவும் கூடாது. தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும், தன் முயற்சியை சற்றும் கைவிடாத கமல், ரசிகர்களாகிய நம்மீது கொண்டிருக்கும் அபாரமான நம்பிக்கையை, நாம் இந்த முறையாவது சிதைத்து விடக்கூடாது என்றே நான் நினைக்கிறேன்.

2. ரஜினி முருகதாஸ் பாலச்சந்தர் கூட்டணியில் அடுத்த பட அறிவிப்பு வரலாம்.

3. ஸ்டாலின் முதலமைச்சராகவும், அழகிரி திமுக கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்கலாம்.

4. த்ரிஷா இன்னும் க்யூட்டாகியிருக்கலாம்

5. இந்தியாவில் CostToCompany மேலும் அதிகரித்து மாஸ்கோவிற்கோ அல்லது வியட்நாமிற்கோ MNC Companies படையெடுக்கலாம்.

6. பாடும் office programmeஐ suntv விஜய் டீவியிடமிருந்து காப்பிஅடித்து “Corporateகீதம்” என்கிற பெயரில் புதிய புரோகிராம் ஆரம்பிக்கலாம்.

7. விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் season 2 போட்டியாள்ர்களை வைத்து மேலும் என்னென்ன வகையில் business செய்யலாம் என்று யோசித்து, ஜோடி நம்பருடன் ஒரு நாள் என்று ரசிகர்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று மொக்க போடலாம்.

8.சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுக்க ஒரு அருமையான திட்டம்: electric scooter என்று சொல்லிக்கொண்டு நச்சுத்தண்மையுள்ள பேட்டரிகளை பயன்படுத்தி மேலும் சுற்றுச்சூழலை மாசு படுத்தலாம். வேற என்ன? குதிரை வண்டியிலா போக முடியும்?!

9. Microsoft .Net4.0, 4.5, 5.0, 5.5, 6.0, 6.5 என்று மாசத்துக்கு ஒன்னாக release செய்து புரோகிராமர்களை குழப்பி, இதுல புரோகிராம் பண்றதுக்கு, நாலு பன்னிக்குட்டி வாங்கித்தாங்கப்பா, அத மேச்சாவது பொழச்சுக்கறேன் என்று பிதாமகன் சூர்யா போல கடுப்படைய வைக்கலாம்.

10. Web2.0 மற்றும் Virtual PCs விஸ்வரூபம் எடுக்கலாம். Zohoவை கூகிள் நசுக்க பார்க்கலாம். zoho ·பீனிக்ஸ் பறவையாக எழுந்து நிற்கலாம்.Microsoftஇன் Live பெரும் தோல்வியைத் தழுவலாம். கூகிள் இன்ன பிற சின்ன சின்ன utilities sitesஐ aquire செய்யலாம். Microsoft இறுதியில் web தன் கையை விட்டு சென்றுவிட்டதை உணர்ந்து கொள்ளலாம். கூகிளுடன் partnership போடலாம்.

11. சன் மைக்ரோ சிஸ்டம் தனது 2009 பட்ஜெட்டை கணக்கிட்டு அந்த தொகையை Microsoftஐ sue செய்து வசூலிக்கலாம்.

12. சிங்கப்பூரில் வீட்டு வாடகை டப்பென்று குறையலாம். (கடவுளே இது மட்டும் கண்டிப்பா நடக்கனும்! முடியல!)

13. ராகுல் காந்தி டீவியில் அதிகம் தென்பட ஆரம்பிப்பார்.

14. விஜயகாந்த் புது சேனல் (ஆண்டாள் அழகர் சேனல்) ஆரம்பித்து கன்னாபின்னான்னு கவர்மெண்ட் ரூல்ஸ் பேச ஆரம்பிக்கலாம். தனது மண்டபம் இடிக்கப்பட்டது ரெக்கார்ட் செய்ததை மீண்டும் மீண்டும் தனது டீவியில் காட்டலாம். தனது ஆண்டாள் அழகர் கல்லூரி எப்படியெல்லாம் நன்றாக இருக்கிறது என்பதைப் பற்றிய செய்திப்படம் நாளொன்றுக்கு நான்கு முறை ஒளிபரப்பலாம். விஜயகாந்த் நடித்த அதிரடி திரைப்படங்கள் அதிரடியாக காட்டப்படலாம். (?!)

15. சரவணா ஸ்டோர்ஸில் மேலும் விலை குறைப்பு நடக்கலாம். மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம். யாராவது ஒரு NRI செமத்தியாக அடிவாங்கலாம். அங்கு வாங்கின அழகான ஸ்லிப்பர்ஸ் இன்னும் குறைவான நாட்களே உயிர்வாழலாம்.

16. விப்ரோ இன்போஸிஸ் டாட்டா போன்ற நிறுவனங்கள் மீடியா தொழிலில் இறங்கி கதாநாயகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் ராமராஜனை புது படத்திற்காக அனுகலாம். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரனை ரீமேக் செய்யலாம். நிஷாந்தி நடித்த ரோலில் சினேகா நடிக்கலாம்.
17. மோகன் உதயகீதத்தை ரீமேக் செய்து கையில் மைக் இல்லாமல் காலரில் சின்ன மைக் வைத்துக்கொண்டு மேலும் வேக வேகமாக இங்கிட்டும் அங்கிட்டும் நடந்து “சங்கீத மேகம்” பாடல் பாடலாம்.

18. ரேடியோ மிர்ச்சி சென்னை அலைவரிசை இன்டர் நெட்டில் வரலாம் (ஏற்கனவே இருந்தா link கொடுங்க நண்பர்களே). சூரியன் FM மொக்க தாங்க முடியலப்பா.

19. ஒலிம்பிக்ஸில் இந்தியா medal tableலிலே வராமல் போகலாம். (இது கண்டிப்பாக நடக்க கூடாது என்பது தான் என் விருப்பம். நடந்தால் சொல்வதற்கில்லை!)

20. ஆஸ்திரேலியாவை இந்தியா டெஸ்டில் வீழ்த்தலாம். கங்கூலி மேலும் இரண்டு சதம் அடிக்கலாம். (நான் subscribe பண்ணியிருக்கேன்ப்பா!)

21. தமிழ்நாட்டில் கலர்டீவி நடமாட்டம் அதிகரிக்கலாம். தெருவில் மனிதர்கள் நடமாட்டம் குறையலாம்.

22. ஜெயமோகன் இன்னும் பெரிய புத்தகம் எழுதலாம். vikram sethக்கும் அவருக்கும் யார் அதிக பக்கங்கள் எழுதியது, எழுதப்போவது என்கிற போட்டி உருவாகலாம். (விக்ரம் செத்தை அடிச்சுக்க முடியாது என்பது என் கருத்து. ஆனாலும் ஜெயமோகனைப் பற்றியும் ஒன்னும் சொல்வதற்கில்லை)

23. சேக்குவேரா படம் போட்ட தொப்பிகள் மற்றும் ஜட்டிகள் இந்தியாவில் பிரபலமடையலாம். அதை அணிந்து கொண்டிருக்கும் ஒரு யூத்திடம் இவர் யார் என்று கேட்டால் சட்டென்று அவர் “you dont know him. pity you. He is a great Rock Star!” என்று சொல்லலாம்.

24. ப்ளாஸ்மா டீவிக்களையும் ஐபாட்களையும் காமெராக்களையும் லேப்டாப்களையும் செல்போன்களையும் இந்தியர்கள் வாங்கி குவிக்கலாம். (Electronic wastesஐ என்ன செயவது என்பதை பற்றி கவர்மெண்ட் வழக்கம் போல யோசிக்காமல் இருக்கலாம்)

25. வழக்கம்போல ஏரிகளை தூர்வாராமல் விடலாம். புதிய நீர் தேக்கங்கள் கட்டப்படாமல் போகலாம். இன்னும் நிறைய சிமென்ட் ரோடுகளை போட்டு தண்ணீரை நிலத்தில் சேர விடாமல் தடுக்கலாம். பருவமழை அடித்து ஊத்தலாம். தண்ணீர் யாருக்கும் பயன் படாமல் கடலில் சென்று கலக்கலாம். T.கள்ளுப்பட்டி விவசாயிகள் மழை விட்ட மூன்றாம் நாள் தண்ணீருக்கு என்ன செய்வது என்று வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கலாம்.

26. அரசு ஏழை எளியோர் பயன்படும் வகையில் டீவிடி ப்ளேயர்க்ளை அன்பளிப்பாக தரலாம். மாசம் இரண்டு டீவிடிகளை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ள செய்யலாம். வீட்டில் நிறைய பெண்கள் இருந்தால் நாடக டீவிடிகளும் அவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம்.

27. மலிவு விலை சாராயம் ரேஷனிலே வழங்கப்படலாம். குடும்பத்தலைவர்களின் நலன் கருதி, அந்த சாராயத்தை பெண்களே வந்து வாங்கிப்போக வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் கொண்டுவரலாம்.

28. பெசன்ட் நகர் பீச்சில் மேலும் சில வெளிநாட்டு காபி கம்பெணிகள் கடை திறக்கலாம். ஒரு காப்பி 400ரூபாய் விற்கலாம். அதையும் வாங்குவதற்கு நான் க்யூவில் காத்துகிடந்து நின்று “one more sugar packet please” என்று எரிச்சலாக சிரிக்கலாம்.

29. மதுரையில் மேலும் பாலங்கள் கட்டப்படலாம். ஏதும் உபயோகிக்கப்படாமல் பேருந்துகள் மீண்டும் மதுரைக்குள்ளே வரலாம். எவ்வளவு பாலங்கள் கட்டப்பட்டாலும் தொழில் நுட்பம் வளர்ந்தாலும், திருப்பரங்குன்றம் மட்டும் ரயில்வே கிராஸிங்க்குள் அடைந்து கிடக்கலாம். அவசரமாக ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் என்கிற நிலை வரும் போது, கடவுளே லெவல் க்ராஸிங் திறந்திருக்கவேண்டும் என்று மனதுக்குள் ஒவ்வொரு திருப்பரங்குன்றத்துக்காரனும் வேண்டிக் கொள்ளலாம். அப்படி வேண்டிக்கொண்டு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிறபாடு இதை பற்றி கவலையே படாமல், அரசி சீரியலில் மூழ்கிப்போகலாம்.

30. திருப்பரங்குன்றத்திற்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளக்கல்லில் மேலும் மேலும் மதுரையின் மொத்த குப்பைகளும் கொட்டப்படலாம். நோய் பரவாமல் இருக்க எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருக்கலாம். வெள்ளைக்கல் மக்களைப் போல திருப்பரங்குன்றத்து மக்களும் ஈக்களுக்கு பயந்து திருமணங்களைக்கூட இரவில் நடத்தலாம். திருப்பரங்குன்றத்தில் ஈக்கள் மேலும் அதிகரிக்கலாம். சாப்பிடும் போது வந்தமரும் ஈக்களை விரட்டிவிட ஒவ்வொரு வீட்டிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசு கை விசிறிகள் வழங்கலாம். ஒரு நாளைக்கு ஒன்பத்திரண்டு தடவை மின்சாரம் தடைப்படும் பொழுதாவது உபயோகித்துக்கொள்ளலம் இல்லியா?
***
Muthu, Chill out whatcha yelling’ for?!