காந்தம்


(தொடர்கதை)

4

காலையில் இருந்த பரபரப்பும் எதிர்பார்ப்பும் முற்றிலும் கிராமத்தை விட்டு விலகி, அங்கிருந்த மொட்டை மலையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஏதோ நடக்கப்போகிறது என்று ஆசையோடு காத்திருந்த குழந்தைகள், வழக்கம் போல ஏமாற்றத்துடன் வீட்டினுள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். கிழவிகள் இன்னும் காளியம்மாவை அழைத்துக்கொண்டிருந்தனர். மேகங்கள் நிறைய தூரம் போயிருக்காது என்பது அவர்களுடைய எண்ணம். அழைத்து அழைத்து காளியம்மாவைக் காணாத கிழவிகள், அவளை நிந்திக்கத் தொடங்கினர். இந்த மழைக்காக எவ்வளவு வருடங்கள் காத்திருந்தாயிற்று? இன்னும் மழையை கடவுளாகத் தான் எண்ணிக்கொண்டிருக்க வேண்டுமா? அவர்களைப் பொருத்தவரை கப்பைக்கிழங்கு தான் கடவுள்.

வீட்டினுள் குமார், அத்தை ராக்கம்மா கொண்டுவந்திருந்த கொய்யா பழத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வாயில் முறுக்கு சில்லுசில்லாக உடைந்து கொண்டிருந்தது. அத்தையின் மேல் மிகுந்த பாசம் உண்டானது போல இருந்தது. செந்தில் தூங்கிப்போயிருந்தான். ராணி அவள் வைத்திருந்த எப்பொழுதோ வாங்கின உடைந்த மர பொம்மையை வைத்து ஏதோ அவளுக்கு மட்டும் புரிகிற மொழியில் பொம்மையை கொஞ்சிக்கொண்டிருந்தாள். ராக்கம்மா அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த சோற்றில் ஒரு சில பருக்கைகளை எடுத்து வெந்திருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நேரம் பிடிக்கவேண்டும். பக்கத்தில் ஒரு காலை நீட்டி மறு காலை மடக்கி புளி கரைத்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா. செல்லம்மாவின் முகத்தில் சோகமும் பயமும் அப்பிக்கிடந்தன. மிகவும் சோர்வாக இருந்தாள். எனினும் ராக்கம்மாவின் வருகை கொஞ்சம் ஆறுதல் அளிக்கவே செய்தது. மாணிக்கம் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

வெளியே அடித்துக்கொண்டிருந்த காற்றின் ஓசை குடிசையின் சிறிய துவாரங்களின் ஊடாக புகுந்து மிகுந்த இரைச்சலைக் குடுத்துக்கொண்டிருந்தது. “ஏன் இப்படி பேய்க்காத்தா அடிக்குது?” என்றாள் ராக்கம்மா சலித்துக்கொண்டே. நறுக்கி வைத்திருந்த வெண்டைக்காயை எடுத்து கொதித்துக் கொண்டிருந்த நீரில் போட்டாள்.கையில் தெரித்து விழுந்த ஒரு சில துளிகளை சேலை தலைப்பில் துடைத்துக்கொண்டாள்.ஏதும் பேசாமல் இருந்த செல்லம்மா ,”ராக்கு, பயமா இருக்குடி” என்றாள்.

ராக்கம்மா தனது அண்ணியின் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருப்பவள். அவளைப் போல தைரியசாலியை அவள் பார்த்ததில்லை. மிகுந்த சிரமப்பட்ட நேரத்தில் கூட அவளுடைய தைரியம் எல்லோருக்கும் தெம்பைக்கொடுக்கும். ராக்கம்மாவின் திருமணத்திற்கு செல்லம்மா எடுத்துக்கொண்ட சிரத்தைகள் ரொம்ப பெரியவை. வேறு குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் ஒரு தாயைப் போல இருந்து ராக்கம்மா விரும்பிய -ஏன அதற்கு மேலானதொரு- வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தாள். திருமணம் செய்து வந்த நாளிலிருந்து ராக்கம்மா மணமுடித்து செல்லும் வரை இருவரும் நெருங்கிய தோழிகள் போலவே இருந்தனர். இன்றளவும் அந்த நட்பு சிறு கீரல் கூட விழாமல் அப்படியே இருக்கிறது.

செல்லம்மாவின் பயத்தை அறிந்தவளாக ராக்கம்மா: “ஒன்னும் பயப்படாதீங்க அண்ணி. அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது. அவர் ஜம்முன்னு நாளைக்கு காலையில சாப்பிட ஏதாவது குடுடி பசிக்குதுன்னு வந்து நிப்பாரு பாருங்க” என்றாள். செல்லம்மா சிரித்துக்கொண்டாள். “ஏண்ணி விரக்தியா சிரிக்கிறீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். முருகன் இருக்கான். பாத்துப்பான்” என்றாள்.

அடுப்பின் மிக மங்கிய வெளிச்சத்திலும், முருகனின் சிரிப்பில் தெரிந்த சாந்தம், அவர்களை கவ்விக்கொள்வதாக இருந்தது.

***

ந்த நிமிடமும் திரிவிளக்கு அனைந்து விடலாம் என்று தோன்றியது. மெல்லிய காற்றில் அது இங்கேயும் அங்கேயும் என்ன செய்வதென்று தெரியாமல் ஆடிக்கொண்டிருந்தது. சில சமயம் இதோ மங்கிவிட்டேன் அணையப்போகிறேன் என்று சொல்வது போல கூனி குறுகும். அடுத்த நொடியிலே என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது போல ஒரே சீராய் நேர் கோட்டில் கம்பீரமாக நின்று ஒளிவிடும். விதியின் கைகளில் சிக்கிய மனிதர்களைப் போல, அடுத்த நொடியின் தீவிரத்தையும் திருப்பத்தையும் அறியாமல் அது இருந்தது.

“ராக்கு” “ராக்கு” என்று, தூங்கிவிடும் குழந்தைகளை எழுப்பிவிடாமல், மிக அமைதியாக ராக்குவை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தாள் செல்லம்மா. அயர்ந்த தூக்கத்திலிருந்த ராக்கு இரண்டு மூன்று முறை அழைத்தபிறகு, வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள். “என்ன அண்ணி தூங்கலையா?” என்றாள் தூக்கம் கலையாத கண்களை இடுக்கிக்கொண்டு. “இல்லடி. வலிக்குதுடி” என்றாள் செல்லம்மா. “கொஞ்சம் தண்னி கொடுடி” என்றாள். ராக்கு சட்டென்று எழுந்து ஓட்டமாக நடந்து, பானையை இருட்டில் தேடி அடிமட்டத்தில் கிடந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து விட்டு, என்ன செய்வதென்று தெரியாமல், அருகிலிருந்த மரக்கட்டையில் சாய்ந்து பயமாய் அண்ணியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். “அண்ணி, நான் தெக்குவீட்டு கிழவிய போய் கூட்டிட்டு வரவா?” என்றாள் ராக்கு.

செல்லம்மா, “ம்..ம்..வேகமா போடி. அப்படியே செந்திலையும், குமாரையும் தூக்கிட்டு போய் கவிஅக்கா வீட்ல படுக்கபோட்டுடி” “ராணி?” “ராணி முழிச்சா அழுவா. இங்கேயே இருக்கட்டும்” என்றாள் செல்லம்மா.

ராக்கு குமாரை எழுப்பி கையைப்பிடித்துக்கொண்டு, செந்திலை தோளில் போட்டுக்கொண்டு கதவுக்கொண்டியை விடுவித்துக்கொண்டு மெதுவாக வெளியே வந்தாள். குளிர்ந்த காற்று அவள் முகத்தை தாக்கியது. சில்லிட்டவள் வானத்தைப் பார்த்தாள். மிகுந்த நிசப்தத்துடன் நட்சத்திரங்கள் ஏதுமின்றி கரிய போர்வையை போர்த்தியது போல மர்மமாய் அவளைப் பார்த்தது வானம்.

தூரத்தில் நாய் குளிரில் முனகும் ஓசை கேட்டது. எதிர் குடிசையில், கிழவி கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு இவர்கள் வீட்டையே பார்த்துக்கொண்டு குத்தவைத்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய விழிகள் இமைக்காமல் இருந்தன.

ராக்கு வேகவேகமாக நடந்தாள். அரை தூக்கத்தில் குமார் “அத்தை எங்க போறோம்?” என்றான். கல் தடுக்கி கீழே விழுந்தான். பின் எழுந்து கொண்டு ஒன்றும் பேசாமல் நடந்தான்.

***

மின்னல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமத்தை ரசித்து ரசித்து படம் பிடித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது இடி ஓசையும் மிகச் சன்னமாக கேட்டது. குளிர்ந்த காற்று மிக மெதுவாய் வீசிக்கொண்டிருந்தது. எதிர்வீட்டு கிழவி வானத்தையும் செல்லம்மாவின் வீட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது மகன் கூரையை ஒரு கையில் பிடித்தவாறு நின்று பீடிப் புகையை விட்டுக்கொண்டிருந்தான். அவனது மனைவி செல்லம்மாவின் வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். மேலும் சில பெண்களும் இருந்தனர். அவர்கள் எதற்காகவோ இறைவனை வேண்டிக்கொண்டிருந்தனர்.

தெக்கு வீட்டு கிழவி செல்லம்மாவின் பாதங்களை தேய்த்துவிட்டுக்கொண்டிருந்தாள். ராக்கு செல்லம்மாவின் கைகளை நீவிவிட்டுக்கொண்டிருந்தாள். செல்லம்மா ராக்குவையே பார்த்துக்கொண்டிருந்தாள். செல்லம்மா அனுபவிக்கும் வலி அவளது கண்களின் வழியாக ராக்குவை அடைந்தது. ராக்குவின் வாய் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது. “கட்டு கட்டு கதறிடக்கட்டு” என்ற வரிகள் தெக்கு வீட்டு கிழவிக்கு கேட்டது. ராணி அங்கிருந்த ஏதோ ஒரு பெண்ணின் மடியில் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் இதை ஏதும் அறிந்திருக்கவில்லை.

ஒரு சில வீடுகள் முழித்துக்கொண்டன. மின்னலையும் இடியையும், குடிசைகளை விட்டு வெளியேறி, ஆர்வமாய் பார்த்தனர். வெகு சிலர் காளியம்மன் கோவிலை நோக்கி கை உயர்த்திகும்பிட்டனர். வெகு சிலர் குத்துக்காலிட்டு அவரவர் வாசல் படியிலே உட்கார்ந்து கொண்டனர். இப்பொழுது காற்று சுத்தமாக நின்றுவிட்டிருந்தது. எங்கும் நிசப்தம்.

செல்லம்மாவின் எதிர்வீட்டு வாசலில் மவுனமாக வெறித்துக்கொண்டிருந்த கிழவியின் கோடுகள் நிறைந்த முகம் சற்றே விரிந்தது. கோடுகள் பெரிதானது போல இருந்தது. அவளது உளர்ந்த விரிந்த உதடுகள் லேசாக புண்முறுவல் பூத்தன. பின் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். புகைப்பதை நிறுத்தி விட்டு, அவளது மகன், அவளை விசித்திரமாக சற்றே பயத்துடன் பார்த்தான். சில்லென்ற மழைத்துளி ஒன்று அவனது புறங்கையில் விழுந்தது. அவன் சிலிர்த்து வானத்தைப் பார்த்தான். மேலும் சில மழைத்துளிகள் அவனது நெற்றியில் இறங்கின.

செல்லம்மாவின் வீட்டினுள் மிகுந்த சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு குழந்தையின் அழுகுரல் அந்த தெருவெங்கும் ஒலித்தது. கிழவி மிகுந்த சந்தோஷத்துடன் குதித்துக்கொண்டே “ராசா” என்று கதறிக்கொண்டே செல்லம்மாவின் வீட்டுக்குள் நுழைந்தாள். மண்ணின் ஈர வாசனை அவர்களது நாசிகள் எங்கும் நிறைந்திருந்தது.

***

ழை நின்றபாடில்லை. இடியும் மின்னலுமாக மழை மொத்தமாக சேர்த்து வைத்து அடித்தது. ஆழ்ந்த ஓசையுடன் காற்று விடாமல் அடித்துக்கொண்டேயிருந்தது. எப்பொழுது கூரை பிய்த்துக்கொள்ளும் என்று பயங்கொள்ளும் அளவுக்கு கூரை சத்தமிட்டுக்கொண்டிருந்தது. கூரையில் இருந்த சில ஓட்டைகள் வழியாக மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. குமார் பேயரைந்தது போல ஒரு மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மழையும். புயலும். மின்னலும். இடியும்.

அவ்வப்போது சில துளிகள் செல்லம்மாவின் வலது கண்ணத்தில் தெரித்தது. செல்லம்மா தனது குழந்தையை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ராக்கு கீழே படுத்து காற்றின் இரைச்சலை கவனிப்பது போல கிடக்கும் தனது புது மருமகனின் தலையை கோதிக்கொண்டிருந்தாள். பழைய சேலையில் சுற்றப்பட்டிருந்தவனை அள்ளி எடுத்தாள். “என் ராசா” என்று அழுத்தமாக அவனது பிஞ்சுக் கண்ணத்தில் முத்தம் பதித்தாள். “அண்ணி நான் இவனுக்கு முன்னவே பேர் வெச்சுட்டேன்.” “என்ன பேருடி வெச்சுருக்க உன் ஆச மருமவனுக்கு” “ம்ம்..ஆச மருமவன் தான்..தெக்குவீட்டு கெழவிய கூப்பிட்டு வரும்போதே காளியம்மாவ கும்பிட்டுதான் வந்தேன். மருமக பொறந்தா காளியம்மான்னு வெக்கிறேன். மருமகன் பொறந்தா காளின்னு வெக்கிறேன்னு. அதனால இவன் பேரு காளி. கா…ளி..” என்றாள். குமாரும் சேர்ந்து கொண்டு “கா…..ளி…” என்றான்.

காளி கருப்பாக, ஒடிசலாக இருந்தான். ஆனால் அவன் முழித்து வீரிட்டு அழுகும் போது அவனது கண்கள் பளபளப்பாக கூர்மையாக இருந்தது. அழுகையால் கூட கண்களில் பளபளப்பு வந்திருக்கலாம்.

***

ழை வலுத்துக்கொண்டே போனது. குளிர் அதிகரித்தது. வீட்டில் யாவரும் உறங்கியிருந்தனர். ராக்கம்மாவும் தான். மருமகனைக் கொஞ்சி கொஞ்சி அலுத்துப் போயிருந்தாள். குமார் வெறும் தரையில் படுத்திருந்தான். ராணி நன்றாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். செல்லம்மாவின் உடல் சில்லிட்டிருந்தது. கைவிரல்கள் மிகவும் குளிராயிருந்தது. அவளுக்கு உடலெங்கும் நடுக்கமெடுப்பதைப் போன்று இருந்தது. கால்கள் இழுத்துக்கொண்டன. அவள் மிகுந்த பயத்துடன் கூரையிலிருந்து வழியும் மழைத்துளிகளை வெறித்த வண்ணம் இருந்தாள்.ராக்குவை அழைக்க நினைத்தாள். வார்த்தை தொண்டையிலே நின்று கொண்டது. ராக்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

திடீரென்று, செல்லம்மாவின் கைகள் ஒரே சீராக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன.

***

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

அஜித்துக்கு ஒரு (சீரியஸ்) கதை

சுடரில் நான் எழுதிய அஜீத்துக்கான கதையை(?!) படித்த நிறைய நபர்கள் என்னை திட்டியிருந்தனர். திட்டியவர்களில் என் அண்ணனும் ஒருவர். “முத்து நீ இப்படி செஞ்சிருக்கக் கூடாது. ஒழுங்கா ஒரு சீரியஸ் கதை எழுதியிருக்கவேணும்” என்றார். நான் என்ன பண்ணட்டும் நான் இன்னும் ஆழ்வார் effect லிருந்து மீண்டு வரவில்லை. தவிரவும் நான் கதாசிரியனும் அல்ல. ஏதோ சிறுகதை என்ற பெயரில் ஏதோ எழுதி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்:).

சரி கதைக்கு வருவோம். என்கிட்ட அஜீத்துக்கு(எல்லா ரசிகர்களும் அவர்களுடைய ஹீரோக்களுக்கு ஒரு கதை எப்போதுமே ரெடியாக வைத்திருக்கிறார்கள். எனக்கு ரஜினி ஜேம்ஸ்பாண்ட் -ofcourse தமிழில் தான் – கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக உண்டு!) ஒரு கதை இருக்குன்னு சொன்னார் என்னுடைய அண்ணன். சொல்றேன்னு சொல்ல ஆரம்பிச்சார்.

–பார்ட் 1-
அஜித் ஒரு மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்தவர். படித்தவர். ஏதோ ஒரு பேச்சிலர் டிகிரி (BSc Chemistry என்று வைத்துக்கொள்ளுங்களேன்!). வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்கிறார். வழக்கம் போல வேலை (அல்லது வேலைக்கான வேளை!) வரவில்லை. ஏதேதோ சின்ன சின்ன வேலைகள் கைக்கும் பத்தாமல் வாய்க்கும் பத்தாத சம்பளத்துடன் வேலை செய்கிறார். TNPSC பரிட்சை அல்லது ஏதோ ஒரு கவர்மெண்ட் வேலைக்கான பரிட்சை எழுதி தேர்ச்சிபெறுகிறார். அதிர்ஷ்டவசமாக ஏதும் பணம் கொடுக்காமல் அவருக்கு குமாஸ்தா (அல்லது கிளார்க்) வேலை கிடைத்துவிடுகிறது. வேறொரு ஊரில்.

மாதச் சம்பளம் பிடித்தம் போக கையில் 4500 ரூபாய். லஞ்சம் வாங்க மனமில்லை, வாய்ப்பும் இல்லை. என்ன சம்பளமாக இருந்தாலும் சந்தோஷமாக வேலையில் சேருகிறார். மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்கிறார். வாழ்க்கை உருண்டோடுகிறது.

–பார்ட் 1 end–

— பார்ட் 2–
ஒரு நாள் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருக்கும் போது எட்டாவது ஷீட்டில் ஷ்ரேயா தோன்றும் பம்ப்செட் விளம்பரத்துக்கு கீழே ஒரு பெட்டிச் செய்தியைப் பார்க்கிறார். அந்த செய்தி: பிரபல கலைக்கல்லூரி புரபொசர் : சயன்ஸ் சாமியாண்டி (பேரு பிடிக்கலைன்னா, வேற நல்ல பெயர் நீங்களே வெச்சுக்கங்கப்பா!) காணவில்லை! சாமியாண்டி அஜித்துக்கு பாடம் எடுத்தவர். என்ன பாடம் யூகியுங்கள்: chemistry. correct!

அஜீத் வீட்டுக்கு போன் செய்து அம்மாவிடம் விபரம் கேட்கிறார். அம்மா, ஆமாடா அவரக் காணல எங்க போனார்னு தெரியல்ல. அவங்க மனைவிக்கும் தெரியல. சண்டை கிண்டை ஏதும் கிடையாதாம். கடத்தலா இருக்குமோன்னு போலீஸ் சந்தேகப்படுது என்கிறார்.

அஜீத் அத்துடன் அந்த பிரச்சனையை மறந்து விட்டு தனது கிளார்க் வேலையை தொடருகிறார். மற்றொரு நாள் மற்றொரு கல்லூரியின் chemistry புரபொசர் கடத்தப்படுகிறார். அடுத்த சில நாட்களில் மற்றொரு புரபொசர். இப்படி பத்து புரபொசர்கள்.

கதையை இங்கே நிறுத்தி விட்டு, என் அண்ணன் அதுக்கப்புறம் யோசிக்கனும் என்றார். என்னத்த யோசிக்கறது. முடிச்சறவேண்டியது தான? அவர்களை கடத்தியது ஒரு தீவிரவாத கும்பல். அவர்கள் கடத்தப்பட்ட கெமிஸ்ட்ரி புரபொசர்களை வைத்து மிக அதி நவீனமான வெடிகுண்டு ஒன்றை தயாரிக்கிறார்கள். அஜீத் தீவிரவாத கும்பலைக் கண்டுபிடித்து அழித்து புரொபொசர்களை மீட்டுக்கொண்டு வருகிறார். (புரொபசர்கள் மீண்டும் கல்லூரிக்கு வந்து வழக்கத்தை விட அதிகமாக மொக்க போட ஆரம்பிக்கிறார்கள். மாணவர்கள் கொலை வெறியுடன் அஜித்தை தேடுவது இரண்டாம் பாகமாக எடுத்துக்கொள்ளலாம்)

ரமணா, இந்தியன், அந்தியன், பாட்சா போன்ற படங்களின் தாக்கம் நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பது மட்டும் புரிகிறது.

–பார்ட் 2 end–

–பார்ட் 2 வேற மாதிரி–
எனக்கு முதல் பாதி கதையுடன் சம்மதமே. ஆனால் என்னுடைய இரண்டாவது பார்ட் கொஞ்சம் வேறு மாதிரி. ஏற்கனவே பார்த்திருப்பது தான்.

இந்த நாட்டில் இப்பொழுது இரண்டு பகுதிகளாக இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒரு பகுதி தங்களது முப்பது வயதுக்குள் எப்படியாவது மூவாயிரம் ரூபாய் சம்பளத்தை எட்டிப்ப்டித்துவிடத் துடிப்பவர்கள். மற்றொரு பகுதி : தங்களது இருபத்தியைந்து வயதுக்கும் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தைப் பார்த்து விடுபவர்கள்.

–நன்றி: விகடன். (ஞாநி)

நமக்கு (சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள்) ஊரில் நிறைய நண்பர்கள் இருக்ககூடும். அந்த நண்பர்கள் நம்மைப்போல சாப்ட்வேர் படிக்காமல் ஏதேனும் BBA யேவோ அல்லது MBA யேவோ படித்துவிட்டு ஏதோ ஒரு வேலையில் மூவாயிரமோ, ஐந்தாயிரமோ வாங்கிக்கொண்டிருக்கக்கூடும். நாம் நாட்டை விட்டு வெளியேறி வந்து விட்டதால் அவர்களுடன் பழக வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்(கிட்டத்தட்ட மறந்தே போயிருப்போம். ஏனினும் ஊருக்கு போகும் போது அவர்களை கண்டிப்பாக சந்தித்திருப்போம். அப்பொழுது நாம் அவர்களிடம் நட்பு மாறி ஒரு அந்நியோன்மைத் தன்மை வந்திருப்பதைக் காண் முடியும். வாடா போடா என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் வாங்க போங்க என்று பேச ஆரம்பித்திருக்கலாம்)

இப்படி யோசித்துப்பாருங்கள்: ஒரு நண்பர் வட்டாரம் இருக்கிறது. அவர்கள் சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர்கள். ஒரு தெருவில் வசித்த நண்பர்கள். ஒன்றாக படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாக சைட்(?!) அடித்தவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் நன்றாக படித்து (அல்லது கொஞ்சம் காசு செலவழித்து என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்துவிடுகின்றனர்) இருவரைத் தவிர. இந்த இருவரும் BBA ஏதோ ஒரு கலைக்கலூரியில் படிக்கின்றனர். அவர்களுடைய என்ஜினியரிங் கல்லூரி நண்பர்கள் படித்துக்கொண்டிருக்கும் போதே சென்னையில் ஒரு பெரிய software company இல் place ஆகி விடுகின்றனர். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருக்கின்றனர்.

அதில் ஒருவர் அஜித். அஜித் மிகவும் கஷ்டப்பட்டு TNPSC பரிட்சை எழுதி ஏதோ ஒரு கவர்மெண்ட் வேலை வாங்கிவிடுகிறார். எனினும் சம்பளம் மூவாயிரம் ரூபாய் தான். உடன் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் சாப்ட்வேர் மக்கள். மாதம் முப்பதாயிரம் சம்பாதிப்பவர்கள்.

இந்த நண்பர் குழுவில் நடக்கும் மனப்போராட்டங்களே கதை. அந்த நண்பர் குழுவில் சேரவும் முடியாமல் விலகவும் முடியாமல் தத்தளிக்கும் இளைஞராக அஜித். ஒரு நேரச் சாப்பாடு ஹோட்டலில் சாதாரணமாக ஐம்பது ரூபாய் இருக்கும் போது மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அஜித் எப்படி சமாளிப்பார்? ஒரு நேர treat க்கு ஐந்தாயிரம் ரூபாய் தாராளமாக செலவழிக்கும் கூட்டத்துடன் எப்படி ஒட்டுவார்? ஒரே வீதியில் இருந்து கொண்டு அவர்கள் காரில் போகும் போது, இவர் பழைய ஓட்டை சைக்கிளில் (அல்லது பெரும் கூட்டமாக இருக்கும் பல்லவன் பேருந்தில்) எப்படி போவார்?

இது வெறும் கரு மட்டுமே. கதை திரைக்கதை நன்றாக அமைக்கலாம். இதில் இல்லாத நகைச்சுவை இல்லை. சோகம் இல்லை. சந்தோஷம் இல்லை. அன்பு இல்லை. நிராகரிப்பு இல்லை. பொறாமை இல்லை. மனப்புழுக்கம் இல்லை. நட்பு இல்லை. காதல் இல்லை.

மேலும் சமுதாயத்தில் பின் தங்கிவிட்ட பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கையை அனைவரும் திரும்பிப்பார்க்க உதவும். ஒரு வறுமையின் நிறம் சிவப்பு போல. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இருந்தது வேறு பிரச்சனை. எல்லோருக்கும் வேலையில்லை. இப்பொழுது வேறு பிரச்சனை. economical gap.

அஜித் மிகச்சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.வாலியில் ஊமை அஜித் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போது, interviewer அவரை சிரிக்க சொல்லுவார், அப்பொழுது சிரிப்பாரே ஒரு சிரிப்பு, அந்த சிரிப்பில் ரசிகனானேன் நான். அதற்கப்புறம் நிறைய படங்கள்: முகவரி, அமர்களம் (ரகுவரனிடம் “நீ கடவுளா” என்று குடித்து விட்டு கேட்பது), வில்லன். இப்பொழுது வரலாறு: பெண் தன்மை கொண்ட கேரக்டரை இவ்வளவு சிறப்பாக யாரும் இது வரை செய்ததில்லை! அவரை விட்டால் இந்த மாதிரி சமூக பிரச்சனைகளை நடிக்க வேறு யார் இருக்கிறார்கள்(இவ்வாறான கதாப்பாத்திரம் தான் முகவரியில் செய்தார். எவ்வளவு அழகாக செய்திருந்தார்?)

எப்பொழுதுமே ஹீரோவாக (அடிதடி சண்டை போட்டுக்கொண்டு, பழிவாங்கிக்கொண்டு, தீவிரவாதிகளை துவம்சம் செய்துகொண்டு) தான் இருக்கவேண்டும் என்றில்லை. சில சமயங்களில் (வெகு சில சமயங்களில்) மக்களில் ஒருவராக இருப்பதில் தவறில்லையே? ஏன் கமலஹாசன் அவ்வப்போது வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்கள் செய்யவில்லையா? ஏன் அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவான ரஜினி ஆறிலிருந்து அறுபது வரை செய்யவில்லையா?

பருத்தி வீரன்

லிட்டில் இன்டியாவிலிருந்து யூசூன் போவதற்கு 857 பஸ் எடுத்தால் கண்டிப்பாக முக்கால் மணி நேரம் ஆகும். எனக்கு இப்பொழுதெல்லாம் பஸ்ஸில் தூக்கம் வருவதில்லை. உடன் வரும் நண்பரும் செல் போனையே கட்டிக்கொண்டு அழுபவர். SMS அடித்தே ஓய்ந்த கைகள் அவரது கைகள். ஒரு முறை அவருடன் பீச்சுக்கு சென்றிருந்த பொழுது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நான் என்ன செய்வதென்று தெரியாமல் கடலில் விடாது அடித்து கொண்டிருக்கும் அலைகளையும், வானத்தில் நிமிசத்துக்கு ஒரு முறை (அல்லது இரு முறை) தரை இறங்கிக்கொண்டிருக்கும் விமானங்களை எண்ணிக்கொண்டிருந்தேன், அவர் நான் அருகின் அமர்ந்திருப்பது தெரியாமல் ஹாயாக தனது ஆஸ்திரேலிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடித்து விட்டு சாரி முத்து என்று மட்டும் சொன்னார். எனவே இந்த முறை சற்று உஷாராக ஆனந்த விகடன், ரிப்போர்ட்டர் மற்றும் இந்தியா டுடே வாங்கிக்கொண்டேன். முக்கால் மணி நேரம் பொழுது போக வேண்டுமே.

நாங்கள் யூசினில் பருத்தி வீரன் படம் பார்க்கச் சென்றோம். முதலில் அமீருக்கு HatsOff. அவரது மௌனம் பேசியதே படமே அப்பொழுது வந்து கொண்டிருந்த குப்பைகளுக்கு (தமிழன், ஜெமினி) மத்தியில் ஒரு அழகான கவிதை. கடைசி டிவிஸ்ட் ஒரு surprise. ராம் பத்தி நான் சொல்லத்தேவையில்லை.

பருத்திவீரன் மற்ற இரண்டு படங்களையும் தூக்கி அல்லேக்காக சாப்பிட்டு விட்டது. எதார்த்தமான காட்சிகளால் படம் நம்மைக் கட்டிப்போடுகிறது. மதுரைத் தமிழ் வசனங்கள் ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும், பாடல் பாடும் நாட்டுப்புற கலைஞர்கள் ஆகட்டும், பின்னனி இசை ஆகட்டும், நடிகர்கள் (பிரியாமணி, சரவணன் மற்றும் கார்த்தி) எல்லோரும், யுவனின் ரீரெக்கார்டிங் என்று அனைத்தும் மிகச்சரியாக அழகாக அமைந்திருக்கின்றன. well done. படத்தின் முதல் பாதி கெட்ட அலம்பல். மதுரைக்குசும்பு ஒவ்வொரு ப்ரேமிலும் இருக்கிறது.

நான் இன்றிரவு சாப்பிடவில்லை. படத்தின் பாதிப்பு என்னிடம் இன்னும் இருக்கிறது. தியேட்டரிலே அழுது விட்டேன் (மகாநதிக்கப்புறம் நான் தியேட்டரில் அழுத படம் இது). தியேட்டரை விட்டு வந்ததும் என்னை முத்தழகு என்று அழைத்த நண்பர் ஒருவர் செமத்தியாக என்னிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். எப்படி இவரால் இப்படி ஒரு படத்தைப்பார்த்து விட்டு வந்து காமெடி பண்ண முடிகிறது என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை.

அந்த நண்பர் சொன்னார் : முத்து, திஸ் இஸ் ஜஸ்ட் எ சினிமா, சோ டேக் இட் ஈஸி. சினிமா தான். பிம்பம் தான். ஆனால் மனது கேட்கமாட்டேன் என்கிறதே. முத்தழகு (பிரியாமணி) “என்னைத் தூக்காதடா தூக்காதடா” என்று கதறும் போது -அதை நினைக்கும் இந்த நொடி கூட- நெஞ்சு வெடித்து விடுவது போல இருக்கிறதே. துக்கம் தொண்டையை அடைக்கிறதே. நான் நினைத்ததெல்லாம் ஒன்று தான் : படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவம் எங்காவது கண்டிப்பாக நடந்திருக்கும். அந்த பெண்ணும் அவரது காதலும் கண்டிப்பாக கதறியிருக்கும். அவரை நினைத்து தான் எனக்கு அழுகை வந்தது. அந்த சம்பவத்தை நினைத்து தான் மனது கிடந்து அடித்துக்கொள்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஏன் இப்படி நடக்கிறது?

படத்தில் இப்படித்தான் முடிவு இருக்கப்போகிறது என்றூ யூகித்தவுடன் நான் என் நண்பனிடம் போய்விடலாமடா என்று கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் பொருடா என்றான். அப்புறம் கொஞ்ச நேரத்தில் அவன் எழுந்து போய்விட்டான். நான் கடைசி வரை படத்தைப் பார்த்து விட்டு தான் வந்தேன். வரும் வழியிலெங்கும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தும் ஏதும் பேசாமல் இருக்கவே, வீட்டிலிருந்த படம் பார்க்காத மற்றொரு நண்பர் ஏன் எல்லோரும் இப்படி இடி விழுந்தது போல உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கேட்ட பிறகு தான் நாங்கள் படத்தை பற்றி பேச்சு எழுந்தது. படத்தின் தாக்கம் அப்படி.

ஒரு பெண் சாகக்கிடக்கிறாள் என்று தெரிந்து எப்படி நான்கு நபர்களால் அவள் கற்பழிக்கப்படுகிறாள்? அவர்களின் மனிதாபிமானம் எங்கே போனது? அதிலும் ஒருவன் கற்பழிப்பதற்கு ஆய்த்தமாகிற பொழுது, மற்றொருவன் பக்கத்திலிருந்து நாய் போல பார்த்து, ஒரு தடவ என்று அவளை முத்தமிட்டு செல்ல எப்படி முடிகிறது? படம் தான் என்று ஒதுக்கி தள்ளிவிட முடியவில்லை. இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா என்ன?

இந்த வார ரிப்போர்ட்டரில் கூட இது போன்ற ஒரு சம்பவம் காவல் நிலையத்திலே நடந்திருந்ததாக செய்தி வந்திருந்தது. கற்பழிக்கப்பட்டவர் பதினைந்து வயது பெண்ணிற்கு தாய். நம்மில் மனிதாபிமானம் வற்றிக்கொண்டே போகிறதா? மனசாட்சி என்ற ஒன்று இல்லாமலே போகிறதா? மிருகங்கள் தானா நாம்? அதிலும் படத்தில் அந்த பெண் கதறுகிறாள்: என்ன விட்டுங்கடா. எனக்கு நாளைக்கு கல்யாணம்டா என்கிறாள். எவ்வளவு தைரியமான பெண் அவள். அவளுக்கு தான் வீரன்(கார்த்தி) மீது எவ்வளவு காதல்? சிறு வயதிலிருந்து அவனைக்காதலித்து. அப்பாவை, அம்மாவை வெட்டிப்போட்டு விட துணிந்து, தற்கொலைக்கு முயன்று, வீரனிடமும் அப்பாவிடமும் அடிவாங்கி வீரனின் மனதில் நுழைந்து அவனது காதலை பெற்று அது நிறைவேறும் போது கற்பழிக்கப்பட்டு இறப்பது எவ்வளவு கொடூரம்? வீரனிடம்: “உன் பாவம் எல்லத்தையும் அவைங்க என் கிட்ட இறக்கி வெச்சுட்டு போயிட்டாய்ங்கடா” என்று சொல்லும் போதும் “டேய் என்ன காணாப்பொணமா ஆக்கிடுடா” என்று கதறும் போதும் இந்த உலகத்தில் வாழ்வதற்கான அர்த்தங்கள் மிகவும் குறைந்து போய்விட்டதைப்போன்றே தோன்றுகிறது. மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக வெளித்தோற்றத்திற்கு தோன்றலாம். ஆனால் இளவஞ்சி சொன்னதைப் போல ” மனிதர்களின் குணம் சூழ்நிலைகளுக்கு தகுந்தது போல மாறும்” என்பது உண்மை என்றே தோன்றுகிறது. மனிதனாக இருந்தவன் கண நேரத்தில் கொடுரமான மிருகம் ஆகிவிடுகிறான்.

அதனால் தான் சர்வசாதரணமாக படித்துக்கொண்டிருக்கும் பெண்களை பஸ்ஸ¤க்குள் வைத்து எறித்து விட துணிகிறோம். எவ்வளவு திமிர் இருந்தால் பஸ்ஸ¤க்குள் பெண்களை வைத்து எறித்திருப்பார்கள்? அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்ன? விகடனில் ஞானி சொல்லியிருக்கும் (ஆரசியல் சார்ந்த) கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சொல்லப்போனால் : விஜயகாந்த் சொன்னது போல அரபு நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் போல கொடுக்கவேண்டும்.

பருத்தி வீரன் படத்தில் வந்த லாரி டிரைவர்கள் என் கைகளில் கிடைத்தால் நான் வேறு மாதிரியான தண்டனை வழங்குவேன் (எனக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில்). அவர்களைக் கொல்லக் கூடாது. நந்தாவில் கொடுப்பதைப் போன்ற தண்டனை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். வாழ்நாள் பூராவும் அவர்கள் தாங்கள் செய்த கொடுரத்தை நினைத்துப் பார்த்து கொண்டேயிருக்கட்டும். அவர்கள் திருந்துவதற்கு சான்ஸ் தரக்கூடாதா என்று புல்ஷிட் மனித உரிமை மண்ணாங்கட்டி பேசுபவர்களுக்கு: அது தான் கொடுத்திருக்கிறோமே. உயிரை விட்டு வைத்திருக்கிறோமே. அவர்கள் வாழட்டும். செத்துக்கொண்டே வாழட்டும்.

சாரு நிவேதிதா சொல்வது போல் இங்கு தான் பள்ளிக்குழந்தைகளை ரேப் செய்த ஆசிரியர்கள் transfer மட்டும் பெற்றுக்கொண்டு தப்பித்துக்கொள்ளலாம். அடுத்த பள்ளிக்கூடத்தில் குழந்தைகளே இல்லையா என்ன? கேட்டால் : ஜனநாயகம். மண்ணாங்கட்டி.

இங்கு பத்திரிக்கைகள் செய்யும் கொடுமையும் டூ மச். ரிப்போர்ட்டரில் விபச்சார புரோக்கர் பிரசாத்தின் detailed பேட்டி வந்திருந்தது. அவர் ஏதோ corporate CEO ரேஞ்சுக்கு தனது தொழில் நுணுக்கங்களை சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களும் துருவி துருவி “உங்களை புதிதாக தொடர்பு கொள்பவர்கள் எப்படி தொடர்புகொள்ளலாம்” என்று மிக முக்கியமான கேள்விகளை கேட்டிருந்தார்கள். அவர் படு கேஸ¤வலாக கூலாக பதில் சொல்லிக்கொண்டுருந்தார். “என்னிடம் வராத நடிகைகளே இல்லை” என்ற தலைப்பு வேறு. (நான் ரிப்போர்ட்டரை வாங்கவில்லை என்னுடன் வந்த நண்பர் தான் வாங்கினார். நான் பிரசாத்தின் பேட்டியை படிக்கவில்லை. என் நண்பர் படித்து விட்டு அதிர்ச்சிக்குள்ளாகி என்னிடம் காட்டினார்.) கண்ணி கழியாத பெண்கள் எப்பொழுதும் என் கைவசம் இருப்பார்கள். VIPகள் கேட்டவுடன் நான் அனுப்பிவைத்து விடுவேன் என்கிறார். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது. இதை இவ்வளவு detailed ஆக பத்திரிக்கை வெளியிட வேண்டுமா என்ன?

இன்னொரு புறம் தாலி சாமியார் (அவர் பெண்கள் போல தாலி, வளையல்கள், மிஞ்சி என்று போட்டுக்கொண்டிருக்கிறார்), சாக்கடை சாமியார் என்று ஏகத்துக்கும் சாமியார்கள். எத்தனை சாமியார்கள் கைது செய்யப்பட்டாலும், மக்கள் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்க காத்துக் கிடப்பதைப் பார்க்கும் போது கோபமே வருகிறது. பாவமாகவும் இருக்கிறது. மக்களை குறை சொல்லுவதா (கண்ணி கழியாத பெண்கள் கேட்கும் VIP. சாகப்பிழைக்க கிடக்கும் பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து ஒன்றன் பின் ஒருவராக ரேப் செய்வது. காக்கும் கடமையில் இருப்பவர்களே கற்பை சூரையாடுவது. பாவடை சாமியார் ஜட்டி சாமியார் என்று ஏதோ ஒரு சாமியாரிடம் ஆசி பெற காத்து ஏமாறுவது) அல்லது அரசியல் தலைவர்களை குறை சொல்லுவதா? முதலில் இவர்களுக்கு தலைவர்கள் தேவையா? உங்களையெல்லாம் தௌஸன்ட் பெரியார் வந்தாக்கூட திருத்த முடியாதுடா என்று சொல்வது தான் சரியோ?

மற்றபடி படம் மிக மிக அருமை. ஒவ்வொரு காட்சியும் அருமையாக கிராமத்தை அச்சு அசலாக நம்மிடையே கொண்டுவந்திருக்கிறார். ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்தது போன்றே ஒரு எண்ணம். எவ்வளவு விசயங்களை இந்த தலைமுறை குழந்தைகள் இழக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தில் சிறுமி முத்தழகு சிறுவன் வீரனிடம் “டேய் டேய் நான் உங்கூட சீட்டிடா (பழம்)” என்று சொல்வது அழகாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த ஜெனரேசன் குழந்தைகள் என்னவென்று கேட்ப்பார்கள். அப்பத்தாக்களை விட்டு, அம்மாச்சிகளை விட்டு, அம்மாவை, அப்பாவை, சித்திகளை விட்டு, அண்னன்களை அக்காக்களை விட்டு நாம் எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம்? ஈமெயிலில் வந்த சாப்ட்வேர்மக்களைப் பற்றிய கவிதையின் ஒரு வரி ஞாபகம் வருகிறது : நம் ஒவ்வொருவரின் வீட்டு திண்ணையிலும் வாழப்படாமல் வாழ்க்கை மீந்து கிடக்கிறது.

ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைக்கலாம். முத்தழகுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கண்ணீர் துளிகள். நான் வேறு என்ன செய்ய முடியும்? ப்ளீஸ் அமீர் இது போல படங்கள் தொடர்ந்து எடுங்கள், ஆனால் க்ளைமாக்ஸ் இவ்வளவு சோகமாக வைக்காதீர்கள். எனது பணிவான வேண்டுகோள்.

சுடர் : தனித்தீவு

சுடர் இளவஞ்சிகிட்ட இருந்து ரொம்ப பிரகாசமா என்கிட்ட வந்திருக்கு. அதை அணைச்சுடாம நிர்மல் கிட்ட கொடுத்திடனும்ங்கிறது தான் நேத்திலிருந்து எனக்கு ஒரே சிந்தனை. அதுவும் இளா வேற ஒரு தினுசா கேள்வி கேட்டிருக்கார். அஜீத்துக்கு கதை, ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மட்டுமே மனிதனின் குணாதிசயங்களை கண்டுகொள்ளலாம், அப்புறம் ஆறுதலுக்கு ஒரே ஒரு ஈசியான கேள்வி : நல்ல தமிழில் எழுதாதவர்களைப் (இளாவை ப் போலவாம்! இவர் நல்ல தமிழில் எழுத மாட்டாராம்! ஹம்.. நான் நல்ல தமிழில் எழுதுகிறேனாம். ஐயகோ!) படிக்கும் போது நான் என்ன நினைக்கிறேன் என்று நான்கு கேள்விகள்.

ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள்

கேள்விகளைப் படித்தவுடன் BE ஏழாவது செமஸ்டரில் LIC பரிட்சை question paper ஐ பார்த்து முழித்த முத்து, போல முழித்தேன். நாலு கேள்கிகளில் ஒரே ஒரு கேள்விக்கு தான் திட்டவட்டமாக answer தெரிகிறது. மத்த கேள்விகள் எல்லாம் abstract class போல, என்னவென்று தெரியும், எப்படியென்று தெரியாது! தீவுக்கு போவதா? தனியா ஒரு மாசமா? ஐந்து பொருட்கள் எடுத்துப் போக வேண்டுமா? பதில் தெரியாம சட்டுன்னு கூகிள் கிட்ட கேக்காலாமான்னு கூட யோசிச்சேன். என்ன பண்றது எதுக்கெடுத்தாலும் கூகிள்ட்ட கேட்டு கேட்டே பழக்கமாகிடுச்சு.

என்னுடைய கலீக் ஒருத்தர் சொன்னார் : உனக்கு, ஒரு செல் போன், நிறைய காபி , அப்புறம் லேப்டாப் இருந்தா போதாதா முத்து, ஒரு மாசம் ஓட்டிடுவேயில்ல என்றார். உண்மைதான். ஆனா செல்போனுக்கு பேட்டரி சார்ஜ் போயிடுச்சுன்னா எங்க போய் சார்ஜ் பண்றதாம்? என்னோட லேப்டாப் கூட இரண்டு மணி நேரத்துக்கு மேலே சார்ஜ் தங்காது என்றேன். அப்படீன்னா ஒன்னு செய் முத்து, பேசாம நிறைய பேட்டரி எடுத்துட்டு போயிடு என்றார். இளவஞ்சி ஒத்துக்குவாரான்னு தெரியலயே?

அப்புறம் ஒரு ப்ரண்ட் கிட்ட கேட்டப்போ, அவர் சட்டுன்னு, முத்து ஆர் யூ ஓகே. உடம்புக்கு ஒன்னும் இல்லியேன்னு என்னைய ஒரு விசித்திரமான லுக்விட்டுட்டே கேட்டார். பிறகு நான் நம்ப சுடரைப் பத்தி விளக்கி சொன்னவுடன், சீரியசாக யோசிக்க ஆரம்பித்தார். திடீர்னு, அங்கே சாப்பாடெல்லாம் கிடைக்குமா? என்றார். ம்ம்..நாயர் டீஸ்டால் கூட ஒன்னு இருக்காம்ன்னு சொன்னேன். அப்படியா என்றார் அப்பாவியாய். (அவரிடம் கேள்விகளுக்கு பஞ்சம் இருக்காது. கேள்விமேல கேள்வி கேட்டுகிட்டேயிருப்பார்.அதனாலேயே அவருக்கு கேள்வியின் நாயகன் என்றொரு பெயர் உண்டு) யோவ் உன்னைய தனியா தான இருக்க சொல்லியிருக்காய்ங்க இதுல சாப்பாடு கிடைக்குமா மசாலா டீ கிடைக்குமான்னு என்யா டுபாகூர் மாதிரி கேக்குறன்ன, பிறகு அமைதியாய் ரொம்ப நேரம் யோசிச்ச அவர், திடீர்னு :

கண்டிப்பா தீக்குச்சி எடுத்திட்டு போக மாட்டேன்னார். ஆதி காலம் மாதிரி அவரே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுப்பாராம். அப்புறம், கண்டிப்பா கம்பளி எடுத்துட்டு போவேன், எனக்கு குளிர் தாங்காது என்றார். நான் தண்ணி வேணாமான்னு கேட்டேன். தீவுல கடல் இருக்குமான்னு கேட்டார். (அடப்பாவி!) நான் சிரிக்காம கண்டிப்பா இருக்கும்னு சொன்னேன். அப்படீன்னா கடல் தண்ணிய குடிச்சுக்கவேண்டிது தானே என்றார்.நான் ஒன்னும் சொல்லல. பிறகு கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு : முக்கியமா கொசு வத்தி சுருள் எடுத்திட்டு போவேன்னார். என்னது கொசு வத்தி சுருளா? செம்பு ரொம்ப (சிக்கன்குனியாவால) அடிவாங்கியிருக்கும் போல! அவருக்கு நாலு பொருள் தான் தெரிஞ்சது. அஞ்சாவது? பராவாயில்ல நான் எடுத்துட்டு போகல்லன்னார்! எவ்ளோ சிக்கனம்!

அவர் சொன்ன இன்னொரு பொருள்: அந்த தீவில இருக்குற மரங்கள்ல இருக்கிற பழங்களைப் பறிச்சு சாப்பிடறதுக்கு ஒரு நீண்ட குச்சி (முனையில கொக்கியோடு!) எடுத்திட்டுப் போவாராம். நீங்களே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுக்கிறீங்களே, மரத்த உடச்சு நீங்களே கொக்கியும் செஞ்சுக்க வேண்டியது தானேன்னு சொன்னேன், அடஆமால்ல, அதானே! என்றார்.

என்னோட ப்ரண்ட் ஒருத்தி, நடு ராத்திரியில எழுப்பி, முத்து, நீ உன்னோட சோடபுட்டிய மறந்திடாம எடுத்திட்டு போயிடு, என்னா உனக்கு கண்ணு தெரியாதில்லன்னு சொன்னா. நான் தான் லென்ஸ் போட்டுக்குவேனே அப்படீன்னு சிரிச்சேன். அதுக்கு அவ, லென்ஸ்ன்னா, லென்ஸ் வெக்கிற கேஸ், கிளீனிங் liquid எடுத்திட்டு போகணும், அதுவே ரெண்டு பொருள் count ஆகிடுச்சு, சோடாபுட்டின்னா கணக்கில வராது, நீ பாட்டுக்கு போட்டுட்டு ஜாலியா போயிடலாம். அதுக்கப்புறமும், தீவில போய் நீ தனியாதான் இருக்கபோற, அங்க girls யாரும் இருக்கப்போறதில்ல, அதனால லென்ஸ் போட்டுட்டு நீ ஒன்னும் சீன் போட தேவையில்லன்னா. கரெக்ட் தான்!

cast away ன்னு ஒரு படம் பார்த்திருப்பீங்க, இளவஞ்சியோட கேள்வியப் படிச்சதும் எனக்கு அந்தப் படம் தான் ஞாபகம் வந்தது. அதிலும் Tom Hanks நீண்ட நாள் கடின முயற்சிக்குப் பிறகு தீ பற்றவைத்து விட்டு, கத்தி கூப்பாடு போட்டு டான்ஸ் ஆடுவது. ரொம்ப அழகாக செய்திருப்பார் அவர்.

நானே முயற்சி செஞ்சு தீ பற்றவைப்பதுக்குள் இளா வந்து, முத்து ஒரு மாசம் முடிஞ்சிடுச்சு, வாங்க போகலாம்ன்னு சொல்லிடுவார். அதனால நான் அவ்வளவெல்லாம் கஷ்டப்படப்போவதில்லை. ஒரு லைட்டர் : தேடிக்கண்டுபிடித்து இருக்கறதிலியே பெரிய லைட்டர் ஒன்னு கண்டிப்பாக எடுத்துப்பேன். அது வொர்க் ஆகலைன்னா? இல்ல, மழையில நனைஞ்சு struk ஆகிடுச்சுன்னா? அடபோங்கப்பா, நான் தீ கண்டுபிடிச்சுக்கறேன்.

முனையில் வளைந்த கூர்மையான ஒரு ஆயுதம். கண்டிப்பாக தேவைன்னு நினைக்கிறேன். ஏதாவது திறக்கனும்னா? (suppose இளநிர். நினைப்பு தான்டா உனக்கு. விட்டா, இளனிக்கு straw கேப்பபோல. இளா, தென்னை மரமெல்லாம் இருக்கா அங்க?) மேலும் தற்காப்புக்கு கூட பயன் படுத்திக்கலாம் இல்லியா? ஒரு சிங்கம் (தீவில ஏதுடா சிங்கம்? அதுவும், ஒரு உரையில ஒரு கத்தி தான் இருக்கும்கிறமாதிரி, ஒரு தீவில ஒரு சிங்கம் தான் இருக்கும்னு விஜய.டி.ஆர் கூட சொல்லியிருக்கார். அதனால நீ இருக்கறதால, இன்னொரு சிங்கம் அங்க இருக்க சான்ஸே இல்லடா முத்து! 🙂 ) கிங்கம் வந்தா அது கூட சண்டை போடுறதுக்கு உதவியா இருக்கும்ல. அப்புறம் சுராமீன் (!?) ஏதும் கரை ஒதுங்கிச்சுன்னா அதை கிழிக்கறதுக்கு உதவியா இருக்கும். சுராமீன் ஒதுங்கிச்சுன்னா ஒரு மாசதுக்கு கவலையே இல்ல. இளா அஞ்சு பொருள் restriction கொடுக்கலைன்னா, ஆச்சி மசாலாதூள் பாக்கெட் கூட எடுத்திட்டு போகலாம். 🙂

கவட்டை போன்ற ஒன்று. துப்பாக்கி வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா very simple, எனக்கு சுடத்தெரியாது. மேலும் துப்பாக்கியால் சுட்டு, கடல்ல கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருக்கும், Pirates (of the caribean) இன் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை. வேலியில போற ஓணான எட்த்து வேட்டியில விட்டுக்கினு, அப்பால, வானா வானான்னா விட்டுடுமா? துப்பாக்கியைப் பயன் படுத்தினால் அங்கே இருக்கிற உயிரினங்கள் (wild) உசாராவதுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் கவட்டைய பயன் படுத்தி சில பறவைகளை – காட கவுதாரி கொக்கு -(கொஞ்சம் கஷ்டப்பட்டு தான்! சின்ன வயதில் பயன்படுத்தியிருக்கிறேன்) வீழ்த்தலாம். அப்புறம் சுட்டு சாப்பிடலாம். வாவ். intersting இல்ல? (interetinga? அங்க போனப்புறம் தெரியும்டி!)

நீண்ட ஸ்ட்ராங்கான கயிறு. சுனாமியோ, இல்ல global warming (இதுக்கு தான் ஓவரா இங்கிலீஸ் படம் பாக்காதன்னு சொல்றது!) ன்னாலயோ கடல் தண்ணீர் தீவுக்குள்ள வந்திடுச்சுன்னு வெச்சுக்குங்க ஒரு பெரிய மரத்தைப் பார்த்து அதுல கயிறு போட்டு ஏறி உச்சியில் உக்காந்துகிடலாம்ல. மேலும், இளா இந்த பதிவை படிச்சுட்டு, அடப் பாவி, இவ்ளோ மொக்க போடுற, உன்னல்லாம் அந்த தீவிலயே விட்டுட்டு வந்திடனும்டான்னு, அங்கேயே விட்டுட்டாருன்னு வெச்சுக்கோங்க, நான் மரம் வெட்டி (தற்செயலாக வந்த வார்த்தைதான்!) இந்த கயிற use பண்ணி படகு போல ஏதோ செஞ்சு தப்பிசுடலாம் பாருங்க. cast away ல Tom Hanks இப்படி தப்பிக்கிற போது அவர் மறுபடி மறுபடி அலைகளால் கரைக்கே இழுத்து வரப்படுகிற காட்சி மனதில் தோன்றி சற்று கிலி ஏற்படுத்தத்தான் செய்கிறது. இளா, ஒரு மாசம் கழிச்சு வந்து என்ன கூப்பிட்டுப்பீங்கள்ல?

என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார்: நான் ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டு போயிடுவேன். சாம்பார் ரசம் (ரொம்ப முக்கியம்!) எல்லாம் சேர்த்து ஒரே பாக்கெட்டா எடுத்துப்பாராம். ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டுப் போனா அது கெட்டுப் போயிடாதா? புளிச்சாதம் கூட ஐந்து நாட்களுக்கு தான் வரும். (நாங்க கோவிலுக்கு போகும் போது எடுத்துட்டு போவோம். மூனாவது நாளே சாப்பிட முடியாது. அந்த smell வந்தாலே வயித்த புரட்டிட்டு வரும்) மேலும் தீவில் அதிகம் வேலை இருக்காது so hopefully அதிகம் பசி இருக்காது. பழங்கள் if lucky ஏதோ மீன், பறவை கிடைத்தால் போதும். சமாளிச்சுகிடலாம்.

என்னுடைய இன்னொரு நண்பரிடம் கேட்டதற்கு அவர் உடனே லேப்டாப் எடுத்துட்டு போவேன்னார். லேப்டாப் வெச்சு என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, ம்..ம்..பாட்டு கேப்பேன், படம் பாப்பேன் என்னமோ செய்வேன்னார். சார்ஜ் போயிடுச்சுன்னா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்ப, ஓ அப்படி ஒரு விசயம் இருக்கான்னு முழிச்சார். ஒன்று மட்டும் தெரிகிறது. நமது வாழ்க்கையில் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன.

அப்புறம் அவர் நிதானமாக யோசித்து சொன்ன ஐந்து பொருட்கள்: ஒரு பெரிய சாக்லேட் பாக்கெட் (எனர்ஜிக்கு), சீட்டு கட்டு (solitaire விளையாட. பொழுது போய்விடும்), கூர்மையான ஒரு ஆயுதம், கம்பளி (குளிருக்கு. மழை பெய்தா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, அட போடாங்கற மாதிரி பார்த்தார்!) , பேப்பர் பேனா (எழுதுவதற்கு. இப்பொழுது அவர் ஆங்கிலத்தில் கதை எழுத ஆரம்பித்திருக்கிறார். கேட்டு வாங்கி publish செய்கிறேன்!)

ஓகே சாய்ஸ் தான், இல்லயா?

தண்ணீருக்கு என்ன பண்ணுவது என்ற சீரியசான யோசனை எனக்கு வந்தது. கடல் தண்ணீரை குடிக்க முடியாதே. கேள்வியின் நாயகன் கடல் தண்ணீரை குடித்து சமாளித்து விடுவேன் என்றார். (அவர் wife கிட்ட சொல்லி சாப்பாட்ல உப்பு கம்மியா போடச் சொல்லனும். மனுசன் ரொம்ப பொறுமைசாலின்னு நினைக்கிறேன்.) என்னால முடியாது. ரொம்ப உப்பா இருக்கும், அவர் தெரியாம சொல்லுறார். ஆனா எனக்கிருக்கிற ஒரே நம்பிக்கை, தீவில் கண்டிப்பாக back waters இருக்கும். அல்லது fresh water சுணை கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தில் இருக்கும். (Idea: Life Of Pie) எனவே அதை குடித்து சமாளித்துக்கொள்ளலாம். மேலும் மழை வந்தால் பிடித்து வைத்துக்கொள்ளலாம். ஆமாம், பிடித்து வைக்கப் பாத்திரம்? இதுக்கு தான் கேள்வியின் நாயகன் கொள்றதுக்கு பாத்திரம் எடுத்துப்போவேன் என்றார். (முதலில் “ல்” பிரச்சனையால், பாத்திரத்த வெச்சு கொல்லுவாரா? தலையில கவுத்திவிட்டு மூச்சு திணற வெச்சு கொல்லுவாரோ? புதுமையான டெக்னிக்கா இருக்கேன்னு நான் சீரியசா யோசிச்சேன்) ஆனால் பாத்திரம் எடுத்துப்போகும் அளவுக்கு இளா வாய்ப்பளிக்கவில்லை. ரொம்ப stingy அவர்.

so தண்ணீர் பிரச்சனை solved. டென்ட் அடிக்கும் அளவுக்கு ஒரு பெரிய பிளாஸ்டிக் ஷீட். அதை (மழை மற்றும் கடுமையான வெயிலில்) டென்ட்டாகவும் use பண்ணலாம், குளிருக்கு போர்வையாகவும் பயன்படுத்திக்கலாம்.

கவட்டைக்கு பதில் நான் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டு, சாக்லேட் பாக்கெட் அல்லது சீட்டு கட்டு எடுத்துட்டு போகலாம்.

ஆனால் நான் கண்டிப்பாக ஒரு மாதம் தனிமையில் – அதுவும் செல் போன் இல்லாம – இருக்க வாய்ப்பே இல்லை. கண்டிப்பா லூசாயிடுவேன். (இப்ப மட்டும் எப்படியிருக்கியாம்? ன்னு நீங்க கேக்குறது என் காதுல விழல!)

அஜீத்துக்கு கதை

இது ரொம்ப கஷ்டமான வேலை. எனக்கு மேஜிக் தெரியாது. என்ன முழிக்கிறீங்க? கதைதான எழுதச் சொன்னோம், இவன் என்ன மேஜிக் கீஜிக்குன்னு பீலா விடறான்னு பாக்குறீங்க தான?. அஜீத் படத்தில் (அல்லது சமீபத்திய தமிழ் ஹீரோக்கள் படங்களில் ) கதை என்பது பறம்பொருள் போல. இருக்கும் ஆனால் இருக்காது. தேடுங்க தேடுங்க தேடிட்டேயிருங்க.

ஆனாலும் நான் நம்ப “தலை”க்கு ஒரு கதை யோசிச்சு வெச்சிருக்கேன். அதுல அவர் மட்டும் தான் நடிக்க(?!) முடியும். வேற யாரும் பக்கத்துல கூட வரமுடியாது. அவருக்கே அவருக்கான கதை இது. புது இயக்குனர்களை – கதாசிரியர்களை- அவரைப் போல ஆதரிப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?

படம் ஆரம்பிக்கிறது. ஒரு கழுதை சாந்தமாக நிற்கிறது. காமிரா top angle ல இருக்கு. காமிரா அப்படியே மெதுவா கீழே இறங்கி வருகிறது, அப்போது தான் தெரிகிறது அது உண்மையிலே கழுதை இல்லை, கழுதை வேசத்தில் இருக்கும் அஜித். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. திடீரென்று வெளிச்சம் அவர் மீது விழுகிறது. கேமிரா பல ஆங்கிளில் சுழல்கிறது. ரீரெக்கார்டிங் காதைப் பிளக்கிறது. (நான், உஷாராக கொண்டுபோயிருந்த பஞ்சை காதில் வைத்துக்கொண்டேன். ஐ, நான் தான் ஆழ்வார் பாத்திருக்கேனே!) கேமிரா focus-outoffocus ஆகிக் கொண்டேயிருக்கிறது. (நான் ஏற்கனவே சோடாபுட்டி, எனக்கு தலை சுற்றவே நான் பயத்தில் கண்களை கையைவைத்து இறுக்கமாக மூடிக்கொண்டேன்.) சட்டுன்னு அஜித் கண்களை திறக்கிறார். வித்தியாசாகரிடம் சொல்லி இந்த பிரேமில் matrix revolutions music க்கையும் கழுதை கத்தும் சத்தத்தையும் mix செஞ்சுறலாம். செமத்தியான introduction.

அஜித் அப்படியே slow motion இல் நடந்து வந்து கட்டிலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தனை உதைத்தே கொல்கிறார். நடு நடுவே கழுதை கத்திக்கொள்கிறது.

அடுத்த பிரேம். ஹீரோயின் introduction. அவர் IIM இல் படித்தவர். அஜித் தங்கியிருக்கும் flat க்கு பக்கத்தில் குடிவருகிறார். வந்த அன்றே பக்கத்து flatல் (அஜித் தங்கியிருக்கும் flat) கழுதை குதிரை கனைப்பது போன்ற சத்தம் கேட்டு மிரண்டு போகிறார். மறுநாள் அஜித்தைப் பார்க்கிறார். இவர் தான் இப்படி mimicry செய்தார் என்று யூகித்தவுடன் (atleast நான் ஒரு காரணமாவது சொல்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்) அவருக்கு உடனே காதல் வந்து விடுகிறது. உடனே டூயட். யாரும் எடுத்திறாத அன்டார்டிக்கா பனிசருக்குகளில் அஜித் மற்றும் IIM ஹீரோயின் கழுதைகளுடன் நடனமாடுகின்றனர். அவ்வளவு பனியிலும் நமது ஹீரோ full suit இல் இருக்க, ஹீரோயினும் அவர் LKG யில் போட்ட frock மட்டுமே கொடுக்கப்படும்.

அடுத்த பிரேம். அஜித் ஒட்டகத்தைப் போன்று வேடம் போட்டிருக்கிறார். இந்த முறை ஒரு புதுமையான டெக்னிக்கை கையாள்கிறார். ஒட்டகம், கட்டிலில் விட்டத்தைப் பார்த்து படுத்துக்கொண்டிருப்பவனின் முகத்துக்கு அருகே சென்று வாயைத் திறந்து மூச்சு விடுகிறது. அவன் அங்கேயே பரலோகம் செல்கிறான். மறுபடியும் தீம் மியூசிக் + கழுதை கத்தும் சத்தம்.

அடுத்த பிரேம். ஹீரோயின் அஜித் எங்கே வேலை செய்கிறார் என்று கண்டுபிடிக்க follow செய்கிறார். அவர் zoo வில் கிளீன் செய்யும் வேலை செய்வது தெரிகிறது. அவர் வேலை செய்யும் நேரம் போக ஒரு காலியான கூண்டிலேயே உட்கார்ந்திருப்பது தெரிகிறது. கூண்டுக்கு வெளியே. The Donkey – 1999-2007 என்று போட்டிருக்கிறது.

ஹீரோயின் அஜித்திடம் காதலைச் சொல்லுகிறார். அஜித் முதலில் பிகு பண்ணாலும் டூயட் மட்டும் பாடிக்கொண்டிருக்கிறார். பிறகு ஒரு நாள் ஹீரோயின் அஜீத்திடம் கழுதை போல கத்திக் காண்பிக்கச்சொல்ல அஜித் டென்சனாகிறார். உனக்கு தெர்யுமா. நான் தனியாளில்ல. நான் பேஸ்மாட்டேன். கத்துவேன். என்று காச்மூச்சென்று கத்துகிறார். பிறகு flashback சொல்கிறார். ஹீரோயின் (ரசிகர்களும்) நான் கேக்கவேயில்லையேன்னு சொல்றத அவர் கண்டுக்கல.

அஜித் zooவில் வேலை பார்க்கிறார். அங்கே சிறுத்தை, சிங்கம், யானை போன்ற மிருகங்கள் இருக்கின்றன. அஜித்துக்கு கிளீன் செய்யும் வேலை. அந்த zoo வில் ஒரு கழுதை இருக்கிறது. அதுவும் பார்வைக்கு வைக்கப்பட்டது தான். வேலையெல்லாம் முடித்து விட்டு அஜித் அங்கு தான் வந்து உட்கார்ந்து கொள்வார். (கழுதை ஒன்றும் செய்யாது அது பாட்டுக்கு இருக்கும். மேலும் கழுதையை யாரும் பார்க்கவரமாட்டார்கள் -visitors- நன்றாக தூங்கலாம் என்பது எண்ணம்) கழுதை ஏதோ தன் மீதான பாசம் என்று நினைத்துக்கொள்கிறது. ஒரு நாள், கழுதை அஜீத்திடம் ஏன் என்னை உனக்கு பிடிக்கிறது என்று கேட்கிறது. அஜித் மற்றொரு flashback சொல்ல ஆரம்பிக்கிறார். கழுதை நான் கேட்கல கேட்கலன்னு கத்திக்கொண்டே கூண்டுக்குள்ளே அழுது புலம்புவதை அஜீத் கவனிக்கவில்லை.

அஜித்தின் அப்பா அந்த கிராமத்தில் துணி துவைத்துக் கொடுப்பவர். அவருக்கு ஒரு கழுதை இருக்கிறது. ஒரு நாள் கழுதைக்கு உடம்பு சரியில்லாமல் போக அஜித் மூட்டையைத் தூக்கிகொண்டு செல்கிறார். அப்போது தான் அவருக்கு கழுதைகளின் வலி புரிகிறது. கண்களில் நீர் வழிந்தோடுகிறது. கழுதைகளின் நலனுக்காக போராடுவேன் என்று அழுக்கு துணிகளின் முன்னால் சபதம் எடுத்துக்கொள்கிறார். க.மு.க என்று ஒரு கட்சியும் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். கமுக என்வென்று தெரியாத மக்களுக்கு : கழுதைகள் முன்னேற்றக் கழகம்.

கழுதை மொக்க தாங்க மாட்டாமல் அழுகிறது. அஜீத் எப்பவும் போல தன்னுடைய flashback கேட்டு அழுகிறது என்று நினைத்துக் கொள்கிறார்.

கழுதைக்கு கடுமையான நோயினால் பாதிக்கப்படுகிறது. டாக்டர்கள் கழுதை அதிர்ச்சியான ஜீரனிக்க முடியாத செய்தியைக் கேட்டதால் (should be ajith’s flashback) இப்படி ஆகிவிட்டதென்று சொல்கிறார்கள். மாட்டு டாக்டர் -அப்பரண்டீஸ்- ஒருவர் தவறான மருந்து கொடுத்துவிடுகிறார். கழுதை செத்துவிடுகிறது. ஆனாலும் அஜித்திடமிருந்து தப்பித்துவிட்ட சந்தோசம் அதில் கண்ணில் தெரிகிறது.

அஜித் கோபமாகிறார். கொந்தளிக்கிறார். (ஏன்னா, கழுதை செத்தபிறகு அந்த zoo வேற கழுதை வாங்கல, அந்த கூண்டுக்கு ஒரு காண்டாமிருகத்த கொண்டுவந்திடுச்சு. மக்கள் நிறைய பேரு வாரதால அஜித்தால நிம்மதியா தூங்கமுடியல)
கழுதையின் சாவுக்கு காரணமாயிருந்த அந்த அப்பரண்டீஸ் டாக்டர், அவரோட வந்த கம்பவுண்டர்ஸ் அப்படீன்னு எல்லாத்தையும் கழுதை family (கழுதை, குதிரை. ஒட்டகம், வரிக்குதிரை, ஒட்டசிவிங்கி. இதில் ஒட்டகசிவிங்கி மேக்கப் போடுவதற்கு அமேசான் காடுகளிலிருந்து ஆதி வாசிகளை கூப்பிட்டு வரலாம் என்ற யோசனை இருக்கிறது!) வேசம் போட்டு பழிவாங்குகிறார்.

பிறகு கமுக கட்சி ஆரம்பிக்கிறார். தேர்தலில் நின்று வெற்றியும் பெறுகிறார்.

(இவை அனைத்தும் ஒரே தீம் சாங்.

வெற்றிக் கொடி கட்டு
கழுத முதுகில துணி கட்டு” ன்னு ஏதாவது தத்து-பித்துன்னு வைரமுத்துவிடம் கேட்டு வாங்கிவிடலாம்.)

ஹீரோயின் என்ன ஆனார்? மூனு பாட்டுக்கு ஆடினாங்கல்ல அது போதும். ஒரு பாட்டுக்கு யாராவது லத்தீன பாடகரைக் கூப்பிட்டு “கழா கழா கழா நீ தானே கோவேரி கழா” ன்னு பாடச்சொல்லலாம்.
அகராதி: கழா – கழுதை செல்ல பெயர்.

யாராவது கால்ஷீட் வாங்கிக்கொடுங்கப்பா!

மனிதர்களின் உண்மையான குணாதிசயங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தான் உணர்ந்து கொள்ள முடியும்

உண்மை. முற்றிலும் உண்மை. என்னுடைய physics வாத்தியார் சொல்லுவார் : ஒரு மாணவனின் உண்மையான குணங்களை அறிய வேண்டுமென்றால் அவனை அவனது நெருங்கிய தோழர் வட்டாரத்தில் விட்டுப்பார்க்கவேண்டும் என்பார். மிகவும் அமைதியான மாணவன் கூட சந்தர்ப்பம் கிடைக்கும் போது குணங்களை மாற்றிக்கொள்கிறான். liberalize ஆகிறான். liberation : break all rules.

நான் பெரும்பாலும் நெகடிவ் சமாச்சாரங்களை மனதிலே வைத்து, அந்த நெருப்புக்கு நெய் ஊற்றுபவன் அல்ல (போதும்டா உன் புகழபுராணம்!) ஆனால் இளாவின் இந்த கேள்வி எனது மனதின் ஆழத்தில் புதைந்திருந்த ஒரு சம்பவத்தை மேலெழுப்பி விட்டது. நண்பர்களின் உண்மை குணங்களை நான் அறிந்து கொண்டது அப்போதுதான். உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை என்ற வரியை ஞாபகப்படுத்துவது. நாம் அனைவரும் தனித்தனியே தான். யாரும் யாரையும் சார்ந்தவர்கள் அல்ல. சந்தர்ப்பம் கிடைத்தால் உறவுகளை (நட்பையும்) முறித்துக்கொள்ள சிறிதும் சஞ்சலப்படாதவர்கள். எனினும் நான் அந்த சம்பவத்தை சொல்ல விரும்பவில்லை.

இன்னொரு சம்பவத்தை சொல்கிறேன். நான் கல்லூரி படிக்கும் போது எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சொல்லப்போனால் அவன் தான் கல்லூரியில் எனக்கு முதல் நண்பன். கல்லூரியை விட்டு வரும் வரையில் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள். முந்தாநாள் அவனது பிறந்த நாள். நான் வாழ்த்து கூட சொல்லவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை.

கல்லூரி காலங்களில் paper presentation என்றொரு நிகழ்வு பல வெளி கல்லூரிகளில் நடக்கும். அந்த விழாவிற்கு நாங்கள் apply பண்ணுவோம். எங்களிடம் virtual reality and education என்றொரு அருமையான article இருந்தது. எந்த கல்லூரி paper presentation க்கு அனுப்பினாலும் கண்டிப்பாக தேர்வாகிவிடும். அப்படியிருக்க, என்னுடைய நண்பன் (ராஜன்: பெயரை மாற்றியிருக்கிறேன்) திருச்சிக்கே அனுப்புமாறு சொல்லிக்கொண்டேயிருப்பான். இரு முறை நாங்கள் presentation க்கு திருச்சி சென்று வந்தோம். இதைப் பற்றி வேறு எண்ணங்கள் எனக்கு இருந்ததில்லை. நான் யோசிக்கவும் இல்லை.

அப்புறம் தான் தெரிந்தது அவனுக்கு திருச்சியில் ஒரு காதலி இருந்தாள். அவள் அவனுக்கு அத்தை பெண் தான். நம்மூரில் தான் யாருடனும் அனுசரித்துப் போவோம், இரத்த பந்தகள் சொந்தகளுடன் கண்டிப்பாக அனுசரித்துப் போக மாட்டோமே, வழக்கம் போல அவனுடைய வீட்டுக்கும் அவளுடைய வீட்டுக்கும் சண்டை. ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் கடல் போல கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. நான் அவளுக்கு அண்ணனானேன்.

இருவரும் திருச்சியில் எல்லா இடமும் சுற்றியிருக்கிறார்கள். முக்கியமாக they loved each other and infact he knows about his mother. அவனுடைய அம்மா அவனது காதலுக்கு கண்டிப்பாக ஓகே சொல்ல போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இவன் காலேஜ் முடித்தான். அவளும் காலேஜ் முடித்தாள். அவள் வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். அவள் இவனை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினாள். இவன் அவளை பொறுத்திருக்குமாறு கூறினான். அவள் எவ்வளவு காலம் பொறுத்திருப்பாள்? நம் நாட்டில் பெண்ணிற்கு என்ன உரிமை -பல சமயங்களில் ஆணுக்கே இருப்பதில்லை என்பது வேறு விசயம்- இருக்கிறது? அவள் இவனை வற்புறுத்த வற்புறுத்த இவன் மறுக்க ஆரம்பித்தான். அவள் போன் கால்களை அட்டென்ட் செய்யாமல் அவளை மனதளவில் சாகடித்தான். அவள் என்னைத் தொடர்பு கொண்டாள். அண்ணா, அவனிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றாள். நான் அவனிடம் கேட்டதற்கு அவன் சொன்ன பதில்: வீட்ல ஒத்துக்க மாட்டாங்கடா.

புல்ஷிட். வீட்ல ஒத்துக்காதது முன்னமே தெரியாதா? அவளோடு கை கோர்த்து நகர் வலம் வரும்போது இது தெரியாதா? காதலித்தாயா இல்லையா? காதலிக்கும் வரை காதலித்து விட்டு கடைசியில் நெருக்கடி வரும் போது, இனி வேறு வழியில்லை என்று வரும் போது, வீட்ல ஒத்துக்கமாட்டாங்கன்னு காரணம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

பெற்றோருக்காக தூக்கியெறியப்பட்ட காதல்கள் கணக்கிலடங்காமல் காற்றில் சுற்றித் திரிகின்றன. பெற்றோர் தூக்கியெறிந்த காதல்களும் அந்தரத்தில் மோட்சமற்று பிசாசாய் திரிகின்றன. பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட பெற்றோர்களின் மீதான காதல்களும் போவதற்கு வழி தெரியாமல் ஒரு செக்கு மாட்டைப் போல பிள்ளைகளையே சுற்றி சுற்றி வருகின்றன. ஏன் இத்தனை கஷ்டங்கள்? நமக்கு நாமே பூட்டிக்கொண்ட அர்த்தமற்ற தேவையில்லாத விலங்குகளை என்று அவிழ்த்தெரியப் போகிறோம்? எப்போது நமக்கு விடுதலை?

பெற்றோரின் மீது நாம் வைத்திருக்கும் பாசமும் மரியாதையையும் போன்று, நம்மிடம் பெற்றோருக்கு பாசமும் அன்பும் இருக்கிறதா இல்லையா? நாம் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் போது, அவர்கள் நமது உணர்வுகளை மதிக்கமாட்டார்களா என்ன? மதிக்கவில்லை என்றால் பிறகு அன்பென்ன பாசமென்ன? வரட்டு பிடிவாதம் தானே இருக்கிறது.

இதை தவறு என்றும் சரி என்றும் நான் சொல்லவில்லை. சொல்வதற்கு நான் யார்? ஆனால் மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி என்பது மட்டும் உண்மை.

பேச்சுத்தமிழில் எழுதும் பதிவர்களைப் பற்றி:

பொறாமை. பேச்சுதமிழில் எழுதுவது என்பது மிகவும் கஷ்டம். அனால் successfull ஆக எழுதினால் எளிதாக ரீச் ஆகும். முக்கியமாக நகைச்சுவை உணர்வை அதிகரிக்கும். ஆனால் நான் அருமையான தமிழில் பதிவிடுகிறேன் என்பது, வேறொன்றுமில்லை, கண்டிப்பாக உள்குத்து தான். எனக்கு சில சமயங்களில் பேச்சுத்தமிழில் எழுதியதைப் படிப்பது எரிச்சலாக இருக்கும். குறிப்பாக ஜெயமோகனின் காடு நாவல் மற்றும் அவரது சில சிறுகதைகள். நெல்லை தமிழில் கேரள வாடை அடித்து மம்முட்டி படம் பார்த்த அனுபவமே மேலிடுகிறது.

ஜெகத் எழுதிய நடை பற்றிய பதிவு நான் சமீபத்தில் ரசித்துப் படித்தேன். நன்றாக சிரித்தேன். கோணங்கி பற்றிய இதே போன்றதொரு விமர்சனத்தை சாருநிவேதிதாவின் கோணல் பக்கங்களிலும் படிக்க நேர்ந்தது. மேலும் பயங்கர ஹிட் ஆன வீராசாமி பற்றிய விமர்சனமும் வயிறு வலிக்க வைத்தது.

இனி நிர்மலுக்கான கேள்விகள்:

1. நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆகலாமா? நாட்டை ஆட்சி செய்யலாமா? நன்மை தீமை?

2. புரியவே புரியாத கவிதைகளை கண்டிப்பாக எழுதித் தானாக வேண்டுமா? இப்பொழுது கதைகள் கூட புரியாத அளவுக்கு எழுதுகிறார்களே, இது தேவைதானா? மேலும் பெண்ணியம் என்ற பெயரிலும் எதார்த்தம் என்ற பெயரிலும் சொல்லவே நா கூசும் அளவுக்கான வார்த்தைகளை உபயோகித்து எழுதுவது அவசியம் தானா?

3. உண்மையைச் சொல்லுங்கள் திரிஷா அழகு தானே?

4. காவிரிப் பிரச்சனைக்கு என்னதான் வழி? நதிகளை நாட்டுடைமை ஆக்கலாமா?

5. உங்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கினால் -of course you can act independently!- என்ன செய்வீர்கள்?

வாய்ப்பளித்த இளாவுக்கு நன்றிகள் பல!
Pass to நிர்மல்.

இளாவின் சுடர் :http://ilavanji.blogspot.com/2007/02/blog-post.html

மறு-காலனியசம்

“மும்பை நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 35,000 ஏக்கர் நிலத்தை ரிலயன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அங்கே அவர்கள் ‘மகா மும்பை சிறப்பு பொருளாதார மண்டலத்தை’ (Special Economic Zone-SEZ) தொடங்க உள்ளனர். அந்த நிலப்பரப்பில் உள்ள 43 கிராமங்கள் பெயர்த்தெறியப்பட உள்ளன. நவீன மும்பையைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. நல்ல பருவ மழையும், தடையற்ற விவசாயமும் அவர்களின் வாழ்வைக் காத்து வருகிறது. சந்தை விலை ஏக்கருக்கு 25-30 லட்சம் வரை இருக்க, வெறும் 3-4 லட்சம் ரூபாய் கூட அவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. அந்த கிராமத்தினர் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மகாராஸ்டிரா அரசு வாலை ஆட்டிக்கொண்டு அம்பானி சகோதரர்களின் காலடியில் கிடக்கிறது. பல மாநில முதல்வர்கள் அம்பானி சகோதரர்களின் கண்ணில் படும் படியாக வாலை ஆட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். நிலத்திற்குப் பதிலாக ரொக்கப்பணம் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருந்தாலும், அவைகளை மீறுவதில் பல மானில அரசுகளுக்கு தனிப்பட்ட ஆர்வம் தான். இந்த பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு நில பேரத் தரகர் வேலை பார்ப்பது (Real Estate Broker) பல மாநில அரசுகளுக்கு விருப்பப் பணியாக மாறி விட்டது.”

அ. முத்துகிருஷ்ணன், “குருவும் இசைவான முதலீட்டுச் சூழலும்” என்ற கட்டுரையிலிருந்து.

சரி,SEZ என்றால் என்ன? அவரது எழுத்துக்களிலே:

நம் நாட்டு எல்லைக்குள் சில பகுதிகளைக் கையகப்படுத்தி அதன் எல்லைகளை வரையறுக்கிறார்கள். அங்கே பெரும் நிறுவனங்கள் எந்த துறை சார்ந்தும் தொழில் தொடங்கலாம். மென்பொருள் நிறுவனங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கேளிக்கைப் பூங்காக்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், அங்காடிகள் என தன்னிறைவு பெற்ற பகுதியாக அது திகழும். அந்த துணை நகரம் ஐரோப்பா, அமெரிக்க சாயலோடிருக்கும். அந்த எல்லைக்குள் இந்திய அரசாங்கத்தின் எந்த சட்டமும் செயல்படாது. தொழில் துறைச் சட்டங்கள், சுங்க வரி, விற்பனை வரி, மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் என இது போன்ற ஆயிரக்கணக்கான விதிமுறைகள் நடைமுறைகள் எல்லாம் அங்கே எட்டிக்கூட பார்க்க முடியாது. SEZகளின் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படவிருக்கும் வரி இழப்பு சுமார் 90,000 கோடி. இதை அரசாங்கம் Tax Holiday என்று செல்லமாக அழைக்கிறது.

மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல்:
இந்த நிலப்பரப்பு வெளிநாட்டுத் தூதரகம் போலத்தான் கருதப்படுமாம். வருங்காலத்தில் SEZகளுக்குள் நுழைய விசா, பாஸ்போர்ட் தேவைப் படலாம். Like East India Company’s Private Cities? அதனால் தான் இப்பொழுது பல developing countriesக்கு வந்து இறங்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை, மறுகாலனியிசம் என்று கொஞ்சம் பயத்தோடு அழைக்கிறார்கள். இது ஒரு புதுவகையான சுரண்டல். புதுவிதமான அடிமைத்தனம். Dependency. கொஞ்சம் கொஞ்சமாக நாம் அவர்களது எக்கானமியைச் சார்ந்து வருகிறோம். இந்த சுரண்டலிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நாம் -Indian Based Companies, software,hardware,bio-technology or anything- சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, தொலைநொக்குப் பார்வையோடு பல புதிய பயனுள்ள products கண்டுபிடிக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் மற்றநாட்டினருக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருப்பது? இன்போசிஸ், விப்ரோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக கனிசமான தொகையை செலவு செய்யவேண்டும்.

SEZஇன் disadvantages:
1. மிகச்குறைந்த -அடிமாட்டு- விலையில் நிலங்களைக் கையகப்படுத்துதல்
2. வரிவிலக்கு தவறாக பயன்படுத்தப்படுதல்
3. யாரோ வெகு சிலரின் கொள்ளை லாபத்துக்காக, வேறு யாரோ வரி கட்டுவது.

இந்த முயற்சி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் சிறு ஐயப்பாடும் இல்லை. மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த பணம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கே போதாது என்கிறது ஒரு கட்டுரை. அப்படித்தானே இருக்கிறது. இன்று மதுரையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு குழந்தையைப் படிக்க வைக்க ஒரு quarterக்கு இருபதினாயிரம் ரூபாய் கேட்கிறது ஒரு பள்ளி. என் நண்பர் ஒருவர் சொன்னார்: நானெல்லாம் எனது மொத்த படிப்புக்கே (MCA வரையில்) அவ்வளவு தான் செலவழித்திருக்கிறேன்.

மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு விசயம் : வரி விலக்கு. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பெரிய ஐந்து மென்பொருள் நிறுவனங்கள் ஆயிரம் கோடி வரிவிலக்கு பெறுகின்றன. இவை கடந்த பத்து வருடங்களாக வரிவிலக்கு பெறுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும் இந்த நிறுவனங்கள் தங்கள் வரி விலக்கை நீட்டித்துக்கொள்ள SEZக்குப் படையெடுக்கின்றன.

இவ்வாறான சலுகைகள் ஒட்டுமொத்த எக்கனாமிக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை. ஒரு சிலரின் கைகளிலே தான் பணம் மேலும் மேலும் குவிய வாய்ப்பாக இருக்கும் (பிறகு அவர்கள்,நமது அரசாங்கத்திற்கே சட்டங்கள் இயற்றுவார்கள் இல்லியா?) என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன? இதற்கு அமெரிக்காவே சிறந்த எடுத்துக்காட்டு!

கஷ்டப்பட்டு அன்றாடத் தேவைகளுக்காக உழைக்கும் மிகச்சாதரண – இன்னும் அடித்தட்டிலே இருக்கும் -மக்களே வரி கட்டிக்கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கோடிகளில் புரளும் இவர்களுக்கு ஏன் வரிவிலக்கு? இவர்கள் (பன்னாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்கள்) சம்பாதித்து அருகில் இருக்கும் கிராமங்களையாவது முன்னேற்றினார்களா? பெங்களூருக்கு அருகிலிருக்கும் – IT revolution ஆல் எந்த பாதிப்பையும் காணாமல், இன்னும் அப்படியே எவ்வித வளர்ச்சியும் இல்லாத – கிராமங்களைப் பற்றிய documentary ஒன்றை BBC ஒளிபரப்பினார்கள்.

ஒரு infra-structure development ஏற்படும் போது அந்த பகுதியிலிருக்கும் நிலங்களைக் கையக்கப்படுத்துவது வழக்கம் தான். அதை எதிர்ப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதும் உண்மையே. உதாரணத்துக்கு நேஷனல் ஹைவேய்ஸ் (Nationa Highways) அகலப்படுத்தும் போது ரோட்டின் மிக அருகில் இருக்கும் வீடுகளும், தொழிற்சாலைகளும், பல கட்டிடங்களும் இடிக்கப்படுவதும், கையகப்படுத்தப்படுவதும் இயல்பே, அதற்கு அரசு கொடுக்கும் சொற்ப பணத்துக்குக்கூட ஏதோ நியாயம் கற்பிக்களாம், ஆனால் கோடிகளில் புரளப்போகும் (ரிலயன்ஸ் போன்று ஏற்கனவே கோடிகளில் புரளும்) மக்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் போது நிலத்துக்காக ஏன் நியாயமான (மார்கெட் நிலவரப்படி) தொகை கொடுக்கக்கூடாது?

மென்பொருள் நிறுவனங்களால் தான் பல இளைஞர்கள் தங்களது குடும்பத்தை ஒரே ஜெனரேஷனில் முன்னேற்றியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டுதானாக வேண்டிய சூழ்நிலையில், அந்த வள்ர்ர்சி மற்றவர்களின் தலையில் இடியாக இறங்கக்கூடாது அல்லவா? ஒரு நாடு வாழ ஒரு கிராமத்தை அழிக்கலாம் என்று டுபாகூர் வசனம் பேசினால், ஒரு கிராமம் இல்லையப்பா, நாற்பத்திமூன்று கிராமங்கள்! நாற்பத்திமூன்று.

links:

http://sezindia.nic.in/
http://en.wikipedia.org/wiki/Special_Economic_Zone
http://www.hindu.com/2006/09/28/stories/2006092808341200.htm
http://www.indiantaxsolutions.com/main.php?t=28011984&d=1152598537

Thanks : உயிர்மை

தயிர்வடைகள்

தயிர்வடை சாப்பிடுபவர்கள் Traditional, பக்கார்டி சாப்பிடுபவர்கள் Organic என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமல் இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்துவிட்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே என் மீது கோபம் கோபமாக வருகிறது. என்ன ஜென்மம் நான்? ஆதாலால் குடி மக்களே உங்களுக்கு இந்த அரிய உண்மையை சுட்டிக் காட்டியதற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்லத்தேவையில்லை, திரு. “ஆர்கானிக் எழுத்தாளர்” சாரு நிவேதிதாவிற்கு நேரடியாகச் சொல்லிவிடுங்கள்.

விசயத்துக்கு வருவோம். கோணல் பக்கங்களின் மூன்றாவது தொகுதியில் “உண்மையான பெரியார்” என்ற கட்டுரை (கட்டுரைகள் எழுதுபவர்கள் மன்னிக்கவும், அப்படித்தான் அந்த புத்தகத்தில் இருக்கிறது. மேலும் இந்தப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய நாஞ்சில் நாடன் இந்த மாதிரி இலக்கியத்திற்கு(?!) இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்கிறார்!) யில் இவ்வாறு சொல்கிறார், சாரு நிவேதிதா:

காந்தியை, மகாத்மா என்று சமூகம் சொன்னால் நாமும் கிளிப்பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லுதல். மாறாக அவர் மகாத்மாவாக வாழ்வதற்கு மற்றவர்கள் என்ன விலை கொடுக்க வேண்டியதிருந்தது என்பது பற்றி கேள்வியே கேட்காமல் இருத்தல்.

காந்தி இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்யப்பட்ட செருப்பை மட்டுமே அணிவது என்று முடிவெடுத்த பின்னர், இயற்கையாக இறந்த மாட்டைத்தேடி இரு குழுக்கள் நாடெங்கும் அலைந்தது திரிந்து கண்டுபிடித்து, அவருக்கு செருப்பு வாங்கிக் கொடுத்தார்களாம். இவ்வகையில் காந்தி அணிந்த செருப்பின் விலை அந்தக் காலகட்டத்தில் சாதாரண செருப்பை விட ஐம்பது மடங்கு கூட இருந்ததாம்.

அதனால் அவரை மகாத்மா என்று சொல்வதற்கு கேள்விகள் கேட்கவேண்டுமாம்.

காந்தி, கண்டிப்பாக எங்கிருந்தாலும் இறந்த மாட்டைக் கண்டுபிடித்து எனக்கு செருப்பு வாங்கிவாருங்கள் என்று அடம் பிடித்தாரா? அவர் இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்த செருப்பை மட்டுமே அணிவேன் என்று முடிவெடுத்த பின்னர், அவரது தொண்டர்கள், அவர் வேண்டாம் எனினும், அவருக்காக தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து வாங்கி வந்திருக்கலாம். இவ்வாறு தொண்டர்கள் வாங்கி வராமல் இருந்திருந்தால் கூட, காந்திக்கு இது ஒன்றும் மேட்டரே அல்ல, அவர் செருப்பு அணிவதையே விட்டிருப்பார். கோட்சூட் அணிந்து செல்வத்தில் திளைத்திருந்த போது, கந்தல் ஆடை அணிந்த மக்களைப் பார்த்ததும் அனைத்தையும் தூக்கி எறிந்த அவருக்கு செருப்பு அணியாமல் நடப்பதா பெரிய விசயம்? இதைக்கூட விட்டுத்தள்ளுங்கள். எக்காலத்திலும் உண்மையே பேசுவது என்பது எவ்வளவு பெரிய சமாச்சாரம்? அதை செய்யக்கூடிய அளவுக்கு மனதைரியமும், self-control லும் இருந்தவருக்கு சாதாரண செருப்பு அணியாமல் இருப்பதா பெரிய வேலை? மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாற்பத்தியெட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவருக்கு செருப்பு அணியாமல் இருப்பதா கஷ்டம்?

எங்கே, இவர்களை ஒரு நாள் – ஒரே ஒரு நாள்- உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சரி. கிடக்கட்டும். அவரை மகாத்மா என்று அழைப்பதில் யாருக்கு என்ன கெடுதல் வந்து விட்டது? எவ்வளவு நல்ல பழக்கங்களை வைத்திருந்திருக்கிறார். அதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு : அவருடைய பாத்ரூம்மை அவரே கழுவுவது. இது என்ன பெரிய விசயம், என்கிறீர்களா? எனது நண்பர்கள் சிலரே கூட தாங்கள் உபயோகித்த பாத்ரூம்மை தாங்களே கழுவி விட மாட்டார்கள். சாதாரண மனிதர்களும் நேரம் இல்லை என்றும் ( நேரம் இல்லையா? பாத்ரூம் போவதற்கு நேரம் இருக்கும் போது, கழுவிவிட நேரம் இருக்காதா என்ன? அதெல்லாம் இல்லை, சோம்பேறித்தனம் தான் காரணம் ), இன்னும் வேறு காரணங்கள் சொல்லி தப்பித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நாட்டின் தலைவர், குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் ஏறும் போது இங்கிலாந்து நீதிபதியே கூட எழுந்து நிற்கும் அளவுக்கு மரியதைக்குரியவர், ஏன் பாத்ரூம் கிளீன் பண்ண வேண்டும்? அவரை மகாத்மா என்று அழைப்பதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது? யார், எங்கே குறைந்து போகிறார்கள்?

அவ்வாறு சொல்லும் இலக்கியவாதிகளை, சாரு நிவேதிதா : தயிர்வடை இலக்கியவாதிகள் என்று சொல்லுகிறார்.

1875 இல் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒயின், கூபாவின் பக்கார்டி, பாங்க்காக் கேலிக்கை விடுதிகள், ஜப்பானியப் பெண்கள் அருகிலிருந்து ஊற்றிக்கொடுக்க, தரையிலமர்ந்து ஸாக்கே என்ற மது வகையை அருந்துவது, கேப்ரே பார்கள், “ரா” வாக மட்டுமே அடிக்க வேண்டும் என்ற மிக நல்ல ரூல்ஸைக்கொண்டுள்ள Geronimous என்ற பார், அதில் தொடர்ச்சியாக பதினேழு ஷாட்கள் அடித்து பதக்கம் வாங்கியதைப் பற்றியல்லாம் எழுதுவது எந்த வகை இலக்கியம்? இவர்கள் தான் organic இலக்கியவாதிகளா? (organic wines பற்றி சொல்லியிருப்பாரோ என்று கூட சில நிமிடம் யோசித்தேன். )

கேட்டால், ethics வேறு ஒழுக்கம் வேறு என்கிறார். எடுத்துக்காட்டாக அவரது ப்ராண்ஸ் தேசத்து நண்பரின் ஆப்ரிக்க மனைவி கன்னத்தில் முத்தமிட்டு வறவேற்ற சம்பவத்தைக்கூறி அது அங்கே பழக்கம் ஆனால் இங்கே அப்படி செய்யமுடியாது என்கிறார். அப்படியானால் உங்கள் கட்டுரைகளை ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது தானே?

மேலும் ஆதாரத்திற்கு: அண்டார்டிக்காவில், அண்டாகாகஜம் என்ற மிகப்புகழ் பெற்ற இலக்கியவாதி -அண்டாகாகஜம் என்ற இலக்கியவாதி பனிகுகைக்குள்ளிருந்து அவருடைய அன்னை டபாகாகுஜமுக்கு யாருக்கும் புரியாத புருஷ்கியா மொழியில் எழுதிய கடிதங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும் – SubSnow Stupidity என்ற தொகுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்லி தப்பிப்பது பலருக்கும் வழக்கமாகிவிட்டது.

நாம் நமது நாட்டினர் மகாத்மா என்று சொன்னதை கேள்வி கேட்க்காமல் ஏற்றுக்கொண்டு தயிர் வடை இலைக்கியவாதி ஆகிவிட்டோம், ஆனால் ரனஜித் சொன்னதை அப்படியே நம்பினால் – என்னது? ஆதாரம் இருக்கிறதா? காந்தி மகாத்மா என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இல்லையா என்ன? -அந்த இலக்கியவாதிகளுக்கு என்ன பெயர்?

He is back!

காந்தியடிகள் இப்பொழுது இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்றொரு குறும்படம் youtube இல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. மெகாஹிட். அந்த படத்திற்கு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இலவச விளம்பரம் அளித்தன. நானும் பத்திர்க்கையில் வெளியான செய்தியைப் பார்த்துத்தான் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். பார்த்தேன். ரசித்தேன். இந்திய மக்கள் youtube இல் இருந்து அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

அந்தப் படத்தில் காந்தி அழகாக சண்டை போட்டார் (என்ன இருந்தாலும், தமிழ் சினிமாவில் வரும் , ஒரே குத்தில், அடியாள் பறந்து, பின், பல்டி அடித்து, பிறகு தலைகுப்புற டாடா சுமோவின் கார் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு விழுவதைப் போல அழகாக இல்லை!). இரண்டு கவர்ச்சியான பெண்களுடன் (இருந்தாலும், சீனா தானா பாட்டுக்கு நடனம் ஆடிய பெண்ணை விட அதிகமாகவே உடை அணிந்திருந்தனர். பெப்சி உங்கள் சாய்சில் ஒரு முறை ஒரு பெண் இந்தப் பாடலை விரும்பிக்கேட்டார், உமாவும் சிரித்துக்கொண்டே உங்களுக்கு வழங்குறோம்ங்க என்று சொன்னதை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன். மேலும், சென்ற வருடம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மாணவர்கள் நடனமாட நிறைய ஆசிரியர்கள் இந்தப் பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) ஜாலியாக கைகோர்த்துக்கொண்டு வலம் வருகிறார். மெசின் துப்பாக்கியைப் பயன்படுத்தி பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார். இறுதியில் “he is back. but this time he is crazy” என்று முடிகிறது படம்.

எனக்கு ஏனோ கோபம் வரவில்லை. யாரும் கோபப்படக் கூடாது என்று நான் சொல்லவில்லை. சிலருக்கு கோபம் வரத்தான் செய்தது. பொறுமையாக உண்மை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் கோபப்படத்தேவையில்லை என்பது புரியும். அந்த வீடியோவின் பின்னூட்டத்திலே, சிலர் காந்தியின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறி, வீடியோ போஸ்ட் செய்தவரை தகாத வார்த்தைகளில் திட்டியிருந்தார். காந்தியின் அருமை பெருமைகளை உணர்ந்தவர் எப்படி தகாத வார்த்தைளில் மற்றொருவரைத் திட்டுவார்?

உண்மையைச் சொல்லுங்கள் காந்தீயக் கொள்கைகளை நாம் முழுவதுமாக – அட்லீஸ்ட் சிலவற்றையாவது – நாம் கடைப்பிடிக்கிறோமா? நம்மைச் சுற்றிலும் காட்டப்படும் சினிமாவில் அவ்வளவு வன்முறையையும் ஆபாசத்தையும் வைத்துக்கொண்டு, Ghandi-II படத்தைப் பார்க்கும் போது ஏன் கோபம் வருகிறது? நம்மில் எத்தனைபேர் சத்தியசோதனை படித்திருக்கிறோம்? எத்தனை பேர் படித்துவிட்டு அவர் வழியில் நடந்திருக்கிறோம்? அல்லது நடக்க முயற்சித்திருக்கிறோம்?

உண்மையிலே காந்தி இந்த நூற்றாண்டில் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? “என் சிலைகளை அகற்றுங்கள். உங்கள் வீடுகளில் நீங்கள் மாட்டியிருக்கும் என்னுடைய புகைப்படங்களை தயவு செய்து அகற்றிவிடுங்கள். விளம்பரப் பலகைகைளில் இருக்கும் என் பெயர்களை (எங்கேயாவது இருக்கிறதா என்ன? நான் விளம்பரப் பலகைகளில் ரஜினிகாந்த், விக்ரம், விஜய், மும்தாஜ், நமீதா போன்றோரின் படங்களைத்தான் பார்த்திருக்கிறேன்) தூக்கியெறியுங்கள். என்னை உங்கள் மனதில் மட்டுமே நிறுத்துங்கள். என் வழியையும், கொள்கைகளையும் கடைப்பிடியுங்கள்” என்பார் என்கிறது லகே ரகோ முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.

காந்தியைப் பிடிக்காத நிறைய நபர்கள் இருப்பார்கள். இருக்கிறார்கள். கேட்டால் ஏதேதோ காரணம் சொல்லுவார்கள். அவர் அரசியல் சார்ந்து எடுத்த முடிவுகளைப் பற்றி விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகள்? காந்தீயம்?

கூர்காவிடம் அறை வாங்கிய முன்னா, தனது நண்பனிடம், காந்தி ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்றிருக்கிறார், நான் இன்னொரு கண்ணத்தைக் காட்டினால், அவன் அறைய மாட்டான் பார், என்று சொல்லி மறு கண்ணத்தைக் காட்டுகிறான். கூர்க்கா மறு கண்ணத்தில் ஓங்கி இன்னும் பலமாக மற்றொரு அறை விடுகிறான். இப்ப முன்னாவுக்கு காந்தீயம் மறந்து விடுகிறது. கூர்க்காவை அடித்து நொறுக்கிறான். நண்பனிடம், இரண்டாவது அறைக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு காந்தி சொல்லல என்கிறான்.

காந்தீயக் கொள்கைகளுக்கு, எங்கயாச்சும், இந்த அவசர உலகில் இடம் இருக்கிறதா என்ன? மேலும் காந்தீயம் அவசியம் தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

எனது வீட்டு வாசலில் ஒருத்தன் தினமும் பான் போட்டு எச்சில் துப்பி வைக்கிறான், நான் என்ன செய்யட்டும் என்று ஒருவர் கேட்க்கிறார். அதற்கு காந்தி – அல்லது காந்தி சொல்கிறார் என்ற illusion இல் முன்னாவே சொல்கிறார் – அவன் ஒவ்வொருமுறை துப்பும் போதும் அவனது முகத்தைப் பார்த்து பனிவாக சிரித்து விட்டு அவன் முன்னாலேயே அவன் துப்பிய பான் எச்சிலைக் கழுவுங்கள் என்கிறார். புகார் செய்த அந்த நபரும் அவ்வாறே செய்ய, கொஞ்ச நாளில் பலன் தெரிகிறது. எச்சில் துப்புபவர் சில நாட்களில் திருந்தி விடுகிறார். மன்னிப்பும் கேட்கிறார். எவ்வளவு நாளில் அந்த நபர் திருந்துவார் என்பது சொல்லமுடியாது. அது மாறுபடும். ஆனா திருந்துவார் என்பது நிச்சயம் என்பது படத்தின் கருத்து.

இது அஹிம்சை. நமது பணிவில் திக்குமுக்காடிப்போகும் எதிராளி “இவன் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனா இருக்கான்டா” என்று வேறுவழியில்லாமல் அவனே திருந்திவிடுவது. ஆனால் இதில் மற்றொரு விசயமும் நடக்கும். எச்சில் துப்புபவன் மேலும் இரண்டு மூன்று பான் நபர்களை அழைத்து வந்து இங்கே இலவசமாக துப்பிக்கொள்ளலாம், உடனே க்ளீன் செய்து விடுவார்கள் என்று பெருமையாக நம்மைப் பார்த்து சொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒன்று, அவர்கள் துப்ப துப்ப நாம் இன்முகத்தோடு அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்கள் முன்னிலையில் க்ளீன் செய்ய வேண்டும். பொறுமை வேண்டும். அதைவிட தைரியம் வேண்டும்.

இதே போன்றொதொரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம். வீட்டுச் சுவற்றில் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்கள் முன்னிலையிலே அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே கருணானிதியையோ, ஜெயலலிதாவையோ, இராமதாசையோ, திருமாவையோ கிழித்தெரிய நம்மால் முடியுமா? இங்கு நாய்கள் தான் அசுத்தம் செய்யும் என்னும் வரிகளை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டே சிறுநீர் கழிக்கும் நபர்கள் முன்னிலையிலே (of course அவர்கள் முடித்தபிறகு!) கழுவிவிட நமக்கு பொறுமை இருக்கிறதா? அப்படி பொறுமையாக கழுவி விடத்தான் வேண்டுமா? வெளி நபர்களிடம் பொறுமையாக இருப்பதை விட்டுத்தள்ளுங்கள், வீட்டிலிருக்கும் நபர்களுடன், நம் இரத்த சொந்தகளுடன், நமது உடன்பிறப்புக்களுடன், நமது பெற்றோருடன் நாம் பொறுமையாக இருக்கிறோமா?

உண்மையை ஒப்புக்கொள்ளுவதற்கு தைரியம் வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால்- அதற்குத்தான் நிறைய தைரியம் வேண்டும். மறைப்பதும் சொல்லாமல் இருப்பதும் பொய் சொல்லுவதற்கு சமம்தான். “உண்மையைச் சொல்லிவிட்டு, மனநிறைவோடு கம்பீரமாக தைரியமாக இரு” என்கிறார் காந்தி. முடியுமா? எல்லா சந்தர்ப்பத்திலும் அது முடியுமா? காந்தி சிறு வயதில் தான் வீட்டில் திருடியதை நினைவுகூர்கிறார். பிறகு தனது தந்தையிடம் தான் திருடியதை ஒத்துக்கொண்டு இரவு முழுவதும் அவரது படுக்கைக்கு பக்கத்தில் உட்கார்ந்து அழுததையும் கூறுகிறார். முன்னா ஆர்வமாக “உங்கள் தந்தை உங்களை மன்னித்தாரா?” என்று கேட்க, காந்தி சிரித்துக்கொண்டே, “ம்ம்..கொஞ்ச நாள் பிடித்தது.” என்று சொல்கிறார்.

ஒரு சூழ்நிலையில் முன்னா தனது ஆருயிர் நண்பன் சர்க்யூட்டை அறைந்து விட, சர்க்கியூட் தனிமையில் அழுகிறான். காந்தி முன்னாவிடம் : “அவனிடம் சென்று மன்னிப்பு கேள்” என்கிறார். முன்னா இதெல்லாம் தேவையேயில்லை என்று நினைக்கிறான். ஆனால் காந்தி : “அறைவது சுலபம். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்பது மிகவும் கடினம். அதற்குத்தான் தைரியம் அதிகம் வேண்டும். செய்து பார்” என்கிறார். நண்பனை அறைந்து விட்ட மனப்புழுக்கத்தில் இருந்த முன்னா அவனிடம் சென்று மன்னிப்பு கேட்ட பின்னர், மனதின் பாரம் குறைந்து, இருவரும் மீண்டும் -எந்த சொல்லப்படாத மனசங்கடமும் இல்லாமல் – நண்பர்களாகின்றனர்.

உறவுகளுக்குள் நிறைய விசயங்களை நாம் செய்வதில்லை. We take everything for granted. உதாரணமாக மன்னிப்பு கேட்பது. மன்னிப்பு என்பது “என்னை மன்னித்து விடு” என்று தான் கேட்க வேண்டும் என்றில்லை. மனைவியை ஓங்கி அறைவிட்ட கணவன், சிறிது நேரத்தில், அவளிடம் சென்று “என்னடா செல்லம் கோபமா?” என்று கேட்டால் கூட போதும். மன்னிப்பு கேட்பதிலும் தவறில்லை இல்லையா? மனைவியிடம் மன்னிப்பையும் சேர்த்து கேட்பதால், போனசாக ஏதும் கிடைக்கவாய்ப்பிருக்கிறதே!

இதில் கவனிக்க பட வேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. சும்மா சும்மா மனைவியை அடித்து விட்டு, பிறகு மன்னிப்பு கேட்பதில் எந்த காந்தீயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மன்னிப்பு என்றால் : தவறை உணர்ந்து கொண்டேன் என்று அர்த்தம். தவறை உணர்ந்து கொண்டால் அதை திரும்ப செய்யலாமா? சாரி கேட்பது இப்பொழுதெல்லாம் பேசனாகி விட்டது. சாரி கேட்பது காந்தீயம் இல்லை, தவறை உணர்ந்து மறுபடியும் செய்யாமலிருப்பதே காந்தீயம். திருடியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட காந்தி அதற்குப்பிறகு திருடவேயில்லை என்பதை கவனிக்கவேண்டும்!

அடுத்து பொய் சொல்லாமல் இருத்தல். உண்மையை ஒத்துக்கொள்ளுதல். முன்னா ஒரு ரவுடி. ஆனால் தனது காதலியிடம் தான் ஒரு புரபொசர் என்று சொல்லி ஏமாற்றுகிறார். வில்லன், முன்னாவிடம் இந்த விசயத்தை அவளிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். முன்னா காந்தியிடம் என்ன வழி என்று கேட்க: “அவன் சொல்வதற்கு முன்னால் நீ அவளிடம் உண்மையைச் சொல்லிவிடு. பிறகு அவனிடம் நீ பயப்படத்தேவையில்லை. தைரியமாக நீ உன் போராட்டத்தை தொரலாம்” என்கிறார். உண்மைதான். உண்மையைச் சொல்லிவிட்டு தைரியமாக போராட்டத்தை தொடராலாம். ஆனால் காதலி? நீயும் அவளும் உண்மையாக காதலிக்கும் பட்சத்தில் உங்கள் காதல் கண்டிப்பாக ஜெயிக்கும், ஆனால் நீ உனக்கு உணமையாக இரு என்கிறார். அவர் சஞ்சய தத் என்பதால் அவரது காதல் உண்மை சொல்லியும் ஜெயித்தது, நமக்கு?

ஆனால் காதல் ஜெயித்ததா இல்லை மன்னாங்கட்டியானதா என்பதல்ல முக்கியம். இரவு தூங்கப்போனால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் வர வேண்டும். அப்படி வரவில்லையென்றால் என்ன வாழ்ந்து என்ன பிரயோஜனம்? குற்ற உணர்வில்லாமல் நிம்மதியாக குரட்டை விட ஒரே ஒருவரால் தான் முடியும்: அவர் தனக்கு தானே உண்மையாக இருப்பவர்.

மூடநம்பிக்கை. வில்லனின் மகளுக்கு வில்லன் பொய் சொல்லி திருமணம் ஏற்பாடு செய்கிறார். அதாவது, ஜாதகப்படி மகள் திருமணம் செய்துகொண்டு போனால், கணவன் இறந்து விடுவான் என்கிறார், பையனின் ஜோசியர். இதைக்கேட்டவுடன் வில்லன் சமயோஜிதமாக அவள் பிறந்த நேரத்தை மாற்றி பையன் வீட்டாரை ஏமாற்றி விடுகிறார். இந்த விசயம் மகளுக்கு, திருமணத்திற்கு முதல் நாள் தான் தெரியவருகிறது. அவள் இதை ஒத்துக்கொள்ளாமல், நேரே சென்று பையனின் தகப்பனிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறாள். அவர் திருமணத்தை நிறுத்தி விடுகிறார். முன்னா வந்து சமாதானப்படுத்துகிறார். ஜோசியரும் உடன் இருக்க, பையனின் தந்தை ஜோசியர் சொல்வதைக்கேட்டு திருமணம் நடக்கவே நடக்காது என்கிறார். முன்னா அவரிடம் வாதாடுகிறார். சுற்றிலும் மக்கள் நின்று கொண்டு வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இரு வீட்டாரும் நல்ல படித்து உயர்ந்த நிலையில் இருப்பவர்களே. திருமணத்துக்கு வந்தவர்களும் உயர்மட்டத்தில் இருப்பவர்களே. அப்பொழுது முன்னா ” படிப்பறிவில்லாத ரவுடியான எனக்கு புரிவது கூட உங்களுக்கு புரியவில்லையா” என்று அங்கே நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து கேட்கிறார். வாஸ்து, பெயர்மாற்றம், மோதிரக்கல், ஜாதக தோஷம் என்று எத்தனை நம்பிக்கைகளில் படித்த நாமே சிக்கி வெளிவர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுது விடிவு?

ஒருவன் தனது தந்தையில் ஆயுட்கால சேமிப்பான ஏழு லட்ச ரூபாயை பங்கு சந்தையில் தொலைத்து விடுகிறான். தற்கொலைக்கு முயற்சி செய்யும் அவனிடம் : “முதலில் உன் தந்தையின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று உண்மையைச் சொல். பிறகு எப்படியாது அந்த பணத்தை அவருக்கு திருப்பிக்கொடுப்பேன் என்று உறுதி கொடு” என்கிறார் காந்தி (முன்னா). அதற்கு அவன் “அதற்கு நான் செத்தே போய்விடுவேன்” என்கிறான். “இத்தனை நாள் உன்னைச் சுமந்த உன் தந்தை இனி உன் சவப்பெட்டியையும் சுமக்க வேண்டுமா” என்கிறார். “பணத்தை எப்படி திருப்பி தருவேன்? மிகப்பெரிய தொகை அல்லவா அது?” என்கிறான் அவன். அதற்கு முன்னா ” அது மிகவும் எளிது. சிக்கனமாக இரு. இரண்டு மடங்கு வேலைசெய். பணத்தை மிக விரைவில் திருப்பிக்கொடுத்து விடலாம்” என்கிறார்.

சிக்கனம். கஞ்சத்தனமாக இல்லாமல் சிக்கனமாக இருப்பது மிகப்பெரிய குணங்களில் ஒன்று. கஞ்சமாக இருப்பவர்களையும், ஊதாரியாக இருப்பவர்களையும் நிறைய பார்க்கலாம். சிக்கனமாக இருப்பவரை காண்பது தான் கஷ்டம். சிக்கனமாக இருந்தாலே நிறைய பிரச்சனைகளை சமாளிக்கலாம் இல்லையா? சிக்கனம் என்பது பணத்தில் மட்டும் இல்லை, நாம் செலவழிக்கும் எல்லாவற்றிலும் தான், நேரத்தை சேர்த்து, அன்பை விடுத்து.

இன்று நமது இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று லஞ்சம். ஒரு அரசு ஊழியர் (ஆசிரியர்!) பென்சன் பணம் தரப்படாமல் இழுத்தடிக்கிறார் மற்றொரு அரசு ஊழியர். சம்பந்தப்பட்ட அதிகாரி லஞ்சம் கேட்கிறார். ஆசிரியரோ குடுக்கும் நிலையில் இல்லை. காந்தி ஒரு வழி சொல்கிறார் அது : அந்த ஆசிரியர் அந்த அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று தனது கண்ணாடி, காது கேட்பதற்கான மெசின், சட்டை, பனியன், பேண்ட், ஜட்டி, செறுப்பு என்று அனைத்தையும் அங்கேயே -ஒவ்வொன்றுக்கும் விலை சொல்லி – கழட்டி கொடுப்பது. லஞ்சம் கேட்டவரை வெட்கி தலைகுனிய வைப்பது. லஞ்சம் கேட்டவர் இதற்கெல்லாம் வெட்கப்பட்டால் எப்போதோ லஞ்சம் ஒழிந்திருக்காதா?

நாம் நிர்வாணப் போராட்டம் நடத்தினால் போலீஸ் பிடித்து சென்று விட வாய்ப்பிருக்கிறது, கவனம். நிர்வாணப் போராட்டம் தான் என்றில்லை, வேறு ஏதாவது அஹிம்சை வழியில் போராடுவது. போராடு, ஆனால் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்கிறார். முடியுமா? இன்றைய சூழலில் சாத்தியமா? அதிகாரத்தில் இருக்கும் பெண்களும் கூட கூச்சமின்றி லஞ்சம் கேட்கும் நிலையில், நாம் லஞ்சம் கொடுக்காமல் இருந்தால் நாம தானே பின் தங்கிவிடுவோம்? நமது வேலையல்லவா நின்றுபோகும்? இந்தியன் தாத்தாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கொடுமையை நினைத்துப் பாருங்கள். உண்மையில், அது போன்று யாருக்கும் நடக்கவில்லை என்று சொல்லமுடியுமா? பிணத்தை உறவினரக்ள் எடுத்து செவதற்கு கூட லஞ்சம் கேட்கும் உலகம் இது. அப்படியிருக்க நாம் மட்டும் லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்ன சாதித்து விடப்போகிறோம்?

எல்லோரும் அடிமைப்பட்டுத்தானே கிடக்கிறார்கள், நாம் மட்டும் அடிமை தனத்துக்கு எதிராக குரல் கொடுத்து என்ன சாதித்து விடப்போகிறோம் என்று அன்றைய சுதந்திரப்போராட்ட வீரர்கள் (எல்லா தியாகிகளின் தியாகமும் ஒன்றே. காந்தியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ, நேதாஜியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ சொல்லமுடியாது. இவ்விரு தலைவர்களின் தியாகத்திற்கு கொடிகாத்த குமரினின் தியாகம் எவ்வகையிலும் குறைந்ததில்லை. கொடிகாத்த குமரினின் தியாகத்திற்கு, போராட்டத்தால் நாடு கடத்தப்பட்டு எங்கோ செக்கிழுத்து யாருக்கும் தெரியாமல், யாராலும் அறியப்படாமல் இறந்து போன ஒவ்வொருவரின் தியாகவும் குறைந்ததல்ல!) நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது. அவர்கள் தங்கள் உடமைகளை, உயிர்களை தியாகம் செய்தார்கள். அதைவிட குறைந்த சில தியாகங்கள் செய்ய நாம் முன் வந்தால் சாதிக்கலாம். எதையும் அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. போராட்டம் வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும்.

ஹிந்தி திரைப்பட உலகம் ஒரு பக்கம் பாதாளத்தில் சென்று கொண்டிருந்தாலும், மறுபக்கம் பிரமிக்க வைக்கிறது. சுவதேஸ், ரங் தே பசந்தி போன்ற படங்கள் சில எடுத்துக்காட்டுகள். முன்னாபாயில் எவ்வளவு வாழ்க்கைக்கு தேவையான நல்ல விசயங்கள் இருக்கின்றன. அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் நம்மிடம் இருந்தாலும், இதை தைரியமாக சொல்வதற்கு நிறைய நம்பிக்கை வேண்டும். அதுவும் இன்றைய திரைப்பட சூழலில் இது போன்ற படங்கள் தான் ஆரோக்கியமான நாளைய சினிமா எதிர்காலத்துக்கு ஆக்சிஜன். இப்படத்தின் வெற்றி மேலும் பல நல்ல படங்களின் முயற்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

இந்த படத்தின் தமிழாக்கத்தில் -கண்டிப்பாக தமிழாக்கம் செய்யவேண்டும்- ரஜினியோ, கமலோ ( கமலுக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இல்லை என்று அவர் மறுக்க முடியாது. நடிக்கத்தானே சொல்கிறார்கள். அவர் நடிகர் தானே?) – நடித்தால் மக்களை எளிதாக சென்றடையும் என்று நினைக்கிறேன். காந்தீயக் கொள்கைகள் மறுபடியும் நினைவு கூறப்படும். இதனால் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது, ஆனால் அட்லீஸ்ட் 0.000000001% மக்களையாவது யோசிக்க வைத்தால், அது பெரிய -மிகப் பெரிய -வெற்றி. உதாரணத்திற்கு என்னிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் போல. அதுக்காக நான் காந்தியவாதியாகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. முதலில் நீண்ட காலமாக தொடாமல வைத்திருக்கும் Louis Fisher எழுதிய Biography Of Ghandhiயைப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

மாற்றம் ஏற்படலாம். ஏனென்றால் மாற்றம் என்ற ஒன்றே என்றைக்கும் மாறாத ஒன்று.

வந்தேமாதரம்.

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 3

டிசம்பர் 4, 1984

UCIL இன் மானேஜேர் ஜே.முகுந்த் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஐந்து பேர் டிசம்பர் மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். தொழிற்சாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது, CBI விசாரணையை ஆரம்பித்தது.

அதேசமயத்தில், அமேரிக்காவில், டிசம்பர் மூன்றாம் தேதி பின்னிரவில், டான்பரியில், கனெக்டிக்கட்டில் இருக்கும் Union Carbide Corporation (UCC) தலைமை அலுவலகத்தில், ஒரு டெலக்ஸ் பிரின்டர் சட்டென்று உயிர்பெற்றது. போப்பால் பிரிவில் ஒரு வால்வ் பழுதடைந்து விட்டது என்றும் உயிர்பலி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்ற மிகச்சுருக்கமான தகவலைக்கொண்டிருந்தது அது. பின்னர் செய்தி பெரிய அளவில் கசிய ஆரம்பிக்க அந்த ராட்சத தொழிற்சாலை அதிர்ச்சியில் உரைந்தது.

“போப்பாலில் நடந்து மிகவும் எதிர்பாறாத ஒன்று. இதுக்கு முன்னர் இது போல் எதுவும் நடந்ததில்லை. மேலும் உலகத்திலே பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்களிடம் தான் சிறப்பாக இருக்கிறது” என்பது தான் முதன் முதலில் UCC வெளியிட்ட அறிக்கை. UCC பீதியில் உரைந்திருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை. அமெரிக்காவை இந்தச் செய்தி சென்றடைந்த சில மணி நேரத்திலே, MIC தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் விர்ஜீனியாவில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைகள் நிறுத்தப்பட்டன.

செவ்வாய்கிழமை காலை 4:30 மணியளவில் சில முக்கியமான உயர்மட்ட அதிகாரிகள், இழந்த UCC யின் கவுரவத்தை சீர் படுத்த மிகப் பெரிய அளவிலான பிரச்சாரத்தைத் துவக்கியிருந்தனர். போப்பாலில் பலியானவர்களுக்காக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் ஆறாம் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்கு UCC யின் அனைத்து அலுவலகத்திலும் கொடி அரைக்கம்பத்திலே பறந்தது.

UCC பலரின் நிர்பந்தத்திற்குப் பிறகு “இவ்வளவு பெரிய அளவிலான சேதம் விளையக்கூடும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை” என்று ஒத்துக்கொண்டது. ஆனால் போப்பாலில் என்ன தவறு நடந்தது என்பதைக் கூற மறுத்தது. உயர் மட்ட அதிகாரிகளிலிருந்து, டாக்டர்ஸ், மானேஜர்ஸ், பொறியாளர்கள் என அனைவருமே வாய் திறக்கவில்லை. அதே சமயத்தில், UCC, அமேரிக்காவில் இது போல நடக்க வாய்பில்லை என்று தொடர்ந்து உறுதியளித்துக்கொண்டிருந்தது, விர்ஜினியாவில் மிக அதி நவீன பாதுகாப்பு விசயங்கள் இருக்கிறது பயப்படத்தேவையில்லை என்றது.

உலகநாடுகள் கடுமையாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டன. Breziero, France இல் இருந்த, UCC க்கு சொந்தமான, MIC ஐ வைத்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது. மக்கள் அதை மீண்டும் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரேசில் MIC சேமிப்பைத் தடைசெய்தது. Livingston, Scotland, UCC கொடுத்திருந்த, புதிய தொழிற்சாலை தொடங்கும் திட்டம் ஒன்றை நிராகரித்தது.

அடுத்த மூன்று நாட்களில் UCC பங்குகளின் விலை வால்மார்ட்டில் சடசடவென சரிய ஆரம்பித்தது. இதனால் UCC க்கு ஏற்பட்ட நஷ்டம் ஏறக்குறைய முன்னூறு மில்லியன் டாலர். ஆனாலும் UCC தான் திவாலாகி விட்டதாக ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்திருந்த பேட்டியிலும் எந்தவித பதட்டத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. “எங்களுக்கு இருக்கும் இன்சூரன்ஸ் மற்றும் பிற வருமானங்கள் நன்றாகவே இருக்கின்றன. எங்களது தற்போதைய நிதி நிலவரம் சுபிட்சமாகவே இருக்கிறது” என்றே கூறினார்கள். உலகம் இதை நம்பியது. உடனே பங்கு சந்தையில், UCC யின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

டிசம்பர் 7, 1984

அப்பொழுது வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) தான் UCC யின் சேர்மேனாக இருந்தார். அவர் டிசம்பர் 7, வெள்ளியன்று இந்த சம்பவத்தை விசாரனை செய்ய போப்பால் வந்தடைந்தார். “எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பாகச் செய்வோம்” என்று அவர் அமெரிக்கா புறப்படும் முன்னர் உறுதியளித்தார்.

அவருக்கு டெல்லியில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது, போப்பாலுக்கு அவர் பாதுகாப்பாக அழைத்துச்ச்செல்லப்பட்டார். அவர் போப்பாலை வந்தடைந்ததும் போலீஸ் அவரை கைது செய்தது. UCC யின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால், நடந்து முடிந்த துயர சம்பவத்துக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கருதப்பட்டது.

UCIL இன் கெஸ்ட் கவுஸ்சில், அவர் ஆறு மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்து, இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அவர் டெல்லிக்கு மீண்டும் ரகசியமாக அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து யூனியன் கார்பைடுக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் அவரை பத்திரமாக அவரது சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றது. அதற்கப்புறம் அவர் நீதிமன்றத்திற்கு வரவேயில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று நமது நீதிமன்றம் அறிவித்தது.

டிசம்பர் 10, 1984

அமெரிக்காவுக்கு திரும்பியவுடன் வாரன் ஆன்டர்சன், டிசம்பர் பத்தாம் தேதி ஒரு பத்திரிக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். “இந்தியாவில் உயிரிழந்தவர்களுக்கு சரியான தொகை இழப்பீடாக வழங்கப்படும். இதனால் கம்பெனியின் நிதி நிலவரம் எந்த விதத்திலும் மோசம் அடையாது” என்றார். அவர் இரண்டு விசயங்களை திரும்பத் திரும்ப சொன்னார். ஒன்று: இந்த துயர சம்பவத்தால் கம்பெனி எந்த விதத்திலும் பாதிப்படையாது. இரண்டு: இந்தியாவில் நடந்த – சந்தேகமில்லாமல் உலகத்திலே நடந்த மிக மோசமான – விபத்துக்கு கம்பெனி எந்த வகையிலும் பொறுப்பல்ல.

1945 ஆம் ஆண்டு ஒரு சாதரண சேல்ஸ் மேனாக வேலையில் சேர்ந்த வாரன் ஆன்டர்சன் 1982 இல் அந்த கம்பெனியின் CEO வாக வள்ர்ச்சியடைந்திருந்தார். ஒரு
சேர்மேனாக அவர், கம்பெனியின் செல்வாக்கை உறுதியாக மற்றும் வெற்றிகரமாகவே நிலைநாட்டினார்.

மற்ற தொழிற்சாலைகள் போலவே UCC யும் உற்பத்தியை மனதில் கொண்டே இயங்கிவந்தது. அவர்களது தயாரிப்பை, அவர்கள் தங்களது கணக்கு புத்தகத்தின் எண்ணற்ற படங்களாக, கிராப்பாகத்தான் கண்டார்கள். இந்த தொழிலில் உயிர் பலி இருக்கும் பட்சத்தில், லாபக்கணக்கிலிருந்து சில எண்களை மட்டுமே கழிப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை.

டிசம்பர் 12, 1984

மறுபுறம், போப்பால் அரசுக்கு பிரச்சனைகள் மேலும் மேலும் குவிந்தவாறு இருந்தது. மக்களின் பட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது. யாரைத்தான் நம்புவது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நம்பிக்கையற்ற குழப்பான ஒரு இருண்ட வாழ்க்கையை அவர்கள் மௌனமாக கழித்துக்கொண்டிருந்தனர்.UCC யின் இன்னொரு டாங்க்கிலிருந்த -E611- பதினைந்து டன் MIC எப்படி அழிப்பது -அல்லது நீர்த்தப்படுத்துவது- என்பதே மாநில அரசின் தற்போதைய தலையாய வேலையாக இருந்தது. டிசம்பர் 12 அன்று, ஆபரேசன் பெயித் (operation faith) என்ற திட்டம் முதலமைச்சர் அர்ஜுன் சிங்கால் அறிவிக்கப்பட்டது. இது உண்மையைச் சொல்லப்போனால், டாங்கிலிருந்த MIC ஐ அழிப்பதற்காவே -or rather neutralize- ஏற்படுத்தப்பட்டது. டிசம்பர் 16 அன்று செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆபரேசன் பெயித் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையூட்டுவதற்கு முயற்சித்தது. பள்ளி கல்லூரிகள் டிசம்பர் 23 வரை திறக்கப்படவில்லை. இந்த MIC ஐ நீர்த்தப்படுத்து செயலைப் பற்றி மிகப்பெரிய அளவில் ரேடியோ மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. மக்களின் நம்பிக்கையைத் திரும்பப்பெற தொழிற்சாலைக்கு அருகிலிருந்த மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு முகாம்கள் அமைக்கும் பணி கவனமாக செய்யப்பட்டது.

ஏற்கனவே மனதளவில் பாதி இறந்திருந்த போப்பால் மக்கள் யாரிடமும் நம்பிக்கை வைக்க தயாராக இல்லை. துன்பத்தை நேரில் கண்டு அனுபவித்த மக்கள் ரேடியோ சொல்வதையா கெட்க்கப்போகிறார்கள். அவர்கள் எங்கெங்கோ ஓடினார்கள். பஸ் கூரையிலும், ரயில் கூரையிலும், ஏன் ரயில் பெட்டிகளை இணைக்கும் சங்கிலிகளில் கூட அவர்கள் பயணம் செய்தனர். ஆஸ்பத்திரிகளிலிருந்து நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படாமலேயே மாயமாய் மறைந்தனர். மக்கள், தங்கள் வாழ்க்கை முழுதும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை, வங்கிகளிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறினர். பெட்ரோல் பம்புகளின் நீண்ட வரிசைகளில் அவர்கள் தவமாய் காத்துக் கிடந்தனர். நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உலகத்தின் பல திசைகளிலிருந்து வந்திருந்த மக்கள் ஒரேயடியாக போப்பாலைக் காலி செய்தனர். சிலர் தங்களது சொந்தங்களை ஏதும் எழுதப்படாத சமாதிகளில் விட்டுச்சென்றனர்.

UCC க்கு அருகில் வாழ்ந்தவர்களுக்காக பதினோறு முகாம்கள் அமைக்கப்பட்டன. ஆனால் ஏழையிலும் ஏழைகளே -நகரத்தை விட்டு வெளியேற இயலாதவர்களே- இந்த முகாம்களில் தங்கினர். ஆபரேசன் பெய்த்தைப் பற்றிய விளம்பர போர்டுகள், காலியான வீதிகளில், பேய்களைப்போல காவல் காத்துக்கொண்டு, கொடிய தனிமையில் சோகத்தோடு நின்றுகொண்டிருந்தன.

ஆபரேசன் பெயித் பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட யாருமற்ற தனிமையிலே தான் நடந்தது. அரசு அலுவலகங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகள் பணியாளர்களை நகரத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க அவர்கள்து விடுமுறைகளை ரத்து செய்தன. ஆனால் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தப்பியோடும் மக்கள் அதிகாரிகளின் சம்மதத்திற்காக காத்துக்கிடக்கவில்லை. அன்று மட்டும் எழுபதினாயிரம் மக்கள் நகரத்தைக் காலி செய்தனர் என்று அரசு அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது.

(தொடரும்)

 

நன்றி: Suroopa Mukherjee

Translated from Suroopa Mukherjee’s BHOPAL GAS TRAGEDY : The Worst Industrial Disaster in Human History.

நூறு

என்னோட நூறாவது பதிவுங்க இது. அதுக்கென்ன இப்ப? அப்படீன்னு கேட்டாக்க நான் என்ன சொல்றது? அது வந்து, நான் வலைப்பூ (blog க்கு அது தானே தமிழ்ல பேரு?) ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.ஆரம்பிச்சது என்னவோ பிப்ரவரி 2005. ஆனா சீரியஸா பதிவு செய்ய ஆரம்பிச்சது மே 2006 ல இருந்துதான். முதல்ல படித்த கவிதைகள், செய்திகள் அப்புறம் நகைச்சுவைத் துணுக்குகள்ன்னு தான் கட்-காபி பேஸ்ட் செஞ்சுகிட்டிருந்தேன். திடீர்னு ஒரு நாள் விதிகள் அப்படீங்கற பதிவு போட்டேன். அது நான் சொந்தமா எழுதினது. மீரா ஜாஸ்மீன் பற்றிய பதிவு அது. அப்பவெல்லாம் என்னோட ரூம் மேட்கிட்ட தான் முதல்ல வாசிச்சு காமிப்பேன். அவனும் அரைத் தூக்கத்தில கேட்டுட்டு ஓகேடா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு அடுத்த நிமிசமே குரட்டை விட ஆரம்பிச்சுடுவான். அதுக்கப்புறம் சில நாளில் அவன் வேறு வீட்டுக்கு சென்று விட்டான். அவன் வீட்டைக்காலி செய்ததற்கு நான் எழுதிய பதிவுகளை, கதைகளை வாசித்துக்காட்டி அவனை கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்ற வதந்தி நிலவி வருகிறது. நம்பிவிடாதீர்கள். விதிகளை எதேச்சையாக திண்ணைக்கு அனுப்ப அவர்கள் பிரசுரம் செய்து விட்டார்கள். அது ஒரு தூண்டுகோல்.

நான் சென்னையிலிருக்கும் போதே ரெண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு குறு நாவல் போன்ற ஒன்றையும் எழுதியிருந்தேன். மேலும் பள்ளியில் படிக்கும் போது சில நாடகங்கள் எழுதி இயக்கியிருக்கிறேன். அதையெல்லாம் பிளாக்கில் போட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உங்களை விட்டால் வேறு யார் அதையெல்லாம் படிக்கப்போகிறார்கள்!?. தமிழில் டைப் செய்வது தான் சற்று சிரமான காரியமாக இருந்தது. நான் எழுதிய எல்லா கதைகளையும் ஒரு வழியாக அரங்கேற்றம் செய்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தமிழ்மணம் பற்றிய தகவல் கிடைத்தது. அப்புறம் தேன்கூடு.

என்னுடைய தோழி ஒருவர் தான் அப்போ என் பிளாக்குக்கு டெடிகேட்டட் ரீடர். இப்பவும் தான். ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவ ப்ளாக்கு போய்விடுவார். நான் என்ன குப்பை பதிவு செஞ்சாலும் நல்லா இருக்குடான்னு சொல்ற ஒரே ஜீவன். Thanks காள்யா. இந்த நூறாவது பதிவை உனக்கு டெடிகெட் செய்யறேன்.

கொஞ்சம் சோர்வா, கண்டிப்பா பதிவு செஞ்சுதான் ஆகனுமான்னு இருக்கறப்போ தான் thepreciouss.blogspot- கிருத்திகாவின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு தெரிந்தவரையில் அவ்வளவு அருமையான ஆங்கிலத்தில், அவ்வளவு அழகான இந்திய ஆங்கில பதிவை நான் பார்த்ததில்லை. என்னோட inspiration அவர் தான். அவரிடமிருந்து தான் blog சம்பந்தமாக நிறைய கற்றுக்கொண்டேன். ஏனோ இப்பொழுது அவர் பதிவதில்லை. Harry Potter படிக்கும் ஆர்வம் எனக்கு அவரிடம் இருந்து தான் வந்தது. இப்பொழுது ஐந்தாவது புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். மிக விரைவில் Harry Potter பற்றிய ஒரு பதிவிட வேண்டும்.

அப்புறம் தேன்கூட்டின் சிறுகதைப் போட்டிகள். கதை எழுதுவதையே மறந்திருந்த பொழுது தான் தேகூட்டின் சிறுகதைப் போட்டி பற்றிய அறிமுகம் கிடைத்தது. உடனே என்னுடைய அசட்டு மனிதர்கள் கதையை அனுப்பினேன். பின்னூட்டங்கள் சில வந்தது. அதற்கப்புறம் தேன்கூட்டின் போட்டிக்காகவே கதைகள் எழுத ஆரம்பித்தேன். ஒரு விதமான encouragement அது. பரிசு கிடைக்குதா இல்லையா என்பது பெரிதல்ல. நான் இதுவரை முதல் பத்தில் கூட வந்ததில்லை என்பது வேறு விசயம். ஆனால் என்னாலும் கதை எழுத முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது தேன்கூடு. அப்படி நான் தேன்கூட்டுக்கு அனுப்பிய கதைகளில் எனக்கு பிடித்தமான கதை காடனேரி விளக்கு. ஏனோ நிறைய பேர் புரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். 😦

அப்புறம் யார் எழுதியது என்று மறந்துவிட்டது: train ல தொங்கிக்கிட்டே போற ஒருவருடைய கதை -தேன்கூடு பரிசு போட்டியில் வெளியானது- எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்தக்கதை பரிசு வாங்கியது என்று நினைக்கிறேன். நான் ரசித்த பதிவுகளும் கதைகளும் நிறையவே இருக்கின்றன. அதைப்பற்றியே ஒரு பதிவிட வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போ தேன்கூடு போட்டியை நிறுத்திவிட்டது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கதை எழுதுவதற்கு டாபிக் யார் கொடுப்பா?. தேன்கூடு போட்டிக்கு அனுப்பிய ஒரு கதையை – தொலைவு – ரெவ்யூ செய்து போஸ்டன் பாலா 3.5 outof 4 போட்டிருந்தார். அது கதை எழுதுவதற்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது. நிறைய நம்பிக்கை அளித்தது. Thanks Bala.

ஆயிரம் கால் இலக்கியம் என்ற தொடர் கிருத்திகாவுடன் debate செய்ததால் வந்த விளைவே. நான் எழுதிய current incidents பற்றிய பதிவுகளில் எனக்கு பிடித்தது: சிற்பிகளும் சிலைகளும் அப்புறம் கேட்பதற்கு உரிமையில்லை. சிற்பிகளும் சிலைகளும் என்ற பதிவு நான் எழுதிய உடன் எங்கள் வீட்டிலிருந்து தான் எனக்கு முதல் எதிர்ப்பு வந்தது. அரசியல் எழுதாதே என்று. எங்க அண்ணன் advice மேல advice. அதற்கு இணையாக என்னை திட்டி வந்த ஒரு பின்னூட்டம். அதை பிரசுரிக்க முடியவில்லை :). ஆனால் எனக்கு சந்தோசமே, பின்னூட்டமே இல்லாமல் இருந்த போது அட்லீஸ்ட் திட்டாவது கிடைக்கிறதே. ரொம்ப மோசமான வார்த்தைகளால் திட்டு கிடைத்தது ஆழ்வார் படம் பற்றிய விமர்சனப் பதிவின் போது தான். டாக்டர் ராமதாஸ் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வாரம் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் தான் சினிமா பார்க்க அனுமதிப்போம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். சும்மா ஜோக்குகாகத்தான் சொன்னார் என்று நினைத்திருந்தேன். ஆழ்வார் படத்தின் விமர்சனத்துக்கே கெட்டவார்த்தைகளால் திட்டும் மக்கள் இருக்கும் இந்நாட்டில் அவ்வாறான சட்டம் கொண்டுவந்தால் தேவலையோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

கவிதைகள் எனக்கு பிடிப்பதில்லை. காதல் கவிதைகளைத்தவிர. :)) அது மட்டும் தாங்க புரியுது. அப்படியிருந்தும் ஒரு சில நேரங்களில் சில விபரீத முயற்சிகள் செய்துபார்ப்பேன். அவ்வாறான ஒன்று – ஒன்றே ஒன்று – தான் ரோடெங்கும் நயாகராக்கள் பதிவு. கவிதைகள் எழுதி உங்களைப் படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன். 🙂

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புதுமைப்பித்தன் தான் இன்றைய தமிழ்இலக்கிய bloggerகளின் கருப்பொருள் மற்றும் உருப்பொருள். இவ்வர்கள் இல்லையென்றால் நிறைய பேருக்கு என்ன எழுதுவது என்றே தெரியாது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அ.இரா. வெங்கடாசலபதி தொகுத்தருளிய புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு எனக்கு நிறைய help செய்திருக்கிறது. புதுமைப்பித்தனின் கட்டுரையிலிருந்து சுட்ட கருத்து தான் நான் எழுதிய அமுதத்தை இட்டாள் என்ற சிறுகதை. என் பிறந்தநாள் அன்று பணிரென்டு மணிக்கு எழுதி முடித்தேன். கேக் வெட்டி கொண்டாடி விட்டு போஸ்ட் செய்தேன். நான் சென்னையிலிருக்கும் போது பாதி எழுதி முடிக்காமல் விட்ட கதை காந்தம். ஆனால் இப்பொழுது அது காணாமல் போய்விட்டது. மறுபடியும் முதலிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு தொடர்கதையாகப் பதிவு செய்திருக்கிறேன். யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்ற போப்பால் டிராஜடி பற்றிய தொடரை எப்படியாவது இன்னும் சில வாரங்களில் முடித்துவிட முயற்சிக்கிறேன்.

ஜெயமோகனால் தான் மதி கந்தசாமியின் அறிமுகம் கிடைத்தது. ஒரு பின்னூட்டத்தில் மதியைப்பற்றி நிர்மல் குறிப்பிட்டிருந்தார். என்னைத் தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் encourage செய்துகொண்டிருப்பவர்கள். Thanks Nirmal and Mathy.

போஸ்டன் பாலா போன வருடத்தின் சிறந்த பதிவுகளில் ஒன்றாக குரல்வலையைத் தேர்வு செய்திருந்தார். எவ்வளவு பெரிய encouragement தெரியுமா அது? மதியும் கூட குரல்வலையைப் பற்றி சொல்லியிருந்தார். Thanks again Bala and Mathy.

அவ்வப்போது என் இடுகைகளை கில்லிக்கு கொடுக்கும் பிரகாஷ்க்கும் நன்றிகள். மேலும் என்னை பின்னூட்டங்களின் மூலம் encourage செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் encouragement வரும் பதிவுகளிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன். 🙂 மேலும் நான் நவம்பர் டிசம்பரில் அதிகம் பதிவு செய்யாமல் இருந்தபோது, என்னை வற்புறுத்தி பதிவு செய்ய வைத்த சிவாவுக்கும் நன்றிகள். (மொதல்ல அவனக்கண்டுபிடிச்சு உதைக்கனும்டா..ன்னு நீங்க யோசிக்கிறீங்கதான?)

மேலும் ஒரு பதிவு கூட விடாமல் அத்தனையையும் படித்து விட்டு கருத்து சொல்லும் எனது கலீக்ஸ் சரவணன், சுதா மற்றும் ராம்கிக்கும் நன்றிகள். எனது பழைய ரூம் மேட் அஸ்வினுக்கு -பாவம்ங்க அவன். எத்தனநாள் கண்ணுமுழித்து என் கதைகளைக் கேட்டிருப்பான்னு நினைக்கிறீங்க- ஸ்பெசல் நன்றிகள்

எண்ணற்ற எழுத்தாளர்கள் உருவாவதற்கு களம் அமைத்துக்கொடுத்திருக்கும் Blogger மற்றும் அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய பேருதவியாக இருக்கும் Aggregators: thamizmanam மற்றும் தேன்கூடுக்கு எனது நன்றிகள்.

நான் டைப் செய்ய உதவும் முரசு எடிட்டருக்கும் அதை யுனிகோடாக மாற்ற உதவும் சுரதாவுக்கும் நன்றிகள். எல்லாமே free of cost. Thanks to the technology.

Once Again, Thanks All.

 

BABEL

Sean Penn நடித்த 21 Grams என்ற அருமையான படத்தை இயக்கிய மெக்சிக்கோவில் பிறந்த Alejandro González Iñárritu என்பவர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். BABEL இந்த வருடத்தைய ஆஸ்காருக்கு ஏழு நாமினேஷன்களைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் – ஆனால் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமான – நடக்கும் சம்பவங்கள் காட்டப்படுகின்றன. அதில் வரும் கதாப்பாத்திரங்கள் தீவிரமாக அலசப்படுகின்றன. சம்பவங்கள் Butterfly Effect என்று சொல்ல முடியாவிட்டாலும், கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்று தான்.

முதலில் மொரோக்கோவின் ஒரு மூலையில், ஆடுகள் மேய்த்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. ஹசன் என்பவர், அப்துல்லா என்ற அந்த குடும்பத்தின் தலைவருக்கு துப்பாக்கி ஒன்றை விற்கிறார். அப்துல்லா தனது இரண்டு மகன்களிடம் அந்த துப்பாக்கியைக் கொடுக்கிறார். ஓநாய்களிடமிருந்து ஆட்டு மந்தையைக் காப்பாற்ற இந்த துப்பாக்கியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறுகிறார். ஹசன் அந்த துப்பாக்கி மூன்று கி.மீ வரை சுடும் தன்மை கொண்டது என்கிறார்.

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டாக சுடுகிறார்கள். அவர்களுக்கு இந்த துப்பாக்கி உண்மையிலே மூன்று கி.மீ சுடுமா என்ற சந்தேகம் எழுகிறது. அவர்கள் நின்று கொண்டிருக்கும் மலைமேலிருந்து கீழே ரோட்டில் வந்து கொண்டிருக்கும் வாகனங்களைக் குறிபார்க்கிறார்கள். முதலில் ஒரு வேன் வருகிறது. மூத்தவன் சுடுகிறான். ஒன்றும் நடக்கவில்லை. இளையவன், “உனக்கு சுடத்தெரியவில்லை என்னிடம் தா” என்று வாங்கி அங்கே வந்து கொண்டிருந்த ஒரு டூரிஸ்ட் பஸ்ஸைச் சுடுகிறான். முதலில் ஏதும் நடக்காதது போல சென்று கொண்டிருந்த பஸ் சட்டென்று நிற்கிறது.


அமெரிக்காவிலிருக்கும் ஒரு தம்பதியினர் -Richard, Susan -மொரோக்கோவுக்கு சிதைந்து கொண்டிருக்கும் தங்களது திருமண வாழ்க்கையை சீர் படுத்த டூர் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு மகன். ஒரு மகள். மகனையும் மகளையும் அமேரிக்காவிலிருக்கும் தங்களது வீட்டிலே நானியிடன் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் சிறய வாக்குவாதம் நிகழ்கிறது. ஒருவரை மற்றொருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். டூரிஸ்ட் பஸ் கிளம்புகிறது. ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த சூசன் குண்டடி படுகிறார். இரத்தம் வழிந்தோடுகிறது. அப்துல்லாவின் இளைய மகன் சுட்ட குண்டு சூசனைத் தாக்கியிருக்கிறது.

பக்கத்தில் ஏதும் ஆஸ்பத்திரி இல்லாமல் அருகிலிருக்கும் ஒரு கிராமத்துக்கு அவளை அழைத்துச் செல்கின்றனர்.பஸ்ஸில் உடன் பயனித்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் -அன்வர் – ரிச்சர்டுக்கு உதவியாக இருக்கிறார். போதுமான மருத்துவ வசதி இல்லாததால் குண்டடி பட்ட சூசனுக்கு மயக்க மருந்து இல்லாமலே தையல் போடப்படுகிறது. டூரிஸ்ட் பஸ்ஸில் உடன் பயனித்த அமேரிக்கர்கள் சூடு தாங்காமல் தாங்கள் திரும்ப வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். ரிச்சர்ட் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காமல் டூரிஸ்ட் பஸ் இவர்களை அந்த வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்திலே விட்டுச் செல்கின்றனர். ரிச்சர்ட் தனது எம்பசிக்குப் போன் செய்து போக்குவரத்து வசதி செய்து தரும் படி கேட்கிறான்.
இந்த சம்பவம் பரபரப்பு அடைகிறது. சுடப்பட்டவர் அமெரிக்கர் என்பதால் அமெரிக்கா தீவிரவாத வெறிச்செயல் என்று முத்திரை குத்துகிறது. இது தீவிரவாதம் இல்லை என்பதை நிரூபிக்க மொரோக்கோ அரசு தீவிர நடவடிக்கையில் இறங்குகிறது. மலையில் கண்டெடுத்த தோட்டாக்களை வைத்து என்ன துப்பாக்கி ரகம் என்பதைக் கண்டுபிடித்த போலீஸ் ஹசனை வலைத்துப் பிடிக்கிறது. ஹசன் தான் ஏற்கனவே அப்துல்லாவுக்கு விற்று விற்றதாகக் கூறுகிறான்.

போலீஸ் அப்துல்லாவைத் தேடிக்கொண்டு வரும்போது எதேச்சையாக அப்துல்லாவின் மகன்களை வழியில் பார்த்து அப்துல்லாவின் வீட்டுக்கு வழி கேட்கிறது. நிலமையை உணர்ந்து கொண்ட இரு சிறுவர்களும் – பெரியவன் முழித்து கொண்டிருக்க – சமயோஜிதமாக சிந்தித்து வழி மாற்றிக் கூறுகின்றனர். இந்த சீனில் சின்னப்பையன் செம கூல்.
ஜப்பானில் வாய் பேசவும் முடியாத, கேட்கவும் இயலாத ஒரு பெண்ணின் கதை வருகிறது. அவளது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இந்த மன உளைச்சலுடன், அவளுக்கு தன்னை மற்ற பையன்கள் கண்டுகொள்வதில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. அது obssession ஆக மாறுகிறது. விளைவு, அவள் public seduction இல் இறங்குகிறாள். உள்ளாடை ஏதுமின்றி மிகச்சிறய ஸ்கர்ட் மட்டும் போட்டுக்கொள்வது, டென்டிஸ்டிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பது என்று தொடங்கி கடைசியில் தனது அப்பாவை துப்பாக்கி சம்பந்தமாக விசாரிக்க வந்த டிடெக்டிவ் ஒருவரிடமே தன்னைக்கொடுக்கிறாள். டிடெக்டிவ் முதலில் மறுத்தாலும் பிறகு அவளின் அழுகையையும், நிலையும் நினைத்து சம்மதிக்கிறார். புறப்படும் பொழுது அவள் அவரிடம் ஒரு லெட்டர் கொடுக்கிறாள். அதை பிறகு வெளியே சென்றபிறகு படிக்குமாறு கூறுகிறாள்.

டிடெக்டிவிடம் அவள் தனது தாய் பால்கனியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள் என்கிறாள். அதைத் தான் பார்த்ததாகவும் சொல்கிறாள். அவளின் அப்பா ஒரு வேட்டைப்பிரியர். அவர் மொரோக்கோ சென்றிருந்த பொழுது ஹசனுக்கு – அவருக்கு guide ஆக இருந்திருக்கிறார்- பரிசாக துப்பாக்கியை வழங்கியிருக்கிறார்.

டிடெக்டிவ் கீழே வரும்பொழுது ஊமைப்பெண்ணின் அப்பாவும் வந்து விடுகிறார். அவரிடம் ஹசனுக்கு அவர் தான் துப்பாக்கியைக்கொடுத்தாரா என்று கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டு, அவரது மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு தனது வருத்தத்தை தெரிவிக்கிறார். ஆனால் அந்த ஊமைப்பெண்ணின் அப்பா அதிர்ச்சியடைந்து தன்னுடைய மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை , அவள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்கிறார்.

குழம்பிய டிடெக்டிவ் இரவு உணவின் போது அந்த ஊமைப்பெண் கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று இறுதி வரைக்கூறப்படவில்லை.

ரிச்சர்ட் மற்றும் சூசனின் மகன் மற்றும் மகளைப் பற்றிய கதை வருகிறது. மகனையும் மகளையும் கவனித்துக்கொள்ளும் நானி மெக்சிக்கோவைச் சேர்ந்தவர். அவரது மகனுக்கு அன்று திருமணம். கண்டிப்பாகச் சென்றே தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கும் நானி குழந்தைகளை என்ன செய்வதென்று யாரிடத்தில் விட்டுச் செல்வது என்று தெரியாமல் தன்னுடனே அழைத்துச்செல்கிறார். அவரது உறவினர் ஒருவரின் -கேயில்- காரில் இவர்கள் மெக்சிகோ செல்கின்றனர்.

அமெரிக்க சிறுவன் மெக்சிக்கோவை வினோதமாகப் பார்க்கிறான். கேயில் அநாசாயமாக கோழியின் கழுத்தைத் திருகிக் கொல்வது நம்மையே வெலவெலக்கச் செய்யும் போது இதையெல்லாம் பார்த்திறாத அமேரிக்கச் சிறுவன் என்ன செய்வான். பேந்த பேந்த முழிக்கிறான்.

திருமணம் முடிந்து குடி போதையிலிருக்கு கேயில் கார் ஓட்ட நானியிம் சிறுவனும் சிறுமியும் மீண்டும் அமேரிக்காவை நோக்கி பயனிக்கின்றனர். செக்போஸ்டில் அமேரிக்க போலிஸ் இவர்களைப் பிடித்து நிறுத்துகிறது. கேயலை போதை டெஸ்டிற்கு அழைக்கிறது. நிலைமையை உணர்ந்த கேயல் வேகமாக காரை ஸ்டார்ட் செய்து தப்பிக்கிறான். நீண்ட தூரம் சென்றபின்னர் ஒரு காட்டு வழிப்பாதையில் நானியையும் சிறுவனையும் சிறுமியையும் இறக்கிவிட்டுவிட்டு அவன் சென்றுவிடுகிறான். இரவில் என்ன செய்வது என்று தெரியாமல் சிறுவனும் சிறுமியும் அழுகிறார்கள். நானி செய்வதறியாமல் திகைக்கிறார். அழுகிறார். தவறு செய்துவிட்டதை உணர்கிறார்.

அமேரிக்க போலீஸ் பெற்றோர்களின் சம்மதம் இன்றி பிள்ளைகளை வேறு நாட்டிற்கு அழைத்து சென்றதை கண்டித்து நானியை மெக்சிக்கோவிற்கே திருப்பி அனுப்புகிறது. நானி கதறுகிறார். தனக்கு மெக்சிகோவில் ஒன்றும் இல்லையென்றும் அமேரிக்காவிலே பதினைந்து வருடம் வாழ்ந்து விட்டேன் தயது செய்து என்னை வெளியே அனுப்பாதீர்கள் என்று கெஞ்சுகிறார். பலனில்லை.

சூசனை ஹெலிகாப்பட்டர் வைத்து அமெரிக்க எம்பசி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுவருகிறது. உதவியாக இருந்த அன்வருக்கு ரிச்சர்ட் பணம் கொடுக்கிறார், அன்வர் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். கஷ்டகாலத்தில் மிகவும் அன்புடன் இருந்த சூசனும் ரிச்சர்டும் தங்ளது பிணைப்புகளை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.

அந்த கிராமத்தில், தைத்த பிறகு வழி தெரியாமல் இருக்க சூசனுக்கு அந்த வீட்டிலிருக்கும் கிழவி புகைக்க கஞ்சா கொடுக்கிறாள். அவள் புகைத்து மயக்கமாவதைப் பார்த்து ரிச்சர்ட் அழுவது மிகவும் நெகிழ்ச்சியான சீன். எழுந்திருக்க முடியாமலிருக்கும் சூசன் சிறுநீர் கழிக்க ரிச்சர்ட் உதவுவதும் நெகிழ்ச்சி. Brad Pitt நடிப்பில் மின்னுகிறார். புதிய தோற்றமும் கச்சிதமாகப் பொருந்துகிறது. நானியாக நடித்தவரின் நடிப்பும் மிக இயல்பு. நடு காட்டில் சதுப்பு நிலத்தில் தனித்து விடப்பட்ட பொழுதும், குழந்தைகளை எப்படியாவது எந்த பிரச்சனையுமில்லாமல் அமெரிக்க சென்று சேர்த்துவிட வேண்டும் என்று துடிப்பதிலும் மிளிர்கிறார்.

அந்த ஜப்பானியப் பெண் சற்று மனநிலை சறியில்லாதவள் என்பது எங்களது எண்ணம். மேலும் அவள அந்த டிடெக்டிவிற்கு கொடுத்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தாள் என்பது கடைசி வரை அவிழ்க்கப்படாத முடிச்சு. என்ன எழுதியிருப்பாள்?

ரீரெக்கார்டிங் – Gustavo Santaolalla-அருமையிலும் அருமை. அமைதியான அருவி. கடைசியில் பெயர்கள் போடப்படும் பொழுது வரும் மியூசிக் மிகவும் நன்றாக இருந்தது. நான் மற்றும் இன்னும் வெகு சிலர் மட்டுமே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். Cleaners வந்த பின்னும் நான் உட்கார்ந்திருந்தேன்

அகெடெமி அவார்டுக்கான ஏழு நாமினேசன்கள்:

Nominated: Best Motion Picture of the Year (Alejandro González Iñárritu, Jon Kilik and Steve Golin)

Nominated: Best Achievement in Directing (Alejandro González Iñárritu)

Nominated: Best Performance by an Actress in a Supporting Role (Adriana Barraza)

Nominated: Best Performance by an Actress in a Supporting Role (Rinko Kikuchi)

Nominated: Best Writing, Screenplay Written Directly for the Screen (Guillermo Arriaga)

Nominated: Best Achievement in Editing (Douglas Crise, Stephen Mirrione)

Nominated: Best Achievement in Music Written for Motion Pictures, Original Score (Gustavo Santaolalla)