ஆயிரம்கால் இலக்கியம் – 8

ரமேஷ்-பிரேம் எழுதிய ஒரு ஓரினச்சேர்க்கையைப் பற்றிய கதையை பற்றி நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அந்த கதையில் எனக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா எனபதெல்லாம் வேறு விசயம். அந்த கதையைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்திருந்த திரு. யாத்ரா ரவீந்திரன் அவர்களிடம் விவாதித்த பொழுது, அவர் என்னை விசித்திரமாகவே பார்த்தார். இதில் என்ன இருக்கிறது முத்து என்றார். ஆனால் என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர் சொன்னார், எழுத்தாளர் என்பவர் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்கள். அவர்களின் நோக்கம் சமூகத்தை திருத்த வேண்டும் என்பதல்ல. மேலும் எது குற்றம் என்பது யாருக்குமே தெரியாது. அப்படியிருக்கும் போது திருத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். யோசிக்கவேண்டிய விசயம் தான். ஆனால் ஓரினச்சேர்க்கை தவறா சரியா என்று பார்த்தால், தவறு தான். நான் ஓரினச்சேர்க்கையை கடுமையாக எதிர்ப்பவன். அதைச் சட்டப்பூர்வமாக்குவதையும் கடுமையாக எதிர்ப்பவன். யார் என்ன சொன்னாலும் சரி. எனக்கு எத்தனை கெட்டவார்த்தைகளில் பின்னூட்டம் வந்தாலும் சரி. என் நிலைப்பாடு இதுதான்.

பிரேம்-ரமேஷ் எழுதிய மற்றொரு கதையைப் படிக்க நேர்ந்தது. தீராநதி டிசம்பர் 2006 இதழில் வெளிவந்தது. கதையில் பெயர். பன்றி.

பன்றி என்ற தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ஏதோ யாரையோ கடுமையாக சாடியிருக்கிறார்(கள்) என்று நினைத்தேன். அதுவும் ஒரு வகையில் சரிதான். கதை முடியும் போது உணர்ந்து கொண்டேன். ஆனால் இதை சிறுகதை என்று சொல்லமுடியுமா என்ற யோசனை கதையைப் படித்தபின்னர் தோன்றியது. ஆனால் சிறுகதை என்ற வடிவம் காலந்தோறும் மாறி வந்து கொண்டேயிருந்திருக்கிறது. ஒரு சிறு சம்பவமும் கதையாகிறது. ஆனால் அதுவல்ல விசயம். கதையில் நிறைய வரலாற்று facts இருக்கும் போது அது கட்டுரையோ என்ற எண்ணம் வருகிறது. தீராநதியிலிருந்து ரமேஷ்-பிரேமிடம் கதை கேட்ட போது, அவர்களிடம் சிறுகதை ஏது இருந்திருக்காது, அப்பொழுது எழுதிக்கொண்டிருந்த கட்டுரையை அப்படியே சிறுகதையாக்கி கொடுத்துவிட்டனரோ என்று கூட நினைத்தேன். இருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.

***

சில நாட்களுக்கு – மாதங்களுக்கு- முன்னர் விகடனில் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை ஒன்றைப் படித்தேன். கதையின் பெயர் என்னவென்று வழக்கம்போல் ஞாபகம் இல்லை. கதையைச் சொல்வது ஒரு சிறுவன். பணிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும். அவனும் அவனுடைய தாயாரும், அவனது தகப்பன் வேலை பார்க்கும் ஊருக்கு ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சென்று காத்துக்கிடந்து அவர் கொடுக்கும் பணத்தை வாங்கிவருவார்கள். இது ஒரு சிறுவனின் பார்வையில் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அவனது தந்தை மிகவும் தாமதமாக வருகிறார். ஒரு சில் நாட்கள் இரவு வெகுநேரமாகி விடுகிறது. ஆனால் அவனது தாயார் ஒரு போதும் அவர் காத்திருக்க சொன்ன இடத்தை – பேருந்து நிலையத்தில் ஒரு இடம்- விட்டு வெளியேறினதில்லை. சில சமயங்களில் அவர் மிகவும் தாமதாக வந்து விட்டு, அம்மாவை கண்டபடி திட்டுவதை அவன் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு புரியவே புரியாது. தாமதமாக வந்தவர் அப்பாதானே, பிறகு அவரே அம்மாவைத் திட்டுவானேன் என்று நினைப்பான். ஆனால் எந்தவொரு சமயத்திலும் அவனுடைய அம்மா, அப்பாவை எதிர்த்து பேசியதோ அல்லது நேரமாகிவிட்டால் அவரது அலுவலகத்திற்கோ சென்றதில்லை. இது அவனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தாலும் ஏனென்றும் புரியவில்லை. ஒரு நாள் அம்மா இறந்து போகிறாள். ஏனென்று அவனுக்கு தெரியவில்லை.

சில நாட்கள் கழித்து அவனது அப்பா வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்கிறார். மீண்டும் ஒரு நாள் தனது புது சித்தியுடம் அந்த சிறுவன் அப்பா வேலை பார்க்கும் ஊருக்கு மாசத்தின் முதல் தேதியில் பணம் வாங்குவதற்குப் போகிறான். அவனது சித்தி அவனுக்கு சாப்பிடுவதற்கு சாக்லேட் வாங்கித்தருகிறாள். பிறகு வழக்கம்போல அவனது அப்பா இன்னும் வந்திருக்கவில்லை. அவனது சித்தி அவனிடம் இப்படித்தான் லேட்டாவருவாராடா உங்க அப்பா என்று கேட்கிறாள். அவன் ஆமாம் என்பது போல தலையசைக்கிறான்.பிறகு அவனது சித்தி எழுந்து சென்று தனது கைப்பையில் சிறிய நோட்டைப்போன்ற ஒன்றை எடுத்து அதில் ஒரு பக்கத்தில் எண்ணைக்கண்டுபிடித்து, அப்பாவுக்கு போன் செய்கிறார். பிறகு இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்கிறாள். ஆனால் அவர் வரவில்லை.

பொறுமையிழந்த சித்தி, இவனிடம் டேய் உங்க அப்பா வேலைசெய்யுற ஆபீஸ் உனக்கு தெரியுமா? என்கிறாள். இவன் தெரியும் என்பது போல தலையாட்டியவுடன், ஒரு ரிக்ஷா அமர்த்தி, இருவரும் அப்பா வேலைசெய்யும் ஆபீஸ¤க்குப் போகின்றனர். அவனது அப்பா ஓட்டமும் நடையுமாக வந்து சித்தியையும், அவனையும் கேன்டீனுக்கு அழைத்து சென்று சாப்பிட வாங்கித்தந்து பணத்தைக் கொடுத்து அனுப்புகிறார். அவனுக்கு அப்பா சித்தியுடன் மிகவும் பாசமாக இருப்பது போல இருக்கிறது.

வரும் வழியில் எங்கும் அவன் தன் அம்மா இது போல எல்லாம் ரிக்ஷா அமர்த்தி அப்பாவின் அலுவலகத்துக்கு சென்றதேயில்லையே என்பதைப் பற்றியே நினைத்துக்கொண்டு வருகிறான்.அவனுக்கு ஏனோ சித்தியைப் பிடிக்கவில்லை என்று முடியும் கதை.

திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு இந்த கதை சப்பென்று உப்புச்சப்பில்லாமல் இருக்கும். ஆனால் நிதானமாக வாசிக்கும் சீரியஸ் ரீடர்ஸ்க்கு இந்த கதை நிறைய சிந்தனைகளைக் கிளரிவிடும். நிறைய கேள்விகளை எழுப்பும். ஒரு சிறுகதையையோ, கதையையோ படித்த முடித்தபின்னர் அதைப் பற்றி சிந்திக்க ஏதும் இல்லையெனில் அது வருந்தத்தக்க விசயம்.

***

பன்றியும் அது போலவே தான். ரமேஷ்-பிரேம் பன்றிகளைப் பற்றி நிறைய சொல்கின்றனர். இந்த கதையில் வாக்கியங்கள் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கின்றனர். எனவே கதையை சொல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் கதை என்ற ஒன்றே இல்லை. வெறும் ஒரு சம்பவம் தான். அந்த சம்பவம் என்னவென்றால் : ஒரு பன்றிக் குடும்பம், அதாவது, பன்றியும், அதன் குட்டிகளும் ஒரு லாரியால் நசுக்கப்பட்டு இறக்கின்றன. இதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் தனது பத்திரிக்கை நண்பருக்கு ஒரு கட்டுரை எழுதி செய்தியாக வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறார். அந்த செய்தி வெளியிடப்படவேயில்லை. மறுமுறை அந்த நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது, அவர் தனது நண்பரிடம் ஏன் அந்த செய்தி வெளியிடப்படவில்லை என்று கேட்கும் போது அவர், ” இதை எந்த வகையில் வெளியிடுவது என்று தெரியவில்லை, அதனால் வெளியிடவில்லை” என்கிறார். அதோடு முடிகிறது கதை.

பிரேம்-நரேஷின் நடை மிகவும் நன்றாக இருந்தது. நான் ரசித்த சில பகுதிகளை அப்படியே இங்கு தருகிறேன்.

கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிய பன்றிகள் தலைமறைவாகி விட்டனவா என்று நினைத்தேன்

பன்றிகள், நாய்கள், ஆடுகள், மாடுகள், காகங்கள் இவை எல்லாம் மனித நடமாட்டமுள்ள தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக தென்படவேண்டும். விலங்கினங்கள், பறவையினங்கள் சூழ்ந்திராத போது நம்மை பெருவெறுமை சூழ்ந்துவிடுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் எருமைகளைக் காணும்தோறும் மனதில் உவகை பொங்குகிறது. நான் இன்னும் இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பதின் பாதுகாப்புணர்வை இவை தருகின்றன

என்னது உவகை பொங்குகிறதா? ஒரு டர்னிங்கில் ஸ்ப்லன்டரில் வேகமாக வருகிறீர்கள், திரும்பியவுடன் அங்கே நமது எருமையார் ஹாயாக நின்று கொண்டு ஷகீலாவின் போஸ்டரையோ அல்லது கம்யூனிஸ்டுகளின் செவிமெடுக்கப்படாத அல்லது சொற்றுக்கு உதவாத கோஷங்கள் கொண்ட போஸ்டரையோ தின்று கொண்டிருக்கின்றன, தின்றதோடு மட்டுமில்லாமல், ஷாக்கில் சடன் பிரேக் அடித்து வியர்த்து விறுவிறுத்து நிற்கும் நம்மை, மெதுவாக மிக மெதுவாக திரும்பிப்பார்த்துவிட்டு, மீண்டும் அதே ஸ்பீடில் போஸ்டரை தின்ன ஆரம்பித்தது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது உவகை பொங்குமோ? பொங்காது என்று சொல்லிவிட்டால், நம்மை பின்நவீனத்துவத்தில் சேர்க்கமாட்டார்களோ என்ற கவலையும் உடன் வருகிறது. (இதில் பின்நவீனத்துவம் எங்கிருந்து வந்தது என்று நிர்மல் அடித்த ஜெர்க்கை என்னால் பார்க்க முடிகிறது!)

ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளில் ஒன்று வழிதவறியிருந்தால் அதை வீட்டுக்கு எடுத்துச்செல்ல துணியும் மனம், இப்பன்றிக்குட்டியிடம் மட்டும் ஏன் கருணை காட்ட மறுக்கிறது

கொட்டும் மழையில் அசையாமல் நடுத்தெருவில் தீவிரமான ஒரு மனோநிலையில் நிற்கும் தனித்த பன்றியைப் பார்த்திருக்கிறேன். நாய்களால் குதறப்பட்டு காது கிழிந்து ரத்தக்காயங்களோடு ஓடிய பன்றியைப் பார்த்திருக்கிறேன். காதுகளில் துளையிட்டோ அல்லது காதுகளில் இரும்பு ஆணியால் ரிவீட் அடிக்கப்பட்டோ உரிமையாளரின் அடையாளம் பொறிக்கப்பட்ட பன்றியைப் பார்த்திருக்கிறேன். யாரோ ஒரு போக்கிரிப் பயலால், உடம்பில் மண்ணென்ணெய் ஊற்றப்பட்டு கொளுத்தப்பட்ட பன்றி எரிந்தபடி, போக்குவரத்து நெரிசலூடாக முக்கியச் சாலையில் ஓடியதைப் பார்த்திருக்கிறேன். சாராயக்கடைகளில் திரியும் பன்றிகளில் ஒன்றைப் பிடித்து அதன் வாயில் சாரயத்தைப் புகட்டியதைப் பார்த்திருக்கிறேன். அதே சாரயக்கடையில் மலம் வழிய பிரக்ஞையற்றுக் கிடந்த ஒருவனின் பின்புறத்தை நக்கி சுத்தம் செய்த பன்றியைப் பார்த்திருக்கிறேன். தெருவில் என்னைப் பார்த்தால் மரியாதையோடு விலகிச்செல்லும் ஒரு பன்றியை எனக்குத் தெரியும். பன்றி ஒரு ஒடுக்கப்பட்ட விலங்கு.”

இது கதை மட்டுமே என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது இதனை ஒரு உவமையாக பாவித்து ஏதாவது ஒரு சமூக அவலத்தின் மீதும் ஏற்றிப்பார்க்கலாம். சமீப கால சிறுகதைகளில் வாசகர்களின் பங்கு அதிகம். சிறுகதைகள் எழுத்தாளருடன் முடிவடையக்கூடாது, வாசகர்களிடமும் தொடரவேண்டும்.

***

குமுதத்தில் (02 ஜூன்,07) ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது, அரசு பதில்கள் பகுதியில்:

கே: தமிழில் சிறுகதை நாவல் வடிவம் காலாவதியானது ஏன்?
பதில்: உலக இலக்கியங்களைப் படிக்காமல் சும்மா படித்தது போல சில பிரபல எழுத்தாளர்கள் ரீல் விட்டதும் மக்களைப் பாதிக்கும் அரசியலைத் தொடாமலேயே அறிவு ஜீவி போல நடித்ததும் ஒரு காரணம்.

பதிலளித்த “அரசு” அறிவுஜீவியோ? சொல்லவேயில்ல!

***

“மல்லிகைக்கிழமைகளில்” ஜெ.பிரான்ஸிஸ் கிருபா எழுதி விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடரில் வந்த ஒரு கவிதை:

தீயாகவா, புயலாகவா
திருக்கை மீன் வாலாகவா
பூவாகவா, புன்னகையாகவா
புத்தம்புது விஷமாகவா
உன் கோபம் எப்படி வருமென்று
எனக்கு தெரியாது.

எங்கிருந்து வரும்
எப்போது வரும்
எவ்வளவு வரும்
உனக்கும் தெரியாது.

அன்பே என்றுதான் சொன்னேன்
கோபித்துக்கொண்டாய்
பேரழகே என்றேன்
கோபம் பெரிசாகிவிட்டது
ஆருயிரே என்றேன்
கோபமே நீயாகிவிட்டாய்.

வெண்ணெய்க் கட்டியாக
அனலில் விழுந்து
உருகித் தொலைத்தேன்
பொல்லாத செல்லக் கள்ளியென்று
மனசுக்குள் முணுமுணுத்தேன்
உற்றுக் கேட்டதும்
உயிர் துள்ளிக் குதித்தது
உன் கண்களில்.
இரண்டாயிரத்து ஏழாவது
முறையாக மீண்டும் பிறந்தேன்.

ஒரு நாளுக்கு என்னை இப்படி
எத்தனை முறை
தொலைக்கிறாய் என்பதை
எண்ணிக்கை வைப்பதில்லை நீ.
ஒருபோதும் மன்னிப்பும் கேட்பதில்லை.
வீட்டிலோ, வெளியிலோ
சாலையிலோ, கோயிலிலோ
திரைச்சாலையிலோ
இந்தியாவிலோ ஜப்பானிலோ
உலகின் எந்த மூலையில்
என்னை நீ தொலைத்தாலும்
கண்டுபிடித்துத் தருவது
என் கடமையாக இருக்க
உனக்கென்ன கவலை?

இந்த கவிதைக்கு அர்த்தம் எழுதலாம் அல்லது விளக்கம் எழுதலாம் என்று நினைத்தேன். பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டேன். எனென்றால் அவரது மல்லிகைக் கிழமைகள் தொடரில் ஓரளவேனும் எனக்கு புரிந்த கவிதை இது மட்டுமே. (போனவாரமெல்லாம் ஒன்றுமே புரியவில்லை.!) இதுக்கும் அர்த்தம் எழுதி யாராவது, டேய் டுபாக்கூர் அது இல்லை அர்த்தம், ஸ்டுபிட் மாதிரி பேசாத, இதுதானாக்கும் அர்த்தம் என்று எதையாவது சொன்னால் அப்புறம் எனக்கு கவிதை படிப்பதற்கு கான்பிடன்ஸே போய்விடும். (ஆ! இதுவே கவிதை மாதிரித்தான இருக்கு. “கவிதை படிக்க கான்·பிடன்ஸ்”!)

இன்னொரு விசயம். என் நண்பன் (கோனபாட்டில் கோவிந்தன்!) என்றைக்குமே புத்தகத்தை தூக்கி படித்ததேயில்லை. நான் பார்த்ததேயில்லை. குமுதம் ஆனந்த விகடன் வாங்கிவந்தவுடனே, அதில் உள்ள கேர்ல்ஸ் பிக்சர்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு மொத்தமாக புத்தகத்திற்கு மார்க் போடுவான். அவ்வளவே. ஆனால் சமீபகாலமாக அவன் விகடன் வந்தவுடன் மல்லிகைக்கிழமையைத் தான் படிக்கிறான். திரும்பத்திரும்ப படிக்கிறான். நான் வேண்டாம்டா இந்த விசபரிட்சை என்று சொல்லுயும் கேட்க்காமல் படித்தான். இப்பொழுது ஏதோ பத்தாவது ரிசல்ட் பாத்து பெயிலாகிவிட்ட மாணவன் போல மிகவும் சோகமாக அழைகிறான். போன வாரம் திடீரென்று என்னை கூப்பிட்டு, மல்லிகைக்கிழமை கவிதையை காட்டி, உனக்கு புரிகிறதா பார் என்றான். நான் ஒரு ஐந்து முறைபடித்தும், புரியவில்லை. கடைசியில் நான் புரியவில்லை என்று சொன்னவுடன் தான் அவனுக்கு நிம்மதி. அவன் மொத்தம் பதினாறு முறை அந்த கவிதையைப் படித்திருக்கிறான். அவனுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியது என்பது போனஸ் தகவல். புரிந்துகொள்ள முயற்சி செய் பின்னால் உதவியாக இருக்கும் என்றேன்.

புரியாமல் இருப்பதால் தான் கவிதைகள், கேர்ல்ஸைப் போல, அழகாக இருக்கின்றனவோ?

***

ச.இ.பா. (சங்க இலக்கிய பாடல்)

நற்றினையில் ஒரு பாடல்:

“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவ தாயின்
மறக்குவேன் கொல்என் காதலன் எனவே.”

“தோழி, நான் சாவுக்கு அஞ்சவில்லை. ஆனால் வேறொன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்துவிட்டால், பிறகு வேறு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்” என்றாளாம்.

***

பிகு: முந்தைய பகுதிகளை side menuவில் பார்க்கவும்.

ஆயிரம்கால் இலக்கியம் – 7

சாரு நிவேதிதாவை எனக்கு பிடிக்கவே செய்கிறது. தொடர்ந்து அவர் மதுவைப் பற்றியும், பெண்களைப் பற்றியும், தனது சொந்த கதைகளைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தாலும், எனக்கு பிடிக்கவே செய்கிறது. எனக்கு பிடிக்காவிட்டால் தான் என்ன? சாருவுக்கு என்ன நேர்ந்து விடப் போகிறது? அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே தான் இருக்கப்போகிறார். அவருக்கான வாசகர் வட்டம் -mostly NRIs என்று நினைக்கிறேன்!- வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனக்கு பிடிக்காமல் பிடிக்கிறது! ரசிக்காமல் ரசிக்கிறேன். பல இடங்களில் சிரிக்காமல் சிரிக்கிறேன். ஏன் என்று யோசித்தால், அவரது எழுத்து தான் என்று தோன்றுகிறது. ஒரு நெருங்கிய நண்பனிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. பாசாங்கோ வேஷமோ இல்லாமல், இதைத் தான் சொல்லவேண்டும், இதைச் சொல்லக்கூடாது என்ற ஏற்கனவே எழுதி தயாரித்து வைத்துக்கொண்டு பேசுவதைப்போல அல்லாமல், யதார்த்தமாக பேசுவதனால் கூட இருக்கலாம். மேலும் நாம் அறிந்திடாத பல புதிய விசயங்களை கட்டுரைகள் தோறும் தெளித்துவிட்டிருப்பதால் கூட இருக்கலாம். knowledge is wealth இல்லியா?

மந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும். மேன்மையடையச் செய்ய முடியும்.
-ஆதவன் [காகித மலர்கள்]

கோணல் பக்கங்களிலே இடம் பெற்ற கவிதை இது:

தெறித்து விழுந்த ஒரு கணல் துண்டாய்
தோப்பை விட்டு
விலத்தி நிற்கும் ஒற்றைக் கரும்பனையாய்
குழு தவிர்த்து
தனித்தே அலையும் ஒரு கரும்புலியாய்
ஒரு உதிரித் தமிழனாய்
நான் மட்டுமேனும்
உமது தலைமையை
மறுத்து நிற்பேன்

– சக்கரவர்த்தி

அவர் மதுவைப் பற்றி அதிகமாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவரே பதில் சொல்லியிருந்தார், அது:
எவ்வளவு எழுத்தாளர்களையும் எவ்வளவு சினிமாக்களையும், எவ்வளவு பத்திரிக்கைகளையும், எவ்வளவு இசைக்கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன், அவர்களையெல்லாம் படித்தீர்களா, கேட்டீர்களா? பின் இதை மட்டும் ஏன் பெரிதாக சொல்கிறீகள்? அவற்றைப் போலவே இதையும் மறந்துவிட்ங்கள்!

[கருத்து(?!) மட்டுமே சொல்லியிருக்கிறேன்.original words மறந்துவிட்டது. புத்தகத்தை நூலகத்தில் return செய்து விட்டேன்!]

மிகச்சரி! உண்மை.
நான் அவரது கட்டுரைகளை revisit செய்ததில், இதையெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் படிக்கவேண்டும் என்றோ, கேட்கவேண்டும் என்றோ குறித்து வைத்துக்கொண்டேன். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

1. Status Quo எழுத்துக்களைப் பற்றி.
Antonio Gramsci என்ற மார்க்ஸிஸ்டைப் பற்றி.

2. Joseph Heller எழுதிய Catch 22 என்ற நாவல். Catch-22 என்றால் என்ன என்று தேடிய பொழுது, ஒரு மனிதன் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் இரண்டும் ஒன்று ஒன்று தொடர்புடையவை. ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. ஒரு செயல் செய்யாமல் மற்றொரு செயலைச் செய்ய முடியாது. dead lock. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவில் இதைப் பார்க்க நேர்ந்தது: படித்து முடித்து விட்டு வேலை தேடுவது. வேலையில் சேர்வதற்கு அனுபவம் தேவை. வேலையில் அனுபவம் பெருவதற்கு வேலை தேவை. கிட்டத்தட்ட முட்டையிலிருந்து கோழியா. கோழியிலிருந்து முட்டையா என்பதைப் போல! நாவல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் concept நன்றாக இருக்கிறது.

3.Memories Of Underdevelopment என்ற படம்.

4. அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர். இணையத்தில் தேடியவரைக்கும் இவரது நான்கு புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது.
அ. அழகிய பெரியவன் கதைகள்
ஆ. தகப்பன் கொடி
இ. தீட்டு
ஈ. நெரிக்கட்டு
இதில் எந்த புத்தகமும் நான் படித்ததில்லை. சாரு கொடுத்த அறிமுகமே எனக்கு முதல் அறிமுகம்.

5. Art Foundation Of Michigan வெளியிடும் sulphur என்ற magazine. link கிடைக்கவில்லை.

6. Pier Paolo Pasolini என்ற இத்தாலிய இயக்குனர்.

7. Julio Cortazar எழுதிய Hopscotch என்ற நாவல். Hopscotch என்பது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு [வேறு வேறு படங்கள் வரைந்து, வேறு வேறு விதிமுறைகளில்] என்று பின்னர் தெரிந்து கொண்டேன். Base நம்முடைய சில்லாக்கைப் போலத்தான். சில்லாக்கைத் தூக்கிப் போட்டு நொண்டியடிப்போமே ஞாபகம் இருக்கா?

8. Donald Barthelme எழுதிய
the dead father என்ற நாவல்.

***

தீராநதியில் வெளிவந்த பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை (ஆச்சரியமாக, உரைநடை வடிவில் இருந்தது. எப்பொழுதும் புதுக்கவிதை மரபாகிவிட்ட ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதும் முறை தூக்கியெறியப்படுவதற்கான முதல் முயற்சியோ? இருக்கலாம். அட்லீஸ்ட் பேப்பராவது மிச்சப்படும் இல்லையா?) ஒன்று வெளிவந்திருந்தது, எனக்கு பிடித்த சில:

சூர்யன் தோன்றுகிறது. பிறிதொரு நேரத்தில் நிலாவும் நட்சத்திரங்களும் தோன்றுகிறது. அன்பும் பிரியமும் தோன்றுகிறது. வெறுப்பும் கசப்பும் தோன்றுகின்றன. மழை தோன்றுகிறது. கண்ணுக்கு தெரியா காற்றும் தோன்றுகிறது. பிறப்பும் சொல்லிவைத்தார் போல சாவும் தோன்றுகிறது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கரைந்துபோதல் தோன்றுகிறது.

தோன்றுகிறது. தோன்றுவது மட்டுமே தோன்றுகிறது

(?!) 😦 😦

நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு பூவைப் பறித்துக்கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது சாவை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறோம்.

எப்போது கொஞ்சம் புரிந்து நிறைய புரியாமல் இருக்குமே, அது போல ஒன்று:

வெறுப்பின் வீர்யமிக்க விதைதேடி, வீர்யமிக்க நிலம் தேடி, விதைத்தாயிற்று. கண் இமைக்கும் நேரத்தில் நிலம் கீறி வெளிவந்த நதி கிளைகளுடனும் பேரிரைச்சலுடன் ஓடத்துவங்கியது.

நிரந்தரமான படகில் நிரந்தரமான நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். சடலங்கள் மிதந்து வந்து கொண்டேயிருக்க நதி செல்லும் வழியெல்லாம் சரிதம் ஆகிறது.

இந்த கவிதைகள் என்றைக்குத் தான் எனக்கு முழுதாக விளங்கப்போகிறதோ தெரியவில்லை. ஒரு வகையில் முழுதும் விளங்காமல் இருப்பது தான் அழகு இல்லையா?

***

சோகமித்திரனின் நேர்காணல் ஒன்றில் நான் நிர்மலுக்கு கேட்ட கேள்வியின் சாராம்சம் கொண்ட ஒரு கேள்வியை நிருபர் கேட்டிருந்தார், அதற்கு அசோகமித்திரனின் பதில்:

தீராநதி: புது எழுத்து என்ற உத்வேகத்தோடு நிறைய பிரதிகள் எழுதப்படுகின்றன. தமிழுக்குப் புதிய வளம் சேர்க்கும் கோட்பாடுகளில் பரிசோதனைகள் செய்கிறார்கள். பிரேம்-ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார், இந்திரஜித், சாருநிவேதிதா..இவ்வாறு நிறைய. இதையெல்லாம் படிக்கிறீர்களா? சாருநிவேதிதாவுக்கு வழங்கிய முன்னுரையில் கூட தனக்கு உவப்பாகாத எழுத்து என்பது மாதிரி எழுதி இருந்தீர்கள்?

(தீராநதி குறிப்பிட்ட எழுத்தாளர்களில் பிரேம்-ரமேஷ் மற்றும் சாருநிவேதிதாவின் எழுத்துகளை மட்டுமே நான் படித்திருக்கிறேன். அதில் பிரேம்-ரமேஷ் அவர்களின் ஒரு கதையை இதே தீராநதியில் படிக்க நேர்ந்தது. ஹோமோ செக்ஷ¤வல்ஸ் பற்றிய கதை அது. மிக வெளிப்படையாக எழுதியிருந்தார்கள் பிரேம்-ரமேஷ். எனக்கு டோட்டல் ஷாக். இதைப்பற்றி “யாத்ரா” ரவீந்தரன் அவர்களிடம் விவாதித்த பொழுது அவருடைய வாதம் வேறு மாதிரி இருந்தது. பிடிக்கவில்லையென்றால் படிக்காதே. குமுதம் படி. உனக்கு ஏற்றார் போல இருக்கும் என்றார். சாருவைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லை. அவருடைய “நேநோ” வை படிக்க வைத்திருக்கிறேன். என்ன ஷாக் இருக்கிறதோ தெரியவில்லை!)

அசோகமித்திரன்: ஒரு ஷாக் கொடுக்கறதுக்காக இப்படியெல்லாம் எழுதறாங்ளோன்னு தோணும். ரியாலிட்டியில இல்லையான்னு கேட்கலாம். தமிழ் பழைய இலக்கியத்திலும் இருக்கு. சிலப்பதிகாரத்தை எடுத்துகிட்டா அதுவும் இந்த மாதிரியான உறவைப் பத்தினதுதான். என்ன ஒரு மென்மையோட சொல்லப்பட்டிருக்குன்னு பார்க்கனும். மேன்மை இல்லாதபடி இதுக்காகதான்னு நாம் எழுதறது இருக்கே, அதுல எனக்கு பெரிய உவப்பு இல்லை. இந்த கோட்பாடெல்லாம் விமர்சனத்துக்குச் சொல்லக்கூடியதா இருக்கலாம். ஆனா படைப்புக்குத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். அவங்க வேறு மாதிரி சொல்லலாம். அதுல தப்பு கிடையாது. இப்ப நோபல் பரிசு வாங்கி இருக்கிறாரே பாமுக். அவரு பாக்கறச்சே எதிர்ப்புகளைக் காண்பிக்கிற மாதிரிதான் எழுதி இருக்கிறாரே ஒழிய..இந்த மாதிரியெல்லாம் எழுதல. “டாக்டர் ஷிவாக்கோ”ன்னு ஒரு ரைட்டர். சோவியத் புரட்சி பற்றி ஒரு நாவல் எழுதினார். அதுக்கு நோபல் பரிசு கொடுத்தா வாங்கிக்க கூடாதுன்னு சோவியத் அரசே சொல்லிடுச்சு. அவரும் நான் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு உள்ளுக்குள என்ன பயம்னா அவரை நாடு கடத்திட போறாங்கன்னு பயம். ஆனால் நாவல் மிகவும் சிறந்தது.

Boris Leonidovich Pasternak http://en.wikipedia.org/wiki/Boris_Pasternak எழுதிய
Doctor Zhivago என்ற நாவல் பற்றி எனக்குத் தெரியும். Amitav Gosh எழுதிய The Glass Palace புத்தகத்தில் ஒரு blurb: “A Dr zhivago for middle east” ஐ படித்துவிட்டு Dr zhivago ஐ இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். ஆனால் Dr zhivago ஒரு ரைட்டரா? மேலும் pasternak க்குதான் நோபல் பரிசு வழங்கப்பட்டது அவர் தான் வாங்கிக்கொள்வதற்கு மறுத்தார்.

***

சோகமித்திரனின் “அழிவற்றது” சிறுகதைத் தொகுதியில் படித்த சிறுகதை ஒன்று. கர்ணபரம்பரைக் கதை என்று இதை வகைப்படுத்தியிருந்தார். கதையின் பெயர் : தலையெழுத்து.

ஒரு குரு இருக்கிறார். அவருக்கு ஒரு சிஷயர் இருக்கிறார். குருவும் அவரது மனைவியும், சிஷ்யரும் நகரத்துக்கு வெளியே குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது யாரோ ஒரு வயதானவர் வீட்டிற்குள் செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் சிஷ்யன். ஓடிச்சென்று அவரது கைகளைப் பிடிக்கிறான். “நீங்கள் யார். குழந்தை பிறக்கும் இந்த நேரத்தில் உள்ளே செல்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்” என்கிறான். கிழவர் பயத்தால் உரைகிறார். “நான் தான் பிரம்மா. நான் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. எப்படி உன் கண்ணுக்கு தெரிந்தேன் என்று வியப்பாக இருக்கிறது” என்கிறார். சிஷ்யன் அதிரிந்து”இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்க “நான் பிறந்து விட்ட இந்த குழந்தையின் தலையெழுத்தை எழுத வந்திருக்கிறேன்” என்கிறார் பிரம்மா. சிஷ்யன் “என்ன எழுதப் போகிறீகள். என்னிடம் சொல்லுங்கள்”என்கிறான். முதலில் மறுத்த பிரம்மா பிறகு சிஷ்யனிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு “இவ்வளவு உயர்ந்த குருவுக்குப் பிறந்த இந்தப் பெண் விபச்சாரியாக வரப்போகிறாள்” என்கிறார்.

சில வருடங்கள் செல்கிறது. மறுபடியும் குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் பிரம்மாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறான். குழந்தை பிறந்து அழும் சத்தம் கேட்டவுடன் பிரம்மா அங்கு வருகிறார். இந்த முறை “குருவுக்கு பிறந்திருக்கும் இந்த மகன் ஒரு திருடனாக வருவான்” என்கிறார்.

உயர்ந்த இடத்தில் இருக்கும் குருவுக்கு பிறந்த இரு குழந்தைகளும் திருடனாகவும் விபச்சாரியாகவும் உருவாகப்போகின்றன என்பதை சிஷ்யன் நம்பியிருக்கவில்லை. ஏதோ பிரம்மா கப்சா விட்டிருக்கிறார் என்று நினைத்துக்கொள்கிறார். வருடங்கள் உருண்டோடுகின்றன. சிஷ்யரும் தனது பாடத்தை முடித்துக்கொண்டு குருவிடம் விடைபெற்றுச் சென்று விடுகிறார்.

சிஷ்யரும் குருவாகிவிடுகிறார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது குருவை சந்திக்க அவரது குடிசைக்கு செல்கிறார். அங்கு யாரும் இல்லை. எப்போதோ வந்த வெள்ளத்தில் குடிசை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்றும், குருவும் குழந்தைகளையும் அதற்கு பிறகு காணவில்லை என்றும் அங்கிருக்கும் மக்கள் சொல்கின்றனர்.

மிகுந்த வருத்தத்தோடு சென்று விடுகிறார் சிஷ்யர். ஒரு நாள் கங்கையில் குளித்துக்கொண்டிருக்கும் போது கால் தடுக்கி விழ இருந்தவரை ஒரு வாலிபன் தாங்கிப்பிடிக்கிறான். அவனது முகத்தைப் பார்த்த குரு ஒரு கனம் ஸ்தம்பிக்கிறார். குருவின் அதே முகம். பிறகு விசாரிக்கும் போது அவன் தான் குருவின் மகன் தான் என்று ஒத்துக்கொள்கிறான். பிறகு பிழைக்க வேலை இல்லாததால் தான் திருடனாக மாறிவிட்டதாக கூறுகிறான். சிஷ்யர் அவனது அக்காவைப் பற்றிக் கேட்க அவன் “அவளைப் பற்றிக் கேட்காதீர்கள். இங்கு தான் கேவலமான தொழிலைச் செய்து கொண்டிருக்கிறாள்” என்று கோபத்துடன் சொல்கிறான்.

சிஷ்யர் அவளைப் பார்க்க செல்கிறார். அவள் தான் செய்தது தவறு தான் என்றும் எனினும் வாழ்வதற்கு வேறு வழி தெரியவில்லை என்றும் சொல்கிறாள். சிஷ்யர் அவளுக்கு ஒரு வழி சொல்கிறார் : நீ தினமும் உன்னிடம் வரும் ஆண்களிடம் நூறு முத்துக்கள் கொடுக்க வேண்டும் என்று கேள் என்கிறார். ஆனால் அவ்வாறு கிடைக்கும் முத்துக்களை நீ மறுநாளே செலவழித்து விட வேண்டும் என்றும் கூறுகிறார். அவளும் அப்படியே செய்கிறாள். யாரும் அவளிடம் வரவில்லை. மணி இரவு பணிரெண்டு நெருங்கிக்கொண்டுருக்கிறது. இவள் பதட்டமடைகிறாள். மணி பணிரெண்டு அடிக்கப்போகும் போது ஒரு மனிதன் தலையில் துண்டைப் போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு நூறு முத்துக்கள் கொடுத்து விட்டுப் போகிறான். மறுநாளும் யாரும் வராமல் இருக்க சரியாக பணிரெண்டு மணிக்கு ஒரு மனிதன் முகத்தை மறைத்துக் கொண்டு முத்துக்களைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான். அவள் சந்தோஷமாக சிஷ்யரிடம் வந்து நடந்ததைக் கூறி நன்றி சொல்கிறாள்.

சிறுது நாட்களுக்குப் பிறகு சிஷ்யர் திருச்செந்தூரின் கடலில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதான கிழவன் கடலுக்குள் சென்று ஏதோ எடுத்துக்கொண்டு வந்து கரையில் இருந்த ஒரு குழியில் போட்டு விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகிறார். குழிக்குள் முத்துக்கள் இருப்பதைப் பார்க்கிறார் சிஷ்யர். கிழவர் யார் என்று பார்க்க, நம்ப பிரம்மா.

பிரம்மா சிஷ்யரைக் கண்டுகொண்டு “நீ பாட்டுக்கு அவ கிட்ட நூறு முத்துக்கள் கொடுத்தாதான் ஆச்சுன்னு சொல்லசொல்லிட்ட, யாரு அவளுக்கு நூறு முத்துக்கள் கொடுப்பதாம்?” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கடலுக்குள் முத்தெடுக்க சென்றுவிட்டாராம்.
அவர் தலையெழுத்து அம்புட்டுதேன் என்பதோடு முடிகிறது கதை.

***

தன் எழுதிய கவிதை ஒன்று : பிப்ரவரி 14 ஸ்பெஷல்

என் உதடுகள்
இப்போது
குளிர்கிறது
போர்த்தக்
கிடைக்குமா
உன் இதழ்கள்!

***

(தொடரும்)

 

ஆயிரம்கால் இலக்கியம் – 6

புதுமைப்பித்தன் தன் சிறுகதைகளில் என்றைக்குமே எந்த இலக்கணங்களையும் கடைப்பிடித்ததில்லை. சொல்லப்போனால் இலக்கணங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்த முதல் எழுத்தாளர் அவர் எனலாம். இதைத்தான் எழுத வேண்டும் இதை எழுதக்கூடாது என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? அனைத்துமே எதார்த்தம் தான். ஆனால் எல்லா எதார்த்தங்களையும் சொல்லமுடியுமா? பிரபல இயக்குனர் மகேந்திரன் கூட காட்டக்கூடாத சில எதார்த்தங்களைத் தான் காட்டித் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒரு லிமிட், பிரேக்கிங் பாய்ன்ட் இருக்கிறது. அந்த வட்டத்துக்குள்ளே (சிலருக்கு சதுரம்!) தான் அனைவரும் இருப்போம். சிலருக்கு டயாமீட்டர் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக வட்டத்தின் மையப்புள்ளியும் வட்டமும் ஒரே அளவாக இருக்கிறது. குளோபலைசேஷனால் விரிந்து வரும் இந்த உலகத்தில் எதுவும் தவறில்லை. எதுவும் சரியில்லை. ஒரு நாடு தனது நாட்டில் தூக்குத்தண்டனையை ரத்து செய்கிறது. தூக்குதண்டனை தவறு என்கிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் (அல்லது மேற்பார்வையின் கீழ்) இருக்கும் மற்றொரு நாட்டில் தான் சிறைப்பிடித்த கைதிக்கு தூக்குத்தண்டனை வழங்குகிறது. அந்த வீடியோ அனைவரது கைகளிலும் கிடைக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறது. எது சரி? எது தவறு? ஓரினச்சேர்க்கை தவறு என்று சிலர் நினைக்கலாம். வாதாடலாம். ஏன் நானும் அப்படித்தான். ஆனால் சிவபாலனின் பதிவில் ஒருவர் இட்ட பின்னூட்டம் என்னை யோசிக்க வைத்தது. “ஒரு வேளை நமது மகனோ மகளோ இந்தத் தவறை செய்தார்கள் என்றால், இந்த ஒரு தவறுக்காக அவர்களை நாம் வெறுத்து ஒதுக்குவோமா?” அவரவருக்கு அவரவர் நியாயங்கள். நம் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், சாதி சனங்கள் என்று வரும்போது நியாயங்கள் ஊமையாகின்றன. சுயநலமே விஞ்சி நிற்கிறது.

புதிமைப்பித்தன் இவ்வாறு கூறுகிறார்:

“….இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”

– புதுமைப்பித்தன் கட்டுரைகள், 1954

இதில் எனக்கு ஒன்றோடு உடன்பாடு இல்லை – அது இராவணனை குரூரமே அவதாரமானவன் என்றது. இராவணன் குருரமே அவதாரமானவனா?

புதுமைப்பித்தனின் கதைகளில் எனக்கு ரொம்பப்பிடித்தமான கதை இது. அவரது கதைகள் பெரும்பாலும் படித்த பிறகு சிறிது நேரம் யோசிக்க வைக்கும். அவரது கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான அம்சம் அவரது கதைகூறும் விதம். நரேடிவ் ஸ்டைல். கதையை கதையாக சொல்ல மாட்டார். கதைகளைவிட நம்மைச் சுற்றிப் பினைந்திருக்கும் சமூக அவலங்களே கதைகள் தோறும் நிறைந்திருக்கும். சமூக அவலங்களை கிண்டல் கலந்து சொல்லுவதால் அவர் நிறைய நபர்களின் விமர்சனங்களைப் பெற்றார். இன்றைக்கும் தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் புதுமைப்பித்தனே. பதிலுக்கும் இவரும் சலைத்தவரில்லை. எல்லோரையும் போட்டுத்தாக்குவார். நமது வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல. அனைவராலும் – இன்றைக்கும்- மிகச்சிறந்த நாவலாசிரியராக மதிக்கப்பட்ட கல்கி அவர்களைக்கூட இவர் விட்டுவைக்கவில்லை. தவறு (?!) எங்கிருந்தால் என்ன?

எதிலும் ஒரு நையாண்டியை எளிதாக புகுத்திவிடக்கூடியவர் அவர். பல சமயங்களில் ஐந்து பக்க கதையில் மூன்று பக்கம் தாண்டிய பிறகும் கூட கதைக்கு வந்திருக்கமாட்டார். இந்தக்கதையிலும் அப்படியே. பொன்னகரத்தைப்பற்றியே இரண்டு பக்கங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். பிறகு சட்டென்று கதைக்கு தாவுகிறார். அவரைப்பொருத்தமட்டில் சுகம் துக்கம் இரண்டிலும் ஒரு விரக்தியான ஹாஸ்யம் கலந்திருக்கும். இந்தக் கதையில் அவர் சொல்ல எடுத்துக்கொண்டிருக்கும் கருத்து கற்பு. கதையின் பெயர்: பொன்னகரம்.

முருகேசன் ஜட்கா வண்டி (அந்தக்காலத்து குதிரை வண்டி) ஓட்டுபவன். அவன் மனைவி அம்மாளு, அவன் தம்பி, அவன் தாயார் அனைவரும் உயிர்வாழ்வது முகேசன் ஜட்கா வண்டி ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில் தான். அம்மாளுவும் ஏதோ கூலி வேலைக்கு போகிறாள். அவர்கள் வசிப்பது பொன்னகரம் எனப்படும் ஒரு சேரி. அந்த சேரியை புதுமைப்பித்தன் வர்ணிப்பதே (!) மிக அழகு.

ஒரு நாள் முருகேசன் குடித்துவிட்டு ஜட்கா ஓட்டியதில் ஜட்கா கவிழ்ந்து முருகேசனுக்கும் குதிரைக்கும் பயங்கர அடி. முருகேசனுக்கு உள் காயம். அவன் குடித்திருந்ததால் காயம் அவனுக்கு வலிக்கவில்லை. அம்மாளு ஏதோ அரைத்து வீகக்த்திற்குப் பூசியபின்னர் தான் முருகேசன் கொஞ்சமாவது பேசினான். அவனுக்கு பால் கஞ்சி வேண்டுமாம். அம்மாளுவுக்கு கூலி போட இன்னும் நாட்கள் இருக்க பால் கஞ்சிக்கு ஏது பணம்?

இனி புதுமைப்பித்தனின் வரிகள்:

அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.
‘கும்’மிருட்டு. பஞ்சாங்கத்தின் படி இன்றைக்கு சந்திரன் வர வேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்துகொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?
எப்பொழுதும் போல் இரைச்சல் தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாகிவிட்டது. திரும்பி வருகிறாள்.
சந்தின் பக்கத்தில் ஒருவன். அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் கண் வைத்திருந்தவன்.
இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம். புருஷனுக்கு பால் கஞ்சி வார்க்கத்தான்.
என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீரக்ளே! இது தான், ஐயா, பொன்னகரம்!

நல்ல வேளையாக தமிழ் குடிகளைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கதையினைப் படிக்கவில்லை. இல்லையேல் புதுமைப்பித்தனுக்கு சொர்க்கத்திற்கு சம்மன் அனுப்பியிருப்பார்கள்.

நிர்மல் ஒருமுறை எனக்கு பின்னூட்டம் அளிக்கும் போது “ஜெயமோகனின் கதைகளை சுருக்கமாகக் கூறமுடியாது” என்றார். உண்மைதான். ஜெயமோகனின் கதைகளையே சுருக்கமாக கூறமுடியாது என்றால், புதுமைப்பித்தனின் கதைகளை, கண்டிப்பாக முடியவே முடியாது.

அவரது நக்கலையும், நையாண்டியையும் ரசிப்பதற்கே, கதையைப் படிக்கலாம். இந்தக் கதையில் சில:

அவர் பொன்னகரத்தை விவரிக்கும் போது:

-வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக ‘முனிசிபல் கங்கை’ -அல்ல, யமுனை தானே கறுப்பாக இருக்கும்?

-பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு மீன் பிடித்து விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில் மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம்,ஊசிய வடை; இத்யாதி உருண்டு வரும்.

-ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது.போகக்கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்கு தெரியுமா? “போனால்” தான் பெற்றோருக்குத் தான் பாரம் கொஞ்சம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, ‘கிளாக்ஸோ’ ‘மெல்லின்ஸ் பூட்’ குழ்ந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமல் இருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று “குட்மார்னி’ சார்!” என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அது தான் அவர்களுக்கு கிடைக்கும் ஆரம்பக்கல்வி.

-எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். ‘டல் ஸீஸ’னில் பசியை மறக்க வேறு வழி? பசி, ஐயா, பசி! ‘பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்’ என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உனக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!

மற்றொரு கதை : ஒரு கொலை அனுபவம்.

புதுமைப்பித்தன் கொலைக் கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறாரா என்று படிக்கத்தொடங்கிய எனக்கு ஏமாற்றம். புதுமைப்பித்தனின் திரில்லர் முயற்சி. பல புதுமைப்பித்தன்கள் கதையில் அருகிறார்கள். குத்திக்கொல்கிறார்கள். புதுமைப்பித்தன் கனவிலிருந்து முழிக்கிறார். பக்கத்தில் எழுதுகோல், காகிதம். துப்பறியும் நாவல் எழுத முயற்சிசெய்து தூங்கியிருக்கிறார். பிறகு சலிப்போடு சொல்கிறார்.

-துப்பறியும் நாவல் எழுதுவது என்றால் லேசா? தூக்குதண்டனை இல்லாமல் ஆடக்ளைக் கொல்ல வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்ப? அந்த தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக்கொண்டு நாயுடன் துரத்த என்னால் முடியாது!!

ஆயிரம்கால் இலக்கியம் – 5

ன்னுடைய அப்பத்தாவுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று மூக்கு பொடி. கடைசி வரைக்கும் அவர் அவராகவே பொடி வாங்கிக்கொள்ளும் தெம்புடன் தான் இருந்தார். சில நேரங்களில் எங்களை வாங்கி வரச் சொல்லுவார். அவர் பட்டணம் பொடி மட்டுமே போடுவார், வேறு எந்த பொடியையும் தொடக்கூட மாட்டார். பட்டணம் பொடி வாங்குவதற்கு ஆனந்தா தியேட்டர் வரைக்கும் போக வேண்டும். அதற்கு 10 நிமிடங்கள் பிடிக்கும். நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு வீட்டிற்கு அருகிலே இருக்கும் பலசரக்கு கடையில் ஏதோ ஒரு பொடியை வாங்கிக்கொடுத்து ஏமாற்றி விட முயற்சித்திருக்கிறேன். ஆனால் டப்பியைத் திறந்தவுடன் அவர் கண்டுபிடித்து விடுவார். எனக்கு எரிச்சலாக வரும், முக்கு கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன, ஐயர் கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன (குமுதம், உங்களுக்கு நியூஸ் கிடைத்து விட்டது. ஐயர் கடையை இழிவாக பேசினாரா முத்து? என்று செய்தி போட்டுக்கொள்ளுங்கள்!), வடை வடை தானே? பொடி பொடி தானே? சிலருக்கு ஆமாம். சிலருக்கு இல்லவே இல்லை. சில விசயங்கள் சிலருக்கு எப்போதும் போலவே ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பிடிக்காது.

சமீபத்தில் வார பத்திரிக்கை ஒன்றில் படித்த சிறுகதை இது. எழுதியவர் யார் என்று வழக்கம் போல் மறந்து விட்டது. நானும் கதை படித்தவுடன் எழுதி வைத்துக்கொள்ளவேண்டும் என்று தான் நினைக்கிறேன். எழுதி வைப்பதற்கும் மறந்து விடுகிறது. மேலும், சில கதைகளைப் படித்து விட்டு, ஆயிரம் கால் இலக்கியம் எழுதவேண்டும், என்ன கதை சொல்லலாம் என்று யோசிக்கிற பொழுது, மனதிற்கு சட்டென கிடைக்கும் கதைதானே நல்ல கதை. அது தானே மனதில் நின்ற கதை!

கதையில் வருவதைப் போல பழைய காலத்து கிராமபோன் ரெக்கார்ட் உபயோகித்து பாடல்கள் ஒலிபரப்பும் டீ கடைகளுக்கு (அல்லது ஹொட்டல். ஆனால் அங்கு டீ மட்டுமே கொடுப்பார்கள்!) நான் போனதில்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் ஐடியா நன்றாக இருக்கிறது. அதுவும் டீ அருந்த வருபவர்களுக்கு, மணக்க மணக்க ஏலக்காய் டீயுடன் அவர்கள் விரும்பிய பாட்டை ஒலிபரப்பினால் நன்றாகத்தானே இருக்கும். யாருக்குத்தான் விருப்பமான பாடலைக் கேட்டுக்கொண்டே தேனீர் அருந்த பிடிக்காது?

(இங்கே கூட கோமலவிலாசில் தானியங்கி பாடல் ஒலிபரப்பி இருக்கிறது. சில சீடிக்களின் பாடல்களின் வரிசைகள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலுக்கு அருகிலும் ஒரு நம்பர் இருக்கும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுத்து அந்த நம்பரை அழுத்த வேண்டும். பிறகு முக்கியமான விசயம் – ஒரு டாலர்- போட வேண்டும். இரண்டு பாடல்களுக்கு ஒரு டாலர். கொஞ்சம் காஸ்ட்லி தான். நான் எப்பொழுதும் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சத்யாவிலிருந்து “வளையோசை” யும், நிழல்களிலிருந்து “பூங்கதவே தாழ் திறவாய்” பாடலும் தான். பாடலை ஒலிக்க செய்து விட்டு, ஒரு மூலையில் காபியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து மக்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பூரிக்களும், மசால் தோசைகளும் ரசிக்கப் படும் அளவுக்கு பூங்கதவே தாழ் திறவாய் ரசிக்கப் படுவதில்லை என்பது தான் உண்மை. மேலும் சாப்பிட்டுக் கொண்டே பாடலை ரசிக்க முடியாது. ஆனால் டீ குடித்து கொண்டு கண்டிப்பாக ரசிக்க முடியும். சில சமயங்களில் சீடிக்களை மாற்றி விடுவார்கள். நாம் விரும்பும் பாடல் கிடைக்காது. ஆனால் எப்பொழுதும் பூரி கிடைக்கும்.)

அவ்வாறான ஒரு கடைக்கு தினமும் சரியாக மதியம் மூன்று மணிக்கு ஒரு நபர் வருவகிறார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழுக்கு பிடித்தவராக, சிக்கு பிடித்த தலையுமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலவே காட்சியளிக்கிறார்.அவருக்கு பிடித்தமான பாடல் புதிய பறவை திரைப்படத்தில் வரும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் தான். இந்தக் கதையை சொல்பவர் பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அந்த கடையில் ஆபரேட் செய்பவர். அதாவது கிராமபோன் ஜாக்கி.

அவர் (டீ அருந்த வருபவர்) ஒரு நாளும் ஜாக்கியுடன் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எப்பொழுதும் சரியாக மூன்று மணிக்கு வந்தவுடன் ஜாக்கியைப் பார்ப்பார். ஜாக்கி தயாராக எடுத்து வைத்திருக்கும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலை ஒலிபரப்புவார். புதிய பறவையின் பழைய கிராம போன் ரெக்கார்ட் சுழல ஆரம்பிக்கும். பாடல் முடியும் வரை மிக ஆழ்ந்த மவுனத்தில் இருப்பார் அவர். அவர் கண்கள் எதையோ வெறித்துக்கொண்டேயிருக்கும். பாடலில் இருக்கும் சோகம் அவர் கண்களில் வழிந்தோடுவதைப்போல இருக்கும். பாடல் முடிகிற வரை டீ குடித்துக்கொண்டிருப்பார். பாடல் முடிந்ததும் எழுந்து சென்று விடுவார். ஒரு முறை கூட மறுமுறை ஒலிபரப்பசொல்லி கேட்டதில்லை. ஒரு நாளும் கடைக்கு வரத் தவறியதுமில்லை. ஒரு நாளும் பாதி பாடலில் எழுந்து சென்றதில்லை. ஜாக்கியைப் பொருத்தவரை அவர் மிகவும் வினோதமானவர்.

ஒரு நாள், அந்த நபர் அதே போல் கடைக்கு வந்து பாடலைக் கேட்டுவிட்டு வெளியேறிசென்றவுடன், ஜாக்கி தவறுதலாக ரெக்கார்டை கீழே போட்டு உடைத்துவிடுகிறார். உடைத்ததும் அவருக்கு அந்த நபரின் ஞாபகம் வந்து விடுகிறது. ஐயோ நாளைக்கு மறுபடியும் வருவாரே, ரெக்கார்டுக்கு என்ன பண்ணுவது என்று யோசிக்கிறார். புதிய பறவையின் பழைய ரெக்கார்டை எங்கே தேடுவது என்று அவர் மனம் அலைகிறது. தவிக்கிறது.

தனக்கு தெரிந்த நபர்களிடமெல்லாம் விசாரிக்கிறார். பழைய கடைகளிலெல்லாம் கேட்டு அலைகிறார். ஸ்டாக் இல்லையென்றோ, சீடி இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள் என்றோ தான் சொல்கிறார்கள் எல்லோரும். இவருக்கு தேவை கிராமபோன் ரெக்கார்ட். ஒரு வழியாக, பழைய கிராமபோன் ரெக்கார்டு இங்கே கிடைக்கும், என்ற அன்றைய பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, ஒரு மணி நேரம் பிரயாணம் மேற்கொண்டு அந்த வீட்டை சிரமப்பட்டு கண்டுபிடித்து விடுகிறார் ஜாக்கி.

அங்கே வீட்டில், முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், ஜாக்கியை உள்ளே அழைத்து ஒரு சிறிய கிராமபோன் கலைக்ஷனைக் காட்டுகிறார். அந்த கலெக்ஷன் அவருடைய தந்தையினுடையது என்றும், வேண்டுமானால் நீங்கள் இலவசமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாக்கியிடம் சொல்கிறார். மேலும் ஜாக்கியின் கிராமபோன் டீ கடையைப் பற்றி அவருக்கு தெரியும் என்றும், தந்தையும் அவரும் ஒரு முறை வந்திருப்பதாகவும் கூறுகிறார். மகிழ்ச்சியடைந்த ஜாக்கி அந்த கலெக்ஷனில் புதியபறவையைத் தேடுகிறார். இருக்கிறது.

மிகுந்த சந்தோஷத்துடன் அந்த நபரின் வருகைக்காக அன்றைய தினம் காத்துக்கொண்டிருக்கிறார். சரியாக மூன்று மணிக்கு அந்த நபர் எப்போதும் போலவே சிக்கு மிடித்த தலையுடனும், அழுக்கு பிடித்த உடையுடனும் வந்தமர்கிறார். டீ சொல்லிவிட்டு ஜாக்கியைப் பார்க்கிறார். ஜாக்கி பாடலை ஒலிபரப்புகிறார்.

பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த நபர் திடீரென்று பாதி பாடலிலே எழுந்து வெளியே செல்கிறார். இது நாள் வரையில் பாடல் முடிகிற வரையில் எழுந்து செல்லாதவர், இப்பொழுது ஏன் போகிறார் என்று புரியாத ஜாக்கி ஓடிச்சென்று அவரிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அவர் ஜாக்கியை சற்று நேரம் பார்த்து விட்டு, பழைய ரெக்கார்ட் என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஜாக்கி பழைய ரெக்கார்ட் உடைந்து விட்டது என்றும், அதற்கு பதில் தான் பல இடங்களில் அழைந்து திரிந்து இந்த ரெக்கார்டை வாங்கி வந்ததாகவும் சொல்கிறார். ஏதும் பேசாமல் நின்ற அந்த நபர், பழைய ரெக்கார்ட் “அந்த நிலவைக்கேள் அது சொல்லும்” என்ற வரி வரும் இடத்தில் ஒரு முறை திக்கும், ஒரு மைக்ரோ செக்கண்ட் நிற்கும், இப்பொழுது இந்த புதிய ரெக்கார்டில் அது இல்லை என்று சொல்லிவிட்டு, சென்று விடுகிறார்.

அதற்கப்புறம் அந்த நபர் அந்த கடைக்கு வரவேயில்லை.

அந்த நபருக்கும் அந்த ரெக்கார்டிலிருக்கும் – பிறருக்கு தெரியாத, ஏன் அந்த ஜாக்கிக்கே தெரியாத- கீரலுக்கும் அப்படி என்ன உறவு? சில விசயங்களுக்கு, வாழ்க்கையில் மாற்று (replacement) என்பதே இல்லை, இல்லையா?

(தொடரும்)

ஆயிரம் கால் இலக்கியம் – 4

கடவுளுக்கு பாரபட்சம் அதிகம். இல்லையென்றால் ஒருவருக்கு நன்றாக பாடும் திறன், சிலருக்கு நச்சென்று கதை, அழகாக கவிதை எழுதும் திறன், சிலருக்கு நாட்டியத்திறமை, சிலருக்கு நுண்அறிவென்று வகைக்கு ஒன்றாக பிரித்துக்கொடுப்பாரா என்ன? அதனால் தான் உலகம் ரசிக்கும் படியாக இருக்கிறதோ? அதிலும் இந்த தபூ ஷங்கர் விசயத்தில் கடவுளுக்கு ரொம்பத்தான் தாராளம். கற்பனா சக்தியை அள்ளி அள்ளி வாரி வாரிக் கொடுத்திருக்கிறார். அவர் மட்டும் ஏன் இப்படி எழுதுகிறார்? பையன்கள் கிரீட்டிங் கார்டு கடைகளில் ஆங்கிலத்தில் நல்ல வாசகங்களைத்தேடி நேரத்தை வீணடிக்காமல் தபூ சங்கரின் படைப்புகளை ஒரு முறை வாசித்தால் உடனடிப்பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

‘என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?’
என்றா கேட்கிறாய்.

நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!

‘போதும் பார்த்தது
கண் பட்டுவிடப்போகிறது’ என்றாய்
ச்சே…ச்சே..உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.


கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்…
‘கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமா
நிலவை’ என்று.


தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வரு முறையும்
உன் உடைகளை சரி செய்கிறாய்


காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்
அவ்வளவுதான்…
நின்றுவிட்டது காற்று.


ஹ்ம்ம்ம்ம்…டூ லேட் டா முத்து.
***
ஜெயமோகன் கடைசியில் இருக்கும் முடிச்சு தான் கதையை சிறுகதையாக்குகிறது என்றார். ஒரு வகையில் சரிதான். ஆனால் கண்டிப்பாக ட்விஸ்ட் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று சில கதைகள் சொல்கின்றன. கதை சொல்லும் விதம் மிக மிக புதிதாக இருந்தால் ட்விஸ்ட் எதற்கு? அப்படியொரு கதை சில வருடங்களுக்கு முன் படித்தேன். ராஜா வல்லாரை கேப்சூல்ஸ் சாப்பிட்டு என் ஞாபகசக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த முறையும் எழுதியவரின் பெயரோ, வெளியான புத்தகமோ நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் துப்புக் கொடுக்கவும்.

ஒரு கதையாசிரியர் கதை எழுதுவதற்காக நாற்காலி, பேனா, நோட்டுப் புத்தகம் சகிதமாக மொட்டை மாடியில் வந்து அமர்கிறார். கதை எழுத ஆரம்பிக்கிறார். அவர் எழுதிக்கொண்டிருக்கும் கதையில் ஒரு மரம் இருக்கிறது. மரத்தை சுற்றியே கதை பிண்ணப்பட்டிருக்கிறது. அவர் தினமும் வந்து எழுதிக்கொண்டிருக்கும் போது, ஒரு காகம் வந்து மொட்டைமாடியில் உட்கார்ந்து கரைந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆசிரியர் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது அந்த காகம் ஆசிரியரை நெருங்கி, தனக்கு கூடு கட்ட இடமில்லையென்றும், தன்னை கதையில் இருக்கும் மரத்தில் கூடு கட்டிக்கொள்ள அனுமதி தருமாறும் கேட்கிறது காகம். முதலில் மறுத்த ஆசிரியர், பிறகு காகம் கெஞ்சுவதைப் பார்த்து, சரியென்று சொல்கிறார். தான் கதை எழுதுவதற்கு இடைஞ்சலாக கரைந்து கொண்டிருக்கக் கூடாது என்றும் கண்டிசன் போடுகிறார். காக்கை ஒத்துக்கொள்கிறது. கதை வளர்கிறது. காக்கைக்கும் குஞ்சுகள் உண்டாகின்றன. குடும்பமாக அந்த மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வசித்து வருகிறது.

ஆசிரியர் கதையை முடிக்கப் போகிறார். கதைப்படி, கதையில் வரும் மரம் வெட்டப்படவேண்டும். அதனால் ஆசிரியர் காக்கையிடம் முன்பே எச்சரிக்கை செய்து விடுகிறார். கூட்டை காலி செய்யும் படியும் கேட்டுக்கொள்கிறார். காக்கை மறுக்கிறது. ஆசிரியர் மரத்தை வெட்டியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க, காக்கை கோர்டிற்குப் போகிறது. நீண்ட வழக்குக்குப்பிறகு மரத்தை வெட்டக்கூடாது என்று காக்கைக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லப்படுகிறது. காக்கை சந்தோஷமாக அந்த மரத்தில் இருக்கும் கூட்டிலே தன் வாழ்க்கையைக் கழிக்கிறது.

ஆசிரியர் மரத்தை வெட்ட முடியாததால் கதையை முடிக்கமுடியாமல் தவிக்கிறார். இனி காக்கைக்கு தான் எழுதும் கதைகளில் இருக்கும் மரங்களில் கூடு கட்ட இடம் தரக்கூடாது என்று திடமான முடிவு எடுக்கிறார் என்று முடிகிறது கதை.

என்ன கதை இது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்? ஆகா என்ன அழகான கதை இது என்று சிலாகிப்பவர்களும் இருக்கிறார்கள். கதையை மட்டுமே ஆசிரியர் கூறியிருக்கிறார், அதை எதோடுவேண்டுமானாலும் ஒப்பிட்டுப்பார்த்து புரிந்து கொள்வது வாசகனின் திறமை. கதையைப் படித்து புரிந்துகொள்ள வேண்டுமா? ஒரு கதையை பாடப்புத்தகம் போல வாசிக்க வேண்டுமா? என்றால் ஆம் தான். கதை ஆசிரியரிடத்தே முடிவதைக்காட்டிலும் வாசகனிடம் முடிவதே சிறப்பு. ஆசிரியரின் கதைகளில் வாசகனுக்கும் பங்கு வேண்டும். அது தான் சுவை. கவிதை போல.

மற்றொரு காக்கை சம்பந்தப்பட்ட கதையை கணையாழியில் படிக்க நேர்ந்தது. யார் எழுதியது என்று மறந்து விட்டது.

பாட்டி வடை சுட்ட கதையிலிருந்து ஆரம்பிக்கிறார் ஆசிரியர். (போன பகுதியில் காக்கை வடைசுட்ட கதையைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.) அப்புறம் அந்த கதையில் நமக்கு தெரிந்த ட்விஸ்டைக் கொடுக்கிறார். அதாவது, காக்கை வடையைத்தூக்கிக் கொண்டு மரத்திலமர்ந்து கொள்கிறது. வடையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நரியார் வந்து காக்கையே உன் குரல் மிக அழகாக இருக்கிறது, ஒரு பாடல் பாடேன் என்கிறது. புகழ்ச்சிக்கு மயங்கிய காக்கை பாட வாயைத்திறக்கிறது, பிறகு உஷாராக, வடையை வாயிலிருந்து எடுத்து காலில் வைத்து கொண்டு பாட்டு பாடுகிறது. ஏமாற்றத்தால் (காக்கையின் பாடலாகக்கூட இருக்கலாம்) நரி ஒடிவிடுகிறது.

அப்புறம் ஆசிரியர் யோசிக்கிறார். காக்கை-நரி கதை அப்புறம் என்னவாயிற்று? காக்கை வடையைத்தின்று விட்டு என்ன செய்தது? காக்கையிடம் ஏமாந்த நரி என்ன செய்தது?

யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, “பெரும்பாலும் குழந்தைகளின் கதைகளை பெரியவர்களே எழுதியிருக்கிறார்கள். அந்த கதைகளிலெல்லாம் குழந்தைகள் வெளியே நின்று கொண்டிருக்கின்றனர் என்கிறார். உண்மைதானே? குழந்தைகளின் உலகம் வேறு. பெரியவர்களின் உலகம் முற்றிலும் வேறு. அதெப்படி குழந்தைகளின் கதைகளை பெரியவர்கள் எழுதலாம்? எழுதினால் அது குழந்தைகளுக்கு ஏற்றார் போல இருக்குமா? குழந்தைகளிடம் கதை கேட்டுப் பாருங்கள். அவர்கள் கதை மிக மிக புதிதாக, மிகவும் கற்பனை மிகுந்ததாகவும் இருக்கும். யானைக்கு மாடு போல கொம்பு இருக்கும். குதிரைக்கு யானைத்தந்தங்கள் இருக்கும். என் அக்கா மகளுக்கு யானை பிடிக்காது. பயம். எனவே அவளின் கதைகள் அனைத்திலும் வில்லன்கள் யானையாக இருக்கும். அது பாட்டி வடைசுட்ட கதையாக இருந்தாலும் அங்கே நரிக்குப் பதிலாக யானைதான் காக்கையை வம்புக்கிழுத்துக்கொண்டிருக்கும்.

நமது கற்பனை எல்லைக்குட்பட்டது. எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது நம்க்கு தெரியும். ரெஸ்ட்ரிக்டட் இமேஜினேஷன். குழந்தைகளின் உலகம் எல்லைகள் அற்றது. வானமற்றது.

யோசித்துக்கொண்டிருந்தவர், ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாளில் – எனக்கு இந்த இரு சொற்கள் பிடித்திருக்கிறது. என்வே அதையே பயன்படுத்திக்கொள்கிறேன் – அந்தரத்தில் முடிவில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கும் காக்கா-நரி கதையின் அடுத்த பகுதி கிடைக்கிறது.

எங்கே நரி வடையைப் பிடுங்கிவிடுமோ என்று பயந்த காகம் வேகவேகமாக தின்றது. வேகவேகமாக தின்றதில் காகத்திற்கு விக்கல் வந்து காடெல்லாம் தண்ணீருக்காக அலைகிறது. எங்கும் தண்ணீர் பஞ்சம். கடைசியாக ஒரு குடத்தில் தண்ணீர் மிக மிக அடியில் கிடப்பதைப் பார்க்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம், காக்கைக்கு எட்டவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறது. உடனே அதற்கு ஐடியா ஒன்று தோன்றுகிறது. பானைக்கு அருகில் இருக்கும் கற்களை எடுத்து ஒன்றொன்றாய் பானையில் போடுகிறது. கற்கள் நிரம்பியதால் தண்ணீர் மேலே வருகிறது. ஆனந்தமாய் குடித்து செல்கிறது காக்கை.

எப்படி கோர்க்கிறார் பாருங்கள்?

சரி, காக்கையிடம் தோல்வி கண்ட நரியார் அப்புறம் என்ன செய்தார்? ஹோல்ட் ஆன். நீங்கள் யோசியுங்கள். ஆசிரியரின் மனப்போக்கையும் கதை(!?)ப் போக்கையும் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? ம். நீங்கள் யோசித்தது சரியா என்று பார்க்கலாம்.

காக்கையிடம் தோல்வி கண்ட நரி, ஏமாற்றமுடன் செல்கிறது. அப்படி செல்லும் பொது, ஒரு திராட்சைத்தோட்டத்தைப் பார்க்கிறது. (எத்தனை பேர் கரெக்டாக யோசித்தீர்கள்) அந்தோ பரிதாபம். திராட்சைப் பழங்கள் எல்லாம் மிக உயரத்திலிருக்கின்றன. நரி எம்பி எம்பி குதித்துப் பார்க்கிறது. திராட்சை சிக்கவேயில்லை. எட்டவேயில்லை. சோர்ந்துபோன நரி, சீ.சீ. இந்த பழம் புளிக்கும் என்று சென்று விடுகிறது.

இன்ட்ரஸ்டிங் இல்ல? இந்த கதையின் இறுதியில் திருப்பம் எதற்கு? மிகப் புதுமையான முயற்சியே கதையை தூக்கி நிறுத்தும். நம்மை கட்டிப்போடும்.

சரி. திராட்சைப்பழம் கிடைக்காத நரி என்ன செய்தது? வயிறு முட்ட தண்ணீர் குடித்த காக்கை அப்புறம் என்ன செய்தது? நமக்கென்ன தெரியும், மிகுந்த புத்திக்கூர்மையால் ஐ.ஐ.டியில் கூட சீட் கிடைத்து படித்து அல்லது ஸ்ட்ரைக் செய்து கொண்டிருக்கலாம்.

விகடனில் வந்த ஒரு நிமிட கதை ஒன்று. கதை ஒரு நிமிடம் என்றாலும் என்னை ஒரு 20 செகண்டாவது யோசிக்கவைத்தது.

பீரோவில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, ரகசிய அறைக்குள் இருந்த அந்த டைரி என் கையில் கிடைத்தது. எடுத்து ஆர்வமாகப் புரட்டினேன்.
ஜனவரி 1: புத்தாண்டு. என்னைப்பொறுத்த மட்டும் இது புத்துணர்ச்சி ஆண்டு. காரணம் இன்று தான் கவிதா என்கிற என் தேவதையை முதன் முதலாகச் சந்தித்தேன்..
ஐயோ. இது அவர் டைரியே தான். படபடக்கும் இதயத்தோடு மேலும் புரட்டினேன்.
ஜூலை 5: இன்று எனக்கு மிகக் கொடுமையான நாள். அப்பா அம்மா பேச்சை மீற விரும்பாமல், அவர்கள் பார்த்த மாப்பிள்ளையையே கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்து விட்டாளாம் கவிதா.
செப் 21: இன்று அவளுக்கு திருமணம். டைரியை அழகாகப் பேக் செய்து எடுத்துப் போய், அவள் கையிலே பரிசாக…
‘கவிதா..கவிதா’ என்று குரல் கொடுத்தபடி என் கண்வர் வருவது தெரிய, சட்டென்று அந்த டைரியை மீண்டும் அந்த ரகசிய அறைக்கு உள்ளேயே வைத்து பூட்டினேன்.

பிறகு ஒரு மிக நகைச்சுவையான கதை ஒன்றை உயிர்மையில் படிக்க நேர்ந்தது. பொதுவாக டெக்ரானில் – எங்கேயிருக்கிறது என்று கேட்காதீர்கள், நானும் ஜியோகிராபியில் ரொம்ப வீக் – யுத்தம், ஈரானின் இலக்கியவளம், கொலம்பியாவின் குழம்பிய பெண் கவிஞர் என்று சற்றும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இலக்கியத்தொண்டு செய்து கொண்டு வரும் உயிர்மை, வித்தியாசமாக ஒரு நல்ல சிறுகதையைப் பிரசுரத்திருந்தது. நாஞ்சில் நாடன் எழுதியிருந்தார். கதையின் பெயர் “கதை எழுதுவதின் கதை”.

கதை என்று ஒன்றே இல்லாததுதான் கதையின் சிறப்பு. கதைக்கு மஞ்சள் கரு, வெள்ளைக்கரு, ஹேர்பின் பெண்ட் எல்லாம் வேண்டுமென்று கேட்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை. கதை கேட்கும் பத்திரிக்கைகளையும், கதை எழுதுபவர்களையும் சாடு சாடு என்று சாடியிருக்கிறார். ஜெயமோகன், கதையில் எங்க வந்தார் என்று தான் எனக்கு புரியவில்லை. ஜெயமோகனைப் போட்டு புரட்டி எடுத்திருக்கிறார்,நாஞ்சில் நாடன். இதைப்பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)

பிற பகுதிகள்:

 

ஆயிரம் கால் இலக்கியம் – 3

 

‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவத்தை புரிந்துகொள்ளக்கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.

அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’ அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கியவடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.

சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.

பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக்கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக்கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருப்போம்.

இவை ஏதும் சிறுகதைகள் அல்ல.

புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.

அது என்ன?

அதை கதையின் முடிப்பில் உள்ள ‘திருப்பம்’ என்றும் சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் ‘twist’ என்று சொல்கிறார்கள்.

அதாவது ஒரு சிறிய கதையை சிறு கதையாக ஆக்குவது திருப்பம்தான். ‘சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை’ என்று எளிமையாக வரையறை செய்யாலாம்.

-சிங்கப்பூரில் ஜெயமோகன் சிறுகதைப்பட்டறையில் பேசியது.

காக்கா வடை சுட்ட கதையை சமீபத்தில் கணையாழியில் படிக்க நேர்ந்தது. அதில் என்ன படிக்கவேண்டியதிருக்கிறது என்கிறீர்களா? அடுத்த பகுதியில் இதைப் பார்ப்போம்.

ஜெயமோகனின் நிறைய கதைகள் சுஜாதாவின் கதைகளைப் போல அதிரடித் திருப்பம் கொண்டிராது. ஆனால் ஒரு மெல்லிய திருப்பம் கண்டிப்பாக இருக்கும். சில சமயங்களில் அது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். சில சமையங்களில் மிக மெல்லிய மனஅதிர்வைக்கொடுக்கும். ‘ தேவகி சித்தியின் டைரி ‘ யைப் போல. ஜெயமோகன் சிறுகதைத் தொகுப்பை படிக்க எடுத்த பொழுது, கதை-பக்கம் (index) வரிசையில், தேவகி சித்தியின் டைரிதான் என் கண்களை சட்டென்று கவர்ந்தது. சித்தி டைரியில் என்ன எழுதியிருப்பார் என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்! ஆனால் பெரும்பாலும் இவ்வகையான வாக்கியத் தலைப்புகள், அதிலும் மர்மம் மிகுந்த தலைப்புகள், பலரது கவனத்தைக் கவரும். கௌதம் எழுதிய ‘ ஒரு நண்பனின் நிஜம் ‘ தலைப்பை போல.

தேவகி சித்தி ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாக்கப்பட்டு அவருகிறாள். அந்த குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு மகன்கள் உண்டு. தேவகிச் சித்தி இரண்டாம் மகனுக்கு மணமுடிக்கப்பட்டு அந்த வீட்டிற்கு வருகிறாள். தேவகி சித்தி பட்டணத்தில் படித்தவள். திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு சென்று கொண்டிருப்பவள். ஒரு பெண் சொந்தக்காலில் நிற்பது, இன்னொரு – சொந்த காலில் நிற்காத – பெண்ணிற்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை. இருவருமே அடிமைகளாக இருந்துவிட்டால் சந்தோஷம் தான்! அந்த வீட்டில் சும்மா இருக்கும் மூத்த மருமகளுக்கு தேவகிச் சித்தியைக் கண்டாலே பிடிப்பதில்லை. அதிலும் குறிப்பாக தேவகி சித்தி டைரி எழுதி வருவது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. சித்தி டைரி எழுதிக்கொண்டிருக்கிறாள் என்ற விசயத்தைக் கண்டுபிடிப்பது மூத்த மருமகளின் மூத்த மகன். முதல் பேரன்.

தேவகிச் சித்தி அந்த டைரியில் என்ன எழுதியிருப்பாள் என்று அனைவரின் – முதல் மருமகள், அப்பா (மாமனார்), அம்மா(மாமியார்) – தலையையும் குடைகிறது. அவள் இல்லாத நேரங்களில் அவள் அறையை சோதனை போடுகிறார்கள். டைரி கிடைக்கவில்லை. அன்று தேவகிச்சித்தி டைரியை பீரோவில் வைத்து பூட்டி சாவியை கைப்பையில் போட்டுக் கொண்டு போய் விடுகிறாள். டைரி கிடைக்காததைக் காட்டிலும் அவள் சாவியை கைப்பையில் போட்டுக்கொண்டு போனது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.

அன்று மாலை முதல் மகன் வந்தவுடன் முதல் மருமகள் டைரி பேச்சை எடுக்கிறாள். பிரச்சனை அலசப்படுகிறது. முதல்-மகன் முதலில் இது ஒரு பிரச்சனையா என்று நினைத்தவர், பிறகு அப்பா அம்மாவின் நிர்பந்தத்தால் தன் தம்பியை – தேவகி சித்தியின் கணவன் – அழைத்து விசாரனை செய்கிறார். தேவகிசித்தியின் கணவன் முதலில் இதை எப்படி அண்ணா அவளிடம் கேட்பது என்று தயங்கி பிறகு குடும்பத்தின் நிர்பந்தத்தால், தேவகியை அழைத்து டைரியைப் பற்றி கேட்கிறார். அவர் தேவகிசித்தியை ‘தேவு’ என்று அழைப்பது குறிப்பித்தக்கது.

தேவகிச்சித்தியும் டைரியை சபை முன்னர் எடுத்துக்காட்டுகிறாள். அப்பா (மாமனார்) அதை அனைவரின் முன்னால் வாசித்துக்க்காட்டச் சொல்கிறார். தேவகி பதறுகிறாள். வாசிக்கக் கூடாது என்று அடம் பண்ணுகிறாள். அது என்னுடையது. அதை யாருக்கும் காட்டமாட்டேன் என்கிறாள். மற்றவர்கள் – சித்தியின் கணவன் உட்பட – கோபம் அடைகின்றனர். ஒன்றும் இல்லையென்றால் வாசித்துக்காட்டவேணிடியது தானே. சித்தி சாமி மேல் சத்தியமாக அதில் ஒன்றும் இல்லை என்றும், வாசிக்கமட்டும் வேண்டாம் என்றும் சொல்கிறாள். முதல் மருமகள் அதற்குள் சித்தியிடமிருந்து லாவகமாக டைரியைப் பிடுங்கிவிடுகிறாள். தேவகி வெறி கொண்டார்போல ஓடிச்சென்று அவளிடமிருந்து பிடுங்கி, சமையலறைக்குள் சென்று கதவைச்சாத்திக்கொள்கிறாள். உள்ளிருந்து மண்ணென்ணெய் வாசனையும்,கருகிய வாசனையும் வருகிறது. அனைவரும் கலவரமடைந்து கதவைத்தட்டுகிறார்கள். சிறுது நேரத்திற்கு பின்னர் சித்தி மதுவாக கதவைத்திறந்து கொண்டு வெளியே வருகிறாள். டைரி எரிந்து சாம்பலாகக் கிடக்கிறது. தேவகியின் கணவர் கடுங்கோபத்திற்குள்ளாகிறார். தேவகியை கடுமையான வார்த்திகளால் திட்டுகிறார். அவளைக்கொண்டுபோய் அவளது தந்தையின் வீட்டில் விட்டு விடுகிறான். யார் யாரோ வந்து சமாதானம் செய்கின்றனர்.

இந்த கதையைச் சொல்லிக்கொண்டு வந்த கதை சொல்லி – முதல் பேரன் – இவ்வாறு முடிக்கிறான்:

தேவகிச்சித்தியை சித்தப்பா விவாகரத்து செய்துவிட்ட விசயம் அவர் மூன்று வருடம் கழித்து மறுமணம் செய்து கொண்ட பொழுது தான் தெரியவந்தது.”
கதை சொல்லியைப் போலவே, டைரியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது கடைசிவரை எனக்கும் தெரியாமலே போனது. மறுமுறை ஜெயமோகனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கேட்க வேண்டும். அவருக்கு மட்டும் தெரியுமா என்ன?

‘looking into ones diary is looking into ones bathroom’ என்று யாரோ சொன்னதாய் ஞாபகம். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் யார் கண்ணிலும் படாமல் வைத்திருக்கமுடியுமா என்ன? இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுதுதான் தமிழகத்தில் டைரி எழுதும் பழக்கம் எப்பொழுதிலிருந்து இருந்திருக்கிம் என்ற எண்ணம் தோன்றியது. மொழி எப்பொழுது எழுத்து வடிவம் பெற்றதோ அப்பொழுதிலிருந்து இருந்திருக்கவேண்டும். திருக்குறள் கூட திருவள்ளுவரின் டைரிக்குறிப்பாக இருக்கலாம். எனக்கு போன வருடம் வரை டைரி எழுதும் பழக்கம் இருந்தது. இப்பொழுது விட்டுவிட்டேன்.

சமீபத்தில் சுஜாதாவின் சிறுகதையொன்று குமுதத்திலே வெளிவந்திருந்தது. மிகவும் நன்றாக இருந்தது. கொடுத்த ஒரு டாலர் அந்த ஒரு கதைக்கே தகும்.

கதை சொல்லுபவர் அழுக்கு சட்டையும், அழுக்கு பேண்ட்டும், அறுந்த ரப்பர் செருப்புமாய் டோன்ட் கேர் பார்ட்டி. பீச்சில் உட்கார்ந்து புத்தகம் படிப்பது வாடிக்கை. அவர் தினமும் , ஒரு பணக்காரர் – தோரனையிலே தெரிகிறது, காரில் வந்து இறங்குவதும், டிரைவர் வந்து கதவைத்திறக்கும் வரையில் உள்ளேயே அமர்ந்திருப்பதுமே சொல்கிறது – வாக்கிங் வருவதைப் பார்க்கிறார். தினமும் ஒரே மாதிரியாக காரை விட்டு இறங்கி, ஒரே அளவு தூரம் நடந்து, ஒரே பெஞ்சில் உட்கார்வதே வழக்கம். ஒரு நாள் அவர் வாக்கிங்முடித்து விட்டு பெஞ்சில் வந்து உட்காரும் பொழுது நம்ம அறுந்த ரப்பர் செறுப்பு ( இனி அ.ர.செ) அதே பெஞ்சில் உட்கார்ந்து வெகு உன்னிப்பாய் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறது. செல்வந்தருக்கு மிகுந்த எரிச்சலாகப் போய்விடுகிறது. அ.ர.செ யின் தன்னுடன் பொருந்தாத தோற்றம் ‘உச்’ கொட்ட வைக்கிறது. ‘உச்’ கேட்ட அ.ர.செ பெஞ்ச் என்ன இவன் பாட்டன் சொத்தா என்று எங்கேயும் போகாமல் அங்கேயே உட்கார்ந்து கொள்கிறது. அன்று மட்டுமல்ல, அடுத்த நாளும் அதே பெஞ்சில் வேண்டுமென்றே வந்து உட்கார்ந்து கொள்கிறது. செல்வந்தர் அடுத்த பெஞ்சை ட்ரைப் பண்ணிப்பார்க்கிறார். அது கொஞ்சம் தூரமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். வேறு வழியில்லாம அதே பெஞ்சில் அ.ர.செ யுடன் உட்கார்ந்து கொள்கிறார். முதலில் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்ட செல்வந்தர், பிறகு புன்னகைக்க ஆரம்பிக்கிறார். அவர்களுக்குள் இனம்புரியாத நட்பு உருவாகிறது. அடுத்த சில நாட்களில் அ.ர.செ வரவில்லையென்றால், எங்கே இன்னும் காணோம் என்று தேடாஅரம்பித்துவிடுகிறார் செல்வந்தர்.

ஒரு நாள், செல்வந்தரும், அ.ர.செ யும் பெஞ்சில் உட்கார்ந்திருந்த பொழுது, மற்றொரு கார் வந்து நிற்கிறது. டிரைவர் இறங்கிவந்து ‘அம்மா பணம் கேட்டார்கள்’ என்கிறான். அதான் நிறைய கிரடிட்கார்டுகள் வைத்திருப்பார்களே. எங்கே தொலைத்தார்களாம் என்று நக்கலாக கேட்கிறார் செல்வந்தர். கிரடிட் கார்டு முடிந்து விட்டது என்றும் இப்பொழுது அம்மா 30,000 ரூபாய் கேட்கிறார்கள் என்கிறான். கோபமடைந்த செல்வந்தர் கொடுக்கமுடியாது போ என்கறு சொல்லி அனுப்பிவிடுகிறார்.

பிறகு அருகில் அமர்ந்திருக்கும் அ.ர.செயிடம் அந்த அம்மா தன் மனைவி என்றும் . தன் மனைவியும் மனனும் சரியான பணப்பேய்கள் என்றும் சொல்கிறார். அ.ர.செ. பணம் கேட்டால் குடுத்துவிடவேண்டியது தானே, உங்ளிடம் தான் நிறைய இருக்கிறதே என்கிறது. அவளாக வந்து கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன் என்கிறார் செல்வந்தர். பணம் ஒரு பிரச்சனையில்லை என்றும் தான்னிடம் நிறைய சொத்துக்கள் இருக்கின்றதென்றும், பினாமி பேரிலும் நிறைய சொத்துக்கள் இருக்கின்றதென்றும், எங்கெங்கே என்னெவென்ன இருக்கிறது என்ற விபரங்களையும் கூறுகிறார். சொத்தின் மேலேயே தன் மனைவிக்கும் மனனுக்கும் ஆசை என்றும் கூறுகிறார். அ.ர.செ, அப்படியென்றால், உங்க மகனையும், மனைவியையும் பழிவாங்க உங்க வரிப்பணத்தை கட்டிவிடுங்கள். உங்கள் பாதி சொத்துக்கள் குறைந்துவிடும். மனைவிவும், மகனும் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறது. கோபமடைந்த செல்வந்தர் அனைவரும் ஒழுங்காக வரி கட்டுகிறார்களா? நான் மட்டும் ஏன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வரியாக கட்ட்வேண்டும் என்றும் சொல்கிறார்.

கடலை வண்டி வருகிறது. அ.ர.செ. செல்வந்தருக்கு கடலை வாங்கிக்கொடுக்கிறது. முதலில் மறுத்த செல்வந்தர் பிறகு இதையும் எப்படியிருக்கிறதென்று பார்த்து விடுவோமே என்று வாங்கிகொண்டு, கடலைக்கு பணம் கொடுக்க 1000 ரூபாய் நோட்டை எடுக்கிறார். சிரித்துக்கொண்டே அ.ர.செ யே கடலைக்கு பணம் கொடுத்துவிடுகிறது. கடலை சாப்பிட்டுக்கொண்டே செல்வந்தர், உங்களுக்கு என்ன ஜாலிதான், பிக்கல் பிடுங்கல் இல்லாம இங்க வந்து புத்தகத்த தூக்கிவச்சுக்கிட்டு உட்கார்ந்திடுறீங்க என்கிறார். அதற்கு அரசெ, என் பாடு உங்களுக்கென்ன தெரியும்? நான் கவர்மெண்ட் வேலையில இருக்கிறவன். பாதி மாசத்திலே சம்பளம் தீர்ந்து போய் விடுகிறது. அதற்கப்புறம் பெண்டாட்டியிடம் தான் கேட்க வேணிடியிருக்கிறது என்றும் சொல்கிறது.

செல்வந்தர் கவர்மெண்ட் வேலையா என்று அறுந்த செருப்பையும், கிழிந்த சட்டையும் பார்த்துக்கொண்டே கேட்கிறார். அரசெ , நம்ப முடியலையா? அறுந்த செருப்பை பார்க்கறீங்களா? வேலைக்காக வேஷம் போடவேண்டியதிருக்கிறது. நான் சென்ட்ரல் போர்ட் எம்ப்ளாயி. இன்கம்டாக்ஸ் டிவிசனல் டைரக்டராக இருக்கிறேன். வருகிறேன், என்று சொல்லிக்கொண்டே எழுந்து செல்கிறது.

நீங்கள் இந்த முடிவை முன்கூட்டியே யூகித்திருந்தீர்கள் என்றால் அது முற்றிலும் என்னுடைய தவறே. சுஜாதா சற்றும் யூகத்திற்கு இடம் தராமல் கதையை நகர்த்திச் சென்றார்.

அதே வார விகடனில், நான் இரசித்த ஹி.ஹி.கூ.

தம்மடிச்சா கேன்சராம்
தண்ணியடிச்சா அல்சராம்
கூல்டிரிங்க்ஸ் பூராம்
பாய்ஸ்சனாம்
கொழாப்புட்டு தின்னுபுட்டு
குந்திக்கடா கோவிந்து

மற்றொரு கதை: இதை நான் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னர் படித்ததென்று நினைக்கிறேன். திடீரென்று இந்த நொடியில் தான் நினைவுக்கு வந்தது. குமுதத்தில் வந்தது.

ஆஸ்பத்திரியில் ஒருவர் மயக்க நிலையிலிருந்து கண் விழிக்கிறார். எழுந்தவர் தன் மனைவியையும் மகனையும் எங்கே என்று தேடுகிறார். நர்ஸ் இவர் கண்விழித்ததைப் பார்த்து, இதோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கிறேன் என்று சொல்லு சென்று விடுகிறாள். சரி என்று இவர், மேசையில் இருக்கும் வார இதழை எடுக்கிறார். அதில், இந்த படத்திற்கு அப்புறம் ரஜினி அரசியலில் குதிப்பாரா? வீரப்பனை பிடித்து விடுவோம் என்று அதிரடிப்படை சபதம். காவேரி பேச்சுவார்த்தைக்கு மந்திரிகள் டெல்லி பயணம் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கிறார்.

சிறிது நேரத்தில் அவர் மனைவி உள்ளே வருகிறாள். மனைவியைப்பார்த்தது மெலிந்து விட்டாள் என்று நினைத்துக்கொள்கிறார். அவள் பின்னாலேயே வாலிபன் ஒருவன் வருகிறான். அவனைப்பார்த்து சும்மா சிரித்துவிட்டு, ‘நம்ப பையன் சுகு எங்கம்மா?’ என்று தன் மனைவியைப்பார்த்து கேட்கிறார். மனைவி உடனே ‘இவன் தான் நம்ப பையன்’ என்று வாலிபனைக் காட்டுகிறாள். ‘நீங்க கோமாவுல இருந்த இந்த பத்து வருசத்தில தடிமாடு மாதிரி நல்லா வளர்ந்திட்டான்.’ என்கிறாள். அவர் அதிர்ந்து போய் வார இதழைப் பார்க்கிறார்.

இப்பொழுது, பத்து வருடங்களாகியும் செய்திகள் மாறாமல் இருக்கின்றன என்று சொல்லமுடியாதுதான். சரியா?

(தொடரும்)

ஆயிரம் கால் இலக்கியம் – 2

 

கோணங்கி பக்கங்கள் என்ற ஒரு தொடர் இப்பொழுது குமுதத்தில் வந்துகொண்டிருக்கிறது. நான் இப்பொழுதெல்லாம் குமுதம் காசு கொடுத்து வாங்குவதில்லை. வலையிலே படித்துவிடுகிறேன். மேலும் காசு கொடுத்து வாங்குவதற்கு அதில் ஏதேனும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை – நமீதாவின் படங்களைத்தவிர. ஆனாலும் என்னுடன் தங்கியிருக்கும் நண்பர் ஒருவர் அவ்வப்பொழுது குமுதம் வாங்கிவருவார். அப்பொழுது தான் சாருநிவேதிதாவின் இலக்கியத்தொண்டு பற்றி அறிந்துகொள்ள நேர்ந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்னால் சாருநிவேதிதா – கோணல் பக்கத்தில் – சென்னையில் எந்த எந்த பார்களில் – பைவ் ஸ்டார், திரி ஸ்டார் – உற்சாகபாணம் எவ்வளவு விலை என்பதை ஆராய்ச்சி செய்து தொகுத்து வழங்கியிருந்தார். (பி.ஹச்.டி செய்யப்போகிறார் என்றும் கேள்வி. டாக்டர் பட்டம் கூட கிடைக்கலாம்) யாரும் படிக்காமல் விட்டுவிடக்கூடும் – யாரும் இந்த அற்புத தகவலால் பயன் பெறாமல் போய்விடுவார்கள் – என்று நினைத்து , விலைப்பட்டியலை நன்றாக கட்டம் கட்டி இருந்தார்கள். அடுத்தவாரம் அவர் ரஜினிகாந்தோடு தண்ணியடித்த விசயத்தையும் – பல ஆண்டு காலம் ஆகியும் -மறக்காமல் சொல்லியிருந்தார். ரஜினியின் ஆரம்பகால தண்ணியடிக்கும் முறை நமக்கு இதன் மூலம் தெரியவந்தது பாக்கியமே. விலைமதிப்பில்லாத தகவல் அல்லவா இது. போனஸாக ரஜினி தற்பொழுது தண்ணயடிப்பதில்லை என்று தன் நண்பர் ஒருவர் – அவர் ரஜினிக்கும் நண்பர்- சொன்னதாக சொல்லியிருந்தார். அதற்கப்புறம் கோணங்கி பக்கங்களை படிக்கும் வாய்ப்பு -பாக்கியம்- எனக்கு இன்று வரை கிடைக்கவில்லை. ஆனால் நண்பர்கள் பலர், சாருநிவேதிதா, இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமானவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது ஒரு படைப்பையும் நான் படிக்காதது எனது துரதிர்ஷ்டமே.

இந்தவார குமுதத்தில் – சும்மா விளையாட்டுக்காக – எண்ணியதில் மொத்தம் 57 பெண்கள் – நடிகைகள் – படங்கள். பல செய்திகளில் – செய்தி? – நடிகைகளின் படங்கள், அங்கே இடம்பெற்றிருக்கும் செய்திக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை. பாய்ஸ் திரைப்படத்தில், விவேக் கேட்கும் கேள்வி எனக்கு ஞாபகத்திற்கு வந்தது : “பம்ப் செட் விளம்பரத்திற்கு ரம்பா தேவையா?’

இரண்டு குமிழிகள்
இணையும் தருணத்தில்
காணாமல் போகின்றன
இரண்டுமே..
மலர்கிறது ஒரு தாமரை

அதற்காக இவ்வாறான புரியாத கவிதைகளைத்தான் போடவேண்டும் என்றில்லை. சில பயனுள்ள தகவல்களையும் சொல்லலாம் : பரத் – ஜெனிலீயா காதலா? என்பதைப் போல.
(விசயம் தெரியாதவர்கள் சென்றவார விகடன் படிக்கவும்)

எனக்கு விகடன், குமுதத்தில் வரும் சிறு கதைகள் மிகவும் பிடிக்கும். அவை ஒரு வித்தியாசமான – நாம் எதிர்பார்க்காத – முடிவைக் கொண்டிருக்கும் காரணத்தால் கூட இருக்கலாம். சில சமையங்களில் கதை படிக்கும்பொழுதே – முடிவை யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். ஆனால் பல சமையங்களில் அந்த முடிவு நான் நினைத்திருந்த முடிவாக இருக்காது. வெகு நாட்கள் – கி. ராஜநாரயணனின் சிறுகதை தொகுப்பை – படிக்கும் வரையில் நான் சிறுகதைகள் என்றால் யாரும் எதிர்பாராத முடிவோடு தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இவ்வாற கதைகளில் – நான் படித்த – கதைகளில் எனக்கு நீண்ட நாட்களாக நினைவில் இருக்கும் ஒரு சிறுகதை : குமுதத்தில் வந்ததென்று நினைக்கிறேன். தலைப்பு ஞாபகமில்லை. எழுதியவரும் ஞாபகமில்லை.

பி.எஸ்.சி முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல், டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து, தம் அடித்து கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருக்கிறார் நமது ஹீரோ. அவ்வாறு ஒரு நாள், தம் அடித்துக்கொண்டிருக்கும் பொழுது, பஸ்ஸில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறார். அவளால் ஈர்க்கப்பட்டு (இயற்கைதானே?) பஸ்ஸில் தொற்றிக்கொள்கிறார். அவள் இறங்கும்பொழுது அவளுடனே இறங்கி அவள் பின்னாலேயே செல்கிறார், வீட்டைக்கண்டுபிடிக்கிறார்(ன்). அப்புறம் கொஞ்ச நாட்கள் அவள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கிறான். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத அந்த பெண், பிற்பாடு நம்ப ஹீரோவை லுக் விட ஆரம்பிக்கிறார்(ள்). அப்புறம் காதல் பற்றிக்கொள்கிறது. இருவரும் உருகி உருகி காதலிக்கின்றனர். அவளும் பி.எஸ்.சி படித்தவள்.

ஒரு நாள் திருச்சியில் இருவருக்கும் இண்டர்வியு வரவே இருவரும் பஸ்ஸில் திருச்சி பயணிக்கின்றனர். துவரங்குறிச்சி வரையிலும் தனித்தனியாக உட்கார்ந்திருந்து விட்டு, அதற்கப்புறம் சேர்ந்து உட்கார்ந்து கொள்கின்றனர். தமது திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் வருகின்றனர்.
இண்டர்வியூ முடிந்து, இருவரும் சினிமாவுக்குப் போகின்றனர். இண்டர்வியூவில் இருவரும் பாஸ் செய்திருக்கவில்லை. சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, தியேட்டரில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி வர, மக்கள் அனைவரும் பயந்தடித்துக்கொண்டு ஓடுகின்றனர். ஹீரோவும், ஹீரோயினும் கூட ஓட, ஹீரோயின் தடுமாறி கீழே விழுகிறாள், ஹீரோ தாங்கிப்பிடித்து விடுகிறார்(ஹீரோவாச்சே?).

மறுபடியும் திருச்சியிலிருந்து பஸ் பிடித்து, துவரங்குறிச்சி வரையிலும் ஒன்றாக அமர்ந்திருந்து, அ தற்கு பிறகு தனித்தனியாக அமர்ந்து சமர்த்தாக வீடு வந்து சேர்கின்றனர்.

ஹீரோ, இண்டர்வியூவில் பெயிலானதை நினைத்து (படம் முழுக்க பார்க்க இயலாததால்?) சோகத்துடன் தூங்கிவிடுகிறார்.

மறுநாள் காலை எழுகிறார். வீட்டிலிருக்கும் அண்ணன், அம்மா, அப்பா, தங்கை யாரும் தன்னுடன் பேச மறுப்பதை அறிகிறான். அம்மா கோபமாக வேறு இருக்கிறார். குழப்பத்துடன் அண்ணனைக் கேட்க, அவன் பதில் பேசாது, அன்றைய செய்தித்தாளை எடுத்துக்கொடுக்கிறான்.
ஹீரோ பேப்பரை பிரித்துப்பார்க்கிறான், அங்கே:

“திருச்சி தியேட்டரில் வெடிகுண்டு புரளி.
தடுக்கி விழுந்த காதலியை தாங்கிப்பிடித்த காதலன்”

என்று கொட்டையெழுத்தில் நம்ப ஹீரோ-ஹீரோயின் போட்டவோடு செய்தி வெளியாகியிருந்தது. அங்கே ஹீரோ ஹீரோயினை ஸ்டைலாக தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நாட்களுக்கு முன்னாள், சிங்கப்பூர் வந்திருந்த, ஜெயமோகன் அவர்களின் பேச்சை கேட்க – அல்லது சிறுகதை பட்டறைக்கு – போயிருந்தேன். அப்பொழுது சிறுகதையின் முக்கியமான ஒன்றாக அவர் குறிப்பிட்டது – சிறுகதையின் முடிவு. ஒரு சஸ்பென்ஸ். அவிழும் ஒரு முடிச்சு. பல சிறுகதைகளில் அதைப்பார்க்கலாம். ( சில படங்கள் கூட சிறுகதைகள் போன்ற ஒரு அதிபயங்கர முடிவோடு இருக்கும். அந்த முடிவுக்காகவே ஒவ்வொரு காட்சியும் காத்திருக்கும். அவ்வாறான ஒரு படம் : the sixth sense.)

இந்த வார விகடனில் கூட ஒரு நிமிடக் கதைகள் சில பிரசுரமாகியிருந்தன. அதில் ஒன்று:

“அம்மா! நல்லவர்னு இவ்ளோ நாளும் நம்பிக்கிட்டிருக்கியே உன் புருசன் அதுதான் என் அருமை அப்பா..அவரோட யோக்கியதை தெரியுமா உனக்கு?”

“என்னடி ஆர்த்தி சொல்ற?”

“அந்த அசிங்கத்தை ஏன் கேட்கிற? நேத்து நான் ஸ்கூல்ல இருந்து சீக்கிரமே வந்துட்டேன். போக்கிடமேயில்லாம பல வருசம் நம்ப வீட்லயே விழுந்து கிடக்கிறாளே நம்ப வீட்டு வேலைக்காரி கஸ்தூரி. அவளோடு நெருக்கமா..பெட்ரூம்ல உன் புருசன்..சே!”

“பதறாதே ஆர்த்தி. சுருக்கமா சொன்னா புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். இந்த வீட்ல வேலைக்காரியா வந்து சேர்ந்தது கஸ்தோரி இல்ல. நான் தான்”

நாலே நாலு வாக்கியம். ஒரு திருப்பம். ஒரு நிமிடம். ஒரு கதை. நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதை விட சுவையாக இருந்தது இந்த கார்ட்டூன்:

அப்புறம், கல்கியில் ஒருமுறை: நாடக தொனியில் ஒரு சிறுகதை பிரசுரமாகியிருந்தது. மிகுந்த நக்கலான – சுவையான, ஹாஸ்யமான – சிறுகதை அது. அதை பத்திரப்படுத்தி நீண்டகாலம் வைத்திருந்தேன். கதையின் பெயரும் எழுதியவரும் நினைவில் இல்லை.

அந்த சிறுகதையின் கரு இதுதான்:
நாம் வாழ்க்கையின் அனைத்து தருனங்களிலும் – அல்லது வாழ்க்கை முழுவதும் – ஏதோ ஒரு வரிசையில் -க்யூவில்- நின்று கொண்டிருக்கிறோம்.

செம நக்கல் பண்ணியிருந்தார் எழுதியவர். புரோமோசனுக்காக காத்திருக்கும் அலுவலர்களிடம், பாஸ்(boss) வந்து, ‘ம்..ம்.. எல்லோரும் எழுந்திருங்க. குதிங்க. யார் நன்றாக குதிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் புரோமசன்’ என்று கூறுவது உச்சகட்டம். மாட்டின் கண்ணில் எம்.ஜி.ஆர். தெரிகிறார் என்று க்யூ நிற்பதாகவும் ஏகத்துக்கும் கிண்டல் செய்திருப்பார்.

இந்தியாவில் எதற்கு க்யூவில் நின்றாலும் – பிள்ளையார் பால் குடிப்பதைப் பார்க்க க்யூவில் நின்றது எனக்கு நினைவிருக்கிறது – பஸ்ஸ¤க்கு க்யூவில் நிறக மாட்டோம். சென்னை பாஷையில் : ‘அச்சு புச்சு ஏறுடா’. சிங்கப்பூரில் பஸ்ஸ¤க்கு க்யூவில் நிற்க வேண்டியுள்ளது. இங்கே க்யூவிற்கா பஞ்சம். மதிய சாப்பாட்டிற்கும் க்யூவில் தான் நிற்க வேண்டும். நாம் வேண்டாமென்றாலும் சில அதி முக்கியமான – இன்னைக்கு சாம்பார் எடுக்கலாமா?பாவற்காய் எடுக்கலாமா? சிக்கன் எடுக்கலாமா? அதோ எந்த வகையிலும் சேராமல் இருக்கிறதே அந்த கூட்டு,அது என்ன? ம்..ம்…புடலங்காய் – வாக்குவாதங்களை கேட்க முடியும். பழக்கமாகிவிட்ட இந்த பழக்கம், இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மட்டும் – மிகவும் விசித்திரமாக இருக்கும். முதன் முதலில் சென்னை வந்து – என் அண்ணனுடன் – டி. நகர் சரவணபவனில் சாப்பிட சென்று, க்யூவில் நின்றது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

நான் பள்ளி படிக்கும் பொழுது – பதினோரம் வகுப்பு – தொண்டர் படை என்ற நாடகத்திற்கு இந்த -க்யூ- கருவைத்தான் எடுத்துக்கொண்டேன். என் நாடகத்தில் மக்கள் அனைவரும் ஒரே க்யூவில் நிற்பார்கள். ஆனால் வேறு வேறு காரணங்கள் சொல்லுவார்கள். வேலையில்லா திண்டாட்டத்தை, அரசுக்கு (சரத்குமார் இல்லை. அரசாங்கம்!) உணர்த்த (ஏதோ, அரசுக்கு இந்த விசயம் தெரியாமலே இருந்ததுபோல!) இளைஞர்கள் நகரின் நடுவே நீண்ட க்யூவில் நிற்பார்கள். அரசின் அடக்குமுறையால் அது புரட்சியாக மாறும். இப்படியாக காமடிக்கரு : கம்யூனிஸ்ட் கதையாக ஆனது. அந்த நாடகத்தில் விகடனில் வந்த கார்டூன் ஒன்று தான் மைய கதாப்பாத்திரம். விகடனில் வந்த ஜோக் அது. ஒரு வயதானவர் என் மகனைப் பார்த்தீங்களா? என் மகனைப் பார்த்தீங்களா? என்று கண்ணில் படும் நபர்களிடமெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பார். பொறுமையிழந்த ஒருவர், யாருயா இந்த ஆளோட மகன் என்று கேட்பார். அதற்கு இன்னொருவர், சும்மா இருய்யா. அந்த ஆளோட மகன் தான் இந்த ஊரு எம்.எல்.ஏ. என்பார்.

பிறகு ஒரு கதை: ஹீரோவும், அவனது தங்கையும், அவன் அம்மாவும் ஒரு குடும்பம். ஹீரோவின் பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி இருக்கிறார். பாட்டியின் வீட்டிற்கு, ஒரு அழகான பெண் விடுமுறையில் வருகிறார்.ஹீரோவின் தங்கையும், அந்த பெண்ணும் சிநேகிதிகளாகின்றனர். ஹீரோவின் நண்பர் கூட்டம் அவனை அந்த பெண்ணுடன் இணைத்து கேலி பேசுகின்றது. நாளடைவில் ஹீரோ, அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். அந்த பெண் நாளை ஊருக்கு செல்கிறது. இன்று ஹீரோ, தன் தங்கை, அம்மா, பாட்டி, அந்த பெண்ணுடனும் கோவிலுக்கு செல்கிறான். கோயிலின் ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு தேரின் இருளில், ஹீரோ தன் காதலை சொல்கிறான். குடும்பத்தில் அனைவரும் வந்து விட பதிலேதும் சொல்லாமல் அந்த பெண் சென்றுவிடுகிறாள்.

வருடங்கள் ஓடுகின்றன. ஹீரோ டெல்லியில் (ஆம். அப்பொழுதெல்லாம் அமெரிக்கா இவ்வளவு பேமசாக இல்லை.) நல்ல வேலையில் இருக்கின்றான். தங்கைக்கும் திருமணமாகிவிடுகிறது. திருவிழாவிற்கு ஊருக்கு வருகிறான். அந்த பெண்ணும் வந்திருக்கிறாள் தன் கணவனுடன். மறுநாள் கோவிலில், தனிமையில், அதே தேரின் இருளில் இருவரும் எதிர்பாராமல் (எதிர்பார்த்து?) சந்தித்துக்கொள்கின்றனர். அவள் ஒரு கனம் இவனை வெறித்துவிட்டு, “உனக்காக எத்தனை நாள் காத்திருந்தேன். நீ ஏன் வரவில்லை” என்கிறாள்.

(தொடரும்)

ஆயிரம் கால் இலக்கியம் : ஒரு ஆடு அசைபோடுகிறது (1)

1

என் தோழி ஒருவர் (பள்ளி, கல்லூரி முழுவதும் ஆங்கில வழி கல்வி பயின்றவர். பயின்று கொண்டிருப்பவர்), ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தான் தமிழ் நாவல்கள் (அல்லது தமிழ் இலக்கியம் சார்ந்த எதுவாயினும்), அதிகம் படிப்பதில்லை, ஏன் படிப்பதையே நிறுத்திவிட்டேன் என்றும் சொன்னார். காரணம் புரியாமல் ஏன் என்று விழித்த எனக்கு, பதிலேதும் கூறாமல், ‘என்னமோ பிடிப்பதில்லை. அதனால் படிப்பதில்லை’ என்றார்.

பிறகு அவரே, சிறிது நேரம் கழித்து, எனது விழிக்கு (அல்லது முழிக்கு) பதில் சொல்லும் விதமாக, காரணங்களை சொன்னார்.

அவர் வைத்த காரணங்களில், மிக முக்கியமான ஒன்று, தமிழில் பலதரப்பட்ட, பலவகையான தளங்கள், பின்புழம் (Background) இல்லையென்பதே. தளங்கள் என்றால், இன்னும் தெளிவாக எனக்கு புரியவைக்கும் பொருட்டு, Fiction, Science-Fiction, Fantasy, Historical-Fiction, Facts in Fiction, racing thriller (Like Prison escapes), horror,non-fiction, என்று வகைப்படுத்தினார். மேலும் தமிழில், எல்லோரும் ஒரே மாதிரி தான் எழுதுகிறார்கள், குறைந்தபட்சம் ஒரே மாதிரியான கதைக் கருவைத்தான் வைத்திருக்கிறார்கள் என்றார். புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டால், அனைத்து புத்தகமும் ஒரே ரகம் என்றார்.

lord of the rings, harry potter போல தமிழில் ஒரு fantasy இல்லாதது ஏன்? war of the worlds போன்ற science fiction னும், the seventh secret போன்ற சரித்திர புனைவு கதையோ, Da Vicni Code போன்ற Historical-fiction னும், the eleventh commandment, shantaram, code to zero போன்ற racing-thriller ரும், Jurassic Park, State Of Fear போன்ற நாவல்களும் தமிழில் ஏன் இல்லை என்பதே அவரது வாதம். பலதரப்பட்ட தளங்களுக்காக மட்டுமே அவர் இந்த நாவல்களை குறிப்பிட்டார். இதை விட நல்ல நாவல்கள் இருகின்றதென்பதே உண்மை.

பலதரப்பட்ட தளங்கள் இல்லை என்ற வாதத்தை ஒத்துக் கொள்ளலாம், ஆனால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. நாவல்களை நான் பொழுது போக்கிற்காக மட்டுமே படிக்கின்றவன் (கவனிக்க, இலக்கிய வளர்ச்சிக்காக அல்ல!), என்ற பொழுதிலும், எனக்கு கடந்த 10 வருடங்களாக (சில நேரங்களில்) பொழுது போகாமல் இருந்திருக்கிறது.

தவிர, இரு வேறு இலக்கிய தளங்களை ஒப்பிடுவதென்பதே தவறு. ஏனென்றால், அவர்களது (ஆங்கில) வாழ்க்கைத் தளம் வேறு, நமது வாழ்க்கைத் முறையே வேறு. அப்படியே எடுத்துக் கொண்டாலும், கிரேக்க மொழியில் இருக்கும், கற்பிதங்கள் (Myth)/ கதைகள் போன்றதொரு தன்மை ஆங்கிலத்தில் கூட இல்லை. ஆனால் அதற்கினையான, ஏன் அதற்கும் மேலும், கற்பிதங்களும்/கதைகளும் தமிழில் உண்டு. ஆங்கில இலக்கியத்தை மட்டும் (கிரேக்க/இலத்தின்/ரோமானிய இலக்கியங்களை தவிர்த்து) இயங்க சொன்னால், பல தளங்களை அங்கே பார்பதென்பது அரிதாகிவிடும். இலக்கியம் ஒன்ற ஒன்றே இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

இங்கே நான் இரு தளங்களை, நான் ஒப்பிட்டு பார்க்க நினைக்கவில்லை. ஏன், ஒப்பிட்டு பார்க்கவும் முடியாது. ஏனென்றால், இரண்டு விசயங்களை ஒப்பிட வேண்டுமென்றால், இரண்டு விசயங்களையும் அறிந்திருக்க வேண்டும். ஒரு விசயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றொரு விசயம் தெரியாமல் (அல்லது அரை குறையாக தெரிந்தோ) வாதிடுவது அல்லது ஒப்பிடுவது என்பது, வீண் சச்சரவிற்கே வழிவகுக்கும். எனக்கு இரு விசயமும் முழுவதுமாக தெரியாது (அப்படி தெரிந்தவர்கள் யாரவது இருப்பார்களா என்பதும் சந்தேகமே!), என்பது என் பலவீனம். எனவே இதுவரை நான் படித்த சிறுகதைகள்/கதைகள்/கவிதைகள்/கட்டுரைகள்/நாவல்கள் போன்றவற்றைப் பற்றி மட்டுமே எழுதலாம் என்று நினைக்கிறேன். விமர்சனம் அல்ல. என் பார்வை, அல்லது நான் அறிந்து கொண்டது என்று வைத்துக் கொள்ளலாம். பார்வைகள் வேறுபடும் என்பது விதி.

என் இலக்கிய ஆர்வம் (அல்லது பொழுதைப் போக்குவது) என் அம்மாவிற்கு, நூலகத்திலிருந்து, ரமணிச்சந்திரனையும், சாண்டில்யனையும் எடுத்துவருவதிலிருந்து ஆரம்பித்தது. நான் சாண்டில்யன் அவ்வளவாக படித்ததில்லை (கடல் புறா மட்டுமே படித்திருக்கிறேன்) ஆனால் ரமணிச்சந்திரன் தான் நான் முதன் முதலாக படிக்க ஆரம்பித்தது. நான் படிக்க ஆரம்பித்த பொழுது (பாட புத்தகம் அல்லாத புத்தகங்கள்), குமுதம் ஒரு ஆபாசப் பத்திரிக்கையாகவே கருதப்பட்டது. இன்றளவும் அது அப்படியே இருக்கிறது. சமூகம் மட்டுமே முன்னேற்றம் கண்டுவிட்டது.

ஆனந்த விகடன், சினிமா செய்திகளுக்கே முன்னுரிமை தருகிறது என்றாலும், அதில் சில முக்கிய நல்ல விசயங்கள், அன்றிலிருந்து இருந்து வந்திருக்கின்றன. ஹாய் மதன் ஒரு எடுத்துக்காட்டு. இருந்தும், மதன் சில வேளைகளில் ‘சிம்ரன்/திரிஷா/சினேகா’ இவர்களில் யார் சிரிப்பழகி என்ற சமூக பொறுப்புள்ள சில கேள்விகளுக்கும் பதில் அளித்து மக்களின் தீர்க்க முடியாத சந்தேகங்களை தீர்த்து வைத்திருக்கிறார். நான் சில சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன், யார் இந்த மாதிரி கேள்விகளை, எழுதி அனுப்புகிறார்கள்? ஏன் அவர்களுக்கு இது போன்றொரு சந்தேகம் வந்ததென்று. ஆனாலும், மதன் ஒரு அளவிடமுடியாத “அறிவுக் களஞ்சியம்” என்பதை நான் சொல்லத்தேவையில்லை. நான் பார்த்து வியக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.

விகடனில் வரும் தொடர்கதைகள் மிகப் பிரபலம். தொடர்கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். வாரா வாரம், இந்த வாரம் என்ன நடந்திருக்கும், என்ன நடக்கும் என்று ஆர்வத்தோடு படிக்கும் அழகே தனிதான். அதில் தான் விறுவிறுப்பு. ஒரு நாவலை எடுத்து ஒரே மூச்சில் படித்து வைப்பதைக் காட்டிலும் (நான் ஒரே மூச்சில் முதன் முறையாக படித்த நாவல் ‘காஸனோவா 99’ என்ற ‘என்டமூரிவீரெந்திரநாத்‘ கன்னடத்தில் எழுதி அதை ‘சுசீலா கனகதுர்கா’ தமிழில் மொழிபெயர்த்தது), வாரம் முழுவதும் காத்திருந்து, புதன் கிழமை வந்தவுடன் (விகடன் முன்பெல்லாம், எனக்கு தெரிந்த “முன்பு”, புதன்கிழமைதான் வரும்), வீட்டிற்கு வந்தவுடன், கதையைப் படிப்பதென்பது தனி சுகம் தான். இன்றும் தினத்தந்தியில் வரும் கண்ணித்தீவையே வீடாமல் படிப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, சிறுவர்மலரில், கார்ட்டூன் தொடர்களை (பெரும்பாலும் சரித்திர கதைகளே. கடைசிப்பக்கத்தில் பேய் பள்ளியை விடாமல் பல வாரங்கள் படித்துக்கொண்டு வந்தது நினைவிலிருக்கிறது) விரும்பி படித்திருக்கிறோம். விடுமுறை நாட்களில், அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் பேப்பர் வாங்க மாட்டார்கள், பக்கத்து வீட்டில் சென்று தான் “கடன்” வாங்க வேண்டும். அதுவும் உடனே கிடைக்காது. அதெப்படி கிடைக்கும், நமக்கா வாங்குகிறார்கள்? ஆனாலும், வெள்ளிக்கிழமை ஆகி விட்டால் மனது அங்கேயே இருக்கும், அந்த பக்கத்து வீட்டு ‘அவ்வா’ காலை 11 மணிக்குத்தான் தருவார்கள். அதுவரை பொறுத்திரு மனோகரா. அதிலும் பேப்பர் கடன் வாங்கும் பொழுது, சிறுவர்மலர் கூடவே வராது, தனியாக கேட்டுத்தான் வாங்கவேண்டும். ஜாக்கிரதை. சில சமயங்களில் அவ்வாவின் பேத்தி (எங்களை விட குறைந்த வயது தான்) கொடுக்க கூடாதென்று அடம் பன்னும். எங்களுக்கு கோபம் கோபமாக வரும். கொடுத்தால் தான் என்ன? கடித்தா தின்னப் போகிறோம்! ஆனாலும் பேத்தி அழகாகவே இருக்கும். ச்சோ ச்சுவீட்.

இப்பொழுது வரை, கடைசியாக வந்த கவியரசு வைரமுத்துவின்கருவாச்சி காவியம்” வரை நான் தொடர்கதைகளின் ரசிகன். கருவாச்சி காவியம், மிகச் சிறந்த கதை. கதை சாதரணக்கதையாக இருந்தாலும், வைரமுத்துவின் வைர வரிகள், சில சமயங்களில் முல்லென நெஞ்சில் தைக்கும், சில இடங்களில் ரோஜாவென தடவிச்செல்லும், சில சமயங்களில் வெங்காயமென (உதாரணத்திற்கு மன்னிக்கவும்) கண்களில் நீர் வரவழைக்கும். வாழ்க்கையை முழுவதுமாக அதன் வைராக்கியத்தோடு சொன்னார் வைரமுத்து. முன்பெல்லாம் ஹாய் மதனையே நான் விகடனில் முதலில் படிப்பேன், கருவாச்சி காவியம் வந்து கொண்டிருந்த பொழுது, அதுதான் முதலில். இப்பொழுது, ஓ பக்கங்கள்.

முன்பெல்லாம் தொடர்கதைகள் 2 அல்லது 3 இருக்கும், குமுதத்திலும் சரி, விகடனிலும் சரி. ஆனால் இப்பொழுது ஒன்று வருவதே அபூர்வமாகிவிட்டது. மக்கள் ஒரு வாரம் காத்திருத்தலை விரும்பவில்லையா என்ன? அப்படியெல்லாம் இல்லை, நாடகங்களை, இம்மி இம்மியாக வருடந்தோரும், ஏன் ஒரே நாடகத்தை வாழ்க்கை முழுவதும் கூட நாங்கள் பார்க்கிறபொழுது, தொடர்கதைகளை படிக்க மாட்டோமா என்ன? (நாடகங்களைப் பற்றி பிறிதொருமுறை பேசுவோம்)

இப்பொழுது, சில முக்கிய இலக்கியவாதிகள் (ஞாநி, ஜெயமோகன், அ.முத்துலிங்கம், எஸ்.ராமகிருஷ்னன், சாருநிவேதிதா(!!). சாருநிவேதிதாவின் இலக்கிய தொண்டு பின்னால் விவரிக்கப்படுகிறது) சில பொதுஜன/வெகுஜன/இலக்கிய இதழ்களில் தங்கள் பதிவுகளை (கிட்டத்தட்ட blogging தான்) நிகழ்த்தி வருகின்றனர். கவிஞர் வாலியின் ‘வாரந்தோரும் வாலி’ யும் பதிவுதான். வைரமுத்துவின் “கொஞ்சம் தேனீர் நிறைய வானம்” கூட ஒரு கவிதைப் பதிவே. வாரந்தோரும் blog. இந்த வகையாராக்களுக்கு, மதன் தான் முன்னோடி என்று நினைக்கிறேன். அல்லது சுஜாதாவாகவோகூட இருக்ககூடும். “வந்தார்கள் வென்றார்கள்” அல்லது “கற்றதும் பெற்றதும்” முன்னோடியாக இருக்கக்கூடும். கற்றதும் பெற்றதும் விகடனில் மறுபடியும் வரத்தொடங்கியிருக்கிறது சந்தோசம். சுஜாதாவின் பகுதியில் ‘எ.பி.க’ எனக்கு மிகவும் பிடிக்கும். கற்றதும் பெற்றதும் ஒரு perfect blogging.

எஸ்.ராமகிருஷ்னனின் முதலில் “துணையெழுத்து“, பின் “கதாவிலாசம்“, பின் இப்பொழுது “தேசாந்தரி” மிக நன்றாக இருந்தன. இருக்கின்றது. கதாவிலாசம் மிக மிக அருமையான ஒரு தொடர். பின் விகடன் பிரசுரத்தில் புத்தகமாக வெளிவந்தது. கிட்டத்தட்ட எல்லோர் வீட்டிலேயும் இருக்கவேண்டிய புத்தகம் அது என்று நினைக்கிறேன். கதைகளின் விலாசம் தான் அது. தலைப்பிற்கே பலமுறை அவரைப் பாராட்டலாம். பல எழுத்தாளர்களை (மௌனி, ஆ.மாதவன்), பல கதைகளை எனக்கு அறிமுகப் படுத்தியது கதாவிலாசம் தான். கதைகளை விடவும், கதைகளுக்கு முன், எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லும், அந்தக் கதைக்கான, பொருத்தமான ஒரு சம்பவம், மிக அழகாக இருக்கும். நெகிழ்ச்சியாகவும் இருக்கும். அதில் என் மனதில் நின்ற கதையும்,முன்னுரையும், புலிவேசம் என்ற கதையினுடையது. இப்பொழுது தேசாந்தரியில் கங்கை கொண்ட சோழபுரத்தை அழகாக விவரித்திருந்தார். “கோயிலில் நுழைந்தவுடன் காலத்தின் கண்ணுக்குத் தெரியாத பல கைகள் நம்மை வரவேற்பது போலிருந்தது” என்பது அவர் வடிக்கும் வார்த்தை சிற்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. வெயிலை ஏன் அவர் எப்பொழுதும் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியம். “வெயில் நீண்டுகொண்டே போனது” என்றோ அல்லது “வெயில் கால்களை பிடித்து அவனுள்ளே ஏறிக்கொண்டிருந்ததென்றோ” அவர் எப்பொழுதும் வெயிலை குறிப்பிடுவார். அவரது “நெடுங்குருதி“யிலும் (பெயரைப் போலவே மிக நீண்ட நாவல்) ஆங்காங்கே வெயிலைக் காணலாம். முஸ்தாபாவில் ‘கதாவிலாசம்’ புத்தகம் பார்த்தேன், 19$, அப்படியே வைத்துவிட்டேன். மதுரை செல்லும் பொழுது, இலக்கிய பண்னையில் வாங்கிக் கொள்ளாலம்.

பின் ஜெயமோகனின்வாழ்விலே ஒரு முறை” (குமுதத்தில் வந்ததென்று நினைக்கிறேன்), ஞானியின் “ஓ பக்கங்கள்” (நல்ல informative வாக இருக்கின்றது. சென்ற வாரம் வந்த வீட்டு மனை விற்பது தொடர்பான ஒன்று நன்றாக இருந்தது. இட ஒதுக்கீடு தொடர்பான அவரது புதிய வாதம் சிந்தித்தற்குரியது) சாருநிவேதிதாவின் “கோணல்” பக்கங்கள் (தலைப்பு பொருத்தம் தான்), ப்ரியா கல்யாணராமனின்கோயில்கள்” தொடர்பான தொடர் (தலைப்பு எனக்கு சரியாக ஞாபகம் இல்லை) போன்றவையும் நன்றாகவே இருந்தன. ப்ரியா கல்யாணராமன் “ஜாக்கிரதை வயது பதினாறு” என்ற தொடர்கதையை முடித்தவுடன் கோயில்கள் பற்றி எழுதினார் என்று நினைக்கிறேன். பாவவிமோசனம்?

“ஜாக்கிரதை வயது 16” ஹிட் தொடர் தான். இதை ஆதரித்தவர்கள் (மக்கள் தான்) ஏன் “பாய்ஸ்” திரைப்படத்தை ஆதரிக்கவில்லை என்பது எனக்கு இன்றளவும் புரியாத ஒன்றாக இருக்கிறது.

(தொடரும்)