Bhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்

போப்பால் பேரழிவைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு ஆனால் அறிந்ததில்லை. அதைப் பற்றி படித்ததில்லை. படிக்கும் ஆர்வமும் இருந்ததில்லை. அது ஏதோ மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றே நினைத்திருந்தேன். ஒரு பேரழிவு எப்படிப்பட்டதாயிருக்கும் என்று யோசிக்கத்தெரியவில்லை. உண்மையில் பேரழிவுகள் உலகம்தோரும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால் பேரழிவுகளுக்குப் பிறகு ஒரு அரசு அந்த அழிவில் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி அந்த அழிவிலிருந்து வெளிக்கொணர்ந்தது என்பது மிக முக்கியம்.

ஸ்வரூப்பா முகர்ஜியின் புத்தகத்தை எதேச்சையாக சிங்கப்பூர் நூலகத்தில் பார்த்து அதை எடுத்து படிக்கும் வரை போப்பால் பேரழிவு என்னுள் பெரிய அதிர்வை உண்டுபண்ணும் என்று நான் நினைக்கவில்லை. அதைத் தமிழில் எழுதவேண்டும் என்கிற எண்ணமும் அதற்குப்பிறகுதான் தோன்றியது. மொழிபெயர்ப்பு எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் போப்பால் பேரழிவைப்பற்றி நானே எழுதும் அளவுக்கு கள ஆய்வு செய்ய எனக்கு நேரம் கிடையாது. அலுவலகம் முடித்து வந்த பிறகு கிடைக்கும் சொற்ப நேரத்தில் எழுதவேண்டும், மேலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை.

சில கதைகளின் கரு மனதில் தோன்றிவிடும். ஆனால் அது வளர்ந்து கதையாக மலர வெகு நாட்களாகும். சில சமயம் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் கதையாக வளர்ந்து விட்ட பின் அது மண்டைக்குள் தங்காது. அது வெளி வந்தே தீரவேண்டும். எனது வடமிழந்த தேர் சிறுகதை இவ்வகையைச் சேர்ந்தது. இந்தக்கதையின் கரு எனக்கு ஆறு வருடங்களுக்கு முன் தெரியும். நான் பாரீசுக்கு அலுவலகப் பணி நிமித்தமாக சென்றிருந்த பொழுது, அலுவலகத்திலிருந்து மாலை கடுங்குளிரில் நடந்து வந்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில் முழுக் கதையாக உருமாறியது. அதற்குப்பின் அதை என்னுள் வைத்திருக்க இயலவில்லை. கடும்பணிச்சுமைக்கு மத்தியிலும் பத்து நாட்கள் நிதமும் இரவு ஒருமணி நேரம் செலவழித்து கதையை எழுதிமுடித்தேன்.

அப்படி ஒரு நிலைக்கு போப்பால் பேரழிவைப் படித்தப் பிறகு நான் தள்ளப்பட்டேன். சரி வேறு வழியில்லை – மொழிபெயர்ப்பே சாலச்சிறந்தது என்கிற முடிவுக்கு வந்தேன். முதல் அத்தியாயம் எழுதியது 2006ல். கடைசி அத்தியாயம் எழுதியது 2009ல். மூன்று வருடங்கள் எழுதியிருக்கிறேன் – 🙂 என்னுடைய மிகச்சிறந்த எழுத்து இல்லை இது. ஆனால் போப்பால் பேரழிவைப்பற்றியும் அதற்குப்பின்னால் இருந்த வெளிநாட்டு கார்ப்பரேட் பண முதலைகளையும் அவர்களுக்கு பாதுகாப்பளித்த உள்ளூர் அரசியல்வாதிகளையும் பற்றிய சிறு தெளிவு இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு உண்டாக்கினால் அது போதும் எனக்கு.

இதன் மின் புத்தகம்:

https://dl.dropboxusercontent.com/u/91280476/Bhopal%20Gas%20Tragedy.pdf

 

முத்து. மே 18 2014.

 

யார் முழித்திருக்க போகிறார்கள் – 7

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மொத்தத்தில் இது எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. பன்னாட்டு நிறுவனங்களின் அமைப்பு, மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்ட போதும், அவற்றை குற்றம் சுமத்தமுடியாததாய் இருப்பதை இந்த வழக்கு அப்பட்டமாய் உலகுக்கு உணர்த்தியது.

UCC பழியை சராசரியாக பிரித்துக்கொடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. கடைசியில், நடந்து முடிந்த துயரத்துக்கு UCC காரணமாக இருந்தால், அதே அளவு பழி மத்தியபிரதேச அரசுக்கும் மாநில அரசுக்கும் போய் சேரவேண்டும் என்று UCC கணக்கிட்டது. பழியை பிரித்துக்கொள்வது புத்திசாலித்தனம். இழப்பீட்டுத் தொகையையும் கணிசமாக குறைக்கலாமே!

உதாரணத்துக்கு:

  1. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய சட்டதிட்டங்கள் ஏன் அவற்றை கட்டுப்படுத்தவில்லை?
  2. மிக நுணுக்கமான தொழில் நுட்ப திட்டங்கள் கொடுக்கப்படாமல் இருந்த பொழுதும் ஏன் MIC தொழிற்சாலையை நிறுவ அரசு சம்மதித்தது?
  3. லைசன்ஸ் ஏன் வழங்கப்பட்டது?
  4. Design Transfer Agreement என்ற ஒன்று இருக்கிறதே, அது எப்படி செயற்திட்டத்திற்கு மட்டும் UCCஐ பொறுப்பாக்கிவிட்டு, அதன் பின்விளைவுகளுக்கு பொறுப்பாக்காமல் விட்டது?
  5. மருத்துவ உதவி, பொது அறிவிப்பு முறை மற்றும் மக்களை வெளியேற்றும் திட்டங்கள் ஏன் முதன்மை செயற்திட்டத்தோடு இணைக்கப்படவில்லை?
  6. தொழிற்சாலையை பரிசோதிக்க வந்த அதிகாரிகள், UCCயின் பிரதிநிதிகள் சொன்ன தகவல்களை, ஏன் அப்படியே முழுவதுமாக நம்பினார்கள்?
  7. ஒரு பேராபத்தை விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைக்கு பாதுகாப்பு அம்சங்கள் கண்டிப்பாக தேவையான ஒன்று தானே? அதை ஏன் இந்திய அதிகாரிகள் சரிவர கண்காணிக்கவில்லை?

முக்கியமாக, அக்டோபர் 1984இல், தொழிற்சாலைக்கு மிக அருகில், அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி குடியேறியவர்களுக்கு, சட்டபூர்வமாக பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை சட்டமன்றம் நிறைவேற்றியது. தொழிற்சாலை வந்தபிறகு, மிகுந்த ஆபத்தான பகுதியாக மாறிவிட்ட இந்த குடியிருப்புகளை காலிசெய்ய முயலாமல், அதற்கு எதிர்மறையாக, அரசு அவர்களுக்கு பட்டாக்கள் வழங்கியது ஏன்?

போப்பால் ஆக்ட் இழப்பீட்டை பெறுவதற்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்த போதும், அரசாங்கத்தின் அசட்டையான செயல்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களை பாதித்தது. இறந்தவர்களின் புள்ளிவிபரங்கள், மற்றும் காயமடைந்தவர்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் அவர்களது காயங்களின் முழு தன்மை போன்றவற்றை சேகரிக்கும் வேலையை அரசாங்கம் சரிவரச்செய்யவில்லை.ஆம், அரசாங்கம் தன் வேலையை, பாதிப்பு ஏற்படும் முன்னரும் சரியாக செய்யவில்லை, பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் சரியாக செய்யவில்லை.

இந்தியாவின் பெட்டிசன், போப்பாலில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் இழப்பின் மிகச்சரியான அளவை சுட்டிக்காட்டத் தவறிவிட்டது, என்பதை UCC உடனடியாக நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியது. விஷவாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிக்கையின் வெளியிடப்பட்ட எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இறந்தவர்களின் எண்ணிக்கை : 1,760. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 30,000 – 40,000. வழக்கின் அனைத்து விசாரிப்புகளின் போதும் இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. சுப்ரீம் கோர்ட் 1989இல் இறுதி தீர்ப்பு வழங்கியவரை இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. பாதிக்கப்பட்டவர்களில் மிகச்சிறய -மிகமிகச்சிறிய- விழுக்காட்டினரே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர். எனவே, விடுபட்ட எஞ்சிய மற்ற மக்களுக்கு எந்த ஒரு தீர்ப்பையும் நீதிமன்றம் கொடுக்க இயலவில்லை. சொல்லுங்கள். ஒழுங்காக கணக்கெடுப்பது அவ்வளவு கடினமான வேலையா? அதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய கணக்கு?

இந்திய பெட்டிசனின் மிகப்பெரிய பலவீனம் இது. சுப்ரீம் கோர்ட் ஒரு மிகக்குறைவான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு வழிவகை செய்ததோடு மட்டுமில்லாது,இழப்பீட்டுத் தொகை மட்டுமே போதும் வேறு எந்த தண்டனையும் தேவையில்லை என்கிற மனப்போக்கு உருவாக காரணமாகவும் இருந்தது.UCC தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் சரமாரியாக மறுத்தது. அது சொன்ன காரணங்கள் : குற்றங்கள் தெளிவாக இல்லை. புள்ளிவிபரங்கள் தவறு.

“தான் குற்றம் செய்ததை ஒத்துக்கொள்ளக்கூடாது” என்பதில் UCC கவனமாக இருந்தது. நடந்த பேரிடருக்கு தண்டனையாக இழப்பீட்டுத்தொகையைக் கொடுக்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தது. ஆம். அது குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை – மிக குறைந்த இழப்பீட்டுத்தொகை – வழங்கத்தயாராக இருந்தது, ஆனால் ஏற்பட்ட இழப்புக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்க தயாராக இல்லை.

இந்தியாவும் தன்னால் இந்த வழக்கில் ஜெயிக்க இயலாது என்பதையே உலகுக்கு காட்ட விரும்பியது.

ஒன்று: பாதிக்கப்பட்டவர்கள் துன்பத்தில் உலன்று கொண்டிருக்கும் போது, அவர்கள் சிறிது சிறிதாக செத்துக்கொண்டிருக்கும் போது, இந்த வழக்கை முடிக்காமல் UCCயுடன் சண்டையிட்டுக்கொண்டேயிருப்பது.

இரண்டு: UCC கொடுக்க இருக்கும் இழப்பீட்டுத் தொகையையும், நிபந்தனைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஏப்ரல் 4 1987

நியூயார்க்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முழுதாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட பொழுதும் UCC இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. ஏப்ரல் 4 1987 அன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி M.W. Deo, UCCஐ இடைக்கால இணக்க நிவாரணமாக 270 மில்லியன் டாலர் வழங்க உத்தரவிட்டது.நீதிபதியின் இந்த யோசனை, ஒரு தனிநபர் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக, தொடர்ந்த வழக்கின் எதிரொலியே ஆகும். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில், இறுதி இழப்பீட்டுத் தொகை வரும் வரையில், உதவியாக இருக்கட்டுமே என்ற எண்ணம் தான்.

துரதிர்ஷ்டவசமாக சில சட்ட சிக்கல்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சனையை உண்டுபண்ணின. நாடகத்தின் அடுத்த காட்சி முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜபல்பூர் நீதிமன்றத்துக்கு இடம்மாறியது. அங்கே மீண்டும் சட்ட பிரச்சனைகள் அலசப்பட்டன, எப்பொழுதும் இருக்கும் நீதிமன்றத்தின் காலதாமதங்களும் உடன் சேர்ந்துகொண்டன. கடைசியாக UCC எந்தவொரு இடைக்கால நிவாரணத்தொகையையும் வழங்க மறுத்தது.

ஒரு பேரிடர் இயற்கையால் (அல்லது கடவுளால்!!) ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் நிவாரணத்தொகை பல திசைகளிலிருந்தும் இருந்து குவிந்தவண்ணம் இருக்கிறது. ஆனால் அதே பேரிடர் மனிதானால் ஏற்பட்டது என்றால், அனைத்து திசைகளையும் கதவுகளையும் அரசியல் அடைத்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக சட்டம் மற்றும் அரசியல் என்னும் கடினமான வலையில் சிக்கிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது தொலைதூரத்தில் தெரியும் காணல் நீராகவே இருந்தது.

பிப்ரவரி 14 1989

குரூரமான இந்த சட்டத்தின் யுத்தம், நான்கு வருடங்கள் நான்கு வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்தன. கடைசியாக பிப்ரவரி 14 1989 அன்று இந்த நாடக அரங்கின் திரை கடைசியாக இறக்கப்பட்டது, நாடகம் முடிந்தது. இரு தரப்பினரும் நீதிமன்றம் விதித்த இழப்பீட்டுத்தொகையை ஒத்துக்கொண்டன. அதற்குள்ளாக அரங்கு இந்தியாவின் மிக உயர்ந்த சட்டகோயிலாக கருதப்படும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாறியிருந்தது. UCC 470 மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. போப்பால் மாவட்ட நீதிமன்றத்தில் முதன்முதலில் 1986இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டபொழுது இழப்பீட்டுத் தொகையாக கோரப்பட்டது எவ்வளவு தெரியுமா? 3 பில்லியன் டாலர். சுப்ரிம் கோர்ட் இழப்பீட்டுத் தொகையை கனிசமாக குறைத்திருந்தது.

அதிர்ச்சி அலைகள் ஏமாற்றத்துடன் நாட்டை சுற்றி சுற்றி வந்தன. கூச்சலும் சத்தமும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் சத்தமாக கேட்டது. கண்டனப் பேரணிகள் போப்பாலிலும் டெல்லியிலும் நடந்தன. இழப்பீட்டுத் தொகை ஒரு துரோகம். இரண்டாவது விபத்து என்று வர்ணிக்கப்பட்டது. இந்த மாதிரியான தேவையில்லாத சமரச உடன்படிக்கைக்கு என்ன காரணம்?

போப்பால் வழக்கு இரண்டும் காரணிகளைச் சார்ந்திருந்தது – நஷ்டயீடு மற்றும் பொறுப்பு. வேறு வார்த்தைகளில் சொல்லுவதாக இருந்தால், எவ்வளவு பணம் இந்த பேரிடரை ஈடு செய்யும்? நடந்த விபத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

நஷடயீடும், பொறுப்பும் இரண்டு வெவ்வேறு காரணிகள் அல்ல. ஒன்றை ஒன்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த விதிக்கு எதிர்மாறாக இழப்பீட்டு தொகை மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டும் முற்றிலும் வேறு வேறு என்பதைத் தான் தீர்ப்பு நிரூபித்தது. UCC ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கத்தயார், ஆனால் ஒரு நிபந்தனை, UCCக்கு எதிரான அனைத்து சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தள்ளூபடி செய்யவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அப்படி தள்ளுபடி செய்யவில்லை என்றால் UCC நஷ்டயீடு வழங்காது. நஷ்ட ஈடு வழங்கினால், குற்றம் உறுதிப்பட்டது என்பது தானே அர்த்தம்? அதென்ன நஷ்ட ஈடு வழங்குவேன், பொறுப்பு ஏற்க மாட்டேன் என்பது?

UCC ஆரம்பத்திலிருந்தே ஒரு நஷ்டயீட்டுத் தொகை வழங்குவதில் ஆர்வமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால் அது அவர்களின் தந்திரங்களில் ஒன்று. இந்தியா நியூயார்க்கில் முதன் முதலில் வழக்கு பதிவு செய்ததற்கு முன்பே, UCC ரூபாய். 300 கோடி – அறுபது கோடியை உடனடியாக வழங்குவது என்றும், அடுத்த முப்பது வருடத்திற்கு 8 கோடி வருடா வருடம் வழங்குவது என்றும்- தருவதற்கு தயாராக இருந்தது. நீதிமன்றத்துக்கு வெளியே நஷ்டயீடு கொடுத்து வழக்கை முடித்துவிடுவதற்கான முயற்சி எப்பொழுதும் நடந்துவந்தேயிருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் வழக்கு முடிவுக்கு வந்தபொழுது, UCC தான் ஜெயித்தது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் விபத்துக்கு அது எந்தவகையிலும் பொறுப்பேற்கவில்லையே!

இந்த வழக்கை அமெரிக்காவின் புகழ் பெற்ற மற்றொரு வழக்குடன் ஒப்பிடலாம். எக்ஸானுக்கு (Exxon) சொந்தமான எண்ணெய்க் கப்பல், கடலில் 10 மில்லியன் கேலன் எண்ணெய் சிந்திய வழக்கு அது. இது நடந்தது 1989, இடம் அலாஸ்கா. இந்த விபத்தில் யாரும் உயிரிலக்கவில்லை, ஆனால் எக்ஸான் 5 பில்லியன் டால்ர்களை இழப்பீடாக வழங்கியது. கணக்கிட்டால் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நீர்நாய்க்கும் 940$ வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் விஷ வாயுவால் வாழ்க்கை முழுவதற்கும் ஊணமாக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா? ஒவ்வொருவருக்கும் 500$.

அமெரிக்க நீர்நாயிலும் கேவலமானவனா இந்தியன்?

(தொடரும்)

யார் முழித்திருக்க போகிறார்கள் – 6

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மே 12 1986

மே 12 1986 அன்று யூனியன் கார்பைடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீதிபதி ஜான் F கீனன் (John F Keenan), வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். ஆனால், வழக்கை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க முடியாது என்ற அவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, வழக்கை இந்தியாவுக்கு மாற்றுமாறு தீர்ப்பு வழங்கினார். மேலோட்டமாக பார்க்கும் போது, நீதிமன்றம் இந்தியாவிற்கு சாதமாக பாரபட்சமாக நடந்து கொண்டது போல் தெரியும். பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு சரியான நீதி வாங்கித்தர இந்தியாவுக்கு இது சரியான சந்தர்ப்பமாக அமையும் என்றும் நீதிபதி கூறினார். இது ஒருவகையில் UCCக்கு சாதகமே. வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் வாழ்க்கைத்தரம் தாழ்ந்திருப்பதால், இந்திய நீதிமன்றம் வழங்கும் பாதிப்பிற்கான இழப்பிடு -அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது- மிகவும் குறைவாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

நீதிபதி கீனனின் தீர்ப்பு இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திராமல், தாமே ஒரு இழப்பீட்டு தொகைக்கு, பேச்சுவார்த்தையின் மூலம் வந்தடைவதற்கு இந்த தீர்ப்பு அடித்தளமாக அமைந்தது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம்: UCCயின் அமெரிக்க அலுவலகத்தின் மேல் குற்றம் சுமத்தி நிரூபிப்பது மிகவும் கடினம். நடந்த பேரிழப்புக்கு UCIL தான் காரணம் ஏனென்றால் UCIL, முற்றிலும் இந்தியர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்றார்கள். UCILஇன் மொத்த தொழிலாளர்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காட்டினருக்கே அமெரிக்காவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், UCCக்கு UCILஇன் மீது முழுக்கட்டுப்பாடு இருந்தாலும், அது இந்தியாவின் சட்டதிட்டத்துக் கட்டுப்பட்டதே என்றும் அவர்கள் கூறினார்கள்.

எனவே பேச்சுவார்த்தையே மிக வேகமான ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற ஒரு பிம்பம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கு இடையே சுமூகமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு நீதிமன்றம் போராடியிருக்கிறது என்று நீதிபதி கூறினார். ஆனால், என்ன ஆனாலும், UCC, 350 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒரு பைசா கூட கொடுக்கத் தயாராக இல்லை என்பதை அவர் கூறவில்லை. அது என்ன 350 மில்லியன் டாலர் கணக்கு, வேறொன்றுமில்லை, அது UCCக்கு கிடைக்கும் இன்சூரன்ஸ் தொகை. ஒரு செட்டில்மெண்ட் தொகை மட்டும் தானா என்ற கோஷம் யாராலும் எங்கும் எழுப்பப்படவேயில்லை. நீதி என்ற வார்த்தை சிறிது சிறிதாக பின்னுக்கு தள்ளப்பட்டு மறக்கடிக்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே, இந்த போப்பால் வழக்கில், ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் இன்னொரு நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை எப்படி கணக்கிடமுடியும், என்ற ஆட்சேபத்திற்குறிய வாதம் இருந்துவந்தது. இந்தியா ஒரு ஏழை நாடாக இருப்பதால், இங்கு வாழ்க்கைத் தரம்; சொத்து; வளம்; உடல்நலம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விசயங்கள்; கண்டிப்பாக மிகுந்த வேறுபாட்டுடன் -அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது- இருக்கும். “இந்த வேறுபாடுகளையெல்லாம் மீறி நாம் நமது வாழ்க்கைத்தரம் மற்றும் நமக்கிருக்கும் கொள்கைகளை அவர்கள் மீது திணிக்கவேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி.

ஆனால் இந்த வேறுபாடுகளை மனதில் கொண்டுதான் UCC போப்பாலில் பாதுகாப்பு வியூகத்தை கவனக்குறைவாக தரம் குறைந்ததாக அமைத்ததா? ஆனால் இவ்வாறான கேள்வி எழும் என்பதை நீதிபதி நன்கு உணர்ந்திருந்தவர் போல ,”இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலை மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை இந்தியா உணர்ந்திருந்தும் இது கொடுக்கும் வருவாய் அவர்களுக்கு தேவையானதாக இருந்த பட்சத்திலே அவர்கள் இந்த தொழிற்சாலையை நிறுவ ஒப்புக்கொண்டார்கள்” என்றார். அவர் சொன்னதற்கான அர்த்தம் என்னவென்றால்: “வளர்ந்து வரும் நாடான இந்தியா, ஒரு வல்லரசின் ஆபத்தான் தொழில்நுட்பத்தை அரவணைத்துக்கொள்ள தயாராக இருக்கும் பட்சத்தில், அந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும் இழப்பிற்கும் இந்தியாவே பொறுப்பு ஆகும்

இந்த தீர்ப்பின் அதிர்ச்சியான் விசயம் என்னவென்றால், தீர்ப்பு UCCயின் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஆதராவாக இருந்தது என்பதே. ஆனால் உலக நாடுகளின் துணையுடன் உலகநாடுகளுக்கு எல்லாம் ஏற்படவிருக்கும் ஒரு பொதுப்பிரச்சனையை மனதில் கொண்டு இந்தியா முன் வைத்த வாதம் கண்டுகொள்ளப்படவில்லை. நீதிபதி இந்த பிரச்சனையை ஒரு தனிப்பட்ட கம்பெனியின் பிரச்சனையாக மட்டுமே அனுகினார். இது மொத்த மனித இனத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொதுபிரச்சனையாக அவர் அறிய தவறினார்.

தீடிரென்று, இழப்பின் தீவிரமும் எண்ணிக்கையும், மிக அதிகமாக இருந்த பொழுதிலும், போப்பால் பிரச்சனை ஒரு உள்ளூர் பிரச்சனையாக மாறிப்போனது. இனிமேல் அந்த கம்பெனியாச்சு மக்களாச்சு என்றே எல்லோரும் நினைத்தனர். உலகின் மிகப் பயங்கரமான ஒரு பேரிடர், உலகமக்களையெல்லம் பாதிக்கக்கூடிய பின்விளைவுகளைக் கொண்ட பேரிடர், உலகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள், பல்லாயிரம் மக்களை பலிவாங்கியும், இன்னும் பல்லாயிரம் மக்களை பாதித்திருக்கும் இந்தப் பேரிடர், அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகத்தின் முன் தனது முக்கியத்துவத்தை இழந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அமெரிக்க நீதிபதியின் பார்வையில், வர்த்தகம் மனித உரிமையை வென்றுவிட்டது.

ஏழைக்கு மனித உரிமையாவது? மண்ணாங்கட்டியாவது?!

ஹமிதியா (Hamidia) மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சத்பதி (Dr.A.Satpathy, forensic expert) கையில் பிடித்திருக்கும் இந்த பெரிய புகைப்படம், இன்னும் அடையாளம் காணப்படாத மற்றும் யாராலும் சொந்தம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத மக்களின் புகைப்படங்களைக் காட்டுகிறது. டாக்டர் சத்பதி விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பிரேதங்களைப் பரிசோதனை செய்திருக்கிறார். அவர் பாதிக்கப்பட்டவர்கள் 27 விதமான வேறு வேறு விஷ இரசாயனப் பொருட்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கண்டறிந்தார். அவர்கள் விஷத்தன்மை மிகுந்த நச்சு வாயுக்களால் -அவற்றை சுவாசித்ததால் – தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் இவ்வளவு இரசாயனப் பொருட்கள் எப்படி வந்தன என்பதனை விளக்குவதற்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

செப்டம்பர் 5 1986

செப்டம்பர் 5 1986 அன்று இந்தியா நியூயார்க் நகரிலிருந்து வழக்கை போப்பால் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டது.

வழக்கம்போல, UCC, தனது சட்ட தந்திரங்களால், நீதிமன்றத்தை “மறுப்பு” கணைகளால் தாக்கியவன்னம் இருந்தது. ஒரு பூச்சிக்கொல்லி தொழிற்சாலை நிறுவுவதன் மூலம் ஏற்படவிருக்கும் ஆபத்தை தாங்கள் எந்தக் காலத்திலும் மாநில ஆரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ மறைத்ததில்லை என்று UCC சத்தியம் செய்யாத குறையாக சொன்னது. மேலும் MIC அப்படியொன்றும் மிகப்பயங்கரமானது அல்ல என்றும் கூறியது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடத்தில் தொழிற்சாலை நிறுவியதை மறுத்தது. நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் (1969-1974) விதிக்கப்பட்ட பன்நாட்டு ஒருங்கிணைப்பு விதிகளை மீறியதை மறுத்தது. விசவாயு கசிந்ததை மறுத்தது. அது ஒரு தொழிலாளியிம் நாசவேலை என்று தடாலடியாக பல்டி அடித்தது.

கடைசியாக, அவர்களில் இருப்பையே அவர்கள் நிராகரித்தார்கள்!! இந்திய வழக்கறிஞர்கள் UCCஐப் பற்றிக்குறிப்பிடும் போது,”மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்” என்று கூறியிருந்தார்கள். இதைப் பயன்படுத்திய UCC அப்படியாருமே இல்லை என்றது. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு அதற்கு வேறுவேறு அர்த்தங்கள் கற்பித்து வழக்கை திசைதிருப்புவது வழக்கறிஞர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இது சிலேடையின் உச்சக்கட்டம். UCC கண்ணுக்குப்புலப்படாத ஒரு அமெரிக்க வர்த்தகம். அவர்கள் மற்ற நாடுகளில் இருக்கும் சில பெரிய நிறுவனங்களில் சில பங்குகளை மட்டுமே வைத்திருந்தனர். அவ்வாறான வேற்று நாட்டு நிறுவனங்களில் ஒன்று தான் UCIL என்று கூத்தடித்தனர்.

போப்பால் தொழிற்சாலையில் தினமும் நடக்கும் விசயங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை காட்டிக்கொள்ள விரும்பியது UCC. அப்படியிருக்க நேர்ந்த இந்த பேரிடருக்கு எப்படி UCC பொறுப்பாகமுடியும் என்று பாவமாக கேட்டது UCC. ஆனால் எவ்வளவு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாலும் உண்மை அதுவல்ல. UCILஇன் எந்த ஒரு பாலிசியும், செலவுதிட்டமும், செலவும், நிறுவனத்தின் எந்த ஒரு அறிக்கையும், டான்பரியில் (Danbury) இருக்கும் UCCயின் தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் வாங்கவேண்டும். இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் கடினமான வேலை.

(தொடரும்)

thanks : swaroopa mukarjee

ஆயிரம்கால் இலக்கியம் – 8

ரமேஷ்-பிரேம் எழுதிய ஒரு ஓரினச்சேர்க்கையைப் பற்றிய கதையை பற்றி நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அந்த கதையில் எனக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா எனபதெல்லாம் வேறு விசயம். அந்த கதையைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்திருந்த திரு. யாத்ரா ரவீந்திரன் அவர்களிடம் விவாதித்த பொழுது, அவர் என்னை விசித்திரமாகவே பார்த்தார். இதில் என்ன இருக்கிறது முத்து என்றார். ஆனால் என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர் சொன்னார், எழுத்தாளர் என்பவர் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்கள். அவர்களின் நோக்கம் சமூகத்தை திருத்த வேண்டும் என்பதல்ல. மேலும் எது குற்றம் என்பது யாருக்குமே தெரியாது. அப்படியிருக்கும் போது திருத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். யோசிக்கவேண்டிய விசயம் தான். ஆனால் ஓரினச்சேர்க்கை தவறா சரியா என்று பார்த்தால், தவறு தான். நான் ஓரினச்சேர்க்கையை கடுமையாக எதிர்ப்பவன். அதைச் சட்டப்பூர்வமாக்குவதையும் கடுமையாக எதிர்ப்பவன். யார் என்ன சொன்னாலும் சரி. எனக்கு எத்தனை கெட்டவார்த்தைகளில் பின்னூட்டம் வந்தாலும் சரி. என் நிலைப்பாடு இதுதான்.

பிரேம்-ரமேஷ் எழுதிய மற்றொரு கதையைப் படிக்க நேர்ந்தது. தீராநதி டிசம்பர் 2006 இதழில் வெளிவந்தது. கதையில் பெயர். பன்றி.

பன்றி என்ற தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ஏதோ யாரையோ கடுமையாக சாடியிருக்கிறார்(கள்) என்று நினைத்தேன். அதுவும் ஒரு வகையில் சரிதான். கதை முடியும் போது உணர்ந்து கொண்டேன். ஆனால் இதை சிறுகதை என்று சொல்லமுடியுமா என்ற யோசனை கதையைப் படித்தபின்னர் தோன்றியது. ஆனால் சிறுகதை என்ற வடிவம் காலந்தோறும் மாறி வந்து கொண்டேயிருந்திருக்கிறது. ஒரு சிறு சம்பவமும் கதையாகிறது. ஆனால் அதுவல்ல விசயம். கதையில் நிறைய வரலாற்று facts இருக்கும் போது அது கட்டுரையோ என்ற எண்ணம் வருகிறது. தீராநதியிலிருந்து ரமேஷ்-பிரேமிடம் கதை கேட்ட போது, அவர்களிடம் சிறுகதை ஏது இருந்திருக்காது, அப்பொழுது எழுதிக்கொண்டிருந்த கட்டுரையை அப்படியே சிறுகதையாக்கி கொடுத்துவிட்டனரோ என்று கூட நினைத்தேன். இருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.

***

சில நாட்களுக்கு – மாதங்களுக்கு- முன்னர் விகடனில் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை ஒன்றைப் படித்தேன். கதையின் பெயர் என்னவென்று வழக்கம்போல் ஞாபகம் இல்லை. கதையைச் சொல்வது ஒரு சிறுவன். பணிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும். அவனும் அவனுடைய தாயாரும், அவனது தகப்பன் வேலை பார்க்கும் ஊருக்கு ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சென்று காத்துக்கிடந்து அவர் கொடுக்கும் பணத்தை வாங்கிவருவார்கள். இது ஒரு சிறுவனின் பார்வையில் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அவனது தந்தை மிகவும் தாமதமாக வருகிறார். ஒரு சில் நாட்கள் இரவு வெகுநேரமாகி விடுகிறது. ஆனால் அவனது தாயார் ஒரு போதும் அவர் காத்திருக்க சொன்ன இடத்தை – பேருந்து நிலையத்தில் ஒரு இடம்- விட்டு வெளியேறினதில்லை. சில சமயங்களில் அவர் மிகவும் தாமதாக வந்து விட்டு, அம்மாவை கண்டபடி திட்டுவதை அவன் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு புரியவே புரியாது. தாமதமாக வந்தவர் அப்பாதானே, பிறகு அவரே அம்மாவைத் திட்டுவானேன் என்று நினைப்பான். ஆனால் எந்தவொரு சமயத்திலும் அவனுடைய அம்மா, அப்பாவை எதிர்த்து பேசியதோ அல்லது நேரமாகிவிட்டால் அவரது அலுவலகத்திற்கோ சென்றதில்லை. இது அவனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தாலும் ஏனென்றும் புரியவில்லை. ஒரு நாள் அம்மா இறந்து போகிறாள். ஏனென்று அவனுக்கு தெரியவில்லை.

சில நாட்கள் கழித்து அவனது அப்பா வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்கிறார். மீண்டும் ஒரு நாள் தனது புது சித்தியுடம் அந்த சிறுவன் அப்பா வேலை பார்க்கும் ஊருக்கு மாசத்தின் முதல் தேதியில் பணம் வாங்குவதற்குப் போகிறான். அவனது சித்தி அவனுக்கு சாப்பிடுவதற்கு சாக்லேட் வாங்கித்தருகிறாள். பிறகு வழக்கம்போல அவனது அப்பா இன்னும் வந்திருக்கவில்லை. அவனது சித்தி அவனிடம் இப்படித்தான் லேட்டாவருவாராடா உங்க அப்பா என்று கேட்கிறாள். அவன் ஆமாம் என்பது போல தலையசைக்கிறான்.பிறகு அவனது சித்தி எழுந்து சென்று தனது கைப்பையில் சிறிய நோட்டைப்போன்ற ஒன்றை எடுத்து அதில் ஒரு பக்கத்தில் எண்ணைக்கண்டுபிடித்து, அப்பாவுக்கு போன் செய்கிறார். பிறகு இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்கிறாள். ஆனால் அவர் வரவில்லை.

பொறுமையிழந்த சித்தி, இவனிடம் டேய் உங்க அப்பா வேலைசெய்யுற ஆபீஸ் உனக்கு தெரியுமா? என்கிறாள். இவன் தெரியும் என்பது போல தலையாட்டியவுடன், ஒரு ரிக்ஷா அமர்த்தி, இருவரும் அப்பா வேலைசெய்யும் ஆபீஸ¤க்குப் போகின்றனர். அவனது அப்பா ஓட்டமும் நடையுமாக வந்து சித்தியையும், அவனையும் கேன்டீனுக்கு அழைத்து சென்று சாப்பிட வாங்கித்தந்து பணத்தைக் கொடுத்து அனுப்புகிறார். அவனுக்கு அப்பா சித்தியுடன் மிகவும் பாசமாக இருப்பது போல இருக்கிறது.

வரும் வழியில் எங்கும் அவன் தன் அம்மா இது போல எல்லாம் ரிக்ஷா அமர்த்தி அப்பாவின் அலுவலகத்துக்கு சென்றதேயில்லையே என்பதைப் பற்றியே நினைத்துக்கொண்டு வருகிறான்.அவனுக்கு ஏனோ சித்தியைப் பிடிக்கவில்லை என்று முடியும் கதை.

திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு இந்த கதை சப்பென்று உப்புச்சப்பில்லாமல் இருக்கும். ஆனால் நிதானமாக வாசிக்கும் சீரியஸ் ரீடர்ஸ்க்கு இந்த கதை நிறைய சிந்தனைகளைக் கிளரிவிடும். நிறைய கேள்விகளை எழுப்பும். ஒரு சிறுகதையையோ, கதையையோ படித்த முடித்தபின்னர் அதைப் பற்றி சிந்திக்க ஏதும் இல்லையெனில் அது வருந்தத்தக்க விசயம்.

***

பன்றியும் அது போலவே தான். ரமேஷ்-பிரேம் பன்றிகளைப் பற்றி நிறைய சொல்கின்றனர். இந்த கதையில் வாக்கியங்கள் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கின்றனர். எனவே கதையை சொல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் கதை என்ற ஒன்றே இல்லை. வெறும் ஒரு சம்பவம் தான். அந்த சம்பவம் என்னவென்றால் : ஒரு பன்றிக் குடும்பம், அதாவது, பன்றியும், அதன் குட்டிகளும் ஒரு லாரியால் நசுக்கப்பட்டு இறக்கின்றன. இதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் தனது பத்திரிக்கை நண்பருக்கு ஒரு கட்டுரை எழுதி செய்தியாக வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறார். அந்த செய்தி வெளியிடப்படவேயில்லை. மறுமுறை அந்த நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது, அவர் தனது நண்பரிடம் ஏன் அந்த செய்தி வெளியிடப்படவில்லை என்று கேட்கும் போது அவர், ” இதை எந்த வகையில் வெளியிடுவது என்று தெரியவில்லை, அதனால் வெளியிடவில்லை” என்கிறார். அதோடு முடிகிறது கதை.

பிரேம்-நரேஷின் நடை மிகவும் நன்றாக இருந்தது. நான் ரசித்த சில பகுதிகளை அப்படியே இங்கு தருகிறேன்.

கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிய பன்றிகள் தலைமறைவாகி விட்டனவா என்று நினைத்தேன்

பன்றிகள், நாய்கள், ஆடுகள், மாடுகள், காகங்கள் இவை எல்லாம் மனித நடமாட்டமுள்ள தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக தென்படவேண்டும். விலங்கினங்கள், பறவையினங்கள் சூழ்ந்திராத போது நம்மை பெருவெறுமை சூழ்ந்துவிடுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் எருமைகளைக் காணும்தோறும் மனதில் உவகை பொங்குகிறது. நான் இன்னும் இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பதின் பாதுகாப்புணர்வை இவை தருகின்றன

என்னது உவகை பொங்குகிறதா? ஒரு டர்னிங்கில் ஸ்ப்லன்டரில் வேகமாக வருகிறீர்கள், திரும்பியவுடன் அங்கே நமது எருமையார் ஹாயாக நின்று கொண்டு ஷகீலாவின் போஸ்டரையோ அல்லது கம்யூனிஸ்டுகளின் செவிமெடுக்கப்படாத அல்லது சொற்றுக்கு உதவாத கோஷங்கள் கொண்ட போஸ்டரையோ தின்று கொண்டிருக்கின்றன, தின்றதோடு மட்டுமில்லாமல், ஷாக்கில் சடன் பிரேக் அடித்து வியர்த்து விறுவிறுத்து நிற்கும் நம்மை, மெதுவாக மிக மெதுவாக திரும்பிப்பார்த்துவிட்டு, மீண்டும் அதே ஸ்பீடில் போஸ்டரை தின்ன ஆரம்பித்தது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது உவகை பொங்குமோ? பொங்காது என்று சொல்லிவிட்டால், நம்மை பின்நவீனத்துவத்தில் சேர்க்கமாட்டார்களோ என்ற கவலையும் உடன் வருகிறது. (இதில் பின்நவீனத்துவம் எங்கிருந்து வந்தது என்று நிர்மல் அடித்த ஜெர்க்கை என்னால் பார்க்க முடிகிறது!)

ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளில் ஒன்று வழிதவறியிருந்தால் அதை வீட்டுக்கு எடுத்துச்செல்ல துணியும் மனம், இப்பன்றிக்குட்டியிடம் மட்டும் ஏன் கருணை காட்ட மறுக்கிறது

கொட்டும் மழையில் அசையாமல் நடுத்தெருவில் தீவிரமான ஒரு மனோநிலையில் நிற்கும் தனித்த பன்றியைப் பார்த்திருக்கிறேன். நாய்களால் குதறப்பட்டு காது கிழிந்து ரத்தக்காயங்களோடு ஓடிய பன்றியைப் பார்த்திருக்கிறேன். காதுகளில் துளையிட்டோ அல்லது காதுகளில் இரும்பு ஆணியால் ரிவீட் அடிக்கப்பட்டோ உரிமையாளரின் அடையாளம் பொறிக்கப்பட்ட பன்றியைப் பார்த்திருக்கிறேன். யாரோ ஒரு போக்கிரிப் பயலால், உடம்பில் மண்ணென்ணெய் ஊற்றப்பட்டு கொளுத்தப்பட்ட பன்றி எரிந்தபடி, போக்குவரத்து நெரிசலூடாக முக்கியச் சாலையில் ஓடியதைப் பார்த்திருக்கிறேன். சாராயக்கடைகளில் திரியும் பன்றிகளில் ஒன்றைப் பிடித்து அதன் வாயில் சாரயத்தைப் புகட்டியதைப் பார்த்திருக்கிறேன். அதே சாரயக்கடையில் மலம் வழிய பிரக்ஞையற்றுக் கிடந்த ஒருவனின் பின்புறத்தை நக்கி சுத்தம் செய்த பன்றியைப் பார்த்திருக்கிறேன். தெருவில் என்னைப் பார்த்தால் மரியாதையோடு விலகிச்செல்லும் ஒரு பன்றியை எனக்குத் தெரியும். பன்றி ஒரு ஒடுக்கப்பட்ட விலங்கு.”

இது கதை மட்டுமே என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது இதனை ஒரு உவமையாக பாவித்து ஏதாவது ஒரு சமூக அவலத்தின் மீதும் ஏற்றிப்பார்க்கலாம். சமீப கால சிறுகதைகளில் வாசகர்களின் பங்கு அதிகம். சிறுகதைகள் எழுத்தாளருடன் முடிவடையக்கூடாது, வாசகர்களிடமும் தொடரவேண்டும்.

***

குமுதத்தில் (02 ஜூன்,07) ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது, அரசு பதில்கள் பகுதியில்:

கே: தமிழில் சிறுகதை நாவல் வடிவம் காலாவதியானது ஏன்?
பதில்: உலக இலக்கியங்களைப் படிக்காமல் சும்மா படித்தது போல சில பிரபல எழுத்தாளர்கள் ரீல் விட்டதும் மக்களைப் பாதிக்கும் அரசியலைத் தொடாமலேயே அறிவு ஜீவி போல நடித்ததும் ஒரு காரணம்.

பதிலளித்த “அரசு” அறிவுஜீவியோ? சொல்லவேயில்ல!

***

“மல்லிகைக்கிழமைகளில்” ஜெ.பிரான்ஸிஸ் கிருபா எழுதி விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடரில் வந்த ஒரு கவிதை:

தீயாகவா, புயலாகவா
திருக்கை மீன் வாலாகவா
பூவாகவா, புன்னகையாகவா
புத்தம்புது விஷமாகவா
உன் கோபம் எப்படி வருமென்று
எனக்கு தெரியாது.

எங்கிருந்து வரும்
எப்போது வரும்
எவ்வளவு வரும்
உனக்கும் தெரியாது.

அன்பே என்றுதான் சொன்னேன்
கோபித்துக்கொண்டாய்
பேரழகே என்றேன்
கோபம் பெரிசாகிவிட்டது
ஆருயிரே என்றேன்
கோபமே நீயாகிவிட்டாய்.

வெண்ணெய்க் கட்டியாக
அனலில் விழுந்து
உருகித் தொலைத்தேன்
பொல்லாத செல்லக் கள்ளியென்று
மனசுக்குள் முணுமுணுத்தேன்
உற்றுக் கேட்டதும்
உயிர் துள்ளிக் குதித்தது
உன் கண்களில்.
இரண்டாயிரத்து ஏழாவது
முறையாக மீண்டும் பிறந்தேன்.

ஒரு நாளுக்கு என்னை இப்படி
எத்தனை முறை
தொலைக்கிறாய் என்பதை
எண்ணிக்கை வைப்பதில்லை நீ.
ஒருபோதும் மன்னிப்பும் கேட்பதில்லை.
வீட்டிலோ, வெளியிலோ
சாலையிலோ, கோயிலிலோ
திரைச்சாலையிலோ
இந்தியாவிலோ ஜப்பானிலோ
உலகின் எந்த மூலையில்
என்னை நீ தொலைத்தாலும்
கண்டுபிடித்துத் தருவது
என் கடமையாக இருக்க
உனக்கென்ன கவலை?

இந்த கவிதைக்கு அர்த்தம் எழுதலாம் அல்லது விளக்கம் எழுதலாம் என்று நினைத்தேன். பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டேன். எனென்றால் அவரது மல்லிகைக் கிழமைகள் தொடரில் ஓரளவேனும் எனக்கு புரிந்த கவிதை இது மட்டுமே. (போனவாரமெல்லாம் ஒன்றுமே புரியவில்லை.!) இதுக்கும் அர்த்தம் எழுதி யாராவது, டேய் டுபாக்கூர் அது இல்லை அர்த்தம், ஸ்டுபிட் மாதிரி பேசாத, இதுதானாக்கும் அர்த்தம் என்று எதையாவது சொன்னால் அப்புறம் எனக்கு கவிதை படிப்பதற்கு கான்பிடன்ஸே போய்விடும். (ஆ! இதுவே கவிதை மாதிரித்தான இருக்கு. “கவிதை படிக்க கான்·பிடன்ஸ்”!)

இன்னொரு விசயம். என் நண்பன் (கோனபாட்டில் கோவிந்தன்!) என்றைக்குமே புத்தகத்தை தூக்கி படித்ததேயில்லை. நான் பார்த்ததேயில்லை. குமுதம் ஆனந்த விகடன் வாங்கிவந்தவுடனே, அதில் உள்ள கேர்ல்ஸ் பிக்சர்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு மொத்தமாக புத்தகத்திற்கு மார்க் போடுவான். அவ்வளவே. ஆனால் சமீபகாலமாக அவன் விகடன் வந்தவுடன் மல்லிகைக்கிழமையைத் தான் படிக்கிறான். திரும்பத்திரும்ப படிக்கிறான். நான் வேண்டாம்டா இந்த விசபரிட்சை என்று சொல்லுயும் கேட்க்காமல் படித்தான். இப்பொழுது ஏதோ பத்தாவது ரிசல்ட் பாத்து பெயிலாகிவிட்ட மாணவன் போல மிகவும் சோகமாக அழைகிறான். போன வாரம் திடீரென்று என்னை கூப்பிட்டு, மல்லிகைக்கிழமை கவிதையை காட்டி, உனக்கு புரிகிறதா பார் என்றான். நான் ஒரு ஐந்து முறைபடித்தும், புரியவில்லை. கடைசியில் நான் புரியவில்லை என்று சொன்னவுடன் தான் அவனுக்கு நிம்மதி. அவன் மொத்தம் பதினாறு முறை அந்த கவிதையைப் படித்திருக்கிறான். அவனுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியது என்பது போனஸ் தகவல். புரிந்துகொள்ள முயற்சி செய் பின்னால் உதவியாக இருக்கும் என்றேன்.

புரியாமல் இருப்பதால் தான் கவிதைகள், கேர்ல்ஸைப் போல, அழகாக இருக்கின்றனவோ?

***

ச.இ.பா. (சங்க இலக்கிய பாடல்)

நற்றினையில் ஒரு பாடல்:

“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவ தாயின்
மறக்குவேன் கொல்என் காதலன் எனவே.”

“தோழி, நான் சாவுக்கு அஞ்சவில்லை. ஆனால் வேறொன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்துவிட்டால், பிறகு வேறு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்” என்றாளாம்.

***

பிகு: முந்தைய பகுதிகளை side menuவில் பார்க்கவும்.

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 5

ஏப்ரல் 8 1985

ஏப்ரல் 8 1985 அன்று இந்திய அரசாங்கம் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்கு எதிராக நியுயார்க் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் நடந்த பேரிடருக்கு UCC -யே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. குற்றம் நான்கு அம்சங்களைக்கொண்டது : உருப்படாத திட்டம், பழுதடைந்த தொழில்நுட்பம், பயிற்சியின்மை மற்றும் தொழிற்சாலையில் முறையான மேற்பார்வையின்மை.

அமேரிக்காவுக்கு இந்த வழக்கை எடுத்துச்சென்றதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை – அமேரிக்காவவுக்கு இதேபோல் பேரிடர்களில் இருக்கும் அனுபவம். இவ்வாறான சுற்றுச்சூழல் அழிவுக்கு வழிவகுத்த பேரிடர்களுக்கு எதிராக அவர்களது சட்டம் கடுமையாக இருப்பதும், இதைப் பயன்படுத்தி ஒரு நல்ல மிகப் பெரிய இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. மேலும் போப்பால் பேரிடர் உலகம் முழுதும் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய சர்வதேசவிஷயமாக கருதப்பட்டது, அதனால் ஒரு சர்வதேசச்சந்தை இந்தியாவுக்கு தேவைப்பட்டது. வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) கூட ஒரு சந்தர்ப்பத்தில் “போப்பால் உலகத்தையே மாற்றிவிட்டது, அமேரிக்காவையும் வேறு தொழிற்சாலைகளும் இனி தானகவே மாறிவிடும்” என்று ஒத்துக்கொண்டார். இது இனி அமெரிக்கா இரட்டை தரம் (நியதி) – முதல் நியதி அவர்களுக்கு, இரண்டாவது அவர்கள் அல்லாத ஆனால் அவர்கள் தொழிற்தொடங்கியிருக்கும் மற்ற நாடுகளில், சொல்லப்போனால் இன்னும் முன்னேறாத நாடுகளில் – வைத்துக்கொள்ள முடியாதபடி பார்த்துக்கொள்வதற்கு – உறுதிசெய்துகொள்ள – ஒரு வாய்ப்பளித்தாய் இருந்தது.

ஒரு நல்ல சிறந்த தீர்ப்பையே அனைவரும் எதிர்பார்த்தனர். எது நடந்ததோ அது நடந்து விட்டது அதை மாற்ற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் இதன் மூலம் கண்டறியப்பட்ட படிப்பினைகளை உலகத்தின் கவனத்துக் கொண்டுவரும் முயற்சியாக இந்த வழக்கு இருக்கும் என்று நம்பப்பட்டது. அமேரிக்க மக்களின் கவனத்துக்கு இந்த வழக்கை கொண்டுவருவதன் மூலம் அவர்களது வாழ்க்கையும் எவ்வளவு அபாயங்களுக்கு மத்தியில் இருக்கிறது -போப்பால் மக்களைப் போல- என்பதையும் அவர்களுக்கு உணரச்செய்யலாம்.

ஆனால் UCC -யின் எதிர்வினையோ இந்த நீதிமன்றம் வசதியற்றதாய் இருக்கிறது என்பதாய் இருந்தது. அமெரிக்கர்களின் வரிப்பணமும் பொன்னான நேரமும் தேவையில்லாத ஒரு வழக்கில் -அதுவும் எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் ஏற்பட்டதொரு பேரிடரை- அநியாயத்துக்கு வீணடிக்கப்படுகிறது என்று கூறினர். மேலும் அவர்கள் சாட்சிகள் அனைத்தும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது என்றும் சாட்சியங்களோ போப்பாலில் இருக்கிறது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய அவர்கள் கோரிக்கை வைத்தனர்.













இறந்த 20000 மக்கள் சார்பாகவோ, நிரந்தரமாக வாழ்க்கைமுழுதும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், அதிகாரபூர்வமாக எந்த நினைவுச்சின்னமும் வைக்கப்படவில்லை. தாயும் சேயும் இருக்கிற இந்த சிலை ருத் வாட்டர்மேன் (Ruth Watermann) என்பவரால் போப்பாலில் இருக்கும் கார்ப்பைடு தொழிற்சாலையின் வாசலில் வைக்கப்பட்டது.

டிசம்பர் 3 1985

ஒரு வருடம் கழித்து. நகரமே மிகுந்த கோபத்தில் இருந்தது. காலையில் மக்கள் கோவிலிலும், மசூதியிலும், தேவாலையங்களிலும் வணங்கினர். ஆனால் பிறகு பல தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களும் கண்டன ஆர்ப்பட்டங்களிலும் தர்னாவிலும் ஈடுபட்டனர். வாரன் ஆன்டர்சனின் உருவபொம்மைகள் தெருவெங்கும் கொழுத்தப்பட்டன. தொழிற்சாலையை சூறையாடவும் தீவைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களும் தர்னாக்களும் ஒரு குறியீடாக மட்டுமே இருந்தன, இதனால் அவர்கள் பெரிதாக எந்த லாபத்தையும் அடையவில்லை.

ஆனால், இந்த நாள், இதை விட ஒரு முக்கியமான சம்பவத்தை தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருந்தது. கடைசியாக 1.8 மில்லியன் டாலர் இழப்பீட்டுத்தொகை கொடுப்பது என்று முடிவு -UCIL- செய்யப்பட்டது. மேலும் அட்குறைப்பு செய்யப்பட்டது, தொடர்ந்து தொழிற்சாலையே மூடப்பட்டது.

ஒரு தொழிற்சாலையில் விபத்து நடந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவர்களாக இருப்பர். வேலையிழந்தவர்கள். வேலை செய்யமுடியாதவர்கள். வாயு கசவுக்குப்பின் வேலையிழந்தவர்கள் இருந்தனர். இன்னும் சிலர், காயங்கள் அவர்களை ஊனப்படுத்தி இனி வாழ்க்கையிலே என்றும் கடினமான வேலை செய்யமுடியாதவாறு செய்திருப்பதை, நாளடைவில் கண்டனர்.

யாரைக்குறை சொல்வது என்பதைக்கூட இந்தமாதிரியான பேரிடர்கள் குழப்பிவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை எல்லோரும் கைவிட்டபிறகு, அவர்கள் யார்மீது கோபப்படுவார்கள்? ஆண்டுகள் பறந்து கொண்டிருந்தன, ஒவ்வொரு ஆண்டு நினைவின் போதும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் யாரும் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தாமல் -ஏற்படுத்த முயற்சிக்காமல்- இருக்கும் போது, அவர்களுடைய கோபம் வாரன் ஆன்டர்சன் மேலிருந்து முதலமைச்சர், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் மேல் திரும்பியது.

அதேசமயத்தில் மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக என்ன செய்துகொண்டிருந்தது? மறுவாழ்வுக்கான போர்டுகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருமுனையிலும், விளம்பர போர்டுகளில், அன்று பிரதமமந்திரியாக இருந்த ராஜீவ்காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கே முதலுரிமை என்று சொல்லியவாறு கையசைத்து சிரித்துக்கொண்டிருந்தார். அரசு தயாரித்த திட்டங்கள், விளம்பரங்கள் மூலம் தினசரிகளில் திணிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் மேலிருந்த பார்வை நாளடைவில் மாறத்தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்களை எதிரிகளாக பொதுமக்கள் பார்க்கத்தொடங்கினர். அவர்கள் தான் இழப்பீட்டு தொகை கேட்டு சுரண்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டனர். இழப்பீட்டு தொகை வழங்கப்படும் இடங்களில் இருக்கும் அதிகாரிகள் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களை குற்றம்சாட்டுபவர்களாக இருந்தனர்.

கிட்டத்தட்ட எல்லா சட்டபத்திரிக்கைகளிலும் இழப்பீட்டுத் தொகை என்பது ஒரு அசிங்கமான வார்த்தையாக உருப்பெற்றது, இழப்பீட்டுத்தொகையை வழங்கப்போவது என்னவோ வேறுயாரோ. இழப்பீட்டுத் தொகை வழங்கப்போவது UCC தான் என்பதை அனைவரும் மறந்திருந்தனர் -மறக்கடிப்பட்டிருந்தனர். 20000 மக்கள் UCC-யின் கவனக்குறைவால் கொல்லப்பட்டிருந்த உண்மையை அனைவரும் மறந்திருந்தனர். 300,000 போப்பால் மக்கள் மீண்டு வரமுடியாத துயரங்களில் சிக்கிக் தவித்துக்கொண்டிருப்பதை அனைவரும் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருந்தனர்.

(தொடரும். அதிவிரைவில்!)

மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 4

டிசம்பர் 16 1984

டாங்க் E16 -ல் இருந்த பதினைந்து டன் மிக் (MIC) இன்னும் திகிலூட்டவே செய்தது. அதை எப்படி விட்டொழிப்பது என்பதை பற்றி பலரும் பலவாறு யோசனை கூறினர். அதை மிகப் பெரிய ட்ரம்களில் அடைத்து அதன் தாய் கம்பெனிக்கே அனுப்பிடலாம். இல்லையேல், பெரிய குழாய்வழியாக காஸ்டிக் சோடா வாயுவை பயன்படுத்தி அதை நீர்த்தப்படுத்தலாம். இல்லையேல் அதை எரித்து (சோதனைக்கு உட்பட்டு) அதிகம் தீங்கில்லாத வேறொரு வாயுவாக மாற்றலாம். ஒருவழியாக இறுதியாக மிக்கை நீர்த்தப்படுத்தி செவின் (Sevin) என்ற பூச்சிகொல்லி மருந்தாக உருமாற்றம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதை செய்யவிருக்கிற பல நிபுணர்கள் கொண்ட குழுவின் தலைமை விஞ்ஞானி, இதில் கிடைக்கும் பொருளாதார இலாபத்தை பற்றி ஒரு பத்திரிக்கை சந்திப்பில் இவ்வாறு மக்களுக்கு எடுத்துக்கூறினார்: “இந்த விசயத்தை மொத்தமாக பொருளாதார இலாபத்தை மனதில் வைத்து அனுகவேண்டும். எந்த ஒரு தொழில் நுட்ப சோதனையிலும் ஆபத்து கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆபத்தில்லாமல் எந்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அடையமுடியாது. நாம் அபாயங்களை குறைக்க மட்டுமே முடியும்”. பீகாரின் முதலமைச்சர் ரேடியோவில் இந்த முறை – மிக்கை செவினாக மாற்றுவது – மிகவும் பாதுகாப்பனதும், மற்றும் சாத்தியமான ஒன்று என்று மக்களுக்கு நம்பிக்கையளித்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் இந்த செயல் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை பயன்படுத்தி எந்தவித பக்கவிளைவுகளும் சேதமும் தீங்கும் இல்லாமல் மிகவும் கவனமாக செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

பாதுகாப்பு வழிமுறைகள் என்று சொல்லப்படுவது ஆறு வெவ்வேறான பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கியது. இந்த ஆறு பாதுகாப்பு அம்சங்களில் ஐந்து பாதுகாப்பு அம்சங்கள் டிசம்பர் மூன்றாம் தேதி வேலைசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இந்த முறை அவை ஆறும் நன்றாக வேலை செய்கின்றன -தொடர்ந்து வேலை செய்யும் – என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இவை எப்பொழுதும் -டிசம்பர் மூன்றாம் தேதிகூட – ஒழுங்காக வேலை செய்துகொண்டுதான் இருந்திருக்கும், இதற்கு பொறுப்பானவர்கள் நினைத்திருந்தால். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கட்டுக்குள் கொண்டுவர, ஒழுங்காக வேலை செய்யவைக்க அவர்களுக்கு கொஞ்சநாட்கள் தான் பிடித்தது. இந்த ஐந்து பாதுகாப்பு அம்சங்களுடன், ஆறாவது அம்சமாக ஒன்று சேர்க்கப்பட்டது, அது : இவை அனைத்தையும் மீறி இதை செயல்படுத்தும் நாளன்று ஏதேனும் தவறு ஏற்பட்டால், தண்ணீர் தெளிக்க ஹெலிகாப்டர்கள் தயாராக நிறுத்தப்படும்.

டிசம்பர் பதினாறாம் தேதி, மிக்கை நீர்த்தப்படுத்தும் முயற்சிக்கு உறுதுனையாகவும், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கமும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட UCIL -ன் ஐந்து சீனியர் அலுவலர்கள் விடுவிக்கப்பட்டனர். அமெரிக்க தொழில்நுட்ப ஆலோசர்கள் தொழிற்சாலைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது, ஏனென்றால் அவர்கள் சாட்சியங்களை கலைத்து விடக்கூடும். ஆனால் அவர்களில் ஒருவர், அலோசனைகள் வழங்குவதற்கு, ஆபரேசன் ·பெயித் (Operation Faith) குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இந்த முறை எந்த தவறும் நடக்கவில்லை. மிக் வெற்றிகரமாக நீர்த்தப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் போப்பாலுக்கு திரும்பி வரத் துடங்கினர். ஆனால் பொது மக்களின் தலைகளில் பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருந்தன. இந்த நீர்த்தப்படுத்தும் செயல் மூலம் தயாரிக்கப்பட்ட செவினின் ரூபாய் மதிப்பு இரண்டரைக் கோடி. ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட செவின் என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. அது பரிமுதல் செய்யப்பட்டதா இல்லை சந்தையில் விற்கப்பட்டதா? ஆபரேஷன் ·பெயித் செய்லபடுத்தப்படுவதற்கு பொதுப் பணம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், இதன் மூலம் அடையப்பெற்ற இலாபம் என்ன ஆனது? அந்த இரண்டரைக்கோடி எங்கே சென்றது?

ஆபரேஷன் ·பெயித் நிறைய நிறைய நோக்கங்களைக் கொண்டது. அது மாநில அரசின் மக்களைக்-காக்கும் வேஷத்தை செவ்வனே பூர்த்தி செய்தது. மிகப்பெரிய வேலையை நாங்கள் எந்த விளைவுகளும் இன்றி செய்து விட்டோம் என்று தம்பட்டம் அடிக்க வழி செய்தது. பாருங்கள் எங்கள் தொழிற்சாலையில் எந்தவித கோளாறும் இல்லை என்று UCC சொல்வதற்கு இது வாய்ப்பளித்தது. இந்த தொழிற்சாலை செவின் உற்பத்தி செய்வதற்காக கட்டப்பட்டது. அது எந்தவித பிரச்சனையும் இன்றி செய்யமுடிகிறது. நீங்களே பார்த்தீர்கள். தவறு எங்கே நடந்தது என்றால் இயந்திரங்களை இயக்குவதில் தான் இருக்கிறது. இயந்திரங்களை இயக்குவது இந்திய அதிகாரிகள் (UCIL) கையில் இருக்கிறது – என்று UCC கூறுவதற்கு இந்த செயல் வாய்ப்பளித்தது. மேலும் மத்திய அரசு, மற்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு இதன் மூலம் நல்ல சமிக்ஞை அளிக்க முடிந்தது. இந்திய அரசு வெளிநாட்டு முதலீட்டை எந்தக்காரணம் கொண்டும் இழக்கத் தயாராக இல்லை.

கடைசியில் இந்த செயல் அனைவருக்கும் ஒரு திடமளித்தது – அரசுக்கு, தொழிற்சாலைகளுக்கு, அதிகாரிகளுக்கு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதனால் ஒரு துளி இலாபம் கூட கிடையாது. வேறு வழியில், மற்றுமொறு துயர சம்பம், இதே போல், பின்னாளில் நடந்தேறுவதற்கு அடித்தளமாக இந்த செயல் அமைந்தது.


பாதிக்கப்பட்ட மக்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்கள் மிக ஏழை குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அவர்கள் தொழிற்சாலைக்கு மிக அருகில் வசித்தவர்கள். கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும், இந்தப் படத்தில் இருப்பதைப் போல, வாழ்க்கை முழுவதும் ஊனமாக இருக்கப்போகிற ஏதேனும் ஒருவர் இருக்கிறார்.

மார்ச் 29 1985

ந்த துயரச்சம்பவம் நடந்தேறிய உடனே, போப்பல் பல பணம்பறிக்கும் கும்பல்களுக்கு புகழிடமாக அமைந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு, உலகத்தின் மிகப்பெரிய வழக்கில், மிகப்பெரிய ஒரு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வந்திருக்கும், வழக்கறிஞ்கர்களை சந்திக்க போப்பால் தயாராகவே இல்லை. பெற்றுத்தரும் இழப்பீட்டுத் தொகையில் 33 விழுக்காடு சம்பளம். அயிரக்கணக்கான பெருவிரல் ரேகைகளை கையில் வைத்துக்கொண்டு, அவர்கள் 186,000 வழக்குகளை, பல அமெரிக்க மாவட்டங்களில் பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களை இந்த “ambulance chasers” -களிடமிருந்து (ஆம். இந்த வழக்கறிஞர்கள் அமெரிக்காவில் இப்படித்தான் அழைக்கப்பட்டனர்!) காப்பாற்ற இந்திய அரசு 29 மார்ச் அன்று ஒரு சட்டம் இயற்றியது. அது Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act என்பதாகும். இந்த சட்டம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் -மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிறாக ஒன்றும் செய்ய இயலாதவர்கள் – சார்பாக அரசு வாதாட -வழக்கு பதிவு செய்ய – வாய்ப்பளித்தது.

(தொடரும். அதிவிரைவில்!)

மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆயிரம்கால் இலக்கியம் – 7

சாரு நிவேதிதாவை எனக்கு பிடிக்கவே செய்கிறது. தொடர்ந்து அவர் மதுவைப் பற்றியும், பெண்களைப் பற்றியும், தனது சொந்த கதைகளைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தாலும், எனக்கு பிடிக்கவே செய்கிறது. எனக்கு பிடிக்காவிட்டால் தான் என்ன? சாருவுக்கு என்ன நேர்ந்து விடப் போகிறது? அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே தான் இருக்கப்போகிறார். அவருக்கான வாசகர் வட்டம் -mostly NRIs என்று நினைக்கிறேன்!- வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனக்கு பிடிக்காமல் பிடிக்கிறது! ரசிக்காமல் ரசிக்கிறேன். பல இடங்களில் சிரிக்காமல் சிரிக்கிறேன். ஏன் என்று யோசித்தால், அவரது எழுத்து தான் என்று தோன்றுகிறது. ஒரு நெருங்கிய நண்பனிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. பாசாங்கோ வேஷமோ இல்லாமல், இதைத் தான் சொல்லவேண்டும், இதைச் சொல்லக்கூடாது என்ற ஏற்கனவே எழுதி தயாரித்து வைத்துக்கொண்டு பேசுவதைப்போல அல்லாமல், யதார்த்தமாக பேசுவதனால் கூட இருக்கலாம். மேலும் நாம் அறிந்திடாத பல புதிய விசயங்களை கட்டுரைகள் தோறும் தெளித்துவிட்டிருப்பதால் கூட இருக்கலாம். knowledge is wealth இல்லியா?

மந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும். மேன்மையடையச் செய்ய முடியும்.
-ஆதவன் [காகித மலர்கள்]

கோணல் பக்கங்களிலே இடம் பெற்ற கவிதை இது:

தெறித்து விழுந்த ஒரு கணல் துண்டாய்
தோப்பை விட்டு
விலத்தி நிற்கும் ஒற்றைக் கரும்பனையாய்
குழு தவிர்த்து
தனித்தே அலையும் ஒரு கரும்புலியாய்
ஒரு உதிரித் தமிழனாய்
நான் மட்டுமேனும்
உமது தலைமையை
மறுத்து நிற்பேன்

– சக்கரவர்த்தி

அவர் மதுவைப் பற்றி அதிகமாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவரே பதில் சொல்லியிருந்தார், அது:
எவ்வளவு எழுத்தாளர்களையும் எவ்வளவு சினிமாக்களையும், எவ்வளவு பத்திரிக்கைகளையும், எவ்வளவு இசைக்கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன், அவர்களையெல்லாம் படித்தீர்களா, கேட்டீர்களா? பின் இதை மட்டும் ஏன் பெரிதாக சொல்கிறீகள்? அவற்றைப் போலவே இதையும் மறந்துவிட்ங்கள்!

[கருத்து(?!) மட்டுமே சொல்லியிருக்கிறேன்.original words மறந்துவிட்டது. புத்தகத்தை நூலகத்தில் return செய்து விட்டேன்!]

மிகச்சரி! உண்மை.
நான் அவரது கட்டுரைகளை revisit செய்ததில், இதையெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் படிக்கவேண்டும் என்றோ, கேட்கவேண்டும் என்றோ குறித்து வைத்துக்கொண்டேன். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

1. Status Quo எழுத்துக்களைப் பற்றி.
Antonio Gramsci என்ற மார்க்ஸிஸ்டைப் பற்றி.

2. Joseph Heller எழுதிய Catch 22 என்ற நாவல். Catch-22 என்றால் என்ன என்று தேடிய பொழுது, ஒரு மனிதன் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் இரண்டும் ஒன்று ஒன்று தொடர்புடையவை. ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. ஒரு செயல் செய்யாமல் மற்றொரு செயலைச் செய்ய முடியாது. dead lock. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவில் இதைப் பார்க்க நேர்ந்தது: படித்து முடித்து விட்டு வேலை தேடுவது. வேலையில் சேர்வதற்கு அனுபவம் தேவை. வேலையில் அனுபவம் பெருவதற்கு வேலை தேவை. கிட்டத்தட்ட முட்டையிலிருந்து கோழியா. கோழியிலிருந்து முட்டையா என்பதைப் போல! நாவல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் concept நன்றாக இருக்கிறது.

3.Memories Of Underdevelopment என்ற படம்.

4. அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர். இணையத்தில் தேடியவரைக்கும் இவரது நான்கு புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது.
அ. அழகிய பெரியவன் கதைகள்
ஆ. தகப்பன் கொடி
இ. தீட்டு
ஈ. நெரிக்கட்டு
இதில் எந்த புத்தகமும் நான் படித்ததில்லை. சாரு கொடுத்த அறிமுகமே எனக்கு முதல் அறிமுகம்.

5. Art Foundation Of Michigan வெளியிடும் sulphur என்ற magazine. link கிடைக்கவில்லை.

6. Pier Paolo Pasolini என்ற இத்தாலிய இயக்குனர்.

7. Julio Cortazar எழுதிய Hopscotch என்ற நாவல். Hopscotch என்பது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு [வேறு வேறு படங்கள் வரைந்து, வேறு வேறு விதிமுறைகளில்] என்று பின்னர் தெரிந்து கொண்டேன். Base நம்முடைய சில்லாக்கைப் போலத்தான். சில்லாக்கைத் தூக்கிப் போட்டு நொண்டியடிப்போமே ஞாபகம் இருக்கா?

8. Donald Barthelme எழுதிய
the dead father என்ற நாவல்.

***

தீராநதியில் வெளிவந்த பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை (ஆச்சரியமாக, உரைநடை வடிவில் இருந்தது. எப்பொழுதும் புதுக்கவிதை மரபாகிவிட்ட ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதும் முறை தூக்கியெறியப்படுவதற்கான முதல் முயற்சியோ? இருக்கலாம். அட்லீஸ்ட் பேப்பராவது மிச்சப்படும் இல்லையா?) ஒன்று வெளிவந்திருந்தது, எனக்கு பிடித்த சில:

சூர்யன் தோன்றுகிறது. பிறிதொரு நேரத்தில் நிலாவும் நட்சத்திரங்களும் தோன்றுகிறது. அன்பும் பிரியமும் தோன்றுகிறது. வெறுப்பும் கசப்பும் தோன்றுகின்றன. மழை தோன்றுகிறது. கண்ணுக்கு தெரியா காற்றும் தோன்றுகிறது. பிறப்பும் சொல்லிவைத்தார் போல சாவும் தோன்றுகிறது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கரைந்துபோதல் தோன்றுகிறது.

தோன்றுகிறது. தோன்றுவது மட்டுமே தோன்றுகிறது

(?!) 😦 😦

நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு பூவைப் பறித்துக்கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது சாவை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறோம்.

எப்போது கொஞ்சம் புரிந்து நிறைய புரியாமல் இருக்குமே, அது போல ஒன்று:

வெறுப்பின் வீர்யமிக்க விதைதேடி, வீர்யமிக்க நிலம் தேடி, விதைத்தாயிற்று. கண் இமைக்கும் நேரத்தில் நிலம் கீறி வெளிவந்த நதி கிளைகளுடனும் பேரிரைச்சலுடன் ஓடத்துவங்கியது.

நிரந்தரமான படகில் நிரந்தரமான நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். சடலங்கள் மிதந்து வந்து கொண்டேயிருக்க நதி செல்லும் வழியெல்லாம் சரிதம் ஆகிறது.

இந்த கவிதைகள் என்றைக்குத் தான் எனக்கு முழுதாக விளங்கப்போகிறதோ தெரியவில்லை. ஒரு வகையில் முழுதும் விளங்காமல் இருப்பது தான் அழகு இல்லையா?

***

சோகமித்திரனின் நேர்காணல் ஒன்றில் நான் நிர்மலுக்கு கேட்ட கேள்வியின் சாராம்சம் கொண்ட ஒரு கேள்வியை நிருபர் கேட்டிருந்தார், அதற்கு அசோகமித்திரனின் பதில்:

தீராநதி: புது எழுத்து என்ற உத்வேகத்தோடு நிறைய பிரதிகள் எழுதப்படுகின்றன. தமிழுக்குப் புதிய வளம் சேர்க்கும் கோட்பாடுகளில் பரிசோதனைகள் செய்கிறார்கள். பிரேம்-ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார், இந்திரஜித், சாருநிவேதிதா..இவ்வாறு நிறைய. இதையெல்லாம் படிக்கிறீர்களா? சாருநிவேதிதாவுக்கு வழங்கிய முன்னுரையில் கூட தனக்கு உவப்பாகாத எழுத்து என்பது மாதிரி எழுதி இருந்தீர்கள்?

(தீராநதி குறிப்பிட்ட எழுத்தாளர்களில் பிரேம்-ரமேஷ் மற்றும் சாருநிவேதிதாவின் எழுத்துகளை மட்டுமே நான் படித்திருக்கிறேன். அதில் பிரேம்-ரமேஷ் அவர்களின் ஒரு கதையை இதே தீராநதியில் படிக்க நேர்ந்தது. ஹோமோ செக்ஷ¤வல்ஸ் பற்றிய கதை அது. மிக வெளிப்படையாக எழுதியிருந்தார்கள் பிரேம்-ரமேஷ். எனக்கு டோட்டல் ஷாக். இதைப்பற்றி “யாத்ரா” ரவீந்தரன் அவர்களிடம் விவாதித்த பொழுது அவருடைய வாதம் வேறு மாதிரி இருந்தது. பிடிக்கவில்லையென்றால் படிக்காதே. குமுதம் படி. உனக்கு ஏற்றார் போல இருக்கும் என்றார். சாருவைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லை. அவருடைய “நேநோ” வை படிக்க வைத்திருக்கிறேன். என்ன ஷாக் இருக்கிறதோ தெரியவில்லை!)

அசோகமித்திரன்: ஒரு ஷாக் கொடுக்கறதுக்காக இப்படியெல்லாம் எழுதறாங்ளோன்னு தோணும். ரியாலிட்டியில இல்லையான்னு கேட்கலாம். தமிழ் பழைய இலக்கியத்திலும் இருக்கு. சிலப்பதிகாரத்தை எடுத்துகிட்டா அதுவும் இந்த மாதிரியான உறவைப் பத்தினதுதான். என்ன ஒரு மென்மையோட சொல்லப்பட்டிருக்குன்னு பார்க்கனும். மேன்மை இல்லாதபடி இதுக்காகதான்னு நாம் எழுதறது இருக்கே, அதுல எனக்கு பெரிய உவப்பு இல்லை. இந்த கோட்பாடெல்லாம் விமர்சனத்துக்குச் சொல்லக்கூடியதா இருக்கலாம். ஆனா படைப்புக்குத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். அவங்க வேறு மாதிரி சொல்லலாம். அதுல தப்பு கிடையாது. இப்ப நோபல் பரிசு வாங்கி இருக்கிறாரே பாமுக். அவரு பாக்கறச்சே எதிர்ப்புகளைக் காண்பிக்கிற மாதிரிதான் எழுதி இருக்கிறாரே ஒழிய..இந்த மாதிரியெல்லாம் எழுதல. “டாக்டர் ஷிவாக்கோ”ன்னு ஒரு ரைட்டர். சோவியத் புரட்சி பற்றி ஒரு நாவல் எழுதினார். அதுக்கு நோபல் பரிசு கொடுத்தா வாங்கிக்க கூடாதுன்னு சோவியத் அரசே சொல்லிடுச்சு. அவரும் நான் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு உள்ளுக்குள என்ன பயம்னா அவரை நாடு கடத்திட போறாங்கன்னு பயம். ஆனால் நாவல் மிகவும் சிறந்தது.

Boris Leonidovich Pasternak http://en.wikipedia.org/wiki/Boris_Pasternak எழுதிய
Doctor Zhivago என்ற நாவல் பற்றி எனக்குத் தெரியும். Amitav Gosh எழுதிய The Glass Palace புத்தகத்தில் ஒரு blurb: “A Dr zhivago for middle east” ஐ படித்துவிட்டு Dr zhivago ஐ இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். ஆனால் Dr zhivago ஒரு ரைட்டரா? மேலும் pasternak க்குதான் நோபல் பரிசு வழங்கப்பட்டது அவர் தான் வாங்கிக்கொள்வதற்கு மறுத்தார்.

***

சோகமித்திரனின் “அழிவற்றது” சிறுகதைத் தொகுதியில் படித்த சிறுகதை ஒன்று. கர்ணபரம்பரைக் கதை என்று இதை வகைப்படுத்தியிருந்தார். கதையின் பெயர் : தலையெழுத்து.

ஒரு குரு இருக்கிறார். அவருக்கு ஒரு சிஷயர் இருக்கிறார். குருவும் அவரது மனைவியும், சிஷ்யரும் நகரத்துக்கு வெளியே குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது யாரோ ஒரு வயதானவர் வீட்டிற்குள் செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் சிஷ்யன். ஓடிச்சென்று அவரது கைகளைப் பிடிக்கிறான். “நீங்கள் யார். குழந்தை பிறக்கும் இந்த நேரத்தில் உள்ளே செல்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்” என்கிறான். கிழவர் பயத்தால் உரைகிறார். “நான் தான் பிரம்மா. நான் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. எப்படி உன் கண்ணுக்கு தெரிந்தேன் என்று வியப்பாக இருக்கிறது” என்கிறார். சிஷ்யன் அதிரிந்து”இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்க “நான் பிறந்து விட்ட இந்த குழந்தையின் தலையெழுத்தை எழுத வந்திருக்கிறேன்” என்கிறார் பிரம்மா. சிஷ்யன் “என்ன எழுதப் போகிறீகள். என்னிடம் சொல்லுங்கள்”என்கிறான். முதலில் மறுத்த பிரம்மா பிறகு சிஷ்யனிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு “இவ்வளவு உயர்ந்த குருவுக்குப் பிறந்த இந்தப் பெண் விபச்சாரியாக வரப்போகிறாள்” என்கிறார்.

சில வருடங்கள் செல்கிறது. மறுபடியும் குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் பிரம்மாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறான். குழந்தை பிறந்து அழும் சத்தம் கேட்டவுடன் பிரம்மா அங்கு வருகிறார். இந்த முறை “குருவுக்கு பிறந்திருக்கும் இந்த மகன் ஒரு திருடனாக வருவான்” என்கிறார்.

உயர்ந்த இடத்தில் இருக்கும் குருவுக்கு பிறந்த இரு குழந்தைகளும் திருடனாகவும் விபச்சாரியாகவும் உருவாகப்போகின்றன என்பதை சிஷ்யன் நம்பியிருக்கவில்லை. ஏதோ பிரம்மா கப்சா விட்டிருக்கிறார் என்று நினைத்துக்கொள்கிறார். வருடங்கள் உருண்டோடுகின்றன. சிஷ்யரும் தனது பாடத்தை முடித்துக்கொண்டு குருவிடம் விடைபெற்றுச் சென்று விடுகிறார்.

சிஷ்யரும் குருவாகிவிடுகிறார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது குருவை சந்திக்க அவரது குடிசைக்கு செல்கிறார். அங்கு யாரும் இல்லை. எப்போதோ வந்த வெள்ளத்தில் குடிசை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்றும், குருவும் குழந்தைகளையும் அதற்கு பிறகு காணவில்லை என்றும் அங்கிருக்கும் மக்கள் சொல்கின்றனர்.

மிகுந்த வருத்தத்தோடு சென்று விடுகிறார் சிஷ்யர். ஒரு நாள் கங்கையில் குளித்துக்கொண்டிருக்கும் போது கால் தடுக்கி விழ இருந்தவரை ஒரு வாலிபன் தாங்கிப்பிடிக்கிறான். அவனது முகத்தைப் பார்த்த குரு ஒரு கனம் ஸ்தம்பிக்கிறார். குருவின் அதே முகம். பிறகு விசாரிக்கும் போது அவன் தான் குருவின் மகன் தான் என்று ஒத்துக்கொள்கிறான். பிறகு பிழைக்க வேலை இல்லாததால் தான் திருடனாக மாறிவிட்டதாக கூறுகிறான். சிஷ்யர் அவனது அக்காவைப் பற்றிக் கேட்க அவன் “அவளைப் பற்றிக் கேட்காதீர்கள். இங்கு தான் கேவலமான தொழிலைச் செய்து கொண்டிருக்கிறாள்” என்று கோபத்துடன் சொல்கிறான்.

சிஷ்யர் அவளைப் பார்க்க செல்கிறார். அவள் தான் செய்தது தவறு தான் என்றும் எனினும் வாழ்வதற்கு வேறு வழி தெரியவில்லை என்றும் சொல்கிறாள். சிஷ்யர் அவளுக்கு ஒரு வழி சொல்கிறார் : நீ தினமும் உன்னிடம் வரும் ஆண்களிடம் நூறு முத்துக்கள் கொடுக்க வேண்டும் என்று கேள் என்கிறார். ஆனால் அவ்வாறு கிடைக்கும் முத்துக்களை நீ மறுநாளே செலவழித்து விட வேண்டும் என்றும் கூறுகிறார். அவளும் அப்படியே செய்கிறாள். யாரும் அவளிடம் வரவில்லை. மணி இரவு பணிரெண்டு நெருங்கிக்கொண்டுருக்கிறது. இவள் பதட்டமடைகிறாள். மணி பணிரெண்டு அடிக்கப்போகும் போது ஒரு மனிதன் தலையில் துண்டைப் போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு நூறு முத்துக்கள் கொடுத்து விட்டுப் போகிறான். மறுநாளும் யாரும் வராமல் இருக்க சரியாக பணிரெண்டு மணிக்கு ஒரு மனிதன் முகத்தை மறைத்துக் கொண்டு முத்துக்களைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான். அவள் சந்தோஷமாக சிஷ்யரிடம் வந்து நடந்ததைக் கூறி நன்றி சொல்கிறாள்.

சிறுது நாட்களுக்குப் பிறகு சிஷ்யர் திருச்செந்தூரின் கடலில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதான கிழவன் கடலுக்குள் சென்று ஏதோ எடுத்துக்கொண்டு வந்து கரையில் இருந்த ஒரு குழியில் போட்டு விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகிறார். குழிக்குள் முத்துக்கள் இருப்பதைப் பார்க்கிறார் சிஷ்யர். கிழவர் யார் என்று பார்க்க, நம்ப பிரம்மா.

பிரம்மா சிஷ்யரைக் கண்டுகொண்டு “நீ பாட்டுக்கு அவ கிட்ட நூறு முத்துக்கள் கொடுத்தாதான் ஆச்சுன்னு சொல்லசொல்லிட்ட, யாரு அவளுக்கு நூறு முத்துக்கள் கொடுப்பதாம்?” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கடலுக்குள் முத்தெடுக்க சென்றுவிட்டாராம்.
அவர் தலையெழுத்து அம்புட்டுதேன் என்பதோடு முடிகிறது கதை.

***

தன் எழுதிய கவிதை ஒன்று : பிப்ரவரி 14 ஸ்பெஷல்

என் உதடுகள்
இப்போது
குளிர்கிறது
போர்த்தக்
கிடைக்குமா
உன் இதழ்கள்!

***

(தொடரும்)

 

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 3

டிசம்பர் 4, 1984

UCIL இன் மானேஜேர் ஜே.முகுந்த் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஐந்து பேர் டிசம்பர் மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். தொழிற்சாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது, CBI விசாரணையை ஆரம்பித்தது.

அதேசமயத்தில், அமேரிக்காவில், டிசம்பர் மூன்றாம் தேதி பின்னிரவில், டான்பரியில், கனெக்டிக்கட்டில் இருக்கும் Union Carbide Corporation (UCC) தலைமை அலுவலகத்தில், ஒரு டெலக்ஸ் பிரின்டர் சட்டென்று உயிர்பெற்றது. போப்பால் பிரிவில் ஒரு வால்வ் பழுதடைந்து விட்டது என்றும் உயிர்பலி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்ற மிகச்சுருக்கமான தகவலைக்கொண்டிருந்தது அது. பின்னர் செய்தி பெரிய அளவில் கசிய ஆரம்பிக்க அந்த ராட்சத தொழிற்சாலை அதிர்ச்சியில் உரைந்தது.

“போப்பாலில் நடந்து மிகவும் எதிர்பாறாத ஒன்று. இதுக்கு முன்னர் இது போல் எதுவும் நடந்ததில்லை. மேலும் உலகத்திலே பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்களிடம் தான் சிறப்பாக இருக்கிறது” என்பது தான் முதன் முதலில் UCC வெளியிட்ட அறிக்கை. UCC பீதியில் உரைந்திருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை. அமெரிக்காவை இந்தச் செய்தி சென்றடைந்த சில மணி நேரத்திலே, MIC தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் விர்ஜீனியாவில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைகள் நிறுத்தப்பட்டன.

செவ்வாய்கிழமை காலை 4:30 மணியளவில் சில முக்கியமான உயர்மட்ட அதிகாரிகள், இழந்த UCC யின் கவுரவத்தை சீர் படுத்த மிகப் பெரிய அளவிலான பிரச்சாரத்தைத் துவக்கியிருந்தனர். போப்பாலில் பலியானவர்களுக்காக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் ஆறாம் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்கு UCC யின் அனைத்து அலுவலகத்திலும் கொடி அரைக்கம்பத்திலே பறந்தது.

UCC பலரின் நிர்பந்தத்திற்குப் பிறகு “இவ்வளவு பெரிய அளவிலான சேதம் விளையக்கூடும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை” என்று ஒத்துக்கொண்டது. ஆனால் போப்பாலில் என்ன தவறு நடந்தது என்பதைக் கூற மறுத்தது. உயர் மட்ட அதிகாரிகளிலிருந்து, டாக்டர்ஸ், மானேஜர்ஸ், பொறியாளர்கள் என அனைவருமே வாய் திறக்கவில்லை. அதே சமயத்தில், UCC, அமேரிக்காவில் இது போல நடக்க வாய்பில்லை என்று தொடர்ந்து உறுதியளித்துக்கொண்டிருந்தது, விர்ஜினியாவில் மிக அதி நவீன பாதுகாப்பு விசயங்கள் இருக்கிறது பயப்படத்தேவையில்லை என்றது.

உலகநாடுகள் கடுமையாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டன. Breziero, France இல் இருந்த, UCC க்கு சொந்தமான, MIC ஐ வைத்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது. மக்கள் அதை மீண்டும் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரேசில் MIC சேமிப்பைத் தடைசெய்தது. Livingston, Scotland, UCC கொடுத்திருந்த, புதிய தொழிற்சாலை தொடங்கும் திட்டம் ஒன்றை நிராகரித்தது.

அடுத்த மூன்று நாட்களில் UCC பங்குகளின் விலை வால்மார்ட்டில் சடசடவென சரிய ஆரம்பித்தது. இதனால் UCC க்கு ஏற்பட்ட நஷ்டம் ஏறக்குறைய முன்னூறு மில்லியன் டாலர். ஆனாலும் UCC தான் திவாலாகி விட்டதாக ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்திருந்த பேட்டியிலும் எந்தவித பதட்டத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. “எங்களுக்கு இருக்கும் இன்சூரன்ஸ் மற்றும் பிற வருமானங்கள் நன்றாகவே இருக்கின்றன. எங்களது தற்போதைய நிதி நிலவரம் சுபிட்சமாகவே இருக்கிறது” என்றே கூறினார்கள். உலகம் இதை நம்பியது. உடனே பங்கு சந்தையில், UCC யின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

டிசம்பர் 7, 1984

அப்பொழுது வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) தான் UCC யின் சேர்மேனாக இருந்தார். அவர் டிசம்பர் 7, வெள்ளியன்று இந்த சம்பவத்தை விசாரனை செய்ய போப்பால் வந்தடைந்தார். “எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பாகச் செய்வோம்” என்று அவர் அமெரிக்கா புறப்படும் முன்னர் உறுதியளித்தார்.

அவருக்கு டெல்லியில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது, போப்பாலுக்கு அவர் பாதுகாப்பாக அழைத்துச்ச்செல்லப்பட்டார். அவர் போப்பாலை வந்தடைந்ததும் போலீஸ் அவரை கைது செய்தது. UCC யின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால், நடந்து முடிந்த துயர சம்பவத்துக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கருதப்பட்டது.

UCIL இன் கெஸ்ட் கவுஸ்சில், அவர் ஆறு மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்து, இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அவர் டெல்லிக்கு மீண்டும் ரகசியமாக அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து யூனியன் கார்பைடுக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் அவரை பத்திரமாக அவரது சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றது. அதற்கப்புறம் அவர் நீதிமன்றத்திற்கு வரவேயில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று நமது நீதிமன்றம் அறிவித்தது.

டிசம்பர் 10, 1984

அமெரிக்காவுக்கு திரும்பியவுடன் வாரன் ஆன்டர்சன், டிசம்பர் பத்தாம் தேதி ஒரு பத்திரிக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். “இந்தியாவில் உயிரிழந்தவர்களுக்கு சரியான தொகை இழப்பீடாக வழங்கப்படும். இதனால் கம்பெனியின் நிதி நிலவரம் எந்த விதத்திலும் மோசம் அடையாது” என்றார். அவர் இரண்டு விசயங்களை திரும்பத் திரும்ப சொன்னார். ஒன்று: இந்த துயர சம்பவத்தால் கம்பெனி எந்த விதத்திலும் பாதிப்படையாது. இரண்டு: இந்தியாவில் நடந்த – சந்தேகமில்லாமல் உலகத்திலே நடந்த மிக மோசமான – விபத்துக்கு கம்பெனி எந்த வகையிலும் பொறுப்பல்ல.

1945 ஆம் ஆண்டு ஒரு சாதரண சேல்ஸ் மேனாக வேலையில் சேர்ந்த வாரன் ஆன்டர்சன் 1982 இல் அந்த கம்பெனியின் CEO வாக வள்ர்ச்சியடைந்திருந்தார். ஒரு
சேர்மேனாக அவர், கம்பெனியின் செல்வாக்கை உறுதியாக மற்றும் வெற்றிகரமாகவே நிலைநாட்டினார்.

மற்ற தொழிற்சாலைகள் போலவே UCC யும் உற்பத்தியை மனதில் கொண்டே இயங்கிவந்தது. அவர்களது தயாரிப்பை, அவர்கள் தங்களது கணக்கு புத்தகத்தின் எண்ணற்ற படங்களாக, கிராப்பாகத்தான் கண்டார்கள். இந்த தொழிலில் உயிர் பலி இருக்கும் பட்சத்தில், லாபக்கணக்கிலிருந்து சில எண்களை மட்டுமே கழிப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை.

டிசம்பர் 12, 1984

மறுபுறம், போப்பால் அரசுக்கு பிரச்சனைகள் மேலும் மேலும் குவிந்தவாறு இருந்தது. மக்களின் பட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது. யாரைத்தான் நம்புவது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நம்பிக்கையற்ற குழப்பான ஒரு இருண்ட வாழ்க்கையை அவர்கள் மௌனமாக கழித்துக்கொண்டிருந்தனர்.UCC யின் இன்னொரு டாங்க்கிலிருந்த -E611- பதினைந்து டன் MIC எப்படி அழிப்பது -அல்லது நீர்த்தப்படுத்துவது- என்பதே மாநில அரசின் தற்போதைய தலையாய வேலையாக இருந்தது. டிசம்பர் 12 அன்று, ஆபரேசன் பெயித் (operation faith) என்ற திட்டம் முதலமைச்சர் அர்ஜுன் சிங்கால் அறிவிக்கப்பட்டது. இது உண்மையைச் சொல்லப்போனால், டாங்கிலிருந்த MIC ஐ அழிப்பதற்காவே -or rather neutralize- ஏற்படுத்தப்பட்டது. டிசம்பர் 16 அன்று செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆபரேசன் பெயித் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையூட்டுவதற்கு முயற்சித்தது. பள்ளி கல்லூரிகள் டிசம்பர் 23 வரை திறக்கப்படவில்லை. இந்த MIC ஐ நீர்த்தப்படுத்து செயலைப் பற்றி மிகப்பெரிய அளவில் ரேடியோ மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. மக்களின் நம்பிக்கையைத் திரும்பப்பெற தொழிற்சாலைக்கு அருகிலிருந்த மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு முகாம்கள் அமைக்கும் பணி கவனமாக செய்யப்பட்டது.

ஏற்கனவே மனதளவில் பாதி இறந்திருந்த போப்பால் மக்கள் யாரிடமும் நம்பிக்கை வைக்க தயாராக இல்லை. துன்பத்தை நேரில் கண்டு அனுபவித்த மக்கள் ரேடியோ சொல்வதையா கெட்க்கப்போகிறார்கள். அவர்கள் எங்கெங்கோ ஓடினார்கள். பஸ் கூரையிலும், ரயில் கூரையிலும், ஏன் ரயில் பெட்டிகளை இணைக்கும் சங்கிலிகளில் கூட அவர்கள் பயணம் செய்தனர். ஆஸ்பத்திரிகளிலிருந்து நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படாமலேயே மாயமாய் மறைந்தனர். மக்கள், தங்கள் வாழ்க்கை முழுதும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை, வங்கிகளிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறினர். பெட்ரோல் பம்புகளின் நீண்ட வரிசைகளில் அவர்கள் தவமாய் காத்துக் கிடந்தனர். நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உலகத்தின் பல திசைகளிலிருந்து வந்திருந்த மக்கள் ஒரேயடியாக போப்பாலைக் காலி செய்தனர். சிலர் தங்களது சொந்தங்களை ஏதும் எழுதப்படாத சமாதிகளில் விட்டுச்சென்றனர்.

UCC க்கு அருகில் வாழ்ந்தவர்களுக்காக பதினோறு முகாம்கள் அமைக்கப்பட்டன. ஆனால் ஏழையிலும் ஏழைகளே -நகரத்தை விட்டு வெளியேற இயலாதவர்களே- இந்த முகாம்களில் தங்கினர். ஆபரேசன் பெய்த்தைப் பற்றிய விளம்பர போர்டுகள், காலியான வீதிகளில், பேய்களைப்போல காவல் காத்துக்கொண்டு, கொடிய தனிமையில் சோகத்தோடு நின்றுகொண்டிருந்தன.

ஆபரேசன் பெயித் பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட யாருமற்ற தனிமையிலே தான் நடந்தது. அரசு அலுவலகங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகள் பணியாளர்களை நகரத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க அவர்கள்து விடுமுறைகளை ரத்து செய்தன. ஆனால் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தப்பியோடும் மக்கள் அதிகாரிகளின் சம்மதத்திற்காக காத்துக்கிடக்கவில்லை. அன்று மட்டும் எழுபதினாயிரம் மக்கள் நகரத்தைக் காலி செய்தனர் என்று அரசு அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது.

(தொடரும்)

 

நன்றி: Suroopa Mukherjee

Translated from Suroopa Mukherjee’s BHOPAL GAS TRAGEDY : The Worst Industrial Disaster in Human History.

ஆயிரம்கால் இலக்கியம் – 6

புதுமைப்பித்தன் தன் சிறுகதைகளில் என்றைக்குமே எந்த இலக்கணங்களையும் கடைப்பிடித்ததில்லை. சொல்லப்போனால் இலக்கணங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்த முதல் எழுத்தாளர் அவர் எனலாம். இதைத்தான் எழுத வேண்டும் இதை எழுதக்கூடாது என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? அனைத்துமே எதார்த்தம் தான். ஆனால் எல்லா எதார்த்தங்களையும் சொல்லமுடியுமா? பிரபல இயக்குனர் மகேந்திரன் கூட காட்டக்கூடாத சில எதார்த்தங்களைத் தான் காட்டித் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒரு லிமிட், பிரேக்கிங் பாய்ன்ட் இருக்கிறது. அந்த வட்டத்துக்குள்ளே (சிலருக்கு சதுரம்!) தான் அனைவரும் இருப்போம். சிலருக்கு டயாமீட்டர் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக வட்டத்தின் மையப்புள்ளியும் வட்டமும் ஒரே அளவாக இருக்கிறது. குளோபலைசேஷனால் விரிந்து வரும் இந்த உலகத்தில் எதுவும் தவறில்லை. எதுவும் சரியில்லை. ஒரு நாடு தனது நாட்டில் தூக்குத்தண்டனையை ரத்து செய்கிறது. தூக்குதண்டனை தவறு என்கிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் (அல்லது மேற்பார்வையின் கீழ்) இருக்கும் மற்றொரு நாட்டில் தான் சிறைப்பிடித்த கைதிக்கு தூக்குத்தண்டனை வழங்குகிறது. அந்த வீடியோ அனைவரது கைகளிலும் கிடைக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறது. எது சரி? எது தவறு? ஓரினச்சேர்க்கை தவறு என்று சிலர் நினைக்கலாம். வாதாடலாம். ஏன் நானும் அப்படித்தான். ஆனால் சிவபாலனின் பதிவில் ஒருவர் இட்ட பின்னூட்டம் என்னை யோசிக்க வைத்தது. “ஒரு வேளை நமது மகனோ மகளோ இந்தத் தவறை செய்தார்கள் என்றால், இந்த ஒரு தவறுக்காக அவர்களை நாம் வெறுத்து ஒதுக்குவோமா?” அவரவருக்கு அவரவர் நியாயங்கள். நம் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், சாதி சனங்கள் என்று வரும்போது நியாயங்கள் ஊமையாகின்றன. சுயநலமே விஞ்சி நிற்கிறது.

புதிமைப்பித்தன் இவ்வாறு கூறுகிறார்:

“….இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”

– புதுமைப்பித்தன் கட்டுரைகள், 1954

இதில் எனக்கு ஒன்றோடு உடன்பாடு இல்லை – அது இராவணனை குரூரமே அவதாரமானவன் என்றது. இராவணன் குருரமே அவதாரமானவனா?

புதுமைப்பித்தனின் கதைகளில் எனக்கு ரொம்பப்பிடித்தமான கதை இது. அவரது கதைகள் பெரும்பாலும் படித்த பிறகு சிறிது நேரம் யோசிக்க வைக்கும். அவரது கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான அம்சம் அவரது கதைகூறும் விதம். நரேடிவ் ஸ்டைல். கதையை கதையாக சொல்ல மாட்டார். கதைகளைவிட நம்மைச் சுற்றிப் பினைந்திருக்கும் சமூக அவலங்களே கதைகள் தோறும் நிறைந்திருக்கும். சமூக அவலங்களை கிண்டல் கலந்து சொல்லுவதால் அவர் நிறைய நபர்களின் விமர்சனங்களைப் பெற்றார். இன்றைக்கும் தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் புதுமைப்பித்தனே. பதிலுக்கும் இவரும் சலைத்தவரில்லை. எல்லோரையும் போட்டுத்தாக்குவார். நமது வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல. அனைவராலும் – இன்றைக்கும்- மிகச்சிறந்த நாவலாசிரியராக மதிக்கப்பட்ட கல்கி அவர்களைக்கூட இவர் விட்டுவைக்கவில்லை. தவறு (?!) எங்கிருந்தால் என்ன?

எதிலும் ஒரு நையாண்டியை எளிதாக புகுத்திவிடக்கூடியவர் அவர். பல சமயங்களில் ஐந்து பக்க கதையில் மூன்று பக்கம் தாண்டிய பிறகும் கூட கதைக்கு வந்திருக்கமாட்டார். இந்தக்கதையிலும் அப்படியே. பொன்னகரத்தைப்பற்றியே இரண்டு பக்கங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். பிறகு சட்டென்று கதைக்கு தாவுகிறார். அவரைப்பொருத்தமட்டில் சுகம் துக்கம் இரண்டிலும் ஒரு விரக்தியான ஹாஸ்யம் கலந்திருக்கும். இந்தக் கதையில் அவர் சொல்ல எடுத்துக்கொண்டிருக்கும் கருத்து கற்பு. கதையின் பெயர்: பொன்னகரம்.

முருகேசன் ஜட்கா வண்டி (அந்தக்காலத்து குதிரை வண்டி) ஓட்டுபவன். அவன் மனைவி அம்மாளு, அவன் தம்பி, அவன் தாயார் அனைவரும் உயிர்வாழ்வது முகேசன் ஜட்கா வண்டி ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில் தான். அம்மாளுவும் ஏதோ கூலி வேலைக்கு போகிறாள். அவர்கள் வசிப்பது பொன்னகரம் எனப்படும் ஒரு சேரி. அந்த சேரியை புதுமைப்பித்தன் வர்ணிப்பதே (!) மிக அழகு.

ஒரு நாள் முருகேசன் குடித்துவிட்டு ஜட்கா ஓட்டியதில் ஜட்கா கவிழ்ந்து முருகேசனுக்கும் குதிரைக்கும் பயங்கர அடி. முருகேசனுக்கு உள் காயம். அவன் குடித்திருந்ததால் காயம் அவனுக்கு வலிக்கவில்லை. அம்மாளு ஏதோ அரைத்து வீகக்த்திற்குப் பூசியபின்னர் தான் முருகேசன் கொஞ்சமாவது பேசினான். அவனுக்கு பால் கஞ்சி வேண்டுமாம். அம்மாளுவுக்கு கூலி போட இன்னும் நாட்கள் இருக்க பால் கஞ்சிக்கு ஏது பணம்?

இனி புதுமைப்பித்தனின் வரிகள்:

அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.
‘கும்’மிருட்டு. பஞ்சாங்கத்தின் படி இன்றைக்கு சந்திரன் வர வேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்துகொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?
எப்பொழுதும் போல் இரைச்சல் தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாகிவிட்டது. திரும்பி வருகிறாள்.
சந்தின் பக்கத்தில் ஒருவன். அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் கண் வைத்திருந்தவன்.
இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம். புருஷனுக்கு பால் கஞ்சி வார்க்கத்தான்.
என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீரக்ளே! இது தான், ஐயா, பொன்னகரம்!

நல்ல வேளையாக தமிழ் குடிகளைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கதையினைப் படிக்கவில்லை. இல்லையேல் புதுமைப்பித்தனுக்கு சொர்க்கத்திற்கு சம்மன் அனுப்பியிருப்பார்கள்.

நிர்மல் ஒருமுறை எனக்கு பின்னூட்டம் அளிக்கும் போது “ஜெயமோகனின் கதைகளை சுருக்கமாகக் கூறமுடியாது” என்றார். உண்மைதான். ஜெயமோகனின் கதைகளையே சுருக்கமாக கூறமுடியாது என்றால், புதுமைப்பித்தனின் கதைகளை, கண்டிப்பாக முடியவே முடியாது.

அவரது நக்கலையும், நையாண்டியையும் ரசிப்பதற்கே, கதையைப் படிக்கலாம். இந்தக் கதையில் சில:

அவர் பொன்னகரத்தை விவரிக்கும் போது:

-வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக ‘முனிசிபல் கங்கை’ -அல்ல, யமுனை தானே கறுப்பாக இருக்கும்?

-பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு மீன் பிடித்து விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில் மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம்,ஊசிய வடை; இத்யாதி உருண்டு வரும்.

-ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது.போகக்கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்கு தெரியுமா? “போனால்” தான் பெற்றோருக்குத் தான் பாரம் கொஞ்சம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, ‘கிளாக்ஸோ’ ‘மெல்லின்ஸ் பூட்’ குழ்ந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமல் இருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று “குட்மார்னி’ சார்!” என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அது தான் அவர்களுக்கு கிடைக்கும் ஆரம்பக்கல்வி.

-எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். ‘டல் ஸீஸ’னில் பசியை மறக்க வேறு வழி? பசி, ஐயா, பசி! ‘பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்’ என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உனக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!

மற்றொரு கதை : ஒரு கொலை அனுபவம்.

புதுமைப்பித்தன் கொலைக் கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறாரா என்று படிக்கத்தொடங்கிய எனக்கு ஏமாற்றம். புதுமைப்பித்தனின் திரில்லர் முயற்சி. பல புதுமைப்பித்தன்கள் கதையில் அருகிறார்கள். குத்திக்கொல்கிறார்கள். புதுமைப்பித்தன் கனவிலிருந்து முழிக்கிறார். பக்கத்தில் எழுதுகோல், காகிதம். துப்பறியும் நாவல் எழுத முயற்சிசெய்து தூங்கியிருக்கிறார். பிறகு சலிப்போடு சொல்கிறார்.

-துப்பறியும் நாவல் எழுதுவது என்றால் லேசா? தூக்குதண்டனை இல்லாமல் ஆடக்ளைக் கொல்ல வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்ப? அந்த தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக்கொண்டு நாயுடன் துரத்த என்னால் முடியாது!!

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 2

தொழிற்சாலைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தொகை அடர்ந்த பகுதியில், மக்கள் வீட்டுக்குள்ளே தான் இருந்தனர், நல்ல உறக்கத்தில். தூரத்து இடியின் ஓசை போல ஒரு சத்தம் அவர்களை தூக்கத்திலிருந்து விடுவித்தது, மற்றொரு தூக்கத்தை நோக்கி அழைத்தது. அவர்கள் மெதுவாக வீடுகளை விட்டு வெளியேறியபோது பயம் கலந்த அலறல் சத்தத்தையே கேட்டனர். சிறிது தூரத்தில் தொழிற்சாலைக்கு மேல் வெண் மேகங்களைக் கண்டனர். எங்கோ தீ பிடித்திருக்கிறது என்று தவறாக எண்ணிக்கொண்டனர். கூர்ந்து கவனித்தவர்கள் மட்டுமே தொழிற்சாலைக்கு வெளியே பைப்பின் வழியே நச்சுப்புகை வெளியேறிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர்.

பிளாட்பாரத்தில் பாதுகாப்பின்றி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் முதலில் உயிரிழந்தனர். அதில் ஏனையோர் குழந்தைகள். மறுநாள் காலை அவர்களது உடல்கள் போர்வைகளால் மூடப்பட்டிருந்தது. ஊயிரிழந்தப்பின் பாதுகாப்பு. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றோர்கள் – ஓடி தப்பிக்க முடியாதவர்கள்- பெரிய எண்ணிக்கையின் மாண்டனர்.

முடிந்தவர்கள், ஓடினர். கூக்குரலிட்டு, தட்டுத்தடுமாறி, அருகில் இருந்தவர்களை இழுத்துக்கொண்டு அவர்கள் எந்த திசைகளிலெல்லாம் ஓடமுடியுமோ, அந்த திசைகள் எங்கும் ஓடினர். குழப்பத்தில் சிலர் தொழிற்சாலையை நோக்கி ஓடினர் – நச்சுபுகையின் பிறப்பிடத்தை நோக்கி.

அதற்கப்புறம் அந்த நகரம் தான் இது வரை சந்தித்திராத மிகப்பெரிய குழப்பத்தை சந்தித்தது. குடும்பங்கள் பிரிந்தன. மிக வேகமாக ஓட முடியாதவர்கள் எஞ்சி நின்றனர். பெண்கள் சாலைகளில் விழுந்து கிடந்தனர். பீதியில் கண்மூடித்தனமாக ஓடியதில் குழந்தைகள் நசுக்கப்பட்டனர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு எதிர்திசையில் வந்தவர்களை முட்டித்தள்ளினர். சிலர் லாரிகளிலும், டெம்போக்களிலும், ஆட்டோவிலும், ரிக்ஷாவிலும் ஏறினர். வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஏறிக்கொண்டனர். அவர்களது கார்கள் வழியெங்கும் பீதியடைந்த கும்பல்களால் வழி மறிக்கப்பட்டன. அவர்கள் கார்களின் மேல் ஏற முற்பட்டனர். அதற்கப்புறம் சில நேரத்தில் இராணுவம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது.

இராணுவம் தங்களால் முடிந்தவரை மக்களை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். வாகனங்கள் ஏற்படுத்திக்கொடுத்தனர். முதல் இரண்டு நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊரை விட்டு வெளியேறினர்.

போபாலின் வெளிபுறத்தில் பலர் உடல் பாதிக்கப்பட்டு பயத்துடன் உரைந்து கிடந்தனர்.தனிமையில் கைவிடப்பட்ட அவர்கள் தங்களது உறவுகளைத்தேடி அலைந்தனர். கோபமடைந்த சில மக்கள் மருத்துவமனை நோக்கி நடந்தனர். ஹமீதியா மருத்துவமனை (Hamidia Hospital) முதல் நாளிலே 25000 பாதிக்கப்பட்ட மக்களை சிகிச்சைக்குள்ளாக்க முயன்றது. அது எந்த வகையிலும் அந்த மருத்துவமனையால் சமாளிக்க முடியாத எண்ணிக்கை. தொடர்ந்து வேலை செய்த கலைப்படைந்த மருத்துவர்கள் தங்களால் முயன்றதை இயன்றதை செய்தனர். அருகிலிருந்த காந்தி மருத்துவ கல்லூரியில் (Gandhi Medical College) உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் எழுப்பி உதவிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழப்பத்தில் மருத்துவர்கள் பலருக்கு இறப்பு சான்றிதழ் (Death Certificate) வழங்க மறந்தனர். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்னர் மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

இரவு முழுதும் நகர்ந்த புகை ஏரியை நோக்கி சென்றது. ஏரி தனது ஈரப்பதத்தால் புகையின் நச்சுத்தன்மையை தளர்வடையச் செய்தது. சொல்லப்போனால் எஞ்சியிருந்த மக்களை காப்பாற்றியது அந்த ஏரி தான்.

இந்த பேரிடர் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது காலை ஒரு மணிக்குப் பின்னர் தான். ரோந்துப் பணியிலிருந்த காவலர் ஒருவர் தனது கன்ட்ரோல் ரூமிற்கு வயர் லெஸ் செய்தி அனுப்பினார். கன்ட்ரோல் ரூமிலிருந்து எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. எஸ்.பி சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தார்.

அதிர்ச்சியும் குழப்பமும் எங்கும் நிறைந்திருந்தது. யாருக்கும் என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. புகையின் இயல்பினை யாரும் அறிந்திருக்கவில்லை.தீயணைப்பு படையினரும், டாக்டர்களும், ஆம்புலன்ஸ்களும் துரிதமாக செயல்பட்டும், மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தனர். அவர்களது சேவைகள் பல முறை துண்டிக்கப்பட்டன. மாணவர்களிடமும், இராணுவத்திடமும், காவல்துறையினரும், இன்னபிற மக்களின் சேவைகள் ஒருங்கிணைப்பின்றி சிதறிக்கிடந்தன. இணைக்க யாரும் இல்லை. ஆனால் அவர்களது சேவைகளில் துணிச்சலும், தீர்க்கமும், சோர்வின்மையும் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் எவரிடத்திலிருந்து உதவி உடனடியாக கிடைத்திருக்க வேண்டுமோ அவர்கள் மிகுந்த அமைதியைக்கடைப்பிடித்தனர். UCIL ஐ தொடர்பு கொள்ள முயன்ற டாக்டர்களும், காவல்துறையினரும் தொடந்து தொடர்பு கொள்ள முடியாமல் திண்டாடினர். அவர்களிடமிருந்து பதிலே இல்லை. சொல்லப்போனால் யாரைத்தொடர்பு கொள்வது, அங்கே தான் யாருமே இல்லையே. பெரும்பாலான தொழிலாளர்கள் இடத்தை காலி செய்திருந்தனர். அடுத்த சில நாட்களுக்கு UCIL தனது மௌன பாதையைத் தொடர்ந்தது.

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் மத்தியபிரதேச அரசே குழப்பமடைந்தது போலிருந்தது. முதலில் மக்கள் பயப்படத்தேவையில்லை என்று பொது அறிவிப்பு வெளியானது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பிறகு காலை இரண்டு மணியளவில், காவலர்கள் மக்களை உடனே ஊரைக் காலிசெய்யுமாறு கூறினர். அதற்குப்பிறகு நடந்த குழப்பத்தில் போலீசார் இரண்டு விசயத்தை மக்களுக்கு அறிவுறுத்தத்தவறினர். அது, முதலில், மூக்கைச் சுற்றியும், வாயைச் சுற்றியும் ஒரு ஈரத்துண்டைக் கட்டிக்கொள்வது. மற்றொன்று, காற்று வீசும் திசைக்கு எதிரே ஓடுவது.

இந்த நாளில் பிறந்த ஒரு பெண் குழந்தை – படத்தில் இருப்பவர்- “கேஸ் தேவி” என்றழைக்கப்படுகிறார். இவருக்கு தற்போது 21 வயதாகிறது.

எத்தனை மக்கள் அந்த இரவில் மாண்டனர்? திட்டவட்டமாக எதுவும் கூற இயலாது. UCIL ஐ சுற்றியிருந்த பகுதிகளில் – ஜெயபிரகாஷ் நகர், சோலா கேச்சி, காஜி கெம்ப் மற்றும் நிஷாத் பூர் – தான் இழப்பு அதிகமாக இருந்தது. இவர்கள் தொழிற்சாலையிலிருந்து 200-300 மீட்டர் தொலைவிலேதான் இருந்தனர். அரசு காட்டிய எண்ணிக்கை 2000. புதைப்பதற்கு பயன்படுத்தப் பட்ட துணிகளின் எண்ணிக்கை, 8000 மக்கள் இறந்திருக்ககூடும் என்று சொல்கிறது. அதற்கப்புறம் வாரம், மாதம், வருடக்கணக்காக இறந்த பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டியது.

உண்மையாக, அன்றைய பெரிய பிரச்சனை இறந்தவர்கள் அல்ல. பின்னாட்களில் அவர்கள் அடையாளம் காணப்படாமல். யாரும் சொந்தம் கொண்டாடாமல், மொத்தமாக புதைக்கப்பட்டனர். எரிப்பதற்கு மரம் இல்லாமல் போகவே மண்ணென்னெய் ஊற்றி இறந்தவர்களை எரித்தனர். இடம் பத்தாமல் ஏற்கனவே, எப்போதோ புதைத்த இடங்களைத் தோண்டினர்.

ஆனால் தொடர்ந்து உயிரோடிருந்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மூச்சுதிணறல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, சில சமயம் கண் பார்வையைப் பறிகொடுத்து, அவர்கள் ஒரு முடிவேயில்லாத ஒரு கொடிய கனவை கடந்து கொண்டிருந்தனர்.

அடுத்த சில நாளில் அரசு மறுபடியும் மறுபடியும் உணவு, காற்று மற்றும் தண்ணீர் சுத்தமாகி விட்டது என்று அறிவித்துக்கொண்டேயிருந்தது. ஆனால் உண்மையாக இவை சோதனைகு உட்படுத்தப்படவில்லை. 1600 க்கும் மேற்பட்ட விலங்குகள் -நாய்கள், மாடுகள் மற்றும் ஆடுகள்- இறந்தன. விலங்குகளின் அழுகிக்கொண்டிருக்கும் உடல்கள் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயத்துடன் இருந்தன. முடிவாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பத்து புல்டோசரின் துணையுடன் அவை புதைக்கப்பட்டன. பிளீச்சிங் பவுடரும், காஸ்டிக் சோடாவும் காற்றின் நச்சுத்தண்மையை நீக்க தூவப்பட்டன.

ஆல்-இண்டியா-ரேடியோ இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு போப்பாலில் நிலமை கட்டுக்குள் வந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் போப்பால் மக்கள் குடித்த தண்ணீர் தூய்மையாக இருந்ததா? மற்றொரு கசிவு ஏற்படுமா? உடம்பில் MIC இனால் ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமா அல்லது தற்காலிகமாகத்தான் இருக்குமா? உண்மையான பதில்கள் மக்களுக்கு கிடைக்க வில்லை. யாருக்கும் தெரியவில்லை.

பீதியடைந்திருந்த மக்கள் யார் என்ன சொன்னாலும் உடனே நம்பினர். சின்னச்சின்ன வதந்திகள் கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் மறுபடியும் இலக்கில்லாமல் ஓடத்தொடங்கினர். மக்கள் உஜைனுக்கும், சேகோருக்கும், இந்தோருக்கும் ஓடினர். அங்கே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். போப்பால் வெறுமை அதிகரித்தது. அது பேய் நகரமாக மாறியது.