காமோ சோமோ

இந்த பதிவை எழுதவேண்டிய நிலை வந்துவிட்டதை நினைக்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. மனிதர்களும் காலத்திற்கேற்றார்போல் தம்மை மாற்றியமைத்துக்கொள்கின்றனர். நடை, உடை, பேச்சு, கலாச்சாரம் என்று காலப்பெருஞ்சுழலில் இவையாவும் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. குகைகளில் வாழ்ந்து திரிந்து தன் மனம்போன போக்கில் வாழ்ந்து வந்த மனிதன் பிற்பாடு என்ன நினைத்தானோ தெரியவில்லை தன்னை நெறிப்படுத்தத் தொடங்கினான். விதிகள் வகுக்க ஆரம்பித்தான். ஒருவனுக்கு ஒருத்தி என்றான். தீங்கு செய்யலாகாது என்றான். பிறன்மனை நோக்காமை என்றான். அடுத்தவரை துன்புறுத்தினால் தண்டனை என்றான். விலங்குகள் போல இருந்த மனிதன் எதற்காக பிற்பாடு தனக்கு தானே விதிகளை வகுத்துக்கொண்டான்? அவன் என்ன கேனையனா?

கலாச்சாரம் என்ற ஒன்று எவ்வாறு பிறந்தது? எதற்காக உருவாகிறது? எவ்வாறு மாற்றம் அடைகிறது? நாம் உடுக்கும் உடை, பேசும் பேச்சு, பயிலும் பொழி, உண்ணும் சாப்பாடு, வணங்கும் தெய்வம் என்று எத்தனையோ விசயங்களில் கலாச்சாரம் மாறுபட்டிருக்கிறது. தமிழ் வெண்பா இயற்றிக்கொண்டிருந்த நாம் இன்று ஆங்கிலம், ஜெர்மனி, ஜாப்பனீஷ் என்று வகைக்கு ஒன்றாக படிக்கிறோம். பள்ளியில் கூட தமிழுக்கு பதிலாக சான்ஸ்க்ரீட் எடுத்து படிப்பவர்கள் இருக்கிறார்கள். இது வேறு. இது சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட். இது மனிதன் தன்னை இந்த உலகத்தில் இருத்திக்கொள்ள செய்யவேண்டியது. வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறன விசயங்களில் மாற்றம் தேவை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரிலே மாற்றம் தேவையா? ஒருவனுக்கும் ஒருத்தி என்பது போய், இப்பொழுது ஒருவனுக்கு ஒருவன் என்றும், ஒருத்திக்கு ஒருத்தி என்று ஆகும் நிலை அவசியம் தானா? அதை ஆதரிக்க சட்டம் தேவையா?

ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கக்கூடாது என்பது தான் அனைவரது நோக்கமாகவும் இருக்கும். ஆனால் ஒரினச்சேர்க்கையை ஆதரிப்பது போல சட்டம் இயற்றினால் அது ஊக்குவிப்பது இல்லாமல் வேறு என்ன? பாசிவிப்பதா? என்னங்கைய்யா இது? ஷியாம் பெனேகல், அருந்ததிராய், விக்ரம் சேத் பரிந்துரைசெய்திருக்கிறார்கள். நிறைய ஆங்கில நாவல்கள் வாசிப்பார்கள் போலும். வாசித்துவிட்டு போகட்டும். தவறில்லை. அதற்காக நாவலில் படித்த கதைகளை எல்லாம் பரிந்துரை செய்ய வேண்டுமா என்ன? சரி அப்படியே பரிந்துரை செய்தாலும் நாம் யோசிக்கவேண்டுமா இல்லையா? மேற்கத்திய எக்கனாமியை பின்பற்றுவது தவறில்லை. அவர்களைப் போல ஓட்ஸ் சாப்பிடுவதில் பிழையில்லை. அவர்களைப்பார்த்து, கொழுத்தும் மெட்ராஸ் வெயிலில் கோட்சூட் அணிந்து கொண்டால்கூட பரவாயில்லை. வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டாலும் தப்பில்லை. ஆனால் கலாச்சாரத்தையும் வருஙகால சந்ததியினரையும் அடியோடு பாதிக்கும் ஒரு விசயத்தை நாம் விதைக்கலாமா?

சிலர் இந்த சட்டம் ஓரினச்சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்ள உதவும் என்றும் அதன் மூலம் அவர்களை திறுத்தலாம் என்றும் பாஸிட்டிவாக யோசிக்கின்றனர். புல்ஷிட். இந்தியாவிலிருக்கும் மக்கள்தொகைக்கு இவர்கள் எங்கிருந்து திறுத்துவார்கள்? இல்லை இது போன்று திறுத்திய வரலாறு ஏதேனும் இருக்கிறதா? மது அருந்துவதை சட்டபூர்வமாக்கி என்னாவாயிற்று? எத்தனை பேர் மது அருந்துவதை நம்மால் தடுக்கமுடிந்தது? சட்டம் என்ற ஒன்று கொண்டுவந்துவிட்டால் அதை வாபஸ் பெறுவது என்பது இயலாத காரியம். இப்பொழுது யாரும் மது அருந்தக்கூடாது என்றொரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்றால் அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் சட்டபூர்வமாக்கி விட்டால் பரம்பொருள் போல ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. சிகரெட்டை போல. விக்ரம் சேத்துக்கு என்ன கவலை? வழக்கம்போல பக்கம் பக்கமாக எழுதி உலகின் மிகப்பெரிய புத்தகம் எழுதியவர் என்ற லிஸ்டில் மேலும் முன்னேறப்பார்ப்பார்.

இதில் மனித உரிமை பிரச்சனை வேறு. மண்ணாங்கட்டி. ஓரினச்சேர்க்கை மனித உரிமையா? எந்த ஊரில் சொன்னார்கள்? அமெரிக்காவிலா? நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? என்னது அத்திப்பட்டியிலா? பிறகென்ன போய் நாளைய சாப்பாட்டிற்கு என்ன வழி என்று பாரும். இல்லை உங்கள் அத்திப்பட்டி, மேப்பில் இன்னும் இருக்கிறதா என்று மற்றொருமுறை பார்த்து உறுதி படுத்திக்கொள்ளும். நினைப்பதெல்லாம் செய்தால் அதற்குப்பெயர் மனித உரிமையா? அதற்கு டெபனிஷன் வேறு. எந்த உயிரும் மற்றொரு உயிருக்கு தீங்கு ஏற்படுத்தாமல் வாழ உரிமையிருக்கிறது என்று. ஒரு மனிதன் நிர்வானமாய் இருந்தால் அதில் ஏதேனும் மற்றவருக்கு கெடுதி இருக்கிறதா? பிறகு ஏன் அது தடை செய்யப்படுகிறது? இது மனித உரிமையில்லையா? இங்கே மட்டும் கலாச்சாரம் கூரையைப்பொத்துக்கொண்டு டபக் என்று விழுகிறதோ? மது அருந்துவது மனித உரிமையா. மது அருந்திவிட்டு அந்த போதையில் நீ மற்றொரு மனிதனின் உரிமையில் தலையிடவில்லையா? மது அருந்திவிட்டு லாரியை ரோட்டில் ஒட்டாமல் ரோட்டை விட்டு கீழே மணலில் உனக்கு பயந்து கஷ்டப்பட்டு ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிவிட்டு நீ ஆலமரத்தின் கிளையில் லாரியை பார்க் செய்ய ட்ரை பண்ணதில்லையா? குடிப்பது உரிமைதான். அதனால் மற்றவர்களுக்கு மறைமுகமாக தீங்கு ஏற்படுகிறதா இல்லையா? அப்பொழுது உங்கள் டெபனிஷன் தவறாகிறதே. மதுவாவது பரவாயில்லை கவர்மெண்ட் பிச்சை எடுக்காமல் காலம் தள்ள உதவுகிறது. மிஞ்சிபோனால் ஒரு தனி மனிதனையோ, அல்லது ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டும் அப்பாவி மனிதனையோ, அல்லது ஒரு குடும்பத்தையோ தான் பாதிக்கும். இந்த ஓரினச்சேர்க்கை நம் சந்ததியினர் அனைவரையுமல்லவா பாதிக்கும். கலாச்சாரத்தை வேரோடு அழிக்குமே.

ஒவ்வொரு மனிதனுக்கு, ஒரு சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், ஏன் விலங்குக்கும் கூட ஒரு தனித்துவம் – ஐடன்டிட்டி – இருக்கிறது. அது தான் நமது அடையாளம். அதை எக்காரணத்தைமுன்னிட்டும் நாம் தொலைத்துவிடக்கூடாது. சிங்கம் என்றால் கர்ஜிக்கத்தான் வேண்டும். பிடரியில் முடி இருக்கத்தான் செய்யும். அது மனிதனைப்பார்த்து கிராப் வெட்டிக்கொண்டு ஹேர் கலரிங்கும் செய்து கொண்டால் நன்றாகவா இருக்கும். மேற்கத்தியனரின் கலாச்சாரமும் வாழ்க்கைமுறையும் வேறு. நீ இதற்கு சட்டம் வைத்திருக்கிறாயா? ஓகே. குட். அவ்வளவுதான். எங்களுக்கு இது சரிப்படாது. நாங்கள் ஓரினச்சேர்க்கையை தடுக்க என்ன செய்யலாம் என்று நாங்களே யோசித்துக்கொள்கிறோம். நமக்கு யோசிக்கத்தெரியாதா? எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிலிருந்து கட், காப்பி, பேஸ்ட் தானா? நாங்கள் – சாப்ட்வேர் மக்கள் – பரவாயில்லை.

இது கலாச்சாரத்திற்கு மட்டுமல்ல. இயற்கைக்கே விரோதமானது. தெரியாமலா இயற்கை ஆணையும் பெண்ணையும் படைத்தது. அல்லது கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவர்களுக்கு. Evolution என்றால், தன் தேவைக்காகத்தானே ஆணாகவும், பெண்ணாகவும் evolve ஆனோம். தேவையில்லையென்றால் ஆண் முட்டும் தானே பரிணாமவளர்ச்சி அடைந்திருப்பான். திருவள்ளுவர் மிகப்பெரிய அறிவாளி என்று உலகமே ஒத்துக்கொள்கிறது. அவர் காமத்துப்பாலைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அங்கே எங்காவது ஓரினச்சேர்க்கை வருகிறதா? இல்லை நமது புராணங்கள் எதிலும் இவ்வாறு வருகிறதா? இப்ப மட்டும் என்ன அவசியம் பொத்துக்கொண்டு வந்தது? இதிலும் குலோபலைஷெசனா? சுதந்திரமா? இப்படி படிப்படியாக கட்டுப்பாடுகளை இழந்து கொண்டுவந்தால் நாம் மறுபடியும் சுதந்திரமான விலங்குகளாகத்தானே ஆவோம்? நமக்கும் ஐந்தறிவு விலங்குக்கும் என்ன வேறுபாடு?

ஓரினச்சேர்க்கையாளர்களை ஒதுக்கிவிட முடியாது. அதற்காக அதை சட்டமாக்கவும் கூடாது. தண்டனையில்லையேல் குற்றம் பல்கிப்பெருகி ஆலவிருட்சமாக வளர்ந்துவிடும். ஏன் கொலையை குற்றம் என்று சொல்கிறோம்? அதற்கு அதிகபட்சத்தண்டனை வழங்குகிறோம்? குற்றம் என்பதால் தான் கொலையை செய்ய மனிதன் தயங்குகிறான். இல்லையென்றால் என்னடா என் மீசையைப்பார்த்தாடா சிரிக்கிற என்று கத்தியை சொருகிவிட்டு சாதாரணமாக செல்வான் மனிதன்.

அடக்குமுறைகளாலும் சட்டத்திட்டங்களாலும் பயத்தினாலும் தான் மனிதன் மனிதனாக இன்று வரை இருந்துவந்திருக்கிறான். அப்படி அவசர அவசரமாக சட்டமாக்க இதென்ன அடிப்படை பிரச்சனையா? இந்தியாவில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், குடிக்க தண்ணீர், படிக்க கல்வி – கன்னடத்திலோ, தமிழிலோ அல்லது லத்தீனிலோ, அதுவல்ல பிரச்சனை – அனைவருக்கும் கிடைக்கிறதா?பிறகு, இந்த சட்டத்திற்கு என்ன அவசரம்? இல்லை உங்களுக்கு பொழுது போகவில்லையா? பொழுது போகவில்லையென்றால் சாக்பீஸில் கோடு போட்டு தாயம் விளையாடுவது தானே? ஏன் காமோ சோமோ – என்ன அர்த்தம் என்று கேட்காதீர்கள் ப்ளீஸ் – வென்று என்னத்தையாவது செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நன்றி: சிவபாலன்.

கேட்பதற்கு உரிமையில்லை!

ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு மந்திரம் தான். சிலர் அவரைப் புகழ்ந்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். சிலர் அவரை விமர்சித்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். விளம்பரம் விளம்பரம் தான்.

ரஜினி வேலு பிரபாகரனுக்கு உதவி செய்திருக்கிறார். அது கடனாகவோ, ரொக்கமாகவோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதை வேலுப்பிரபாகரன் விகடனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருக்கிறார். கவனிக்க, ரஜினியின் சொந்தமோ அல்லது ரஜினியின் ரசிகர் மன்றமோ அல்லது ரஜினியோ இதைச் சொல்லவில்லை. வேலு பிரபாகரனே கூறியிருக்கிறார். ரஜினியின் நிர்பந்தத்தினாலே அவர் சொன்னார் என்று நினைத்து விட வாய்ப்பிருக்கிறது. அது சின்ன புத்தியுள்ளவர்களுக்கே சாத்தியம். ரஜினியை காட்ட சாட்டமாக விமர்சித்தவர் வேலு பிரபாகரன். தனக்கு ஒரு கஷ்டம் என்று வந்தவுடன் ரஜினியிடம் அதை சொல்லியிருக்கிறார். ரஜினி பழயதை நினைத்து உதவியிருக்கலாம். அல்லது நினைக்காமல் உதவியிருக்கலாம். உதவி உதவி தானே ஐயா? வேலுபிரபாகரனின் கஷ்டம் தீர்ந்ததா இல்லையா? உங்களுக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகிறது? மற்ற எத்தனை தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏன் உதவவில்லை என்று கேட்பது மிக மிக அபத்தமாக இருக்கிறது. ஒருவர் மற்றொருவருக்கு உதவுகிறார் என்றால் அவரிடம் போய்: ஏய் நீ ஏன் அடுத்தவருக்கு உதவவில்லை என்று கேட்பது போல் இருக்கிறது. மேலும் ரஜினி தனது படங்களில் நலிந்த தயாரிப்பாளர்களை இணைத்தயாரிப்பாளர்களாக சேர்த்துக்கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. தற்போதைய சிவாஜியில் கூட எஸ்.பி.முத்துராமனை சேர்த்திருக்கிறார். பண்டரிபாய், வீ.கே.ராமசாமியை தனது முந்தைய படங்களில் சேர்த்திருந்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். குற்றம் பார்ப்பதே குற்றம். அதிலும் நல்லவிசயத்தில் குற்றம் பார்ப்பது என்பது மிக மிக அபத்தம்.

மனோரமா ரஜினியை விமர்சித்தார். அதனால் அவருக்கு படங்கள் குறைந்தது. அதற்கு காரணம் ரஜினியாம். ரஜினி எல்லோரிடமும் சென்று மனோரமாவிற்கு வாய்ப்பு தராதீர்கள் என்று சொன்னாராம். சினிமாவிலிருந்து கொண்டே சினிமாக்காரர்களை விமர்சிப்பது – அதுவும் பெர்சனலாக – சினிமாக்காரர்களையே எரிச்சலடையச் செய்யும்.நாளை நம்மையும் விமர்சிப்பார் என்ற பயம் கூட காரணமாக இருக்கும். மேலும், ஒரு துறையில் பலசாலியாக இருப்பவரை, அந்த துறையில் இருக்கும் ஒருவர் விமர்சித்தால், மற்ற யாரும் விமர்சித்தவருக்கு ஆதரவு தர மாட்டார்கள். தாட் இஸ் நேச்சுரல். ரஜினியே வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்கள் தானாகவே வாய்ப்புத்தருவார்கள் என்பதால் கூட முதலில் ரஜினி அழைத்து வாய்ப்பு தந்திருக்கலாம். ஹீரோக்களை துதி பாடுவது என்பது புதிதல்ல, அதை சகித்துக்கொள்வதும் நமக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் படத்திலிருக்கும் ஈ. எறும்பு முதற்கொண்டு அனைத்தும் அவரைத் துதிபாடும். அப்படியிருக்க மனோரமாவும் அந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரம். ரஜினியே நீங்கள் எனக்கு வில்லியாக நடியுங்கள்; என்னைத் திட்டுங்கள் என்று சொல்லியிருந்தால் கூட அன்றைய சூழ்நிலையில், மனோரமா அதை செய்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது. அப்படியிருக்க இதைக்காரணம் காட்டி அவரை சேடிஸ்ட் என்று சொல்வது நியாயமா? நம் சுய விளம்பரத்திற்காக அவரை பிண்டம் என்று சொல்லலாமா?

ரஜினி ஏதாவது சமூகசேவை செய்திருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள் அவர் ஒரு நடிகர். அவர் தொழில் நடிப்பது. சமூக சேவை செய்வது அல்ல [அப்படியும் அவர் நிறைய செய்திருக்கிறார்]. மேலும் அவர் செய்ய வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இருக்கிறதா என்ன? கடவுள் அவரைப் படைக்கும் போது : சிவாஜிராவ், நீங்கள் தமிழகம் சென்று திருத்தொண்டாற்றக்கடவது என்று சொல்லி அனுப்பினாரா என்ன? நீங்கள் சமூக சேவை செய்வதற்கென்றே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்திருக்கிறீர்களே முதலில் அவர்கள் சமூக சேவை செய்கிறார்களா என்று பாருங்கள். பிறகு நம் ரேஞ்சுக்கு நாம் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். நீங்களும் சமுதாயத்தில் ஒரு அங்கத்தினர் தானே, ரஜினியைப் போல்.

அவர் கோடி கோடியாக அள்ளுகிறார். பிறகு இமயமலைக்கு போகிறார் என்றொரு பேட்டி வந்திருந்தது. இது என்ன அநியாயம்? அவர் சம்பாதிக்கிறார். அவர் இமயமலைக்கு செல்கிறார், இல்லை எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். உனக்கென்ன? உன் காசையா திருடிவிட்டு செல்கிறார்? படம் பார்த்த தமிழ்மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். என்ன செய்யவேண்டும்? சாம்பார் இட்லி சாப்பிடுகிறோமே சரவணபவனில், சரவணபவன் நமக்கு என்ன செய்தது என்று கேட்க முடியுமா? சாம்பார் இட்லி சாப்பிட்டாச்சா? அப்படியே ஓடிப்போயிடு. அதுதான். படம் பார்த்தீல. உன்ன யாராச்சும் தர தரன்னு புடிச்சு இழுத்துட்டு போனாங்களா? கண்டிப்பா டிக்கெட் வாங்கு இல்லேன்னா குலநாசம்னு யாராச்சும் பயமுறுத்துனாங்களா? அதுவும் முதல் நாளே பாக்கலீன்னா உனக்கு ஆயுள் தண்டனைன்னு சொன்னாங்களா? நீயாத்தான பார்த்த. நீ கொடுத்த காசு படத்துக்கு சரியாப்போச்சு. அவ்வளவுதான். மளிகைக்கடையில கடல உருண்டை வாங்குறமாதிரிதான். வாங்கிட்டியா? சாப்டாச்சா? போயிட்டேயிரு. அண்ணாச்சி உன் கடையில் நான் கடலஉருண்ட சாப்பிட்டிருக்கேன், நீ எனக்கு என்ன செஞ்சன்னு கேக்க முடியுமா? படம் புடிச்சிருந்தா பாரு. இல்லயா பாக்காத. பாத்துப்புட்டு, விசிலடிச்சுப்புட்டு ஐயோ நீ இமயமலைக்கு போனா நான் எங்க போறதுன்னு கேட்டா? சம்பாதிக்கறார் சம்பாதிக்கறார் என்றால்? வரி கட்டுகிறாரா இல்லையா?

ஐயா, நாட்ல எல்லோரும் தான் சம்பதிக்கிறோம். எல்லோரும் தான் செலவழிக்கிறோம். எல்லோருக்கும் செலவு இருக்கு. அவங்க அவங்க சக்திக்கு தகுந்தாமாதிரி. மொதல்ல நாம நம் சக்திக்கு உட்பட்டு என்ன தான தர்மம் பண்றோம். என்ன பொது நலத்தொண்டுகள் கிழிக்கறோம்னு பார்க்கனும். அதவிட்டுப்புட்டு அவன் நொல்ல, இவன் தொல்லன்னு சொல்றது வேறஒன்னுமில்ல பொறாமை அதன் விளைவாக அரசியல். அவர் ஒரு நடிகர். இன்னும் நேரடி அரசியலில் கால் எடுத்து வைக்கவில்லை. அவர் அரசியலுக்கு வரட்டும், பதவியில் அமரட்டும் அப்போது கேட்கலாம் எங்களுக்கு என்ன செய்தாய் என்று? அது வரைக்கும் நமக்கு கேட்பதற்கு உரிமையில்லை.

செய்ய வேண்டும் தான். செய்திருக்கலாம் தான். அவர் வசதிக்கு அவர் இப்பொழுது செய்துகொண்டிருப்பதைக்காட்டிலும் மிக நன்றாக செய்யலாம் தான். எத்தனையோ கிராமங்கள் வறுமையால் உலன்று கொண்டிருக்கின்றன. அதில் ஒரே ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுக்கலாம். அதற்கு வசதிகள், வேலைவாய்ப்பு என்று ஏற்படுத்திக்கொடுக்கலாம். பள்ளிக்கூடங்கள் திறக்கலாம். புதிதுபுதிதாக ரிசெர்ச்சுக்கு உதவலாம். விவசாய ரிசர்ச். உப்புத்தண்ணி ரிசர்ச். முடி கொட்டாமல் தடுப்பது எப்படி. அவருக்காவது உபயோகமாக இருக்குமே. இதை செய்ய முடியாதா அவரால்? பிறகு பணமிருந்து என்ன பயன்? – இத விட்டுபுட்டு எங்க பேச கூப்டாலும் போய் மேடையேறி, பேச கூப்டவரை நல்லவரு வல்லவருன்னு மட்டும் பேசிட்டு ஒரு கத சொல்லிட்டு போனா என்னங்க அர்த்தம்? – ஆனால் இதையெல்லாம் செய்யாதது குற்றமில்லை. இதை அவர் மட்டும் தான் செய்திருக்க வேண்டும் என்றில்லை. செல்வந்தர்களாக இருக்கும் எவரும் செய்திருக்கலாம். யார் செய்தார்கள்? தமிழ்நாட்டில் இவர் ஒருவர் மட்டும் தான் பணக்காரராக இருக்கிறாரா? வேறு எவரிடமும் பணமில்லையா?

இது தமிழகத்தின் தலையெழுத்து. என் தெலுங்கு நண்பர் ஒருவர் கேட்டார் : ஏன் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன உங்கள் பத்திரிக்கைகள் என்று. நியாயம் தானே? ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் நம்மை சினிமா என்ற போதையில் அமுக்கி வைத்திருக்கவே விரும்புகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கி. நம் ஊரில் பொழுதைப்போக்குவதற்கு வேறு விசயங்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் – தீம் பார்க் – மிக காஸ்ட்லியாக இருக்கின்றன. குடும்பத்துடன் செல்ல வேண்டுமானால் பாதி மாத சம்பளம் – சாப்ட்வேர் மக்களே நான் உங்களைப்பற்றி பேசவில்லை – எடுத்து வைக்கவேண்டும். அதைவிட சினிமா எவ்வளவோ தேவலை. சீப் அன்ட் பெஸ்ட் பொழுதுபோக்கி. 60ரூபா டிக்கெட் எடுத்து மூன்று மணி நேரம் உட்கார்ந்துவிட்டு வந்துவிடலாம். அது கொடுக்கும் தலைவலியில் வீட்டு பிரச்சனைகளை ஈசியாக மறந்துவிடுகிறோம்.

வேண்டுமானால் நாம் சினிமா – தியேட்டருக்கு போய் – பார்ப்பதை நிறுத்தலாம். இதற்குத் தான் நமக்கு உரிமை இருக்கிறது. படம் பார்ப்பதற்கு பதிலாக: அந்த நேரத்தை நம் உடம்பை பேணுவது, வீட்டில் தோட்டம் வளர்ப்பது, குடும்பத்தினருடன் – சண்டைவராமல்- முக்கியமாக தாய் தந்தையருடன் பேசிக்கொண்டிருப்பது, அவர்களது கதைகளை காது கொடுத்து கேட்பது, பிள்ளைகளை பார்க்கு பீச் என்று அழைத்து செல்வது, உறவினர் வீட்டிற்கு விசிட் -டேரா போட்டு அவர்களுக்கு செலவிழுத்து வைக்காமல்-அடிப்பது, எங்கேயாவது டிரிப் அடிப்பது, புத்தகம் படிப்பது -படித்துவிட்டு; ஜெயமோகனை: நான் உன் புத்தகம் படித்தேன் நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்ககூடாது-படிக்கதூண்டுவது, விளையாடுவது, விளையாட இடமில்லையா, எங்கே இடம் அமைக்கலாம் என்று யோசிப்பது என்று எத்தனையோ விசயங்கள் இருக்கிறது.

சினிமா பார்ப்பதை நிறுத்துவோம். அதற்கு செலவழிக்கும் காசையும் நேரத்தையும் – முக்கியமாக நேரம் -ஒருங்கினைப்போம். நல்ல விசயத்திற்கு ஸ்டிரீம் லைன் பண்ணுவோம். அது தான் நம்மால் முடிந்தது. அதை விட்டுட்டு இன்னும் எத்தனை காலம் ரஜினியையே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது? போங்கப்பா. போங்கப்பா. போய் பிள்ளைகளை படிக்க போடுங்கப்பா.

ஓட்டுரிமை

தேன்கூடு போட்டிக்கு மூன்றாவது முறையாக நான் என் சிறுகதையை சமர்பித்திருக்கிறேன். முதல் இரண்டு முறையும் அறிமுக பிளாகரான எனக்கு நானே எதிர்பார்த்திராத அளவிற்கு வாக்குகள் கிடைத்தன. சந்தோஷம். இந்த முறை என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சில நண்பர்கள் – என் பதிவுகளை தவறாமல் வாசித்துவருபவர்கள் – என் சிறுகதைக்கு வாக்களிக்க முயற்சித்து, நான் தோல்வியைத் தழுவும் முன் அவர்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.

21 ஆம் தேதி காலையிலே நான் என் அலுவலகத்திற்கு வந்தவுடன் வாக்களித்து விட்டேன். நான் வாக்களித்ததால், என்னைத் தொடர்ந்து வாக்களிக்க முயற்சித்த என் நண்பர்கள் அனைவருக்கும் இதே errror msg -ஐத் தான் பெற்றனர்.

>>Thank you for voting on this poll. The results will be announced shortly! (you already submitted an answer for this survey. If this not the case, please contact us.)

ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே server -க்கு கீழ் இருப்பதாலா? அப்படியென்றால் தேன்கூட்டில் userid, pwd எதற்கு? வெறும் server ip வைத்தே login செய்து கொள்ளலாமே. என்ன logic என்று எனக்கு விளங்கவில்லை.

சரி, அலுவலகத்தில் ஒரே செர்வருக்கு கீழ் இருப்பதால் வாக்களிக்க இயலவில்லை என்று என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று முயற்சித்திருக்கிறார், வீட்டிலும் இதே err msg தான். (இது என்ன கடவுளே, புரியாது கடவுளே!)

அவர் படைப்புகளை தேர்ந்தெடுக்கவேயில்லை. வாக்களிக்கவும் இல்லை. அவருக்கு எப்படி தேன்கூடு நன்றி சொல்கிறது?
>>Thank you for voting on this poll. தேன்கூடுக்கு ரொம்பத்தான் பவ்யம்.

ஒரே நபர் வேறு வேறு userid -க்களை create செய்து தன் கதைக்கு தானே பலமுறை வாக்களிப்பதை தடுப்பதே இதன் நோக்கம் என்பதை நான் அறியாமலில்லை, ஆனால் அதே சமயத்தில் வாக்களிக்க விரும்புபவர்களை – வாக்களிப்பதற்காகவே, userid create செய்தவர்களை – discourage செய்வதாகவே இருக்கிறது.

கள்ளவோட்டுகள் போடக்கூடாதுதான், ஓட்டே போடக்கூடாது என்றால் எப்படி?

சேர்க்கப்பட்டது:
தேன்கூடு நன்றி. இப்பொழுது என் நண்பர்களால் ஓட்டளிக்க முடிகிறது
.

ஆயிரம் கால் இலக்கியம் – 4

கடவுளுக்கு பாரபட்சம் அதிகம். இல்லையென்றால் ஒருவருக்கு நன்றாக பாடும் திறன், சிலருக்கு நச்சென்று கதை, அழகாக கவிதை எழுதும் திறன், சிலருக்கு நாட்டியத்திறமை, சிலருக்கு நுண்அறிவென்று வகைக்கு ஒன்றாக பிரித்துக்கொடுப்பாரா என்ன? அதனால் தான் உலகம் ரசிக்கும் படியாக இருக்கிறதோ? அதிலும் இந்த தபூ ஷங்கர் விசயத்தில் கடவுளுக்கு ரொம்பத்தான் தாராளம். கற்பனா சக்தியை அள்ளி அள்ளி வாரி வாரிக் கொடுத்திருக்கிறார். அவர் மட்டும் ஏன் இப்படி எழுதுகிறார்? பையன்கள் கிரீட்டிங் கார்டு கடைகளில் ஆங்கிலத்தில் நல்ல வாசகங்களைத்தேடி நேரத்தை வீணடிக்காமல் தபூ சங்கரின் படைப்புகளை ஒரு முறை வாசித்தால் உடனடிப்பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

‘என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?’
என்றா கேட்கிறாய்.

நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!

‘போதும் பார்த்தது
கண் பட்டுவிடப்போகிறது’ என்றாய்
ச்சே…ச்சே..உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.


கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்…
‘கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமா
நிலவை’ என்று.


தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வரு முறையும்
உன் உடைகளை சரி செய்கிறாய்


காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்
அவ்வளவுதான்…
நின்றுவிட்டது காற்று.


ஹ்ம்ம்ம்ம்…டூ லேட் டா முத்து.
***
ஜெயமோகன் கடைசியில் இருக்கும் முடிச்சு தான் கதையை சிறுகதையாக்குகிறது என்றார். ஒரு வகையில் சரிதான். ஆனால் கண்டிப்பாக ட்விஸ்ட் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று சில கதைகள் சொல்கின்றன. கதை சொல்லும் விதம் மிக மிக புதிதாக இருந்தால் ட்விஸ்ட் எதற்கு? அப்படியொரு கதை சில வருடங்களுக்கு முன் படித்தேன். ராஜா வல்லாரை கேப்சூல்ஸ் சாப்பிட்டு என் ஞாபகசக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த முறையும் எழுதியவரின் பெயரோ, வெளியான புத்தகமோ நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் துப்புக் கொடுக்கவும்.

ஒரு கதையாசிரியர் கதை எழுதுவதற்காக நாற்காலி, பேனா, நோட்டுப் புத்தகம் சகிதமாக மொட்டை மாடியில் வந்து அமர்கிறார். கதை எழுத ஆரம்பிக்கிறார். அவர் எழுதிக்கொண்டிருக்கும் கதையில் ஒரு மரம் இருக்கிறது. மரத்தை சுற்றியே கதை பிண்ணப்பட்டிருக்கிறது. அவர் தினமும் வந்து எழுதிக்கொண்டிருக்கும் போது, ஒரு காகம் வந்து மொட்டைமாடியில் உட்கார்ந்து கரைந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆசிரியர் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது அந்த காகம் ஆசிரியரை நெருங்கி, தனக்கு கூடு கட்ட இடமில்லையென்றும், தன்னை கதையில் இருக்கும் மரத்தில் கூடு கட்டிக்கொள்ள அனுமதி தருமாறும் கேட்கிறது காகம். முதலில் மறுத்த ஆசிரியர், பிறகு காகம் கெஞ்சுவதைப் பார்த்து, சரியென்று சொல்கிறார். தான் கதை எழுதுவதற்கு இடைஞ்சலாக கரைந்து கொண்டிருக்கக் கூடாது என்றும் கண்டிசன் போடுகிறார். காக்கை ஒத்துக்கொள்கிறது. கதை வளர்கிறது. காக்கைக்கும் குஞ்சுகள் உண்டாகின்றன. குடும்பமாக அந்த மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வசித்து வருகிறது.

ஆசிரியர் கதையை முடிக்கப் போகிறார். கதைப்படி, கதையில் வரும் மரம் வெட்டப்படவேண்டும். அதனால் ஆசிரியர் காக்கையிடம் முன்பே எச்சரிக்கை செய்து விடுகிறார். கூட்டை காலி செய்யும் படியும் கேட்டுக்கொள்கிறார். காக்கை மறுக்கிறது. ஆசிரியர் மரத்தை வெட்டியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க, காக்கை கோர்டிற்குப் போகிறது. நீண்ட வழக்குக்குப்பிறகு மரத்தை வெட்டக்கூடாது என்று காக்கைக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லப்படுகிறது. காக்கை சந்தோஷமாக அந்த மரத்தில் இருக்கும் கூட்டிலே தன் வாழ்க்கையைக் கழிக்கிறது.

ஆசிரியர் மரத்தை வெட்ட முடியாததால் கதையை முடிக்கமுடியாமல் தவிக்கிறார். இனி காக்கைக்கு தான் எழுதும் கதைகளில் இருக்கும் மரங்களில் கூடு கட்ட இடம் தரக்கூடாது என்று திடமான முடிவு எடுக்கிறார் என்று முடிகிறது கதை.

என்ன கதை இது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்? ஆகா என்ன அழகான கதை இது என்று சிலாகிப்பவர்களும் இருக்கிறார்கள். கதையை மட்டுமே ஆசிரியர் கூறியிருக்கிறார், அதை எதோடுவேண்டுமானாலும் ஒப்பிட்டுப்பார்த்து புரிந்து கொள்வது வாசகனின் திறமை. கதையைப் படித்து புரிந்துகொள்ள வேண்டுமா? ஒரு கதையை பாடப்புத்தகம் போல வாசிக்க வேண்டுமா? என்றால் ஆம் தான். கதை ஆசிரியரிடத்தே முடிவதைக்காட்டிலும் வாசகனிடம் முடிவதே சிறப்பு. ஆசிரியரின் கதைகளில் வாசகனுக்கும் பங்கு வேண்டும். அது தான் சுவை. கவிதை போல.

மற்றொரு காக்கை சம்பந்தப்பட்ட கதையை கணையாழியில் படிக்க நேர்ந்தது. யார் எழுதியது என்று மறந்து விட்டது.

பாட்டி வடை சுட்ட கதையிலிருந்து ஆரம்பிக்கிறார் ஆசிரியர். (போன பகுதியில் காக்கை வடைசுட்ட கதையைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.) அப்புறம் அந்த கதையில் நமக்கு தெரிந்த ட்விஸ்டைக் கொடுக்கிறார். அதாவது, காக்கை வடையைத்தூக்கிக் கொண்டு மரத்திலமர்ந்து கொள்கிறது. வடையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நரியார் வந்து காக்கையே உன் குரல் மிக அழகாக இருக்கிறது, ஒரு பாடல் பாடேன் என்கிறது. புகழ்ச்சிக்கு மயங்கிய காக்கை பாட வாயைத்திறக்கிறது, பிறகு உஷாராக, வடையை வாயிலிருந்து எடுத்து காலில் வைத்து கொண்டு பாட்டு பாடுகிறது. ஏமாற்றத்தால் (காக்கையின் பாடலாகக்கூட இருக்கலாம்) நரி ஒடிவிடுகிறது.

அப்புறம் ஆசிரியர் யோசிக்கிறார். காக்கை-நரி கதை அப்புறம் என்னவாயிற்று? காக்கை வடையைத்தின்று விட்டு என்ன செய்தது? காக்கையிடம் ஏமாந்த நரி என்ன செய்தது?

யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, “பெரும்பாலும் குழந்தைகளின் கதைகளை பெரியவர்களே எழுதியிருக்கிறார்கள். அந்த கதைகளிலெல்லாம் குழந்தைகள் வெளியே நின்று கொண்டிருக்கின்றனர் என்கிறார். உண்மைதானே? குழந்தைகளின் உலகம் வேறு. பெரியவர்களின் உலகம் முற்றிலும் வேறு. அதெப்படி குழந்தைகளின் கதைகளை பெரியவர்கள் எழுதலாம்? எழுதினால் அது குழந்தைகளுக்கு ஏற்றார் போல இருக்குமா? குழந்தைகளிடம் கதை கேட்டுப் பாருங்கள். அவர்கள் கதை மிக மிக புதிதாக, மிகவும் கற்பனை மிகுந்ததாகவும் இருக்கும். யானைக்கு மாடு போல கொம்பு இருக்கும். குதிரைக்கு யானைத்தந்தங்கள் இருக்கும். என் அக்கா மகளுக்கு யானை பிடிக்காது. பயம். எனவே அவளின் கதைகள் அனைத்திலும் வில்லன்கள் யானையாக இருக்கும். அது பாட்டி வடைசுட்ட கதையாக இருந்தாலும் அங்கே நரிக்குப் பதிலாக யானைதான் காக்கையை வம்புக்கிழுத்துக்கொண்டிருக்கும்.

நமது கற்பனை எல்லைக்குட்பட்டது. எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது நம்க்கு தெரியும். ரெஸ்ட்ரிக்டட் இமேஜினேஷன். குழந்தைகளின் உலகம் எல்லைகள் அற்றது. வானமற்றது.

யோசித்துக்கொண்டிருந்தவர், ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாளில் – எனக்கு இந்த இரு சொற்கள் பிடித்திருக்கிறது. என்வே அதையே பயன்படுத்திக்கொள்கிறேன் – அந்தரத்தில் முடிவில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கும் காக்கா-நரி கதையின் அடுத்த பகுதி கிடைக்கிறது.

எங்கே நரி வடையைப் பிடுங்கிவிடுமோ என்று பயந்த காகம் வேகவேகமாக தின்றது. வேகவேகமாக தின்றதில் காகத்திற்கு விக்கல் வந்து காடெல்லாம் தண்ணீருக்காக அலைகிறது. எங்கும் தண்ணீர் பஞ்சம். கடைசியாக ஒரு குடத்தில் தண்ணீர் மிக மிக அடியில் கிடப்பதைப் பார்க்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம், காக்கைக்கு எட்டவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறது. உடனே அதற்கு ஐடியா ஒன்று தோன்றுகிறது. பானைக்கு அருகில் இருக்கும் கற்களை எடுத்து ஒன்றொன்றாய் பானையில் போடுகிறது. கற்கள் நிரம்பியதால் தண்ணீர் மேலே வருகிறது. ஆனந்தமாய் குடித்து செல்கிறது காக்கை.

எப்படி கோர்க்கிறார் பாருங்கள்?

சரி, காக்கையிடம் தோல்வி கண்ட நரியார் அப்புறம் என்ன செய்தார்? ஹோல்ட் ஆன். நீங்கள் யோசியுங்கள். ஆசிரியரின் மனப்போக்கையும் கதை(!?)ப் போக்கையும் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? ம். நீங்கள் யோசித்தது சரியா என்று பார்க்கலாம்.

காக்கையிடம் தோல்வி கண்ட நரி, ஏமாற்றமுடன் செல்கிறது. அப்படி செல்லும் பொது, ஒரு திராட்சைத்தோட்டத்தைப் பார்க்கிறது. (எத்தனை பேர் கரெக்டாக யோசித்தீர்கள்) அந்தோ பரிதாபம். திராட்சைப் பழங்கள் எல்லாம் மிக உயரத்திலிருக்கின்றன. நரி எம்பி எம்பி குதித்துப் பார்க்கிறது. திராட்சை சிக்கவேயில்லை. எட்டவேயில்லை. சோர்ந்துபோன நரி, சீ.சீ. இந்த பழம் புளிக்கும் என்று சென்று விடுகிறது.

இன்ட்ரஸ்டிங் இல்ல? இந்த கதையின் இறுதியில் திருப்பம் எதற்கு? மிகப் புதுமையான முயற்சியே கதையை தூக்கி நிறுத்தும். நம்மை கட்டிப்போடும்.

சரி. திராட்சைப்பழம் கிடைக்காத நரி என்ன செய்தது? வயிறு முட்ட தண்ணீர் குடித்த காக்கை அப்புறம் என்ன செய்தது? நமக்கென்ன தெரியும், மிகுந்த புத்திக்கூர்மையால் ஐ.ஐ.டியில் கூட சீட் கிடைத்து படித்து அல்லது ஸ்ட்ரைக் செய்து கொண்டிருக்கலாம்.

விகடனில் வந்த ஒரு நிமிட கதை ஒன்று. கதை ஒரு நிமிடம் என்றாலும் என்னை ஒரு 20 செகண்டாவது யோசிக்கவைத்தது.

பீரோவில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, ரகசிய அறைக்குள் இருந்த அந்த டைரி என் கையில் கிடைத்தது. எடுத்து ஆர்வமாகப் புரட்டினேன்.
ஜனவரி 1: புத்தாண்டு. என்னைப்பொறுத்த மட்டும் இது புத்துணர்ச்சி ஆண்டு. காரணம் இன்று தான் கவிதா என்கிற என் தேவதையை முதன் முதலாகச் சந்தித்தேன்..
ஐயோ. இது அவர் டைரியே தான். படபடக்கும் இதயத்தோடு மேலும் புரட்டினேன்.
ஜூலை 5: இன்று எனக்கு மிகக் கொடுமையான நாள். அப்பா அம்மா பேச்சை மீற விரும்பாமல், அவர்கள் பார்த்த மாப்பிள்ளையையே கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்து விட்டாளாம் கவிதா.
செப் 21: இன்று அவளுக்கு திருமணம். டைரியை அழகாகப் பேக் செய்து எடுத்துப் போய், அவள் கையிலே பரிசாக…
‘கவிதா..கவிதா’ என்று குரல் கொடுத்தபடி என் கண்வர் வருவது தெரிய, சட்டென்று அந்த டைரியை மீண்டும் அந்த ரகசிய அறைக்கு உள்ளேயே வைத்து பூட்டினேன்.

பிறகு ஒரு மிக நகைச்சுவையான கதை ஒன்றை உயிர்மையில் படிக்க நேர்ந்தது. பொதுவாக டெக்ரானில் – எங்கேயிருக்கிறது என்று கேட்காதீர்கள், நானும் ஜியோகிராபியில் ரொம்ப வீக் – யுத்தம், ஈரானின் இலக்கியவளம், கொலம்பியாவின் குழம்பிய பெண் கவிஞர் என்று சற்றும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இலக்கியத்தொண்டு செய்து கொண்டு வரும் உயிர்மை, வித்தியாசமாக ஒரு நல்ல சிறுகதையைப் பிரசுரத்திருந்தது. நாஞ்சில் நாடன் எழுதியிருந்தார். கதையின் பெயர் “கதை எழுதுவதின் கதை”.

கதை என்று ஒன்றே இல்லாததுதான் கதையின் சிறப்பு. கதைக்கு மஞ்சள் கரு, வெள்ளைக்கரு, ஹேர்பின் பெண்ட் எல்லாம் வேண்டுமென்று கேட்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை. கதை கேட்கும் பத்திரிக்கைகளையும், கதை எழுதுபவர்களையும் சாடு சாடு என்று சாடியிருக்கிறார். ஜெயமோகன், கதையில் எங்க வந்தார் என்று தான் எனக்கு புரியவில்லை. ஜெயமோகனைப் போட்டு புரட்டி எடுத்திருக்கிறார்,நாஞ்சில் நாடன். இதைப்பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)

பிற பகுதிகள்:

 

இன்சிடென்ட்ஸ் – 2

 

கனவுகள் சில சமயங்களில் பயங்கர ரியாலிஸ்டிக்காக இருப்பதை நினைத்து நான் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன். உதாரணமாக நான் +2 முடித்து, இன்ஜினியரிங் காலேஜ் முடித்து, இந்தியாவில் 2 வருடம் மாவரைத்து இட்லி சுட்டு, மலேசியாவில் இரண்டு வருடம் அதே மாவை அரைத்து தோசை சுட்டு, பிறகு சிங்கப்பூரில் அதே மாவை அரைத்து வடைசுட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பரிட்சையில் பெயிலாகி விட்டு, ஐயோ என்னடா இது பெயிலாகிவிட்டோமே இப்ப என்ன செய்றது என்று மிக தீவிரமாக வருத்தப்பட்டு கொண்டிருப்பது போன்று கனவுகள் வரும். சில சமயம் அது மிகவும் தத்ரூபமாக இருக்கும். அழுகை அழுகையாக வரும். கனவிலிருந்து விழித்த பிறகு, அப்பாடா நாம் பெயிலெல்லாம் ஆக வில்லை, நாளை சாப்பாட்டிற்கு ஒரு வேலை இருக்கிறது என்று உணரும் போது ஒரு நிம்மதி;சந்தோஷம் வரும் பாருங்கள், அடா..அடா. 12B போன்று, நடக்காத ஒன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்து கொள்வதற்கு கனவுகள் மிகவும் உதவியாக இருக்கின்றன, இல்லையா?

இன்னொரு மிகுந்த ஆச்சரியமான விசயம் கனவில் கிடைக்கும். நாம் ஒரு விசயத்தை பல நாட்கள் மறந்தே போயிருப்போம். ஏன் பல மாதங்கள் கூட ஆகியிருக்கலாம். ஆனால் அந்த விசயம் (உங்கள் பள்ளித் தோழியாகவோ, தோழனாகவோ கூட இருக்கலாம்!) ஒரு நாள் ஒரு மின்னலைப் போல திடீரென்று கனவில் தோன்றும். நாம் கனவிலிருந்து விழித்து பேந்த பேந்த விழித்துக்கொண்டிருப்போம். இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நீண்ட நாட்கள் மறந்திருந்த விசயத்தை ஏன் மூளை புதுப்பிக்க நினைக்கிறது? நம் நினைவில் இல்லாத பல விசயங்களை மனம் அசை போட்டுக்கொண்டேயிருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது.

தூக்கம் மிக மிக புதிரானது. அது நம்மை சில மணி நேரங்கள் இந்த உலகத்தை விட்டே பிரித்து விடுகிறது. எழுந்தால் தான் நிச்சயம். பேசிக்கொண்டிருக்கும் போதே குறட்டை விடும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். எந்த இடத்தில் எப்பொழுது படுத்தாலும் தூங்கிவிடும் நபர்களும் இருக்கிறார்கள். சில நாட்கள் சும்மா ஒன்றும் விரிக்காமல் தலைக்கு கையை வைத்துக்கொண்டு தூங்கிவிடுகிறோம். சில நாட்கள் மெத்தை, ஏசி, கஜல் பாடல் என்று படுத்தாலும் இன்சோமேனியாக்காக இருக்கிறோம். பக்கத்தில் குறட்டை விடும் நண்பனையே பொறாமையாக பார்க்கிறோம்.

நான் மலேசியாவில் இருக்கும் பொழுது ஒரு நீண்ட நாள் முடிந்து மிகுந்த அலுப்புடன் வந்து படுத்து விட்டேன். பக்கத்து அறையில் ஒரு நண்பரும் அவர் மனைவியும் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென்று செல் போன் ஒலிக்கவே திட்டிக்கொண்டே எடுத்தேன். என் மேனேஜர் தான் கால் பண்ணியிருந்தார் (திட்டினது சரிதான் என்று நினைக்கிறீர்களா?). எடுத்த எடுப்பிலே அவர் என்ன முத்து எதுவும் ஆகலையே நல்லாயிருக்கேல்ல என்றார். எனக்கு கோபம் தலைக்கேறியது. யோவ். நட்ட நடு ராத்திரியில கால் பண்ணி இது என்னையா கேள்வி என்றேன் கோபமாக. அவர் அடடே உனக்கு விசயமே தெரியாதா, KL முழுதும் நில நடுக்கம், அது தான் கேட்டேன் என்றார். ஒன்றும் இல்லை நாம் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றேன். ஜாக்கிறதை. கவனமாக இரு என்றார். எனக்கு அதுக்கப்புறம் தூக்கம் கலைந்து விட்டது. எழுந்து டீவியை ஆன் செய்து பி.பி.சி யைப் பார்த்தேன். உண்மைதான். ப்ளாஷ் நியூஸில் கே.எல் லில் நிலநடுக்கம் என்று ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு சந்தேகம் வரவே, எழுந்து சட்டை அனிந்து கொண்டு லிப்ட் எடுத்து கீழே சென்ற பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன். கீழே, ரோட்டில் எங்கள் கோண்டோமினியத்தில் இருக்கும் என்பது ப்ரஸண்ட் மக்கள் சலசல என்று பேசிக்கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து சில நிமிடங்களில் அமெரிக்காவிலிருக்கும் என் அண்ணனிடமிருந்து கால். அப்புறம் அறையில் ஒன்றுமே தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த அந்த அப்பாவி நண்பரை எழுப்பி விசயத்தை சொன்னேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். பேந்த பேந்த விழித்துக்கொண்டு இரண்டும் வந்ததுகள். உண்மையிலே பூகம்பம் வந்ததென்று வைத்துக்கொள்ளுங்கள், யார் எழுப்பி சொல்வார்கள்? அங்கே செல் போன் வேலை செய்யுமா?

என் நண்பன் ஒருவன் இருக்கிறான், பக்கத்தில் பிபாசாவே ஆடிக்கொண்டிருந்தாலும் கவலையே பட மாட்டான். வந்து படுத்தவுடன் தூங்கிவிடுவான். விளக்கு எரிந்தாலும், பாடல் சத்தமாக ஒலித்தாலும் (நான் வேண்டுமென்றே லேப்டாப்பில் பாடலை சத்தமாக ஒலிக்க செய்வேன்) கவலையே படமாட்டான். நன்றாக இழுத்துப்போர்த்திக்கொண்டு, சம்மனங்கால் போட்டுக்கொண்டு (?! எப்படி இவனால் முடிகிறது என்று நான் நிறைய நாட்கள் யோசித்ததுண்டு!) தூங்குவான். அதனால் அவன் சம்மன சாமியார் என்றும் அழைக்கப்படுகிறான். ஆனால் ஒன்றே ஒன்று. அவன் தூங்கிய பிறகு அவனை மிக மிக மெதுவாக அழைத்து தான் எழுப்ப வேண்டும். இல்லையேல் தடால் புடால் என்று அடித்து பிடித்து எழுந்து நம்மையே பயமுறுத்துவான். பிறகு உங்களுக்கு சாபம் தான்.

முதல்நாள் திருச்சி, மறுநாள் கோவில்பட்டி அடுத்த நாள் போடி என்று பிரயாணம் செய்து விட்டு எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருக்கும் ரூமில் கதவைப் பூட்டிக்கொண்டு படுத்துவிட்டேன். வெளியே மொட்டை மாடியில் என் குடும்பத்தினர் படுத்திருக்கின்றனர். தூங்கிய நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை கதவை தட தடவென்று அடித்து கதவைத்திறங்கள் கதவைத்திறங்கள் என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் வெளியிலிருந்த என் அண்ணன் மிகவும் சத்தமாக டேய் நீ தான் தாழ் போட்டிருக்க நீதான் திறக்கனும் என்று சொன்னவுடன் தான் நான் நினைவு திரும்பி, அட ஆமால்ல (வடிவேலு போல சொல்லவும்), என்று நினைத்து கதவைத்திறந்து கொண்டு “பேக்கு” மாதிரி விழித்துக்கொண்டு வெளியே வந்தேன். என் நான்கு வயது அக்கா மகள் மாமா சாமிய கும்பிட்டு திருநீர் பூசிட்டு தண்ணீ குடிச்சிட்டு தூங்குங்கள் என்றது தான் மிக மிக கேவலம். நீண்ட நேரம் என் அண்ணன் ஏன்டா அப்படி கத்தின ஏன்டா அப்படி கத்துன என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். நான் பதிலே சொல்லவில்லை. தெரிந்தால் தானே சொல்வதற்கு! பக்கத்து வீட்டாருக்கெல்லாம் கேட்டிருக்கிறது. மறுநாள் மானம் போய்விட்டது.

(தொடரும்)

இன்சிடென்ட்ஸ் (1)

குறட்டை கோவிந்தன்

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு ஒரு நாளும் கனவில் திரிஷாவோ, சினேகாவோ அல்லது அட்லீஸ்ட் சரோஜாதேவியோ கூட வந்ததில்லை. ஏன் என்றும் சில நாள் நான் மிக சீரியஸாக யோசித்திருக்கிறேன். அதற்காக எனக்கு கனவே வராது என்பதும் உண்மையல்ல. நான் நிறைய கனவு காண்கிறவன். ஆனால் என் கனவுகள் எல்லாமே என்னை பயமுறுத்துபவை. திரில்லர் படங்கள் தோற்கும் போங்கள். சில நாட்கள் நான் யாரையாவது குத்தி கொலை செய்து விட்டு ஓடிக்கொண்டிருப்பேன். போலீஸ் என்னை துரத்திக்கொண்டிருக்கும். சில நாட்கள் ஏதேனும் மிருகங்கள் என்னைத் துரத்திக்கொண்டிருக்கும். சிங்கம், புலி முக்கியமாக நாய். நான் ஏன் நாயைக் கண்டால் பயப்படுகிறேன் என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த நாயைக் கண்டு பயப்படும் கும்பலில் நான் மட்டும் தனியாக இல்லை என்பது என் நண்பன் நாங்கள் எப்பொழுதும் பயன் படுத்தும் பாதையை விட்டு வேறு பாதையை திடீரென்று உபயோகப்படுத்தியபோது தெரிந்து கொண்டேன். ஏன் என்று கேட்டதற்கு வழியிலிருக்கும் ஒரு வீட்டில் புதிதாக நாயொன்று வாங்கியிருக்கிறார்கள் என்றான். இத்தனைக்கும் அந்த நாயை கேட் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள். ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது என்று போனஸாக அறிவுரை வழங்கினான். சரிதான்.

முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் வரும். தெருவில் நடந்தால் வீட்டிற்குப்போகும் வரையில் ஒரு பாட்டு கூட மிஸ் ஆகாது. அனைத்து வீடுகளிலும் ஒலியும் ஒளியும் ஓடிக்கொண்டிருக்கும், கதவு வேறு திறந்திருக்கும், டீவி கரெக்டாக வாசலுக்கு நேரே இருக்கும். நாம் டீவி பார்த்துக்கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் ஜாலியாக நடக்கலாம். ஆனால் இதில் ஒரு டிஸ்அட்வாண்டேஜ் இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? இப்படி நாம் பெராக்கு பார்த்துக் கொண்டே நடக்கும் போது வழியில் ஹாயாகப் படுத்துக்கிடக்கும் நாயை நறுக்கென்று மிதித்துவிட வாய்ப்பிருக்கிறது. நாயும் கோபத்தில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் புது பேண்டையும், கொஞ்சம் சதையையும் லபக்கென்று கடித்துவிட வாய்ப்பிருகிறது. அப்படித்தான் நடந்தது அன்று. நாயைச் சொல்லி குற்றமில்லை புது பேண்ட் என்று நாய்க்கு எப்படித்தெரியும். அப்பொழுது தான் ஏன் இப்படி கதவைத்திறந்து போட்டுக்கொண்டு டீவி பார்க்கிறார்கள் என்று எரிச்சல் எரிச்சலாய் வரும். அதனால் தானே நாம் பெராக்கு பார்த்துக்கொண்டு நாயை மிதிக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. மதுரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சென்று தொப்புளை சுத்தி 6 ஊசி தான் போட்டுக்கொண்டேன். விடாக்கண்டன் டாக்டர் நான் ஊசி போட யோசித்தபோது பக்கத்து அறையைக்காட்டி – அந்த அறை பூட்டப்பட்டிருந்தது, கம்பி ஜன்னல் வைக்கப்பட்டிருந்தது – இந்த அறையில் தான் நாய் கடித்து ஊசி போடாமல் நாய் மாதிரியே ஆகிவிட்ட மனிதன் குரைத்துக் கொண்டு இருக்கிறான் என்றார். சத்தமில்லாமல் ஊசி போட்டுக்கொண்டேன். அந்த அறையைக்கடந்து வந்த போது திரும்பிப் பார்க்ககூட மனசு வரவில்லை.

அன்றைய இரவிலும் இப்படித்தான் நாயொன்று என்னை விடாமல் துரத்திக்கொண்டே வந்தது, கனவில் தான். பயங்கர உறுமல் சத்தம் வேறு. கர் புர் என்று. சன் டீவியில் முன்பு மர்மதேசம் தொடர் வந்த போது டைட்டிலில் ஒரு நாய் குரைக்குமே நினைவிருக்கிறதா? நாய் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. நல்ல கருப்பாக. திடகாத்திரமாக. கடித்தால் அரைக்கிலோவோ ஒருகிலோவோ நிச்சயம் லாஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. அடுத்த ஒரு சில மாதங்களுக்கு பிட்னஸ் கிளப் போகத்தேவையில்லை. ஒரு வழியாக தப்பித்து நினைவு லோகத்திற்கு வந்தேன். பக்கத்திலிருந்த பாட்டிலில் தண்ணீர் குடித்துக்கொண்டேன். அப்பொழுதும் கர் புர் என்ற சத்தம் கேட்டது. கனவிலே எழுந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கோமா? அவ்வளவு ரியாலிஸ்டிக்கான கனவா? எந்த மடையனாவது நாய் துரத்திக்கொண்டிருக்கும் போது, சாவகாசமாக தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பானா? கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். நினைவுதான். அப்புறம் கர் புர் சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறதாம்? அப்பொழுதுதான் என் நண்பன் என் பக்கத்திலே உறங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

யாராக இருந்தாலும் “நீங்கள் குறட்டை விடுகிறீர்கள்” என்று சொன்னால் உடனே கோபம் தான் படுகிறார்கள். என் நண்பன் மட்டும் விதி விலக்கா என்ன? நான் ஒன்றும் குறட்டை விட மாட்டேனாக்கும் என்று மார்தட்டினான். ஆனால் நான் அவனைப்போல டுபாகூர் 1943 ஆம் வருசத்து செல்போன் வைத்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டான். அங்கே தான் சிறு தவறு நடந்து விட்டது. என்னிடம் பிடிஏ இருக்கிறது. நைசாக அவன் தூங்கும் போது அவனுடைய மூக்கிற்கு மிக அருகில் – எனக்கு சந்தேகம் வேறு வந்துவிட்டது. சத்தம் மூக்கிலிருந்து வருகிறதா அல்லது வாயிலிருந்து வருகிறதா என்று. இன்னும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை – பிடிஏவை வைத்து சத்தத்தை ரெக்கார்ட் செய்து விட்டேன். “மாட்னடா நீயி” – பழம்பெரும் நடிகர் அசோகன் போல சொல்லவேண்டும் – என்று சொல்லிக்கொண்டேன். என்னுடைய இயர் போனில் அதை ரீப்ளே செய்து பார்த்ததில் டால்பி டிஜிட்டலும், டி ஹச் எக்ஸ¤ம் தொற்றது போங்கள். அவ்வளவு துள்ளியம். கேட்பவர்கள் டைனோசர் வருகிறதோ என்று கூட நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

ஆதாரம் காட்டிய போது என்ன செய்ய முடியும். என்னடா பன்றது எனக்கு குறட்டை வருகிறதே, நான் என்ன செய்ய என்று பாவமாய் மூஞ்சியை வைத்துக்கொண்டான். இலவசமாக டிப்ஸ் சில சொன்னான். அதாவது அவன் தூங்கும் போது அவனுடைய பெட்டைப்பிடித்து இழுக்க வேண்டும். அப்படிச்செய்தால் குறட்டை நின்று விட வாய்ப்பிருக்கிறது என்றான்.

அன்றைய இரவு அந்த டெக்னிக்கை கையாண்டேன். பலன் இருந்தது. ஆனால் ஜஸ்ட் ஒன் மினிட் தான். மறுபடியும் உறுமல். நான் என்ன இரவு முழுதும் பெட்டை ஆட்டிக்கொண்டேவா இருக்க முடியும். ஒரே சீராக குறட்டை வரும் பட்சத்தில் பழக்கமாகிவிடும். ஆனால் வேறு வேறு பிட்ச்களில் விதம் விதமாக குறட்டை விட்டால் என்னதான் செய்யமுடியும்? சில சமயம் பூனை கத்துவதைப்போன்று சத்தம் வரும். சில சமயம் யானை பிளிறுவதைப் போல. ஐயோ யானைக்கூட்டத்தில் மாட்டிக்கொண்டோமே இப்ப எப்படித் தப்பிப்பது? என்று சீரியசாக நான் கனவில் திங்க் செய்திருக்கிறேன்.

ஒரு நாள் சத்தம் தாங்காமல் பெட்டை வேகமாக் நான் ஆட்டிவிட, முழித்துக்கொண்ட என் நண்பன் கோபம் வந்த விசுவாமித்திரனாக மாறி “உனக்கு என்னய விட பல மடங்கு சத்தமா குறட்டை விடுற பொண்டாட்டி தான்டா கிடைப்பா” என்று சாபம் வேறு கொடுத்தான். மறுநாள் அவன் நாக்கை தரோவாக செக் செய்து விட்டேன், கரி நாக்கு ஒன்றும் இல்லையாம். இருந்தாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

நான் இந்தியாவில் வேலை செய்த பொழுது என்னுடன் வேலை செய்த நண்பர் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம் இருந்தது. நைட் வேலை செய்யவேண்டும் என்றால் தொலைந்தோம். கிடைக்கும் சில மணி நேரத்தை தூங்கலாம் என்று நினைத்தால், குறட்டை சுத்தமாக கெடுத்துவிடும். அவருக்கு டெக்னிக் வேறு. அவரைத் தொட்டால் குறட்டை நின்று விடும். ஆனால் சில நிமிடத்தில் மீண்டும் தொடரும். நீங்கள் கையை அவர் மேலேயே வைத்துக்கொள்ளலாமே என்று ஸ்மார்டாக சிந்தித்தால் அதெல்லாம் வேலைக்காகாது. தட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நாம் எப்படித் தூங்குவது? கவலைப்படாதீர்கள் தட்டிக்கொடுத்துக்கொண்டே தூங்குவதற்கு பழகிக்கொண்டு விடலாம். சித்திரமே கைப்பழக்கம்.

அவர் சாப்பிட்டு விட்டு ஆபீஸ் வந்ததும் சில நேரங்களில் தூங்க ஆரம்பித்து விடுவார். நாம் தூங்கும் போது நமது மூளை விழித்தேயிருக்கிறது என்பதில் யாருக்கேனும் சிறு ஐய்யப்பாடு இருக்குமேயானால் நீங்கள் அவரைத் தான் முதலில் பார்க்க வேண்டும். ஹாயாக கம்ப்யூட்டரின் முன் சேரில் அமர்ந்து கொண்டு தலையை சேரில் சாய்த்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்து கண்களை மூடித் தூங்கிக்கொண்டிருப்பார். பக்கத்தில் சென்று நின்றோமேயானால் உடனே மௌசைப்பிடித்திருக்கும் கை மட்டும் வேக வேகமாக அசையும். வேலை செய்கிறாராம்.

மதியம் ஆபிசில் தூங்குவதைக்கூட பொருத்துக்கொள்ளலாம். ஆனால் தூங்கி குறட்டை விடுவது டூ மச் இல்லையா? அதையும் அவர் செய்தார். அதுவும் எங்கள் பாஸ் உடன் இருக்கும் போது. என்ன தெனாவெட்டு? இப்பொழுது கெச்.சி.எல் லில் ஹாயாக குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறார். ஹெச்.சி.எல் கவர்மெண்ட் ஆபீஸ் போன்றது என்று என் நண்பர்கள் சொன்னபோது நான் நம்பவில்லை.

தேன்கூடு போட்டி : காடனேரி விளக்கு (சிறுகதை)

காடனேரி விளக்கு (சிறுகதை)

நின்று கொண்டிருந்த பஸ்ஸின் இரைச்சல் அந்த இரவின் நிசப்தத்தை ஒரு ஈட்டி போல் குத்தி கிழித்துக் கொண்டிருந்தது. நாய்கள் எழுந்து நின்று வேடிக்கை பார்த்து விட்டு மறுபடியும் படுத்துக்கொண்டன. சில நாய்கள் எங்கள் தூக்கத்தை ஏன் கெடுத்துத்தொலைக்கிறீர்கள் என்று பதிலுக்கு ஊளையிடத்தொடங்கின. நாளை விடிகாலை ஆண்டாளை தரிசிக்க அந்த பேருந்தில் சென்று கொண்டிருக்கும் சில பக்தர்கள் தூக்கத்திலிருந்து விழித்து பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்க இயலாமல் பெரிய கொட்டாவிகளை விட்டுக்கொண்டிருந்தனர்.’அமைதிக்கு பெயர் தான் சாந்தி’ என்ற பாடல் சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தது, சன்னமாக. டிரைவர் ரோட்டை விட்டு சற்று தொலைவில் இருந்த கிணற்றில் கண்டக்டர் நீர் இறைப்பதையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

குடத்துடன் கண்டக்டர் ஓட்டமும் நடையுமாக வந்து, டிரைவரிடம் கீழே இருந்தபடி கொடுத்துவிட்டு, பின் வாசல் வழியாக பஸ்ஸில் ஏறிக்கொண்டார். பஸ் புறப்பட்டது.

கம்பியில் சாய்ந்த கொண்டே கையிலிருந்த இன்வாய்ஸ் பேப்பரை நிரப்பிக்கொண்டு வந்தவர், ஆட்களை எண்ணத்தொடங்கினார்.

இன்வாய்ஸ் பேப்பரை மடித்து கைப்பையில் வைத்து விட்டு, பின்னால் வந்தவர் அங்கே உட்கார்ந்திருந்த சிவப்பு சட்டை நபரிடம், ‘நீங்க எங்க ஏறுநீங்க’ என்றார். அவர் ‘T.கல்லுப்பட்டி’ என்றார். கண்டக்டர் சந்தேகமாக பார்த்துக்கொண்டே ‘எங்கே இறங்கனும்?’ என்றார். ‘காடனேரி விளக்கு’ என்றார் சிவப்பு சட்டை நபர். ‘டிக்கெட் வாங்கிட்டீங்களா?’ ‘ம்ம்.ம்ம்.’ என்று பையில் கை விட்டவரை ‘அடுத்த ஸ்டாப் தானே, எழுந்து நில்லுங்க விசில் கொடுக்கறேன்’ என்று சொல்லிவிட்டு முன்னால் நகர்ந்து சென்று காலியாக இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

டிரைவரின் தலைக்கு மேல் பயணிகளைப் பார்த்துக்கொண்டிருந்த கடிகாரம் 11:30 என்றது. பயணிகள் ‘தேவதை இளம் தேவி’ என்ற பாடலைக்கூட இரசிக்காமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

***

காடனேரி விளக்கு. பஸ் மிகுந்த இரைச்சலுடன் புறப்பட்டது. பஸ்ஸிலிருந்து இறங்கிய செந்தில் அங்கேயே நின்று தனக்கு முன்னால் ஒரு பாம்பைப் போல நீண்டு வளைந்து கிடக்கும் தார் ரோட்டையே பார்த்துக்கொண்டு நின்றான். காடனேரி விளக்கிலிருந்து தன் கிராமமான காடனேரிக்கு செல்ல மூன்று கிலோமீட்டர் நடக்கவேண்டும். வாட்சைப்பார்த்துக் கொண்டான். மணி 11:45. ரோட்டில் ஆள் அரவம் சுத்தமாக இல்லை. இருட்டு கடுமையாக படர்ந்திருந்தது. மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

செந்தில் காடனேரியில் தான் பிறந்தான். பண்ணிரண்டு வயது வரை காடனேரியிலே வளர்ந்தான். பிறகு குடும்பம் மதுரைக்கு மாறியவுடன் இந்த பத்து வருடங்களில் காடனேரியை மறந்தே போனான். ஆனால் காடனேரி விளக்கிலிருந்து காடனேரிக்கு செல்லும் ரோட்டில் இருந்த அந்த மிகப்பெரிய ஆலமரமும், அதற்கு பின்னாலிருந்த சுடுகாடும், அப்பத்தாவின் பேய்க் கதைகளும் மனதில் அப்படியே பதிந்துவிட்டன. சரியான நேரத்தில் வெளிவரத்துடிக்கின்றன.

அவனையுமறியாமல் ‘ராஜ ராஜ சோழன் நான்’ பாடல் வாயிலிருந்து வெளிப்பட்டது. ஓணான் ஒன்று காலுக்கடியில் புகுந்து ஓடியது. செந்திலை சிலீர் என்ற பயம் கலந்த உணர்ச்சி தாக்கி உடம்பெல்லாம் புல்லரிக்க செய்தது. நடப்பதை நிறுத்தி விட்டு பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை. தெளிவான நிசப்தம்.

யாராவது வந்தால் தேவலாம் போல இருந்தது. பால் வண்டி, மணல் லாரி அல்லது சிப்ட் முடிந்து திரும்புகிறவர்கள் என யாராவது உடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பயமாவது விலகும்.

காற்று கூட நின்று விட்டிருந்தது. ஏதேதோ சம்பந்தாசம்பந்தமில்லாத பாடலை வாய் முனுமுனுத்துக் கொண்டே வந்தது. கல்லுப்பட்டி லட்சுமி டாக்கீஸில் இரண்டாம் ஆட்டம் பார்த்திருக்க கூடாதோ? நேரத்தோடு வந்திருந்தால் ஒழுங்காக இந்நேரம் வீடு போய் சேர்ந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். சிவப்பு கலர் பேய்க்கு விருப்பமான கலரா? நான் சிவப்பு சட்டை வேறு போட்டிருக்கிறேனே. இவ்வளவு கருமையான இருட்டில் வெள்ளை வெளேர் என்று பேயொன்று வந்தால் தூரத்திலே தெரிந்துவிடாதா என்ன? பின்னால் வந்துவிட்டால். பேய் முதுகில் தானே அடிக்குமென்பார்கள்? சட்டென்று திரும்பிப்பார்த்தான். யாருமில்லை. எங்குமிருக்கும் காற்றைத்தவிர. தூரத்தில் சைக்கிளில் யாரோ வருவதைப்போல இருந்தது. உண்மைதானா? கண்களை நம்ப முடியாமல் பார்த்தான். உண்மைதான். சைக்கிளில் யாரோ வந்து கொண்டிருந்தார்கள். அருகில் வரட்டும் லிப்ட் கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

சைக்கிளில் வந்தவர் இவனைப்பார்த்ததும் நிறுத்தினார். அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். செந்தில் அவரிடம் ‘அண்ணே நான் காடனேரி வரைக்கும் போகனும், கொஞ்சம் செக்கிளிலே கொண்டுபோய் இறக்கிவிட்டுடறீங்களா? இருட்டில நடக்க பயமாயிருக்கு’ என்றான். அவர் ‘காடனேரியா? காடனேரியில எந்த வீட்டுக்குப்போகனும்?’ என்றார். ‘ஆசாரி வீட்டுக்கு’ என்றான் செந்தில். அவர் சிறிது நேரம் அமைதியாய் அவனைப்பார்த்துவிட்டு. பிறகு ‘சரி முன்னால் ஏறிக்க’ என்றார். பின்னால் ஏதோ மூட்டையிருந்தது. செந்தில் ஏறப்போகும் பொழுது, ‘கொஞ்சம் பொறு’ என்றவர், ஹேண்ட்பாரைப்பிடித்து முன் டயரை அமுக்கிப்பார்த்தார். பின ‘தம்பி, முன் டயரில காத்து இருக்கான்னு பாரு’ என்றார். டயர் பங்சர்.

‘அண்ணே. நீங்களும் காடனேரி தானா?’ என்றான் செந்தில் நடந்து கொண்டே. ‘இல்லப்பா. நான் கீழக்காடனேரி. ம். ஆசாரி வீட்டுக்கு என்ன விசயமா வந்திருக்க?’ என்றார் சைக்கிளைத் தள்ளிக்கோண்டே. மூட்டை பத்திரமாக் பின் கேரியரில் உட்கார்ந்திருந்தது. ‘அக்கா கல்யாணத்திற்கு தாலி செய்யக்கொடுத்திருந்தோம். அவங்கதான் காலம்காலமா எங்க குடும்பத்திற்கு தாலி செஞ்சு கொடுப்பாங்கலாம். நாளைக்கு வாங்கிட்டு மத்தியான பஸ்ஸிலே போய்டுவேன்’ என்றான். கொஞ்ச நேரம் அமைதி. இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

‘அண்ணே உங்க பேரு என்னண்ணே?’ என்று செந்தில் படர்ந்திருந்த அமைதிக்கு முற்றுப்புள்ளி வைக்கபார்த்தான். அவர் எதையோ தேடும் பாவணையில் இருந்தவர், திடீரென செந்தில் பக்கம் திரும்பி, ‘என்னப்பா? பேரா? ஆறுமுகம்’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் தேடத்தொடங்கினார். ஆந்தை ஒன்று கருவேல மரத்தில் உட்கார்ந்து கொண்டு இவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. மறுபடியும் அமைதி. சைக்கிள் டயர்கள் கல்லில் ஏறி இறங்கும் சத்தத்தை தவிர வேறு சத்தங்கள் இல்லை.

‘அண்ணே, என்னண்ணே தேடுறீங்க?’ என்றான் செந்தில். ‘ம்..ம்.. ஒன்னுமில்லப்பா.’ என்றவர், மறுபடியும் சுற்றும் முற்றும் பார்த்தார்.

கொஞ்ச தூரத்தில் ஆலமரம் தெரிந்தது. மேகச்சிறையில் விடுபட்ட நிலவு கொஞ்சம் வெளிச்சத்தைக் கொடுத்தது. உடன் ஒருவர் வந்து கொண்டிருந்தாலும் ஆலமரம் திகிலூட்டவே செய்தது.

திடீரென்று, ‘டேய். நீ அங்க தான் இருக்கியா? உன்னக் கொல்லாம விடமாட்டேன்டா’ என்று சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு மூட்டைக்குள் கைவிட்டு அறிவாளை எடுத்துக்கொண்டு ரோட்டைவிட்டு கீழிறங்கி ஓடினார் ஆறுமுகம். ரோட்டின் ஓரத்தில் பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் தண்ணீரில் அவர் கால் மிதித்து ஓடும் சத்தம் பயங்கரமாக கேட்டது. செந்தில் ஒன்றும் புரியாமல் விழித்தான். போய்விடலாம் என்று நினைத்தவனின் கால்கள் தூரத்தில் தெரியும் ஆலமரத்தைப் பார்த்தவுடன் நடக்க மறுத்தன.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு ஆறுமுகம், அவர் ஓடிச்சென்ற பாதையிலிருந்து வேகவேகமாக வெளிப்பட்டார். கையில் அறுவாள் இல்லை. வாய்க்காலில் இறங்கி வேகவேகமாக தண்ணீரை அள்ளி அள்ளி குடித்தார். செந்தில் அருகில் சென்று அவரை ‘அண்ணே’ என்று அழைத்தான். நிமிர்ந்த அவர் இவனைப்பார்த்துக்கொண்டே தொப்பென்று வாய்க்காலில் நிலைகுப்புற விழுந்தார். விக்கித்து நின்ற செந்தில் மறுபடியும் ‘அண்ணே’ என்றான். பதிலில்லை. மெதுவாக வாய்க்காலில் இறங்கினான். அவர் சலனமில்லாமல் படுத்துக்கிடந்தார். மூச்சிருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. பகீரென்றது. தூக்க முயற்சித்தான். முடியவில்லை. வேக வேகமாக ரோட்டில் ஏறி ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவன் வேகமாக நடந்ததில் ஆலமரத்தை தாண்டியதைக்கூட அவன் கவனிக்கவில்லை. யாராவது தெனபடுகிறார்களா என்று அவன் கண்கன் தேடிக்கொண்டிருந்தன.

சிறிய பாலம் போன்று இருந்த திண்டில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அருகில் சென்று ‘ஐயா’ என்று அழைத்தான். கம்பளிப்போர்வைக்குள் உடலை மறைத்துக்கொண்டிருந்தவர் சிறிது நேரம் கழித்து திரும்பினார். அவர் வாயில் பீடி புகைந்து கொண்டிருந்தது.’ஐயா ஒருத்தர் ஆலமரத்திற்கு பக்கத்தில வாய்க்கால்ல மூச்சு பேச்சில்லாம விழுந்து கிடக்கிறார். கொஞ்சம் உதவி செஞ்சீங்கன்னா தூக்கிரலாம்’ என்றான். அவன் இவனை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்து விட்டு, கம்பளியை விலக்கினார். ஒரு கை இல்லை. கம்பளியை மூடிக்கொண்டு மறுபடியும் திரும்பிக்கொண்டார். பீடிப்புகை மட்டும் வானத்தை நோக்கி மேலெழும்பிக்கொண்டிருந்தது.

செந்தில் மீண்டும் நடக்க ஆரம்பித்தான். கீழக்காடனேரியை கொஞ்ச நேரத்தில் தொட்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது, ஒத்தையாக நின்ற பொட்டிக்கடையின் கீழே ஒருவன் குத்தவவைத்து உட்கார்ந்திருந்தான்.

‘ஐயா ஒருத்தர் வாய்க்காலில்….’ என்று செந்தில் சொல்வதற்குள் அவன், ‘ அவன்கிட்டயிருந்துதான் நான் தப்பிச்சு ஓடியாறேன். என்ன பார்த்தானா கொன்னுபோடுவான்’ என்று சொல்லிவிட்டு தலையைப்பிடித்துகொண்டு கீழே பார்த்தான். அப்பொழுதுதான் செந்தில் கவனித்தான் கீழே குளமாக வாந்தி. செந்தில் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அவன் மீண்டும் மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.

தூரத்தில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகள் மட்டும் நடந்து வந்து கொண்டிருந்தனர். குழந்தைகளின் உடம்பில் பொட்டுத்துணியில்லை. இந்த பெண்ணிடம் உதவி கேட்கலாமா என்று தயங்கிய செந்திலிடம், அந்த பெண், ‘தம்பி, வழியில யாரையாவது சைக்கிள்ல பார்த்தியாப்பா?’ என்றாள். ‘ம்ம்..ஆறுமுகன்னு ஒருத்தர் வந்தார். இப்போ பேச்சு மூச்சில்லாம வாய்க்கல்ல விழுந்துகிடக்கிறார். அனேகமா..’ என்று முடிப்பதற்குள் ‘ஐயோ என்னங்க..எத்தன தடவ சொன்னேன்…’ என்று சொல்லிக்கொண்டே ஓடினாள். குழந்தைகளும் பின்னாலேயே ஓடின. ஒரு குழந்தை செந்திலை திரும்பிப்பார்த்தது.

முதலில் ஓடாமல் நின்று கொண்டிருந்த செந்தில், பிறகு என்ன நினைத்தானோ அவர்கள் பின்னால் ஓட ஆரம்பித்தான்.

***

காடனேரி விளக்கு. தன்னை இறக்கிவிட்ட பஸ் செல்வதையே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. யாராவது கண்டிப்பாக சைக்கிளில் வருவார்கள், தொத்திக்கொண்டு போய்விடலாம் என்று நினைத்து அங்கிருந்த பஸ்ஸ்டாண்ட் திண்டிலே உட்கார்ந்து விட்டான்.

சைக்கிளில் ஒருவர் வரவும், கை நீட்டினான். அவர் நிறுத்தவே, ‘அண்ணே காடனேரியில இறக்கி விட்டுடறீங்களா?” ‘பின்னால மூட்டையிருக்கு முன்னால ஏறிக்கோ’ என்றார் அவர். பாண்டி ஏறி உட்கார்ந்துகொண்டான்.

சைக்கிள் நபரிடமிருந்து சாரய நெடி தூக்கலாக அடித்தது. பாண்டி நாவில் எச்சில் ஊரியது. ‘அன்ணே, ஆலமரத்து சுடுகாட்ட தாண்டி இருக்கில கிணறு. அதுக்கு பின்னால இப்ப சாரயம் விக்கிறாய்ங்க பாத்தீங்களா?” என்றான். ‘அப்படியா? போனதில்லையேப்பா” என்றார் சைக்கிள் நபர். ‘அண்ணே இப்ப போவோமா. ஒரே ஒரு ரவுண்டு மட்டும் குடிச்சிட்டு உடனே போயிடலாம்” என்றான் பாண்டி. “இல்லப்பா, ஏற்கனவே நிறைய குடிச்சிட்டேன். வீட்ல கடங்காரி திட்டுவா” என்றார். “அக்காவ பத்தி பின்னாடி கவலப்படலாம். நீ மொதோ சைக்கிள அங்க விடுண்ணே” என்றான் தூரத்தில் தெரிந்த ஆலமரத்தைப் பார்த்துக்கோண்டே.

பாண்டியும், சைக்கிள் நபருக்கும் போதை தலைக்கேறியிருந்தது. இருவரும் ஏதேதோ உளரிக்கொண்டிருந்தனர். சைக்கிள் நபர் தன் பெயர் ஆறுமுகம் என்றும், தன் மனைவி தன்னை குடிக்ககூடாது என்று நச்சரிப்பதாகவும் கொல்லிக்கொண்டிருந்தவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபரிடம் சத்தமாக, “கொஞ்சம் ஊறுகா இருந்தா கொடுடா” என்றார். அந்த நபர் முறைத்துப் பார்த்துக்கொண்டே, மீதமிருந்த ஊறுகாயை இடது கையால் எடுத்துக்கொடுத்தார். ‘என்னா நொட்டாங்கையில் தார? இன்னொரு கை என்ன கள புடுங்குதா?” என்று சொல்லிக்கொண்டே ஊறுகாயை வாங்கினார் ஆறுமுகம். பாண்டி “அவன் ஒத்தக்கையண்ணே. சோத்தாங்கை அவனுக்கில்ல” என்று சொல்லி பயங்கரமாக சிரித்தான். ஒத்த கையன் முறைத்துக்கொண்டே பாட்டிலை முழுவதுமாக் குடித்து முடித்தான். “ஐயோ அம்மா” என்று அங்கே குடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் வயிற்றைப்பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். அவன் துடிதுடித்து அழுவதைக்கண்டு கிணற்றுத் தவளைகளெல்லாம் பதுங்கிக்கொண்டன. அனைவரும் பீதியில் உரைந்தனர். அடித்த போதை இறங்குவதை போல இருந்தது. தொடர்ந்து நிறைய பேர் வயித்தை பிடித்துக்கொண்டு விழுந்தனர்.ஒத்தக்கையன் வயிற்றைப் பிடித்தவாறு எழுந்து சென்றான்

ஆறுமுகம் தான் குடித்துப்போட்ட மூன்று பாட்டில்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் ஆறுமுகத்திற்கு வயிற்றைப்புரட்டிக்கொண்டு வந்தது. பிறகு பயங்கரமாக வலித்தது. பாண்டி’ அண்ணே சாரயத்தில விஷம் கலந்திருச்சு போல இருக்குண்ணே” என்றவன் “ஐயோ அம்மா” என்று வயிற்றைப்பிடித்துக்கொண்டான்.

ஆறுமுகம் “ஐயோ. இப்போ என்ன செய்வேன்?” என்றவர், ” நான் வரமாட்டேன்னு சொல்லியும் நீ தாண்டா வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்த?” என்று பாண்டியை ஓங்கி ஒரு மிதி விட்டார். பாண்டி எழுந்து வயிற்றைப்பிடித்துக்கொண்டே ஓடினான்.

ஆறுமுகம் “ஐயோ, பிள்ள குட்டிகள யாரு காப்பாத்துவா? உன்னக்கொல்லாமா விடமாட்டேன்டா” என்று அவனை விரட்டிக்கொண்டு வந்தவர், வாய்க்காலில் தண்ணீரைப்பார்த்ததும், வேக வேகமாக அள்ளி அள்ளிக்குடித்தார். பிறகு பொத்தென்று வாய்க்காலில் விழுந்தார்.

பாண்டி வயிற்றைப்பிடித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான். ஒத்தகையன் பாலத்தின் திண்டில் சாய்ந்து கிடந்தான். உயிர் போகும் அளவுக்கு கத்திக்கொண்டிருந்தான். பாண்டியால் வெகுதூரம் ஓட முடியவில்லை. வயிற்று வலி மிகப்பயங்கரமாக இருந்தது. பொட்டிக்கடையருகே நின்று சோடா வாங்கி குடித்தவன், குத்த வைத்து உட்கார்ந்து வாந்தியெடுக்க ஆரம்பித்தான். கை கால்களை உதைத்துக்கொண்டு கத்தினான். பிறகு மரத்தில் இவனுக்கு போட்டியாக கரைந்து கொண்டிருந்த காகத்தை இமைக்காமல் வெறிக்கத்தொடங்கினான்.

‘ஐயோ.. என்னங்க..எத்தனை தடவ சொன்னேன். குடிக்காதீங்க குடிக்காதீங்கன்னு” என்று கத்திக்கொண்டே ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் பின்னாலேயே இரண்டு குழந்தைகள் பொட்டுத்துணியில்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு குழந்தை திரும்பி பாண்டியைப் பார்த்தது.

***

“ஐயோ எத்தனை தடவை சொன்னேன்..” என்று சொல்லிக்கொண்டே ஓடினாள் அந்தப் பெண். குழந்தைகளும் கூட ஓடினர். முதலில் ஓடாமல் இருந்த செந்தில் ஓட ஆரம்பித்தான்.

அந்த பெண் வாய்க்காலில் விழுந்துகிடந்த ஆறுமுகத்தை நெருங்கினாள். “ஐயோ எங்கள விட்டுட்டு போய்டீங்களா? இந்த பிள்ளைகளை வெச்சு நான் எப்படி காப்பாத்துவேன்” என்று கதறிக்கொண்டே தூரத்தில் தெரிந்த கிணற்றைப் பார்த்தாள்.

செந்தில் செய்வதறியாமல் திகைத்து நின்றான். அந்த பெண் கிணற்றை நோக்கி ஓட அரம்பித்தது. குழந்தைகளும் பின்னாலேயே ஒடினர். செந்தில் “ஐயோ வேணாம். தற்கொலை செய்துக்காதீங்க” என்று அவர்களை தடுத்து விடும் நோக்கத்தோடு ஓடினான்.

திடீரென்று அந்த பெண், மற்றும் குழந்தைகளைக் காணவில்லை. ஓடிய சுவடே தெரியவில்லை. எங்கும் நிசப்தம். செந்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். ‘ஷ்..ஷ்’ என்ற சத்தம் கேட்கவே, கீழே பார்த்தான். ஒரு கரு நாகப்பாம்பு படமெடுத்து நின்று கொண்டிருந்தது.

***

கண்டக்டரின் விசில் சத்தம் கேட்டு பஸ் நின்றது. ‘ராஜா மகள் புது ரோஜா மலர்’ பாடல் சத்தமாக கேட்டது. கண்டக்டர் எழுந்து, ‘ஏய் யாருப்பா காடனேரி விளக்கு கேட்டது. சட்டுன்னு இறங்குப்பா’ என்றார். யாரும் எழுந்திருக்கவில்லை. இறங்கவில்லை.

எரிச்சலடைந்த கண்டக்டர் ‘அதுக்குள்ள தூங்கிட்டானா?’ என்று எழுந்து பின்னால் வந்தார், ‘ஏம்பா இங்க ஒரு சிவப்பு சட்டை உட்கார்ந்திருந்தானே. காடனேரி விளக்கு இறங்கனும்னு சொன்னானே. எங்க காணோம்?” என்றார்.

‘பஸ் வேற எங்கவும் நிக்கவேயில்ல. அவன் எங்க இறங்கினான்? எப்படி மாயமானான்?’ என்று யோசித்துக்கொண்டே, இன்வாய்சை எடுத்துப் பார்த்துவிட்டு பயணிகளை எண்ணினார். சரியாக இருந்தது. கண்டக்டர் குழம்பியவாறு டபுள் விசில் கொடுத்தார்.

***

15-09-2006 அன்று கடைசிப்பகுதிக்கு முந்தைய பகுதி சேர்க்கப்பட்டது.

கதம்பம்

சென்ற சில நாட்களாக – வாரங்களாக – நான் இரசித்த கவிதைகள், ஜோக்குகள்,பாடல்கள் போன்றவை. நீங்கள் படித்திருக்கலாம்.

ஒரு காதல் கவிதை :

தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
மதிப்பிடப்படுவதாக
செய்திகள் சொல்கின்றன
ஆனால். இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில் தான்

விகடனில் வந்த ஒரு கேள்வி:

“நாங்கள்லாம் மொத ஷோவே பார்த்துட்டம்ல!” ங்கிறதைக் காட்டுறதுக்காகவே, தியேட்டர்ல முன் ஸீட்ல உட்கார்ந்துக்கிட்டு ‘டக்குன்னு குத்திருவான் பாரேன்’, ‘அடுத்த ஸீன்ல இருக்குடி இவனுக்கு ஆப்பு’ ‘பாட்டு போடப்போறாய்ங்கடா’ன்னு ஸீனுக்கு ஸீன் டிரெய்லர் ஓட்டி டார்ச்சர் பண்றானுங்களே முந்திரி பக்கோடா காதருங்க..இந்த இம்சை ஏன்டா?

மற்றொரு கேள்வி:

லவ்வருக்கு போன் பேசுற பூரா பூனைப் பயலுகளும் ‘அப்புறம் அப்புறம்’ ங்கிறதை மட்டுமே ஆயிரத்தெட்டு தடவை யூஸ் பண்றானுங்களே. வொய்? வொய்? ராத்திரி எட்டு மணிக்கு மேலே பொண்ணுங்க எந்த கால் பேசினாலும் ஹஸ்கி வாய்ஸ்லயே பேசுறாங்களே, வொய்மா வொய்?

அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா!

ஒரு கொரளு: ஒரு வெளக்கம்.

கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

யாராச்சும் நீ லவ்ஸ் வுட சொல்லோ நாலு ஜெனம் சத்தய்ச்சினுதான் போவும், அது ரப்ச்சர் கெடியாதும்மே! லவ்ஸ¤க்கே அதாம்மே கிரிகிரி!

மெய்யாலுமா?

மற்றொரு குபீர் சிரிப்பு செய்தி : தினமலரில் வந்தது!! ஆனாலும் தினமலருக்கு நக்கல் ஜாஸ்திபா!

மற்றொரு யோசிக்கவைத்த கவிதை:

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை

சிந்தனை புதிது. என் தோழி ஒருத்தி இதெல்லாம் கவிதையாடா? என்றாள். அழகாக இருந்தால் எல்லாமே கவிதைதான், இல்லையா?

சமீபத்தில் கேட்ட சினிமா பாடலொன்று என் மனதை மிகவும் பாதித்தது. மிகுந்த சமூக பொறுப்புணர்வோடு பாடிக்கொண்டுவந்த கவிஞர், திடீரென்று இவ்வாறு சொல்லுகிறார்.

பாடல் : என்னம்மா தேவி ஜக்கம்மா
படம் : தம்பி

யார் எழுதியது என்று தெரியவில்லை.

விவசாயம் செய்யுன்னா
வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயித்தான்
ஒட்டகம் மேய்க்கிறான்

என்ன வார்த்தைகள் இவை? இதற்குப்பெயர் சமூகப்பொறுப்புணர்வா? நக்கலும் நையாண்டியும் அல்லவா மேலோங்கி நிற்கிறது? விவாசாயம் நல்ல வருமானம் தருகின்ற தொழிலாக இருந்தால் யார் அதை விட்டுவிட்டு ஒட்டகம் மேய்க்கப்போகப்போகிறார்கள்? விவாசயம் முக்கியமானது, நான் கடைசி வரை விவாசயம் மட்டுமே செய்துகொண்டிருப்பேன் என்று சொல்லிக்கொண்டு கூல் சட்டியை ஏந்திக்கொண்டிருக்கலாம் தான். நீங்கள் (சினமாக்காரர்கள்) என்ன செய்வீர்கள்? நெய்வேலியில் கருப்புசட்டை அணிந்து கொண்டு ஊர்வலம் போவீர்கள், பிறகு, அப்புறம்? உலக சினிமாவில் முதல் முறையாக என்று துபாய் பாலைவனத்தில் அதே ஒட்டகங்களோடு – கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பைஜாமா குர்தா சகிதம் – டூயட் பாட போய்விடுவீர்கள். பிறகு கூல் சட்டியை யார் நிறப்புவது? நீங்கள் சினிமாக்காரர்கள். காதல் கத்தரிக்காய் வெண்டைகாய் என்று அரைத்த மாவையே அரைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருங்கள். வெளிநாட்டில் உட்கார்ந்து, சொந்த பந்தம் மனைவி மக்கள் என்று அத்தனையும் விட்டு தம்முடைய அடுத்த சந்ததியினராவது நன்றாக இருக்கவேண்டும் என்று உழைத்து – கவனிக்க, உழைத்து – கொண்டிருக்கும் மக்களின் புண்பட்ட மனதை மேலும் மேலும் ரணமாக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும்.

மற்றுமொரு பாடல், சித்ரா மிக அருமையாக பாடியிருக்கிறார்.
படம்: பொய்.

என்ன தொலைத்தாய்
எதனைத் தொலைத்தாய்

தமிழைத் தொலைத்த
தலைமுறை போலே
தண்ணீர் தொலைத்த
தமிழகம் போலே
வருடம் தொலைத்த
வாலிபன் போலே
கருணையைத் தொலைத்த
கடவுளைப் போலே

வீரம் தொலைத்த
வாளைப்போலே
ஈரம் தொலைத்த
நிலத்தைப் போலே
கிழக்கு தொலைத்த
சூரியன் போலே
எல்லை தொலைத்த
தேசம் போலே

என்ன தொலைத்தாய்
நீ
எதனைத் தொலைத்தாய்?

இங்கே பாடலைக்கேளுங்கள்.

என்னுடைய ரோடங்கும் நயாகராக்கள் என்ற பதிவின் கருத்தை(!) ஒட்டிய
கவிதை ஒன்றை இந்த வார தீராநதியில் படிக்க நேர்ந்தது.

ஒரு மின்னல்

சமதரையிலிருந்து
மூன்றடி உயர்த்தித்தான் கட்டினேன்

சுவர்களில்
இட்டு வைக்கும் எச்சங்களைத்
தினமும் துடைத்து அள்ளுகிறேன்

சிறுமழை பெய்யினும்
தேங்கும் நீரில் வீடு தெப்பம்

எல்லாப் புறமும்
பசும்பாசிக் கொடிகள் ஏறுகின்றன
கிறுக்கல் வடிவ நீர்ப்பூச்சிகள்
எப்போதும் வீட்டையே சுற்றுகின்றன

இரவெல்லாம்
தவளைகள் கத்தித் தொலைக்கின்றன

இன்று அதிகாலை
கதவைத் திறந்தபோது
வாசலில் தலைவைத்துச்
சுகமாய்த் தூங்கி கொண்டிருந்தது
அந்த பாம்பு

சலனத்தில்
அது ஒரு மின்னலெனச்
சற்றே புரண்டு படுக்கையில்
என்க்கு புரிந்தது

அதன் வீட்டுக்குள் எனதுவீடு

.

-பெருமாள்முருகன்

காந்தம் : நாவல் (1)

காந்தம் : நாவல்

பாகம் 1 : கிழக்கு

1953

1

ஏட்டையா போலீஸ் ஸ்டேஷனை விட்டு ரோட்டில் இறங்கி, வெகுதூரம் நடந்துவிட்டிருந்த போதும், உடன் வந்த காண்ஸ்டபிளிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது விசித்திரமாக இருந்தது. குளிருக்கு இதமாக காதுகளை சுற்றிலும் மப்ளரால் கட்டியிருந்ததால் கூட இருக்கலாம். குளிர் இன்று மிக அதிகமாக இருந்தது. ஏட்டையா கால்சட்டைப் பையை துலாவி, பீடிக்கட்டு ஒன்றை எடுத்து, ஒரு பீடியை வாயில் வைத்துக்கொண்டார். சட்டைப்பையில் துலாவி தீப்பெட்டியை எடுத்து, பீடியை பற்ற வைத்துக்கொண்டார். தீக்குச்சியின் நெருப்பு முகத்திற்கு இதமாக இருந்தது. மிகவும் இரசித்து முதல் இழுப்பை இழுத்துக்கொண்டார். புகையை வெளியே விடும் பொழுது மட்டும் ஏனோ வானத்தைப் பார்த்துக் கொண்டார். அவர் விடும் புகை நட்சத்திரங்களை சென்றடையுமா என்ன? இல்லை வெளியேறும் புகை தன்னை மெதுவாக நட்சத்திரங்களுக்கு அருகே அழைத்துச் செல்கிறது என்றும் நினைத்துக்கொண்டிருக்கலாம். ‘அண்ணே’ என்ற ஹெட்காண்ஸ்டபிளின் குரல் கேட்டு, மறுபடியும் கால்சட்டைப் பையைத் துலாவினார்.

ரோடெங்கும் இருவரின் லத்தி ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் எரிச்சான்பட்டியை அடையும் போது மணி இரவு ஒன்பதை எட்டிவிட்டது. ‘அண்ணே கீழத்தெருவுக்கு இப்படி குறுக்கே போகலாம்’ என்றார் காண்ஸ்டபிள். அனையபோகும் பீடியை சாலையின் ஓரம் எறிந்தார் ஏட்டையா. வறண்டு போய், புதர் மண்டிக்கிடந்த குழாயடியில் படுத்துக்கொண்டிருந்த செவலை நாயொன்று விழித்துக்கொண்டு ‘கர்’ என்றது. இருவரின் லத்திகளையும் பார்த்து பின் வாங்கியது. அங்கிருந்த வேறு சில நாய்களும் தூங்கியிருக்கவில்லை. மேகமில்லாத வானத்தையே வெறித்துக்கொண்டு சோகமாய் படுத்துக்கிடந்தன.

அந்த தெருவின் கடைசிக் கூரை வீட்டின் முன் வந்து நின்றார் ஏட்டையா. அங்கொன்றும், இங்கொன்றுமாய் மனிதர்கள் வெளியே, அந்த குளிரிலும் படுத்துக்கிடந்தனர். தூரத்தில் ஊளையிடும் நாய்களின் ஓசையின்றி வேறு சத்தங்கள் இல்லை. வீட்டின் கூரைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. காண்ஸ்டபிள் இருமுறை கதவைத் தட்டிவிட்டு, பின் ‘செல்லம்மா’ என்று கூப்பிட்டார். கதவு சாத்திதான் வைக்கப்பட்டிருந்தது. பதில் இல்லாததால் மறுபடியும் ‘செல்லம்மா’ என்றார் காண்ஸ்டபிள், இந்த முறை கொஞ்சம் சத்தமாக. உள்ளே யாரோ எழுந்து உட்காரும் சத்தம் சன்னமாக கேட்டது, காண்ஸ்டபிள் தன் காலுக்கு கீழே உடைந்து கிடந்த மண்சட்டியையே வெறித்துக்கொண்டிருந்தார். சிதிலங்களில் மண் மட்டுமே அப்பிக்கிடந்தது. யாரோ மெதுவாக நடந்து வந்து கதவைத்திறந்தார்கள்.

மிகவும் ஒடிசலான நிறைமாத கர்பினி பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். சேலையால் முகத்தை துடைத்துக்கொண்டு, கண் விழித்து மிகவும் சிரமப்பட்டு பார்த்து, அடையாளம் கண்டுகொண்டபின் ,’ஐயா நீங்களா? என்னங்கையா இந்த நேரத்தில?’ ‘செல்லம்மா, உன் கிட்ட ஒரு விசயம் சொல்லனும், உன் புருஷன் மாணிக்கம் வீட்ல இருக்கானா?’ ‘ஆமாங்கையா வீட்ல தான் இருக்காரு. தூங்கிட்டு இருக்காருய்யா. இன்னைக்கு எங்கையும் போகல’ ‘ம்..ம்.. சரி. இன்னைக்கு அவன எங்கையும் போக வேணாமுன்னு சொல்லு. இன்னைக்கு கெடுபிடி அதிகம். சுட்டுத்தள்ள உத்தரவு வந்திருக்கு. அதையும் மீறி உன் புருஷன் போனான்னா, என்னால காப்பாத்த முடியாது. நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன். இனி உன்பாடு’

செல்லம்மா எதுவும் பேசாமல் ஏட்டையாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு மெதுவாக ‘சரிங்கைய்யா போகாம பார்த்துக்கிறேன்’ என்றாள். ‘எத்தனை மாசம்?’ ‘இன்னும் ஒருவாரத்தில ஆயிடும் போல இருக்குங்கய்யா’ என்றாள் பெரிதாக இருந்த வயிற்றைத் தடவிக்கொண்டே. ‘சரிம்மா நாங்க வாறோம்!’ ‘அண்ணே, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு…’ என்றவள் முடிக்காமல் தரையைப் பார்த்தாள். ஏட்டையா சிரித்துக் கொண்டு, காண்ஸ்டபிளோடு தெருவில் இறங்கி நடந்தார், கால் சட்டைப்பையைத் துலாவிக்கொண்டே.

செல்லம்மா வெகு நேரம் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே நின்றாள். பிள்ளை அழும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்தாள். சின்னவள் ராணி எழுந்து உட்கார்ந்து அழத்தொடங்கியிருந்தாள். பெரியவன் குமாரும், செந்திலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மாணிக்கம் சற்று தள்ளி படுத்திருந்தான். ‘என்னம்மா பசிக்குதா?’ ராணி ‘ம்..ம்..’ என்று தலையாட்டினாள். செல்லம்மா அவளை வாரி அனைத்து தூக்கிக் கொண்டாள். கண்ணத்திலும், நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டு, இடுப்பில் வைத்துக்கொண்டாள். மூலையில் இருந்த மண் பானையை துலாவி, கொஞ்சம் தண்ணீர் எடுத்து ராணிக்கு கொடுத்தாள். முதலில் மறுத்து தலையாட்டிய ராணி, பிறகு கொஞ்சம் குடித்து விட்டு, அம்மாவின் தோழில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

ராணியை மடியில் போட்டு தட்டிக்கொடுத்துக் கொண்டே, செல்லம்மா உட்கார்ந்திருந்தாள். ராணி தூங்கிவிட்டிருந்தாள். மண் சுவற்றில் முருகன் படம் தொங்கிக்கொண்டிருந்தது. செல்லம்மா கண்கொட்டாமல் முருகனையே வெறித்துக்கொண்டிருந்தாள். கண்ணீர் பெருகி வழிந்துகொண்டிருந்தது. மாணிக்கம் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

ராணியை தரையில் போட்டுவிட்டு தானும் படுத்துக்கொண்டாள் செல்லம்மா. ராணியின் அழகு முகத்தியே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென்று தூங்கிப்போனாள்.

சிறிது நேரம் கழித்து, மாணிக்கம் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். முருகன் அழகாக சிரித்துக்கொண்டிருந்தான்.

(தொடரும்)

ஆயிரம் கால் இலக்கியம் – 3

 

‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவத்தை புரிந்துகொள்ளக்கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.

அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’ அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கியவடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.

சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.

பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக்கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக்கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருப்போம்.

இவை ஏதும் சிறுகதைகள் அல்ல.

புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.

அது என்ன?

அதை கதையின் முடிப்பில் உள்ள ‘திருப்பம்’ என்றும் சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் ‘twist’ என்று சொல்கிறார்கள்.

அதாவது ஒரு சிறிய கதையை சிறு கதையாக ஆக்குவது திருப்பம்தான். ‘சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை’ என்று எளிமையாக வரையறை செய்யாலாம்.

-சிங்கப்பூரில் ஜெயமோகன் சிறுகதைப்பட்டறையில் பேசியது.

காக்கா வடை சுட்ட கதையை சமீபத்தில் கணையாழியில் படிக்க நேர்ந்தது. அதில் என்ன படிக்கவேண்டியதிருக்கிறது என்கிறீர்களா? அடுத்த பகுதியில் இதைப் பார்ப்போம்.

ஜெயமோகனின் நிறைய கதைகள் சுஜாதாவின் கதைகளைப் போல அதிரடித் திருப்பம் கொண்டிராது. ஆனால் ஒரு மெல்லிய திருப்பம் கண்டிப்பாக இருக்கும். சில சமயங்களில் அது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். சில சமையங்களில் மிக மெல்லிய மனஅதிர்வைக்கொடுக்கும். ‘ தேவகி சித்தியின் டைரி ‘ யைப் போல. ஜெயமோகன் சிறுகதைத் தொகுப்பை படிக்க எடுத்த பொழுது, கதை-பக்கம் (index) வரிசையில், தேவகி சித்தியின் டைரிதான் என் கண்களை சட்டென்று கவர்ந்தது. சித்தி டைரியில் என்ன எழுதியிருப்பார் என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்! ஆனால் பெரும்பாலும் இவ்வகையான வாக்கியத் தலைப்புகள், அதிலும் மர்மம் மிகுந்த தலைப்புகள், பலரது கவனத்தைக் கவரும். கௌதம் எழுதிய ‘ ஒரு நண்பனின் நிஜம் ‘ தலைப்பை போல.

தேவகி சித்தி ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாக்கப்பட்டு அவருகிறாள். அந்த குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு மகன்கள் உண்டு. தேவகிச் சித்தி இரண்டாம் மகனுக்கு மணமுடிக்கப்பட்டு அந்த வீட்டிற்கு வருகிறாள். தேவகி சித்தி பட்டணத்தில் படித்தவள். திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு சென்று கொண்டிருப்பவள். ஒரு பெண் சொந்தக்காலில் நிற்பது, இன்னொரு – சொந்த காலில் நிற்காத – பெண்ணிற்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை. இருவருமே அடிமைகளாக இருந்துவிட்டால் சந்தோஷம் தான்! அந்த வீட்டில் சும்மா இருக்கும் மூத்த மருமகளுக்கு தேவகிச் சித்தியைக் கண்டாலே பிடிப்பதில்லை. அதிலும் குறிப்பாக தேவகி சித்தி டைரி எழுதி வருவது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. சித்தி டைரி எழுதிக்கொண்டிருக்கிறாள் என்ற விசயத்தைக் கண்டுபிடிப்பது மூத்த மருமகளின் மூத்த மகன். முதல் பேரன்.

தேவகிச் சித்தி அந்த டைரியில் என்ன எழுதியிருப்பாள் என்று அனைவரின் – முதல் மருமகள், அப்பா (மாமனார்), அம்மா(மாமியார்) – தலையையும் குடைகிறது. அவள் இல்லாத நேரங்களில் அவள் அறையை சோதனை போடுகிறார்கள். டைரி கிடைக்கவில்லை. அன்று தேவகிச்சித்தி டைரியை பீரோவில் வைத்து பூட்டி சாவியை கைப்பையில் போட்டுக் கொண்டு போய் விடுகிறாள். டைரி கிடைக்காததைக் காட்டிலும் அவள் சாவியை கைப்பையில் போட்டுக்கொண்டு போனது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.

அன்று மாலை முதல் மகன் வந்தவுடன் முதல் மருமகள் டைரி பேச்சை எடுக்கிறாள். பிரச்சனை அலசப்படுகிறது. முதல்-மகன் முதலில் இது ஒரு பிரச்சனையா என்று நினைத்தவர், பிறகு அப்பா அம்மாவின் நிர்பந்தத்தால் தன் தம்பியை – தேவகி சித்தியின் கணவன் – அழைத்து விசாரனை செய்கிறார். தேவகிசித்தியின் கணவன் முதலில் இதை எப்படி அண்ணா அவளிடம் கேட்பது என்று தயங்கி பிறகு குடும்பத்தின் நிர்பந்தத்தால், தேவகியை அழைத்து டைரியைப் பற்றி கேட்கிறார். அவர் தேவகிசித்தியை ‘தேவு’ என்று அழைப்பது குறிப்பித்தக்கது.

தேவகிச்சித்தியும் டைரியை சபை முன்னர் எடுத்துக்காட்டுகிறாள். அப்பா (மாமனார்) அதை அனைவரின் முன்னால் வாசித்துக்க்காட்டச் சொல்கிறார். தேவகி பதறுகிறாள். வாசிக்கக் கூடாது என்று அடம் பண்ணுகிறாள். அது என்னுடையது. அதை யாருக்கும் காட்டமாட்டேன் என்கிறாள். மற்றவர்கள் – சித்தியின் கணவன் உட்பட – கோபம் அடைகின்றனர். ஒன்றும் இல்லையென்றால் வாசித்துக்காட்டவேணிடியது தானே. சித்தி சாமி மேல் சத்தியமாக அதில் ஒன்றும் இல்லை என்றும், வாசிக்கமட்டும் வேண்டாம் என்றும் சொல்கிறாள். முதல் மருமகள் அதற்குள் சித்தியிடமிருந்து லாவகமாக டைரியைப் பிடுங்கிவிடுகிறாள். தேவகி வெறி கொண்டார்போல ஓடிச்சென்று அவளிடமிருந்து பிடுங்கி, சமையலறைக்குள் சென்று கதவைச்சாத்திக்கொள்கிறாள். உள்ளிருந்து மண்ணென்ணெய் வாசனையும்,கருகிய வாசனையும் வருகிறது. அனைவரும் கலவரமடைந்து கதவைத்தட்டுகிறார்கள். சிறுது நேரத்திற்கு பின்னர் சித்தி மதுவாக கதவைத்திறந்து கொண்டு வெளியே வருகிறாள். டைரி எரிந்து சாம்பலாகக் கிடக்கிறது. தேவகியின் கணவர் கடுங்கோபத்திற்குள்ளாகிறார். தேவகியை கடுமையான வார்த்திகளால் திட்டுகிறார். அவளைக்கொண்டுபோய் அவளது தந்தையின் வீட்டில் விட்டு விடுகிறான். யார் யாரோ வந்து சமாதானம் செய்கின்றனர்.

இந்த கதையைச் சொல்லிக்கொண்டு வந்த கதை சொல்லி – முதல் பேரன் – இவ்வாறு முடிக்கிறான்:

தேவகிச்சித்தியை சித்தப்பா விவாகரத்து செய்துவிட்ட விசயம் அவர் மூன்று வருடம் கழித்து மறுமணம் செய்து கொண்ட பொழுது தான் தெரியவந்தது.”
கதை சொல்லியைப் போலவே, டைரியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது கடைசிவரை எனக்கும் தெரியாமலே போனது. மறுமுறை ஜெயமோகனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கேட்க வேண்டும். அவருக்கு மட்டும் தெரியுமா என்ன?

‘looking into ones diary is looking into ones bathroom’ என்று யாரோ சொன்னதாய் ஞாபகம். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் யார் கண்ணிலும் படாமல் வைத்திருக்கமுடியுமா என்ன? இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுதுதான் தமிழகத்தில் டைரி எழுதும் பழக்கம் எப்பொழுதிலிருந்து இருந்திருக்கிம் என்ற எண்ணம் தோன்றியது. மொழி எப்பொழுது எழுத்து வடிவம் பெற்றதோ அப்பொழுதிலிருந்து இருந்திருக்கவேண்டும். திருக்குறள் கூட திருவள்ளுவரின் டைரிக்குறிப்பாக இருக்கலாம். எனக்கு போன வருடம் வரை டைரி எழுதும் பழக்கம் இருந்தது. இப்பொழுது விட்டுவிட்டேன்.

சமீபத்தில் சுஜாதாவின் சிறுகதையொன்று குமுதத்திலே வெளிவந்திருந்தது. மிகவும் நன்றாக இருந்தது. கொடுத்த ஒரு டாலர் அந்த ஒரு கதைக்கே தகும்.

கதை சொல்லுபவர் அழுக்கு சட்டையும், அழுக்கு பேண்ட்டும், அறுந்த ரப்பர் செருப்புமாய் டோன்ட் கேர் பார்ட்டி. பீச்சில் உட்கார்ந்து புத்தகம் படிப்பது வாடிக்கை. அவர் தினமும் , ஒரு பணக்காரர் – தோரனையிலே தெரிகிறது, காரில் வந்து இறங்குவதும், டிரைவர் வந்து கதவைத்திறக்கும் வரையில் உள்ளேயே அமர்ந்திருப்பதுமே சொல்கிறது – வாக்கிங் வருவதைப் பார்க்கிறார். தினமும் ஒரே மாதிரியாக காரை விட்டு இறங்கி, ஒரே அளவு தூரம் நடந்து, ஒரே பெஞ்சில் உட்கார்வதே வழக்கம். ஒரு நாள் அவர் வாக்கிங்முடித்து விட்டு பெஞ்சில் வந்து உட்காரும் பொழுது நம்ம அறுந்த ரப்பர் செறுப்பு ( இனி அ.ர.செ) அதே பெஞ்சில் உட்கார்ந்து வெகு உன்னிப்பாய் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறது. செல்வந்தருக்கு மிகுந்த எரிச்சலாகப் போய்விடுகிறது. அ.ர.செ யின் தன்னுடன் பொருந்தாத தோற்றம் ‘உச்’ கொட்ட வைக்கிறது. ‘உச்’ கேட்ட அ.ர.செ பெஞ்ச் என்ன இவன் பாட்டன் சொத்தா என்று எங்கேயும் போகாமல் அங்கேயே உட்கார்ந்து கொள்கிறது. அன்று மட்டுமல்ல, அடுத்த நாளும் அதே பெஞ்சில் வேண்டுமென்றே வந்து உட்கார்ந்து கொள்கிறது. செல்வந்தர் அடுத்த பெஞ்சை ட்ரைப் பண்ணிப்பார்க்கிறார். அது கொஞ்சம் தூரமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். வேறு வழியில்லாம அதே பெஞ்சில் அ.ர.செ யுடன் உட்கார்ந்து கொள்கிறார். முதலில் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்ட செல்வந்தர், பிறகு புன்னகைக்க ஆரம்பிக்கிறார். அவர்களுக்குள் இனம்புரியாத நட்பு உருவாகிறது. அடுத்த சில நாட்களில் அ.ர.செ வரவில்லையென்றால், எங்கே இன்னும் காணோம் என்று தேடாஅரம்பித்துவிடுகிறார் செல்வந்தர்.

ஒரு நாள், செல்வந்தரும், அ.ர.செ யும் பெஞ்சில் உட்கார்ந்திருந்த பொழுது, மற்றொரு கார் வந்து நிற்கிறது. டிரைவர் இறங்கிவந்து ‘அம்மா பணம் கேட்டார்கள்’ என்கிறான். அதான் நிறைய கிரடிட்கார்டுகள் வைத்திருப்பார்களே. எங்கே தொலைத்தார்களாம் என்று நக்கலாக கேட்கிறார் செல்வந்தர். கிரடிட் கார்டு முடிந்து விட்டது என்றும் இப்பொழுது அம்மா 30,000 ரூபாய் கேட்கிறார்கள் என்கிறான். கோபமடைந்த செல்வந்தர் கொடுக்கமுடியாது போ என்கறு சொல்லி அனுப்பிவிடுகிறார்.

பிறகு அருகில் அமர்ந்திருக்கும் அ.ர.செயிடம் அந்த அம்மா தன் மனைவி என்றும் . தன் மனைவியும் மனனும் சரியான பணப்பேய்கள் என்றும் சொல்கிறார். அ.ர.செ. பணம் கேட்டால் குடுத்துவிடவேண்டியது தானே, உங்ளிடம் தான் நிறைய இருக்கிறதே என்கிறது. அவளாக வந்து கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன் என்கிறார் செல்வந்தர். பணம் ஒரு பிரச்சனையில்லை என்றும் தான்னிடம் நிறைய சொத்துக்கள் இருக்கின்றதென்றும், பினாமி பேரிலும் நிறைய சொத்துக்கள் இருக்கின்றதென்றும், எங்கெங்கே என்னெவென்ன இருக்கிறது என்ற விபரங்களையும் கூறுகிறார். சொத்தின் மேலேயே தன் மனைவிக்கும் மனனுக்கும் ஆசை என்றும் கூறுகிறார். அ.ர.செ, அப்படியென்றால், உங்க மகனையும், மனைவியையும் பழிவாங்க உங்க வரிப்பணத்தை கட்டிவிடுங்கள். உங்கள் பாதி சொத்துக்கள் குறைந்துவிடும். மனைவிவும், மகனும் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறது. கோபமடைந்த செல்வந்தர் அனைவரும் ஒழுங்காக வரி கட்டுகிறார்களா? நான் மட்டும் ஏன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வரியாக கட்ட்வேண்டும் என்றும் சொல்கிறார்.

கடலை வண்டி வருகிறது. அ.ர.செ. செல்வந்தருக்கு கடலை வாங்கிக்கொடுக்கிறது. முதலில் மறுத்த செல்வந்தர் பிறகு இதையும் எப்படியிருக்கிறதென்று பார்த்து விடுவோமே என்று வாங்கிகொண்டு, கடலைக்கு பணம் கொடுக்க 1000 ரூபாய் நோட்டை எடுக்கிறார். சிரித்துக்கொண்டே அ.ர.செ யே கடலைக்கு பணம் கொடுத்துவிடுகிறது. கடலை சாப்பிட்டுக்கொண்டே செல்வந்தர், உங்களுக்கு என்ன ஜாலிதான், பிக்கல் பிடுங்கல் இல்லாம இங்க வந்து புத்தகத்த தூக்கிவச்சுக்கிட்டு உட்கார்ந்திடுறீங்க என்கிறார். அதற்கு அரசெ, என் பாடு உங்களுக்கென்ன தெரியும்? நான் கவர்மெண்ட் வேலையில இருக்கிறவன். பாதி மாசத்திலே சம்பளம் தீர்ந்து போய் விடுகிறது. அதற்கப்புறம் பெண்டாட்டியிடம் தான் கேட்க வேணிடியிருக்கிறது என்றும் சொல்கிறது.

செல்வந்தர் கவர்மெண்ட் வேலையா என்று அறுந்த செருப்பையும், கிழிந்த சட்டையும் பார்த்துக்கொண்டே கேட்கிறார். அரசெ , நம்ப முடியலையா? அறுந்த செருப்பை பார்க்கறீங்களா? வேலைக்காக வேஷம் போடவேண்டியதிருக்கிறது. நான் சென்ட்ரல் போர்ட் எம்ப்ளாயி. இன்கம்டாக்ஸ் டிவிசனல் டைரக்டராக இருக்கிறேன். வருகிறேன், என்று சொல்லிக்கொண்டே எழுந்து செல்கிறது.

நீங்கள் இந்த முடிவை முன்கூட்டியே யூகித்திருந்தீர்கள் என்றால் அது முற்றிலும் என்னுடைய தவறே. சுஜாதா சற்றும் யூகத்திற்கு இடம் தராமல் கதையை நகர்த்திச் சென்றார்.

அதே வார விகடனில், நான் இரசித்த ஹி.ஹி.கூ.

தம்மடிச்சா கேன்சராம்
தண்ணியடிச்சா அல்சராம்
கூல்டிரிங்க்ஸ் பூராம்
பாய்ஸ்சனாம்
கொழாப்புட்டு தின்னுபுட்டு
குந்திக்கடா கோவிந்து

மற்றொரு கதை: இதை நான் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னர் படித்ததென்று நினைக்கிறேன். திடீரென்று இந்த நொடியில் தான் நினைவுக்கு வந்தது. குமுதத்தில் வந்தது.

ஆஸ்பத்திரியில் ஒருவர் மயக்க நிலையிலிருந்து கண் விழிக்கிறார். எழுந்தவர் தன் மனைவியையும் மகனையும் எங்கே என்று தேடுகிறார். நர்ஸ் இவர் கண்விழித்ததைப் பார்த்து, இதோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கிறேன் என்று சொல்லு சென்று விடுகிறாள். சரி என்று இவர், மேசையில் இருக்கும் வார இதழை எடுக்கிறார். அதில், இந்த படத்திற்கு அப்புறம் ரஜினி அரசியலில் குதிப்பாரா? வீரப்பனை பிடித்து விடுவோம் என்று அதிரடிப்படை சபதம். காவேரி பேச்சுவார்த்தைக்கு மந்திரிகள் டெல்லி பயணம் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கிறார்.

சிறிது நேரத்தில் அவர் மனைவி உள்ளே வருகிறாள். மனைவியைப்பார்த்தது மெலிந்து விட்டாள் என்று நினைத்துக்கொள்கிறார். அவள் பின்னாலேயே வாலிபன் ஒருவன் வருகிறான். அவனைப்பார்த்து சும்மா சிரித்துவிட்டு, ‘நம்ப பையன் சுகு எங்கம்மா?’ என்று தன் மனைவியைப்பார்த்து கேட்கிறார். மனைவி உடனே ‘இவன் தான் நம்ப பையன்’ என்று வாலிபனைக் காட்டுகிறாள். ‘நீங்க கோமாவுல இருந்த இந்த பத்து வருசத்தில தடிமாடு மாதிரி நல்லா வளர்ந்திட்டான்.’ என்கிறாள். அவர் அதிர்ந்து போய் வார இதழைப் பார்க்கிறார்.

இப்பொழுது, பத்து வருடங்களாகியும் செய்திகள் மாறாமல் இருக்கின்றன என்று சொல்லமுடியாதுதான். சரியா?

(தொடரும்)