டாலர் தேசம்

 

 சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் படித்ததிலிருந்து வரலாற்றின் மேல் ஒரு காதல் வந்துவிட்டது. காவல் கோட்டம் பற்றி வேறொரு சமயத்தில் எழுதலாம் – இன்னும் படித்து முடிக்கவில்லை. அதற்குள் டாலர் தேசத்துக்கு தாவினேன். இரண்டு அத்தியாயங்கள் படித்த நிலையில், இந்தியா சென்றிருந்த பொழுது, அமெரிக்க வரலாற்றை ஏன் படிக்கவேண்டும் – இந்திய வரலாறே நமக்குச் சரிவரத் தெரியாதே – என்கிற எண்ணம் தோன்றியது.

ஏர்போர்ட்டில் John Keay எழுதிய India: A History வாங்கினேன். 200 பக்கங்கள் படித்த நிலையில், என்ன படித்தோம் என்று ரீவைண்ட் செய்து பார்த்த பொழுது, ஒன்றும் நினைவில் இல்லை. வரலாறு கதை அல்ல. அதை சுவராஸ்யமாக எழுதுவது எளிதல்ல. சுவராஸ்யமாக இல்லையெனில் – படிப்பது எளிதல்ல. மீண்டும் முதலில் இருந்து படிக்கத் தொடங்கினேன். அந்த சமயத்தில் தான் என்னிடம் டாலர் தேசம் வாங்கிச்சென்ற என் நண்பர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார். (புத்தகத்தை திருப்பிக்கொடுக்கும் சிலர் இந்த உலகத்தில் இன்னும் இருப்பதாலேயே, உலகம் உய்த்திருக்கிறது. 🙂 ) திருப்பிக்கொடுத்ததோடில்லாமல், அபாரம் என்று சொன்னார்.

டாலர் தேசம்

பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்

ஆசிரியர்: பா.ராகவன்

dollardesam

இந்த நூலின் நோக்கம், அமெரிக்க வரலாறு அல்ல.  அமெரிக்காவைப் புரிந்துகொள்ளுதல்.

 

நமக்குத் தெரிந்த அமெரிக்கா நிஜமான அமெரிக்க அல்ல. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சறுக்கல்கள், அதன் ஜன்நாயகத்துக்குப் பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் ஸ்டைலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஸ்லம், அதன் பணபலத்துக்குப் பின்னாலிருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்குப் பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள் – இவையெல்லாம் தான் நிஜமான அமெரிக்கா.

 

இந்த நூலைப் படித்தால் அமெரிக்க வரலாற்றைக் கரைத்துக்குடித்துவிடலாம் என்றில்லை. இந்த நூலை வரலாற்றுப் பாடமாக்கலாமா என்றால் – முடியாது. பிறகு எதற்குத்தானய்யா இந்த நூல்? அமெரிக்காவைப் புரிந்துகொள்வதற்கு! அமெரிக்காவை எதற்காகய்யா புரிந்துகொள்ளவேண்டும்? அமெரிக்கா என்ன என் மாமியாரா? காரணம் இருக்கிறது. அமெரிக்க வரலாற்றை நீங்கள் புரட்டிப்பார்த்து புரிந்துகொண்டால், நீங்கள் தற்பொழுது பார்க்கும் இந்த உலகம் – நீங்கள் கேட்கும் செய்திகள் – ஏன் இப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள்.

 

வியட்நாம் யுத்தம் ஏன்? ஈராக்கில் என்ன நடந்தது? சதாம் உசேன் என்னதான்யா தப்பு செஞ்சார்? எகிப்து ஏன் நொண்டுகிறது? முதல் உலக யுத்தத்தில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? என்ன காரணம்? இரண்டாம் உலக யுத்தத்திலும் ஏன் நுழைந்தது? பேர்ல் ஹார்பர் மட்டும் தான் காரணமா? ஜப்பான் மீது ஏன் குண்டு போட்டது? ஜப்பான் ஏன் பேர்ல் ஹார்பரை தாக்கியது? அமெரிக்கா சும்மா தானய்யா இருந்தது – பின்ன ஜப்பான் ஏன் தாக்கியது? திமிர் தான? இல்ல கடுப்பில தாக்கியதா? என்ன காரணம்? க்யூபாவில் என்ன நடந்தது? கௌடமாலாவில் என்ன பிரச்சனை? சுடானில் என்ன பிரச்சனை? அல்-கைதாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன வாய்க்கா சண்டை? ஆஃகானிஸ்தானில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் என்னப்பா பிரச்சனை? கொரியாவில் என்ன நடந்தது? பாலஸ்தீனப்போரில் அண்ணனின் பங்கு என்ன? பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது சரி – எதுக்குய்யா கட்டினாங்க? பாக்கிஸ்தான் ஆஃப்கானிஸ்தானைத்தான ஆதரித்திருக்கவேண்டும்? எதுக்கு அமெரிக்காவுக்கு சலாம் போடுகிறது? இப்படி நிறைய கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். அதற்கான அத்தனை விடைகளும் உங்களுக்கு இந்த ஒரு புத்தகத்தில் கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த விடைகளுக்கான தேடலின் தொடக்கமாக இந்த புத்தகம் இருக்கக்கூடும்.

 

1500 இல் ஆரம்பித்து இன்றுவரையிலான அமெரிக்க சரித்திரத்தை அலசுகிறது இந்த புத்தகம். வரலாற்று நூலை இவ்வளவு சுவராஸ்யமாக எழுதமுடியும் என்று நான் நினைத்ததில்லை. பா.ராகவன் செய்திருக்கிறார். மூன்று நாட்கள் மூச்சுவிடாமல் படித்து முடித்தேன்.

 

அமெரிக்காவுக்கு போக வேண்டும் என்று நான் நினைத்ததில்லை – கட்டாயத்திலும் இல்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் என்னுள் இருந்தது. அது ஏன் அமெரிக்கா மட்டும் ஜொலிக்கிறது என்கிற கேள்வி. இதற்கும் அமெரிக்காவின் சரித்திரம் வெறும் ஐநூறு ஆண்டுகள் மட்டுமே. ஐநூறு ஆண்டுகளுக்குள் ஒரு நாடு எப்படி வல்லரசாக முடியும்? கல்தோன்றி முன்தோன்றா டாஸ்மாக்குடி காலத்தைச் சேர்ந்த நம்மால் ஏன் முடியவில்லை? ஒவ்வொரு இந்தியனிடமும் பெருமை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் எப்படி இருந்த நாம், இப்படி ஆகிட்டோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகங்கள் இருந்தன. அப்பொழுதே சாக்கடை கட்டியிருக்கிறோம். அப்போதே பொது தண்ணீர் சேமிப்பு – விநியோக திட்டம் இருந்திருக்கிறது. தெற்கே முத்து வியாபாரம் கண ஜோராக நடந்திருக்கிறது. வடக்கே சந்தைகள் கொழித்திருக்கின்றன. நமது மொழி ஆயிரக்கணக்கான வருஷத்து பழமையானது. பாரதியார் கனவு கண்டார். காசியில் பேசினால் காஞ்சியில் கேட்கவேண்டும் என்றார். ஆனால் ரேடியோ கண்டுபிடித்தோமா நாம்? ராவணன் சீதையை ஆகாய விமானத்தில் வைத்து தூக்கிச்சென்றான் (கதை தான் என்றாலும்) என்று படித்து உருகுகிறோம். விமானம் கண்டுபிடித்தோமா?

 

ஏன் முடியவில்லை? அமெரிக்காவால் ஏன் முடிந்தது?

 

சிம்பிளா சொன்னா: நம்ம கிட்ட இல்லாதது அப்படி என்ன இருக்கு அவங்ககிட்ட?

 

இந்த கேள்வி உங்களுக்கு இருக்குமேயானால் இந்த புத்தகத்தைப் படிப்பது அவசியம். பணக்காரர்களை நாம் எட்ட இருந்து பார்க்கும் வரை அவர்களது ஜொலிப்பு அட்டகாசமாய் இருக்கும். அவர்களுடன் பழகிப்பார்த்தால் தான், அவர்களது உண்மை நிலவரம் புரியும். பணக்காரர்களாக இருப்பதற்கு, பணத்தை சம்பாதித்துக்கொண்டேயிருப்பதற்கு, அவர்கள் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்யவேண்டியிருக்கிறது என்பது புரியவரும். பணக்காரர்களாகவே இருப்பது எளிதல்ல. பணக்காரர்களுக்குக் கூட பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு என்ன செய்தால் பணம் காய்த்துக்கொண்டேயிருக்கும்?

 

எங்கேயும் எதிலும் பிஸினஸ். மனிதநேயத்தையும் பிஸினஸையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒழுக்கவிதிகளையும் பிஸினஸையும் மிக்ஸ் செய்யக்கூடாது. இது சரியா? மக்கள் பாவமில்லையா? உன் பாவத்தை சம்பாதித்த பணத்தில் கழுவு.

 

அயல்நாடுகளுடன் உறுதியான, வளமான வர்த்தகத் தொடர்புகள் இருந்தாலொழிய அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்தி உட்காரவைக்க முடியாது என்பது ரூஸ்வெல்டுக்குத் தெரிந்தது.

 

ஆனால் முதல் உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய தேசங்களுக்குள்ளேயே பல அமெரிக்காவுடன் நட்பு-பகை என்று மாறிமாறி உறவாடிக்கொண்டிருந்தன. பிஸினஸ் தான் முக்கியம் என்று முடிவு செய்துவிட்டால் இந்த உறவு சமாச்சாரமெல்லாம் சரிப்படாது என்று அப்போதைய அமெரிக்க அரசு கருதியது.

 

இப்படி சர்வாதிகார தேசங்களையெல்லாம் கம்யூனிஸ்டு சோவியத்துக்கு எதிரானா மனோபாவத்தை வளர்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அத்தகைய தேசங்களைத் தேடிப் பொறுக்கி எடுத்து தனது வர்த்தக ஒத்துழைப்பு மூலம் சோவியத்துக்கு எதிரான அத்தேசங்களின் கோபங்களைக் கொம்பு சீவிவிடலாம் என்று கணக்குப் போட்டது அமெரிக்கா.

 

இது ஒரே கல்லில் ரெண்டு தேங்காய் சமாச்சாரம். பிஸினஸுக்கு பிசினஸும் ஆச்சு. சோவியத்தையும் கொஞ்சம் அடக்கிவைக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் நெடுநாளைய ஆசைக்கும் வடிகால். அதுவும் தாம் நேரடியாகச் சம்பந்தப்படாமல் ஜெர்மனியையும் ஜப்பானையும் தூண்டிவிட்டுச் செயல்படுவதால் தனக்கு நேரடியாக வில்லன் இமேஜ் வந்து சேராது.

 

சரிந்து கிடந்த அமெரிக்கப் பொருளாதாரம் சீர்படத் தொடங்கியது இப்போதுதான். கொஞ்ச நஞ்சமல்ல. பல லட்சக்கணக்கான ராணுவத்தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மூலப்பொருட்களோ கப்பல் கப்பலாக அனுப்பிவைக்கப்பட்டன.

 

கிட்டத்தட்ட அமெரிக்காவே ஒரு கொல்லன் பட்டறை மாதிரித்தான் இருந்தது. பகிரங்கமாகவும் ரகசியமாகவும் பில்லியன் கணக்கிலான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

 

ஆனால் அவரே [ஹிட்லர்] கூட நினைத்துப் பார்த்திராத விசயம், அமெரிக்கா மீதான ஜப்பானின் அந்த திடீர் தாக்குதல. பேர்ல துறைமுகத் தாக்குதல். . எப்படிப் பார்த்தாலும் ஜப்பானின் எழுச்சியில் அமெரிக்காவுக்கு பெரும் பங்கு உண்டு. ராணுவ ரீதியில் அந்த தேசம் பெரிய அளவில் வளர்ந்து நிற்க மறைமுகமாக நிறைய பொருளுதவியும் ஆயுத உதவியும் செய்திருந்தது….

 

ஆனால் இப்படி க்ளோசப்பின் நேசப்பிணைப்பாக இருந்த இரு நாடுகள் ஏன் தாக்கிக்கொண்டன? எப்படியிருந்தாலும் இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லர். அணுகுண்டு போடுவதென்றால் ஜெர்மனி மீது தான் அமெரிக்கா போட்டிருக்கவேண்டும் – ஆனால் ஏன் துக்கனூண்டு ஜப்பான் மீது போட்டது? பொதுநலமா? “குண்டு போட்டது பெருமையா கடமை ப்ரோ”ன்னு உலகநியாயம் பேசினாலும், குண்டுக்குப்பின் இருந்தது, வர்த்தக போட்டி. பொறாமை. ஆற்றாமை. ஏன்? என்ன ஆற்றாமை? ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் அப்படியென்ன உள்குத்து?

 

குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்தது என்று நினைக்கிறேன். வாரா வாரம் படிக்க நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் புத்தகமாக மொத்தமாக படிக்கும்பொழுது, அதுவும் வரலாறு, நன்றாகவா இருக்கும்? நன்றாகத்தான் இருந்தது. மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அதற்குக் காரணம் பா.ராகவனின் இயல்பான நகைச்சுவை கலந்த நடை.

 

உதாரணமாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போரைப்பற்றிப் பேசும்போது:

 

இந்தப் பனிப்போரைப் பற்றி நமது பாடப்புஸ்தகங்கள் சொல்லுகிற விவரங்கள் எல்லாமே மிகவும் தமாஷானவை. கம்யூனிசத்தின் வளர்ச்சியைப் பார்த்து அமெரிக்கா கவலைப்பட்டது; அமெரிக்காவின் ஆயுத பொருளாதாரப் பெருக்கத்தைப் பார்த்து ரஷ்யா வெறுப்படைந்தது; அதனால் பனிப்போர் ஏற்பட்டது என்று ஒரு வாயில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

 

உண்மையில் புரோட்டா மாதிரி லேயர் லேயராக நிறைய சங்கதிகளும் , காரணத்துக்குள் காரணம், அதற்குள் இன்னொரு காரணம் என்று பூரணக்கொழுக்கட்டைகளாக உள்ளே பொதிந்து வைத்த மேட்டர்கள் மிக அதிகம்!

 

அடிமைகளின் வாழ்க்கை பெரும்பாலும் அடிகளாலானது. கசையடி. நிற்க வைத்து நூறு, நூற்றைம்பது என்று எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட கசையடிகள். கசையடிக்கு அப்புறம் உழௌப்பி. ஒரு தினத்தில் குறைந்தபட்சம் பதினெட்டு மணிநேரம் அவர்கள் உழைத்தாக வேண்டும். உழைக்கும் நேரமெல்லாம் அவர்களின் வெற்றுடம்பிலிருந்து சொட்டிக்கொணே இருப்பது வியர்வை மட்டுமல்ல; காயங்களிலிருந்து ரத்தமும் கூட.

 

இப்புத்தகத்தின் மிக முக்கியமான அத்தியாயம் பிரடரிக் டக்ளஸின் அத்தியாயம் தான்.

 

டக்ளஸின் கலிவித்தாகம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அவரது சுயசரிதத்தில் டக்ளஸ் கையாண்டிருக்கும் மொழி, வாசிக்கும் போது பிரமிப்பூட்டக்கூடியது. வாழ்நாளில் ஒருநாள் கூட பள்ளிக்குப் போகாதவர், சேர்ந்தாற்போல் பத்துநிமிடம் உட்கார்ந்து பாடம் என்று எதையுமே படிக்காதவர், வெறும் கேள்வி ஞானமும் சுயமுயற்சியும் மட்டுமே கொண்டு எழுதப்படிக்கக் (அதுவும் பயந்து பயந்து, ரகசியமாக!) கற்றுக்கொண்டவர் அவர்.

 

வரலாற்றில் ஆர்வமிருக்கும் எவரும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.

 

 

 

 

 

 

 

 

பாருக்குப்போன குதிரை

புத்தக விமர்சனம் :

A horse walks in to a bar- ஒரு ஸ்டேண்டப் காமெடியனின் வலி.

இந்த ஜோக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இதோ:

ஒரு குதிரை பாருக்குப் போனது. என்னடா குதிரை பாருக்கு வந்திருக்கிறதே என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சிலர் கேலி பேசினர். ஆனால் குதிரை யாரையும் கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாக நேரே பார்மேனிடம் (ஊத்திக்கொடுப்பவர்) சென்றது. பார்மேன் என்ன வேண்டும் என்பது போல பார்த்தான். ஒரு டக்கீலா என்றது குதிரை. பேசிய குதிரையைக் கண்டு அதிர்ந்த பார்மேன், அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் ஒரு டக்கீலா கொடுத்தான். மடக்கென்று குடித்த குதிரை கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தது. பிறகு என்ன விலை என்று கேட்டது. ஓ காசு வேற வெச்சிருக்கா என்று மேலும் அதிர்ந்த பார்மேன் 2000 ரூபாய் என்று சொன்னான். ஒன்றும் பேசாமல் அவன் கையில் புதிய 2000 ரூபாய் நோட்டை திணித்துவிட்டு நடையைக் கட்டியது குதிரை. பார்மேனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை – பேசும் குதிரை அதுவும் கேட்ட காசைக் கொடுக்கும் குதிரை. பார்மேன் ஓடிப்போய் வெளியே போய்க்கொண்டிருந்த குதிரையை மடக்கிக் கேட்டான்: ஆச்சரியமாக இருக்கிறது. பேசும் குதிரையை இதுவரை நான் பார்த்ததில்லை என்றான். ஹ்ம்ம் உங்க டகீலா விலை அதிகம். இனிமே பாக்கமாட்டீங்க என்று சொல்லிவிட்டு குதிரை வெளியேறியது.

*

பாருக்குப் போன குதிரை (A horse walks in to a bar) நாவலை எழுதியவர் டேவிட் க்ராஸ்மேன் என்கிற இஸ்ரேலிய எழுத்தாளர். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆங்கிலத்தில் ஜெசிக்கா கொஹென்னால் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசு வாங்கியது. 194 பக்கங்களே கொண்ட சிறிய நாவல். இரண்டு மூன்று நாட்களில் படித்து முடித்து விடலாம் – ஆனால் இந்த புத்தகத்தின் தாக்கம் சிறிது நாட்களுக்கு நம்முடன் இருக்கும்.

*

இஸ்ரேலின் நெட்டன்யா நகரில் ஒரு காமெடிக் க்ளபின் மேடையில் ஒரு சாயங்காலம் டோவேலோ ஜி என்கிற கமெடியன், காமெடியன்களின் வழக்கமான பாணியில் ஸ்டேண்டப் ஷோ செய்ய ஆரம்பிக்கிறார். டோவேலோ ஜி ஒரு ஐம்பது வயதான ஜி. சில நாட்களுக்கு முன் அவருடைய பழைய நண்பரான அவிஷாயை (சமீபத்தில் மனைவியை இழந்த ஒரு ரிடையர்ட் ஜட்ஜ்) தொலைபேசியில் அழைத்து தன்னுடைய ஷோவுக்கு வரும்மாரு அழைக்கிறார். இருவருக்குமான நட்பு நாற்பது வருடங்களுக்கு முந்தியது – கடைசியாக ஒரு சம்மர் கேம்பில் பார்த்தது. அவிஷாய்க்கு முதலில் டோவேலோ ஜி யார் என்பதே ஞாபகம் இல்லை.

அன்றைக்கு ஸ்டேஜில் எப்பொழுதும் போலவே ஜோக்குகளுடன் ஆர்ம்பிக்கிறார். சில மொக்கை ஜோக்குகள், செக்ஸ் ஜொக்குகள், ஊரைப்பற்றி, இஸ்ரேலைப்பற்றி, பார்க்க வந்திருப்பவர்களைப் பற்றி கேலி பேசி ஜோக்குகள் என்று ஆரம்பிக்கிறது ஷோ. அவிஷாய் உங்களுக்கு எல்லாமே காமெடிதான். உங்கள் அம்மா கூட உங்களுக்கு காமெடி தான் என்பார். ஆனால் போகக் போக டோவேலா தனது சிறுவயதில் நடந்த ஒரு அதிர்ச்சியான துயரச் சம்பவத்தை விவரிக்கும் பொழுது பார்வையாளர்கள் இன்னும் அந்தத் துயரச் சம்பவத்திலிருந்து மீளாத உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் காண்கின்றனர்.

க்ராஸ்மேன் ஒரு ஜியானிஸ்ட் (யூதர்களுடைய பூர்வீக நிலத்தை மீட்டு அவர்களை அங்கே குடியேற்றவேண்டும் என்கிற கொள்கை) ஆனால் மிதவாதி.மேலும் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமிடையே அமைதியாக சுமூகமாகவே நல்லிணக்கம் வேண்டும் என்று விரும்புபவர். அப்படியானல் இந்த டோவேலோ ஜி அடிபட்ட ஒரு தேசத்தின் குறியீடா? இல்லை வெளி உலகத்துக்கு கொடுமைக்காரனாகவும் சுயநலவாதியாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் 1973ஆம் வருடம் நடந்த ஒரு சம்பவத்தால் வஞ்சிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத ஒரு குழந்தையாகவே இருக்கும் ஒரு மனிதனின் கதையா?

அன்றைய மாலையின் முழு ஷோவும் – ஒவ்வொரு ஜோக்கும், டோவேலாவின் ஒவ்வொரு கையசைவும், பார்வையாளர்களின் ஒவ்வொரு எதிர்ப்பும், சிரிப்பும், ஆர்ப்பரிப்பும் தெளிவாக எழுத்தாளர் க்ராஸ்மேனால் – அல்லது அவிஷாயால் – விவரிக்கப்படுகிறது. க்ராஸ்மேனின் தெளிவான ஆனால் பிடித்திழுக்கும் நடை நம்மை அந்த ஷோ நடக்கும் அந்த க்ளப்பின் பாதாள அறைக்கே இழுத்துச் செல்கிறது.

முதலில் கொஞ்சம் ஆசுவாசமாக ஆரம்பித்தாலும், போகக் போக ஒரு கழுகு எப்படி தன் இரையை நோக்கி பாயுமோ, அதே அளவு வீரியத்துடன் டோவேலா பார்வையாளர்களை தன் வாழ்க்கையையே மாற்றிய அந்த தருணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

எப்படிச் செய்தார்? எனக்குப் புரியவில்லை. எப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை -என்னையும் சேர்த்து – அவரது ஆன்மாவின் குடும்ப உறுப்பினராக ஆக்கினார்? எப்படி எங்களையெல்லாம் பினைக்கைதிகளாக ஆக்கினார்?

என்று இந்தக் கதையை சொல்லும் பார்வையாளர்களுள் ஒருவரான அவிஷாய் கேட்கிறார்.

பார்வையாளர்களில் மேலும் ஒருவர் டோவேலோவைத் தெரிந்தவராக இருக்கிறார். அவரது வீட்டுக்குப் பக்கத்திலே இருந்தவர் – ஒரு சிறிய குட்டையான பெண்.

எனக்கு உன்னைத் தெரியும். நீ தானே கைகளால் தலைகீழாக நடப்பவன்?

என்று தனது முதல் அறிமுகத்திலே எல்லோர் முன்னிலையிலும் சொல்லுகிறார். டோவேலோ கைகளால் தலைகீழாக நடப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அப்பாவிடம் கடுமையான பெல்ட் அடி வாங்கினாலும் கைகளால் நடக்கும் பழக்கத்தை கைவிட இயலாதவர். தலைகீழாக நடக்கும் பொழுது ரத்தம் தலைக்கு ஏறி காதுகளை அடைத்துக்கொண்டு உலகத்தின் சத்தங்களையெல்லாம் வடிகட்டி அமைதியை கொடுக்கிறது என்கிறார்.

டோவேலோவின் கடுமையான கேலிப்பேச்சுகளைப் பார்த்து” நீ அப்பெல்லாம் இப்படி இல்லை நீ ரொம்ப நல்லவன்” என்கிறார் அந்தப் பெண்.

க்ராஸமேனின் டோவேலாவின் கதாப்பாத்திரத்துக்கும் டோவேலாவின் நாடான இஸ்ரேலுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. டோவேலாவின் துயரம் என்னவென்றால்: அவர் தன் இயல்பிலிருந்து மாறி, ஏன் தன்னையே வஞ்சித்துக்கொண்டு, தன் சுயத்தை இழந்தவர். ஒரு காலத்தில் உற்சாகமான – அந்தப் பெண்ணைப் பொருத்தவரை நல்ல – சிறுவனாக இருந்த டோலேவா அவமானத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகி கொடுமைக்காரனாகவும், அடுத்தவர்களிடம் குறைகளை மட்டுமே காணுபவனாகவும் காலப்போக்கில் மாறிப்போனான். அவனுடைய வாழாத வேறுவிதமான தனக்கு உண்மையான வாழ்க்கையின் ஒரு மிகச் சிறிய பகுதியைத்தான் எஞ்சியிருந்த பார்வையாளர்கள் அன்றைய மாலையில் பார்த்தனர்.

க்ராஸ்மேன் ஒரு பேட்டியில் சொன்னார்: இதை ஒரு இணையாக எடுத்துக்கொண்டு நான் நினைத்ததுண்டு, இஸ்ரேலியர்களாக நாம் வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும். 1967ஆம் ஆண்டு நடந்த போர் தான் திருப்புமுனை. 1967இல் தான் இஸ்ரேல் தான் அதுவரை பிடித்துவைத்திருந்த பகுதிகளை தனது அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், சிரியா போரிட்டு தக்கவைத்துக்கொண்டது. ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையையும், எகிப்திடமிருந்து சினாய் மற்றும் காசாவையும், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்சையும் போரிட்டு வென்று அந்தப் பகுதியின் அசைக்கமுடியாத ராணுவமாக உருமாறியது இஸ்ரேல். க்ராஸ்மேனைப் பொருத்தவரை இது ஒரு வரலாற்றுப் பிழை. புவியியல் பிழையும் கூட. அந்தப்பிழை திருத்தப்பட்டால் அல்லது திருத்தப்படும் பொழுது நாம் நம்முடைய அண்டை நாட்டவருடன் சுமூகமாக சண்டையின்றி வாழலாம். நம் வாழ்க்கை இவ்வளவு இருட்டாக நித்தமும் பயமாக இருந்திருக்காது என்று கூறுகிறார்.

மேலும்,

1967க்கு முன்பிருந்த இஸ்ரேலைக் கொண்டாடவில்லை, 1948இல் நடந்ததைப் போன்ற கொடுமைகள் நடந்திருக்கின்றன தான். ஆனால் 1967க்கு முன்பு வரை அடுத்த 50 ஆண்டுகளுக்கு நமது அண்டை நாடுகளுடன் போரிட்டுக்கொண்டிருக்காமல் ஓரளவுக்கு இனக்கமான சூழ்நிலையில் வாழ்வதற்கான வாய்ப்பிருந்தது. வாளால் வாழ்ந்து, வாளால் மடிவது. இன்றைக்கிருக்கும் இஸ்ரேலியர்களுக்கு வேறு வழியில்லை இது தான் ஒரே வழி, இப்படித்தான் வாழ்ந்திருக்க முடியும் என்கிற மனப்போக்கிருக்கிறது. 1967க்கு முன் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த மன்நிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறான கருத்துகளால் க்ராஸ்மேன் ஒரு தேசதுரோகி என்று சிலர் கருதுகின்றனர். நம்ம ஊர்காரர்கள் ஆண்டி-இண்டியன்ஸ், பாக்கிஸ்தானுக்குப்போ என்று சொல்வது போல. 2016இல் இஸ்ரேலிய கலாச்சார மந்திரி பழைய ப்ரிகேடியர் ஜெனரல் மிரி ரெகவ், இடதுசாரி எழுத்தாளர்கள் என்று சிலரைப் பட்டியலிட்டு அவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை இல்லை என்று அறிவித்தார். க்ராஸ்மேனும் அந்தப் பட்டியலில் இருந்தார். உங்களுக்கு பயமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு க்ராஸ்மேன் இல்லை பெருமைப் படுகிறேன் என்றார்.

பார்வையாளர்கள், மேடையில் இருப்பவனின் கதையைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. அந்தக் காமெடியன் சொல்லும் ஜோக்குகள் மட்டுமே அவர்களுக்குத் தேவை. காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை.

டோவேலா தனது கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சிலர் போதும் நிறுத்து, ஜோக் சொல்லு என்று கதறுகிறார்கள். சிலர் கிளம்பி விடுகிறார்கள். டோவேலா ஒரு சில ஜோக் அவ்வப்போது சொல்லத்தான் செய்கிறார்.

உதாரணத்துக்கு:

ஒருத்தர் ஒரு கிளி வளர்க்கிறார். அந்தக்கிளி அவரைக் கண்டபடி திட்டுகிறது. கெட்ட கெட்ட வார்த்தையாலேயே திட்டுகிறது. காது கூசும் அளவுக்கு கழுவி கழுவி ஊற்றுகிறது. யார் இருக்கிறார்கள் இல்லை என்று பார்ப்பதில்லை. வளர்ப்பவர் சொல்லிப் பார்த்தார். கெஞ்சிப்பார்த்தார். எல்லார் முன்னிலையில் திட்டு வாங்கும் பொழுது என்னைத் திட்டவில்லை, என் அட்மினைத்தான் திட்டுகிறது என்று சொல்லி சமாளித்தார். யாரும் நம்பவில்லை என்பது வேறு விசயம். பொறுக்கமுடியாமல் உனக்கு சாப்பாடே கிடையாது என்று பட்டினியும் போட்டுப் பார்த்தார். கிளி அடங்கவில்லை. ஒரு கட்டத்தில் கடுப்பாகி கிளியை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைத்து அடைத்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து கிளியை வெளியே எடுத்தார். கிளி மிகவும் பவ்யமாய் ஐயா என்னை மன்னித்து விடுங்கள். தவறிழைத்து விட்டேன். இனி ஒருபோதும் இது போல செய்யமாட்டேன். உங்களிடம் மரியாதையாகவே உரையாடுவேன். ஆனால் இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்: உள்ளேயிருக்கும் கோழி என்ன தவறிழைத்தது என்று சொன்னது.

மேலும் ஒரு ஜோக், கொஞ்சம் அசைவம்:

நடுக்கடலில் ஒரு சிறிய கப்பல் ஒன்று கவிழ்ந்து விடுகிறது. அதிலிருந்து ஒரு மனிதன் தப்பித்து நீந்தி கஷ்டப்பட்டுக் கரையேறுகிறான். கரையில் அதுபோலவே ஒரு நாயும் ஒரு ஆடும் தப்பித்து கரையேறியிருந்தன. அது ஒரு தீவு. ஒரு மனிதன். ஒரு நாய். ஒரு ஆடு. அவ்வளவே. நாட்கள் ஓடின.வாரங்கள் ஆயின. மாதங்கள் ஆயின. மனிதன் செக்ஸுக்கு காய்ந்துபோய் விட்டான். என்ன செய்வது. யாருடன் செய்வது. ஆடு ஒன்றுதான் வழி என்று முடிவுசெய்து ஆட்டை நெருங்கினான். ரெடியாகும் பொழுது ஒரு உறுமல் சத்தம் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். நாய் பற்களைக் கடித்துக்கொண்டு உறுமிக்கொண்டிருந்தது. மனிதன் இது என்னடா வம்பாப் போச்சு என்று வாலைச் சுருட்டிக் கொண்டு போய்விட்டான். பிறகு நாய் தூங்கும் வரை பொறுமையாகக் காத்திருந்து தூங்கியபின் மெதுவாக தவழ்ந்து தவழ்ந்து ஆட்டின் அருகில் சென்று ரெடியானான். மறுபடியும் உறுமல் சத்தம். வெறுத்துப் போன மனிதன் அடப்போங்கப்பா என்று போய்விட்டான். வாரம் மாதம் ஓடியது நாய் ஒரு நாளும் மனிதனை ஆட்டிடம் நெருங்கவிடவில்லை. வேறெந்தக் கப்பலும் வரவும் இல்லை. வெறுப்பின் உச்சத்தில் இருந்த மனிதன் மற்றுமொரு கப்பல் தூரத்தில் கவிழ்வதைக் கண்டான். அதிலிருந்து ஒரு பெண் கடலுக்குள் குதிப்பதைக் கண்டான். குஷியான மனிதன் நீந்திச் சென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்றி கரை சேர்த்தான். அந்தப் பெண் மிக அழகாக இருந்தாள். சற்று நேரம் கழித்து கண் முழித்த அந்தப்பெண் ஆகா என் ரட்சகரே. என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவரே என்னையே உங்களுக்குத் தருகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். எமை ஆளுங்கள் என்றாள். அதற்கு அந்த மனிதன் எனக்கு ஒரே ஒரு உதவி செய்யுங்கள். அந்த நாயை மட்டும் கொஞ்ச நேரம் பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.

டோவேலோ தன் கதைக்கு நடுவே சில ஜோக்குகள் இது போலச் சொன்னாலும் அவனது கதையிலே அவன் கவனமாக இருக்கிறான். பார்வையாளர்கள் அவனுடைய ஜோக்கிலே கவனமாக இருக்கிறார்கள்.காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை. இதேபோன்றதொரு மனநிலையைத் தான் நாம் (இஸ்ரேலியர்கள்) அகதிகளிடம் காட்டுகிறோம் என்கிறார் க்ராஸ்மேன். நாம் அகதிகளின் கேட்பாரற்ற நிலையைப் பார்க்கிறோம். அவர்களை ஒரு அழுக்கு போல கருதுகிறோம். அவர்களுக்கு நம்மை போல துணிமணிகளை அணிவித்து, அவர்களை நம்மை போன்றதொரு அப்பார்ட்மெண்ட்டில் வைத்து, அவர்களுக்கு நம்மைப் போன்றதொரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்து ஒரு முப்பது விநாடி கற்பனை கூட நாம் செய்ய விரும்புவதில்லை. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, அவர்களை அவர்களுடைய வாழ்க்கையில், ஒரு புதிய இடத்தில், இணைத்துவிட அவர்கள் மீதான நம்முடைய பார்வையை நாம் மாற்றவேண்டும். அவர்கள் இழந்த மதிப்பையும் பெருமையையும் அவர்கள் மீட்டெடுக்க அதுதான் ஒரே வழி என்கிறார் க்ராஸ்மேன்.

எந்த அளவுக்கு இந்த நாவல் – முக்கியமாக டோவேலாவின் கதாப்பாத்திரம் – இஸ்ரேலின் குறியீடு என்று தெரியவில்லை.

இந்த நாவலின் முக்கிய கதாப்பாத்திரம் டோவேலாவா, ஓய்வுபெற்ற நீதிபதி அவிஷாயா அல்லது வாசகர்களாகிய நாமா?

இறுதியில் டோவேலா தன் கதையைச் சொல்லி முடிக்கும் பொழுது எஞ்சியிருப்பது நான்கே பேர் தான். அதில் இருவர் டோவேலாவை முன்பே அறிந்தவர்கள். இதை வைத்து க்ராஸ்மேனிடம் : உங்களுக்கான வாசகர்கள் உங்களுடைய கருத்துக்களால் இது போல குறைந்து வருகிறார்களா என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் நான் எனது கலைக்கு உண்மையாக இருக்கிறேன் என்றார்