என்னுடைய அப்பத்தாவுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று மூக்கு பொடி. கடைசி வரைக்கும் அவர் அவராகவே பொடி வாங்கிக்கொள்ளும் தெம்புடன் தான் இருந்தார். சில நேரங்களில் எங்களை வாங்கி வரச் சொல்லுவார். அவர் பட்டணம் பொடி மட்டுமே போடுவார், வேறு எந்த பொடியையும் தொடக்கூட மாட்டார். பட்டணம் பொடி வாங்குவதற்கு ஆனந்தா தியேட்டர் வரைக்கும் போக வேண்டும். அதற்கு 10 நிமிடங்கள் பிடிக்கும். நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு வீட்டிற்கு அருகிலே இருக்கும் பலசரக்கு கடையில் ஏதோ ஒரு பொடியை வாங்கிக்கொடுத்து ஏமாற்றி விட முயற்சித்திருக்கிறேன். ஆனால் டப்பியைத் திறந்தவுடன் அவர் கண்டுபிடித்து விடுவார். எனக்கு எரிச்சலாக வரும், முக்கு கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன, ஐயர் கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன (குமுதம், உங்களுக்கு நியூஸ் கிடைத்து விட்டது. ஐயர் கடையை இழிவாக பேசினாரா முத்து? என்று செய்தி போட்டுக்கொள்ளுங்கள்!), வடை வடை தானே? பொடி பொடி தானே? சிலருக்கு ஆமாம். சிலருக்கு இல்லவே இல்லை. சில விசயங்கள் சிலருக்கு எப்போதும் போலவே ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பிடிக்காது.
சமீபத்தில் வார பத்திரிக்கை ஒன்றில் படித்த சிறுகதை இது. எழுதியவர் யார் என்று வழக்கம் போல் மறந்து விட்டது. நானும் கதை படித்தவுடன் எழுதி வைத்துக்கொள்ளவேண்டும் என்று தான் நினைக்கிறேன். எழுதி வைப்பதற்கும் மறந்து விடுகிறது. மேலும், சில கதைகளைப் படித்து விட்டு, ஆயிரம் கால் இலக்கியம் எழுதவேண்டும், என்ன கதை சொல்லலாம் என்று யோசிக்கிற பொழுது, மனதிற்கு சட்டென கிடைக்கும் கதைதானே நல்ல கதை. அது தானே மனதில் நின்ற கதை!
கதையில் வருவதைப் போல பழைய காலத்து கிராமபோன் ரெக்கார்ட் உபயோகித்து பாடல்கள் ஒலிபரப்பும் டீ கடைகளுக்கு (அல்லது ஹொட்டல். ஆனால் அங்கு டீ மட்டுமே கொடுப்பார்கள்!) நான் போனதில்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் ஐடியா நன்றாக இருக்கிறது. அதுவும் டீ அருந்த வருபவர்களுக்கு, மணக்க மணக்க ஏலக்காய் டீயுடன் அவர்கள் விரும்பிய பாட்டை ஒலிபரப்பினால் நன்றாகத்தானே இருக்கும். யாருக்குத்தான் விருப்பமான பாடலைக் கேட்டுக்கொண்டே தேனீர் அருந்த பிடிக்காது?
(இங்கே கூட கோமலவிலாசில் தானியங்கி பாடல் ஒலிபரப்பி இருக்கிறது. சில சீடிக்களின் பாடல்களின் வரிசைகள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலுக்கு அருகிலும் ஒரு நம்பர் இருக்கும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுத்து அந்த நம்பரை அழுத்த வேண்டும். பிறகு முக்கியமான விசயம் – ஒரு டாலர்- போட வேண்டும். இரண்டு பாடல்களுக்கு ஒரு டாலர். கொஞ்சம் காஸ்ட்லி தான். நான் எப்பொழுதும் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சத்யாவிலிருந்து “வளையோசை” யும், நிழல்களிலிருந்து “பூங்கதவே தாழ் திறவாய்” பாடலும் தான். பாடலை ஒலிக்க செய்து விட்டு, ஒரு மூலையில் காபியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து மக்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பூரிக்களும், மசால் தோசைகளும் ரசிக்கப் படும் அளவுக்கு பூங்கதவே தாழ் திறவாய் ரசிக்கப் படுவதில்லை என்பது தான் உண்மை. மேலும் சாப்பிட்டுக் கொண்டே பாடலை ரசிக்க முடியாது. ஆனால் டீ குடித்து கொண்டு கண்டிப்பாக ரசிக்க முடியும். சில சமயங்களில் சீடிக்களை மாற்றி விடுவார்கள். நாம் விரும்பும் பாடல் கிடைக்காது. ஆனால் எப்பொழுதும் பூரி கிடைக்கும்.)
அவ்வாறான ஒரு கடைக்கு தினமும் சரியாக மதியம் மூன்று மணிக்கு ஒரு நபர் வருவகிறார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழுக்கு பிடித்தவராக, சிக்கு பிடித்த தலையுமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலவே காட்சியளிக்கிறார்.அவருக்கு பிடித்தமான பாடல் புதிய பறவை திரைப்படத்தில் வரும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் தான். இந்தக் கதையை சொல்பவர் பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அந்த கடையில் ஆபரேட் செய்பவர். அதாவது கிராமபோன் ஜாக்கி.
அவர் (டீ அருந்த வருபவர்) ஒரு நாளும் ஜாக்கியுடன் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எப்பொழுதும் சரியாக மூன்று மணிக்கு வந்தவுடன் ஜாக்கியைப் பார்ப்பார். ஜாக்கி தயாராக எடுத்து வைத்திருக்கும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலை ஒலிபரப்புவார். புதிய பறவையின் பழைய கிராம போன் ரெக்கார்ட் சுழல ஆரம்பிக்கும். பாடல் முடியும் வரை மிக ஆழ்ந்த மவுனத்தில் இருப்பார் அவர். அவர் கண்கள் எதையோ வெறித்துக்கொண்டேயிருக்கும். பாடலில் இருக்கும் சோகம் அவர் கண்களில் வழிந்தோடுவதைப்போல இருக்கும். பாடல் முடிகிற வரை டீ குடித்துக்கொண்டிருப்பார். பாடல் முடிந்ததும் எழுந்து சென்று விடுவார். ஒரு முறை கூட மறுமுறை ஒலிபரப்பசொல்லி கேட்டதில்லை. ஒரு நாளும் கடைக்கு வரத் தவறியதுமில்லை. ஒரு நாளும் பாதி பாடலில் எழுந்து சென்றதில்லை. ஜாக்கியைப் பொருத்தவரை அவர் மிகவும் வினோதமானவர்.
ஒரு நாள், அந்த நபர் அதே போல் கடைக்கு வந்து பாடலைக் கேட்டுவிட்டு வெளியேறிசென்றவுடன், ஜாக்கி தவறுதலாக ரெக்கார்டை கீழே போட்டு உடைத்துவிடுகிறார். உடைத்ததும் அவருக்கு அந்த நபரின் ஞாபகம் வந்து விடுகிறது. ஐயோ நாளைக்கு மறுபடியும் வருவாரே, ரெக்கார்டுக்கு என்ன பண்ணுவது என்று யோசிக்கிறார். புதிய பறவையின் பழைய ரெக்கார்டை எங்கே தேடுவது என்று அவர் மனம் அலைகிறது. தவிக்கிறது.
தனக்கு தெரிந்த நபர்களிடமெல்லாம் விசாரிக்கிறார். பழைய கடைகளிலெல்லாம் கேட்டு அலைகிறார். ஸ்டாக் இல்லையென்றோ, சீடி இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள் என்றோ தான் சொல்கிறார்கள் எல்லோரும். இவருக்கு தேவை கிராமபோன் ரெக்கார்ட். ஒரு வழியாக, பழைய கிராமபோன் ரெக்கார்டு இங்கே கிடைக்கும், என்ற அன்றைய பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, ஒரு மணி நேரம் பிரயாணம் மேற்கொண்டு அந்த வீட்டை சிரமப்பட்டு கண்டுபிடித்து விடுகிறார் ஜாக்கி.
அங்கே வீட்டில், முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், ஜாக்கியை உள்ளே அழைத்து ஒரு சிறிய கிராமபோன் கலைக்ஷனைக் காட்டுகிறார். அந்த கலெக்ஷன் அவருடைய தந்தையினுடையது என்றும், வேண்டுமானால் நீங்கள் இலவசமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாக்கியிடம் சொல்கிறார். மேலும் ஜாக்கியின் கிராமபோன் டீ கடையைப் பற்றி அவருக்கு தெரியும் என்றும், தந்தையும் அவரும் ஒரு முறை வந்திருப்பதாகவும் கூறுகிறார். மகிழ்ச்சியடைந்த ஜாக்கி அந்த கலெக்ஷனில் புதியபறவையைத் தேடுகிறார். இருக்கிறது.
மிகுந்த சந்தோஷத்துடன் அந்த நபரின் வருகைக்காக அன்றைய தினம் காத்துக்கொண்டிருக்கிறார். சரியாக மூன்று மணிக்கு அந்த நபர் எப்போதும் போலவே சிக்கு மிடித்த தலையுடனும், அழுக்கு பிடித்த உடையுடனும் வந்தமர்கிறார். டீ சொல்லிவிட்டு ஜாக்கியைப் பார்க்கிறார். ஜாக்கி பாடலை ஒலிபரப்புகிறார்.
பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த நபர் திடீரென்று பாதி பாடலிலே எழுந்து வெளியே செல்கிறார். இது நாள் வரையில் பாடல் முடிகிற வரையில் எழுந்து செல்லாதவர், இப்பொழுது ஏன் போகிறார் என்று புரியாத ஜாக்கி ஓடிச்சென்று அவரிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.
அவர் ஜாக்கியை சற்று நேரம் பார்த்து விட்டு, பழைய ரெக்கார்ட் என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஜாக்கி பழைய ரெக்கார்ட் உடைந்து விட்டது என்றும், அதற்கு பதில் தான் பல இடங்களில் அழைந்து திரிந்து இந்த ரெக்கார்டை வாங்கி வந்ததாகவும் சொல்கிறார். ஏதும் பேசாமல் நின்ற அந்த நபர், பழைய ரெக்கார்ட் “அந்த நிலவைக்கேள் அது சொல்லும்” என்ற வரி வரும் இடத்தில் ஒரு முறை திக்கும், ஒரு மைக்ரோ செக்கண்ட் நிற்கும், இப்பொழுது இந்த புதிய ரெக்கார்டில் அது இல்லை என்று சொல்லிவிட்டு, சென்று விடுகிறார்.
அதற்கப்புறம் அந்த நபர் அந்த கடைக்கு வரவேயில்லை.
அந்த நபருக்கும் அந்த ரெக்கார்டிலிருக்கும் – பிறருக்கு தெரியாத, ஏன் அந்த ஜாக்கிக்கே தெரியாத- கீரலுக்கும் அப்படி என்ன உறவு? சில விசயங்களுக்கு, வாழ்க்கையில் மாற்று (replacement) என்பதே இல்லை, இல்லையா?
(தொடரும்)