தலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி

நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரராக இருந்தால் Our Planetஐ கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். அதில் ப்ளூ ஆல்கான் என்கிற பட்டாம்பூச்சியைப் பற்றிய ஒரு எபிசோட் வருகிறது. இதை எப்படி படம் பிடித்தார்கள் என்பதும் இணையத்தில் இருக்கிறது. அது நான் இங்கே சொல்லப்போகும் கதையைவிட சுவராஸ்யமானது. இணையத்தில் தேடிப்பாருங்கள்.

சரி பட்டாம்பூச்சிக்கு வருவோம். 

இந்த பட்டாம்பூச்சி வசீகரமானது. அழகானது. அளவில் பெரியதும் கூட. ஆனால் பயங்கர தந்திரமானது. நயவஞ்சகமானது. 

முட்டை போட்டுவிட்டால் மட்டும் போதுமா. மூட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவை (கம்பளிபூச்சியை) யார் பார்த்துக்கொள்வது? நேரத்திற்கு யார் உணவளித்து, சொந்தப்பிள்ளை போலப் பார்த்துக்கொள்வார்கள். பறவைகள் தங்கள் லார்வாவை கொத்தித் திண்ணாமல் எப்படி மறைத்துவைப்பது? ம்ம்.. இது என்னடா பட்டர்ஃப்ளைக்கு வந்த சோதனை, என்று நினைத்தது அந்த ப்ளூ பட்டர்ஃப்ளை. 

அந்த நீல வண்ண பட்டாம்பூச்சி, தான் தலையிலிருந்தல்லாவா வந்தோம், காலிலிருந்து வந்தவர்கள் தனக்கு சேவை செய்யவேண்டுமே என்கிற நம்பவே முடியாத அரிய வகை வேதத்தை எப்படியோ துப்புதுலக்கி தெரிந்துகொண்டுவிட்டது. பிறகு ஒரு திட்டம் தீட்டியது. கம்பளிப்பூச்சிக்கு வேலாவேலைக்கு உணவளித்து ராஜாவை விட (கவனிக்க, ராஜா போல அல்ல, ராஜாவைவிட) மேலாக கவனிக்க வைக்க வேண்டும். உணவு வேண்டும், பிச்சையாக அல்ல, அதிகாரமாக. பறவைகளிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும். உணவு. மரியாதை. பாதுகாப்பு. அப்பொழுது அந்த வழியாக தினமும் உழைக்கச் செல்லும் உழைக்கும் வர்க்கமான சிகப்பு எறும்புகள் அதன் கண்களில் பட்டது. கவனிக்க: சாதாரண எறும்பில்லை, சிகப்பு எறும்பு. 

எறும்புகள் உழைப்பதிலே கவனமாக இருப்பதால் அதற்கு அரசியலைத் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. அழகா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உண்மையை முழுசாக ஏற்றுக்கொண்டவர்கள் அந்த உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்தவர்கள். எதையாவது சும்மா சொன்னால் போதும், ஆதாரம் என்ன, இவன் எதற்கு இதைச் சொல்கிறான், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன, இவனுக்கு இதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று சிந்திக்காது. சட்டென்று நம்பிவிடும். ஏனெனில் பயம் ஜாஸ்தி. நாளைக்கு உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயத்திலே வாழ்வதால் ஆழ்ந்து சிந்திக்கும் திரனை முழுவதுமாக இழந்துவிட்ட அந்த உழைக்கும் வர்க்கத்தை எளிதாக ஏமாற்றிவிடலாம். திட்டம் ரெடி. 

அப்படி முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவான கம்பளிப்பூச்சி செடிகளின் இலைகளைத் தின்று கொழுத்தவுடன், இலைகளிலிருந்து பட்டு நூலின் வழியாக தேவதூதனைப் போல கீழே இறங்கும். சிகப்பு எறும்புகள் சாரை சாரையாக உழைக்கச்செல்லும் வழியில் தந்திரமாகப் படுத்துக்கொள்ளும். பிறகு தன் உடம்பிலிருந்து ஒரு வகையான இரசாயனத்தை வெளிப்படுத்தும். அந்த ரசாயனத்தின் மணம் சிகப்பு எறும்புகளின் குட்டிகளிடமிருந்து (லார்வா) வரும் மணத்தைப் போன்றே இருக்கும். எறும்பும் ஏமாந்து இதுவும் தன் குட்டிதான் என்று நினைத்து பட்டுப்பூச்சியின் லார்வாவைத் தனது எறும்பு புற்றுக்குள் பத்திரமாகத் தூக்கிச் சென்று விடும். 

இப்பொழுது பட்டுப்பூச்சியின் லார்வாவும், எறும்புகளின் லார்வாவும் ஒன்றாக எறும்புகளின் ப்ரூட் சாம்பர் என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கும். ப்ரூட் சாம்பர் என்பது எறும்புகள் தங்கள் லார்வாக்களுக்கு உணவளித்து வளர்த்து ஆளாக்கும் இடம். எறும்புகள் தங்களது லார்வாக்களுக்கும், பட்டுப்பூச்சியின் லார்வாக்களுக்கும் ஒரே மாதிரியாக உணவளித்து சூப்பரா பராமரிக்கும். ஆனால் இது பட்டுப்பூச்சிக்குப் போதவில்லை. போதாதல்லவா? நாம தலையிலிருந்தல்லவா வந்தோம்? நமக்கு சாமியைபோலல்லவா சிறப்பு அங்கீகாரமும் முதல் மரியாதையும் கிடைக்கவேண்டும்.!!எறும்புகளின் “ராணி எறும்பு” போல கம்பளிப்பூச்சி இப்பொழுது ஒலி எழுப்ப அரம்பிக்கும். அவ்வளவுதான் எறும்புகள் இன்னும் விழுந்தடித்துக்கொண்டு உணவளித்துப் பராமரிக்கும். எந்தளவிற்கென்றால் – தன் குட்டிகளுக்கு உணவில்லையென்றால் கூட எறும்புகள் பட்டுப்பூச்சியின் குட்டிகளுக்குத்தான் முதலில் உணவளிக்கும். இப்படி எறும்புகளின் ராஜ்ஜியத்திற்குள் புகுந்து கொண்டு எறும்புகளுக்கு பயம் ஏற்படுத்தி, நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக தின்று கொழுக்கும் அந்த நயவஞ்சக கம்பளிப்பூச்சி. 

இப்படி உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கித் தின்று கொழுத்த கம்பளிப்பூச்சி ஒரு நாள் அழகான பெரிய நீல நிற பட்டாம்பூச்சியாக உருமாறி எறும்புகளின் ராஜ்ஜியத்தை விட்டுப் பறந்து செல்லும். பிடிங்கித்தின்றால் ருசியாகத்தானே இருக்கும். பிடிங்கித் திண்பவன் கொழுத்துத்தானே கிடப்பான். பட்டாம்பூச்சி பறந்து சென்று விட, அது பறந்து செல்வதற்கு நாம் தான் காரணம் என்பதை அறியாத அடிமுட்டாள் எறும்புக்கூட்டம் வழக்கம் போல அடுத்த பட்டாம்பூச்சிக்கு உணவளிக்க உழைக்க ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த ப்ளூ ஆல்கன் பட்டாம்பூச்சி முற்றிலுமாக இந்த எறும்புகளை நம்பியே இருக்கிறது. எறும்புகள் இல்லையென்றால் அதன் இனமே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இது அந்த எறும்புகளுக்கு ஒரு போவதும் தெரியப்போவது இல்லை. தெரிந்து கொள்ளவும் அவை விரும்பாததுதான் விந்தையிலும் விந்தை. 


பிகு: இந்த எபிசோட் யூடியூபில் கூட இருக்கிறது. https://www.youtube.com/watch?v=XmtXC_n6X6Q

பிபிகு: Our Planet முழுக்கவே சுவராஸ்யமாக இருக்கும். டேவிட் அட்டன்பரோ லயித்து நரெட் செய்யும் குரலுக்காகவே பார்க்கலாம். யானைகள் நீருக்காக தேடி அலைவதும், ஆழ்கடலின் உயிரினங்களும் ஆச்சரியமூட்டும் எபிசோட்கள்.

பிபிபிகு: சமூகநீதிக் காவலர் கட்டுமரத்தின் 96வது பிறந்தநாள் ஜூன் 3 அன்று வருகிறது.

பிபிபிபிகு: அவரை கட்டுமரம் என்றழைப்பதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. அவருக்கு இதனால் எந்த இகழ்ச்சியும் இல்லை. என்றென்றும் அவர் எங்கள் கட்டுமரம்.

ட்விட்டர் உலா: மகேஷ் மூர்த்தி, த்ரிஷா, பா.ரஞ்சித், நீல் டைசன்..

முதலீட்டாளர் மகேஷ் மூர்த்தி, ஃபேஸ்புக்கின் மாதாந்திர மக்கள் வரத்து (!) குறைந்திருக்கிறது என்று சொல்கிறார். #சோனமுத்தாபோச்சா?


பிரபல விஞ்ஞானி (கார்ல் சாகனின் காஸ்மோஸ் சீரிஸின் ரீமேக்கின் ப்ரசண்டர்) நீயூட்டனின் மூன்றாம் விதியை கவித்துமாக்கியிருக்கிறார். #ரொமாண்டிக்


ட்ரம்ப் தொடர்ந்து மொக்கவாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய கட்டிடத்தில் தீ பிடித்த செய்தியைப் பகிர்கையில், தீயணைப்பு வீரர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையாம். #மனமில்லியோ?


சிரியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் போரைப் பற்றிய ட்வீட்டை பா.ரஞ்சித் ரீ ட்வீட்டியிருக்கிறார்.#முடிவே இல்லியா?


ஸ்டார்டப்களுக்கும் மாணவர்களுக்கும் குருவாக இருக்கும் தொரை தோட்லா ஃப்ரான்சின் ஆர்ட்டிஃபீசியல் இண்டெலிஜென்சில் கடுமையாக முதலீடு செய்து வருவதை ட்வீட்டிருக்கிறார். #நீங்களும்செய்யவேண்டும்


வெளிச்சத்தைப் பார்த்து நில்லுங்கள், நிழல் உங்கள் பின்னால் விழும் என்று கருத்திட்டிருக்கிறார் த்ரிஷா #செம


யூட்டியூப் வீடியோ பதிவாளரின் வைரல் வெறி : யூட்டியூப் துப்பாக்கி சூடு

முந்தைய செய்தி.

ஈரானில் க்ரீன் நசிம் என்று அவர் அறியப்படுவார். இவர் ஒரு சோஸியல் மீடியா ஸ்டார் – நிறைய பேர் இவரை யூட்யூபில், இன்ஸ்டாகிராமில் பின் தொட்ர்கிறார்கள். அமெரிக்காவில் அவருக்கு வேறு முகம். வேகன் டயட்டைப் பரப்புபவராகவும், விலங்குகள் நல ஆர்வளராகவும் அறியப்படுபவர். அவருக்கு மக்களுடன் உரையாட ஒரு ப்ளாட்பார்ம் அமைத்துக்கொடுத்த யூட்டிபின் மேல் இவர் தீராக் கோபம் கொண்டிருந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை மதியம் நசிம் நஜஃபி அஃக்டம், சான் ப்ருனோ, கலிஃபோர்னியாவில் இருக்கும் யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார், மூன்று நபரைச் சுட்டுவிட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.

அஃக்டம் பற்றிய விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யூட்யூபின் தாய் நிறுவனமான கூகுள் இருக்கும் மௌண்டன் வ்யூ, கலிஃபோர்னியாவில், இந்த சம்பவம் நடந்து 11 மணி நேரத்துக்கு முன்பு, காரில் அவர் தூங்கிக்கொண்டிருந்த பொழுது போலீஸ் அவரை விசாரணை செய்திருக்கிறது. அவரது லைசன்ஸை வைத்து அவரது குடும்பம் அவரை சில நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்திருப்பது போலீஸுக்கு தெரிய வந்திருக்கிறது.

அஃக்டம் போலீஸிடம் தனக்கு குடும்பத்துடன் சில பிரச்சனைகள் இருக்கிறது என்றும், கலிஃபோர்னியாவுக்கு வேலை தேடி வந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். போலீஸுக்கு இவர் அபத்தானவர் இல்லை என்று நினைத்து விட்டுவிட்டது.

முப்பத்தைந்து வயதைக் கடந்துவிட்ட இவர், இவரது பல வீடியோக்களில் ஈரானில் இருக்கும் உர்மியா நகரத்தில் பிறந்ததாக சொல்லியிருக்கிறார். அங்கு மக்கள் டர்கிஷ் மொழி பேசுவது போல இவரும் சில வீடியோக்களில் டர்கிஷ் பேசியிருக்கிறார். இவர் டர்கிஷ், ஆங்கிலம் மற்றும் பெர்சியன் மொழிகளில் யூட்யூப் பக்கங்கள் வைத்திருக்கிறார். இவரது குடும்பம் பஹாய் என்கிற நம்பிக்கையைப் பின்பற்றுகிறது என்றும், முஸ்லிம் நாடான ஈரானில் இது கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அவருடைய பல வீடியோக்கள் – கலர்ஃபுல்லானவை – ஈரானில் வைரல் ஆகியிருக்கின்றன.

அவரை விட்டுவிட்ட பிறகு போலீஸ் அஃக்டமின் வீட்டுக்கு ஃபோன் செய்து அவர் நலமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அப்பொழுது யூட்யூபின் மேல் அவருக்கு இருக்கும் கோபத்தைப் பற்றி யாரும் சொல்லவில்லை. ஆனால் இரண்டாவது ஃபோன் காலில் யூட்யூப் அஃக்டம் கோபப்படும்படி ஏதோ செய்திருக்கிறது என்றும் அதனால் கூட அஃக்டம் கலிஃபோர்னியாவுக்கு வந்திருக்கக் கூடும் என்று சொன்னதாகவும் ஆனால் அவர் அதைப் பெரிய விசயமாக சொல்லவில்லை என்றும் போலீஸ் சொல்கிறது.

செவ்வாய்கிழமை காலை அவர் அருகிலிருக்கும் துப்பாக்கி சுடப் பழகும் இடத்துக்கு சென்றுவிட்டு, மதியம் யூட்யூபின் அலுவலகத்துக்குப் பக்கத்தில் காரைப் பார்க் செய்துவிட்டு, யூட்யூம் அலுவலர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்துக்குள் நுழைந்திருக்கிறார்.

போலீஸ் தகவல் வந்து இரண்டு நிமிடத்தில் யூட்யூப் அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. அவர்கள் வந்த பொழுது அஃக்டம் இறந்துவிட்டிருந்தார். அவர் பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்த 9 மிமி செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி அருகில் கிடந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை இரவுக்குள் யூட்யூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் அவரது பக்கங்களையும் வீடியொக்களையும் பொதுமக்கள் பார்வையிலிருந்து அகற்றிவிட்டது.

அவரது பெர்சனல் வலைதளத்திலும் அவர் போஸ்ட் செய்த வீடியோக்களிலும் யூட்யூப் பற்றிய புகார்கள் கொட்டிக் கிடந்திருக்கின்றன.

டெலிக்ராம் என்கிற ஈரானில் மிகவும் பிரபலமான சோசியல் மீடியாத் தளத்தில் அவர் கடைசியாக பதிவிட்டது பூக்களுக்கு மத்தியில் அவர் நிற்கும் அவருடைய சிறிய வயது ஃபோட்டோ. தலைப்பு ஏதும் இல்லை

காவிரி – பிரச்சனையின் நதிமூலம்

காவிரிப் பிரச்சனை 1892ஆம் ஆண்டு சென்னை பிரசிடென்ஸிக்கும் மைசூர் மாகானத்துக்கும் இடையே ஆற்றின் தண்ணீரைப் பிரித்துக்கொள்வதில் ஆரம்பித்தது. அந்த நாளிலிருந்து இன்று வரை அப்பம் யாருக்குச் சொந்தம் என்கிற விடை கிடைத்தபாடில்லை.

Plate-51552568429

1910 ஆம் ஆண்டு இரண்டு மாநிலங்களும் ஆற்றில் அணைக்கட்ட முற்பட்டன. இந்த பிரச்சனையை பிரிட்டிஷ் அரசாங்கம் கையிலெடுத்து யாருக்கு எவ்வளவு பங்கு என்று பிரித்துக்கொடுத்தது. 1924இல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த ஒப்பந்தத்தில் இப்பொழுது இருக்கும் பாசன வசிதிகளை புதிதாக கட்டப்படும் எந்த அனைக்கட்டும் சேதப்படுத்தக்க்கூடாது என்றும், அப்படி புதிதாகக் கட்டப்படும் எந்த அனையும் தமிழ்நாட்டின் ஒப்புதலோடுதான் கட்டப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சரியாகச் சொன்னால், மைசூர் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லவே முடியாது.

ஆனால் கர்நாடகா மேற்குறிப்பிட்ட எதையுமே செய்யவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அரசின் அனுமதி பெறாமல் புதிதாக நான்கு (ஹரங்கி, கபினி, ஹேமாவதி, சுவர்னாவதி) கட்டுமானப் பணிகளைத் துவக்கியது.

1910இல் மைசூரு அரசாங்கம் கண்ணம்பாடியில் ஒரு நீர்த்தேக்கம் கட்டுவதற்கு மெட்ராஸ் அரசாங்கத்திடம் அனுமதி கோரியது. மெட்ராஸ் அரசாங்கம் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் சொன்ன தீர்ப்பை மெட்ராஸ் ஏற்றுக்கொள்ளவில்லை, மேல் முறையீடு செய்தது. இந்திய அரசாங்கம் இந்த விசயத்தில் தலையீடு செய்யவில்லை, காரியங்கள் நடந்தேரின, 1924 ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீங்கள் இந்திய வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும்:

765 கிமீ நீளம் உள்ள காவிரி ஆறு இரண்டு மாநிலங்களை கடந்து ஓடுகிறது: கர்நாடகா, தமிழ்நாடு.

கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் இருக்கும் தலைக்காவிரியில் தொடங்குகிறது. கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலுமே பெரும்பாலும் ஓடினாலும் இதன் ஆற்றுப்படுகை கேரளாவிலும் புதுச்சேரியிலும் இருக்கிறது.

Irrigation map.jpg

1892 மற்றும் 1924இல் போடப்பட்ட ஒப்பந்தம்: மொத்த தண்ணீரில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும், 23 சதவிகிதம் கர்நாடகாவிற்கும், எஞ்சியிருக்கும் தண்ணீரை கேரளாவிற்குக் கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலங்களைப் பிரிக்கும் பொழுது தான் பிரச்சனை ஆரம்பித்தது. அதற்கு முன்பு பிரச்சனைகள் பேசியே தீர்த்துக்கொள்ளப்பட்டன. பிறகு தமிழ்நாடு ஆற்றின் குறுக்கே அனைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதே சமயத்தில் கர்நாடகா கொடுக்கும் தண்ணீரை நிறுத்திவிடத் துடித்தது. 1924இல் போடப்பட்ட ஐம்பது வருடத்துக்கான ஒபந்தம் 1974இல் காலாவதியாகிவிட்டது, காவிரி கர்நாடகாவில் தொடங்குவதால் எங்களுக்கே காவிரியில் உரிமை அதிகம் என்று வாதிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மைசூர் மகாராஜாவுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது செல்லாது செல்லாது என்று விஜயகுமாராய் திமிர் காட்டியது.

1974க்கு அப்புறம் கர்நாடகா காவிரியை மேற்குறிப்பிட்ட நான்கு நீர்த்தேக்கங்களுக்கு திருப்பிவிட்டது. இதற்கு தமிழ்நாட்டின் ஒப்பந்தத்தைப் பெறவில்லை.

விவசாய நிலங்கள் பெருகிவிட்ட காரணத்தால் தமிழ்நாடும் காவிரியைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. தண்ணீர் பிரிப்பதில் சிக்கல் ஆனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கபடும் என்று வாதிட்டது தமிழ்நாடு. 1972இல் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்கள் – தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி – எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகின்றனர் என்கிற கணக்கு எடுப்பதற்கு ஒரு கமிட்டியை நியபித்தது. அந்தக் கமிட்டி தமிழ்நாடு 566 tmcf பயப்படுத்துகிறது என்றும் கர்நாடகா 177 tmcf பயன்படுத்துகிறது என்றும் கண்டறிந்தது. முன்பு பயன்படுத்தியதைப் போலவே இப்பொழுதும் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்று அந்தக் கமிட்டி பரிந்துரைத்தது .

Cauvry basin

சர்வதேச முறைப்படிதான் – அதாவது இருவருக்கும் சரி சமமாக – தண்ணீரைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா வாதிட்டது. 94 சதவிகிதத்தை கர்நாடகாவும் தமிழ்நாடும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் மீதமிருப்பதை புதுச்சேரிக்கும் கேரளாவிற்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படியே இப்பொழுதும் தொடரவேண்டும் என்று தமிழ்நாடு சொன்னது.

1986இல் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு விவசாயிகள் குழுமம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு ட்ரிபியூனல் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொன்னது. 1990இல் இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் இருவரும் பேசித்தீர்த்துக்கொள்ள கால அவகாசம் கொடுத்தது. ஆனால் இருவரும் ஒத்துவராத காரணத்தால் காவிரி ட்ரிப்யூனல் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.

1980 இல் இருந்து 1990 வரையிலான நீர் உபயோகத்தை ஆராய்ந்து, காவிரி ட்ரிப்யூனல், 1991இல் கர்நாடகா தமிழகத்துக்கு வருடந்தோரும் ஜூன் முதல் மே மாததிற்குள், மேட்டூர் அணைக்கு 205 tmcf அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் கர்நாடகா விவசாய நிலங்களை அதிகப்படுத்தக்கூடாது என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

எதிர்பார்த்தபடியே இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஏற்றுக்கொள்ளாமல் அதை செல்லாது என்று அறிவிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இது தான் தீர்ப்பு மாற்றமுடியாது, டாட் என்று சொல்லிவிட்டது. கர்நாடகா அடிபணியவில்லை. இந்திய அரசாங்க கெசட்டில் இந்த இடைக்காலத் தீர்ப்பு பதிவுசெய்யப்பட்டது.

அடுத்த மூன்று வருடங்களுக்கு இரு மாநிலத்திலும் நல்ல மழை இருந்ததால் பெரிய போராட்டங்கள் இல்லாமல் இரு மாநிலங்களும் அமைதியாக இருந்தன. 1995இல் கர்நாடகாவில் மழை சரிவர இல்லாத காரணத்தால், இடைக்காலத்தடையை அது மதிக்கவில்லை. தமிழ்நாடு, சுப்ரீம் கோர்ட்டை நாடி 30 டி எம் சி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தது. சுப்ரீம் கோர்ட்டும் கர்நாடகாவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிறகு நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் அன்றைய பிரதம மந்திரி பி வி நரசிம்மராவ் தலைமையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ராவ் இரண்டு மாநில முதலமைச்சர்களையும் கலந்து ஒரு வழி சொல்லி இருவரையும் சம்மதிக்கவைத்தார்.

1998இல் காவிரி அதிகார மைய்யம் அமைக்கப்பட்டது. பிரதமந்திரி அந்த குழுவிற்கு தலைமை தாங்கினார். மற்ற மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

பதினாறு வருடங்கள் கழித்து 2007இல் காவிரி ட்ரிபியூனல் (CWDT) இறுதித் தீர்பை வழங்கியது. 1892, 1924 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தம் இன்றும் செல்லும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டிற்கு 410 டி எம் சியும், கர்நாடகாவிற்கு 270 டி எம் சியும், கேரளாவிற்கு 30 டி எம் சியும் புதுச்சேரிக்கு 7 டி எம் சியும் அறிவித்தது. கர்நாடகா இதை எதிர்த்து மாநிலம் தழுவிய பந்த அறிவித்தது.

2013இல் பிப்ரவரி 19 அன்று மத்திய அரசு CWDTஇன் இறுதித் தீர்ப்பை உறுதிசெய்து கெஜட்டில் பதிவு செய்தது , காவிரி மேலான்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவேயில்லை.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்திற்குள் தண்ணீர் வரவில்லையெனில் சம்பா பயிர்கள் வாடிவிடுமே என்ற கவலை விவசாயிகளிடம் தொற்றிக்கொள்ளும். ஏப்ரல் மேயிலே பிரச்சனை ஆரம்பமாகிவிடும். மேமாதத்திலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டுமே? கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாது. தமிழ்நாடு கையேந்தி நிற்கும். சுப்ரீம் கோர்ட் படியேறும். கடைசியில் செப்டம்பருக்கு கொஞ்சம் முன்பு சுப்ரீம் கோர்ட் 15000 குசக்ஸ் (கிட்டத்தட்ட ஒரு டி எம் சி) அளவு மட்டுமாவது திறந்துவிடுங்கள் என்று கேட்கும். அதை மறுத்து கர்நாடகாவில் பந்த் வெடிக்கும். போராட்டம் நடக்கும். தமிழ் கடைகள் உடைக்கப்படும்.

தண்னீர் வந்து சேரும் வரை, விவசாயி வயிற்றில் புளியைக் கரைத்துக் இலவு காத்த கிளியாகக் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

கொஸ்டீன் கோயிந்து : ஆதார் லீக்ஸ்?

2014இல் ஆட்சியைப் பிடித்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் ஆட்சியை முன்னிறுத்தத் தொடங்கினார். சில மாதங்களுக்குள்ளாகவே இந்திய அரசாங்கம், எந்த எந்த அரசாங்க ஊழியர்கள் வேலைக்கு வருவதில்லை என்பதை அறிவதற்கு பயோமெட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. மோடி பத்துவருடங்கள் ஆட்சி புரிந்த குஜராத் மாநிலத்தில் பள்ளிக்கூடம் வராத மாணவர்களுக்கு சிகப்பு கோடிட பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தியது.

ஆதார், இந்தியாவின் மிகப் பெரிய பயோமெட்ரிக் அடையாள திட்டம், முதலில் தன்னார்வத் திட்டமாகத் தான் இருந்தது. அதாவது வேண்டுமென்றால் தானாகவே முன்வந்து ஆதாரை வாங்கிக்கொள்ளலாம் – இதை வைத்து பொது சேவைகளைச் சீர் செய்யவும், லஞ்சத்தைத் தவிர்க்கவும் திட்டம். ஆனால் நாளாக நாளாக ஆதார் பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் – மகப்பேறு மருத்துவமனைகளில் மகப்பேறின் போதும், பால்வாடியில் குழந்தைகளைச் சேர்க்கும் போதும், உங்கள் காலேஜ் டிகிரியை வாங்குவதற்கும், டெலிபோன் சேவை பெறுவதற்கும், வங்கியில் புது கணக்கு தொடங்குவதற்கும், ஏன் இறப்பு சான்றிதல் பெறுவதற்கும் – மிக முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது.

Aadhaar-ID-Program

தனது டிஜிட்டல் இந்தியா என்கிற கனவை ஓயாது பேசிய மோடி, ஹோலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல் வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பொதுவில் தோன்றி பொது மக்களை அதிசயிக்க வைத்த மோடி, டேட்டா (தகவல்) தான் உண்மையான சொத்து, யாரொருவர் அதை அடைகிறார்களோ, யாரொருவர் அதைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களின் கையே வருங்காலத்தில் ஓங்கியிருக்கும் என்று சொன்னார்.

வேண்டிய திறமைக்கும் (அல்லது விருப்பத்திற்கு) எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பதை கடந்த இரண்டு வருடங்களில் நிறைய முறை பொதுமக்களின் பொதுவில் வைக்கக்கூடாத டேட்டாக்கள் (தகவல்கள்) லீக் ஆனதாக சர்சை எழுந்ததைப் பார்த்தால் புரியும்

2015இல் மோடி அவர்கள் அவருடைய லட்சனக்கான ஃபாலோயர்களுக்கு உடனுக்குடன் பிரதமரிடமிருந்து நேரிடையாக செய்தியையும் மெயிலையும் பெற ஆப் (ஆப்பு இல்லை, செயலி) ஒன்றை வெளியிட்டார். நடுவே யாரும் இல்லை. மீடியா இல்லை. அதிகாரிகள் இல்லை. ரெட் டேப் இல்லை. நீயும். நானும். பின்ன ஆப் மட்டும் தான் என்று சத்தியம் செய்யப்பட்டது. இந்த செயலி (ஆண்ட்ராய்ட்) 50 லட்சம் முறை தரவிரக்கம் செய்யப்பட்டது.

ஆனால் நமோ செயலி அந்த செயலியைப் பயன்படுத்துபவர்களைப் பற்றிய தகவல்களை அவர்களின் சம்மதமின்றி ஒரு அமெரிக்க கம்பெனியிடம் கொடுத்தது என்று ஒரு சர்ச்சை எழுந்தது. இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்த விசாரனையில் மோடி செயலியின் ஓட்டைகளை கண்டறிந்தது. அதன் பின் அடுத்த நாளே செயலியின் ப்ரைவசி பாலிஸி மாற்றப்பட்டது.

அதே நேரத்தில், ZDNet என்கிற தொழிநுட்ப நிறுவனம், இந்திய அரசாங்கத்தின் எல் பி ஜி நிறுவனமான இண்டேன் ஒரு வெப் பக்கத்தில், கோடிக்கனக்கான இந்தியர்களின் பெயர்கள், வங்கி கணக்குகள், ஆதார் எண்களைக் காட்டியது என்றும், அதைக் கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக இருந்தால் கண்டுபிடித்து எடுத்து விட முடியும் என்று சொன்னது.

கரன் சைனி என்கிற நியூ டில்லியிலிருக்கும் ஒரு செக்யூரிட்டி ஆய்வாளர், ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான ஆதார் எண்களை ரேண்டமாக மென்பொருளுக்கு அனுப்பினார். அப்படி அனுப்பட்ட ஆதார் எண்கள் உண்மையான எண்களுடன் பொருந்திப் போனால், டடா, உண்மையான ஆதார் எண்ணின் உண்மையான தகவல்களை நீங்கள் பெறமுடியும் என்று நடு இரவில் கண்டறிந்தார்.

ஆதார் ப்ராஜெக்ட்டை நடத்தும் Unique Identification Authority of India, தங்களுடைய டேட்டா பேஸை யாரும் திருடவில்லை என்றும் கண்டுபிடித்த அந்த செக்யூரிட்டி ஆய்வாளரின் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றது.

கிராம வளர்ச்சி அமைச்சகம் கிட்டத்தட்ட பதினாறு மில்லியன் ஆதார் எண்களை அம்பலப்படுத்தியது.ஆந்திரப் பிரதேசத்தில் இருபது மில்லியன் கூலி வேலையாட்களின் ஆதார் எண்கள் ஆம்பலப்படுத்தப்பட்டன.

டேட்டா தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்கிற கேள்விக்கு அதிகாரிகள் எப்பொழுதுமே இல்லை என்று கோபத்துடனே கூறியிருக்கின்றனர், ஆனால் ஒரு பொழுதும் அதை விசாரணை செய்யச் சொன்னதில்லை. இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் செயல்படுத்தும் பொழுது பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சண்டையில கிழியாத சட்டை எங்கிருக்கு? ஆனால் அவ்வாறான பிரச்சனை அல்லது சர்ச்சை கிளம்பும் பொழுது அதை வெளிப்படைத்தன்மையோடு அனுகவேண்டும். லீக் ஆனாதா?

அரசாங்கம் குடிமக்களின் வாழ்க்கையை டிஜிட்டலைஸ் செய்வது வரவேற்கத்தக்க ஒன்று. அனால் அதே நேரத்தில் குடிமக்களின் தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், தவறு ஏற்படும் பொழுது விசாரனை செய்து விசாரனையின் முடிவை வெளிப்படையாக விளக்க வேண்டிய கடமையும் தங்களுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மூன்றாம் பாலினரின் உரிமைகள்

மூன்றாம் பாலினரை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லும் சூழலை – பாடசாலைகள் ஆகட்டும் அல்லது அலுவலகங்கள் ஆகட்டும் – நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஏர் இந்தியாவின் பரிட்சையில் பாஸாகியும் கூட விமானப் பணிப்பெண் வேலைக்கு தன்னை ஏர் இந்தியா நிராகரித்து விட்டதாக தமிழ்நாட்டிலிருந்து திருநங்கை ஷானவி பொன்னுச்சாமி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஒரு மாதம் கழித்து சமூக நீதி அமைச்சகம் காபினட்டுக்கு திருத்தப்பட்ட மசோதாவை அனுப்பியது. அதில் பொதுத்துறையையும் பகுதி ஐந்தில் இணைத்தது. இந்த திருத்தம் வேலை வாய்ப்பு சம்பந்தமான எந்த விஷயத்திலும் – புதிய ஆள் சேர்க்கை, பதவி உயர்வு போன்றவை -பாகுபாடு கூடாது என்று சொல்லியிருக்கிறது.

Shanavi_Ponnusamy

ஷானவி பொன்னுச்சாமிக்கு நேர்ந்தது ஒன்றும் புதிதல்ல. திருநங்கைகளின் ஒவ்வொரு சின்ன வெற்றிக்குப்பின் ஒரு பெரிய நீண்ட வரலாறு இருக்கிறது.

இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு (ப்ரித்திகா யாசினி) நேர்ந்ததும் இதுதான். தமிழ்நாடு போலீஸ் ஆள்சேர்க்கைக் குழுவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த ஆர்டருக்கு அப்புறமே விஷயம் தீவிரமடைந்தது.

562088-yashini-k-prithika-040317

2016இல் நிறவேற்றப்பட்ட மூன்றாம்பாலினரின் உரிமை பாதுகாப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் பிறகே நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் மூன்றாம் பாலினருக்கான அலுவலகங்களுக்கான விதிகளையும், பல நல திட்டங்களையும் அறிமுகபடுத்தியது. மேலும் மூன்றாம் பாலின ஊழியர்களை மற்ற உழியர்கள் / முதலாளிகள் கேலி பேசியும் பிற வழிகளில் துன்புறுத்துவதையும் தடுத்து, அவ்வாறு செய்தால் குறைந்தபட்சம் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அறிவுறுத்தியிருக்கிறது.

manabi

மனாபி பண்டோபதியே என்கிற திருநங்கை இந்தியாவின் முதல் கல்லூரி தலைமை ஆசிரியராக 2015இல் நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவர் அந்தப் பதவியிலிருந்து 2016ஆம் ஆண்டு தாங்கமுடியாத மன உளைச்சல் என்று காரணம் காட்டி ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு அவ்வாறான மன உளைச்சல் கொடுத்தது யார்? உடன் வேலை செய்யும் ஆசிரியர்களும் மாணவர்களும் தான். என்றாலும் அவருடைய ராஜினாமா ஏற்கப்படவில்லை. அவர் தலைமை ஆசிரியராகத் தொடர்கிறார்.

மூன்றாம் பாலினரை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லும் சூழலை – பாடசாலைகள் ஆகட்டும் அல்லது அலுவலகங்கள் ஆகட்டும் – நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இது அவர்களது உரிமைகளையும் மரியாதையையும் சட்டம் கொண்டு பாதுகாப்பதன் மூலமே நடைபெறும். சட்டம் இயற்றுவது முதல் படி என்றாலும் அதை செயல்முறைப்படுத்தவேண்டும். இந்த மசோதா தேசிய கவுன்சில் அமைத்து மூன்றாம் பாலினருக்காக உருவாக்கப்படும் கொள்கைகளை கண்கானிக்கவும் மதிப்பீடு செய்யவும் தேசிய கவுன்சில் ஒன்று அமைக்கவேண்டும் என்று வலியிறுத்தியது. ராஜ்ய சபாவில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்கிற அவர்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் நடைபெறலாம்.

ஒழிவு தெவசத்தே களி

சினிமா விமர்சனம்

Off-day-1140x687

சாதியை சொல்லாதே/சாதியை கேட்காதே/ஆனால் ஏதும் செய்யாதே/சாதியை மறப்பதற்கு என்று ஐயப்ப பனிக்கர் எழுதினார். ஆர் உன்னி எழுதிய ஒழிவு தெவசத்தே களி என்கிற சிறுகதையை வைத்து சனல் குமார் சசிதரன் டைரக்ட் செய்த படம் இது. ஒழிவு தெவசத்தே களி என்றால் ஓய்வு நாளில் விளையாட்டு என்று பொருள். கேரளாவில் சாதி மக்களின் வாழ்க்கையில், அதிகார அடுக்கில், அரசியல் மட்டத்தில் எப்படி ஊடுறுவியிருக்கிறது என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம்.

ஆயிர வருட பழமையை எதிர்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.அதை மாற்ற முயற்சிக்கும் பொழுது பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும். அது தான் எனக்கு நடந்தது. ஆனால் இந்த போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களிடம் உரையாட விவாதம் செய்ய இது தான் சந்தர்ப்பம். இல்லாவிட்டல் இந்த சமூகம் இருக்கிற இடத்திலே தேங்கிவிடும்.

என்று செக்ஸி துர்கா படத்தினால் தான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் சனல் குமார் சசிதரன்.

Director_Sanal_Kumar_Sasidharan

சனல் குமார் சசிதரன் ஒரு வழக்கறிஞர். மாணவ காலத்தில் அவர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியின் மாணவ கிளை. பிறகு கருத்து வேறுபாட்டால் பாஜாகாவிலிருந்து வெளியேறி பாஜாகாவை தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார். க்ரௌட் ஃபண்ட் மூலம் மலையாளத்தின் முதல் க்ரௌட் ஃபண்டட் சினிமாவை இயக்கினார்.

*

கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்றைய கடைசி சில மணி நேரங்களில் ஒழிவு தெவசத்தே களி படம் தொடங்குகிறது. அந்தப் பெருங்கூச்சலிலிருந்து விலகி ஐந்து நண்பர்கள் ஓடைப் பக்கம் ஒதுங்குகின்றனர். ஓடையின் ஓரம் அமர்ந்து அவர்கள் பல கதைகள் பேசுகின்றனர். நடக்கவிருக்கும் தேர்தல் பற்றியும் அரசியல் பற்றியும் வேறு சில ஜோக்குகள் அடித்துக்கொண்டும் பொழுதைப் போக்குகிறார்கள். நாளை தேர்தல் தினம். மேலும் குடிப்பதற்கு சரக்கு எங்கும் கிடைக்கவும் செய்யாது. நாளைய ஓய்வு தினத்தை எப்படிக் கொண்டாடுவது கழிப்பது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

அவர்கள் காட்டுக்குள் இருக்கும் தனிமையான பழைய பெரிய வீட்டில் எப்படி ஓய்வு தினத்தைக் கழித்தார்கள் என்பது மீதிப் படம். அவர்களுடைய ஆழ்மனதையும் உள்ளுணர்வுகளையும் அது வெளிக் கொண்டுவரும் கொடூர குணங்களையும் இப்படம் காட்டுகிறது. அந்த வீட்டில் அவர்களுக்கு குடி ஒன்றே பிரதானம். சமைப்பதற்கு ஒரு பெண் இருக்கிறார். குடியினூடே அவர்களது விவாதம் எமர்ஜென்சி பற்றியும் துபாய் குடிபெயற்சி பற்றியும் அரசியல், ஜனநாயகம் என்று முடிவில் சாதியை முன்னிலைப்படுத்தி நடக்கவிருக்கும் ஒரு சோக நிகழ்ச்சிக்கு அச்சாரமாக அமைகிறது. ஒரு சின்ன சச்சரவு சண்டையாக முடியும் பொழுது அவர்களுள் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனே பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஐந்து நண்பர்களுள் தர்மன் பணக்காரன் திமிர்ப்பிடித்தவன். நண்பரளுக்குள்ளே மதிப்பையும் மரியாதையையும் பணத்தாலும் பேச்சுத்திரணாலும் பெருகிறான். ஆனல் திருமேனி ஒரு ஐயர். அவனுக்கு இயல்காகவே மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. வினயன் ஜனநாயக நெறிமுறைகளைப் பேசுகிறான், தர்மனின் திமிரை எதிர்த்து சண்டையிடுகிறான். தாசனிடம் பாட்டாளி வர்க்க மனப்பாண்மை இருக்கிறது. அசோகன் பாசாங்குக்காரன்.

மரமேறி பலாப்பலம் பறிப்பதாகட்டும் கறிக்குழம்பிற்காக கோழியை பிடித்து அடிப்பதாகட்டும் இப்படி எந்த எடுபிடி வேலையாகட்டும் அவர்களுள் கருப்பு நிறத்தவனான தாசன் (வேலைக்காரன் என்று பொருள்) என்பவனே முடிவில் செய்ய வேண்டியிருக்கிறது. ஏன் அவர்களுடைய சண்டைகளைக்கும் அவனே சமாதானம் போகவேண்டியிருக்கிறது. எதிர்ப்பார்த்தபடி அவன் ஒருவனே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான்.

பேச்சினூடே தாசனின் கருப்பு நிறம் கேலிக்குட்படுத்தப்படுகிறது. அவனது நணபர்களே அவனை கருப்பு என்று கேலி செய்து அதை விளையாட்டு என்கின்றனர். அவர்கள் கேலி செய்வது அவனது நிறத்தை அல்ல – அவனது சாதியை. பொறுமையிழந்த தாசன் எழுந்து “நான் பிறக்கும் பொழுது கருப்பு. வளரும் பொழுது நான் கருப்பு. சூரிய வெளிச்சத்தில் நான் விளையாடும் பொழுது நான் கருப்பு. நோய்வாய்ப்படும் பொழுது நான் கருப்பு. சாகும் பொழுது நான் கருப்பு. நீ.. நீ பிறக்கும் பொழுது..” என்கிற பாடலை அவன் பாடுகிறான். அனைவரும் எழுந்து வெளியேறி விடுகின்றனர். பால்கனியில் சென்று நின்றுகொள்கின்றனர். அதாவது அவர்கள் எவ்வளவு பகடி செய்தாலும், தாசன் பொறுமையாக இருக்கவேண்டும். விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அவன் சிறு எதிர்ப்பு காட்டிவிட்டாலும் மற்றவர்களுக்கு அது பிடிப்பதில்லை.

ozhivudivasathe-kali-380

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மற்றொருவர் அவர்களுக்கு சமைத்துக்கொடுக்கும் பெண் கீதா – படத்திலிருக்கும் ஒரே பெண். வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் – தாசனைத் தவிர – அவள் மீது ஒரு கண் இருக்கிறது. அனைவரும் அவளை அவர்களுடைய வழிகளில் அடைய முயற்சிசெய்கின்றனர். சின்னச் சின்ன சமிஞ்சைகளின் மூலம், மறைமுகமான பேச்சின் மூலம், ஆனால் கட்டாயப்படுத்தாமல் அவளை அவர்களின் ஆசைக்கு இழுக்கப்பார்க்கிறார்கள். அவர்களுள் பெரியவன் போல இருக்கும் ஒருவன், தருமன், அவளைக் கைபிடித்து இழுக்க, அவள் ஓங்கி ஒரு அறை விடுகிறாள். தரையில் அரிவாளால் ஓங்கி வெட்டி ஆண்வர்க்கதினரின் மேலிருக்கும் பெண்களின் கோபத்தைக் காட்டுகிறாள்.

“என்ன அரசியல், அது ஆண்களின் விளையாட்டு” என்று அவள் சொல்லும் பொழுது இந்த நாட்டில் பெண்களின்  உலகமும் பெண்களுடைய மொத்த பிரச்சனைகளும் ஒட்டு மொத்தமாக ஆளும் ஆண் வர்க்கத்தால் நிராகரிக்கப்படுகிறதென்பதை தெளிவாகச் சொல்லுகிறாள். உதாரணம்: தெருத் தெருவுக்கு கோயில் இருக்கும் இந்நாட்டில் பெண்கள் அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க இடம் வேண்டும் என்பதை ஆளும் ஆண் அதிகாரவர்க்கம் எப்படி புரிந்துகொள்ளும்? இந்நாட்டில் ஆளும் மந்திரிகூட அவசரத்துக்கு காரைவிட்டிறங்கி நின்றவாறு சிறுநீர் கழித்து எளிதாக சென்றுவிடுவார் – அவர் எப்படி பெண்களுடைய பிரச்சனையைப் புரிந்துகொள்ள இயலும்?

இத்தனைக்கும் சமையற்காரி போல தாசன் வெளியாள் இல்லை. மாறாக அவன் அந்த நெடுநாளைய நட்பு வட்டத்தில் ஒரு ஆள். அந்த நட்புவட்டம் அவனை உள்ளுக்குள் ஏற்றுக்கொண்டது போலத் தெரிந்தாலும், அவனை வெளியிலேயும் அவர்களுக்கு கீழேயுமே வைத்திருக்கிறது.

நேரம் ஆக ஆக வெறுமனே நண்பர்களுக்குள்ளேயான தண்ணிப் பார்ட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விளையாட்டாக உருமாறுகிறது . அதிகாரமும் வன்மமும் வெறியும் கொண்ட விளையாட்டு. அவர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது அவர்கள் விளையாடிய விளையாட்டு. சீட்டுப் போட்டு அவர்களுள் யார் அரசனாவது, யார் மந்திரியாவது, யார் போலீஸாவது, யார் திருடனாவது, யார் நீதிபதியாவது என்று அவர்களுக்குள்ளே முடிவு செய்துகொள்கிறார்கள். சீட்டுப் போடுகிறார்களே தவிர அந்த அந்தச் சாதியினார் அந்த விளையாட்டில் தங்களுக்கென்ன பங்கு என்று அவர்களாவே முடிவு செய்கின்றனர். வெள்ளையாக இருப்பவன் அவனாகவே நீதிபதியாகிக் கொள்கிறான். கடைசியில் கருப்பாக இருப்பவனுக்கே திருடன் ரோல் கிடைக்கிறது. அவன் மறுத்துப் பார்க்கிறான் – ஆனால் விளையாட்டு தானே என்று அவனைச் சமாதானப்படுத்துகின்றனர். இந்த விளையாட்டும் விளையாடும் நபர்களும் நமது ஜனநாயகத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் வர்னாசிரம அடுக்குகளையே பிரதிபலிக்கின்றனர்.

friends

விளையாட்டில் நீதிபதி தவறு செய்யும் பொழுது அவர்களுக்குள் பேசி நீதிபதிக்கு எந்த தண்டனையும் கிடைக்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். நீதிபதியை எப்படி தண்டிப்பது? நீதிபதியாக உட்கார்ந்திருக்கும் சாதியைச் சேர்ந்தவரை எப்படி தண்டிப்பது? அவரைத் தண்டிப்பது மகாப்பாவம் ஆகாதோ? அதே போல ராஜா தவறு செய்து பிடிபடும் பொழுது ராஜாவுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யலாகாது என்று அனைவரும் எடுத்துச் சொல்கின்றனர். மந்திரி தவறு செய்து பிடிபடும் பொழுது மாறாக அவனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் அந்த தண்டனையிலிருந்து வெளிவர சொற்ப அபராதம் மட்டுமே வழங்கப்படுகிறது. போலீஸ் தவறு செய்து பிடிபடும்பொழுது அவனுக்கு மிகச்சிறிய தண்டனையும் பிறகு அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதையும் மந்திரியும் நீதிபதியுமே சொல்கின்றனர். ராஜா கண்டுகொள்வதில்லை. ஆனால் திருடன் – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் – தவறு செய்து பிடிபடும்பொழுது அவனைக் காப்பாற்ற யாரும் இல்லை. அவனுக்கு இருப்பதிலே கொடுமையான தண்டனை கொடுக்கப்படுகிறது. அதிலிருந்த அவன் மீள வாய்ப்பேயில்லை. அவனை அதிலிருந்து வெளியேற்றிவிட யாரும் முன்வருவதில்லை. இந்த விளையாட்டிலும் அப்படியே. யாரும் அவனைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. முடிவில் அந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.

இந்தப் படத்தின் கடைசிக் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்துவிடும். சாதீயம் மீதும் சாதி சார்ந்த சமூக படிநிலைகள் மீதும் அனல்கக்கும் கேள்விகளை அவர்களைக் கேட்கத் தூண்டும். அந்த கடைசிக் காட்சியில் பார்ப்பவர்கள் ஒன்று தண்டனை பெறுபவராகவோ அல்லது தண்டனை கொடுப்பவர்களுல் ஒருவராகவோத்தான் இருக்க முடியும்.

 

எல்லைதாண்டி கைகுலுக்க வேண்டிய தருணம்

indpak

பாக்கிஸ்தான் தனது ஹைக்கமிஷனரை (ஷோஹைல் மொகமத்) திரும்பவும் இந்தியாவுக்கு (ஒரு வாரத்திற்கு முன் பாக்கிஸ்தான் அவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது) அனுப்ப முடிவுசெய்திருக்கிறது. அவர் டெல்லியில் நடக்கவிருக்கும் பாக்கிஸ்தான் தேசிய தின விழாவை நடத்துவார். அதே போல இந்தியாவும் அந்த நிகழ்ச்சிக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் கஜேந்திர சிங் செக்காவத்தை அனுப்ப முடிவு செய்திருப்பது இரு நாட்டுக்குள்ளும் துளிர் விடும் நல்லிணக்கத்தைக் காட்டுகிறதா? இந்த மாதம் 19ஆம் தேதிக்குப் பிறகு இரு தரப்பினரும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பரஸ்பரம் தோட்டாக்கள் பரிமாறிக்கொள்ளவில்லை என்பதும் வரவேற்கத்தக்க செய்தி. ஆனால் இருதரப்பினரும் தூதுவர்களை கொடுமைப் படுத்த தூண்டிய காரணங்கள் என்ன என்ன என்பதை அறிந்து அதைக் களைய முற்பட வேண்டும். இல்லையேல் இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்கக்கூடும்.

ஏன் பாக்கிஸ்தான் தூதுவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது என்கிற பிரச்சனை எங்கே ஆரம்பித்தது என்பதைப் பார்த்தால்: முதலில் பாக்கிஸ்தானில் புதிதாக கட்டப்படும் இந்தியத் தூதரகத்திற்கு (இப்பொழுது இருக்கும் தூதரகத்திற்கு அருகே) கட்டுமானப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டன. மேலும் அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஆட்களும் வெளியேற்றப்பட்டனர். காரணம் கேட்கப்பட்ட பொழுது டெல்லியிலிருக்கும் பாக்கிஸ்தான் ஹைகமிஷனுக்குட்பட்ட இடத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்ட பாக்கிஸ்தான் பல முறை கேட்டும் ஞாபகப் படுத்தியும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொன்னது பாக்கிஸ்தான். இரண்டாவதாக க்ளப் உறுப்பினர் சர்சை. பாக்கிஸ்தான் தூதுவர்களுக்கு இந்திய க்ளப்கள் மிக மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கிறது என்று கூறி பாக்கிஸ்தான் இந்திய தூதுவர்களை தனது க்ளப்பிற்குள் அனுமதிக்க மறுத்தது. இந்தியா தனியார் க்ளப்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை அரசு கட்டுப்படுத்த முடியாது என்று பதில் சொன்னது. க்ளப் பிரச்சனை கொஞ்சம் தனியார் வசம் இருந்தாலும், கட்டடம் கட்டும் பிரச்சனையை இரு அரசுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையின் மூலம் சுலபமாக சுமூகமாகத் தீர்த்துக்கொண்டிருக்க முடியும்.

இவ்வாறான பிரச்சனைகள் போர் நிறுத்த ஒப்பந்தகளை சேதப்படுத்தி தோட்டாக்களையும் சமயத்தில் உயிர்களையும் வீணடிக்கும். மேலும் தூதுவர்களை மோசமாக நடத்தவும் இவ்வாறான பிரச்சனைகள வழிவகுக்கும். இது 1961இல் நிறைவேற்றப்பட்ட வியன்னா ஒப்பந்தத்திற்கு எதிரானது.

இரண்டு தரப்பு தூதுவர்களும் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாவது ஒன்றும் புதிதல்ல. 1990இல் காஷ்மீரில் ஊடுருவல்கள் ஆரம்பித்தபொழுது இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே போர் மூளக்கூடும் என்கிற சூழ்நிலையில் இரு தரப்பு தூதுவர்களுக்கும் அந்தந்த நாடுகளில் பணியாற்றுவதென்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. இன்றிருக்கும் நிலையை விட அப்பொழுது இன்னும் மோசம். ஆனால் அப்பொழுதே நவம்பரில் இருதரப்பினரும் தூதுவர்களை பாதுகாக்கும் விதிமுறைகளை வகுத்துக்கொண்டது. அந்த சமையத்தில் லோக்கல் போலிசுக்கு எப்படி தூதுவர்களை நடத்துவது என்று தெரியாத காரணத்தினாலேயே தூதுவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்று விதிமுறைகள் இந்தியிலும் உருதிலும் மொழிபெயர்க்கப்பட்டு லோக்கல் போலீஸுக்கு அனுப்பப்பட்டது.

இது நம்மை வேறொரு கொஞ்சம் சம்பந்தப்பட்ட டாப்பிக்கான உளவாளிகள் பற்றி பேசவைக்கிறது. எப்படி இரு நாட்டினரும் உளவாளிகளைக் கையாள வேண்டும்? இரு நாட்டினரும் நாங்கள் உளவாளிகள் அனுப்புவதில்லை என்றே சொல்லிவந்திருக்கின்றனர். உளவாளிகள் பிடிபடும் பொழுது இரு அரசும் மௌனம் காத்து எங்களுக்கும் உளவாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்லும், ஆனால் உளவாளிகள் எல்லையைக் கடந்து அந்தப்பக்கம் சென்றவுடன் தான் உளவு செய்ததாக ஒப்புக்கொள்வர். மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் அப்படிப் பிடிபடும் உளவாளிகள் மிகவும் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

நாம் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்: நமது நாடுகள் உளவு பார்க்கும். பார்க்கத்தான் வேண்டும். இல்லையேல் எப்படி நாட்டை பாதுகாப்பது. நாடாள்வதில் மிக முக்கியமான அங்கம் உளவு. உளவு செய்யவில்லை என்று ஒரு அரசாங்கம் சொல்வது நகைத்தலுக்குறியது. அப்படி உளவாளிகள் பிடிபடும் பொழுது அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமேயன்றி துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது. சமீபத்தில் 2010இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் வியன்னாவில் உளவாளிகளை பரிமாற்றம் செய்து கொண்டது.

இருதரப்பினருக்கும் இடையேயான தொடர்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த சூழ்நிலையில் துளிர்விடும் நல்லிணக்க முயற்சியை இரு தரப்பினரும் உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

(தி ஹிந்துவில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் எழுதியவர்: ஹேப்பிமோன் ஜேகோப்)