நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக்கொள்கிறோம். ஒன்றாக அமர்ந்து உணவு உண்கிறோம். ஒன்றாக சிரிக்கிறோம். ஒன்றாக சிரிக்கிறோமா என்பது தெரியாது, ஆனால் குறைந்தபட்சம் வெளியுலகத்திற்காகவோ, நண்பர்களுக்காகவோ, குடும்பத்தினருக்காகவோ கடமைக்கேனும் சிரித்து வைக்கிறோம். உண்மையிலே மனம் விட்டு சிரிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒன்றாக அழுகிறோமா?. சிரிப்பை நாம் பெரும்பாலான நேரங்களில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் துக்கத்தை நமக்குள் பூட்டி – ஒரு பூதத்தைப் போல – அடைத்துவைத்திருக்கிறோம். அசோகமித்திரன் சொன்னதைப் போல நாம் துக்கத்தை யாரிடமும் – யாரிடமும் – பங்கிட்டுக் கொள்ளை இயலாது. ஆனாலும் சில நேரங்களில் நாம் துக்கத்தை வெளிப்படுத்தவே செய்கிறோம், நம்மையுமறியாமல். அல்லது சுயஇரக்கத்தால், சில நேரங்களில் அறிந்தே. ஒன்றாக சினிமாவுக்கு செல்கிறோம். ஒன்றாக பீச்சில் உட்கார்ந்து கடல் அலையின் சத்தம் ஓயும் வரையில் அரட்டை அடிக்கிறோம். பிறகு மணலைத் துடைத்துக்கொண்டு எழுந்து வருகிறோம். மணல் கரையிலே விழுந்துகிடக்கிறது, அடுத்த நபரை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. உண்மையில் நமக்கும், உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் உடனான உறவு, அந்த மணலுக்கும் நமக்கும் இருக்கும் உறவு போன்றது தான் என்கிறார் உமாமகேஸ்வரி.

யாரும் யாருடனும் இல்லை என்ற நாவலை நான் தற்செயலாகத்தான் நூலகத்திலிருந்து எடுத்தேன். முதல் சில அத்தியாயங்கள் தொடர்ச்சியின்றி – முன் அத்தியாயங்களுடன் – சற்றும் சம்பந்தமில்லாமல் நகர்ந்தன. என் நண்பர் ஒருவர் நாவலை என்னிடமிருந்து வாங்கி ஏழு அத்தியாயங்கள் மட்டும் படித்துவிட்டு கொடுத்துவிட்டார். ஏனென்று கேட்டதிற்கு, பொறுமையில்லை என்றார். உண்மைதான், முதல் பதினைந்து அத்தியாயங்களை மட்டும் தாண்டி விட்டால் அப்புறம் தென்றலும், புயலும், மழையும், சுடு சூரியனும், குளிர் நிலவும், பனியும் மாறி மாறி தாக்குகின்றன. ஒரு புவிஈர்ப்பு விசை போல் ஓயாமல் நம்மை ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது நாவல், முடியும்வரை.
எச்சரிக்கை : கதை சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவங்களும் தான்.
போடியில் ஏலக்காய் தொழில் செய்யும் ஒரு பெரிய குடும்பத்தைப் பற்றியது கதை. அந்தப் பெரிய குடும்பத்திற்கு, பலசரக்கு, பாத்திரக்கடை, எஸ்டேட் போன்ற இன்ன பிற தொழில்களும் உண்டு. நான்கு மகன்கள், மற்றும் மூன்று பெண்கள் அந்த வீட்டின் வாரிசுகள். பெண்கள் அனைவரும் திருமணம் ஆகி சென்று விட, மற்ற மூன்று மகன்கள் தத்தம் மனைவியருடனும், கடைக்குட்டி திருமணம் ஆகாமலும், தாய் தந்தையருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். கடைசி மகன் பெயர் குணா. அவன் பெயரில் குழந்தைகள் எல்லாம் மிகவும் பிரியமாகஇருக்கின்றனர். அவனை வளர்த்த அண்ணியரும் தான். வீட்டின் தந்தை தான் இந்த பெரிய தொழில் சாம்ராஜியத்தை உருவாக்கினார். அவருக்கு பேத்திகள் இருந்தும் பல பெண்களிடம் தொடர்புடையவராக இருக்கிறார். அவருடைய மனைவியும், மகன்களும், மருமகள்களும் இதை பற்றி தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர். மனைவி தனிமையில் புழுங்கிச் சாகிறார். ஒரு நாள் செத்தும் போகிறார்.
அந்த விட்டில் நடக்கும் பிரச்சனைகள் தான் கதை. பிரச்சனைகளை ஒரு குழந்தையின் – குழந்தைகளின் -பார்வையில் ஆசிரியர் கூறியிருப்பதுதான் சிறப்பு. த காட் ஆப் சுமால் திங்ஸ் படித்தவர்கள் இந்த கதையியல்பை முன்பே அறிந்திருக்கலாம். சொல்லப்போனால், குழந்தைகள் தான் கதையின் உயிர்நாடி. நம்மை கதையுடன் கட்டிப் போடுபவை. நாம் வேறு எங்கு சென்றாலும் நம்மை பிடித்து இழுத்து வருபவை. குழந்தைகளின் வேடிக்கைகளும் விளையாட்டுகளும் கேள்விகளும் என்றைக்கும் விநோதமானவை. ரசிக்கத்தகுந்தவை இல்லையா?. குழந்தைகளின் எண்ணிலடங்கா கேள்விகளும் புதிய சிந்தனைகளும் நாவல் தோறும் உலாவுகின்றன. ஆசிரியரைப் போலவே நமக்கும் பல இடங்களில் பதில் தெரியவில்லை.
குணா சித்தப்பா மீது குழந்தைகள் அளவு கடந்த பாசம் வைத்திருக்கின்றனர். குணா சித்தப்பா குழந்தைகளுடன் ஒரு நாளும் விளையாடாமல் இருந்ததில்லை. அவர் வீட்டை விட்டு பழி சுமத்தப்பட்டு வெளியேறிய பின்னர், குழந்தைகள் சில நாட்கள் அவரை கானாமல் தேடிவிட்டு, பின் சுத்தமாக மறந்து போகின்றனர். யாரும் யாருடனும் இல்லை.
தாய் சாகும் வரை, தந்தை எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். தாய் இறந்தபிறகு, அவர் வீட்டிற்கே வருவதில்லை. தீபாவளி பொங்கல் தவிற. அதுவும் சம்பிரதாயமே. அவ்வளவு பேர் வீட்டில் இருந்தும், தனிமையில் சாகிறார், ஒரு தீபாவளியன்று. அவர் இறுதி காலங்களில் உருகி உருகி காதலித்த, மலையாள பெண் ஒருவர் அவர் இறந்தபிறகு அவர் முகத்தை கூட பார்க்கைஇயலாமல் அழுதுகொண்டே திரும்பிப்போகிறார். யாரும் யாருடனும் இல்லை.
சுப்பக்கா கால் இல்லாத பெண். பெரிய வீட்டில், அவர்களுடன் ஒட்டாமல் வாழ்ந்துவருகிறார். அந்த பெரிய வீட்டின் அம்மா சுப்பக்காவை அவளுடைய அம்மா இறந்தபிறகு தன் வீட்டிற்கு கூட்டிகொண்டு வந்துவிடுகிறார். சுப்பக்கா தன் ஊனத்தை மறைக்க, மறக்க வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாள். குழந்தைகளுக்கு தினமும் கதை சொல்கிறாள். குழந்தைகள் அவளை மிகவும் நேசிக்கின்றனர். அவள் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பிறகு, சில நாட்கள் குழந்தைகள அழுது கொண்டிருந்து விட்டு பின் சுத்தமாக மறந்துபோகின்றனர். அபூர்வ அபூர்வமான கதைகள் சொல்லும் மூட்டையாக பிள்ளைகளால் கருதப்பட்ட சுப்பக்கா, பனித்துளி போல் சட்டென அனைவரது கவனத்திலிருந்தும் மறைந்து போகிறார். அவரவற்கு அவரவர் வேலைகள். விளையாட்டுக்கள். பிரச்சனைகள். சண்டைகள். காதல்கள். யாரும் யாருடனும் இல்லை.
குணாவும் வினோவும் சிறுபிள்ளை முதல் ஒன்றாக விளையாடியவர்கள். இருவருக்கும் பரஸ்பரம் சொல்லத்தெரியாத காதல் ஒரு காற்றைப் போல மறைந்திருக்கிறது, இருவருக்குமிடையே. ஆனால் வினோதினி குணாவின் அண்ணணைக் கைப்பிடிக்கிறாள். அவன் ஒரு குடிகாரன். குணாவிற்கு இன்னமும் வினோவின் மேல் காதல் இருக்கிறது. இருவரும் இணைகின்றனர்.வினோதினி கருவைக் கலைத்துக்கொள்கிறாள். பிறகு இந்த விசயம் அனைவருக்கும் தெரியவரும் பொழுது வினோதினி குணாவின் மேல் பழி சுமத்துகிறாள், வேறுவழியில்லாமல். குணாவிடம் தனிமையில் அழுகிறாள். குணா வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அவன் போன சில தினங்கள் வினோ அவன் நினைப்பாகவே இருக்கிறாள். தற்கொலைக்கு முயல்கிறாள். காப்பாற்றப்படுகிறாள். வினோவின் கணவன் இறக்கிறான். பிறகு துயரத்தில் ஆழ்ந்திருந்த வினோ நாளடைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறாள். சொத்து பிரிக்கப்படும் பொழுது தனக்கும் பங்கு வேண்டும் என்று அடம் பண்ணுகிறாள். குணாவை முற்றும் மறந்து போகிறாள். அனைவரும் தான். யாரும் யாருடனும் இல்லை.
வாணி மூத்த பேத்தி. குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தவள், வயதுக்கு வந்ததும் படிப்பு தடைசெய்யப்படுகிறது. விளையாட்டு தடைசெய்யப்படுகிறது. ஏன் வீட்டை விட்டே வெளியே செல்லவே தடைசெய்யப் படுகிறது. பெட்டிக்குள் ஒளிவிடும் ஒரு நகையைப் போல வாழ்க்கை முழுவதும் பூட்டிவைக்கப்படுகிறாள். வினோவும் வாணியும் நெருக்கமாகிறார்கள். பிறகு ஒரு நாள் திடீரென்று அவளுக்கு திருமணம் நடக்கிறது. வாணி பெருங்குரலெடுத்து ஓவென்று அலறுகிறாள். அவளைத் தேற்ற யாருமில்லை. குழந்தைகள் காரணம் புரியாமல் விழிக்கின்றன. வினோவும் ஆறுதல் சொல்லத்தெரியாமல் திகைக்கிறாள். தான் நின்ற அதே இடத்தில், அதே சூழலில் வாணி நிற்பதாக நினைக்கிறாள். அவளால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பிறகு வாணி திருமணம் முடித்து வீட்டை விட்டு சென்று விடுகிறாள். ஒன்றாக விளையாடிய குழந்தைகள், வாணியின் இழப்பை உணர்கின்றன. ஆனால் பெரிதும் அலடிக்கொள்ளவில்லை. வாணியின் தலைமையிடத்தை – விளையாட்டில்- அவளது அடுத்த சகோதரி பிடித்துக்கொள்கிறாள். அவர்களுக்கு விளையாட்டு வழக்கம்போல் நடக்கிறது; ஆலமரத்தடியிலும், குணா சித்தப்பாவின் ஆளில்லாத அறையிலும். யாரும் யாருடனும் இல்லை.
தந்தை இறந்த பிறகு சொத்து பிரிக்கப் படுக்கிறது. அவர் உயிரோடு இருக்கும் வரை முழுமையாக இருந்த சொத்து, அவர் சென்றதும் கொத்துக்கறியாக்கப்படுகிறது. அனைவரும் சொத்திற்கு சண்டையிடுகின்றனர். மகள்களும் தான். குழந்தைகள் திகிலோடு வேடிக்கைபார்க்கின்றனர். எப்பொழுது சண்டை ஓயுமென்று வீடு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. வீட்டிற்கு குறுக்கே சுவர் எழுப்பப் படுகிறது. ஒன்றாக பள்ளி சென்ற குழந்தைகள், பிரிந்து தனித் தனியாகச் செல்கின்றனர். குழந்தைகள் அழுகின்றனர். ஒன்றாகத்தான் செல்வோம் என்று அடம் பண்ணுகின்றனர். அடி வாங்குகின்றனர்.பின்னர் யாருக்கும் தெரியாமல் பள்ளியில் மட்டும் சந்தித்து பேசிக்கொள்கின்றனர். சின்ன அண்ணன் வீட்டிற்கு வெளியே இருக்கும் முல்லைக் கொடியை வெட்டி எறிகின்றான். கேட்டால், “இந்த முல்லைக்கொடி என் இடத்தில் வேர் வீட்டு, மாடியில் அண்ணனின் இடத்தில் பூ பூக்கின்றது.” என்கிறான் கடுங்கோபத்தோடு. யாரும் யாருடனும் இல்லை.
கதையை விட உமாமகேஸ்வரியின் வரிகளும் உவமைகளும் நன்றாக இருக்கின்றன. ஆனால் சில இடங்களில் உவமைகள் தேவையற்ற அலங்காரமான நகைகளாக உருப்பெற்று கூர்மையாக குத்துகின்றன. பலுவாக இருக்குகின்றன. குழந்தைகள் ச்சோ சுவீட். அதிலும் அனுவும், வாணியும் ரொம்ப அழகு. முதல் பத்து அத்தியாயங்களை நன்றாகச் செய்திருந்தால், இன்னும் அழகாக இருந்திருக்கும். நிதானமாக, இலக்கு இல்லாமல் பயனிக்கும் கதையை பொறுமையுடன் படிக்க இங்கு வெகு சிலருக்கே வாய்க்கிறது.
திருத்தம்: 17-08-2006
இந்த பதிவில் நான் கொடுத்திருக்கும் லின்க் (link) வேலை செய்யாததற்கு வருந்துகிறேன்.புத்தகத்தின் விபரங்கள் இங்கே:
Book Title : யாரும் யாருடனும் இல்லை ( YARUM YARUDANUM ILLAI )
Author : உமா மகேஸ்வரி (UMA MAGESHWARI)
Publisher : TAMILINI Price : Rs. 130/-
அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை உப்யோகித்து அந்த வலை பக்கத்திற்கு சென்ற பிறகு, YARUM YARUDANUM ILLAI என்ற வார்த்தையை தேடுங்கள்.

