நான் உஷிதமணி அல்ல

தமிழ் மொழிக்கு விக்கிப்பீடியா இருக்கிறது என்பது எனக்கு இன்று தான் தெரியவந்தது. டெக்னாலஜியில் மிகவும் பின் தங்கியிருக்கிறேன் என்பது தெரியவருக்கிறது. நன்றி:நற்கீரன். விக்கிப்பீடியாவின் வசதி/தனித்தன்மை என்னவென்றால், யார் வேண்டுமானாலும் ஒரு புதிய விசயத்தை (Topic) ஆரம்பிக்கலாம் என்பதும், பின் யார் வேண்டுமானாலும் அதை திருத்தி / மேலும் விசயங்களை சேர்க்க முடியும் என்பதே. இதில் பல நன்மைகளும்/சில தீமைகளும் இருக்கிறது. அது சரி, தீமையும்/நன்மையும் ஒரு சேர இல்லாமல் இருக்கும் விசயம் உலகத்தில் ஏதேனும் இருக்கிறதா என்ன?

தமிழில் விக்கிபீடியா இருக்கிறது என்று அறிந்தவுடன் நான் அதில் புதிதாக சேர்க்க நினைக்கும் வார்த்தை “தாமதம்”. சேர்த்ததும், அதில் ஏர்-இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே சேர்க்கவேண்டும் என்றுன் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விக்கிபீடியாவின் தீமை? நன்மை?

என் நண்பர்கள் அனைவரும் ஏர்-இந்தியாவையோ அல்லது இந்தியன் – ஏர்லைன்ஸையோ உபயோகிப்பவர்கள் தான். அவர்கள் சென்ற அனைத்து முறையும் விமானம் தாமதமாக கிளம்பியது என்பது எதிர்பாராத அல்லது எதிபார்த்த ஒன்றுதான். கோயின்சிடன்ஸ் அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல (unintentional) என்றே வைத்துக்கொள்வோம். திட்டமிட்டு செய்யமாட்டார்கள் என்பதே என் உறுதியான கருத்து அல்லது நம்பிக்கை. அதுசரி, நம்பிக்கை தானே வாழ்க்கை. நான் ஒரே ஒரு முறை மட்டுமே ஏர்-இந்தியாவில் சென்றிருக்கிறேன். அப்பொழுது 20 நிமிடங்கள் தாமதம். ஏன் இப்படி?

20 நிமிடங்கள் தாமதமாகச் செல்வதால், என்னுடைய 20 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாமல்(?!) போகும், என்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை, ஆனால் பலருக்கு இந்த 20 பில்லியன் டாலரை விட 20 நிமிடங்கள் பெரியது. தாமதம் மிக மிக கொடிய விசயங்களில் ஒன்று. தாமதமாகச் செல்வதால், நாம் நமது நேரத்தை மட்டும் வீணடிப்பதில்லை, நம்மை சார்ந்தவர்களின் நேரத்தையும் அநியாயமாக வீண் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 200 * 20 நிமிடங்கள்?

சரி. பயணச்சீட்டு கொடுத்தபின், திடீரென்று விமானம் ஏன் ரத்து செய்யப் படுகிறது? பல காரணங்கள் இருக்கலாம். எப்பொழுதும் தாமதம் என்று அறிந்து யாரும் பயணம் செய்ய முன்வராததால், எதிர்பார்த்த கூட்டம் இல்லையென்று விமானத்தையே ரத்து செய்யலாம். செய்யுங்கள். விமானம் உங்களுடையது. வாழ்க்கை எங்களுடையது. விமானம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டுமா இல்லையா? அந்த அறிவிப்பு ஒவ்வொரு பயணியையும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டுமா இல்லையா?
சரி. என்னதான் நடந்தது?

ஒருவர் ஒரு மாதத்திற்கு முன் டிக்கெட் வாங்கிக் கொண்டு, விமானம் ஏறி, வேறு நாட்டுக்கு செல்கிறார். ரிட்டன் டிக்கெட்டும் சேர்த்துதான். பயணிக்கு வெளிநாட்டில் விசா ஒரு மாதத்திற்கு மட்டுமே. சரியாக விசா முடியும் நாளில் அவருக்கு ரிட்டன் டிக்கெட். ஆசை ஆசையாக, அயல்நாட்டில் உடன் தங்கியவர்களுக்கும், தாய்நாட்டில் பார்க்கப் போகும் சொந்தங்களுக்கும், பரிசுகள் கொடுத்து/வாங்கி கொண்டு விமான நிலையம் சென்றவருக்கு அதிர்ச்சி, விமானம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது. [இரு வாரங்களுக்கு முன்னரே ரத்து செய்தி வெளியாகியிருக்கிறது. ஏஜெண்ட் தெரிவிக்கவில்லை]. அவருக்கு விசா இன்றோடு முடிகிறது. நாளை தான் வேறு பிளைட். நாளை பிளைட்டுக்கு மாற்றித் தருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்கள். நாளைக்கு சென்று விடலாம் தான். வேறு முக்கியமான் விசயங்கள் இல்லை தான். இமிகிரேஷனில் ‘வார்ன்’ மட்டுமே செய்வார்கள் தான். அதை போன் செய்து கேட்டாயிற்று தான். போனில் பேசிய இமிகிரேசன் பெண்மணி தன் பெயரை மட்டுமே கூறினாள் தான். ICயை சொல்லவில்லை தான். எல்லாம் நன்மைக்கே தான்.

ஆனால் நாளைவரை, அவர் ஒரு பிரச்சனையும் இல்லாமல், இந்தியாவில் காலடி எடுத்துவைக்கும்வரையில், அலைபாயும், ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும், அவர் மனதிற்கு யார் ஆறுதல் கூறுவது?

அவர் உலகநாடுகளில் பல இடங்களுக்கு சென்று வந்தவர். தனக்கு இவ்வாறு நேர்வது இதுதான் முதல் முறை என்றார்.

தவறு இருபக்கமும் இருக்கிறது. ஆனால் விழுக்காடு? அன்பர்களே உஷார்.

மற்றவர்கள் திருந்துவார்கள் என்று நினைப்பதைவிட நாம் திருந்துவது தான் உஷிதம் (நான் உஷிதமணி அல்ல!). பயணம் செய்யும் ஓரிரு நாட்களுக்கு முன், விமான நேரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

என்னுடைய கல்லூரிக் காலங்களிலிருந்தே நான் விகடனில் வரும் ‘அரசன்’ சம்பந்தப்பட்ட கார்டூன்களின் ரசிகன். அந்த கார்டூன்களில் சில சமயம் ‘சிம்பு’ என்ற பெயர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த கார்டூன்கள் ஒரு மனிதனின் கற்பனைத்திறனை (creativity) பறைசாற்றுபவை. மதனின் கார்டூனும் அவ்வாறே. ஆனால் நமக்கு தெரியாத அல்லது நாம் அனுபவிக்காத, அதுவும் நாம் புராதாண காலத்து அரச தமிழ் சினிமாவில் கண்டு ஆச்சரியப்பட்ட, வீர தீர பராக்கிரம மன்னர்களை, அரசர்களை நையாண்டி செய்வதை பார்க்கும் பொழுது எங்கிருந்தோ சிரிப்பு வந்து தொற்றிக்கொள்கிறது.

பட அறிவிப்பு வந்து, அதுவும் வடிவேலு தான் இம்சை அரசன் என்ற பொழுது, எனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. அன்றிலிருந்து நான் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். பல தடைகளை மீறி படம் திரையிடப்பட்டிருக்கிறது. குதிரை வதைத் தடுப்புச்சட்டம் நுழைந்தது, படத்தில் வரும் நகைச்சுவைகளையும் மிஞ்சி விட்டது. அரசர் காலத்து படங்களை எடுக்கும் பொழுது, அரசர் குதிரையில் வருவது போன்று காட்டவேண்டுமேயானால், நாம் PreKG/LKG/UKG, படிக்கும் பொழுது விளையாடப் பயன்படுத்திய மரக்குதிரைகளையா உபயோகிக்க முடியும்? குதிரைகளின் மீது இவர்களுக்கு இருக்கும் பாசத்தை சண்டை காட்சிகளில் உதை வாங்கி, சுமோவின் கார் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு விழும் (உபையம்: சந்திரமுகி) துணைநடிகர்கள் மீது காட்டியிருக்கலாம். மனித வதை தடைச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?

படம், என் நண்பன் பாணியில் சொல்வதென்றால், ‘ரவுசு’ தான். படம் ஆரம்பித்தவுடன், திரையில் தோன்றும், கதாபாத்திரங்களை அம்புக்குறியிட்டு அறிமுகப்படுத்தும் பொழுது, அங்கே தூணில் ஒட்டிக் கொண்டிருக்கும் பல்லியை, ‘அரண்மனை பல்லி’ என்று வட்டமிட்டு காட்டும் பொழுது தொடங்குகிறது ‘ரவுசு’. அங்கிருந்து கடைசியில், ‘நம் மூதாயதயர்களான அலெக்சாண்டர், சாம்ராட் அசோகர்,BraveHeart Mel Gibson போன்று வீரமாக வாழ்வோம்’ என்று இம்சை அரசன் (வடிவேலு) கர்ஜிக்கும் வரை படம் நெடுக ரவுசு தான். அவர் மீசையே ரவுசு தான்.

‘சிம்புதேவன்’ அடிபடையில் தான் ஒரு கார்டூனிஸ்ட் என்பதை படத்தில் பல இடங்களில் நிரூபிக்கிறார். அந்தபுரத்தைக் காட்டும் பொழுது, ‘அந்தபுரம் 24 மணி நேர சேவை’ என்று முகப்பில் எழுதியிருப்பது, கோட்டை வாசலில்,’பழைய எண்:24 புதிய எண்:42 எதிர்கால எண்: 0.05′ என்று எழுதியிருப்பது போன்று சில உதாரணங்கள்.

வடிவேலு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை மறுபடியும் ஒரு முறை ஆணித்தனமாக நிரூபித்திருக்கிறார். அவருக்கு ‘கைப்பிள்ளை’யிலிருந்து நான் தீவிர ரசிகன். என் நண்பர் கூட்டம் ‘வாலிப வயசு’ என்று கைப்பிள்ளை போன்று இன்றும் செய்து காட்டிவருகின்றனர். ‘ஆணியே புடுங்கவேனாம்’ என்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில் வரும் வசனம் இன்றும் எங்கள் வட்டத்தில் புழக்கத்தில் உள்ளது. ஆனால் அவர் திரையில் தோன்றிய பொழுது நான் மட்டுமே கைதட்டிக் கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் கை தட்டக்கூடாதோ?

ஒரு வடிவேலே வயிற்றைப் புண்ணாக்கும் பொழுது படத்தில் இரண்டு வடிவேலுகள். கேட்கவா வேண்டும்? கரடி நகைச்சுவையும், அக்காகோலா,கப்சி, ஜாதிச் சண்டை மைதானம் போன்றவையும் நம் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. படம் முடிந்து வந்தவுடன், மதியம் சாப்பிட்ட சாப்பாடு சரியில்லையோ என்று நினைக்குமளவு வயிற்று வலி.

அக்காகோலா,கப்சி போன்ற வெளிநாட்டு உற்சாகபாணங்களை ஆங்கிலேயர்கள் விற்க வரும்பொழுது, மங்குனி(அப்படியென்றால் என்ன?) அமைச்சர் உள்ளூர் தயாரிப்பு நசுக்கப்பட்டு விடாதா என்று கேட்கும் பொழுது, பெயர் மட்டும் தமிழில் வைத்துக்கொள்ளலாம், மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று இம்சை அரசன் கூறுவது சற்று யோசிக்கவைக்கிறது. வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, சிந்திக்கவும் விசயம் இருக்கிறது.

இந்த நல்ல முயற்சிக்கு வித்திட்ட ஷங்கருக்கு பாராட்டுகள்.

எனக்கு Lord Of The Rings பார்க்கும் பொழுதெல்லாம், நமது பொன்னியின் செல்வன் கதை, ஞாபகத்திற்கு வரும். ஏன் பொன்னியின் செல்வன் கதையை அதே பிரம்மாண்டத்துடன் திரைப்படமாக தயாரிக்க முடியாது என்ற எண்ணமும் உடன்வரும்.

சிறிது நாட்களுக்கு முன்பு தான் ‘சஞ்சய் லீலா பன்சாலியின்’ ‘தேவதாஸ்’ திரைப்படம் பார்த்தேன். எத்தனை அழகு? எத்தனை பிரம்மாண்டம்? என்னமோ தெரியவில்லை எனக்கு உடனே ஞாபகத்திற்கு வந்தது பழைய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தான், அதை அப்படியே, மிகப் பிரம்மாண்டமாக, மறு தயாரிப்பு செய்யலாம்!

இம்சை அரசனின் வெற்றியால், இவை எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்.

Imsai Arasan 23am Pulikesi : Review

அசட்டு மனிதர்கள் – தேன்கூடு போட்டிக்கான சிறுகதை

(சிறுகதை)

ஊ…ஊ..ஊ…
நாய்கள் மிகப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தன. நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தால் கூட பயம் இராது. ஊளையிட்டுக்கொண்டிருந்தால் மனதிற்கு கிலி ஏற்படுத்தத்தான் செய்கிறது. அதுவும் இந்த அர்த்த ராத்திரியில்.
மணி என்ன இருக்கும்? நான் வரும்போதே 12:00 இருக்குமே?

அப்பாடா, எப்படியோ இந்த முறை சிரமப்பட்டேனும் நெல் அவித்தாகிவிட்டது. இனி ஒரு மூன்று மாதத்திற்கு கவலை இருக்காது. என் குடும்பம் மிக சிறியது. என் கணவர் நான் மற்றும் என் மூன்று வயது குழந்தை.

என் கணவர் மிகவும் அன்பானவர். அவருக்கு ஏகப்பட்ட கடன் தொல்லைகள். அதனால் குடிக்க ஆரம்பித்தார். அவர் எப்பொழுது குடிக்க ஆரம்பித்தாரோ அப்பொழுதிலிருந்து என்னை அடிக்கவும் ஆரம்பித்தார். அவர் குடித்தால் என்ன? அடித்தால் என்ன? அவர் என் கணவர். அதுவும் அன்பான கணவர். என் மூன்று வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. எனது பக்கத்தில். கண்ணம்மா அந்தப் பக்கம் போகாதே! என்ன கிழே போய் குழ்ந்தைகளிடம் விளையாட வேண்டுமா? வேண்டாம் செல்லம். அதுகள் தான் உன்னைப் பார்த்தாலே கத்துகிண்றனவே? அப்புறம் பெரிய பிரச்சனையாகிவிடும். நாம் இந்த வீட்டில் இருக்க முடியாது. இங்கேயே விளையாடு கண்ணா. அம்மா சிறிது நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

இப்பொழுது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. எப்படி இந்த அண்டாவை மாடிக்கு தூக்கிக் கொண்டு வந்தேன்? அண்டா நிறைய அவித்த நெல். அதுவும் நன்றாக கொதித்த நீரில். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து காயப் போட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் அரைமணி நேரமாவது ஆகும்.
சுத்தமான பளீர் வெள்ளை நிற கவுன் அணிந்திருக்கிறாள் என் மகள். நானும் கூடத்தான் வெள்ளை சேலை.இப்பொழுது புதிதாக வந்திருக்கும் மிஷெனில் துவைத்தது. முன்பெல்லாம் நான் தான் கைகளால் துவைப்பேன். இவர்கள் வந்த பின் சவுகரியமாக போய்விட்டது. வெள்ளை நிற கவுனில் தேவதை மாதிரி இருக்கிறாள் என் மகள். விளையாடட்டும். ஊ..ஊ…சே…இந்த நாய்கள் ஏன் இப்படிக் ஊளையிடுகின்றன? அவர் வந்துவிட்டால் இந்த நாய்களை விரட்டியடித்து விடுவார். வேகமாக முடித்துக் கொண்டு செல்ல வேண்டும். அவர் வந்து விடுவார். குறுக்கு வலிக்கிறது. இன்னும் குணிந்து நெல்லை நன்றாக பரப்பிவிடுகிறேன்.

கணவர் அடித்தாலும், என் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், நான் ரேஷன் கடையில் அரிசி வாங்கி வரும்பொழுது, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் என் கணவர். அவருக்கு பிடித்தமான என் சேலையை பேனில் கட்டி தற்கொலை செய்துகொண்டார். காற்று இதமாக வீசுகிறது. முடியப்படாத எனது கூந்தல் காற்றில் அலை பாய்கிறது. மல்லிகை மனம் வீசுகிறது. எங்கிருந்து வாசனை வருகிறது? நான் மல்லிகைப்பூ வைக்கவில்லையே. அன்றிலிருந்து எனக்கு என் மகள் தான் துணை. அவளுக்காகத்தான் நான் உயிர் வாழ்கிறேன். எங்கே எனது மகள்? காணவில்லையே? கீழே போய் விட்டாளா? ‘செல்லம் எங்கேடா போய்ட்ட? எழுந்தேன். சுற்றிப்பார்த்தேன். மொட்டை மாடியிலே காணவில்லை. ஐயோ..எங்கே போனாள்? அதோ அங்கே..என்ன அது? அண்டாவின் வெளியே இரண்டு சின்னக் கால்கள் வானத்தை நோக்கிப் பார்த்தன. ஐயோ என் மகள்! மகளே..ஓடுகிறேன். கத்துகிறேன். கதறுகிறேன். நாய்கள் ஊளையிடுவதை நிறுத்திவிட்டன.கொதிக்கும் நெல் குவியலில்..அண்டாவுக்குள்…ஆ…ஆ….எனது தொண்டை அடைக்கிறது. விம்முகிறேன். என்னால் முடிந்த வரையில் கதறுகிறேன். தரையில் முட்டி முட்டி சாய்கிறேன். என் செல்லம்.. எழுந்து ஓடுகிறேன். மொட்டை மாடியிலிருந்து குதிக்கிறேன். எதற்காக வாழ வேண்டும்? எனது தலை நச்சென்று தரையில் மோதுகிறது. மூளை சிதறுகிறது. இரத்தம் வழிந்தோடுகிறது.

இப்பொழுது நானும் எனது கணவரும் என் மூன்று வயது குழந்தையும் சந்தோசமாக வாழ்கிறோம். கடன் தொல்லை கிடையாது. அவர் குடிப்பதும் இல்லை என்னை அடிப்பதுமில்லை.மணி என்ன இருக்கும்? நான் வரும்பொழுதே 12:00 இருக்குமே. அப்பாடா, எப்படியோ இந்த முறை சிரமப்பட்டேனும் நெல் அவித்தாகிவிட்டது. இனி ஒரு மூன்று மாதத்திற்கு பிரச்சினை இருக்காது.நான் நெல்லை காயப்போட்டுக்கொண்டிருக்கிறேன். எனது மூன்று வயது மகள் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அவர் வந்து விடுவார்.

எனது குழந்தையை அழைத்துக்கொண்டு மாடி படிகளில் இறங்கி கீழே வந்தேன். கீழே இரண்டு பையன்களும் ஒரு பெண்களும் இருந்தார்கள். பையன்கள் புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெண் மட்டும் படித்துக்கொண்டிருந்தாள். நாளைக்கு பரிட்சையாக இருக்கும். என் குழந்தை சிரித்தது. நன்றாக சிரித்தது. அந்த பெண் மிரண்டு போய் நிமிர்ந்து பார்த்தது. பிறகு தன்னால் ஆன மட்டும் ‘வீல்’ என்று கத்தியது. சத்தத்தில் பையன்களும் முழித்துக் கொண்டு அவர்களும் கத்தினார்கள்.
இவர்களுக்கு இதே வேளையாகப் போய்விட்டது. அசட்டு மனிதர்கள். நான் மறுபடியும் மொட்டை மாடிக்கே சென்று விட்டேன், என் குழந்தையோடு. நெல் காயப்போடவேண்டுமே. என் செல்லத்திடம் இனிமேல் இப்படி சிரிக்காதே என்று சொல்லிவைத்தேன்.

**

வாக்குமூலம்

(சற்றே பெரிய சிறுகதை)

1
நான் = பிரபு

என்னால் நம்பவே முடியவில்லை. நித்யாவா இப்படி?
‘டேய் உண்மையாகத்தான் சொல்றியா?’ நான் மதனிடம் கேட்டேன். உடன் முரளியின் சகோதரன் கார்த்திக் இருந்தான். நான், முரளி, மதன், கணேஷ், நித்யா, சுபா, திருவேங்கடம் அனைவரும் எம்.சி.யே. கடைசி வருட நண்பர்கள்.
‘நான் என்ன பொய்யா சொல்லப் போறேன். ரொம்ப நாள் கழிச்சு நேத்து தான் தண்ணியடிக்கும் போது கணேஷ் உளரினான்’
நான் நம்ப முடியாமல், முரளியின் சகோதரன் கார்த்திக்கைப் பார்த்தேன். கார்த்திக் தலை கவிழ்ந்தான்.
‘கணேஷ் வீட்டு போன் தான் இதுக்கு மெஸஞ்சர்’ – மதன்
கார்த்திக் இப்பொழுது மதனை முறைத்தான்.
கையில் வைத்திருந்த பீரை இன்னொரு மடக் குடித்தான்.
மதன் – ‘என்னை ஏன்டா முறைக்கிற? முரளி எனக்கு நண்பன் மாதிரி பிரபுவும் எனக்கு நண்பன் தான். எத்தனை நாள் மறைக்கிறது? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ல?’ என்று கூறி சிரித்தான்.
‘டேய்..உன் பழமொழியெல்லாம் இருக்கட்டும், சத்தியமா சொல் நீ சொல்றதெல்லாம் உண்மையா?’ நான்
‘மாப்ள. இந்த பீர் பாட்டில் மேல சத்தியமா சொல்றேன்! நித்யா, முரளிய லவ் பண்றா! அவன் கிட்ட ப்ரோபோசும்(propose) பண்ணிட்டா!’
என்னால் நம்ப முடியவில்லை.
மதன் – ‘ஏண்டா! நீயும் நித்யாவும், இணை..பிரியா நண்பர்களாச்சே, உன்கிட்ட அவ இத சொல்லலியா? என்னதான் இருந்தாலும் நீ பாய் பிரண்டு தானே, கேர்ள் பிரண்டா இருந்தா சொல்லியிருப்பா!’ என்று ஏதோ ஜோக் சொன்னவன் போல விழுந்து விழுந்து சிரித்தான்.
‘நித்யா ஏன் இப்படி செய்தாள்! என்னிடம் சொல்லியிருக்கலாமில்ல?’

**

2
நான் = திருவேங்கடம்

நான் திருவேங்கடம். நான், சுபா, நித்யா,மதன், கணேஷ், முரளி அனைவரும் ஒரே கிளாஸ். எம்.சி.யே. மதுரை காமராஜ் மாலை நேர கல்லூரி. ம்..ம்.. ஒருத்தனை விட்டுட்டேன்னு நினைக்கிறேன். அவன் தான்..அலட்டல் கேசு…பிரபு. மெட்ராஸ்லேருந்து மதுரைக்கு படிக்க வந்திருக்கான். படிக்கவா வந்திருக்கான்? ம்..ம்..அவனுக்கு நிறைய பெண்கள் சினேகிதம். அதனாலேயே அவனுக்கு திமிர் ஜாஸ்தி.
நான் தான் சென்டர் ஆப் அட்ராக்ஷன், இன்னைக்கு.
‘டேய், குழந்தை..சொல்லுடா..பிரபு டைரியில இருந்து எந்த பொண்ணு போன் நம்பரை எடுத்த?’ – கணேஷ்.
குழந்தைன்னு என்னைத்தான் கூப்பிடுறான், இந்த சோடாபுட்டி கணேஷ். ஒன்னும் இல்லீங்க, அதென்ன பிரபு பேசினாத்தேன் பொண்ணுங்க எல்லாம் பேசுமா? நான் பேசுனா பேசாதான்னு பிரபு டைரியில இருந்து எனக்கு பிடிச்ச பொண்ணு போன் நம்பரை எடுத்துட்டேன். அத இவிங்க எப்பிடியோ மோப்பம் பிடிச்சிட்டாய்ங்க. மாட்டிக்கிட்டேன். சும்மா விடுவாய்ங்களா? ஆனாலும் நானாவது சொல்றதாவது? ஹ..ஹே..கம்முன்னு நல்லா தவளைய முழுங்கின பாம்பு மாதிரியிருந்தேன்.
‘டேய்..டேய்.. அது மஞ்சு போன் நம்பர் தானே?’ – மதன், ‘நான் தான் கிளாஸ்லேயே பார்த்திருக்கேனே, உன்னோட ஒன்றரைக் கண்ணில அரைக் கண்ண உருட்டி அவளை பாப்பியே? ஆமா குழந்தை..எனக்கு ஒரு சந்தேகம்..அவளோட பெரிய உடம்பு என் அரைக் கண்ணில பத்துதா?’ என்று கேட்டுவிட்டு மாயா பஜார் ரங்காராவ் மாதிரி சிரித்துவைத்தான்.
நான் சிரிக்கல. ம்..ம்…சிரிப்பனா?
‘ப்ளீஸ்.. டா மாமு. சொல்லிடு. இத்தனை பேர் கேக்கரோமில்ல. உன்னோட ஆளு யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கிறோமே..ப்ளீஸ் டா செல்லம் சொல்லுடா…’ கணெஷ்.
‘ம்ம்..ஹ¤ம்.. மாட்டேன்’ நான்
‘சரி நமக்குள்ள ஒரு டீல். நீ இதச் சொன்னேன்னா..நாங்க..உனக்கு ஒரு ஹாட் மேட்டர் சொல்லுவாம்’ மதன்.
மதனை கணேஷ் முறைத்தான். எதற்கு மதனை கணேஷ் முறைக்கிறான். எனக்கு ஆர்வம் ஆகியது.
‘ஓகே..அப்படீன்னா..நீ முதல்ல சொல்லு’ நான்
அப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது. நித்யாவும் நல்ல பொண்ணு, முரளியும் நல்ல பையன். வாயே திறக்கமாட்டான். அதுவும் பொண்னுங்ககிட்ட கேக்கவேவேணாம். எப்படி இவர்களுக்குள்? என்ன இருந்தாலும் முரளி என் நண்பன்..ஹ்ம்ம்..எங்கிருந்தாலும் வாழ்க!!
‘இப்ப சொல்லுடா..யாரு போன் நம்பரை நீ எடுத்த?’ மதன் விடுவதாயில்லை.
‘ம்..சொல்லமாட்டேன்..ஆனா எழுதிவேனா காமிக்கறேன்’

**

3
நான்=கணேஷ்
இன்றைக்கு ரூமில நான், மதன், முரளியின் சகோதரன் கார்த்திக் இருக்கிறோம். கார்த்திக் ஒரு மூளையில படுத்திருக்கிறான். மதனும் நானும் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பக்கம் முரளி தூங்கிகொண்டிருக்கிறான். குழந்தை வந்தான்.
‘வாடா..குழந்தை!’ மதன்.
‘என்னடா இரண்டு பேரும் இடி விழுந்தா மாதிரி உட்கார்ந்திருக்கீங்க’ – குழந்தை.
நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.
பானையில் தண்ணீர் குடித்து விட்டு, எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் குழந்தை.
‘சொல்லுங்கடா. என்ன ப்ராபளம்? நான் தீர்த்துவைக்கிறேன்’ – குழந்தை.
‘நித்யாவுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம். இந்த வருட படிப்பு முடிந்ததும் கல்யாணமாம். அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இன்ன வரைக்கும் அழுதிட்டு இப்பத்தான் படுத்தான்’ நான்
சிறிது நேரம் யோசித்த குழந்தை, ‘அதுக்கென்ன, நித்யாவை கல்யாணத்துக்கு சம்மதிக்கச் சொல், நிச்சயம் முடியட்டும். நம்ம ஆள் தான் காதல் மன்னனாச்சே, கல்யாணத்திற்கு முந்தின நாள் கடத்திட்டு வந்துரட்டும்’..குழந்தை சொல்லிவிட்டு என்னிடம் திரும்பி ஏதோ கௌவ்ரம் சிவாஜி ரேஞ்சுக்கு ஒரு லுக் விட்டு, ‘என்ன கணேஷ் நான் சொல்றது?’ என்றான்.
மதன் வேகமாக எழுந்து வாஷ் பேசினில் போய் நன்றாகக் காரித்துப்பிவிட்டு வந்தான். எங்கள் குரூப்பிலே மதன் தான் ‘ஓட்டு’ வங்கி. அவனைத் தான் ஓட்டு ஓட்டு என்று அனைவரும் ஓட்டுவோம். முரளியின் தம்பி கார்த்திக் கூட சில சமையங்களில் கேலி செய்வான். ஆனால் அதில் தப்பில்லை என்று தோன்றுகிறது.
‘ஐடியா சரியில்லேன்னா வேற யோசிப்போம்’ என்று நகர்ந்து உட்கார்ந்தான் குழந்தை.
அப்பொழுது தான் தூக்கதிலிருந்து கார்த்திக் எழுந்தான். ‘டேய் கார்த்திக்..இங்க வாடா!’ என்றான் குழ்ந்தை.
கார்த்திக் வந்து உட்கார்ந்தான்.
‘பயப்படாதே! ஒன்றும் நடக்காது! நான் இருக்கிறேன். எப்படியாவது உங்க அண்ணனையும் அண்ணியையும் (நித்யா) சேர்த்து வைக்கிறேன்’ குழ்ந்தை.
கார்த்திக் பேசாமல் இருந்தான்.
‘ஆமா..உங்க அண்ணன், இத பத்தி உங்க அப்பாகிட்ட சொன்னா என்ன?’ குழந்தை.
‘எங்க அப்பாகிட்டயா?’ கார்த்திக்
‘ஆமா’ குழ்ந்தை.
‘கொன்றுவாரு’ சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டான் கார்த்திக்.
குழந்தை எங்களைப் பார்த்தான்.

**

4
நான்=பிரபு

என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கேட்கலாம் என்றால், தன்மானம் இடம் தரவில்லை. அவளா வந்து சொல்லியிருக்கலாம். ச்.சே..கடைசியில் இப்படி ஆகிடுச்சே. கணேஷ் வீட்டு போன் தான் மெசஞ்சராமே!..ஹம்ம்..
நான் கணேஷ் வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘வாப்பா, பிரபு! எப்படி இருக்கே! உன்னோட கேர்ள் பிரண்ட்ஸ் எல்லாம் நலமா? நலமறிய அவா!’ என்று சொல்லிக் கண்சிமிட்டினார், கணேஷின் அப்பா.
கணேசஷின் அப்பா கணேஷைப் போல கல்லூளி மங்கன் கிடையாது.எதையும் மறைக்காமல் பேசுபவர்.
‘எல்லாம் நால்லாயிருக்கங்கப்பா!’ நான்
‘ஏண்டி மரகதம், யார் வந்திருக்கா பாரு, மன்மதராசா வந்திருக்காக! காப்பி எடுத்திட்டு வாம்மா!’ மனைவியை அழைத்தார்.
எனக்கு சிரிப்புதான் வந்தது.
‘கணேஷ் எங்கப்பா காணோம்?’ என்றேன்.
‘முரளி வந்திருந்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. உனக்கு ஒரு விசயம் தெரியுமா? கணேசுக்கு பொண்ணுங்ககிட்டே இருந்தெல்லாம் போன் வருது! இன்னைக்கு நான் போனை எடுத்திட்டேன்! ஹி..ஹி..ஹி..’ என்று சொல்லி மறுபடியும் கண்சிமிட்டினார்.
எனக்கு பகீரென்றது.
‘போன்ல யாருப்பா?’ நான்.
‘நித்யான்னு சொன்னமாதிரி ஞாபகம். உனக்கு தெரியுமா?’ என்றார்.
ம்..ம்.. என்க்கு தெரியாமலா? எனக்கு கோபம் வந்தது.
‘இப்போ எங்க போயிருக்கானுங்க இவனுங்க?’ நான்
‘போன் வந்த கொஞ்ச நேரத்தில ரெண்டு பேரும் வெளியில கிளம்பி போய்ட்டாய்ங்க. இவிங்க திரியிற திரிச்சலே சரியில்ல. ஏண்டியம்மா காப்பித் தண்ணிய கொண்டுவா!’
‘சரிப்பா நான் போயிட்டு வாரேன்’ நான்
‘அட, இருடா! காபி சொல்லியிருகேன்ல! நீ இருந்தா தான் எனக்கு கிடைக்கும்!’

**

5
நான்=கார்த்திக். முரளியின் சகோதரன்.
குழந்தை வந்து உட்கார்ந்தார். ‘டேய்! கார்த்தி! உனக்கு சின்ன வயசு. நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே.!’
எனக்கு சின்ன வயசாம். நானும் எம்.சி.யே ஈவினிங் காலேசில தான் படிக்கிறேன். இவங்களோட ஒரு வயசு கம்மி. குழந்தை அளந்தாருன்னா அதுக்கு அளவே இருக்காது. இவரை குழந்தைன்னு கூப்பிடறதுக்கே ஒரு கதை இருக்கு.

ஒரு நாள் இரவு ரொம்ப நேரமா பன்றி ஒன்று கத்திக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் பன்றியிம் சத்தம் ஓயவில்லை. எங்களுக்கே தூக்கம் வரவில்லை. குழந்தை வீராப்பாக நான் சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். வந்தவர்,’அது ஒன்றுமில்லை பசங்களா. பன்றி ‘குழ்ந்தை’ போட்டிருக்கு’ என்றார்.

பன்றியாவது? குழந்தையாவது? எங்களுக்கு சிரிப்பு வந்தது. நாங்கள் அவரிடம் மறுபடியும் கேட்க, அவர் கூலாக ‘என்னங்கடா, புரியாதமாதிரி பார்க்கறீங்க! பன்றி குழந்தை போட்டிருக்கு அதுதான் கத்தறது. தூங்குங்க!’ என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். அதை குழந்தை என்று சொல்லக் கூடாது குட்டி என்று தான் சொல்லனும் என்று சொல்லிப் புரியவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அன்றிலிருந்து அவரை குழந்தை என்று தான் அழைப்போம்.
‘டேய்..கார்த்திக்! நான் வேணும்னா உங்க அப்பாரு கிட்ட வந்து பேசட்டுமா? நான் சொன்னா உங்க அப்பா கேப்பாரு! ஒன்னு செய்யறேன், இந்த வாரம் உங்க அப்பாகிட்ட வந்து பேசறேன்!’
இவர் வந்து பேசினா எங்க அப்பா கேட்ருவாரா? சரியான டுபுக்கு.

**

6
நான்=பிரபு
அதோ முரளியும் கணேசும் std பூத்திலிருந்து வெளியே வருகிறார்கள். நான் மறைந்து கொள்கிறேன். அவர்கள் என்னைக் கடந்து சென்றபின், நான் மெதுவாக கடைக்குள் நுழைகிறேன்.
‘வாங்க பிரபு, அண்ணே’ என்றான் பூத் பையன்.
‘ஏண்டா! முரளியும் கணேசும் இங்க வந்தாங்களா? என்றேன். தெரியாததுபோல்.
‘ஆமாண்ணே! வந்தாங்க! இதோ இந்த நம்பருக்குத்தான் போன் பண்ணிப் பேசினாங்க!’
அவள் வீட்டு நம்பர் தான்.

**

7
நான்=கணேஷ்
குழந்தை வந்தான். முரளியிடம் சென்றான்.
‘டேய் முரளி! உனக்கு இதெல்லாம் தேவையாடா! நீ எதுக்கு இங்க வந்த? படிக்கத்தானே? உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்ல படிக்க வைக்கிறாங்க? உனக்கு லவ்வெல்லாம் தேவையாடா?’ முரளி மவுனமாக இருந்தான்.
‘அம்மா அப்பா பாத்து கல்யாணம் பண்ணிவைக்கிற பொண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கனும் அதுதான் நிலைக்கும்! காதல் கல்யாணம் எல்லாம் சும்மா ஜிகினா தூள் மாதிரி’ குழந்தை. உதாரணத்துக்கொன்னும் கொறைச்சல் இல்ல. முரளி ஏதும் பேசவில்லை.
‘என்னடா பேசாம இருக்க? இப்ப என்னையே எடுத்துக்கோ. வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் நான் இன்னும் லவ் பண்ணாம இருக்கேன்!’ குழந்தை
திஸ் இஸ் டூ மச். எனக்கு சிரிப்பு வந்தது. முரளி நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
‘இப்போ என்னதான் பண்ணலாம்னு முடிவோட இருக்க?’ குழந்தை முரளியை விடுவதாகை இல்லை.
‘டேய் மாமா! இங்க வா! ஏற்கனவே பயத்துல இருக்கிற அவன் கிட்ட எதையாவது சொல்லி மேலும் பயமுறுத்தாத. பய ஏதாவது பண்ணிக்கப் போறான்! நான் குழந்தையைக் கூப்பிட்டேன்.
குழந்தை திகிலுடன் முரளியைப் பார்த்துவிட்டு, என்னிடம் வந்தான்.
‘என்னடா சொல்ற?’ குழந்தை.
‘நீ தான் ஏதாவது ஐடியா கொடுக்கனும்’ நான்
குழந்தை தீவிரமாக யோசித்தான்.

**

8
நான்= சுபா
2..5..6..6..3..6..4 எண்களை டயல் செய்து, ரிசீவரை காதுக்கு கொடுத்தேன்.
ஒரு ரிங்…ரெண்டு ரிங்…’மடையா எடுடா..’
‘ஹலோ’ மறுமுனை
‘ஹலோ! பிரபுவா?’ நான்
‘ஆமா! சுபாதானே?’ பிரபு
‘ஆமா! எப்படிடா இருக்க?’ நான்
‘ரொம்ப முக்கியம். என்ன விசயம் சொல்லு!’ பிரபு
‘என்னடா ரொம்ப சூடா இருக்க போலிருக்கு, ம்..ம்..சரி..முரளியை எப்படி பிடிக்கிறது?’ நான்
‘வாட்?’ பிரபு
‘இல்லப்பா! முரளியை எப்படி கான்ட்டாக்ட் பன்றதுன்னு கேட்டேன்?’ நான்
‘நீ எதுக்கு அவனைக் கான்ட்டாக்ட் பண்ணனும்?’ பிரபு
‘இன்னிக்கு காலையில, நித்யாவும் முரளியும் வெளியில போனாங்க, இன்னும் வரலை! மதியம் 2 ஆச்சு, அவங்க அம்மா தேடறாங்க! அதான் கேட்டேன்! நீ என்னமோ ரொம்ப பிகு பண்ணற’ நான்
சிறிது மவுனம். பிறகு லைன் துண்டிக்கப்பட்ட சத்தம்.
எனக்கு ஏமாற்றம். கோபமும் கூட. ‘இவன் ஏன் இப்படி பண்றான், ஸ்டுப்பிட்’ ரிசீவரை வைத்தேன்.

**

9
நான்=கணேஷ்

திருவேங்கடம் இங்கிட்டும் அங்கிட்டுமாக நடந்து கொண்டிருந்தான். திருவேங்கடமா? யாரு அதுன்னு யோசிக்கிறீங்களா? அதுதாங்க, நம்ம குழந்தை! ஹி..ஹி..

குழந்தை, நித்யா-முரளி க்கு ஒரு வழி யோசித்துக் கொண்டிருந்தான். அறையில் மதன், நான்,குழந்தை,கார்த்திக் ஆகியோர் இருக்கிறோம்.
குழந்தை தொல்லை தாங்கமுடியல. ஐடியா தருகிறேன் பேர்வழி என்று எதையாவது ‘அச்சு பிச்சு’ ன்னு உளறார்.
‘இப்படிப் பண்ணா என்ன? பேசாமா நித்யாவை முரளி வீட்லையும் முரளியை நித்யா வீட்லையும் வேலை செய்ய சொல்வோம். அப்புறம் நித்யா வீட்ல முரளியையும், முரளி வீட்ல நித்யாவையும் புடிச்சுப் போயிரும். அப்புறம் என்ன சுபம் தான்’ குழந்தை.
‘என்ன படம் முடிஞ்சிருச்சா! ஏன் குழந்தை நீ வேற படுத்தற? எரிச்சலக் கிளப்பாம கொஞ்சம் சும்மா இருக்கியா?’ நான்
‘அதெப்படி நாம பேசாம இருக்கிறது, நம்ம பிரண்டோட வாழ்க்கை இல்லியா?’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.

**

10
நான்=கணேஷ்
‘டேய் எல்லோரும் இருக்கீங்களா? எங்கடா போய் தொலைஞ்சீங்க?’ நல்ல போதையில் பிரபு வந்தான்.
நான் பிரபுவைப் பார்த்து, ‘ என்னடா பிரபு? எப்பவுமே இங்க வந்து தானே ஏத்துவ? இன்னிக்கு ஏத்திக்கிட்டு அப்புறம் இங்க வந்திருக்க?’ என்று கேட்டேன்.
பிரபு, ‘உஷ்…நீ பேசாத!’ விக்கல் ‘நீ கூட..நீ கூட..என்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட பார்த்தியா?
நான், ‘டேய்..நித்யா உன் பிரண்டு, உனக்கு தெரியும்னு நினைச்சேன்’
‘பிரண்டு..பொல்லாதா பிரண்டு..அவளை நான் என் பிரண்டு மாதிரியாடா வெச்சிருந்தேன்..இங்க டா..இங்க வெச்சிருந்தேன் அவளை’ பிரபு இதையத்தைக் காட்டினேன்.
எனக்கு விளங்கியது.
‘என்னடா சொல்ற மச்சான்?’ மதன்
‘என்ன நொன்னாடா சொல்ற? அதான் சொன்னேனே, இதயத்தில வெச்சிருக்கேன்னு. யெஸ். ஐ லவ் ஹெர்! அதுக்குள்ள இந்த முரளி பய வந்து ஆட்டைய களைச்சுட்டான்’ விக்கல்.
நாங்கள் விக்கித்து நின்றோம்.
‘ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டக் கெடுக்கும்னு சும்மாவா சொன்னானுங்க, ஊமை மாதிரி இருந்திட்டு என்னென்ன வேலை பண்ணியிருக்கான் பாரு இந்த முரளி. அவனுக்கு துணை இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்துக்கு தலைவர்..கணேஷ்’..என்னைப் பார்த்து கண்ணை உருட்டினான், பிரபு.
‘நான் ஒரு வேளை செத்தா, என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் அப்படீன்னு லெட்டர் எழுதி வெச்சிருக்கேன். கவிதை கூட எழுதிருக்கேன். படிக்கவா?’ பாக்கெட்டைத் துளாவி ஒரு லெட்டர் ஒன்றை எடுத்தான்.
எனக்கு திக்கென்றது. கவிதைக்காக் அல்ல.
‘நீ எதுக்குடா சாகனும்?’ நான்.
‘டேய் மடையா, மனுசனா பிறந்தா, சாகறது உறுதிடா. அதுவும் ரெண்டு புல் பாட்டில் பூச்சிக் கொல்லி மருந்து குடிச்சா கண்டிப்பா குளோஸ் டா..ஹா..ஹா..’ சிரித்துக் கொண்டே சரிந்தான் பிரபு. வாயில் லேசாக நுரை.
‘ஐயையோ…விளையாட்டு வினையாகிடுச்சேடா! தூக்குங்கடா தூக்குங்கடா’ பதறிக்கொண்டு தூக்கினோம்.

**

11
நான்=நித்யா

இன்று காலை எழுந்து குளித்து விட்டு, என்னுடைய கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தேன். நாளைக்கு அஸைன்மென்ட் வைக்க வேண்டும். இன்று புரோகிராம் எழுதி டெஸ்ட் செய்ய வேண்டும். தெண்டப் பசங்க, நாளைக்கு என்னைப் பார்த்துதான் காப்பியடிப்பானுங்க. பவர் பட்டனை ஆன் செய்தேன். கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை. ஆப் செய்து ஆன் செய்தேன்..ம்..ஹ¤ம்…பூட் ஆகவில்லை..போனதடவை..இது மாதிரி ஆனப்போ கணேஷ் தானே சரி செய்து கொடுத்தான்.
கணேஷ் நம்பரை சுழற்றினேன்.
கணேஷின் அப்பா எடுத்தார். ‘ஹலோ..யார் பேசறது?’
‘கணேஷ் இருக்காறா?’
‘நீ யாரும்மா?’
‘நான் கணேஷோட பிரண்ட் நித்யா.’
‘ஓஹோ…!! டேய் கணேஷ் ஓடியாடா! எதோ பொண்ணு பேசுதுடா..ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்..’ சிரித்தார்
கணேஷ் போனை வாங்கி பேசினான்.
‘என்ன நித்யா?’

**

12
நான்=கணேஷ்
அப்பாவிடமிருந்து போனை வாங்கினேன்.
‘என்ன நித்யா?’
‘என் கம்ப்யூட்டர் பூட் செய்யலடா. ஏதோ ப்ராபளம் போல் தெரியுது!’ என்றாள்
நான் சில சிம்ட்டம்ப்ஸ் (symptoms) கேட்டும் எனக்கு புலப்படவில்லை, சரி வீட்டிற்கே வருகிறேன் என்று சொல்லிவிட்டு, முரளி இதில் எக்ஸ்பேர்ட் என்பதால் அவனையும் வருமாறு அழைத்துக் கொண்டேன். நானும் முரளியும் நித்தியா வீட்டிற்கு சென்றோம்.

**

13
நான்=முரளி
நித்யா வீட்டிற்கு சென்றும் ஒன்றும் பிரையோஜனம் இல்லை. எங்களுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. எனவே புராஸஸரை எடுத்துக் கொண்டு செர்வீஸ் ஸ்டேசன் போகலாம் என்று முடிவு செய்தோம். நித்யாவும் ‘நானும் ஹார்டுவேர் கத்துக்கணும் அடுத்த முறை உன்னைக் கூப்பிடவேண்டாம் பாரு, அதனால நானும் வருவேன்’ என்று அடம் பிடிக்கவே அவளையும் அழைத்து சென்றோம். செர்வீஸ் ஸ்டேசனில் நேரமாகும் என்று சொல்லவே, நித்யாவை அனுப்பிவிட்டோம்.
சிறிது நேரம் கழித்து, அவர்கள் நாளைக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லவே, இந்த தகவலை நித்யாவிடம் சொல்ல std பூத்திற்கு சென்றோம். பையன் நம்பரைக் குறித்துக் கொண்டான்.

**

14
நான்=மதன்
ஆம்புலன்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. பிரபு அரை மயக்கத்திலிருந்தான். பல்ஸ் இருந்தது. நாங்கள் செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.
‘டேய்..பிரபு’ நான்
‘ம்ம்..ம்ம்..ய்..ய்..யா..யாலு இது..நி.நி..நி..ல்த்யா..வ.கூல்ட்டிட்டுவா’
‘டேய் நான் மதன்டா. என்னை மன்னிச்சிடுடா. நீ கேர்ள் பிரண்டு அது இதுன்னு பிலிம் காட்டினதால உன்னை உன் டியர் பிரண்டோட சண்டை போட வைக்கலானுதான் பிளான் போட்டோம். நான் தான் உன்கிட்ட முதன் முதலா சொன்னது! ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடா!’
சைரன் ஒலி காதைப் பிளந்தது.
‘ப்ளீஸ் சாரிடா!’ கணேஷ்
‘ம்….ம்…ல்ல்…ல்..’ பிரபு முனகினான்
‘மன்னிச்சிட்டேன்னு சொல்றா’ நான்
‘ம…ன்..ல்…னி..ச்…சி..ட்..ட்…ட்..டே….ன்…’
‘சரி! அந்த லெட்டர் எங்கேடா வெச்சிருக்க!’ நான் துலாவினேன்.
மடேர் என்று அடி விழுந்தது.
பிரபு எழுந்து உட்கார்ந்தான்.
‘அட பாவி! நான் உயிருக்கு போறாடிக்கிட்டிருக்கிற நேரத்திலும் உனக்கு லெட்டர் தான் முக்கியமா?’ Driver sir அம்புலன்ஸ நிறுத்துங்க! எனக்கு ஒன்றுமில்லை! ஐயாம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்! பிரபு.
எங்களுக்கு நிலைமை விளங்கி, அவனை மொத்த ஆரம்பித்தோம்.

**

15
நான்=பிரபு

நாங்கள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். ஆளுக்கொரு மூலையில். குழந்தை வந்தான்.
‘அடடே..பிரபுவா? வாடா! ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் வந்திருக்க?’
ம்ம் என்றேன்
‘ஆமா..உனக்கு மேட்டர் தெரியுமா?’
‘என்ன?’ நான்
‘நம்ப நித்தியும்…’
‘நித்தியா? யாரு அது?’
‘அதாண்டா உன் பிரண்டு நித்யா!’
‘ம்ம்.ம்ம்’
‘உன் பிரண்டு நித்யாவும். நம்ப முரளியும் லவ் பண்றாங்களாமே!! நித்தி வீட்ல..மாப்ள பார்த்துட்டாங்களாம்..அவங்களைச் சேர்த்து வைக்க நீதான் ஐடியா ஏதாவது கொடுக்கனும்’
நான் கணேஷைப் பார்த்தேன். கணேஷ் மதனைப் பார்த்தான். கணேஷ் முரளியை பார்த்தான். முரளி என்னைப் பார்த்தான்.
குழந்தைக்காக நான் ஐடியா யோசிக்க ஆரம்பித்தேன்.

******************************************************************************

விதிகள்

விதிகள் என்பன யாவை? விதிகளை வகுப்பது யார்? விதிகளை தவறாமல் பின்பற்றுபவர்களும், தவறாமல் மீறுபவர்களும் யாவர்? பின்பற்றுபவர்களுக்கு என்ன கிடைக்கிறது? மீறுபவர்கள் என்ன இழக்கிறார்கள்? விதிகளை மீறினால் தண்டனை நிச்சயமா? விதிகளை மீறுபவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கிறதா? தண்டனை என்பது என்ன? இதுபோன்ற சில அதிமுக்கியமான கேள்விகள் என் தலையைக் குடைவது எதற்காக? கேள்விகள் சில சமயங்களில் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக்கொண்டு, கடும் புகை கக்கிச் செல்லும் தொடர்வண்டியாகின்றன. பல சமயங்களில் அந்த புகை பெறும்பாலும் ஆக்ஸ்சிஜனாகவே இருப்பது தான் ஆச்சரியம்.

ஒரு வீட்டில் ஒன்றாய், இரத்த பந்தங்களாய் வாழ்பவர்களே பல சமயங்களில் விட்டுக் கொடுக்க மறக்கிறார்கள், மறுக்கிறார்கள். அவர்கள் ஒருமித்த ஒத்தக் கருத்தை அடைவது என்பது பெரும்பாலும் பகற்கனவே. பகற்கனவு பலிக்காதா என்று என்னிடம் எதிர்கேள்வி கேட்காதீர்கள். பலிக்காதுதான் அதுதான் விதி. கற்பிதம். அவ்வாறு இருக்க யாரோ ஒருவர் எப்பொழுதோ விதித்த விதிகளை அனைத்து மக்களும் ஒருசேரக் கட்டிப்பிடித்து கடைப்பற்ற அல்லது கடைப்பிடிக்க ஒத்துக்கொள்வது எவ்வாறு சாத்தியமாகிறது? தீர விசாரித்துப் பார்த்து அதன் ரிஷிமூலத்தைத் தொடர்ந்தோமேயானால், அந்த விதி யாரால் எப்பொழுது இடப்பட்டது, என்பதே புரியாமல், தெரியாமல், ஐன்ஸ்டினின் ரிலேடிவிட்டித் தியரியை ஸ்பெசல் டியூசன் வைத்து படித்தும் புரியாமல் முழிக்கும் மாணவனைப் போன்றே முழிக்க வேண்டிவரும்.

காலங்கள் மாறுகின்றன. தெய்வங்களும் தான். அந்தக் காலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். கொற்றவை என்ற தெய்வம் இப்பொழுது எங்கே இருக்கிறது?

தூய்மைக்கு அளவுகோல் எதேனும் உண்டா? அவ்வாறு அளவுகோலைத் தயாரிக்க வேண்டுமெனில் தூய்மையை விளக்கத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? தூய்மை வெறும் பறத்தூய்மை மட்டுமா? அல்லது அகத்தூய்மையையும் சேர்த்தது தானா?

சப்பானியர்களிடம் சொல்லி, மனிதன் அருகில் வந்தவுடன், அவன் தூய்மையை கண்டுபிடித்து, மூக்கைப் பிடித்துக் கொள்ளும், அல்லது வாந்தி எடுக்கும் அல்லது ஒரே ஓட்டம் பிடிக்கும் ரோபோட்டுகளை செய்யச் சொல்லலாம் தான். அதை வாங்கி தமிழகத்தில் மற்றும் கேரளாவில் இருக்கும் அனைத்துக் கோவில்களுக்கும் கொடுத்து விடலாம் தான். அதையும் மீறி அசுத்தமான மனிதனோ, மனுசியோ அல்லது நடிகையோ நுழைந்து விட்டாலும், அந்த தோஷத்தைப் போக்க, உடனுக்குடன் என்ன யாகம் செய்யலாம், எத்தனை அபராதம் விதிகலாம் என்று சொல்லும் ரோபோவையும் செய்யச் சொல்வது தான் அதி முக்கியம். அவ்வாறு செய்வதால் அசுத்தமான யாவரும் கோவிலுக்குள் புகாமல் தடுத்துவிடல்லம் தான். ஆனால் மனத்தூய்மையை எவ்வாறு அளப்பது? விதிகள்? அதுசரி, சில கண்ணப்பநாயனார்களை வைத்துக் கொண்டு புறத்தூய்மையையே விளக்க அல்லது வகுக்க முடியாமல் திணறும் பொழுது, அகத்தூய்மையின் விதிகளை யார் அளப்பது?

கோவிலுக்குச் செல்லும் பொழுது அனைவரும் ரேஷன் கார்டைக் கொண்டு வரவேண்டும் என்று சட்டம் இயற்றலாம். அப்படி செய்தால் சில் மீரா ஜாஸ்மின்களை கோவிலுகுள் புகுந்துவிடாமல் தடுத்துவிடலாம் தான், ஆனால் ரேஷன் கார்டில் அடையாளத்திற்கு புகைப்படம் கிடையாதே? மீரா ஜாஸ்மின், நயந்தாராவின் ரேஷன்கார்டை காண்பித்தால் என்ன செய்வது? அது சரி, நயன் தாராவை யாராவது தெரியாமல் இருப்பார்களா என்ன?

பேசாமல், இப்படிச் செய்தால் என்ன? வாக்களர் அடையாள அட்டை? ஏன் சிரிக்கிரீர்கள்?

பின் குறிப்பு:
மீராஜாஸ்மீன் மீது வழக்குத் தொடர்ந்தவர்கள் யாராயினும் :
அஞ்சப்பர் உணவு விடுதியில், மட்டன் சுக்காவை ஒரு கட்டு கட்டிவிட்டு, நேரே சிவன் கோவிலுக்குச் செல்லும், சிவனின் கண்மூடித்தனமான பக்தன் ஒருவன் எங்கள் ரூமில் இருக்கிறான். கேட்டால் கண்ணப்பனாயனாரைக் காட்டுகிறான். வந்தால் கேஸ் ஒன்று நிச்சயம். ஆனால் ஒன்று, அவன் நடிகையோ, நடிகனோ இல்லை!

கவனம் தேவை, பெரியவர்களே!

நேற்று சன் டீவியில் மாதவன் நடித்த ‘நளதமயந்தி’ திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நகைச்சுவை. இதை நகைச்சுவை என்றும் வைத்துக் கொள்ளலாம் அல்லது கிரேஸி மோகனின் சிந்தனைத்திறன் என்றும் வைத்துக்கொள்ளலாம்.மாதவன் குக்கிராமத்திலிருந்து ப்ளைட்டில் ஆஸ்திரேலியா செல்வார். அதுதான் அவரது முதல் ப்ளைட் பயனமாக இருக்கும். டிக்கெட் பரிசோதகர் மாதவனின் ப்ளைட் டிக்கெட்டைப் பரிசோதித்துவிட்டு, தான் இன்னும் ப்ளைட் ஏறியதில்லை என்பதை ‘ஏர்போர்ட்ல இருக்கேன்னு தான் பேரு ஆனா நானே இன்னும் ப்ளைட் ஏறியதில்லை, அதுசரி மாடிப்படி மாடி ஏறுமா?’ என்பார், டிக்கெட்டை வாங்கிக் கொண்டே மாதவன் எஸ்களேட்டரைப் பார்ப்பார், பிறகு ‘இல்லையே மாடிப்படி மாடி போறதே!!’ என்பார்.இந்த நகைச்சுவைக்கு வேண்டுமானால் சிரிக்கலாம், ஆனால் கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள், கண்டிப்பாக சிரிக்க இயலாது.

பெரியவர்கள் மாடி ஏற எஸ்களேட்டரைப் பயன்படுத்தும் பொழுது மிக மிக கவனமாக இருக்கவேண்டும். கண்டிப்பாக உடன் வருபவர்களையோ அல்லது அங்கே அருகில் இருப்பவரையோ உதவிக்கு அழைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் கண்டிபாக லிப்டைத் தான் பயன்படுத்தவேண்டும். கவனம் தேவை, பெரியவர்களே!இது சின்னக் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

நையாண்டித் திலகங்கள்

இன்று நூலகத்தின் குறிப்பு (Reference Section) பகுதியில் புத்தகங்களை, எந்தவித நோக்கமும் இல்லாமல், பார்த்துக்கொண்டிருந்த பொழுது, புதுமைப்பித்தனின், ஆ.இரா.வெங்கடாசலபதி, தொகுத்த கட்டுரைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. அவரே தொகுத்த புதுமைப்பித்தனின் கதை தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது. சமீபகாலமாக நான் புதுமைப்பித்தனிடம் ஈர்க்கப்பட்டு அல்லது கவரப்பட்டு, வருவதற்கு இது தான் காரணம். புதுமைப்பித்தனைப் படித்தப் பிறகு, இன்று வரை நான் படித்து புகழ்ந்துவந்த தமிழ் எழுத்தாளர்களை கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுதியைப் புறட்டும் பொழுது, குலோப்ஜாமுனுடன் காதல் / பாரதியும் போலீசும் என்ற கட்டுரைகளை வாசித்தேன். மிகுந்த நையாண்டியும் அதே சமயத்தில் உண்மை நிலவரத்தையும் ஒருசேர கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். 1933இல் வெளிவந்த இந்த கட்டுரைகள் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாகவே உள்ளது. காலம் மாறவில்லையா?’தெரியாததைப் பற்றி சொல்வதுதான் அறிவுடைமை’ என்று தற்காப்பிற்காக சொல்லிவிட்டு கட்டுரையை ஆரம்பிக்கிறார். காதல் அவருக்கு தெரியாதா? தெரியவில்லை. 1940களில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஸ்டாலினைப் பற்றி கட்டுரை எழுதியவருக்கு, ‘காதல்’ பற்றி தெரியாதென்பது, கிட்டத்தட்ட, முட்டாள்தனம் தான். காதலை மிகவும் அனுபவித்தவர் என்பதை அவருடைய ‘செல்லாம்மாள்’ கதையைப் படித்தவர்கள் உணரலாம்.

வெகுஜனங்களுக்கு புரிய வேண்டும் என்றால் அவர்களுக்கு தெரிந்த விசயத்தைக் கொண்டு விளக்க வேண்டும் என்று காதலை விளக்க குலாப்ஜாமுனை தேர்வு செய்திருக்கிறார். காதலிப்பவனுக்கு உலகில் எல்லாமும், எல்லாப் பொருளும் தன் காதலியாகவே தெரியுமாம். கம்பன் இராமன் மேல் கொண்ட தீராத காதலினால் தான் இராமனை கல்லும், மண்ணும், மண்ணாங்கட்டியும் காதலித்ததாக எழுதியிருக்கிறார் என்றும் கம்பன் மீது பாய்கிறார். தீராநதியில் சிறிது நாளைக்கு முன்னர் இராமனையும் சீதையையும் வைத்து, பின் நவீநத்துவத்தால் பாதிக்கப்பட்ட, திடுக்கிடும் கதை ஒன்று படித்தேன். இராமனையும் சர்சைகளையும் பிரிக்கமுடியாது.

‘காதல் செய்யும் பொழுது, நாம் காதலிக்கும் பொருளும் நம்மை பதிலுக்கு காதலிக்க வேண்டும்’ என்ற உண்மை விதியை முன்வைக்கும் புதுமைப்பித்தன், பிறகு, ‘இது குலாப்ஜாமுன் விசயத்தில் சாத்தியமில்லை’ என்று சொல்கிறார். உண்மைதான்.

பாரதியும் போலீசும் [வேறு தலைப்பினல் கூட இருக்கலாம்] என்ற கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்த பொழுது என்னையும் அறியாமல் சிரித்துவிட்டேன். அருகே அமர்ந்து ‘தமிழ் இலக்கிய வரலாறு’ படித்துக் கொண்டிருந்த ஒருவர் என்னை விசித்திரமாகப் பார்த்தது வேறு கதை. உண்மையில் பாரதியார் போலீசுக்கு நண்பரா? அதில்லை விசயம். புதுமைப்பித்தனின் நையாண்டியின் உச்சக்கட்டம் இந்தக் கட்டுரையைக் கூறலாம். பாரதியை கரைத்துக் குடித்தவர் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

பாரதியின் சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை அன்றைய போலீசுடன் [ஏன் இன்றைய போலீசுடன்] ஒப்பிட்டுள்ளார். ‘கோல் கொண்டு வாழ்’ என்ற பாரதியின் வரிகளை போலீசின் கைத்தடியுடன் ஒப்பிடுகிறார். மேலும் ‘ரௌத்திரம் பழகு’ ‘(பிறர்) துன்பத்தை மற’ இதில் பிறர் என்பது அவரே இணைத்துக் கொண்டது போன்ற ஆதாரங்களை காட்டுகிறார். இவ்வாறு போலீசை ஆதரித்தே கவிதையினை எழுதியிருக்கிறார் என்கிறார். சரி, நான் எதற்கு சிரித்தேன், ‘நையப் புடை’ என்ற பாரதியின் வரிகளை படித்தபொழுது. நையாண்டித் திலகம் தான் நமது புதுமைப்பித்தன்.

**

சன் டீவியில், செவ்வாய் தோறும் ஒளிபரப்பாகும் ‘டாப் டென்’ நிகழ்சியின் மறு ஒளிபரப்பில், சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை தழுவி நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர். சேரன் எத்தனை தவமிருந்து படத்தில் வரும் ‘அப்பா’ கதாப்பத்திரத்தை படைத்திருப்பார் என்று தெரியவில்லை, ஆனால் இந்த நிகழ்ச்சியில் வந்த ‘அப்பா’வை குடிகாரனாகவும், பல பெண்களிடம் தொடர்பு வைத்திருப்பவனாகவும் காட்டியிருக்கிறார்கள். சிரிப்பிற்காகத் தான். நகைச்சுவை மட்டும் தான்.

சேரன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து சிரிப்பாரா என்று தெரியவில்லை, ஆனால் இந்தப் படத்தை மிகவும் ரசிக்கும் என் நண்பன் ஒருவன், மிகுந்த சோகத்தோடு அல்லது கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். சத்தியராஜ் ஒரு படத்தில், விஜய்யின், ‘எங்கம்மா உங்கம்மா நம்ம சேர்த்துவப்பாளா?’ (கண்றாவி!) என்ற பாடலை கேலி செய்திருப்பார், அதற்கப்புறம் விஜய்யின் அந்தப் பாடலைப் பார்க்கும் பொழுதெல்லாம் சத்தியராஜ் ஆட்டம் தான் நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து சிரிப்பும் வருகிறது. பின் தொடரும் சிரிப்பின் குரல்?

‘தவமாய்த் தவமிருந்து’ படம் எனக்கும் பிடித்த படம்தான். ஆனால் நான் மட்டும் தான் நிகழ்ச்சி முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மறுபடி பார்க்கும் பொழுது, டாப் டென் நிகழ்ச்சி ஞாபகம் வருமா என்று தெரியவில்லை.

ஒரு கதையை எழுதி அதில் மக்கள் மனதில் என்றென்றும் நிற்கும் கதாப்பாத்திரங்களை படைத்து தெளிந்த திரைக்கதையையும் இனிய இசையும் சேர்த்து அதை வெற்றிப்படமாக கொடுப்பதென்பது மிகக் கடினமான விசயம். அதை சேரன் செய்துகாட்டியிருந்தார். ம்ம்..ஏனோ சிலருக்கு வாழ்க்கை மிகக் கடினமாகவும், சிலருக்கு மிக எளிதாகவும் இருக்கிறது.

**

கிணறு – சிறுகதை

மே, 14, 1993.

‘அண்ணா, எப்பண்ணா போவ?’ கேட்டான் என் தம்பி பிரகாஷ். மதிய உணவு முடித்து, அனைவரும் சிறிய உறக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். நான் மதியங்களில் தூங்குவதில்லை. அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில். எங்களுக்கு, விடுமுறை நாட்கள் தோறும் காளியம்மன் கோவில் திடலில் கிரிக்கெட் ஆடியே தீரவேண்டும். விளையாடி விட்டு வீட்டுக்கு வரும் வேளையில் அப்பா இருந்தால் நிறைய திட்டுகள் வாங்க வேண்டிவரும். பரவாயில்லை விளையாட்டிற்காக பெற்றுக் கொள்ளலாம். எங்கள் குழுவில் மொத்தம் ஒன்பது பேர். கணேஷ், செல்வா, ஆனந்த், சரவணன், ராஜன், பிரதாப், சிவா மற்றும் நான். +2 தேர்வு எழுதிவிட்டு கல்லூரிக் கனவுகளோடு இருக்கிறாம். இன்று தான் தேர்வு முடிவுகள் வெளியாயின. சரவணனைத் தவிற அனைவரும் தேர்ச்சிபெற்றுவிட்டோம். சரவணன் தவறியது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமே.’பொருடா, அப்பா தூங்கப்போகட்டும்’ என்று என் தம்பிக்கு பதில் கூறினேன். ‘அண்ணா, நானும் இன்னைக்கு வரவா? நேத்து மாதிரி இன்னைக்கும் நீச்சல் பழகித்தருவியா?’

காளியம்மன் கோவில் திடல் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வயல் வெளி சூழ மிக அழகாக அமைதியாக இருக்கும். மனித நடமாட்டம் அதிகமாக இராது. ஊரைவிட்டு வெளியேறி மசூதியைத் தாண்டி, மிகுந்த நாற்றத்தோடு ஒரு நத்தையைப் போல ஊர்ந்து கொண்டிருக்கும் குண்டாற்றின் சிறிய பாலத்தைக் கடந்து, வன்னான் பாறையில் இறங்கி, கணுக்கால் அளவுத் தண்ணீரில் நடந்து, பாறைகளில் ஏறி, இறங்கி, காளியம்மன் திடலுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஏறும் இடத்தில் கிணறு ஒன்று இருக்கிறது. நாயக்கர் கிணறு என்று அதற்குக் பெயர். எங்களுக்குத் தெரிந்த வகையில் இது தான் இந்த வட்டாரத்திலே பெரிய கிணறு. எனக்கு நினைவு தெரிந்து கிணற்றில் தண்ணீர் வற்றியது கிடையாது. மழைக் காலங்களில் நல்ல ஆழமானதாக இருக்கும். நாங்கள் விளையாடிவிட்டு இந்தக் கிணற்றில் தான் குளிப்பது வழக்கம்.கிணற்றில் இறங்குவதிற்கு கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் பதிக்கப்பட்ட கற்களால் ஆன படிகள் உண்டு. ஆனால் பல சமயங்களில் நாங்கள் இறங்குவதில்லை, கிணத்துமேட்டிலிருந்து ஒரே ‘சொர்க்’ தான்.

‘ம்ம்..ஆனால் உன்னை இன்னைக்கு அம்மா விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன்’ சொல்லிமுடித்ததும் அம்மாவின் குரல் கேட்டது ‘பிரகாஷ், இங்க வந்து படு’. அவன் என்னை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டே, ‘அம்மா, நான் அண்ணாவோடு கிரிக்கெட் ஆடப் போறேன்’, என்று சொன்னான். ‘வந்தேன், அடி பிச்சுருவேன், கிரிக்கெட் ஆடப் போறேன்னு கிணத்துல நீச்சப் பழகியிருக்க, ராத்திரியெல்லாம் ஒரே கத்தல்! ஒழுங்கா வந்து படு!’ அம்மாவின் அதட்டலுக்குப்பயந்து, எழுந்து சென்றான் பிரகாஷ்.

ராஜாவின் வீட்டில் எங்கள் குழு கூடியது. சரவணனைத் தவிற அனைவரும் ஆஜர். பாஸாகிவிட்ட சந்தோஷம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது.ராஜாவின் வீடுதான் கிரிக்கெட் மட்டை, ஸ்டம்ப்,பேட் வைக்கப்படும் இடம். ஆளுக்கு ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு போருக்குச் செல்வதைப் போன்று காளியம்மன் திடலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.சிரித்துப் பேசிக் கொண்டே வந்தவர்கள் ஏனோ சரவணனின் வீட்டைக் கடக்கும் பொழுது மட்டும் மிகுந்த அமைதியைக் கடைப்பிடித்தோம்.

மணி ஆறைத் தொட்டு விட்டது. பொழுது சாயத்தொடங்கு வெகு நேரமாகிவிட்டது. ஆனால் யாரும் கலைப்படைந்ததாய்த் தெரியவில்லை. கிரிக்கெட்டில் இது ஒரு வசதி. கால்ப் பந்தைப் போலவோ, ஹாக்கியைப் போலவோ, கூடைப்பந்தைப் போலவோ ஆட்டம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ராஜா கீழே குணிந்து கொள்ள அடுத்த ஆட்டத்திற்கு, பேட்டிங் வரிசை, அவன் முதுகில் விரல்களால் எண்கள் காண்பித்து கேட்கப்பட்டது. நான்தான் முதலாவதாக பேட் செய்ய வேண்டும். எனக்கு ஸ்பின் ஆடப் பிடிக்கும். எங்கள் குழுவிலேயே நன்றாக ஸ்பின் பவுலிங் செய்பவன் சரவணன் மட்டுமே. அவன் வராதது எனக்கு ஏக்கத்தையே அளித்தது. ஏனோ ஆட்டத்தில் கவனம் இல்லாது இரண்டாவது பந்திலே கிளீன் போல்டு ஆகினேன்.

இருள் கவியத் தொடங்கிய போது நாங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டு நாயக்கர் கிணற்றை நோக்கி நடந்தோம். ஏனோ எப்பொழுதும் இருக்கும் உற்சாகம் இன்று இல்லை. மற்றவர்கள் ‘பை’ சொல்லிக் கிளம்ப, நானும் ராஜாவும், செல்வாவும், ஆனந்தும் மட்டுமே மிஞ்சினோம். ராஜாவும், செல்வாவும் ‘சொர்க்’ அடிக்க, நானும் ஆனந்தும் படிகள் வழியே இறங்கினோம். தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தது.

தண்ணீரில் இறங்கிய உடன் உற்சாகம் தானாக வந்து தொற்றிக்கொண்டு விடுகிறது.சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆனந்த் கையில் மணலை வைத்துக் கொண்டு ‘இதோ பார் நான் தரையைத் தொட்டுவிட்டேன்’ என்று ஆர்பாட்டம் செய்துகொண்டிருந்தான். செல்வா பதிலுக்கு நானும் எடுத்துவருகிறேன் பார் என்று தண்ணீருக்குள் பாய, ‘யார் முதலில் மணல் எடுத்து வருகிறார்கள்’ என்ற போட்டி ஆரம்பமாகியது. எற்கனவே மணல் எடுத்து வந்திருந்ததால், ஆனந்த், எங்கள் தண்ணீ கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டான்.கல் படியில் அவன் உட்கார்ந்து கொள்ள, நாங்கள் மூவரும் தண்ணீருக்குள் பாய்ந்தோம்.

தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பொழுது, உலகப் பேரிரைச்சல்களிடமிருந்து விடுபட்டு மனம் அமைதிகொள்ளவே செய்கிறது. நான் தான் முதலில் வந்தேன். ஆனந்த் 110 எண்ணியிருந்தான். 130இல் செல்வா வந்து சேர்ந்தான். 150 வரையில் ராஜா வரவில்லை. 160 ஆயிற்று. நாங்கள் மூவரும் நிசப்தமாக தண்ணீரில் எழும் சிற்றலைகளையே வெறித்துக் கொண்டிருக்க, தாடலென்று மூச்சிரைக்க தண்ணீரிலிருந்து வெளிப்பட்டான் ராஜா. நாங்கள் ஹே வென்று சொல்லிவைத்தார் போல் கத்தினோம். ராஜா தட்டுத் தடுமாரி படியில் வந்து உட்கார்ந்தான். அவன் முகம் வெளிரியிருந்தது. கைகளும் கால்களும் நடுங்கியவன்னம் இருந்தன. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மலங்க மலங்க விழித்துக் கொண்டு இருந்தான். கையில் மணல் இல்லை. எங்களைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தவன் வார்த்தை கிடைக்காமல் திக்கித் திணரிக் கொண்டிருந்தான். ‘டேய்..ட்…ட்..டேய்..கீ..கீ…கீழே..கீழே..ப்..ப்..பொ..பொணம் டா’ என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டான். நாங்கள் விக்கித்து விட்டோம். ‘டேய்..ராஜ்..எதையாவது பார்த்து பயந்திருப்ப! செடி கொடியாக இருக்கும்!’ என்றான் செல்வா. ‘இல்..இல்லடா…நான் பார்த்தேன்..கால்..வி..விரல் தெரிந்..தது!’ அவன் சொல்வதை முற்றிலும் நாங்கள் நம்பவில்லையென்றாலும், சற்று பயமாகத்தான் இருந்தது. செல்வா, ‘டேய்..நாம போய் பார்த்துட்டு வருவமா?’ என்றான்.நான் சரியென்றேன். ராஜ் தடுத்தும் நாங்கள் கேட்கவில்லை.

பயத்துடன் முங்கு நீச்சல் அடிப்பது மிக மிக கடினம். தண்ணீருக்கு அடியில் நிலவும் அசாதாரண அமைதி மேலும் பயத்தை அதிகரித்தது. செல்வாவின் இருதயம் துடிப்பது கூட எனக்கு கேட்பது போல இருந்தது. திரும்பி விடலாம் என்று நினைத்த பொழுது, அதோ சுமார் ஐந்தடி தூரத்தில் புதர்களுக்கு நடுவே கால்விரல்கள் தெரிந்தன.ஒரு நிமிடம் கண்கள் சுழல ரத்த ஓட்டம் அதிகரித்தது. இருதயம் 1000 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ஒடிக்கொண்டிருந்தது.சிவப்புச் சட்டையும் தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த என்னை செல்வா கையை பிடித்து இழுத்து சுயநினைவுக்குக் கொண்டுவந்தான்.

மேலே வந்து பார்த்தால் ஆனந்தும், ராஜும் சட்டை,பேண்ட்களை மாட்டிக் கொண்டு தயாரக நின்றுகொண்டிருந்தனர். நாங்கள் வேக வேகமாக படிகளில் ஏறினோம். நடுக்கத்தால் படிகள் முன்பைவிட வழுக்குவதாகவேபட்டது. மேலே ஏறி கைகள் நடுங்க பேண்ட்களை போட்டுக் கொண்டோம்.யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. வழிநெடுக அமைதி. பிரியும் பொழுது, ‘யார்கிட்டையும் சொல்லாதீங்க’ என்றேன், எதோ சொல்லவந்த செல்வா, ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினான்.

வீட்டிற்குள் நுழையும் பொழுது அப்பா வந்திருந்தார். ஏனோ ஏதும் கேட்கவில்லை.துண்டை எடுத்து தலை துவட்டிக் கொள்ளும் பொழுது ‘அம்மா காப்பி வெச்சிருக்காடா,உன்னை சரவணனின் அம்மா தேடிட்டுப் போனாங்க’ என்றார். நான் காபியை ஒரெ மடக்காகக் குடித்துவிட்டு, சரவணன் வீட்டிற்குச் சென்றேன்.

சரவணனின் அம்மா மட்டுமே இருந்தார்கள்.’சரவணன் உன்கூட விளையாட வந்தானாப்பா?’ என்றார்கள். ‘இல்லையே ஆன்ட்டி, ஏன்?’ ‘மதியத்தில இருந்து காணல அதான்.நாம போய்த் தேடிட்டு வருவமா?’ ‘எங்காவது ப்ரண்ட்ஸ் வீட்டில இருப்பான் ஆன்ட்டி. நீங்க இருங்க, நான் போய்ப் பார்த்துட்டு வாரேன்’ ‘இல்லப்பா. நானும் வாரேன். அப்படியே அவங்க அப்பாவுக்கும் போன் போடனும்’ சரவணனின் அப்பா ராஜ்காட்டில் இருக்கிறார். நான் சைக்கிளை மிதிக்க, பின்னால் சரவணின் அம்மா ஏறிக்கொண்டார்கள்.

எனக்குத் தெரிந்த வீடுகளிலும், சரவணின் உறவுக்கார வீடுகளிலும் தேடினோம். நேரம் செல்லச் செல்ல சரவணனின் அம்மாவிற்கு கவலை பன் மடங்கு அதிகரித்தது போல இருந்தது. எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘சரவணன் எங்கு பொயிருப்பான்?’ ‘தம்பி, அப்படியே கலாஷ் பாத்திரக்கடை பக்கத்திலிருக்கும் சந்தில் அவனுடைய சித்தப்பா வீடு இருக்கிறது, அங்கும் பாத்துட்டுப் போலாம்’ என்றார்கள். சரவணின் அம்மா எற்கனவே பாதி அழுது கொண்டிருந்தார்கள்.

சரவணின் சித்தியும் சித்தப்பாவும் சரவணனின் அம்மாவைத் தேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதுவரை அழாமல் இருந்த அவர்கள் அழத்தொடங்கினார்கள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். ஆறிப்போனக் காப்பியைக் குடித்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம். சித்தப்பாவும் உடன் வந்தார்.

மேலும் சில இடங்கள் தேடிவிட்டு, உசிலம்பட்டி ரோட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனை சோர்வுடனும் இனம் புரியாத ஒரு உணர்வுடனும் கடக்கையில், சித்தப்பா,’ மதனி, நீங்களும் தம்பியும் இங்கன நில்லுங்க, நான் போய் ஏட்டையா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திடறேன்!’ என்று சொல்லிவிட்டு சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டு விட்டு சித்தப்பா சென்றார்.

நாங்கள் இருவரும் அமதியாக நின்று கொண்டிருந்தோம்.லாரி ஒன்று புழுதி வாரி இரைத்துச் சென்றது.. சரவணனின் அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த சித்தப்பா, ‘மதனி, சரவணன் காலையில் என்ன டிரஸ் போட்டிருந்தான்?’ என்றார். சரவணின் அம்மா சிறிது யோசனைக்குப் பின் விசும்பலோடு, ‘பச்சைப் பேண்ட்….சிவப்புச் சட்டை’ என்றார்கள்.

நான் நிலை தடுமாறினேன். சைக்கிள் பிடியிலிருந்து விடுபட்டு கீழே விழுந்தது.பேருந்து ஒன்று சத்தமாக ஹாரன் அடித்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகில் சென்றது.நாயொன்று விடாமல் குறைத்தது. எனக்கு முழுவதுமாகத் திடம் இழந்துவிட்டதைப் போன்று ஒரு உணர்வு. வியர்த்து வழிந்தது.குடலைப் பிரட்டியது. சித்தப்பா வந்தவுடன் மூவரும் மிக அமைதியாக வீடு வந்து சேர்ந்தோம்.

அங்கே சரவணன் நின்று கொண்டிருந்தான். அவன் கூடவே சற்று பருமனான, மீசை அடர்த்தியாக வைத்துக்கொண்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார்.நான் அனைத்து கடவுள்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.சரவணின் அம்மா வேகமாக ஓடிச்சென்று, சரவணனின் பக்கத்தில் இருந்தவரை ‘வாங்கண்ணே!’ என்று சொல்லிவிட்டு, சரவணனை ஓங்கி ஒரு அரை விட்டார்.

நான் வீட்டிற்கு வந்து சைக்கிளிற்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, உள்ளே நுழைந்தேன். ஏனோ மனம் பஞ்சு போல இலகுவாகிவிட்டிருந்தது. உள்ளே அம்மா அழுதுகொண்டிருந்தார்கள்.என்னைப் பார்த்ததும் ‘தம்பியைப் பார்த்தியாடா?’ என்றார்கள். ‘ஏன் என்னாச்சு?’ என்றேன். ‘சாயங்காலத்திலிருந்து காணல. அப்பா தேடப் போயிருக்கார்’ என்றார்கள்.

எனக்கு சுரீர் என்றது. ‘என்ன சட்டை போட்டிருந்தான்?’ என்றேன். என்னை ஒரு நிமிடம் மவுனமாகப் பார்த்துவிட்டு, பின் ‘ஏன், அவன் எப்போதும் போடுவானே, காலர் இல்லாத சிகப்பு டீசர்ட்.அதுதான்!’ என்றார்கள்.
நான் வீதியில் இறங்கி நாயக்கர் கிணறை நோக்கி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தேன். நாய்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
**

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சிநேகம் கொண்டால்
கதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒரு முறத் தவிட்டுக்காக
வாங்கினேன் என்னை என்றாய்
எத்தனை பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக்கொண்டாய்?
தவறுமேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லை யென்றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன் பிள்ளை உன்னைவிட்டு
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

-ஞானக்கூத்தன்


சிங்கப்பூர்-லிட்டில் இந்தியா

இன்று மதியம் சரவணபவனில் சாப்பிட்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது, ஆனால் சர்வீஸ் தான் கொஞ்சம் மோசம். அதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். கூட்டம் அதிகம் இல்லை என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று. சாப்பிட்ட பிறகு கை அலம்பிவிட்டு, குப்பைத்தொட்டி நிரம்பிவழிவதைக் கவணித்தோம். என் நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட், ‘சிங்கப்பூரில் தெருக்கள்தான் சுத்தமாக இருக்க வேண்டுமோ!’