புத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்?

என்னென்ன புத்தகங்கள் படிக்கக் கூடாது என்று பல நாடுகள் தங்கள் மக்களுக்கு லிஸ்ட் கொடுக்கின்றன. வாசிக்கக்கூடாத புத்தகங்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வாசிக்கத்தேவையில்லாத புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. தவிர்க்கவேண்டிய புத்தகங்கள் என்னென்ன என்று ஒரு பதிவு பார்த்தேன்.
கார்ல்சாகன் புத்தகம் வாசிப்பதைப் பற்றி காஸ்மோஸ் புத்தகத்தில் எழுதியது ஞாபகம் வரவே,அதன் தோராயமான சாரம்சம் கீழே:

புத்தகங்கள் விதைகளைப் போல. ஒரு நல்ல புத்தகம் அவ்விதைகளை உங்கள் மனதில் விதைத்துவிடவேண்டும். அந்த விதை விருட்சமாக வளரும். எழுத்து வடிவுமும், அதைப் பதிவு செய்து வைக்கும் முறையும் தான் மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு, இன்றுவரையிலும்.

யோசித்துப் பாருங்கள் புத்தகங்கள் இல்லையென்றால் மனிதனின் முன்னேற்றம் எவ்வளவு பாதித்திருக்கும்? ஒரு எ.கா: எகிப்த்தின் அலெக்சாண்ட்ரியா நூலகம் (கிமு 300-கிபி 300 காலகட்டம்) சூரையாடப் பட்டு புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அந்த நூலகத்தில் அரிஸ்ட்டார்கஸ் எனபவர் எழுதிய ஒரு புத்தகம் இருந்தது. அவர் அப்பொழுதே பூமி சூரியனைச் சுற்றித்தான் வருகிறது என்றும், சூரியன் மிக மிக அதிகமான தூரத்தில் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். நூலகம் சூரையாடப்பட்டபொழுது அந்தப் புத்தகம் போயே போச்சு. போயிந்தே. பிறகு மீண்டும் பூமி சூரியனைச் சுற்றித்தான் வந்து கொண்டிருக்கிறது என்று கண்டறிய நம் முன்னோர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனது. 

நூலகங்களும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. அசுர்பனிபாலின் அசிரியன் நூலகத்தில் ஆயிரக்கணக்கான களிமன் புத்தகங்கள் இருந்திருக்கின்றன. மேலே குறிப்பிட் எகிப்தின் அலெக்சான்ட்ரியா நூலகத்தில் லட்சக்கணக்கில் பாப்பிரஸ் சுருள்கள் (ஓலைச்சுவடிகள் போல) இருந்திருக்கின்றன. இன்று நியூயார்க் பொது நூலகத்தில் மட்டும் ஐந்து கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன. இதை பிட்ஸ் கணக்கில் பார்த்தால் எத்தனையோ லட்சம் கோடிக்கும் மேல போகும். (இதெல்லாம் எனய்யா பிஸ்கோத்து.. இருபது லட்சம் கோடியவே அசால்ட்டா பாத்தவிங்க நாங்க..) இது நமது ஜீனில் இருக்கும் தகவல்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகம். நம் மூளை சேகரிக்கக்கூடிய தகவல்களை விட பல நூறு மடங்குகள் அதிகம்.

சரிப்பா.. இதெல்லாம் எப்படி வாசிப்பது? படிப்பது? (ஏன் படிக்கனும்னெல்லாம் கேக்கப்பிடாது) 

நாம சிட்டி ரோபோ இல்லியே புத்தகத்த அப்படி இப்படின்னு விசுக்கு விசுக்குன்னு திருப்பிப் பார்த்து வாசிச்சு முடிக்க? வாரத்துக்கு ஒரு புத்தகம் என்கிற கணக்கில் வாசித்தால் கூட (வாய்ப்பேயில்லை ராசா!) வாழ்நாளில் சில ஆயிரம் புத்தங்களே நம்மால் வாசிக்க முடியும். சில ஆயிரம் புத்தங்கள் என்பது உலகத்தில் இருக்கும் புத்தகங்களை கணக்கிலெடுத்தால் தக்கணூண்டு. ஒரு விழுக்காட்டில் இருமா அளவுக்கும் கம்மி. (இருபது லட்சம் கோடில உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? அதைப் போல, மொதல்ல கிடைக்குமா?!)

அப்ப எப்படி? ட்ரிக் என்னன்னா: எந்த புத்தகங்களைப் வாசிக் வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொள்வது! (நம்ப மார்க்கு மாதிரி: உங்களுக்கு எந்த பதிவு பிடிக்கவில்லை என்கிற விசயத்தை வைத்து அவன் பெரிதாக சம்பாதிக்க முடியாது. உங்களுக்கு என்ன பிடிக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிறதில தான் அவன் பிஸினஸ் இருக்கு!) வாசிப்போம். புத்தகங்களை தேடித்தேடி வாசிப்போம்.

பிகு: உலகில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் இருக்கும்? சிங்கப்பூரில் 26 பொது நூலகங்கள் இருக்கின்றன – மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் இருக்கின்றன இந்த நூலகங்களில்..

பிபிகு: இண்டர்நெட்டில் எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன? ஒரு எக்ஸாபைட் என்பது ஒரு பில்லியன் பில்லியன் பைட்ஸ். இப்போதைக்கு தோராயமாக ஆயிரம் எக்ஸாபைட்ஸ் அளவு தகவல்கள் இருக்கலாமாம்..

பிபிபிகு: என் ஐபேடில் ஐநூறுக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கி..!!

பிபிபிபிகு: இப்ப படிச்சிட்டிருக்கும் புத்தகம்: The Sleuth Investor

தலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி

நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரராக இருந்தால் Our Planetஐ கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். அதில் ப்ளூ ஆல்கான் என்கிற பட்டாம்பூச்சியைப் பற்றிய ஒரு எபிசோட் வருகிறது. இதை எப்படி படம் பிடித்தார்கள் என்பதும் இணையத்தில் இருக்கிறது. அது நான் இங்கே சொல்லப்போகும் கதையைவிட சுவராஸ்யமானது. இணையத்தில் தேடிப்பாருங்கள்.

சரி பட்டாம்பூச்சிக்கு வருவோம். 

இந்த பட்டாம்பூச்சி வசீகரமானது. அழகானது. அளவில் பெரியதும் கூட. ஆனால் பயங்கர தந்திரமானது. நயவஞ்சகமானது. 

முட்டை போட்டுவிட்டால் மட்டும் போதுமா. மூட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவை (கம்பளிபூச்சியை) யார் பார்த்துக்கொள்வது? நேரத்திற்கு யார் உணவளித்து, சொந்தப்பிள்ளை போலப் பார்த்துக்கொள்வார்கள். பறவைகள் தங்கள் லார்வாவை கொத்தித் திண்ணாமல் எப்படி மறைத்துவைப்பது? ம்ம்.. இது என்னடா பட்டர்ஃப்ளைக்கு வந்த சோதனை, என்று நினைத்தது அந்த ப்ளூ பட்டர்ஃப்ளை. 

அந்த நீல வண்ண பட்டாம்பூச்சி, தான் தலையிலிருந்தல்லாவா வந்தோம், காலிலிருந்து வந்தவர்கள் தனக்கு சேவை செய்யவேண்டுமே என்கிற நம்பவே முடியாத அரிய வகை வேதத்தை எப்படியோ துப்புதுலக்கி தெரிந்துகொண்டுவிட்டது. பிறகு ஒரு திட்டம் தீட்டியது. கம்பளிப்பூச்சிக்கு வேலாவேலைக்கு உணவளித்து ராஜாவை விட (கவனிக்க, ராஜா போல அல்ல, ராஜாவைவிட) மேலாக கவனிக்க வைக்க வேண்டும். உணவு வேண்டும், பிச்சையாக அல்ல, அதிகாரமாக. பறவைகளிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும். உணவு. மரியாதை. பாதுகாப்பு. அப்பொழுது அந்த வழியாக தினமும் உழைக்கச் செல்லும் உழைக்கும் வர்க்கமான சிகப்பு எறும்புகள் அதன் கண்களில் பட்டது. கவனிக்க: சாதாரண எறும்பில்லை, சிகப்பு எறும்பு. 

எறும்புகள் உழைப்பதிலே கவனமாக இருப்பதால் அதற்கு அரசியலைத் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. அழகா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உண்மையை முழுசாக ஏற்றுக்கொண்டவர்கள் அந்த உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்தவர்கள். எதையாவது சும்மா சொன்னால் போதும், ஆதாரம் என்ன, இவன் எதற்கு இதைச் சொல்கிறான், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன, இவனுக்கு இதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று சிந்திக்காது. சட்டென்று நம்பிவிடும். ஏனெனில் பயம் ஜாஸ்தி. நாளைக்கு உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயத்திலே வாழ்வதால் ஆழ்ந்து சிந்திக்கும் திரனை முழுவதுமாக இழந்துவிட்ட அந்த உழைக்கும் வர்க்கத்தை எளிதாக ஏமாற்றிவிடலாம். திட்டம் ரெடி. 

அப்படி முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவான கம்பளிப்பூச்சி செடிகளின் இலைகளைத் தின்று கொழுத்தவுடன், இலைகளிலிருந்து பட்டு நூலின் வழியாக தேவதூதனைப் போல கீழே இறங்கும். சிகப்பு எறும்புகள் சாரை சாரையாக உழைக்கச்செல்லும் வழியில் தந்திரமாகப் படுத்துக்கொள்ளும். பிறகு தன் உடம்பிலிருந்து ஒரு வகையான இரசாயனத்தை வெளிப்படுத்தும். அந்த ரசாயனத்தின் மணம் சிகப்பு எறும்புகளின் குட்டிகளிடமிருந்து (லார்வா) வரும் மணத்தைப் போன்றே இருக்கும். எறும்பும் ஏமாந்து இதுவும் தன் குட்டிதான் என்று நினைத்து பட்டுப்பூச்சியின் லார்வாவைத் தனது எறும்பு புற்றுக்குள் பத்திரமாகத் தூக்கிச் சென்று விடும். 

இப்பொழுது பட்டுப்பூச்சியின் லார்வாவும், எறும்புகளின் லார்வாவும் ஒன்றாக எறும்புகளின் ப்ரூட் சாம்பர் என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கும். ப்ரூட் சாம்பர் என்பது எறும்புகள் தங்கள் லார்வாக்களுக்கு உணவளித்து வளர்த்து ஆளாக்கும் இடம். எறும்புகள் தங்களது லார்வாக்களுக்கும், பட்டுப்பூச்சியின் லார்வாக்களுக்கும் ஒரே மாதிரியாக உணவளித்து சூப்பரா பராமரிக்கும். ஆனால் இது பட்டுப்பூச்சிக்குப் போதவில்லை. போதாதல்லவா? நாம தலையிலிருந்தல்லவா வந்தோம்? நமக்கு சாமியைபோலல்லவா சிறப்பு அங்கீகாரமும் முதல் மரியாதையும் கிடைக்கவேண்டும்.!!எறும்புகளின் “ராணி எறும்பு” போல கம்பளிப்பூச்சி இப்பொழுது ஒலி எழுப்ப அரம்பிக்கும். அவ்வளவுதான் எறும்புகள் இன்னும் விழுந்தடித்துக்கொண்டு உணவளித்துப் பராமரிக்கும். எந்தளவிற்கென்றால் – தன் குட்டிகளுக்கு உணவில்லையென்றால் கூட எறும்புகள் பட்டுப்பூச்சியின் குட்டிகளுக்குத்தான் முதலில் உணவளிக்கும். இப்படி எறும்புகளின் ராஜ்ஜியத்திற்குள் புகுந்து கொண்டு எறும்புகளுக்கு பயம் ஏற்படுத்தி, நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக தின்று கொழுக்கும் அந்த நயவஞ்சக கம்பளிப்பூச்சி. 

இப்படி உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கித் தின்று கொழுத்த கம்பளிப்பூச்சி ஒரு நாள் அழகான பெரிய நீல நிற பட்டாம்பூச்சியாக உருமாறி எறும்புகளின் ராஜ்ஜியத்தை விட்டுப் பறந்து செல்லும். பிடிங்கித்தின்றால் ருசியாகத்தானே இருக்கும். பிடிங்கித் திண்பவன் கொழுத்துத்தானே கிடப்பான். பட்டாம்பூச்சி பறந்து சென்று விட, அது பறந்து செல்வதற்கு நாம் தான் காரணம் என்பதை அறியாத அடிமுட்டாள் எறும்புக்கூட்டம் வழக்கம் போல அடுத்த பட்டாம்பூச்சிக்கு உணவளிக்க உழைக்க ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த ப்ளூ ஆல்கன் பட்டாம்பூச்சி முற்றிலுமாக இந்த எறும்புகளை நம்பியே இருக்கிறது. எறும்புகள் இல்லையென்றால் அதன் இனமே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இது அந்த எறும்புகளுக்கு ஒரு போவதும் தெரியப்போவது இல்லை. தெரிந்து கொள்ளவும் அவை விரும்பாததுதான் விந்தையிலும் விந்தை. 


பிகு: இந்த எபிசோட் யூடியூபில் கூட இருக்கிறது. https://www.youtube.com/watch?v=XmtXC_n6X6Q

பிபிகு: Our Planet முழுக்கவே சுவராஸ்யமாக இருக்கும். டேவிட் அட்டன்பரோ லயித்து நரெட் செய்யும் குரலுக்காகவே பார்க்கலாம். யானைகள் நீருக்காக தேடி அலைவதும், ஆழ்கடலின் உயிரினங்களும் ஆச்சரியமூட்டும் எபிசோட்கள்.

பிபிபிகு: சமூகநீதிக் காவலர் கட்டுமரத்தின் 96வது பிறந்தநாள் ஜூன் 3 அன்று வருகிறது.

பிபிபிபிகு: அவரை கட்டுமரம் என்றழைப்பதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. அவருக்கு இதனால் எந்த இகழ்ச்சியும் இல்லை. என்றென்றும் அவர் எங்கள் கட்டுமரம்.

அடிமைகளுக்கு சாகவும் உரிமையில்லை

Esi Edugyan எழுதிய Washington Black படித்துக்கொண்டிருக்கிறேன். பாதி முடித்துவிட்டேன். ப்ளாண்டேஷன்களில் வேலை பார்க்கும் ஒரு கருப்பு அடிமையின் கதை. அடிமையின் பெயர் தான் வாஷ்ங்க்டன் ப்ளாக். சிறிய பையன். அந்த ப்ளாண்டேஷனிலே பிறந்தவன். அடிமைகளுக்குள் ஒரு நம்பிக்கை இருக்கிறது: ப்ளாண்டேஷனில் தற்கொலை செய்து இறந்துபோகும் நபர், அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு அவரதுசொந்த ஊரில் மீண்டும் பிறப்பார் என்பது தான் அது. இதை நம்பி ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி தற்கொலை செய்து கொண்ட ஒரு அடிமையைப் பார்த்து, முதலாளி இவ்வாறு சொல்கிறார்:

What you see here, this nigger, killed himself. He was my slave. He has therefore stolen from me. He is a thief.

இந்த அடிமை தற்கொலை செய்து கொண்டான். இவன் என்னுடைய அடிமை. அதனால் அவன் என்னிடமிருந்து திருடப்பட்டிருக்கிறான். எனவே இவன் ஒரு திருடன்.

அடிமைகளின் உயிர் கூட அவர்களதில்லை.wb

ஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை

சாய்ராட் என்கிற மிகப்பிரபலமான மராத்தி மொழி திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் உடனடியாகப் பார்த்துவிடவும். நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தத் திரைப்படம் சாதிய அடுக்குகளையும், சாதி பொதுமக்களுக்குத் தரும் போதையையும், அந்த போதையினால் அவர்கள் யாரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள் என்பதையும் அழகாக ஒரு கத்தியை எடுத்து மெதுவாக உங்கள் நெஞ்சில் பொறுமையாக இறக்குவதைப் போல இறக்கும். பாடல்கள் எல்லாம் இளையராஜா ரகம். இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் நாங்கள் இளையராஜாவின் ரசிகர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ராட்டுக்கு முந்திய படம் தான் ஃபன்றி (Fandry). ஃபன்றி என்று உச்சரிப்பு ஆனால் உண்மையில் பன்றி என்று தான் அர்த்தம். உண்மையில் மராத்திக்கும் தமிழுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மராத்தி திராவிட மொழி என்று ஒரு தியரி இருக்கிறது. ஆனால் தமிழுக்குத்தான் மராத்தி நெருக்கம். சிவாஜியின் (நடிகர் சிவாஜி இல்லை. சிவாஜி படத்தில் நடித்த சிவாஜி ராவ் ரஜினியும் இல்லை. சத்ரபதி சிவாஜி) தம்பி வெங்கோஜி தஞ்சாவூரில் அமைத்த ராஜ்ஜியத்தால் தஞ்சாவூர் மராத்தியார்கள் என்கிற பிரிவு உண்டானது. அப்போ நடந்த மொழிப்பரிமாற்றத்தில் பன்றி இடமாறியிருக்கக்கூடும். பன்றிக்கு தமிழ் ஆதிச் சொல் ஒன்று இருக்கிறது. வராகம். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

ஜப்யா என்கிற தீண்டத்தகாத டீன் ஏஜ் சிறுவன் ஒரு தலையாக தன்னுடன் படிக்கும் ஷாலு என்கிற மேல் சாதி டீன் ஏஜ் சிறுமியைக் காதலிக்கிறான். அவனுடைய அப்பா அந்த ஊரில் மற்றவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டு சொற்ப வருமானத்தில் வாழ்கிறார். ஜப்யாவுக்கு இரண்டு அக்காக்கள். முதல் அக்காவுக்கு திருமணம் முடிந்து வீட்டோடு வந்துவிடுகிறார். இரண்டாவது அக்காவிற்கு திருமண ஏற்பாடாகிறது. ஜப்யாவின் காதல் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே போகிறது.

அதே ஊரில் சைக்கிள் கடை வைத்திருக்கும் நாகராஜ் மஞ்சுளே (டைரக்டர்) ஜப்யாவுக்கு ஆதரவாக இருக்கிறார். அந்தப் பெண் ஜப்யாவை லவ் பண்ண வேண்டுமென்றால்: கருப்பாக இருக்கும் ரெட்டைவால் குருவியைப் பிடித்து, அதை எரித்து அந்த சாம்பலாக்கி அதை ஷாலுவின் மேல் தூவினால் மட்டுமே நடக்கும் என்று கூறுகிறார். ரெட்டைவால் குருவியைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது பையனுக்குத் தெரியவில்லை.

ரெட்டைவால் குருவியை ஜப்யா தேடி அலைகிறான். ஜப்யாவுக்கு ஜீன்சும் டீ சர்ட்டும் போட வேண்டும் என்று ஆசை ஆனால் காசில்லை. குச்சி ஐஸ் செய்து நாகராஜின் சைக்கிள் கடையில் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு டவுனுக்குப் போய் அதை விற்று, ஜீன்ஸ் வாங்க பணம் சேர்க்கிறான். ஒரு முறை அப்படிச் செல்லும் போது, ஒரு பறவை விற்கும் கடையைப் பார்க்கிறான். உள்ளே ரெட்டைவால் குருவி இருக்கும் என்று நினைத்து, அவசரமாக சைக்கிளை அருகே நிற்கும் வேனில் சாய்த்து நிறுத்தி விட்டு, உள்ளே ஓடோடுகிறான். வேன் ரிவெர்ஸ் எடுத்து, சைக்கிளை நசுக்கி விடுகிறது. ஜீன்ஸ் கனவு டமால்.

அந்த கிராமத்தில் திருவிழா வருகிறது. அந்தக் கிராமம் பன்றியைத் தீட்டாகக் கருதுகிறது. ஒரு முறை பள்ளியில் ஷாலுவின் அக்காவை பன்றி தீண்டிவிடுகிறது. ஷாலு, உடனே அக்காவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறாள். அக்கா தீட்டு நீங்க, குளிக்கிறாள். அம்மா தீட்டு நீங்க கோமியம் தெளிக்கிறாள். ஷாலுவும் வாலண்டியராக தனக்கும் தெளிக்கும் படி கேட்டு வாங்கிக்கொள்கிறாள்.

அந்த திருவிழாவில் தேர் தூக்கும் பொழுது, ஒரு பன்றி தேர் தூக்குபவரைத் தீண்டி விடுகிறது. தேர் தூக்குபவர் பதறிப் போய் தேரை விட்டுவிடுகிறார். அபசகுனம் ஆகி விடுகிறது. ஊர் தலைவர் ஜப்யாவின் அப்பாவை அழைத்து அந்தப் பன்றியைப் பிடிக்கச் சொல்கிறார். ஜப்யாவின் அப்பா இன்னும் ரெண்டு நாளில் திருமணம் இருக்கிறது என்றும் பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார். ஊர் தலைவர் வேணுமின்னா பணம் தருகிறேன் என்று சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்ட ஜப்யா,தான் மட்டும் எப்படிப் பிடிப்பது என்று கேட்க, உன் குடும்பத்தை அழைத்துக்கொள் என்று சொல்கிறார் தலைவர்.

காலை மொத்த குடும்பமும், மணப்பெண் உட்பட பன்றி பிடிக்கக் கிளம்புகிறது. ஜப்யா ஷாலுவின் கண்களில் பட்டுவிடாமல் ஒளிந்து கொள்கிறான். அனைவரும் பள்ளிக்கூடத்திற்குள் சென்றபிறகு, நிம்ம்திப் பெருமூச்சு விட்டு வெளியே வருகிறான். ஒரு கும்பல், பன்றி பிடிக்க பன்றிக் குடும்பம் என்று கேலி செய்கிறது. ஒரு கிரிக்கெட் மேட்சை ரசிப்பது போல அவர்கள் இந்தக் குடும்பம் பன்றி பிடிப்பதை ரசிக்கிறார்கள். ஒருவன் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டோ கூடப் போடுகிறான்.

ஒரு வழியாக பன்றியை கார்னர் செய்து விடுகிறார்கள், கயிற்றை பன்றியின் கழுத்தில் போட ரெடியாகும் பொழுது, தேசிய கீதம் ஒலிக்கிறது. அப்படியே நின்று விடுகின்றனர். பன்றிக்குத் தெரியுமா அது தேசிய கீதம் என்று? பன்றி ஓடி விடுகிறது.

பன்றியைப் பிடிக்கவைத்து, தங்களைப் பன்றியைப் போல நடத்தும் இந்த தேசத்தின் தேசிய கீதம் அவர்களுக்குமானதா?

ஓடிய பன்றியைத் தேடி குடும்பமே நாயாய் பேயாய் ஓடுகிறது. பள்ளி மதியச் சாப்பாட்டுக்கு மணியடித்து விடுகிறது. ஷாலு வந்து விடுவாளே என்று பயந்து ஓடி ஒழிந்து கொள்கிறான். பன்றியைக் காணாது செம கடுப்பில் இருக்கும் ஜப்யாவின் அப்பா ஜப்யாவை வெறி கொண்டு தேடத் தொடங்குகிறார். ஒழிந்துகொண்டிருக்கும் ஜப்யா கருப்பான ரெட்டைவால் குருவியைக் காண்கிறான். மெதுவாக ஓசையெழாமல் அமர்ந்து குருவியை அடிக்க, குருவியின் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே, ஒரு சிறு கல்லை எடுக்கக் குனிகிறான். ஜப்யாவின் அப்பா அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடுகிறார். கடுங்கோபத்தில் வந்தவர், அவனை வெளியே இழுத்துவந்து ஊர் முன்னிலையில், ஷாலு முன்னிலையில் அடித்துத் துவைக்கிறார். ஷாலு எள்ளி நகையாடுகிறாள். ஜப்யா கூனிக்குறுகிப்போகிறான்.  நீண்ட கஷ்டத்திற்குப் பிறகு குடும்பம் பன்றியைப் பிடிக்கிறது. ஷாலு இதை அனைத்தையும் தன்னுடன் இருப்பவளுடன் கேலி பேசி ஹைஃபை செய்து ஒரு விளையாட்டு போல ரசிக்கிறாள்.

மணப்பெண்ணும் ஜப்யாவும் ஒரு கட்டையில் பன்றியைத் தொங்கப்போட்டுக்கொண்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஊர் நின்று வேடிக்கை பார்க்கிறது. ஷாலுவும் தான். ஒரு கும்பல் அவர்களை கேலி பேசிக்கொண்டு கூடவே வருகிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜப்யா, கடும் சினம் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்குகிறான். பிறகு கடைசியாக ஒரு கல்லை எடுத்து அவர்களின் மீது எறிகிறான். அந்தக் கல் வேகமாக காற்றில் பயணித்து காமெராவின் லென்சை உடைக்க வருகிறது. அதோடு படம் முடிகிறது.

ஜப்யா கல் எறிந்தது உங்கள் மீதும் என் மீதும் தான். ஒரு நிமிடம் ஆச்சா?

மகனின் காதுகுத்தை நடத்தலாமா எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசர்?

மகனின் காதுகுத்தை நடத்தலாமா என்று கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ கேட்பது வழக்கம், ஆனால் எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசரிடம் கேட்பது?

கர்நாடகாவில் இந்த தேர்தல் நேரத்தில், என்ன்வெல்லாம் செய்யலாம் என்ன செய்யக்கூடாது, என்கிற தெளிவில்லாததால், பொதுமக்கள் எலெக்‌ஷன் கமிஷனரை சாதாரண விசயத்துக்குக் கூட அனுகுகின்றனர். கல்யாண ஏற்பாடு செய்யலாமா, காது குத்தலாமா, தங்கம் வாங்கலாமா, பேர்வைப்பு வைபவம் செய்யலாமா, பிறந்தநாள் கொண்டாடலாமா என்பன போன்ற கேள்விகள் எலெக்‌ஷன் கமிஷனுக்கு வருகிறதாம்.

இவ்வாறான விழாக்களுக்காக வாங்கப்படும் பரிசுகள், நகைகள், பொருட்கள் பொதுவாக கட்சிகள் மக்களுக்கு ஓட்டுப்போடக் கொடுப்பதால், இவ்வாறான குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.

சீஃப் எலெக்‌ஷன் ஆபிசர் சஞ்சீவ் குமார் குடும்ப விழாக்களை நடத்த அனுமதி வாங்கத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

IRNSS-1I – ISROவின் புதிய சாட்டிலைட் நாளை வின்னில் பறக்கிறது

ஸ்ரீஹரிகோட்டோ நாளை வியாழக்கிழமையன்று புதிய வழிசொல்லி (Navigation) செயற்கைக்கோளை வின்னில் ஏவத்தயாராகி வருகிறது. இந்த மாதத்தில் வின்னில் ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள் இது.

சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவிலிருக்கும் சதிஷ் தாவன் வானாராய்ச்சி மைய்யத்திலிருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும். 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.

US GPSக்கு இணையாக வழிசொல்லி செயற்கோள்களை இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. இது பொதுமக்களுக்கும் மிலிட்டரிக்கும் இருக்கும் இடத்தைப் பற்றிய டேட்டாவைக் கொடுக்கும்.


  • ஒரு நபரின் (அல்லது பொருளின்) இடத்தையும், நேரத்தையும், பயனிக்கும் வழியையும் கண்டுபிடிக்க உதவும் சிக்னல்களை அனுப்பும். இப்பொழுது நாம் உபயொகப்படுத்தும் ஜிபிஎஸ் அமெரிக்காவினுடைய செயற்கொள்களால் நமக்குக் கிடைக்கிறது.
  • 1,425 எடையுள்ள இந்த செயற்கைக்கோள் 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.
  • NavICயின் எட்டாவது செயற்கைக்கொளான இது, PSLV ராக்கட்டில் அனுப்பப்படும்.

மார்ச் 29 அன்றுதான் தொடர்புக்கான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியது. இது அனுப்பிய மூன்றாம் நாள் தன்னுடைய சுற்றுக்கு சென்றுவிட்டது, ஆனால் எந்த சிக்னல் அனுப்புவதை நிறுத்திக்கொண்டது.

இந்த செயற்கைக்கோள்கள் பத்துவருடம் வேலை செய்யும் என்று நம்பப்பட்டது ஆனால் IRNSS-1A வின் ருபீடியம் அடாமிக் கடிகாரம் அனுப்பிய இரண்டாவது ஆண்டே வேலை செய்யாமல் போய்விட்டது.

ஒரு நபரின் தற்போதைய இடத்தையோ அல்லது நேரத்தையோ சரியாக 24 மணி நேரமும் கணக்கிட இந்த ஏழு செயற்கைக்கோள்களும் சரியாக வேலைசெய்ய வேண்டும்.

ட்விட்டர் உலா: மகேஷ் மூர்த்தி, த்ரிஷா, பா.ரஞ்சித், நீல் டைசன்..

முதலீட்டாளர் மகேஷ் மூர்த்தி, ஃபேஸ்புக்கின் மாதாந்திர மக்கள் வரத்து (!) குறைந்திருக்கிறது என்று சொல்கிறார். #சோனமுத்தாபோச்சா?


பிரபல விஞ்ஞானி (கார்ல் சாகனின் காஸ்மோஸ் சீரிஸின் ரீமேக்கின் ப்ரசண்டர்) நீயூட்டனின் மூன்றாம் விதியை கவித்துமாக்கியிருக்கிறார். #ரொமாண்டிக்


ட்ரம்ப் தொடர்ந்து மொக்கவாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய கட்டிடத்தில் தீ பிடித்த செய்தியைப் பகிர்கையில், தீயணைப்பு வீரர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையாம். #மனமில்லியோ?


சிரியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் போரைப் பற்றிய ட்வீட்டை பா.ரஞ்சித் ரீ ட்வீட்டியிருக்கிறார்.#முடிவே இல்லியா?


ஸ்டார்டப்களுக்கும் மாணவர்களுக்கும் குருவாக இருக்கும் தொரை தோட்லா ஃப்ரான்சின் ஆர்ட்டிஃபீசியல் இண்டெலிஜென்சில் கடுமையாக முதலீடு செய்து வருவதை ட்வீட்டிருக்கிறார். #நீங்களும்செய்யவேண்டும்


வெளிச்சத்தைப் பார்த்து நில்லுங்கள், நிழல் உங்கள் பின்னால் விழும் என்று கருத்திட்டிருக்கிறார் த்ரிஷா #செம


பூனம் யாதவ் : ஏழ்மைப் பலுவை தூக்கியெறிய பலு தூக்குவதே வழி!

தொடர்புடைய செய்தி:

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்


நேற்று பூனம் யாதவ், இங்கிலாந்தின் சாரா டேவிஸை வென்று பலுதூக்கும் போட்டியில் இரண்டாவது பதக்கத்தை வென்றார். 2014 க்ளாஸ்கோ போட்டிகளில் இவர் வெண்கலம் வென்றார்.

22 வயதான பூனம் யாதவுக்கு ஏழ்மையை விட்டு வெளியேற பலு தூக்குவது ஒன்றே வழியாகயிருந்திருக்கிறது. வாரனாசிக்கு அருகிலிருக்கும் சண்டமாரியிலிருக்கும் இவருடைய குடும்பத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர். மூன்று பெண்கள். ஒரு பையன். சிறிய விவசாயியான இவரது தந்தை விவசாயத்திலிருந்து வரும் சொற்ப வருமானத்தில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும்.

வாரனாசியிலிருக்கும் STC (சாய் ட்ரெயினிங் செண்டர்) யில் தான் முதலில் இவரது அக்கா சஷி பலுதூக்குவதற்கு பயிற்சி எடுத்துகொண்டிருந்தார். அரசாங்க வேலை வாங்கிவிட வேண்டும் என்பது அவரது பெருங்கனவாக இருந்தது. பூனம் ஒரு வருடம் கழித்து அந்த செண்டரில் சேர்ந்தார். பிறகு அவரது தங்கையும் – பூஜா – சேர்ந்துகொண்டார். இந்த மூன்று வீராங்கனைகளுக்கும் சரியான சாப்பாட்டை சத்தான உணவை, அவரது தந்தையால் தனது சொற்ப வருமானத்தை வைத்து கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களுள் மிக்ச்சிறந்தவரான பூனத்தை மட்டும் அவர்கள் தயார்படுத்த ஏகமனதாக முடிவுசெய்தனர்.

“அவருக்கு திறமை இருக்கிறது என்று நாங்கள் அறிந்து கொண்டபிறகு அவருக்கு முடிந்தவரை நாங்கள் சப்போர்ட் செய்ய முடிவெடித்தோம். விட்டிலிருக்கும் எருமை மாட்டின் பாலை கொஞ்சம் பணம் கிடைக்குமே என்று விற்போம், பூனத்துக்காக நான் கொஞ்சம் பாலை மறைத்து வைத்து அவருக்கு கொடுப்பேன். என் சாப்பாட்டை கொஞ்சம் எடுத்து வைத்து அவருக்கு அதிகமான உணவு தேவைப்படுவதால் அவருக்கு கொடுத்திருக்கிறேன்” என்கிறார் பூனத்தின் அக்கா சாஷி. குடும்பத்தினரின் தியாகம் வீண் போக வில்லை. 2014ஆம் ஆண்டு பூனம் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். தொடர்ந்து காமல்வெல்த்திலும் வெண்கலம் வென்றார்.

பூனத்திற்கு வெற்றிகள் குவிந்தன. 2015இல் காமல்வெல்த் சாம்பியன்சிப்ஸை வென்றார். 69கிலோ பிரிவுக்கு முன்னேறி 2017 காமன்வெல்த்தில் மொத்தம் 217கிலோ தூக்கி வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளே அவருடைய குறிக்கோளாய் இருந்தது. போட்டிகளுக்காக கிளம்பும் சில நாட்களுக்கு முன், “என் குடும்பத்திற்கு நான் நிறைய செய்யவேண்டும். நிறைய வெற்றிகளைப் பெற்று அவர்களைப் பெருமை அடையச் செய்யவேண்டும்” என்று பூனம் சொன்னார்.

மேலும் பல வெற்றிகள் பெற தங்க மங்கை பூனம் யாதவை குரல்வலை வாழ்த்துகிறது.

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்

XXI காமன்வத் போட்டிகளில், நேற்று இந்தியாவுக்கு தங்கநாள், இந்தியா வீராங்கனைகள் மூன்று தங்கங்களை அள்ளினர்.

  • இந்த அதிரடியால் இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியா மொத்தம் 7 தங்கமும், 2 வெள்ளியும், 3 வென்கல பதக்கங்களை இன்றுவரை அள்ளியிருக்கிறது.
  • பூனம் யாதவ், பெண்கள் பிரிவின் 69 கிலோ பலுதூக்கும் போட்டியில், தங்கம் வாங்கினார். பலுதூக்கும் போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கங்களை வென்றது. விகாஸ் தாகூர் ஆண்கள் பிரிவின் 94 கிலோ போட்டியில் வென்கலம் வென்றார்.
  • 16வயது மனு பகேர் பத்து மீட்டர் சூட்டிங்கில் தங்கம் வென்றார். ஹீனா சிது வெள்ளி வென்றார். ரவிக்குமார் வெண்கலம் வென்றார்.
  • பெண்கள் டேபில் டென்னிஸ் அணியான மனிகா பத்ரா, மதூரிகா பட்கர் மற்றும் மௌமா தாஸ், நடப்பு சாம்பியனான சிங்கப்பூரை வென்று முதல் தங்கப்பதக்கத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தனர்.

மேலும்:

  • ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி வேல்ஸ் அணியை 4-3 என்கிற செட் கணக்கில் வென்றது. பெண்கள் பிரிவு இங்கிலாந்தை 2-1 என்கிற செட் கணக்கில் வென்றனர். இருவரும் செமி ஃபைனல் போகிறார்கள்.
  • பாக்சர் மேரி கோம் செமி ஃபைனல் செல்கிறார். அவருக்கான பதக்கம் உறுதியாயிற்று.

பூனம் யாதவ்

ஹீனா சிது, மனு பக்கேர்


காவிரி – பிரச்சனையின் நதிமூலம்

காவிரிப் பிரச்சனை 1892ஆம் ஆண்டு சென்னை பிரசிடென்ஸிக்கும் மைசூர் மாகானத்துக்கும் இடையே ஆற்றின் தண்ணீரைப் பிரித்துக்கொள்வதில் ஆரம்பித்தது. அந்த நாளிலிருந்து இன்று வரை அப்பம் யாருக்குச் சொந்தம் என்கிற விடை கிடைத்தபாடில்லை.

Plate-51552568429

1910 ஆம் ஆண்டு இரண்டு மாநிலங்களும் ஆற்றில் அணைக்கட்ட முற்பட்டன. இந்த பிரச்சனையை பிரிட்டிஷ் அரசாங்கம் கையிலெடுத்து யாருக்கு எவ்வளவு பங்கு என்று பிரித்துக்கொடுத்தது. 1924இல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த ஒப்பந்தத்தில் இப்பொழுது இருக்கும் பாசன வசிதிகளை புதிதாக கட்டப்படும் எந்த அனைக்கட்டும் சேதப்படுத்தக்க்கூடாது என்றும், அப்படி புதிதாகக் கட்டப்படும் எந்த அனையும் தமிழ்நாட்டின் ஒப்புதலோடுதான் கட்டப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சரியாகச் சொன்னால், மைசூர் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லவே முடியாது.

ஆனால் கர்நாடகா மேற்குறிப்பிட்ட எதையுமே செய்யவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அரசின் அனுமதி பெறாமல் புதிதாக நான்கு (ஹரங்கி, கபினி, ஹேமாவதி, சுவர்னாவதி) கட்டுமானப் பணிகளைத் துவக்கியது.

1910இல் மைசூரு அரசாங்கம் கண்ணம்பாடியில் ஒரு நீர்த்தேக்கம் கட்டுவதற்கு மெட்ராஸ் அரசாங்கத்திடம் அனுமதி கோரியது. மெட்ராஸ் அரசாங்கம் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் சொன்ன தீர்ப்பை மெட்ராஸ் ஏற்றுக்கொள்ளவில்லை, மேல் முறையீடு செய்தது. இந்திய அரசாங்கம் இந்த விசயத்தில் தலையீடு செய்யவில்லை, காரியங்கள் நடந்தேரின, 1924 ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீங்கள் இந்திய வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும்:

765 கிமீ நீளம் உள்ள காவிரி ஆறு இரண்டு மாநிலங்களை கடந்து ஓடுகிறது: கர்நாடகா, தமிழ்நாடு.

கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் இருக்கும் தலைக்காவிரியில் தொடங்குகிறது. கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலுமே பெரும்பாலும் ஓடினாலும் இதன் ஆற்றுப்படுகை கேரளாவிலும் புதுச்சேரியிலும் இருக்கிறது.

Irrigation map.jpg

1892 மற்றும் 1924இல் போடப்பட்ட ஒப்பந்தம்: மொத்த தண்ணீரில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும், 23 சதவிகிதம் கர்நாடகாவிற்கும், எஞ்சியிருக்கும் தண்ணீரை கேரளாவிற்குக் கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலங்களைப் பிரிக்கும் பொழுது தான் பிரச்சனை ஆரம்பித்தது. அதற்கு முன்பு பிரச்சனைகள் பேசியே தீர்த்துக்கொள்ளப்பட்டன. பிறகு தமிழ்நாடு ஆற்றின் குறுக்கே அனைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதே சமயத்தில் கர்நாடகா கொடுக்கும் தண்ணீரை நிறுத்திவிடத் துடித்தது. 1924இல் போடப்பட்ட ஐம்பது வருடத்துக்கான ஒபந்தம் 1974இல் காலாவதியாகிவிட்டது, காவிரி கர்நாடகாவில் தொடங்குவதால் எங்களுக்கே காவிரியில் உரிமை அதிகம் என்று வாதிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மைசூர் மகாராஜாவுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது செல்லாது செல்லாது என்று விஜயகுமாராய் திமிர் காட்டியது.

1974க்கு அப்புறம் கர்நாடகா காவிரியை மேற்குறிப்பிட்ட நான்கு நீர்த்தேக்கங்களுக்கு திருப்பிவிட்டது. இதற்கு தமிழ்நாட்டின் ஒப்பந்தத்தைப் பெறவில்லை.

விவசாய நிலங்கள் பெருகிவிட்ட காரணத்தால் தமிழ்நாடும் காவிரியைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. தண்ணீர் பிரிப்பதில் சிக்கல் ஆனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கபடும் என்று வாதிட்டது தமிழ்நாடு. 1972இல் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்கள் – தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி – எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகின்றனர் என்கிற கணக்கு எடுப்பதற்கு ஒரு கமிட்டியை நியபித்தது. அந்தக் கமிட்டி தமிழ்நாடு 566 tmcf பயப்படுத்துகிறது என்றும் கர்நாடகா 177 tmcf பயன்படுத்துகிறது என்றும் கண்டறிந்தது. முன்பு பயன்படுத்தியதைப் போலவே இப்பொழுதும் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்று அந்தக் கமிட்டி பரிந்துரைத்தது .

Cauvry basin

சர்வதேச முறைப்படிதான் – அதாவது இருவருக்கும் சரி சமமாக – தண்ணீரைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா வாதிட்டது. 94 சதவிகிதத்தை கர்நாடகாவும் தமிழ்நாடும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் மீதமிருப்பதை புதுச்சேரிக்கும் கேரளாவிற்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படியே இப்பொழுதும் தொடரவேண்டும் என்று தமிழ்நாடு சொன்னது.

1986இல் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு விவசாயிகள் குழுமம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு ட்ரிபியூனல் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொன்னது. 1990இல் இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் இருவரும் பேசித்தீர்த்துக்கொள்ள கால அவகாசம் கொடுத்தது. ஆனால் இருவரும் ஒத்துவராத காரணத்தால் காவிரி ட்ரிப்யூனல் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.

1980 இல் இருந்து 1990 வரையிலான நீர் உபயோகத்தை ஆராய்ந்து, காவிரி ட்ரிப்யூனல், 1991இல் கர்நாடகா தமிழகத்துக்கு வருடந்தோரும் ஜூன் முதல் மே மாததிற்குள், மேட்டூர் அணைக்கு 205 tmcf அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் கர்நாடகா விவசாய நிலங்களை அதிகப்படுத்தக்கூடாது என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

எதிர்பார்த்தபடியே இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஏற்றுக்கொள்ளாமல் அதை செல்லாது என்று அறிவிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இது தான் தீர்ப்பு மாற்றமுடியாது, டாட் என்று சொல்லிவிட்டது. கர்நாடகா அடிபணியவில்லை. இந்திய அரசாங்க கெசட்டில் இந்த இடைக்காலத் தீர்ப்பு பதிவுசெய்யப்பட்டது.

அடுத்த மூன்று வருடங்களுக்கு இரு மாநிலத்திலும் நல்ல மழை இருந்ததால் பெரிய போராட்டங்கள் இல்லாமல் இரு மாநிலங்களும் அமைதியாக இருந்தன. 1995இல் கர்நாடகாவில் மழை சரிவர இல்லாத காரணத்தால், இடைக்காலத்தடையை அது மதிக்கவில்லை. தமிழ்நாடு, சுப்ரீம் கோர்ட்டை நாடி 30 டி எம் சி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தது. சுப்ரீம் கோர்ட்டும் கர்நாடகாவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிறகு நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் அன்றைய பிரதம மந்திரி பி வி நரசிம்மராவ் தலைமையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ராவ் இரண்டு மாநில முதலமைச்சர்களையும் கலந்து ஒரு வழி சொல்லி இருவரையும் சம்மதிக்கவைத்தார்.

1998இல் காவிரி அதிகார மைய்யம் அமைக்கப்பட்டது. பிரதமந்திரி அந்த குழுவிற்கு தலைமை தாங்கினார். மற்ற மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

பதினாறு வருடங்கள் கழித்து 2007இல் காவிரி ட்ரிபியூனல் (CWDT) இறுதித் தீர்பை வழங்கியது. 1892, 1924 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தம் இன்றும் செல்லும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டிற்கு 410 டி எம் சியும், கர்நாடகாவிற்கு 270 டி எம் சியும், கேரளாவிற்கு 30 டி எம் சியும் புதுச்சேரிக்கு 7 டி எம் சியும் அறிவித்தது. கர்நாடகா இதை எதிர்த்து மாநிலம் தழுவிய பந்த அறிவித்தது.

2013இல் பிப்ரவரி 19 அன்று மத்திய அரசு CWDTஇன் இறுதித் தீர்ப்பை உறுதிசெய்து கெஜட்டில் பதிவு செய்தது , காவிரி மேலான்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவேயில்லை.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்திற்குள் தண்ணீர் வரவில்லையெனில் சம்பா பயிர்கள் வாடிவிடுமே என்ற கவலை விவசாயிகளிடம் தொற்றிக்கொள்ளும். ஏப்ரல் மேயிலே பிரச்சனை ஆரம்பமாகிவிடும். மேமாதத்திலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டுமே? கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாது. தமிழ்நாடு கையேந்தி நிற்கும். சுப்ரீம் கோர்ட் படியேறும். கடைசியில் செப்டம்பருக்கு கொஞ்சம் முன்பு சுப்ரீம் கோர்ட் 15000 குசக்ஸ் (கிட்டத்தட்ட ஒரு டி எம் சி) அளவு மட்டுமாவது திறந்துவிடுங்கள் என்று கேட்கும். அதை மறுத்து கர்நாடகாவில் பந்த் வெடிக்கும். போராட்டம் நடக்கும். தமிழ் கடைகள் உடைக்கப்படும்.

தண்னீர் வந்து சேரும் வரை, விவசாயி வயிற்றில் புளியைக் கரைத்துக் இலவு காத்த கிளியாகக் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.