புத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்?

என்னென்ன புத்தகங்கள் படிக்கக் கூடாது என்று பல நாடுகள் தங்கள் மக்களுக்கு லிஸ்ட் கொடுக்கின்றன. வாசிக்கக்கூடாத புத்தகங்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வாசிக்கத்தேவையில்லாத புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. தவிர்க்கவேண்டிய புத்தகங்கள் என்னென்ன என்று ஒரு பதிவு பார்த்தேன்.
கார்ல்சாகன் புத்தகம் வாசிப்பதைப் பற்றி காஸ்மோஸ் புத்தகத்தில் எழுதியது ஞாபகம் வரவே,அதன் தோராயமான சாரம்சம் கீழே:

புத்தகங்கள் விதைகளைப் போல. ஒரு நல்ல புத்தகம் அவ்விதைகளை உங்கள் மனதில் விதைத்துவிடவேண்டும். அந்த விதை விருட்சமாக வளரும். எழுத்து வடிவுமும், அதைப் பதிவு செய்து வைக்கும் முறையும் தான் மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு, இன்றுவரையிலும்.

யோசித்துப் பாருங்கள் புத்தகங்கள் இல்லையென்றால் மனிதனின் முன்னேற்றம் எவ்வளவு பாதித்திருக்கும்? ஒரு எ.கா: எகிப்த்தின் அலெக்சாண்ட்ரியா நூலகம் (கிமு 300-கிபி 300 காலகட்டம்) சூரையாடப் பட்டு புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அந்த நூலகத்தில் அரிஸ்ட்டார்கஸ் எனபவர் எழுதிய ஒரு புத்தகம் இருந்தது. அவர் அப்பொழுதே பூமி சூரியனைச் சுற்றித்தான் வருகிறது என்றும், சூரியன் மிக மிக அதிகமான தூரத்தில் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். நூலகம் சூரையாடப்பட்டபொழுது அந்தப் புத்தகம் போயே போச்சு. போயிந்தே. பிறகு மீண்டும் பூமி சூரியனைச் சுற்றித்தான் வந்து கொண்டிருக்கிறது என்று கண்டறிய நம் முன்னோர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனது. 

நூலகங்களும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. அசுர்பனிபாலின் அசிரியன் நூலகத்தில் ஆயிரக்கணக்கான களிமன் புத்தகங்கள் இருந்திருக்கின்றன. மேலே குறிப்பிட் எகிப்தின் அலெக்சான்ட்ரியா நூலகத்தில் லட்சக்கணக்கில் பாப்பிரஸ் சுருள்கள் (ஓலைச்சுவடிகள் போல) இருந்திருக்கின்றன. இன்று நியூயார்க் பொது நூலகத்தில் மட்டும் ஐந்து கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன. இதை பிட்ஸ் கணக்கில் பார்த்தால் எத்தனையோ லட்சம் கோடிக்கும் மேல போகும். (இதெல்லாம் எனய்யா பிஸ்கோத்து.. இருபது லட்சம் கோடியவே அசால்ட்டா பாத்தவிங்க நாங்க..) இது நமது ஜீனில் இருக்கும் தகவல்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகம். நம் மூளை சேகரிக்கக்கூடிய தகவல்களை விட பல நூறு மடங்குகள் அதிகம்.

சரிப்பா.. இதெல்லாம் எப்படி வாசிப்பது? படிப்பது? (ஏன் படிக்கனும்னெல்லாம் கேக்கப்பிடாது) 

நாம சிட்டி ரோபோ இல்லியே புத்தகத்த அப்படி இப்படின்னு விசுக்கு விசுக்குன்னு திருப்பிப் பார்த்து வாசிச்சு முடிக்க? வாரத்துக்கு ஒரு புத்தகம் என்கிற கணக்கில் வாசித்தால் கூட (வாய்ப்பேயில்லை ராசா!) வாழ்நாளில் சில ஆயிரம் புத்தங்களே நம்மால் வாசிக்க முடியும். சில ஆயிரம் புத்தங்கள் என்பது உலகத்தில் இருக்கும் புத்தகங்களை கணக்கிலெடுத்தால் தக்கணூண்டு. ஒரு விழுக்காட்டில் இருமா அளவுக்கும் கம்மி. (இருபது லட்சம் கோடில உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? அதைப் போல, மொதல்ல கிடைக்குமா?!)

அப்ப எப்படி? ட்ரிக் என்னன்னா: எந்த புத்தகங்களைப் வாசிக் வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொள்வது! (நம்ப மார்க்கு மாதிரி: உங்களுக்கு எந்த பதிவு பிடிக்கவில்லை என்கிற விசயத்தை வைத்து அவன் பெரிதாக சம்பாதிக்க முடியாது. உங்களுக்கு என்ன பிடிக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிறதில தான் அவன் பிஸினஸ் இருக்கு!) வாசிப்போம். புத்தகங்களை தேடித்தேடி வாசிப்போம்.

பிகு: உலகில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் இருக்கும்? சிங்கப்பூரில் 26 பொது நூலகங்கள் இருக்கின்றன – மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் இருக்கின்றன இந்த நூலகங்களில்..

பிபிகு: இண்டர்நெட்டில் எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன? ஒரு எக்ஸாபைட் என்பது ஒரு பில்லியன் பில்லியன் பைட்ஸ். இப்போதைக்கு தோராயமாக ஆயிரம் எக்ஸாபைட்ஸ் அளவு தகவல்கள் இருக்கலாமாம்..

பிபிபிகு: என் ஐபேடில் ஐநூறுக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கி..!!

பிபிபிபிகு: இப்ப படிச்சிட்டிருக்கும் புத்தகம்: The Sleuth Investor

பாருக்குப்போன குதிரை

புத்தக விமர்சனம் :

A horse walks in to a bar- ஒரு ஸ்டேண்டப் காமெடியனின் வலி.

இந்த ஜோக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இதோ:

ஒரு குதிரை பாருக்குப் போனது. என்னடா குதிரை பாருக்கு வந்திருக்கிறதே என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சிலர் கேலி பேசினர். ஆனால் குதிரை யாரையும் கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாக நேரே பார்மேனிடம் (ஊத்திக்கொடுப்பவர்) சென்றது. பார்மேன் என்ன வேண்டும் என்பது போல பார்த்தான். ஒரு டக்கீலா என்றது குதிரை. பேசிய குதிரையைக் கண்டு அதிர்ந்த பார்மேன், அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் ஒரு டக்கீலா கொடுத்தான். மடக்கென்று குடித்த குதிரை கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தது. பிறகு என்ன விலை என்று கேட்டது. ஓ காசு வேற வெச்சிருக்கா என்று மேலும் அதிர்ந்த பார்மேன் 2000 ரூபாய் என்று சொன்னான். ஒன்றும் பேசாமல் அவன் கையில் புதிய 2000 ரூபாய் நோட்டை திணித்துவிட்டு நடையைக் கட்டியது குதிரை. பார்மேனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை – பேசும் குதிரை அதுவும் கேட்ட காசைக் கொடுக்கும் குதிரை. பார்மேன் ஓடிப்போய் வெளியே போய்க்கொண்டிருந்த குதிரையை மடக்கிக் கேட்டான்: ஆச்சரியமாக இருக்கிறது. பேசும் குதிரையை இதுவரை நான் பார்த்ததில்லை என்றான். ஹ்ம்ம் உங்க டகீலா விலை அதிகம். இனிமே பாக்கமாட்டீங்க என்று சொல்லிவிட்டு குதிரை வெளியேறியது.

*

பாருக்குப் போன குதிரை (A horse walks in to a bar) நாவலை எழுதியவர் டேவிட் க்ராஸ்மேன் என்கிற இஸ்ரேலிய எழுத்தாளர். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆங்கிலத்தில் ஜெசிக்கா கொஹென்னால் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசு வாங்கியது. 194 பக்கங்களே கொண்ட சிறிய நாவல். இரண்டு மூன்று நாட்களில் படித்து முடித்து விடலாம் – ஆனால் இந்த புத்தகத்தின் தாக்கம் சிறிது நாட்களுக்கு நம்முடன் இருக்கும்.

*

இஸ்ரேலின் நெட்டன்யா நகரில் ஒரு காமெடிக் க்ளபின் மேடையில் ஒரு சாயங்காலம் டோவேலோ ஜி என்கிற கமெடியன், காமெடியன்களின் வழக்கமான பாணியில் ஸ்டேண்டப் ஷோ செய்ய ஆரம்பிக்கிறார். டோவேலோ ஜி ஒரு ஐம்பது வயதான ஜி. சில நாட்களுக்கு முன் அவருடைய பழைய நண்பரான அவிஷாயை (சமீபத்தில் மனைவியை இழந்த ஒரு ரிடையர்ட் ஜட்ஜ்) தொலைபேசியில் அழைத்து தன்னுடைய ஷோவுக்கு வரும்மாரு அழைக்கிறார். இருவருக்குமான நட்பு நாற்பது வருடங்களுக்கு முந்தியது – கடைசியாக ஒரு சம்மர் கேம்பில் பார்த்தது. அவிஷாய்க்கு முதலில் டோவேலோ ஜி யார் என்பதே ஞாபகம் இல்லை.

அன்றைக்கு ஸ்டேஜில் எப்பொழுதும் போலவே ஜோக்குகளுடன் ஆர்ம்பிக்கிறார். சில மொக்கை ஜோக்குகள், செக்ஸ் ஜொக்குகள், ஊரைப்பற்றி, இஸ்ரேலைப்பற்றி, பார்க்க வந்திருப்பவர்களைப் பற்றி கேலி பேசி ஜோக்குகள் என்று ஆரம்பிக்கிறது ஷோ. அவிஷாய் உங்களுக்கு எல்லாமே காமெடிதான். உங்கள் அம்மா கூட உங்களுக்கு காமெடி தான் என்பார். ஆனால் போகக் போக டோவேலா தனது சிறுவயதில் நடந்த ஒரு அதிர்ச்சியான துயரச் சம்பவத்தை விவரிக்கும் பொழுது பார்வையாளர்கள் இன்னும் அந்தத் துயரச் சம்பவத்திலிருந்து மீளாத உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் காண்கின்றனர்.

க்ராஸ்மேன் ஒரு ஜியானிஸ்ட் (யூதர்களுடைய பூர்வீக நிலத்தை மீட்டு அவர்களை அங்கே குடியேற்றவேண்டும் என்கிற கொள்கை) ஆனால் மிதவாதி.மேலும் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமிடையே அமைதியாக சுமூகமாகவே நல்லிணக்கம் வேண்டும் என்று விரும்புபவர். அப்படியானல் இந்த டோவேலோ ஜி அடிபட்ட ஒரு தேசத்தின் குறியீடா? இல்லை வெளி உலகத்துக்கு கொடுமைக்காரனாகவும் சுயநலவாதியாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் 1973ஆம் வருடம் நடந்த ஒரு சம்பவத்தால் வஞ்சிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத ஒரு குழந்தையாகவே இருக்கும் ஒரு மனிதனின் கதையா?

அன்றைய மாலையின் முழு ஷோவும் – ஒவ்வொரு ஜோக்கும், டோவேலாவின் ஒவ்வொரு கையசைவும், பார்வையாளர்களின் ஒவ்வொரு எதிர்ப்பும், சிரிப்பும், ஆர்ப்பரிப்பும் தெளிவாக எழுத்தாளர் க்ராஸ்மேனால் – அல்லது அவிஷாயால் – விவரிக்கப்படுகிறது. க்ராஸ்மேனின் தெளிவான ஆனால் பிடித்திழுக்கும் நடை நம்மை அந்த ஷோ நடக்கும் அந்த க்ளப்பின் பாதாள அறைக்கே இழுத்துச் செல்கிறது.

முதலில் கொஞ்சம் ஆசுவாசமாக ஆரம்பித்தாலும், போகக் போக ஒரு கழுகு எப்படி தன் இரையை நோக்கி பாயுமோ, அதே அளவு வீரியத்துடன் டோவேலா பார்வையாளர்களை தன் வாழ்க்கையையே மாற்றிய அந்த தருணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

எப்படிச் செய்தார்? எனக்குப் புரியவில்லை. எப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை -என்னையும் சேர்த்து – அவரது ஆன்மாவின் குடும்ப உறுப்பினராக ஆக்கினார்? எப்படி எங்களையெல்லாம் பினைக்கைதிகளாக ஆக்கினார்?

என்று இந்தக் கதையை சொல்லும் பார்வையாளர்களுள் ஒருவரான அவிஷாய் கேட்கிறார்.

பார்வையாளர்களில் மேலும் ஒருவர் டோவேலோவைத் தெரிந்தவராக இருக்கிறார். அவரது வீட்டுக்குப் பக்கத்திலே இருந்தவர் – ஒரு சிறிய குட்டையான பெண்.

எனக்கு உன்னைத் தெரியும். நீ தானே கைகளால் தலைகீழாக நடப்பவன்?

என்று தனது முதல் அறிமுகத்திலே எல்லோர் முன்னிலையிலும் சொல்லுகிறார். டோவேலோ கைகளால் தலைகீழாக நடப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அப்பாவிடம் கடுமையான பெல்ட் அடி வாங்கினாலும் கைகளால் நடக்கும் பழக்கத்தை கைவிட இயலாதவர். தலைகீழாக நடக்கும் பொழுது ரத்தம் தலைக்கு ஏறி காதுகளை அடைத்துக்கொண்டு உலகத்தின் சத்தங்களையெல்லாம் வடிகட்டி அமைதியை கொடுக்கிறது என்கிறார்.

டோவேலோவின் கடுமையான கேலிப்பேச்சுகளைப் பார்த்து” நீ அப்பெல்லாம் இப்படி இல்லை நீ ரொம்ப நல்லவன்” என்கிறார் அந்தப் பெண்.

க்ராஸமேனின் டோவேலாவின் கதாப்பாத்திரத்துக்கும் டோவேலாவின் நாடான இஸ்ரேலுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. டோவேலாவின் துயரம் என்னவென்றால்: அவர் தன் இயல்பிலிருந்து மாறி, ஏன் தன்னையே வஞ்சித்துக்கொண்டு, தன் சுயத்தை இழந்தவர். ஒரு காலத்தில் உற்சாகமான – அந்தப் பெண்ணைப் பொருத்தவரை நல்ல – சிறுவனாக இருந்த டோலேவா அவமானத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகி கொடுமைக்காரனாகவும், அடுத்தவர்களிடம் குறைகளை மட்டுமே காணுபவனாகவும் காலப்போக்கில் மாறிப்போனான். அவனுடைய வாழாத வேறுவிதமான தனக்கு உண்மையான வாழ்க்கையின் ஒரு மிகச் சிறிய பகுதியைத்தான் எஞ்சியிருந்த பார்வையாளர்கள் அன்றைய மாலையில் பார்த்தனர்.

க்ராஸ்மேன் ஒரு பேட்டியில் சொன்னார்: இதை ஒரு இணையாக எடுத்துக்கொண்டு நான் நினைத்ததுண்டு, இஸ்ரேலியர்களாக நாம் வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும். 1967ஆம் ஆண்டு நடந்த போர் தான் திருப்புமுனை. 1967இல் தான் இஸ்ரேல் தான் அதுவரை பிடித்துவைத்திருந்த பகுதிகளை தனது அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், சிரியா போரிட்டு தக்கவைத்துக்கொண்டது. ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையையும், எகிப்திடமிருந்து சினாய் மற்றும் காசாவையும், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்சையும் போரிட்டு வென்று அந்தப் பகுதியின் அசைக்கமுடியாத ராணுவமாக உருமாறியது இஸ்ரேல். க்ராஸ்மேனைப் பொருத்தவரை இது ஒரு வரலாற்றுப் பிழை. புவியியல் பிழையும் கூட. அந்தப்பிழை திருத்தப்பட்டால் அல்லது திருத்தப்படும் பொழுது நாம் நம்முடைய அண்டை நாட்டவருடன் சுமூகமாக சண்டையின்றி வாழலாம். நம் வாழ்க்கை இவ்வளவு இருட்டாக நித்தமும் பயமாக இருந்திருக்காது என்று கூறுகிறார்.

மேலும்,

1967க்கு முன்பிருந்த இஸ்ரேலைக் கொண்டாடவில்லை, 1948இல் நடந்ததைப் போன்ற கொடுமைகள் நடந்திருக்கின்றன தான். ஆனால் 1967க்கு முன்பு வரை அடுத்த 50 ஆண்டுகளுக்கு நமது அண்டை நாடுகளுடன் போரிட்டுக்கொண்டிருக்காமல் ஓரளவுக்கு இனக்கமான சூழ்நிலையில் வாழ்வதற்கான வாய்ப்பிருந்தது. வாளால் வாழ்ந்து, வாளால் மடிவது. இன்றைக்கிருக்கும் இஸ்ரேலியர்களுக்கு வேறு வழியில்லை இது தான் ஒரே வழி, இப்படித்தான் வாழ்ந்திருக்க முடியும் என்கிற மனப்போக்கிருக்கிறது. 1967க்கு முன் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த மன்நிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறான கருத்துகளால் க்ராஸ்மேன் ஒரு தேசதுரோகி என்று சிலர் கருதுகின்றனர். நம்ம ஊர்காரர்கள் ஆண்டி-இண்டியன்ஸ், பாக்கிஸ்தானுக்குப்போ என்று சொல்வது போல. 2016இல் இஸ்ரேலிய கலாச்சார மந்திரி பழைய ப்ரிகேடியர் ஜெனரல் மிரி ரெகவ், இடதுசாரி எழுத்தாளர்கள் என்று சிலரைப் பட்டியலிட்டு அவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை இல்லை என்று அறிவித்தார். க்ராஸ்மேனும் அந்தப் பட்டியலில் இருந்தார். உங்களுக்கு பயமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு க்ராஸ்மேன் இல்லை பெருமைப் படுகிறேன் என்றார்.

பார்வையாளர்கள், மேடையில் இருப்பவனின் கதையைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. அந்தக் காமெடியன் சொல்லும் ஜோக்குகள் மட்டுமே அவர்களுக்குத் தேவை. காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை.

டோவேலா தனது கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சிலர் போதும் நிறுத்து, ஜோக் சொல்லு என்று கதறுகிறார்கள். சிலர் கிளம்பி விடுகிறார்கள். டோவேலா ஒரு சில ஜோக் அவ்வப்போது சொல்லத்தான் செய்கிறார்.

உதாரணத்துக்கு:

ஒருத்தர் ஒரு கிளி வளர்க்கிறார். அந்தக்கிளி அவரைக் கண்டபடி திட்டுகிறது. கெட்ட கெட்ட வார்த்தையாலேயே திட்டுகிறது. காது கூசும் அளவுக்கு கழுவி கழுவி ஊற்றுகிறது. யார் இருக்கிறார்கள் இல்லை என்று பார்ப்பதில்லை. வளர்ப்பவர் சொல்லிப் பார்த்தார். கெஞ்சிப்பார்த்தார். எல்லார் முன்னிலையில் திட்டு வாங்கும் பொழுது என்னைத் திட்டவில்லை, என் அட்மினைத்தான் திட்டுகிறது என்று சொல்லி சமாளித்தார். யாரும் நம்பவில்லை என்பது வேறு விசயம். பொறுக்கமுடியாமல் உனக்கு சாப்பாடே கிடையாது என்று பட்டினியும் போட்டுப் பார்த்தார். கிளி அடங்கவில்லை. ஒரு கட்டத்தில் கடுப்பாகி கிளியை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைத்து அடைத்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து கிளியை வெளியே எடுத்தார். கிளி மிகவும் பவ்யமாய் ஐயா என்னை மன்னித்து விடுங்கள். தவறிழைத்து விட்டேன். இனி ஒருபோதும் இது போல செய்யமாட்டேன். உங்களிடம் மரியாதையாகவே உரையாடுவேன். ஆனால் இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்: உள்ளேயிருக்கும் கோழி என்ன தவறிழைத்தது என்று சொன்னது.

மேலும் ஒரு ஜோக், கொஞ்சம் அசைவம்:

நடுக்கடலில் ஒரு சிறிய கப்பல் ஒன்று கவிழ்ந்து விடுகிறது. அதிலிருந்து ஒரு மனிதன் தப்பித்து நீந்தி கஷ்டப்பட்டுக் கரையேறுகிறான். கரையில் அதுபோலவே ஒரு நாயும் ஒரு ஆடும் தப்பித்து கரையேறியிருந்தன. அது ஒரு தீவு. ஒரு மனிதன். ஒரு நாய். ஒரு ஆடு. அவ்வளவே. நாட்கள் ஓடின.வாரங்கள் ஆயின. மாதங்கள் ஆயின. மனிதன் செக்ஸுக்கு காய்ந்துபோய் விட்டான். என்ன செய்வது. யாருடன் செய்வது. ஆடு ஒன்றுதான் வழி என்று முடிவுசெய்து ஆட்டை நெருங்கினான். ரெடியாகும் பொழுது ஒரு உறுமல் சத்தம் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். நாய் பற்களைக் கடித்துக்கொண்டு உறுமிக்கொண்டிருந்தது. மனிதன் இது என்னடா வம்பாப் போச்சு என்று வாலைச் சுருட்டிக் கொண்டு போய்விட்டான். பிறகு நாய் தூங்கும் வரை பொறுமையாகக் காத்திருந்து தூங்கியபின் மெதுவாக தவழ்ந்து தவழ்ந்து ஆட்டின் அருகில் சென்று ரெடியானான். மறுபடியும் உறுமல் சத்தம். வெறுத்துப் போன மனிதன் அடப்போங்கப்பா என்று போய்விட்டான். வாரம் மாதம் ஓடியது நாய் ஒரு நாளும் மனிதனை ஆட்டிடம் நெருங்கவிடவில்லை. வேறெந்தக் கப்பலும் வரவும் இல்லை. வெறுப்பின் உச்சத்தில் இருந்த மனிதன் மற்றுமொரு கப்பல் தூரத்தில் கவிழ்வதைக் கண்டான். அதிலிருந்து ஒரு பெண் கடலுக்குள் குதிப்பதைக் கண்டான். குஷியான மனிதன் நீந்திச் சென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்றி கரை சேர்த்தான். அந்தப் பெண் மிக அழகாக இருந்தாள். சற்று நேரம் கழித்து கண் முழித்த அந்தப்பெண் ஆகா என் ரட்சகரே. என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவரே என்னையே உங்களுக்குத் தருகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். எமை ஆளுங்கள் என்றாள். அதற்கு அந்த மனிதன் எனக்கு ஒரே ஒரு உதவி செய்யுங்கள். அந்த நாயை மட்டும் கொஞ்ச நேரம் பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.

டோவேலோ தன் கதைக்கு நடுவே சில ஜோக்குகள் இது போலச் சொன்னாலும் அவனது கதையிலே அவன் கவனமாக இருக்கிறான். பார்வையாளர்கள் அவனுடைய ஜோக்கிலே கவனமாக இருக்கிறார்கள்.காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை. இதேபோன்றதொரு மனநிலையைத் தான் நாம் (இஸ்ரேலியர்கள்) அகதிகளிடம் காட்டுகிறோம் என்கிறார் க்ராஸ்மேன். நாம் அகதிகளின் கேட்பாரற்ற நிலையைப் பார்க்கிறோம். அவர்களை ஒரு அழுக்கு போல கருதுகிறோம். அவர்களுக்கு நம்மை போல துணிமணிகளை அணிவித்து, அவர்களை நம்மை போன்றதொரு அப்பார்ட்மெண்ட்டில் வைத்து, அவர்களுக்கு நம்மைப் போன்றதொரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்து ஒரு முப்பது விநாடி கற்பனை கூட நாம் செய்ய விரும்புவதில்லை. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, அவர்களை அவர்களுடைய வாழ்க்கையில், ஒரு புதிய இடத்தில், இணைத்துவிட அவர்கள் மீதான நம்முடைய பார்வையை நாம் மாற்றவேண்டும். அவர்கள் இழந்த மதிப்பையும் பெருமையையும் அவர்கள் மீட்டெடுக்க அதுதான் ஒரே வழி என்கிறார் க்ராஸ்மேன்.

எந்த அளவுக்கு இந்த நாவல் – முக்கியமாக டோவேலாவின் கதாப்பாத்திரம் – இஸ்ரேலின் குறியீடு என்று தெரியவில்லை.

இந்த நாவலின் முக்கிய கதாப்பாத்திரம் டோவேலாவா, ஓய்வுபெற்ற நீதிபதி அவிஷாயா அல்லது வாசகர்களாகிய நாமா?

இறுதியில் டோவேலா தன் கதையைச் சொல்லி முடிக்கும் பொழுது எஞ்சியிருப்பது நான்கே பேர் தான். அதில் இருவர் டோவேலாவை முன்பே அறிந்தவர்கள். இதை வைத்து க்ராஸ்மேனிடம் : உங்களுக்கான வாசகர்கள் உங்களுடைய கருத்துக்களால் இது போல குறைந்து வருகிறார்களா என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் நான் எனது கலைக்கு உண்மையாக இருக்கிறேன் என்றார்