நசீர் 3-4

(குறுநாவல்)

3
எங்க ஊர் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றோம். ஊருக்கு போனஉடன் போன் பண்ணு என்று சொல்லிவிட்டு ராஜேஷ் போய்விட்டான். இவன் கூட வந்தால் நன்றாக இருந்திருக்கும். எவ்வளவு சொன்னாலும் மாட்டேனுட்டான். தனியாகத்தான் போகவேண்டும். மதுரைக்கு போகும் பஸ்ஸை தேட ஆரம்பித்தேன்.

பஸ் கிளம்பிவிட்டிருந்தது. நான் 28ஆவது சீட். எனக்கு அருகில் இருந்த ஜன்னல் சீட் காலியாக இருந்தது. ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்து கடையில் இருந்த டொரினோ பாட்டில்கள் எல்லாம் ஆசிட் பாட்டில்கள் போலத் தோன்றவே, நகர்ந்து பழையபடியே அமர்ந்து கொண்டேன். எதுக்கு வம்பு?!

பஸ் விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. நல்ல இருட்டு. பஸ்ஸ¤க்கு உள்ளேயும் வெளியேயும். பஸ் வேகம் குறைந்தது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எட்டிப்பார்த்தேன். பஸ்ஸின் ஹெட் லாம்ப் வெளிச்சத்தில் ஒரு 10,15 பேர் கையில் எதேதோ வைத்துக்கொண்டிருந்தனர். டிரைவர் இஞ்சினை ஆப் செய்தார். இறங்கி ஓடத்தொடங்கினார். பயணிகள் அனைவரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஓடுவதற்கு தயாராக எழுந்தனர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. அனைவரும் என்னைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள். கதவு சாத்தப்பட்டது. பஸ் எங்கிலும் பெட்ரோல் நெடி. அருகில் இருந்தவர் ஜன்னலை உடைக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வசந்தன் கண் முன் வந்தான். பிள்ளையாரே அந்த ஆட்டோ தாடிக்காரனுக்கு பயந்து குங்குமத்தை அழித்தது தவறுதான். மன்னித்துவிடு என்று வேண்டுகிறேன். பிள்ளையார் சிரிக்கிறார். அதனால் என்ன இந்தா குங்குமம் என்று கை நீட்டுகிறார்.. அதற்குள் எனக்கு அருகில் இருந்தவர் குதித்துவிடுகிறார். அடுத்து குதிக்கப்போகும் மற்றொருவரிடம் பிள்ளையார் குங்குமத்தை குடுக்கிறார். அவன் வாங்கிக்கொள்ளாமல் குதித்து விடுகிறான். அவன் குதித்தவுடன் அவனது கைகள் வெட்டப்படுகிறது. தீ எறிய ஆரம்பிக்கிறது. நான் கதறுகிறேன். பிள்ளையார் துதிக்கையில் காற்று ஊதி, தீயை அணைத்துவிட முயற்சிக்கிறார். நான் கதறுகிறேன். முருகா, ஞான பண்டிதா….விழுப்புரம் விழுப்புரம் டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம். வண்டி 15 நிமிடம் நிற்கும். சத்தம் தெளிவாக கேட்டது. அடப்பாவிகளா பஸ்ஸே எறிந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு டீ காபி ஒரு கேடா!

சுற்றும் முற்றும் பார்த்தேன். பயணிகள் டீ குடிக்க இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

எழுந்து உட்கார்ந்தேன்.

4

டீ குடித்து விட்டிருந்தேன். கொஞ்சம் தெளிந்தார் போல இருந்தது. பஸ்ஸில் ஏறினேன். என் இருக்கையில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார். எதிர் இருக்கையில் தலையை கவிழ்ந்திருந்தார். அருகில் சென்றேன். ‘சார்’ பதில் இல்லை. ‘சார்’ சார் நிமிர்ந்து பார்த்தார். சார் இல்லை. ‘தம்பி. இது என் இருக்கை. நீங்கள் ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொள்ளுங்கள்’ என்றேன். தம்பி பார்த்தார். கோதுமை நிறம். அழகான முகம். மீசை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. கூர்மையான கண்கள். சிரமப்பட்டு நகர்ந்து உட்கார்ந்தான். நான் என் சீட்டில் அமர்ந்தேன். என்னால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. சிலரது முகம், ஒருமுறை பார்த்தால் மறுமுறையும் பார்க்கத் தோன்றும் காந்தத் தன்மை கொண்டதாக இருக்கும். மறுபடியும் பார்த்தேன். அவன் முகத்தை ஜன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டான்.ம்ம்ம்ம்..என்ன செய்ய..சிலரது முகம் என்னைப்போல இரும்பாய் இருக்கிறது.

பஸ் கிளம்பியது. நடத்துனர் பயணிகள் எண்ணிக்கையை சரி பார்த்தார். சரியாக இருந்திருக்கும் போல, என்னிடம் வந்தார். என்னிடம் எதற்க்காக வருகிறார்? நான் எனது டிக்கெட் இருக்கிறதா என்று என் சட்டைப் பையில் பார்த்தேன். ஐயோ காணவில்லை. எங்கே வைத்தேன். பேண்ட் பாக்கெட்டில். ஐயையோ காணோமே. என்ன செய்ய. எங்கே பொகணும் என்றார். ‘அது…வந்து..’ என்று ஆரம்பித்தேன். ‘மதுரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்…’ என்றது கணீர் குரல். பையன் டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தான். நான் அமைதியானேன். மணி பார்த்தேன். 11:45. அட! இதோ டிக்கெட்டை கடிகாரத்தில் சொருகி வைத்திருக்கிறேன்.ம்ம்..புத்திசாலி! பிழைத்துக்கொள்வாய். என்று நினைத்து கொண்டேன்.

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. பஸ் எறிந்த பொழுது நான் என்ன ஆனேன் என்று தெரியவில்லை. இந்த முறை அப்படியெல்லாம் விடக்கூடாது! கடைசி வரை பார்க்கவேண்டும்! இன்னும் நன்றாக கண்களை மூடிக்கொண்டேன். விசும்பும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. கனவில் படம் ஏதும் தெரியவில்லை. சந்தேகம் வரவே கண் முழித்துப் பார்த்தேன். பையன் விசும்பிக்கொண்டிருந்தான். கனவல்ல நிஜம் தான் போலிருக்கிறது. எனக்கு என்னவோ போல் இருந்தது.

சிறுது நேரம் அழுவதும் சிறிது நேரம் அமைதியாக இருப்பதும் என்று இருந்தான் அந்தப்பையன். எனக்கு வருத்தமாக இருந்தது!

‘தம்பி’ பதில் இல்லை. அழுகை நின்று விட்டது. ஸ்விட்ச் வெச்சிருப்பானோ? ‘தம்பி’ ம்ஹீம் அசையவில்லை. ‘யாருப்பா நீ? ஏன் அழுகிற? டிக்கெட் தான் எடுத்துட்டியே? பிறகு எதுக்கு அழுகிற? மேற்கொண்டு ஊருக்கு போக உன்னிடம் பணம் இல்லியா? ஏன் அழுகிற?’ பதில் இல்லை.

‘தம்பி உன்னுடைய சோகத்தை என்னிடம் சொல்லக்கூடாதா’

நிமிர்ந்து பார்த்தான். அந்த இருளிலும் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. ‘நீங்கள் இந்துவா’ என்றான். நான் பதில் ஏதும் சொல்லவில்லை.

‘என் பெயர் நசீர்’ என்றான்.

(தொடரும்)

நசீர் 1-2

(குறுநாவல்)

முன்னுரை:
நான் சென்னையில் 2001 ஆம் ஆண்டு வேலை செய்யத் தொடங்கிய போது எழுதிய குறுநாவல் இது. என் அறை நண்பர்கள் இதை விரும்பிப் படிப்பார்கள். என் நண்பன் நவநீதகிருஷ்ணன் தான் எனது முதல் ரீடர். ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் வாங்கி படித்து விடுவான். நான் முழுவதுமாக எழுதி முடித்த ஒரே தொடர் கதை இது. இதை அப்படியே இங்கு கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்ய இருக்கிறேன்.

1

‘மூனு நாள் லீவு தெரியுமா?’ என்றான் ராஜேஷ். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘விளையாடுறியா! வீட்டுக்கு போக கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம், உனக்கு மூனுநாள் லீவு கேட்கிறதா?” என்றேன் சிரித்துக்கொண்டே. ‘இல்லடா மூனுநாள் லீவாம். MD சொன்னார்’ என்றான். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம் மலேசியாவிற்கு புரோகிராம் செய்து கொடுக்கும் நிறுவனம். வேலை பலு அதிகம். அப்படியிருக்க மூனுநாள் லீவு என்பது இயலாத காரியம். ‘சரி! எதற்காக லீவு?’ என்றேன். ‘டிசம்பர் ஆறு வருதுல்ல அதுக்குத்தான்’ என்றான் ராஜேஷ். எனக்கு பகீர் என்றது. டிசம்பர் ஆறுக்கெல்லாமா மூனு நாள் லீவு விடுவார்கள். எதற்காக விடுமுறை விடவேண்டும். ஏன் இப்படி செய்கிறார்கள். ‘மலேசியாவில் ரம்ஜான் கொண்டாடுகிறார்களாம். அதனால் நமக்கு இங்கே மூனுநாள் லீவுடா’ என்றான். ‘ஓ ரம்ஜானா..அதற்குத்தான் லீவா…’ ச்சே நான் எதற்கு வேண்டாததையெல்லாம் கற்பனை செய்து கொள்கிறேன். வீட்டிற்குப் போகலாமா! என்னுடைய ஊர் மதுரைக்கு பக்கமாக உள்ள ஒரு கிராமம். கிராமம் என்றாலும் சற்றே பெரிய கிராமம். அரசியல் கூட்டங்களுக்கும், சாதிக் கூட்டங்களுக்கும், மத போதகர்களுக்கும், ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பெயர் போன ஊர். மதுரைக்கு அருகில் இருப்பதால் கூடுதல் அங்கீகாரம். வீட்டிற்கு போய் ஒரு மாதம் ஆகி விட்டதால் டிசம்பர் ஐந்து கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

இரவு அறையில் வசந்தன் வந்திருந்தான். தானும் ஊருக்கு போக வேண்டும் என்றான். ‘எப்படா கிளம்பற’ என்றேன். ‘வெள்ளிக்கிழமை இரவு. நீ எப்ப போற’ ‘நான் டிசம்பர் ஐந்து. வியாழன் இரவு போகிறேன்’ ‘உனக்கும் ரம்ஜான் அன்று லீவு தானே. நீயும் வியாழக்கிழமையே கிளம்பினால் நாம சேர்ந்தே போகலாம்லடா’ ‘இல்லடா நான் வரல. மறுநாள் டிசம்பர் 6. நான் வரலப்பா’ எனக்கு என்னவோ போல இருந்தது. பய்மாகவும் இருந்தது. எதுவும் அசம்பாவிதமாக நடந்து விடுமோ. நாம போகும் பஸ்ஸை திடீரென்று ஒரு பதினைந்து பேர் சூழ்ந்து கொண்டு கதவை அடைத்து விட்டு தீ வைத்து சென்று விடுவார்களோ. ஐயையோ வேண்டாம். வேண்டாம். பஸ் வேண்டாம். டிரெயினிலே போகலாம். டிரெயினா? அது பஸ்ஸைவிட பாதகமாயிற்றே. ஒரே ஒரு காந்தக்கல் போதுமே. ச்சே ஏன் இப்படி நான் நினைக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. வருவது வரட்டும். நான் டிசம்பர் 5 கண்டிப்பாக ஊருக்கு போவேன். இதைவிட்டால் எனக்கு வேறு லீவு கிடைக்காது. லீவு போனால் வேறு லீவு வரும். ஆனால்..ச்சே..நல்லதையே நினைப்போம். பேப்பரை புரட்டினேன். டிரெயினை கவிழ்க்க சதி! தீவிரவாதிகள் பிடிபட்டனர்! செய்தியை படித்தேன். பஸ்ஸில் போவது என்று முடிவு செய்து கொண்டேன். வசந்தனை பார்த்தேன். வேறொரு பேப்பரில் ஆழ்ந்திருந்தான்.

2
மணி 5:30. வேலை முடிந்து கிளம்பினேன். ராஜேஷ் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் என்பதால், அவனும் என்னுடன் வந்தான். அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக்கொண்டேன். ராஜேஷ¤ம் தான். பிள்ளையாரிடம் அன்று வேண்டுதல் பலமாக வைத்தேன். ஏன் என்றே தெரியவில்லை. நிறைய நேரம் சாமி கும்பிட்டு விட்டேன். உக்கி வேறு. எப்பொழுதும் மூன்று தான். இன்று மூன்று அதிகமாக போட்டேன். குங்குமமும் திருநீரும் இட்டுக்கொண்டேன். ராஜேஷப் பார்த்தேன். அவனைக் காணவில்லை. இவனுக்கு இதே வேலை…ச்சே..தேடினேன். பக்கத்துக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தான். பாதி டீ குடித்துவிட்டிருந்தான். நிறைய நேரம் ஆகிவிட்டிருந்தது போல! ‘என்னடா பலமான வேண்டுதல் போல தெரியுது!’ ‘ஆமா…சும்மாவா… ஊர் போய் சேரனுமில..ஒரு டீ சொல்லு..’

ஆட்டோ பிடித்தோம். உள்ளே சென்று உட்கார்ந்தேன். ஆட்டோ நகர்ந்தது. ராஜேஷ் ஒன்றுமே பேசவில்லை. ரியர்வியூ மிரரில் ஆட்டோ ஓட்டுனரின் முகம் தெரிந்தது. தாடியெல்லம் நிறைய வைத்திருந்தார். கொஞ்சம் முரடாகத்தான் இருந்தார். எனக்கு என்னவோ ஒஸாமா ஞாபகம் வந்தது. ஆட்டோவை வேறு வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். கொஞ்சம் மெதுவாக சென்றால் தேவலாம் போல தோன்றியது. சட்டென்று அவர் என்னை திரும்பிப்பார்த்தார். என்னை முறைப்பது போல தோன்றவே, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். கொஞ்சம் நகர்ந்து ஆட்டோவின் இடது ஓரமாக அமர்ந்தேன். கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தேன். சினிமா போஸ்டர்க்ள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். படம் ஓடுதோ இல்லியோ போஸ்டர் ஓடுது. ஆட்டோ சிக்னலில் நின்றது. பம்பாய் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மனிஷாவைக்கூட பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பினேன். கண்ணாடி தெரிந்தது. இப்பொழுது கண்ணாடியில் எனது முகம். திருநீரும் குங்குமமும் நிறைய இட்டுக்கொண்டிருந்தேன். குங்குமம் மட்டும் பெரிதாக தெரிந்தது. ஆட்டோக்காரர் நிமிர்ந்து பார்த்தார். நான் வேகவேகமாக குங்குமத்தை அழித்தேன்.

இப்பொழுது பிள்ளையார் குங்குமத்தை அழித்துவிட்டோமே என்ற பயம் வேறு சேர்ந்து கொண்டது.

(தொடரும்)

படித்த முட்டாள்கள்

படித்த முட்டாள்களே, ப்ளீஸ் உங்கள் முட்டாள் தனத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.

True Known என்றொரு முட்டாள், ஏதோ ஒரு தேவையில்லாத விசயத்தை தொகுத்து மீண்டும் மீண்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது IP Addressஐ கண்டுபிடித்து cyber-crimeஇல் புகார் செய்வது அவ்வளவு ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. (புகார் செய்தால் ‘போப்பா போய் பிள்ளைகள படிக்கப்போடு’ என்று சொல்வார்கள் என்பது நிச்சயம்!) அது எனக்கு தேவையில்லாத வேலையும் கூட. அவர் தான் ஏதோ பொழுதுபோகாமல் அனுப்புகிறார் என்றால், அதற்கு பதிலாக ccயில் இருக்கிற எல்லாரும் “remove my mailid” என்று ccயில் இருக்கிற மற்ற எல்லோருக்கும் “reply all” போட்டால் என்ன அர்த்தம்? உங்கள் சம்மதத்தை கேட்டுக்கொண்டா எல்லாரும் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் remove my id ன்னு சொன்னா உங்க ஈமெயில் ஐடியை நீக்கி விடவா போகிறார்கள்? Be sensible. ஏன் இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் சகட்டுமானிக்கு spam அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள்? சுத்த சின்னபிள்ள தனமால்ல இருக்கு. True Known அனுப்பறது ஒரு மெயில், இவிங்க பதிலுக்கு அனுப்புறது நாப்பதிரெண்டு மெயில். கஷ்டம்.

சிரிப்பு போலீஸ்!

எதற்கு இந்த வீண் சண்டை? யார் பெரியவர் யார் சிறியவர்? என்னுடைய மெயில் ஐடி எப்படி ஐயா உங்களுக்கு கிடைத்தது? ஒரு தேவையில்லாத மெயில் சிக்குன மெயில் அடிக்கெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வந்துச்சா? யாருக்கு வேணும் உங்க சண்டை? True Known அப்படீங்கற True Unknown தான் இந்த மெயில அனுபிச்சது. சத்தியமாக எனக்கு அந்த anonymous mail வரும்வரை இதில் குறிப்பிட்டிருந்த எந்த சண்டையும் தெரியாது. வலைப்பூக்களில் நடக்கும் சண்டைகளை நான் கவனிப்பதே கிடையாது. அப்போ எனக்கு இந்த மெயில் அவசியமா? அவ்ளோ பெர்ர்ர்ரிய cc list. இதுல காமெடி என்னன்னா, வந்த மெயிலே spam, அதுக்கு நிறைய பேர் மறுமடியும் எல்லாருக்கும் cc போட்டு ‘remove myid’ன்னு சொன்னது. இது மட்டும் spam இல்லியா? உங்களையெல்லாம் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி தான் இருக்கு.

இப்படி வர்ற மெயிலால என் மெயில் பாக்ஸ் நிறைந்து விடும் என்பதற்காக நான் சொல்லவில்லை. ஒரு தேவையில்லாத செய்தியை ஏன் எல்லாருக்கும் அனுப்புகிறீர்கள்? இதே போல் புத்தாண்டு வாழ்த்து வந்தது சரமாக வந்தது. SPAMஆ இருந்தாலும் இத்தனை பேர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதை பார்க்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருந்தது. வாழ்த்துக்களுக்கு எண்ணிக்கையில்லை. ஆனால் ஒருவர் மேல் ஒருவர் தேவையில்லாமல் வீண் பழி சுமத்துவது எதற்கு? ஏன் இந்த கொலைவெறி? ஒற்றுமையாக இருப்போம் தோழர்களே. கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் துவேஷம் வேண்டாமே. ப்ளீஸ்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஆரோக்கியமானதொரு விவாத கருத்துப் பறிமாற்ற மேடையாக மட்டுமே தமிழ் வலைப்பூவை வைத்திருப்போம்.

***

ஜெயமோகனின் (ஆளாளுக்கு ஜெயமோகனைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பான்னு நீங்க புலம்புறது என் காதுல விழுது!) கடிதத்தை மதி கந்தசாமியின் வலைப்பூவில் பார்த்தேன். ஜெயமோகன் அவரது கோபத்தை (அல்லது over-confidence!) கொக்கரிப்பாக வெளிபடுத்தியிருக்கிறார். அவர் வலைப்பக்கமய்யா அது. அவருக்கு என்ன தோணுதோ அத அவர் எழுதுவார். (கூடிய விரைவில் வலைப்பூக்களை கட்டுப்படுத்துவதற்கு கடினமான சட்டதிட்டங்களை கொண்டுவரலாம்.) ஆனா இதுவும் எங்க வலைப்பக்கமுல்ல? நாங்களும் எழுதுவம்ல. எழுதுவம்ல!

நான் மதிக்கு எழுதிய பின்னூட்டத்தின் சாரம் இங்கே::
ஜெயமோகனின் உலகம் தருக்கம் தத்துவம் மற்றும் ஆழமான ?! கேள்விகள் சார்ந்தது என்று அவரே உருவாக்கிக் கொண்டார். தத்துவமும் தர்க்கமும் கொக்கரிப்பில் முடிந்து சக மனிதர்களை மண்ணில் இட்டு மிதிக்கத்தான் செய்யும் என்றால் அந்த தத்துவமும் தர்க்கமும் எதற்கு? தத்துவமும் தர்க்கமும் வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்யவேண்டும். வாழ்க்கையை புரிந்து கொண்டால் “தான்” இருக்காது.

“நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை” என்று அவர் சொல்லியிருப்பது “தான்” என்பதில்லாமல் வேறு எதைக் காட்டுகிறது? அப்ப நீங்க சொல்லும் உங்க தத்துவமும் தர்க்கமும் யாருக்கு? உயிரோடு இருக்கும் பொழுதே தானே தனக்கு சிலை வைத்துக்கொண்டது போலத்தான் இவரது ஸ்டேட்மன்ட்டும் இருக்கிறது.

ஆனால் இதற்காக அவர் புத்தகத்தையெல்லாம் படிக்காமல் நான் இருக்கமாட்டேன். Reading is pleasure.

உங்களையெல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பு போலீஸ் மாதிரிதான் இருக்கு” ன்னு சொல்லிட்டு உடு ஜூட்.

***

சிரிப்பு போலீஸ்

எதற்கு இந்த வீண் சண்டை? யார் பெரியவர் யார் சிறியவர்? என்னுடைய மெயில் ஐடி எப்படி ஐயா உங்களுக்கு கிடைத்தது? (உங்களுக்கு மெயில் வந்துச்சாப்பா?) போலி டோண்டுவாவது காலி காண்டுவாவது! யாருக்கு வேணும் உங்க சண்டை? சத்தியமாக எனக்கு அந்த anonymous mail வரும்வரை போலி டோண்டுவைத் தெரியாது. வலைப்பூக்களில் நடக்கும் சண்டைகளை நான் கவனிப்பதே கிடையாது. அப்போ எனக்கு இந்த மெயில் அவசியமா? அவ்ளோ பெர்ர்ர்ரிய cc list. இதுல காமெடி என்னன்னா, வந்த மெயிலே spam, அதுக்கு நிறைய பேர் மறுமடியும் எல்லாருக்கும் cc போட்டு ‘remove myid’ன்னு சொன்னது. இது மட்டும் spam இல்லியா? உங்களையெல்லாம் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி தான் இருக்கு.

இப்படி வர்ற மெயிலால என் மெயில் பாக்ஸ் நிறைந்து விடும் என்பதற்காக நான் சொல்லவில்லை. ஒரு தேவையில்லாத செய்தியை ஏன் எல்லாருக்கும் அனுப்புகிறீர்கள்? இதே போல் புத்தாண்டு வாழ்த்து சரமாக வந்தது. SPAMஆ இருந்தாலும் இத்தனை பேர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதை பார்க்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருந்தது. வாழ்த்துக்களுக்கு எண்ணிக்கையில்லை. ஆனால் ஒருவர் மேல் ஒருவர் தேவையில்லாமல் வீண் பழி சுமத்துவது எதற்கு? ஏன் இந்த கொலைவெறி? ஒற்றுமையாக இருப்போம் தோழர்களே. கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் துவேஷம் வேண்டாமே. ப்ளீஸ்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஆரோக்கியமானதொரு விவாத கருத்துப் பறிமாற்ற மேடையாக மட்டுமே தமிழ் வலைப்பூவை வைத்திருப்போம்.

***

ஜெயமோகனின் (ஆளாளுக்கு ஜெயமோகனைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பான்னு நீங்க புலம்புறது என் காதுல விழுது!) கடிதத்தை மதி கந்தசாமியின் வலைப்பூவில் பார்த்தேன். அவரது கோபத்தை (அல்லது over-confidence!) கொக்கரிப்பாக வெளிபடுத்தியிருக்கிறார். அவர் வலைப்பக்கமய்யா அது. அவருக்கு என்ன தோணுதோ அத அவர் எழுதுவார். (கூடிய விரைவில் வலைப்பூக்களை கட்டுப்படுத்துவதற்கு கடினமான சட்டதிட்டங்களை கொண்டுவரலாம்.) ஆனா இதுவும் எங்க வலைப்பக்கமுல்ல? நாங்களும் எழுதுவம்ல. எழுதுவம்ல!

நான் மதிக்கு எழுதிய பின்னூட்டத்தை இங்கே தருகிறேன்:

ஜெயமோகனின் உலகம் தருக்கம் தத்துவம் மற்றும் அழமான ?! கேள்விகள் சார்ந்தது என்று அவரே உருவாக்கிக் கொண்டார். தத்துவமும் தர்க்கமும் கொக்கரிப்பில் முடிந்து சக மனிதர்களை மண்ணில் இட்டு மிதிக்கத்தான் செய்யும் என்றால் அந்த தத்துவமும் தர்க்கமும் எதற்கு? தத்துவமும் தர்க்கமும் வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்யவேண்டும். வாழ்க்கையை புரிந்து கொண்டால் “தான்” இருக்காது.

“நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை” என்பது “தான்” என்பதில்லாமல் வேறு எதைக் காட்டுகிறது? அப்ப உங்க தத்துவமும் தர்க்கமும் யாருக்கு? உயிரோடு இருக்கும் பொழுதே தானே தனக்கு சிலை வைத்துக்கொண்டது போலத்தான் இவரது ஸ்டேட்மன்ட்டும் இருக்கிறது.

ஆனால் இதற்காக அவர் புத்தகத்தையெல்லாம் படிக்காமல் நான் இருக்கமாட்டேன்.

“உங்களையெல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பு போலீஸ் மாதிரிதான் இருக்கு” ன்னு சொல்லிட்டு ஜூட்.

***

புது layout! கலக்கறே முத்து!

(நாமளே சொல்லிக்க வேண்டியதுதான்)
புது layoutக்கு மாறியாச்சு. தனி domainஉம் வாங்கியாச்சு. இப்ப குரல்வலை எப்படி இருக்கிறது? கொஞ்சம் பரவாயில்லையா? ப்ரகாஷ், கொஞ்சம் ப்ளீசிங்கான டெம்ப்ளேட்டுக்கு மாறுங்கன்னு ரொம்ப காலத்துக்கு முன்ன சொன்னார். இப்பத்தான் செய்யமுடிஞ்சது. ஆனா ப்ளீசிங்கா இருக்கான்னு தெரியல்ல!

ஆனா bloggerல categories வெச்சுக்கிறது பெரும்பாடா இருக்கும் போல தெரியுது. wordpressல ரொம்ப சிம்பிள். Blogger label கொடுத்திருந்தாலும், label வேற categories வேற இல்லீங்களா? நிறைய workarounds பார்த்தேன். நீங்களும் எதுனா வழி இருந்ததுனா சொல்லுங்க. Page Elementsல page add பண்றதும் கஷ்டமாத்தான் இருக்கு. AddLink button வேலை செய்யமாட்டேங்குது. AdSense போடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

என்ன திடீர்ன்னு layout change and all அப்படீன்னு கேக்கறீங்களா? எல்லாம் நம்ப ஜெயமோகன் சார் தான் காரணம். Blogosphereல நேத்து மொளச்ச காளான் அவர் 🙂 அவரே அவரோட ப்ளாக்க எவ்ளோ அழகா வெச்சிருக்கார், நாம எப்போலேர்ந்து பதிவு மண்ணாங்கட்டி பண்றோம்? அப்படீங்கற ஒரு உத்வேகம் தான்.

கங்கணம், பின் கதைச் சுருக்கம்

(ஜெயமோகன், அழகிய பெரியவன், பெருமாள் முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன், ரஜினி, பார்த்திபன், ஆனந்த விகடன், ஞாநி)

பா.ராகவன் எழுதிய பின் கதைச் சுருக்கம் என்கிற புத்தகத்தை எனக்கு என் நண்பர் ஒருவர் படிக்க கொடுத்தார். கொஞ்ச காலமாக நானும் அவரும் கிடைக்கும் நேரங்களில் நாவல் விவாதம் செய்துகொண்டிருக்கிறோம். ஏதோ நாங்கள் படித்த அளவு. அவர் ஏதேதோ எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லுவார். நிறைய பெயர்களை நான் இதுவரையில் கேள்விப்பட்டதில்லை. அப்பொழுதுதான் பா.ராகவனின் பெயரைச் சொல்லி அவர் எழுதிய நாவல் படித்ததுண்டா என்று கேட்டார். எனக்கு பா.ராகவனை டாலர் தேசத்தின் மூலமே தெரியும். அதனால் அவர் அவ்வாறான (எவ்வாறான? அவை என்ன ரகம்?) புத்தகங்கள் மட்டுமே எழுதுகிறவர் என்று தவறாக நினைத்திருந்தேன். இந்த பின் கதைச் சுருக்கம் புத்தகம் அவருக்கு பிடித்தமான நாவல்களைப் பற்றியது. அவருக்கு பிடித்தமான நாவல்களைப் பற்றி அழகாக கூறியிருந்தார்.
அவர் லிஸ்டில் இருந்த நாவல்களின் பட்டியல் கீழே:

நாவல்: எழுத்தாளர்
அலை உறங்கும் கடல் : பா ராகவன்
ஒற்றன் : அசோகமித்திரன்
ஏசுவின் தோழர்கள் : இந்திரா பார்த்தசாரதி
குட்டியாப்பா : நாகூர் ரூமி
வேள்வித்தீ, காதுகள் : எம் வி வெங்கட்ராம்
நுண்வெளி கிரணங்கள் : சு வேணுகொபால்
மகாநதி : பிரபஞ்சன்
இருவர்: ஆர்.வெங்கடேஷ்
அனுராகத்தின் தினங்கள் : வைக்கம் முகம்மது பஷீர்
ஜனகணமன : மாலன்
வாடாமல்லி : சு சமுத்திரம்

அவர் சொன்ன மூன்று பிற மொழி நாவல்களை நான் இதில் சேர்க்க இல்லை. மேலே குறிப்பிட்ட நாவல் பட்டியளில் நான் ஒற்றன் மட்டுமே படித்திருக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு. அதைப் பற்றி பதிவு ஒன்று எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். பிறகு எப்பொழுதும் போல மறந்துவிட்டது. பா.ராகவன் குறிப்பிட்ட பிறகு தான் நினைவு வந்தது. ஒற்றன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகாக யதார்த்தமாக ஒரு பயணக்கட்டுரை போல ஒரு டயரி போல அசோகமித்திரன் எழுதியிருந்தார்.

அவர் அயோவா பல்கலைக்கழகத்திற்கு எழுத்தாளர் பட்டறையின் நிமித்தமாக மேற்கொண்டிருந்த பயணத்தையும் அதில் அவர் சந்தித்த பிற நாட்டு எழுத்தாளர்களைப் பற்றியும் நிறைய சொல்லியிருப்பார். அதில் ஒரு எழுத்தாளர் சார்ட் போட்டு வைத்துக்கொண்டு அறையில் அடைந்து கொண்டு நாவல் எழுதிக்கொண்டிருப்பார். சார்ட் போட்டுக்கொண்டு எழுத நாவல் என்ன சாப்ட்வேரா? சொல்லப்போனால் சாப்ட்வேரே கூட சார்ட் போட்டுக்கொண்டு செய்யும் பொழுது ஒழுங்காக வருவதில்லை.

எஸ் ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் உருக்கமாக இருக்கும். அவரது ஒவ்வொரு அத்தியாயமும் அவர் சொன்ன எழுத்தாளரைப் தேடிப் படிக்க தூண்டும். ஆனால் பா.ராகவனின் இந்த தொகுப்பு ஒட்டாமல் இருக்கிறது. நான் சொல்றத சொல்லிட்டேன் படிக்கனும்னா படிச்சுக்கோ ரகம். என்னைப் பொருத்தவரையில் ஒற்றன், one hundred years of solitude, விஷ்ணுபுரம், Midnights Children போன்ற புத்தகங்களைப் பற்றி இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என்றே தோன்றியது.

***

இந்தவாரம் என்னவோ கல்யாண சம்பந்தமான விசயங்களையே படித்துக்கொண்டிருக்கவும் கேட்டுக்கொண்டிருக்கவும் பார்த்துக்கொண்டிருக்கவும் வேண்டியதாகிற்று.

பெருமாள் முருகன் எழுதிய கங்கணம் நாவல் படித்தேன். முப்பத்தைந்து வயதைக் கடந்து விட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் மனக்கஷ்டத்தில் இருக்கும் ஒரு கவுண்டரைப் பற்றிய கதை அது. எனக்கு தெரிந்த ஒருவர் நாற்பது வயது வரை திருமணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருந்துவிட்டு, தனது நாற்பத்தி இரண்டாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது கஷ்டம் வேறு மாதிரி. அவர் தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டுத்தான் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தீர்மானமாக இருந்து விட்டவர். வேறு சிலருக்கு ஜாதகத்தில் சிக்கல் இருக்கிறது என்கிற காரணத்தால் திருமணம் தள்ளிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் கதையின் நாயகானான மாரிமுத்துக் கவுண்டருக்கு இது போல காரணங்கள் ஏதும் இல்லை. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் தான். தங்கை ஒருவர் இருக்கிறார். ஆனால் அவருக்கு எப்பொழுதோ திருமணம் ஆகியிருக்கிறது. தனது இருபதாவது வயதில் முதல் பெண் பார்க்கச் சென்றவர் கவுண்டர். ஆனாலும் முப்பத்தைந்து வயது வரை திருமணமாகாமல் இருக்கிறார்.பதினைந்து வருடமாக பெண் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்.

பெருமாள் முருகன் எனக்கு புதிய அறிமுகம். நூலகத்தில் எதேச்சையாக எடுத்தேன். இதற்கு முன்னர் அழகிய பெரியவன் எழுதிய தகப்பன் கொடி என்கிற நாவலை நான் படித்திருந்தேன். கங்கணம் நாவலின் முதல் இரண்டு அத்தியாயம் எனக்கு தகப்பன் கொடியை மீண்டும் படிப்பது போன்றே இருந்தது. ஆனால் அது வேறு, இது வேறு. கங்கணம் நாவலின் தளம் வேறு. தகப்பன் கொடி முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியது. அவர்களது குரல் நாவல் தோறும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். கங்கணத்திலும் அவ்வப்போது அது போன்ற குரல்கள் ஒலித்தாலும், அவை இப்பொழுது என்ன நிலைமை என்பதையும் எடுத்துக்காட்ட தவறவில்லை.

உதாரணத்திற்கு, மாரிமுத்து கவுண்டரின் பண்ணயத்தில் வேலை செய்த அவனது சிறு வயது நண்பன் ராமனை மாரிமுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்க நேரிடுகிறது. அப்பொழுது பேச்சுவாக்கில் மாரிமுத்து, ராமனை மீண்டும் பண்ணயத்து வேலைக்கு அழைக்க, ராமன் திட்டவட்டமாக
“பண்ணயத்து வேலையெல்லாம் இப்ப எந்த சக்கிலி பாப்பான்? அந்தக்காலம் மசக்காலம். பண்ணயமே கதின்னு கெடந்தம். இப்ப வேலையா இல்ல, அத உடுய்யா” என்று திட்டவட்டாமாக மறுத்து விடுகிறார். ராமனும் மாரிமுத்துவும் நண்பர்களாகவே இருக்கின்றனர்.கடைசியில் ராமன் தான் மாரிமுத்துவுக்கு பெண் தேடிக்கொடுக்கிறான். மாரிமுத்துவின் பண்ணயத்தில் இருக்கும் குப்பனுக்கும் நாவலில் மிக முக்கியமான இடமுண்டு. இவ்வாறன விசயங்கள் காலம் மாறிவிட்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

நாவல் முழுவதுமே நான் ரசித்தேன். என் அலுவலகத்திற்கும் என் வீட்டிற்கும் 40 நிமிட ரயில் பயணம். போக வர ஒரு மணி இருபது நிமிடம். கண்டிப்பாக படித்துத்தான் ஆக வேண்டும். இப்பொழுதெல்லாம் கையில் புத்தகம் இல்லாமல் வீட்டை விட்டு இறங்குவதில்லை. கங்கணம் மிகவும் சுவாரஸ்யம். சிங்கப்பூரின் பாதாள ரயிலில் நான் சென்று கொண்டிருந்தாலும், அந்த நாவலின் கிராமங்களை கடந்தே எனது ரயில் சென்று கொண்டிருந்தது. மாரிமுத்து என்னுடனே பயணித்துக்கொண்டிருந்தார். அந்த நாற்பது நிமிடமும் நான் நாவலிலே மூழ்கிக்கிடப்பேன். உண்மையில் அழகாக எழுதியிருந்தார் பெருமாள் முருகன். மாரிமுத்து எத்தனை கஷ்டங்கள் அடைந்திருந்தான் என்பதை இதற்கு மேலாக யாராலும் சொல்லமுடியுமா என்பதும் சந்தேகமே. மேலும் உறவுகள் குறித்தும் ஒரு அசலான அலசலை முன் வைத்திருக்கிறார் பெருமாள் முருகன். ஏதேதோ செல்லாத காரணங்களை முன் வைத்து திருமணத்திற்கு தடையாக இருக்கும் தன் அம்மாவையே வார்த்தைகளால் மாரிமுத்து கடித்து குதறும் பொழுது நமக்கு அவன் மீது கோபம் ஏற்படுவதற்கு மாறாக இரக்கமே மேலிடுகிறது.

மேலும் மாரிமுத்துவின் சித்தப்பா பையன் வேறு ஒரு சாதி பெண்ணை காதலிப்பது தெரிந்து, மாரிமுத்து சந்தோஷப்படுவது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் மறைந்திருக்கும் குரோதத்தை அப்பட்டமாய் எடுத்துக்காட்டுகிறது. “எனக்கு பொறக்கறதும் பசவதான். எம்மாடு போடறதும் காளதான்” என்று பெருமை பொங்க அடித்த தம்பட்டங்களின் கதி என்னவாகும்? ‘பையனுக்கு எத்தன பன்னிக்குட்டி சீராக் குடுத்திருக்கறாங்க’ என்று யாராவது விசாரிக்காமலா போய் விடுவார்கள்? சித்தப்பன் சித்தியை பார்த்து ‘காட்டுல வெள்ளாம இல்லீன்னா சம்பந்தி ஊட்டுக்குப் பன்னி மேக்கப் போயிர்லாம்’ என்று ஜாடையாக வேனும் ஓரிருவர் பேசுவார்கள். மாரிமுத்துவின் யோசனையில் குதூகலம் கூடியது

மாரிமுத்துவும் சாதரண மனிதன் தானே. பதினைந்து வருடங்கள் கழித்து திருமணம் கைகூடி வரும்பொழுது எப்படியும் திருமணம் எந்த தடங்கலும் இல்லாமல் நடந்துவிட வேண்டும் என்கிற துடிப்பு அவனுள் இதயத்துடிப்பை விட அதிகமாக இருக்கிறது. அவன் கொஞ்சமேனும் பாசத்தோடு இருந்த பாட்டி கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த மாரிமுத்து, யாவரும் இருக்கிறார்கள் என்பதை மறந்து, “கிழவி கல்யாணம் வரைக்கும் தாங்குமா?” என்று கேட்கிறான். இது குரூரமாக பலருக்கு தோன்றலாம். ஆனால் அவன் நிலையில் இருந்து பார்த்தோமேயானால், நாம் அந்த வார்த்தைகளை சொல்லியிருக்க மாட்டோம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

இந்த கல்யாணம் என்கிற விஷயத்தைக் கண்டுபிடித்தவன் யாராக இருக்கும்? அவனுக்கு இதற்குள் இத்தனை பிரச்சனைகள் வரும் என்று தெரிந்திருக்குமா? மனித வம்சத்தின் மீது கொலைவெறி கொண்ட ஒருவன், பழிவாங்கும் வகையில் கல்யாண முறையை உருவாக்கியிருப்பான்” என்று மாரிமுத்து யோசிக்கும் பொழுது, அது உண்மையென்றே படுகிறது.

இந்த வார்த்தைகளை கொஞ்சம் கவனமாக பார்க்கவேண்டும். அவன் சொல்வது, கல்யாணத்தைப் பற்றியல்ல. கல்யாண முறையைப் பற்றி. ஆனால் கல்யாணமுறையை நாம் அப்படியேவா பின்பற்றிகொண்டு வருகிறோம். கண்டுபிடித்தவனுக்கு பிறகு அது எவ்வளவோ பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டது. நம்மால் முடிந்த அளவிற்கு நம்முடைய சுயநலங்களையும் குரோதங்களையும் அதன் மேல் ஏற்றிவிட்டிருக்கிறோம். கல்யாணமுறை என்பது நாம் உருவாக்கியதுதானே?

விகடனில் இருந்து குமுதத்திற்கு மாறிவிட்டிருக்கும் ஞாநியின் ஓ பக்கங்களில் அவர் இந்த வாரம் சொன்னதே இந்த சமயத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது:

முதலில் நம் கல்லூரிப் பாடப்புத்தகங்களில் திருக்குறளின் இன்பத்துப் பாலுக்கு இருந்து வரும் நடைமுறைத் தடையை நீக்க வேண்டும். காதல் என்றால் என்னவென்று தெரியாமல், வணிக சினிமா காட்டும் வக்கிரக் காதலால் குழம்பித் தடுமாறி ஆண் பெண் உறவுகளை சிக்கலாக்கிக் கொள்ளும் நம் இளைஞர்களுக்கு உதவுவதற்காக +2 முதல் கல்லூரி வரை கல்லூரி வளாகங்களில் உளநல ஆலோசகர்களை அரசு செலவில் நியமிக்க வேண்டும். தொடர்ந்து தங்கள் குடும்பங்களில் காதல் திருமணங்களை ஊக்குவிக்கும் குடும்பங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் சிறந்த குடும்ப விருது வழங்கவேண்டும்

ஆனால் இது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ரஜினி தன் படத்தில் உபயோகிக்கும் (அவரே பின் பற்றாத) பஞ்ச் டயலாக்கைப் போல. ஆனால் இதை நடைமுறைப்படுத்தினால், நடைமுறைப்படுத்தும் அந்த கட்சிக்கு (அது எவ்வளவு பெரிய வெங்காய கட்சியாக இருக்கும் பட்சத்திலும்) டெபாசிட் கூட தேராது என்பது மட்டும் உண்மை. ஞாநியின் இந்த கட்டுரையை படித்த தலைவர்கள் கண்டிப்பாக ஒரு சிரிப்பு சிரித்திருப்பார்கள். விகடன்ல இருந்து தூக்கினதுக்கு இப்பல்ல காரணம் தெரியுது என்று கூட அவர்கள் யோசித்திருக்க கூடும்! இவ்வாறன புரட்சிகர கருத்துக்களை எவ்வளவு காலம் குமுதம் வெளியிடுவார்கள் என்பதும் தெரியவில்லை.

பேசாமல் ஜெயமோகன் போல ஒரு வலைப்பூ ஆரம்பித்து, தன் இஷ்ட்டத்துக்கு எதை வேணுமென்றாலும் ஞாநி எழுதிக்கொள்ளலாம். அப்படி எழுதும் பொழுது, அதை கண்டித்து தன் புத்தகத்தில் வெளியிட்டு விகடனோ குமுதமோ இலவச விளம்பரம் தேடித்தருவார்கள். ஜெயமோகனுக்கு அடிச்சது லக், அவரது வலைப்பூக்கு இலவசமாக விகடன் போஸ்டர் அடித்து விளம்பரம் தேடித்தந்திருக்கிறது. இதுநாள் வரை ஜெயமோகனை எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் இப்பொழுது அவரது ப்ளாக்கும் கண்டிப்பாக எல்லாருக்கும் (விகடன் வாசகர்களுக்கு) தெரிந்திருக்கும். விகடனின் இலவச போஸ்டர் விளம்பரம், மேலும் சும்மா வேலை இல்லாமல் உட்கார்ந்திருக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அதை forward செய்ததன் மூலம் மேலும் விளம்பரம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த எம்ஜியார் காமெடி நான் சிறு பையனாக இருந்த பொழுது பாபு-கோபு என்கிற மிமிக்கிரி கோஷ்டியின் கேசட்டிலே கேட்டிருக்கிறேன். இது தமிழ்நாட்டிலிருக்கும் எல்லாருக்கும் தெரிந்தது தான். ஜெயமோகன் சொல்வதினால் என்ன கேடு வந்துவிட போகிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. விகடனுக்கும் விளம்பரம், நாங்கள் காலத்தோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறோம் பாருங்கள், ஜெயமோகனின் வலைப்பூவை கூட நாங்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்பது போன்று. இருவருக்கும் win-win.

எங்கேயோ அரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன். கங்கணம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். இந்த உலகத்தில் எதுவும் கண்டிப்பு இல்லை. இந்த புத்தகத்தை படிப்பதனால் ஏதும் கிடைக்கப்பெறும் என்றோ, படிக்காவிட்டால் ஏதும் கிடைக்காது என்றோ சொல்லமுடியாது. நாவல்கள் படிக்காதவர்கள் நிறைய பேர் நம்மை விட எல்லாம் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். என் நண்பன் ஒருவன், எப்பொழுதும் டீவி பார்த்துக்கொண்டேயிருப்பான். நான் ஒருமுறை அவனிடம், ஏன்டா எப்பபார்த்தாலும் டீவி பார்த்துக்கிட்டே இருக்க, ஏதாவது படியேன் என்று சொல்வேன். அதற்கு அவன் சொல்வான், நீ படிக்கறதுனால சந்தோஷமா இருக்க, நான் டீவி பார்க்கறதுனால சந்தோஷமா இருக்கேன், மொத்ததில நாம் ரெண்டு பேறும் சந்தோஷமாத்தான் இருக்கோம்?

எனக்கு இந்த நாவல் முழுதுமே பிடித்திருந்தாலும், நான் படித்து முடித்தபின்னும் அசை போட்டுக்கொண்டிருக்கும் வரி: கனவுகள் முடிகளைப் போலே உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. நல்ல நாவல். படிப்பதினால் தவறில்லை. படியுங்கள். நான் இந்த நாவலை வெள்ளிக்கிழமை படித்து முடித்தேன், சனிக்கிழமை காலை எழுந்து சாப்பிட்டு விட்டு, டீவியை போட்டால், நீ வருவாய் என படம் ஓடியது. பார்த்திபன் நெடு நாட்களாக பெண் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பார். ஆச்சரியமாக, அந்தப் படத்தில் பார்த்திபன் கவுண்டர்.

***

படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி

ரிக்கி பாண்டிங்,ரஜினிகாந்த், IBN-CNN, ஜல்லிக்கட்டு, மும்பை மானபங்கம்

There’s a breathless hush in
the class tonight
Ten to make and the match to win
A bumping pitch and a
blinding light.
An hour to play, and
the last man in.
And it’s not for the sake of a
ribboned coat.
Or the selfish hope of a
season’s fame,
But his captain’s hand on
his shoulder smoke
Play up! Play up! And play
the game!

Henry Newbolt எழுதிய இந்த கவிதையை Ricky Ponting மனப்பாடம் செய்யவேண்டும். மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது, இதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். விளையாட்டு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் திடலில் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்கவேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

Chak de India திரைப்படத்தை BCCI சாருக்கானுக்கு ப்ரத்தியேகமாக போட்டுக்காட்டலாம். மேலும் சாருக்கானுடன் ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்யலாம். நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் தெருச்சண்டை மனோபாவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது, ஆஸ்திரேலியாவின் மீது தீராத காண்டிலிருக்கும் மற்ற அணிகளுக்கு, மகிழ்ச்சியைத் தருவதாக இருந்திருக்கும்.

Peter English என்கிற ஆஸ்திரிலேய எடிட்டர், crickinfoவில் எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்:

“Somebody probably a preschool teacher, needs to explain simply to Ricky Ponting
about the damages that has been caused by his team during the Sydney Test”

ஆனால், விளையாட்டு விளையாட்டு தான், போர் இல்லை, என்கிற விசயத்தை இந்தியர்களாகிய நாம் சொல்வதற்கு தகுதி உடையவர்களா என்பதையும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டும். டோனி வீடு தாக்கப்பட்டதை இந்த நேரத்தில் நாமெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே மேலே கொடுக்கப்பட்ட Henry Boltஇன் கவிதையை, ரிக்கி பாண்டிங் படிக்க வேண்டும். படித்து விட்டு, அவர் இந்தியர்களுக்கும் தாரளமாக forward செய்யலாம்.

ஆனாலும் கங்கூலி அவுட் ஆனது, கொஞ்சம் ஓவர்தான். அவுட் இல்லை என்று தீர்மானமாக நின்ற கங்கூலியைப் பார்த்து ரிக்கி பாண்டிங் கோஷ்டி சிரித்தது மேலும் எரிச்சலூட்டுவதாக அமைந்தது. அம்பையர்களே நீங்கள் தூங்குங்கள் தவறில்லை. Afterall, then and there, every one takes a nap, during his work. ஆனால் தூங்கி எழுந்தபின், third umpire, என்கிற ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***

BCCI, கடைசி மேட்சை கேன்சல் செய்யப்போகிறது, என்கிற அறிவிப்பு வெளியானதும், அவர்கள் எவ்வளவு பணம் ஸ்பான்ஸர்ஸ¤க்கு கொடுக்க வேண்டியது இருக்கும் என்கிற எண்ணம் எல்லார் மனதிலும் உதித்தது. எல்லாரும் ஒவ்வொரு கணக்கு போட்டனர். ஆனால் அந்த கணக்கில் என்னுடைய 25$ சேர்க்கப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை. நானும் தானயா subscribe பண்ணிருக்கேன்? எனக்கு யார் பணத்தை திருப்பி தருவா? என்கிற குழப்பம் என்னுள் இருந்தது. என் நண்பர்கள் யாவரும் அப்படி திருப்பித் தருவதற்கு வாய்ப்புகள் ரொம்பவும் கம்மி என்றே சொன்னார்கள். எனக்கு புரியவில்லை, ஏன் என்னுடைய பணமும் தானே முக்கியம். இந்த முறை பார்த்துவிடலாம் என்கிற ஆவலோடு இருந்தேன், ஆனால் BCCI மேட்ச் நடக்கும் என்கிற முடிவுக்கு சென்று விட்டது, கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஆனால் ஆஸ்திரிலேயாவின் ரெக்கார்ட்டை இந்தியா முறியடிக்கப்போகிறது (மறுபடியும்!) என்கிற நினைப்பு வரும் பொழுது அந்த ஏமாற்றம் மறைந்து விடுவது என்னவோ உண்மைதான்.

Over Confidence! நமக்கு சூடு சொரணை இருக்கா இல்லியாப்பா?

இன்னிக்கு பட்டிமன்றத்துல கூட ராஜா சொன்னார்: இந்தியா ஜெயிக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படுது, அப்படி ஜெயிக்கறமாதிரி போனாக்கூட பக்னர் வந்து பக்குன்னு அமுக்கிடறார்

***

ரஜினிகாந்த் ஷங்கர் படத்தில் மீண்டும் நடிப்பது ரெட்டிப்பு மகிழ்ச்சி. அவர் முதல்வனிலே நடித்திருக்க வேண்டியது. ஷங்கரின் தாக்கம் ரஜினியிடம் நிறையவே இருக்கிறது இப்பொழுது. He is aiming big, bigger than ever before. முதல்வனில் ரஜினி நடித்திருந்தால், பத்து வருஷத்தில் கண்டிப்பாக நிறைய மாற்றங்கள் நடத்திருக்கும். இந்நேரத்துக்கு ஒரு international ஹீரோவாக வளர்ந்திருப்பார். ரம்யாகிருஷ்ணனோடு அதிகமா ஆசைபடற ஆம்பள ஆப்பாயில் போடத்தெரியாத பொம்பளன்னு தத்துவம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டார்.

இப்பொழுதுதான், ரஜினிகாந்தை வடக்குப்பக்கத்து மக்கள் திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். (அவங்க திரும்பிப் பார்த்தா என்ன, பாக்காட்டி நமக்கென்ன?) CNN-IBNல வந்த ஒரு செய்தி:

The third contender is ultimate style king Rajnikanth. It will be a travesty to
call him the ageing style king, because he showed in Sivaji-The Boss that age
just has nothing to do with it. For one, you cannot make out he is ageing. And
two, does it matter?

The film turned out to be a big blockbuster,
packing cinema halls even in the north. He can fight, sing and dance just as
well as the youngest Kapoor on the block — Ranbir ‘Saawariya’ Kapoor — if not
better: the kid can learn a few things from Rajnikanth.

அடெங்கப்பா “learn a few things from Rajnikanth” இதற்கு முன்னர் ரஜினிகாந்துக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது, தளபதி படத்தின் போது என்று தான் நான் நினைக்கிறேன். Filmfare அட்டையில் வெளிவந்த ரஜினிகாந்தின் அந்த புகைப்படம் தான், என்னுடைய, இதுநாள் வரையிலான favourite. அந்த படம் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள்.

ஒரு வைட் பைஜமா குர்தாவில் அழகாக கைகளை மடித்துவிட்டு சிரித்துக்கொண்டிருப்பார் ரஜினிகாந்த்.

***

CNN-IBN Indian of the year Listஇல் ரஜினிகாந்த் மற்றும் கங்கூலி ஆகிய இருவரும் வந்தது இனிய அதிர்ச்சி. இவர்கள் இருவரின் மீதும் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. இவர்கள் இருவரின் போராட்ட குணம் அனைவருக்கும் ஒரு பாடம். எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல், மீண்டும் எழுந்து வர முடியும் என்று நிரூபித்தவர்கள் இவர்கள் இருவரும். நான் ஓட்டு போட்டுட்டேன்.

ஆனால் ரஜினிகாந்தை CNN-IBN லிஸ்டில் சேர்த்தது, தெற்கு பக்கத்து மக்களையும் கவர வேண்டும் என்கிற வியாபார தந்திரமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

***

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த பொழுது எழுத ஆரம்பித்த பதிவு இது. இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம் செய்யப்பட்டு விட்டது. எதுக்கு இந்த வீண் பந்தா? ஏன் ஜல்லிக்கட்டுக்கு தடை? இந்தியாவிலே ஒரே ஒரு இடத்தில் தான் இது நடக்கிறது அதையும் காலி செய்து விடலாம் என்கிற நோக்கமா? இது ஆண்டாண்டு காலமாக நடக்கும் வீர விளையாட்டு. இதில் வீரம் எங்கிருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். என்னது? வீரம் இல்லியா? இந்த விளையாட்டை டீவியில் பார்ப்பதற்கு கூட வீரம் வேண்டுமப்பா. உயிர் போகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? அடா அடா என்னே உங்களது மக்களின் மீது இருக்கும் பாசம்? உங்கள் பாசம் என்னை வியப்படைய வைக்கிறது. மற்ற எல்லவற்றையும் சரிசெய்தாகிவிட்டது. இது தான் பாக்கி. இந்த ஜல்லிக்கட்டை நிறுத்தி விட்டால், இந்தியாவில் உயிர் சேதமே இருக்காதா? இது வீர விளையாட்டு. தமிழர் குணங்களில் எஞ்சி நிற்கும் ஒரு சில குணங்களில் இதுவும் ஒன்று. நம்மாளு இலவசத்துக்கும் க்யூவில நிப்பான், மாட்ட அடக்கறதுக்கும் க்யூவில நிப்பான். எங்களை பாதுகாத்துக்க எங்களுக்கு தெரியும். நாட்ல காயர்லாஞ்சிக்கு தீர்ப்பு கிடைச்சாச்சான்னு பாருங்கப்பு.

***

ஜல்லிக்கட்டுக்கு தடைன்னு மட்டும் வேகவேகமா தீர்ப்பு எழுதத் தெரியுதுல? அதே தீர்ப்ப அதே வேகத்தோட, பம்பாயில் பெண்களை ஒரு கும்பலே மானபங்கம் செஞ்சதே, அத ஒரு வாரத்துக்குள்ள கண்டுபிடிக்கனும்னு, இல்லீன்னா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்னு தீர்ப்பு எழுதச்சொல்லுங்க பார்ப்போம்? முடியாது. ஆயிரெத்தெட்டு ரூல்ஸ் இருக்கு. கைது செய்யப்பட்டவங்களுக்கு பெயில் கிடைக்குது. காயர்லாஞ்சி என்ன ஆச்சு? கேஸ் நடத்துக்கிட்டே இருக்கு. ஏன், இந்த மாதிரி கேஸ்ஸ¤க்கு கூட வேகமா தீர்ப்பு எழுத முடியாதா? ஒன்னுமே புரியல.

இன்னிக்கு, இன்னவரைக்கும் மும்பை கேஸ்ல கண்டுபிடிச்சத, ரேணுகா சவுத்ரி விசாரிக்க போகிறார். என்ன நடக்குதுன்னு பாப்போம்.

***

பத்திரிக்கைகளின் வேலை ஒரு செய்தியை எழுதுவதோடு மட்டுமே முடிவடைவதில்லை. அதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். இப்பொழுது ப்ளாகர்களே செய்திகளை பதிவு செய்கிறன்றனர். பத்திரிக்கைகளின் வேலை, செய்திகளை follow-up செய்வது. பின்ன என்ன இதுக்கு நம்பர் ஒன் புலனாய்வு இதழ்ன்னு அட்டையில போடனும்?

எத்தன மறக்கப்பட்ட கேஸ்கள்? அவையெல்லாம் என்ன ஆயிற்று?

***

யார் முழித்திருக்க போகிறார்கள் – 7

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மொத்தத்தில் இது எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. பன்னாட்டு நிறுவனங்களின் அமைப்பு, மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்ட போதும், அவற்றை குற்றம் சுமத்தமுடியாததாய் இருப்பதை இந்த வழக்கு அப்பட்டமாய் உலகுக்கு உணர்த்தியது.

UCC பழியை சராசரியாக பிரித்துக்கொடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. கடைசியில், நடந்து முடிந்த துயரத்துக்கு UCC காரணமாக இருந்தால், அதே அளவு பழி மத்தியபிரதேச அரசுக்கும் மாநில அரசுக்கும் போய் சேரவேண்டும் என்று UCC கணக்கிட்டது. பழியை பிரித்துக்கொள்வது புத்திசாலித்தனம். இழப்பீட்டுத் தொகையையும் கணிசமாக குறைக்கலாமே!

உதாரணத்துக்கு:

  1. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய சட்டதிட்டங்கள் ஏன் அவற்றை கட்டுப்படுத்தவில்லை?
  2. மிக நுணுக்கமான தொழில் நுட்ப திட்டங்கள் கொடுக்கப்படாமல் இருந்த பொழுதும் ஏன் MIC தொழிற்சாலையை நிறுவ அரசு சம்மதித்தது?
  3. லைசன்ஸ் ஏன் வழங்கப்பட்டது?
  4. Design Transfer Agreement என்ற ஒன்று இருக்கிறதே, அது எப்படி செயற்திட்டத்திற்கு மட்டும் UCCஐ பொறுப்பாக்கிவிட்டு, அதன் பின்விளைவுகளுக்கு பொறுப்பாக்காமல் விட்டது?
  5. மருத்துவ உதவி, பொது அறிவிப்பு முறை மற்றும் மக்களை வெளியேற்றும் திட்டங்கள் ஏன் முதன்மை செயற்திட்டத்தோடு இணைக்கப்படவில்லை?
  6. தொழிற்சாலையை பரிசோதிக்க வந்த அதிகாரிகள், UCCயின் பிரதிநிதிகள் சொன்ன தகவல்களை, ஏன் அப்படியே முழுவதுமாக நம்பினார்கள்?
  7. ஒரு பேராபத்தை விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைக்கு பாதுகாப்பு அம்சங்கள் கண்டிப்பாக தேவையான ஒன்று தானே? அதை ஏன் இந்திய அதிகாரிகள் சரிவர கண்காணிக்கவில்லை?

முக்கியமாக, அக்டோபர் 1984இல், தொழிற்சாலைக்கு மிக அருகில், அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி குடியேறியவர்களுக்கு, சட்டபூர்வமாக பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை சட்டமன்றம் நிறைவேற்றியது. தொழிற்சாலை வந்தபிறகு, மிகுந்த ஆபத்தான பகுதியாக மாறிவிட்ட இந்த குடியிருப்புகளை காலிசெய்ய முயலாமல், அதற்கு எதிர்மறையாக, அரசு அவர்களுக்கு பட்டாக்கள் வழங்கியது ஏன்?

போப்பால் ஆக்ட் இழப்பீட்டை பெறுவதற்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்த போதும், அரசாங்கத்தின் அசட்டையான செயல்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களை பாதித்தது. இறந்தவர்களின் புள்ளிவிபரங்கள், மற்றும் காயமடைந்தவர்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் அவர்களது காயங்களின் முழு தன்மை போன்றவற்றை சேகரிக்கும் வேலையை அரசாங்கம் சரிவரச்செய்யவில்லை.ஆம், அரசாங்கம் தன் வேலையை, பாதிப்பு ஏற்படும் முன்னரும் சரியாக செய்யவில்லை, பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் சரியாக செய்யவில்லை.

இந்தியாவின் பெட்டிசன், போப்பாலில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் இழப்பின் மிகச்சரியான அளவை சுட்டிக்காட்டத் தவறிவிட்டது, என்பதை UCC உடனடியாக நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியது. விஷவாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிக்கையின் வெளியிடப்பட்ட எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இறந்தவர்களின் எண்ணிக்கை : 1,760. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 30,000 – 40,000. வழக்கின் அனைத்து விசாரிப்புகளின் போதும் இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. சுப்ரீம் கோர்ட் 1989இல் இறுதி தீர்ப்பு வழங்கியவரை இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. பாதிக்கப்பட்டவர்களில் மிகச்சிறய -மிகமிகச்சிறிய- விழுக்காட்டினரே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர். எனவே, விடுபட்ட எஞ்சிய மற்ற மக்களுக்கு எந்த ஒரு தீர்ப்பையும் நீதிமன்றம் கொடுக்க இயலவில்லை. சொல்லுங்கள். ஒழுங்காக கணக்கெடுப்பது அவ்வளவு கடினமான வேலையா? அதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய கணக்கு?

இந்திய பெட்டிசனின் மிகப்பெரிய பலவீனம் இது. சுப்ரீம் கோர்ட் ஒரு மிகக்குறைவான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு வழிவகை செய்ததோடு மட்டுமில்லாது,இழப்பீட்டுத் தொகை மட்டுமே போதும் வேறு எந்த தண்டனையும் தேவையில்லை என்கிற மனப்போக்கு உருவாக காரணமாகவும் இருந்தது.UCC தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் சரமாரியாக மறுத்தது. அது சொன்ன காரணங்கள் : குற்றங்கள் தெளிவாக இல்லை. புள்ளிவிபரங்கள் தவறு.

“தான் குற்றம் செய்ததை ஒத்துக்கொள்ளக்கூடாது” என்பதில் UCC கவனமாக இருந்தது. நடந்த பேரிடருக்கு தண்டனையாக இழப்பீட்டுத்தொகையைக் கொடுக்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தது. ஆம். அது குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை – மிக குறைந்த இழப்பீட்டுத்தொகை – வழங்கத்தயாராக இருந்தது, ஆனால் ஏற்பட்ட இழப்புக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்க தயாராக இல்லை.

இந்தியாவும் தன்னால் இந்த வழக்கில் ஜெயிக்க இயலாது என்பதையே உலகுக்கு காட்ட விரும்பியது.

ஒன்று: பாதிக்கப்பட்டவர்கள் துன்பத்தில் உலன்று கொண்டிருக்கும் போது, அவர்கள் சிறிது சிறிதாக செத்துக்கொண்டிருக்கும் போது, இந்த வழக்கை முடிக்காமல் UCCயுடன் சண்டையிட்டுக்கொண்டேயிருப்பது.

இரண்டு: UCC கொடுக்க இருக்கும் இழப்பீட்டுத் தொகையையும், நிபந்தனைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஏப்ரல் 4 1987

நியூயார்க்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முழுதாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட பொழுதும் UCC இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. ஏப்ரல் 4 1987 அன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி M.W. Deo, UCCஐ இடைக்கால இணக்க நிவாரணமாக 270 மில்லியன் டாலர் வழங்க உத்தரவிட்டது.நீதிபதியின் இந்த யோசனை, ஒரு தனிநபர் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக, தொடர்ந்த வழக்கின் எதிரொலியே ஆகும். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில், இறுதி இழப்பீட்டுத் தொகை வரும் வரையில், உதவியாக இருக்கட்டுமே என்ற எண்ணம் தான்.

துரதிர்ஷ்டவசமாக சில சட்ட சிக்கல்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சனையை உண்டுபண்ணின. நாடகத்தின் அடுத்த காட்சி முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜபல்பூர் நீதிமன்றத்துக்கு இடம்மாறியது. அங்கே மீண்டும் சட்ட பிரச்சனைகள் அலசப்பட்டன, எப்பொழுதும் இருக்கும் நீதிமன்றத்தின் காலதாமதங்களும் உடன் சேர்ந்துகொண்டன. கடைசியாக UCC எந்தவொரு இடைக்கால நிவாரணத்தொகையையும் வழங்க மறுத்தது.

ஒரு பேரிடர் இயற்கையால் (அல்லது கடவுளால்!!) ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் நிவாரணத்தொகை பல திசைகளிலிருந்தும் இருந்து குவிந்தவண்ணம் இருக்கிறது. ஆனால் அதே பேரிடர் மனிதானால் ஏற்பட்டது என்றால், அனைத்து திசைகளையும் கதவுகளையும் அரசியல் அடைத்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக சட்டம் மற்றும் அரசியல் என்னும் கடினமான வலையில் சிக்கிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது தொலைதூரத்தில் தெரியும் காணல் நீராகவே இருந்தது.

பிப்ரவரி 14 1989

குரூரமான இந்த சட்டத்தின் யுத்தம், நான்கு வருடங்கள் நான்கு வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்தன. கடைசியாக பிப்ரவரி 14 1989 அன்று இந்த நாடக அரங்கின் திரை கடைசியாக இறக்கப்பட்டது, நாடகம் முடிந்தது. இரு தரப்பினரும் நீதிமன்றம் விதித்த இழப்பீட்டுத்தொகையை ஒத்துக்கொண்டன. அதற்குள்ளாக அரங்கு இந்தியாவின் மிக உயர்ந்த சட்டகோயிலாக கருதப்படும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாறியிருந்தது. UCC 470 மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. போப்பால் மாவட்ட நீதிமன்றத்தில் முதன்முதலில் 1986இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டபொழுது இழப்பீட்டுத் தொகையாக கோரப்பட்டது எவ்வளவு தெரியுமா? 3 பில்லியன் டாலர். சுப்ரிம் கோர்ட் இழப்பீட்டுத் தொகையை கனிசமாக குறைத்திருந்தது.

அதிர்ச்சி அலைகள் ஏமாற்றத்துடன் நாட்டை சுற்றி சுற்றி வந்தன. கூச்சலும் சத்தமும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் சத்தமாக கேட்டது. கண்டனப் பேரணிகள் போப்பாலிலும் டெல்லியிலும் நடந்தன. இழப்பீட்டுத் தொகை ஒரு துரோகம். இரண்டாவது விபத்து என்று வர்ணிக்கப்பட்டது. இந்த மாதிரியான தேவையில்லாத சமரச உடன்படிக்கைக்கு என்ன காரணம்?

போப்பால் வழக்கு இரண்டும் காரணிகளைச் சார்ந்திருந்தது – நஷ்டயீடு மற்றும் பொறுப்பு. வேறு வார்த்தைகளில் சொல்லுவதாக இருந்தால், எவ்வளவு பணம் இந்த பேரிடரை ஈடு செய்யும்? நடந்த விபத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

நஷடயீடும், பொறுப்பும் இரண்டு வெவ்வேறு காரணிகள் அல்ல. ஒன்றை ஒன்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த விதிக்கு எதிர்மாறாக இழப்பீட்டு தொகை மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டும் முற்றிலும் வேறு வேறு என்பதைத் தான் தீர்ப்பு நிரூபித்தது. UCC ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கத்தயார், ஆனால் ஒரு நிபந்தனை, UCCக்கு எதிரான அனைத்து சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தள்ளூபடி செய்யவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அப்படி தள்ளுபடி செய்யவில்லை என்றால் UCC நஷ்டயீடு வழங்காது. நஷ்ட ஈடு வழங்கினால், குற்றம் உறுதிப்பட்டது என்பது தானே அர்த்தம்? அதென்ன நஷ்ட ஈடு வழங்குவேன், பொறுப்பு ஏற்க மாட்டேன் என்பது?

UCC ஆரம்பத்திலிருந்தே ஒரு நஷ்டயீட்டுத் தொகை வழங்குவதில் ஆர்வமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால் அது அவர்களின் தந்திரங்களில் ஒன்று. இந்தியா நியூயார்க்கில் முதன் முதலில் வழக்கு பதிவு செய்ததற்கு முன்பே, UCC ரூபாய். 300 கோடி – அறுபது கோடியை உடனடியாக வழங்குவது என்றும், அடுத்த முப்பது வருடத்திற்கு 8 கோடி வருடா வருடம் வழங்குவது என்றும்- தருவதற்கு தயாராக இருந்தது. நீதிமன்றத்துக்கு வெளியே நஷ்டயீடு கொடுத்து வழக்கை முடித்துவிடுவதற்கான முயற்சி எப்பொழுதும் நடந்துவந்தேயிருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் வழக்கு முடிவுக்கு வந்தபொழுது, UCC தான் ஜெயித்தது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் விபத்துக்கு அது எந்தவகையிலும் பொறுப்பேற்கவில்லையே!

இந்த வழக்கை அமெரிக்காவின் புகழ் பெற்ற மற்றொரு வழக்குடன் ஒப்பிடலாம். எக்ஸானுக்கு (Exxon) சொந்தமான எண்ணெய்க் கப்பல், கடலில் 10 மில்லியன் கேலன் எண்ணெய் சிந்திய வழக்கு அது. இது நடந்தது 1989, இடம் அலாஸ்கா. இந்த விபத்தில் யாரும் உயிரிலக்கவில்லை, ஆனால் எக்ஸான் 5 பில்லியன் டால்ர்களை இழப்பீடாக வழங்கியது. கணக்கிட்டால் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நீர்நாய்க்கும் 940$ வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் விஷ வாயுவால் வாழ்க்கை முழுவதற்கும் ஊணமாக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா? ஒவ்வொருவருக்கும் 500$.

அமெரிக்க நீர்நாயிலும் கேவலமானவனா இந்தியன்?

(தொடரும்)

இந்தியன் ஏர்லைன்ஸ் : புகார் பக்கம்

இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaints blog ஒன்று create செய்திருக்கிறேன். இந்தியன் ஏர்லைன்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சென்று தங்களது புகார்களை பதிவு செய்யலாம். நிறைய புகார்கள் இருக்கும் பட்சத்தில் யாரேனும் முக்கிய புள்ளி அல்லது ரிப்போர்டருக்கு அனுப்பலாம். இது ஒரு முயற்சியே.

புகார்களை மேலதிகாரிகளுக்கும் அவர்களுக்கு மேல் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்பதே இந்த புகார் பக்கத்தின் நோக்கம். இந்தியன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து இந்த மாதிரி தவறுகளை செய்துகொண்டிருக்க முடியாது.

(நான் செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்ட அன்று, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த நான், அன்று அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலரிடம், கையழுத்து வாங்கி வைத்திருக்கிறேன். மேலும் பெரும்பாலன நபர்களின் பாஸ்போர்ட் நம்பர்களும் இருக்கின்றன. புகார்கள் அதிகம் வரும் பட்சத்தில், இதையும் சேர்த்து வைத்து அனுப்பலாம்.)

இதை விட்டு விட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது டைகர் ஏர்லைன்ஸில் செல்வது தானே என்று கேட்பவர்களுக்கு, முடிந்த வரை இந்தியன் ஏர்லைன்ஸை மாற்ற முயற்சிப்போம். முடியாவிடில் பரவாயில்லை. நமக்கு ஏதும் நட்டமில்லை. நான் இந்த பதிவை டைப் செய்த நேரமும், zohoவை உபயோகித்து புகார் பக்கம் தயாரித்த நேரமும் மட்டுமே வீணடையும். பரவாயில்லை. இல்லையென்றால் மட்டும் என்ன செய்திருக்கப்போகிறேன்.

அடித்தால் மாங்காய் இல்லையேல் கல். நமக்கு பெரிதாக நட்டம் ஒன்றும் இல்லை. ஆனால் நமது புகார்கள் செவிமெடுக்கப்பட்டால் இந்தியன் ஏர்லைன்ஸ் திருந்த வாய்ப்பிருக்கிறது.

உங்களது ஈமெயில் ஐடியை மற்ற யாருக்கும் தெரியப்படுத்த மாட்டேன். இறுதியாக மொத்த புகார்களும் சமர்பிக்கப்படும் போது மட்டுமே, உங்கள் ஈமெயில் சேர்த்து அனுப்பப்படும்.

புகார் பதிவு பக்கத்திற்கு இங்கே செல்லவும்:

பதியப்பட்ட புகார்களைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகார் பக்கத்தின் லிங்க் கொடுக்கவும்.