கவிதைகள் : குழந்தைகள்

கவிதைகளும் குழந்தைகளும் ஒன்று தானோ? குழந்தைகளை நாம் பல காரணங்களுக்காக ரசிக்கிறோம், ஆனால் அதே அளவு காரணங்களுக்காக வெறுக்கவும் செய்கிறோம். வெறுப்பதற்கு காரணங்கள் இருந்தும், நாம், முடிவில் குழந்தைகளை ரசிக்கவே செய்கிறோம்.
‘கவிதைகளைக் கண்டால் ஓடி விடு’ என்று என் மூளை என்னை எச்சரித்தாலும், மனம் கவிதையைக் கண்டவுடன் படிக்கவே சொல்கிறது. பிறகு சிக்கலில் ஆழ்த்துகிறது.
கவிதைகள் ஏன் இப்படி இருக்கின்றன? எத்தனை முறைப் படித்தாலும் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? கவிதைகளைப் படித்து புரிந்துகொள்ள, எங்காவது, பாடத்திட்டம் (Course) இருந்தால் சேர்ந்தாவது படித்துத் தொலைக்கலாம். ‘நாலு மூலை புத்தகம்’ என்றொரு கவிதையைப் படித்தேன். கடற்கறய் எழுதியிருக்கிறார். தீராநதியில் பிரசுரமாகியிருந்தது.

நாலு மூலை புத்தகம்

நாலு மூலைகள் இருக்கும் புத்தகத்தின்
ஐந்தாவது மூலையை ஞாபகத்தின் குறிப்பாக
மடித்திருந்தேன். சர்வ சங்கடங்களுக்கும்
பரிகாரம் சொல்லும் கிளியொன்று அதில்
எந்நேரமும் பறந்தவாறே இருக்கும்.
கிளி, பச்சை இறகில் ஒளிரும் எதிற்காலத்தை
ஒரு சிறு நெல்லில் ஒளித்து வைத்திருந்தவன்
புத்தகத்தின் 49ஆம் பக்கத்தைக் கிழித்து,
கொண்டுபோய் விட்டான்.
அதில்தான் எப்போதும் பறக்கும்
கிளியின் இன்னொரு சிறகிருக்கிறது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், நல்ல மதிய உணவிற்குப் பிறகு, தீராநதியில், ஆ
.முத்துலிங்கம் பக்கம் படித்துவிட்டு, இவரால் எப்படி அனைத்து இலக்கிய இதழ்களிலும் ஒரே நேரத்தில் எழுத முடிகிறது, என்று வியந்து கொண்டிருந்த பொழுது, இந்த கவிதை கண்ணில் பட்டது. ஒரு முறை/இரு முறை/…10 முறை. ஒன்றும் புரியவில்லை.

“நாலு மூலைகள் இருக்கும் புத்தகத்தின் ஐந்தாவது மூலையை” புத்தகத்திற்கு ஏது ஐந்தாவது மூலை? இது உவமையாக இருக்கும் பட்சத்தில், கவிஞர் எதை உவமைப் படுத்த முயல்கிறார், புரபொசர் ரவீந்தரன், புத்தகத்தின் மையப்பகுதி என்றார். என் நண்பன் அதை, நாம் புத்தகம் படிப்பதினால் கிடைக்கும் அறிவுக் களஞ்சியம் (repository) என்றான். அறிவுக் களஞ்சியம்! அதற்கப்புறம் “கிளியொன்று அதில் எந்நேரமும் பறந்தவாறே இருக்கும்” கிளியாவது புத்தகத்தில் பறப்பதாவது? கார்ட்டூன் கிளியாக இருக்குமோ? புத்தகம் காமிக் புத்தகமோ? அதற்கப்புறம் சுத்தம். பிளாக் ஹோல். “புத்தகத்தின் 49ஆம் பக்கத்தைக் கிழித்து, கொண்டுபோய் விட்டான்” அது என்ன 49 ஆம் பக்கம்?

விவாதம் முற்றுப் பெறவில்லை. அதாவது ஒரு முடிவு கிடைக்கவில்லை. கடைசியில், ரவீந்திரன், “புரிவது ஒரு பொருட்டல்ல” என்றார். “யாரை யார் புரிந்து கொண்டோம். என்னை நீ புரிந்து கொண்டாயா? இல்லை உன்னை நீ புரிந்து கொண்டாயா? முதலில் உன்னை நீ புரிந்து கொண்டாயா?” என்று சொன்னார்.

இவ்வாறு யாரேனும், விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர், பேசத் தொடங்கினால், விவாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பது விதி.

தீராநதியோ, கணையாழியோ, உயிர்மையோ, காலச்சுவடோ தாங்கள் வெளியிடும் கவிதைகளுக்கு ஒரு “கோனார் நோட்ஸ்” போட்டால், அதே இதழில் கடைசிப் பக்கங்களில், என்னைப் போன்று ஞான சூன்யங்களும், கவிதைகளைப் படித்து புரிந்துகொள்வோம்.

அதே இதழில், ‘சொந்தம் ஆனால் அந்நியம்’ என்ற, கோவாவைச் சேர்ந்த மீனா காகோட்கர், எழுதி, அதை தமிழில் திலகவதி மொழிபெயர்த்த சிறுகதை மிக அருமையாக இருந்தது.

பிகு:
யாருக்கேனும் மேலே குறிப்பிட்ட கவிதைக்கு விளக்கம் தெரியுமானால், கண்டிப்பாகச் சொல்லவும்.

கவனம் தேவை, பெரியவர்களே!

நேற்று சன் டீவியில் மாதவன் நடித்த ‘நளதமயந்தி’ திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நகைச்சுவை. இதை நகைச்சுவை என்றும் வைத்துக் கொள்ளலாம் அல்லது கிரேஸி மோகனின் சிந்தனைத்திறன் என்றும் வைத்துக்கொள்ளலாம்.மாதவன் குக்கிராமத்திலிருந்து ப்ளைட்டில் ஆஸ்திரேலியா செல்வார். அதுதான் அவரது முதல் ப்ளைட் பயனமாக இருக்கும். டிக்கெட் பரிசோதகர் மாதவனின் ப்ளைட் டிக்கெட்டைப் பரிசோதித்துவிட்டு, தான் இன்னும் ப்ளைட் ஏறியதில்லை என்பதை ‘ஏர்போர்ட்ல இருக்கேன்னு தான் பேரு ஆனா நானே இன்னும் ப்ளைட் ஏறியதில்லை, அதுசரி மாடிப்படி மாடி ஏறுமா?’ என்பார், டிக்கெட்டை வாங்கிக் கொண்டே மாதவன் எஸ்களேட்டரைப் பார்ப்பார், பிறகு ‘இல்லையே மாடிப்படி மாடி போறதே!!’ என்பார்.இந்த நகைச்சுவைக்கு வேண்டுமானால் சிரிக்கலாம், ஆனால் கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள், கண்டிப்பாக சிரிக்க இயலாது.

பெரியவர்கள் மாடி ஏற எஸ்களேட்டரைப் பயன்படுத்தும் பொழுது மிக மிக கவனமாக இருக்கவேண்டும். கண்டிப்பாக உடன் வருபவர்களையோ அல்லது அங்கே அருகில் இருப்பவரையோ உதவிக்கு அழைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் கண்டிபாக லிப்டைத் தான் பயன்படுத்தவேண்டும். கவனம் தேவை, பெரியவர்களே!இது சின்னக் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

நையாண்டித் திலகங்கள்

இன்று நூலகத்தின் குறிப்பு (Reference Section) பகுதியில் புத்தகங்களை, எந்தவித நோக்கமும் இல்லாமல், பார்த்துக்கொண்டிருந்த பொழுது, புதுமைப்பித்தனின், ஆ.இரா.வெங்கடாசலபதி, தொகுத்த கட்டுரைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. அவரே தொகுத்த புதுமைப்பித்தனின் கதை தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது. சமீபகாலமாக நான் புதுமைப்பித்தனிடம் ஈர்க்கப்பட்டு அல்லது கவரப்பட்டு, வருவதற்கு இது தான் காரணம். புதுமைப்பித்தனைப் படித்தப் பிறகு, இன்று வரை நான் படித்து புகழ்ந்துவந்த தமிழ் எழுத்தாளர்களை கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுதியைப் புறட்டும் பொழுது, குலோப்ஜாமுனுடன் காதல் / பாரதியும் போலீசும் என்ற கட்டுரைகளை வாசித்தேன். மிகுந்த நையாண்டியும் அதே சமயத்தில் உண்மை நிலவரத்தையும் ஒருசேர கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். 1933இல் வெளிவந்த இந்த கட்டுரைகள் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாகவே உள்ளது. காலம் மாறவில்லையா?’தெரியாததைப் பற்றி சொல்வதுதான் அறிவுடைமை’ என்று தற்காப்பிற்காக சொல்லிவிட்டு கட்டுரையை ஆரம்பிக்கிறார். காதல் அவருக்கு தெரியாதா? தெரியவில்லை. 1940களில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஸ்டாலினைப் பற்றி கட்டுரை எழுதியவருக்கு, ‘காதல்’ பற்றி தெரியாதென்பது, கிட்டத்தட்ட, முட்டாள்தனம் தான். காதலை மிகவும் அனுபவித்தவர் என்பதை அவருடைய ‘செல்லாம்மாள்’ கதையைப் படித்தவர்கள் உணரலாம்.

வெகுஜனங்களுக்கு புரிய வேண்டும் என்றால் அவர்களுக்கு தெரிந்த விசயத்தைக் கொண்டு விளக்க வேண்டும் என்று காதலை விளக்க குலாப்ஜாமுனை தேர்வு செய்திருக்கிறார். காதலிப்பவனுக்கு உலகில் எல்லாமும், எல்லாப் பொருளும் தன் காதலியாகவே தெரியுமாம். கம்பன் இராமன் மேல் கொண்ட தீராத காதலினால் தான் இராமனை கல்லும், மண்ணும், மண்ணாங்கட்டியும் காதலித்ததாக எழுதியிருக்கிறார் என்றும் கம்பன் மீது பாய்கிறார். தீராநதியில் சிறிது நாளைக்கு முன்னர் இராமனையும் சீதையையும் வைத்து, பின் நவீநத்துவத்தால் பாதிக்கப்பட்ட, திடுக்கிடும் கதை ஒன்று படித்தேன். இராமனையும் சர்சைகளையும் பிரிக்கமுடியாது.

‘காதல் செய்யும் பொழுது, நாம் காதலிக்கும் பொருளும் நம்மை பதிலுக்கு காதலிக்க வேண்டும்’ என்ற உண்மை விதியை முன்வைக்கும் புதுமைப்பித்தன், பிறகு, ‘இது குலாப்ஜாமுன் விசயத்தில் சாத்தியமில்லை’ என்று சொல்கிறார். உண்மைதான்.

பாரதியும் போலீசும் [வேறு தலைப்பினல் கூட இருக்கலாம்] என்ற கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்த பொழுது என்னையும் அறியாமல் சிரித்துவிட்டேன். அருகே அமர்ந்து ‘தமிழ் இலக்கிய வரலாறு’ படித்துக் கொண்டிருந்த ஒருவர் என்னை விசித்திரமாகப் பார்த்தது வேறு கதை. உண்மையில் பாரதியார் போலீசுக்கு நண்பரா? அதில்லை விசயம். புதுமைப்பித்தனின் நையாண்டியின் உச்சக்கட்டம் இந்தக் கட்டுரையைக் கூறலாம். பாரதியை கரைத்துக் குடித்தவர் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

பாரதியின் சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை அன்றைய போலீசுடன் [ஏன் இன்றைய போலீசுடன்] ஒப்பிட்டுள்ளார். ‘கோல் கொண்டு வாழ்’ என்ற பாரதியின் வரிகளை போலீசின் கைத்தடியுடன் ஒப்பிடுகிறார். மேலும் ‘ரௌத்திரம் பழகு’ ‘(பிறர்) துன்பத்தை மற’ இதில் பிறர் என்பது அவரே இணைத்துக் கொண்டது போன்ற ஆதாரங்களை காட்டுகிறார். இவ்வாறு போலீசை ஆதரித்தே கவிதையினை எழுதியிருக்கிறார் என்கிறார். சரி, நான் எதற்கு சிரித்தேன், ‘நையப் புடை’ என்ற பாரதியின் வரிகளை படித்தபொழுது. நையாண்டித் திலகம் தான் நமது புதுமைப்பித்தன்.

**

சன் டீவியில், செவ்வாய் தோறும் ஒளிபரப்பாகும் ‘டாப் டென்’ நிகழ்சியின் மறு ஒளிபரப்பில், சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை தழுவி நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர். சேரன் எத்தனை தவமிருந்து படத்தில் வரும் ‘அப்பா’ கதாப்பத்திரத்தை படைத்திருப்பார் என்று தெரியவில்லை, ஆனால் இந்த நிகழ்ச்சியில் வந்த ‘அப்பா’வை குடிகாரனாகவும், பல பெண்களிடம் தொடர்பு வைத்திருப்பவனாகவும் காட்டியிருக்கிறார்கள். சிரிப்பிற்காகத் தான். நகைச்சுவை மட்டும் தான்.

சேரன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து சிரிப்பாரா என்று தெரியவில்லை, ஆனால் இந்தப் படத்தை மிகவும் ரசிக்கும் என் நண்பன் ஒருவன், மிகுந்த சோகத்தோடு அல்லது கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். சத்தியராஜ் ஒரு படத்தில், விஜய்யின், ‘எங்கம்மா உங்கம்மா நம்ம சேர்த்துவப்பாளா?’ (கண்றாவி!) என்ற பாடலை கேலி செய்திருப்பார், அதற்கப்புறம் விஜய்யின் அந்தப் பாடலைப் பார்க்கும் பொழுதெல்லாம் சத்தியராஜ் ஆட்டம் தான் நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து சிரிப்பும் வருகிறது. பின் தொடரும் சிரிப்பின் குரல்?

‘தவமாய்த் தவமிருந்து’ படம் எனக்கும் பிடித்த படம்தான். ஆனால் நான் மட்டும் தான் நிகழ்ச்சி முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மறுபடி பார்க்கும் பொழுது, டாப் டென் நிகழ்ச்சி ஞாபகம் வருமா என்று தெரியவில்லை.

ஒரு கதையை எழுதி அதில் மக்கள் மனதில் என்றென்றும் நிற்கும் கதாப்பாத்திரங்களை படைத்து தெளிந்த திரைக்கதையையும் இனிய இசையும் சேர்த்து அதை வெற்றிப்படமாக கொடுப்பதென்பது மிகக் கடினமான விசயம். அதை சேரன் செய்துகாட்டியிருந்தார். ம்ம்..ஏனோ சிலருக்கு வாழ்க்கை மிகக் கடினமாகவும், சிலருக்கு மிக எளிதாகவும் இருக்கிறது.

**

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சிநேகம் கொண்டால்
கதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒரு முறத் தவிட்டுக்காக
வாங்கினேன் என்னை என்றாய்
எத்தனை பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக்கொண்டாய்?
தவறுமேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லை யென்றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன் பிள்ளை உன்னைவிட்டு
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

-ஞானக்கூத்தன்


சிங்கப்பூர்-லிட்டில் இந்தியா

இன்று மதியம் சரவணபவனில் சாப்பிட்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது, ஆனால் சர்வீஸ் தான் கொஞ்சம் மோசம். அதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். கூட்டம் அதிகம் இல்லை என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று. சாப்பிட்ட பிறகு கை அலம்பிவிட்டு, குப்பைத்தொட்டி நிரம்பிவழிவதைக் கவணித்தோம். என் நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட், ‘சிங்கப்பூரில் தெருக்கள்தான் சுத்தமாக இருக்க வேண்டுமோ!’

சமீபத்தில் கணையாழியில் இந்தக் கவிதையினை படிக்க நேர்ந்தது.

பூமிக்கு அந்தப்பக்கம்
போயஸ் விமானம் ஏறிப்
போயிருக்கும் துணைவருக்கு
என் உள்ளூர்ச் செய்தி மடல்
மின்னஞ்சலில்
இறகுத் தொடல் விரல் நோகாமல்
பறக்கும் ஒளியிழைப்பதிவுகளில்.

அங்கு குளிர் மழையா
இங்கு ஏறுவெயில்.
காவிரியில் கன்னடமும் இல்லை
கன்னித்தமிழும் இல்லை
சாயச்சாக்கடைக் கழிவு மட்டும்.
ஆலையிலும் அரிசிவிலை எற்றம் தான்.
பருப்பு விலை குறையவில்லை.
அம்மாவுக்குக் கண்புரையாம்
சர்க்கரை அதிகம் இரத்தத்தில்
சில ஆயிரம் போதுமாம் சிகிச்சைக்கு.
நாங்கள் வழக்கம்போல் இருக்கிறோம்.
வரும்போது வாருங்கள்
அன்புக் காதலரே
கவிதை வார்க்க
மனசுக்குள் ஊற்றில்லை
இறக்கைகளைத் தொலைத்துவிட்டேன்.
வந்தென்னைப் பறக்கவிடுங்கள்
எதிர்நோக்கி நோன்பிருக்கும் உங்கள்
கோதை நாச்சியார்.

-இரா. மீனாட்சி

காபியும், டம்பளரும், பிறகு ஒரு சந்தேகமும்

ன்று காபி இடைவேளையில்,( சரி, காபி என்பதற்கு தமிழில் என்ன? கொட்டை வடி நீர் என்பதுதான் சரியா? அதுவே சரி என்றாலும் அது வாக்கியம் மாதிரியல்லவா இருக்கிறது?) என் நண்பர் ஒருவர், இரண்டு காபிகள் வாங்கி மூன்று பேர் பகிர்ந்து கொள்ளும் யோசனையில், கஞ்சத்தனம் இல்லை, அந்தக் காபியை ஒருவர் குடிக்க முடியாது,ஒரு காலி டம்பளர் கேட்டார், அப்பொழுதுதான் எனக்கு டம்பளருக்கு தமிழில் என்ன பெயர் என்ற விபரித எண்ணம் தோன்றியது.

காபி வாங்கிக்கொண்டு நாற்காலியில் (தமிழ் பற்றி என்பதால் முடிந்தவரை தமிழில் எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்) வந்து அமர்ந்ததும், என் நண்பர்களிடம் நான் கேட்ட கேள்வி ‘டம்பளருக்கு தமிழில் என்ன?’ என்பது தான். என்னை விசித்திரமாகப் பார்த்த நண்பர், சற்றும் யோசிக்காமல், கிளாஸ் என்றார். கிளாஸ் என்பது ஆங்கில வார்த்தை என்பது அவருக்கு புரியாமல் போனது. எனக்கு லியோனியின் பேருந்து நிலைய நகைச்சுவை (பஸ் ஸ்டாண்ட் ஜோக்) தான் நினைவுக்கு வந்தது. அவர் பல நேரங்களில் உண்மை நிலையையே கூறியிருக்கிறார்.

என் மற்றொரு நண்பர் கிண்ணம் என்றார். கிண்ணம் என்றால் சற்று அகலமான, ஹெமிஸ்பியர் (இதற்கு தமிழில் என்ன என்று என்னுடன் தங்கியிருக்கும் மற்ற ஐந்து நபர்களிடம் கேட்டு, நிறைய யோசித்தலுக்குப் பிறகு, அரைக் கோலம் என்று கண்டுபிடித்தார், என் நண்பர் ஒருவர். மற்ற ஒரு தமிழ் வழிக் கல்வி பயின்ற நண்பருக்கு இறுது வரைப் புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!) வடிவிலான ஒன்று தானே. டம்பளர் அப்படி அல்லவே. சற்றே சிலிண்டரிக்கல் வடிவமாயிற்றே. மற்றொரு நண்பர் கோப்பை என்றார். ஒரு வகையில் கோப்பையும் கிண்ணமும் ஒன்று தான். மலேசியாவில் உலகக் கோப்பையை உலகக் கிண்ணம் என்றே சொல்லுவார்கள். எங்களுக்கு ஏனோ அது சிரிப்பையே வரவலைக்கும்.

மற்றொரு நண்பர், நிறைய யோசித்து விட்டு, ஏதோ கமலஹாசன் படத்தில் வரும், அவரை எடுத்து வரச்சொல்லுவார்கள், என்னவென்று தான் வரமாட்டேன் என்கிறது, என்றவர், தீவிர சிந்தனைக்குப் பிறகு, உதட்டைப் பிதுக்கினார்.

பிறகு போனி என்று வைத்துக்கொள்ளலாம் என்றார். போனி சிலிண்டிரிக்கல் வடிவில் அல்லவா இருக்கும்? டம்பளரின் கீழ்வட்டம் மேல் வட்டத்தை விட குறுகியிருக்குமே?.

இப்படியாக எங்களது அன்றைய விவாதம், சட்டமன்றக் கூட்டத்தொடர் போன்று முடிவுக்கு வராமல் அல்லது பயன் பெறாமல் நிறுத்தப்பட்டது.இன்று வரை தடையங்கள் ஏதும் இல்லாத கொலைக்கேஸ் போலவே மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. தெரிந்தவர்கள் துப்புக் கொடுக்கவும்.

இந்த விவாதத்தில் சற்றும் பங்கெடுக்காத, என் தோழி ஒருத்தி, அல்மாரிக்கு தமிழில் என்னவென்று கேட்டுத் தொலைத்தாள்.எத்துனை முயன்றும் என் சிற்றறிவுக்கு எட்டாமல் போகவே, என் தந்தையாரின் உதவியை நாடினேன். அவர் யோசித்துச் சொல்கிறேன் என்று கூறிவிட்டு, நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, ‘பொருள் காப்பகம்’ என்று கூறினார். இதுவும் வாக்கியம் போலவே உள்ளது, இது பெயர்ச் சொல் அல்லவே?

சற்று யோசித்துப் பார்த்தோமேயானால், தமிழில் பல சொற்கள், வழக்கிழந்து அல்லது சேர்க்கப்படாமல் உள்ளது புரியும். இலக்கியங்களை தமிழ் பொதுஜனம் கிட்டத்தட்ட மறந்தே போய் விட்டது எனலாம். தமிழ் நாட்டின் மிகப் பெரிய பொழுதுபோக்கான அல்லது முதலமைச்சர்களின் கல்லூரிகளான, சினிமாவில், இலக்கியம் என்பது உப்புப் பெறாத செயல் ஆகிவிட்டது உண்மை. நீண்ட நாட்களுக்குப் பின் நிறைய தெளிவான தமிழ் சொற்களைப் பயன்படுத்திய சினிமா ‘தம்பி’ மட்டுமே என்று நினக்கிறேன்.
இதை அச்சுப் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, (புரியாதவர்களுக்கு, டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது) என் நண்பன் ஸ்பூன் என்பதற்கு தமிழில் என்ன என்றான். தொடர்ந்து போர்க் என்பதற்கு தமிழில் என்ன என்றான். பட்டியல் நீள்கிறது.

இந்த் எண்ணங்களுக்கும் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தானாகவேண்டும்.

கவிதைகள் பிழைத்துப் போகட்டும்

துவும் எழுதக்கிடைக்காவிட்டால் நான் கவிதை எழுதலாம் என்று நினைப்பதுண்டு. அதனாலேயே நான் இன்று வரை கவிதை எழுதத் தலைப்படவில்லை. ஆனால் கவிதைகள் நிறையப் படிப்பதுண்டு. படித்துவிட்டு புரியாமல் விழிப்பதும் உண்டு. பெரும்பாலும் கணையாழி, தீராநதி போன்ற இதழ்களில் வரும் கவிதைகள் என்றைக்குமே எனக்குப் புரிவதில்லை, அன்றும் சரி, இன்றும் சரி. சில சமையம் நமக்கேன் வீண் வம்பு என்று நான் விலகிச்செல்வதும் உண்டு. ஆனால் இன்று பல புதிய கவிஞர்கள் எழுதும் கவிதைகளே சில சமையங்களில் புரிவதில்லை. சில சமையம் படித்துவிட்டு நான் மிகுந்த எரிச்சல் பட்டதும் உண்டு.

அவ்வாறான வேளைகளில் ஆபத்பாந்தவனாக வருபவன் என் அறை நண்பன் மட்டுமே. அவனுக்கு புரிகிறதோ இலலையோ, சரியோ தவறோ, கவிதை சொன்ன அடுத்த நொடி எதேனும் ஒரு விளக்கம் கண்டிப்பாகத் தருவான். விளைவுகளைப் பற்றி அவன் யோசிப்பதேயில்லை, தற்கால கவிஞர்களைப் போல.

சில சமையம் அவனுக்கும் புரியாமல் போவதுண்டு. அப்பொழுதெல்லாம் கவிஞர்கள் என் நண்பனின் கடுங்கோபத்திற்கு ஆளாவார்கள். சில சமையம் மிகுந்த எரிச்சலாகி, அவன், இது என்னடா கவிதை, நான் சொல்கிறேன் பார், என்று உடனே எடுத்துவிடுவதுண்டு. பல சமையம் எனக்கு தவறு செய்து விட்டோமோ என்று தோனுவதுமுண்டு. சில சமையங்களில் சில் நல்ல சிரிக்கத்தக்க கவிதைகளை அவன் சொல்வதுமுண்டு.

ஒரு நாள் நான் எங்கோ படித்த கவிதை எத்தனை முயன்றும் அவனுக்கு புரியாமல் போகவே, கடுங்கோபத்துக்குள்ளாகி, நானும் எழுதுகிறேன் பார் என்று சபதம் போட்டு, மறுநாள் அலுவலகம் சென்று, கவனிக்க, அலுவலகம் சென்று, முதல் வேளையாக ஒரு கவிதை(??) எழுதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினான். அந்த கவிதை உங்கள் பார்வைக்கு,

அரும்பு மீசை

காலைக் கதிரவன் ஜன்னல் வழியே சீண்டினான்,
அவன் எழுந்து அன்ன நடை போட்டான்,
கண்ணாடி முன் சென்று அவன் முகத்தைப் பார்த்தான்,
ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது,
பூமியில் இருக்கும் சிற்றெறும்பை
வானத்தில் இருந்து பார்த்ததைப் போல்
சிறியதாய் ஏதோ சில அவன் மூக்கின் கீழே
மற்றும் உதட்டின் மேலே
தெரிந்தது ஒன்று
அவன் அதைக் கண்டதும்
நீண்ட நாள் மழைக்காக காத்திருந்த விவசாயி
பெய்த சிறு மழை துளிகளை
கண்டதை போல களிப்புற்றான்

இந்த வரியை டைப் செய்து முடிக்கும் பொழுது, ‘இது என்ன, கடவுளே! புரியாது கடவுளே!’ என்ற புதுப்பேட்டையில் வரும் பாடல் எனது மடிக் கணினியில் ஒலித்துக்கொண்டிருந்தது, முற்றும் எதிற்பாராத ஒன்று, அதற்கு நான் பொறுப்பும் அல்ல. அன்று முதல் அவனது பெயரின் முன் கவிஞர் என்ற அடை மொழியை இனைத்தே அழைக்கிறோம்.

மற்றொரு நாள் நானும், எனது நண்பர்களும் இந்தக் கவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது, கவிஞர், கடுங்கோபத்துக்குள்ளாகி, இன்னொரு கவிதை சொன்னார். அது,

கடலில் எழுவது கடலலை
ஆனால் அங்குள்ள
இளைஞர்கள் போடுவதோ கடலை

சபை மரியாதை கருதி இந்தக் கவிதை? சிறிது மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. அதற்கப்புறம் கவிஞர், அவருடைய கவிதைகளுக்கு, தனி ப்ளாக் ஆரம்பிக்கப்போவதாக,கூறியிருக்கிறார்.

மற்றொருநாள், என் இன்னொரு நண்பர் ஒருவர், எங்கள் இருவரையும், எதிரும் புதிரும், என்று குறிப்பிட, அடுத்த மைக்ரோ செக்கண்ட், ‘ஏன் எதிரும் பொதரும்னு சொல்லவேண்டியதுதானே?’ என்றான். நான் கொஞ்சம் நீண்ட தலைமுடி தற்பொழுது வைத்திருக்கிறேன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கவிதைகள் பிழைத்துப் போகட்டும், விட்டு விடுங்கள் கவிஞரே!

‘இட’ ஒதுக்கீடு உண்டா எங்களுக்கு?


எங்களுக்கும் உண்டா ‘இட’ ஒதுக்கீடு? நாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் இருக்கிறோம்.

அவர்கள் எல்லோருக்கும் சேர்த்துத்தான் போராட்டம் செய்கிறார்களாம். எங்களுக்கும்சேர்த்துத் தானே?