சுடர் : தனித்தீவு

சுடர் இளவஞ்சிகிட்ட இருந்து ரொம்ப பிரகாசமா என்கிட்ட வந்திருக்கு. அதை அணைச்சுடாம நிர்மல் கிட்ட கொடுத்திடனும்ங்கிறது தான் நேத்திலிருந்து எனக்கு ஒரே சிந்தனை. அதுவும் இளா வேற ஒரு தினுசா கேள்வி கேட்டிருக்கார். அஜீத்துக்கு கதை, ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மட்டுமே மனிதனின் குணாதிசயங்களை கண்டுகொள்ளலாம், அப்புறம் ஆறுதலுக்கு ஒரே ஒரு ஈசியான கேள்வி : நல்ல தமிழில் எழுதாதவர்களைப் (இளாவை ப் போலவாம்! இவர் நல்ல தமிழில் எழுத மாட்டாராம்! ஹம்.. நான் நல்ல தமிழில் எழுதுகிறேனாம். ஐயகோ!) படிக்கும் போது நான் என்ன நினைக்கிறேன் என்று நான்கு கேள்விகள்.

ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள்

கேள்விகளைப் படித்தவுடன் BE ஏழாவது செமஸ்டரில் LIC பரிட்சை question paper ஐ பார்த்து முழித்த முத்து, போல முழித்தேன். நாலு கேள்கிகளில் ஒரே ஒரு கேள்விக்கு தான் திட்டவட்டமாக answer தெரிகிறது. மத்த கேள்விகள் எல்லாம் abstract class போல, என்னவென்று தெரியும், எப்படியென்று தெரியாது! தீவுக்கு போவதா? தனியா ஒரு மாசமா? ஐந்து பொருட்கள் எடுத்துப் போக வேண்டுமா? பதில் தெரியாம சட்டுன்னு கூகிள் கிட்ட கேக்காலாமான்னு கூட யோசிச்சேன். என்ன பண்றது எதுக்கெடுத்தாலும் கூகிள்ட்ட கேட்டு கேட்டே பழக்கமாகிடுச்சு.

என்னுடைய கலீக் ஒருத்தர் சொன்னார் : உனக்கு, ஒரு செல் போன், நிறைய காபி , அப்புறம் லேப்டாப் இருந்தா போதாதா முத்து, ஒரு மாசம் ஓட்டிடுவேயில்ல என்றார். உண்மைதான். ஆனா செல்போனுக்கு பேட்டரி சார்ஜ் போயிடுச்சுன்னா எங்க போய் சார்ஜ் பண்றதாம்? என்னோட லேப்டாப் கூட இரண்டு மணி நேரத்துக்கு மேலே சார்ஜ் தங்காது என்றேன். அப்படீன்னா ஒன்னு செய் முத்து, பேசாம நிறைய பேட்டரி எடுத்துட்டு போயிடு என்றார். இளவஞ்சி ஒத்துக்குவாரான்னு தெரியலயே?

அப்புறம் ஒரு ப்ரண்ட் கிட்ட கேட்டப்போ, அவர் சட்டுன்னு, முத்து ஆர் யூ ஓகே. உடம்புக்கு ஒன்னும் இல்லியேன்னு என்னைய ஒரு விசித்திரமான லுக்விட்டுட்டே கேட்டார். பிறகு நான் நம்ப சுடரைப் பத்தி விளக்கி சொன்னவுடன், சீரியசாக யோசிக்க ஆரம்பித்தார். திடீர்னு, அங்கே சாப்பாடெல்லாம் கிடைக்குமா? என்றார். ம்ம்..நாயர் டீஸ்டால் கூட ஒன்னு இருக்காம்ன்னு சொன்னேன். அப்படியா என்றார் அப்பாவியாய். (அவரிடம் கேள்விகளுக்கு பஞ்சம் இருக்காது. கேள்விமேல கேள்வி கேட்டுகிட்டேயிருப்பார்.அதனாலேயே அவருக்கு கேள்வியின் நாயகன் என்றொரு பெயர் உண்டு) யோவ் உன்னைய தனியா தான இருக்க சொல்லியிருக்காய்ங்க இதுல சாப்பாடு கிடைக்குமா மசாலா டீ கிடைக்குமான்னு என்யா டுபாகூர் மாதிரி கேக்குறன்ன, பிறகு அமைதியாய் ரொம்ப நேரம் யோசிச்ச அவர், திடீர்னு :

கண்டிப்பா தீக்குச்சி எடுத்திட்டு போக மாட்டேன்னார். ஆதி காலம் மாதிரி அவரே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுப்பாராம். அப்புறம், கண்டிப்பா கம்பளி எடுத்துட்டு போவேன், எனக்கு குளிர் தாங்காது என்றார். நான் தண்ணி வேணாமான்னு கேட்டேன். தீவுல கடல் இருக்குமான்னு கேட்டார். (அடப்பாவி!) நான் சிரிக்காம கண்டிப்பா இருக்கும்னு சொன்னேன். அப்படீன்னா கடல் தண்ணிய குடிச்சுக்கவேண்டிது தானே என்றார்.நான் ஒன்னும் சொல்லல. பிறகு கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு : முக்கியமா கொசு வத்தி சுருள் எடுத்திட்டு போவேன்னார். என்னது கொசு வத்தி சுருளா? செம்பு ரொம்ப (சிக்கன்குனியாவால) அடிவாங்கியிருக்கும் போல! அவருக்கு நாலு பொருள் தான் தெரிஞ்சது. அஞ்சாவது? பராவாயில்ல நான் எடுத்துட்டு போகல்லன்னார்! எவ்ளோ சிக்கனம்!

அவர் சொன்ன இன்னொரு பொருள்: அந்த தீவில இருக்குற மரங்கள்ல இருக்கிற பழங்களைப் பறிச்சு சாப்பிடறதுக்கு ஒரு நீண்ட குச்சி (முனையில கொக்கியோடு!) எடுத்திட்டுப் போவாராம். நீங்களே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுக்கிறீங்களே, மரத்த உடச்சு நீங்களே கொக்கியும் செஞ்சுக்க வேண்டியது தானேன்னு சொன்னேன், அடஆமால்ல, அதானே! என்றார்.

என்னோட ப்ரண்ட் ஒருத்தி, நடு ராத்திரியில எழுப்பி, முத்து, நீ உன்னோட சோடபுட்டிய மறந்திடாம எடுத்திட்டு போயிடு, என்னா உனக்கு கண்ணு தெரியாதில்லன்னு சொன்னா. நான் தான் லென்ஸ் போட்டுக்குவேனே அப்படீன்னு சிரிச்சேன். அதுக்கு அவ, லென்ஸ்ன்னா, லென்ஸ் வெக்கிற கேஸ், கிளீனிங் liquid எடுத்திட்டு போகணும், அதுவே ரெண்டு பொருள் count ஆகிடுச்சு, சோடாபுட்டின்னா கணக்கில வராது, நீ பாட்டுக்கு போட்டுட்டு ஜாலியா போயிடலாம். அதுக்கப்புறமும், தீவில போய் நீ தனியாதான் இருக்கபோற, அங்க girls யாரும் இருக்கப்போறதில்ல, அதனால லென்ஸ் போட்டுட்டு நீ ஒன்னும் சீன் போட தேவையில்லன்னா. கரெக்ட் தான்!

cast away ன்னு ஒரு படம் பார்த்திருப்பீங்க, இளவஞ்சியோட கேள்வியப் படிச்சதும் எனக்கு அந்தப் படம் தான் ஞாபகம் வந்தது. அதிலும் Tom Hanks நீண்ட நாள் கடின முயற்சிக்குப் பிறகு தீ பற்றவைத்து விட்டு, கத்தி கூப்பாடு போட்டு டான்ஸ் ஆடுவது. ரொம்ப அழகாக செய்திருப்பார் அவர்.

நானே முயற்சி செஞ்சு தீ பற்றவைப்பதுக்குள் இளா வந்து, முத்து ஒரு மாசம் முடிஞ்சிடுச்சு, வாங்க போகலாம்ன்னு சொல்லிடுவார். அதனால நான் அவ்வளவெல்லாம் கஷ்டப்படப்போவதில்லை. ஒரு லைட்டர் : தேடிக்கண்டுபிடித்து இருக்கறதிலியே பெரிய லைட்டர் ஒன்னு கண்டிப்பாக எடுத்துப்பேன். அது வொர்க் ஆகலைன்னா? இல்ல, மழையில நனைஞ்சு struk ஆகிடுச்சுன்னா? அடபோங்கப்பா, நான் தீ கண்டுபிடிச்சுக்கறேன்.

முனையில் வளைந்த கூர்மையான ஒரு ஆயுதம். கண்டிப்பாக தேவைன்னு நினைக்கிறேன். ஏதாவது திறக்கனும்னா? (suppose இளநிர். நினைப்பு தான்டா உனக்கு. விட்டா, இளனிக்கு straw கேப்பபோல. இளா, தென்னை மரமெல்லாம் இருக்கா அங்க?) மேலும் தற்காப்புக்கு கூட பயன் படுத்திக்கலாம் இல்லியா? ஒரு சிங்கம் (தீவில ஏதுடா சிங்கம்? அதுவும், ஒரு உரையில ஒரு கத்தி தான் இருக்கும்கிறமாதிரி, ஒரு தீவில ஒரு சிங்கம் தான் இருக்கும்னு விஜய.டி.ஆர் கூட சொல்லியிருக்கார். அதனால நீ இருக்கறதால, இன்னொரு சிங்கம் அங்க இருக்க சான்ஸே இல்லடா முத்து! 🙂 ) கிங்கம் வந்தா அது கூட சண்டை போடுறதுக்கு உதவியா இருக்கும்ல. அப்புறம் சுராமீன் (!?) ஏதும் கரை ஒதுங்கிச்சுன்னா அதை கிழிக்கறதுக்கு உதவியா இருக்கும். சுராமீன் ஒதுங்கிச்சுன்னா ஒரு மாசதுக்கு கவலையே இல்ல. இளா அஞ்சு பொருள் restriction கொடுக்கலைன்னா, ஆச்சி மசாலாதூள் பாக்கெட் கூட எடுத்திட்டு போகலாம். 🙂

கவட்டை போன்ற ஒன்று. துப்பாக்கி வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா very simple, எனக்கு சுடத்தெரியாது. மேலும் துப்பாக்கியால் சுட்டு, கடல்ல கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருக்கும், Pirates (of the caribean) இன் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை. வேலியில போற ஓணான எட்த்து வேட்டியில விட்டுக்கினு, அப்பால, வானா வானான்னா விட்டுடுமா? துப்பாக்கியைப் பயன் படுத்தினால் அங்கே இருக்கிற உயிரினங்கள் (wild) உசாராவதுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் கவட்டைய பயன் படுத்தி சில பறவைகளை – காட கவுதாரி கொக்கு -(கொஞ்சம் கஷ்டப்பட்டு தான்! சின்ன வயதில் பயன்படுத்தியிருக்கிறேன்) வீழ்த்தலாம். அப்புறம் சுட்டு சாப்பிடலாம். வாவ். intersting இல்ல? (interetinga? அங்க போனப்புறம் தெரியும்டி!)

நீண்ட ஸ்ட்ராங்கான கயிறு. சுனாமியோ, இல்ல global warming (இதுக்கு தான் ஓவரா இங்கிலீஸ் படம் பாக்காதன்னு சொல்றது!) ன்னாலயோ கடல் தண்ணீர் தீவுக்குள்ள வந்திடுச்சுன்னு வெச்சுக்குங்க ஒரு பெரிய மரத்தைப் பார்த்து அதுல கயிறு போட்டு ஏறி உச்சியில் உக்காந்துகிடலாம்ல. மேலும், இளா இந்த பதிவை படிச்சுட்டு, அடப் பாவி, இவ்ளோ மொக்க போடுற, உன்னல்லாம் அந்த தீவிலயே விட்டுட்டு வந்திடனும்டான்னு, அங்கேயே விட்டுட்டாருன்னு வெச்சுக்கோங்க, நான் மரம் வெட்டி (தற்செயலாக வந்த வார்த்தைதான்!) இந்த கயிற use பண்ணி படகு போல ஏதோ செஞ்சு தப்பிசுடலாம் பாருங்க. cast away ல Tom Hanks இப்படி தப்பிக்கிற போது அவர் மறுபடி மறுபடி அலைகளால் கரைக்கே இழுத்து வரப்படுகிற காட்சி மனதில் தோன்றி சற்று கிலி ஏற்படுத்தத்தான் செய்கிறது. இளா, ஒரு மாசம் கழிச்சு வந்து என்ன கூப்பிட்டுப்பீங்கள்ல?

என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார்: நான் ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டு போயிடுவேன். சாம்பார் ரசம் (ரொம்ப முக்கியம்!) எல்லாம் சேர்த்து ஒரே பாக்கெட்டா எடுத்துப்பாராம். ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டுப் போனா அது கெட்டுப் போயிடாதா? புளிச்சாதம் கூட ஐந்து நாட்களுக்கு தான் வரும். (நாங்க கோவிலுக்கு போகும் போது எடுத்துட்டு போவோம். மூனாவது நாளே சாப்பிட முடியாது. அந்த smell வந்தாலே வயித்த புரட்டிட்டு வரும்) மேலும் தீவில் அதிகம் வேலை இருக்காது so hopefully அதிகம் பசி இருக்காது. பழங்கள் if lucky ஏதோ மீன், பறவை கிடைத்தால் போதும். சமாளிச்சுகிடலாம்.

என்னுடைய இன்னொரு நண்பரிடம் கேட்டதற்கு அவர் உடனே லேப்டாப் எடுத்துட்டு போவேன்னார். லேப்டாப் வெச்சு என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, ம்..ம்..பாட்டு கேப்பேன், படம் பாப்பேன் என்னமோ செய்வேன்னார். சார்ஜ் போயிடுச்சுன்னா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்ப, ஓ அப்படி ஒரு விசயம் இருக்கான்னு முழிச்சார். ஒன்று மட்டும் தெரிகிறது. நமது வாழ்க்கையில் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன.

அப்புறம் அவர் நிதானமாக யோசித்து சொன்ன ஐந்து பொருட்கள்: ஒரு பெரிய சாக்லேட் பாக்கெட் (எனர்ஜிக்கு), சீட்டு கட்டு (solitaire விளையாட. பொழுது போய்விடும்), கூர்மையான ஒரு ஆயுதம், கம்பளி (குளிருக்கு. மழை பெய்தா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, அட போடாங்கற மாதிரி பார்த்தார்!) , பேப்பர் பேனா (எழுதுவதற்கு. இப்பொழுது அவர் ஆங்கிலத்தில் கதை எழுத ஆரம்பித்திருக்கிறார். கேட்டு வாங்கி publish செய்கிறேன்!)

ஓகே சாய்ஸ் தான், இல்லயா?

தண்ணீருக்கு என்ன பண்ணுவது என்ற சீரியசான யோசனை எனக்கு வந்தது. கடல் தண்ணீரை குடிக்க முடியாதே. கேள்வியின் நாயகன் கடல் தண்ணீரை குடித்து சமாளித்து விடுவேன் என்றார். (அவர் wife கிட்ட சொல்லி சாப்பாட்ல உப்பு கம்மியா போடச் சொல்லனும். மனுசன் ரொம்ப பொறுமைசாலின்னு நினைக்கிறேன்.) என்னால முடியாது. ரொம்ப உப்பா இருக்கும், அவர் தெரியாம சொல்லுறார். ஆனா எனக்கிருக்கிற ஒரே நம்பிக்கை, தீவில் கண்டிப்பாக back waters இருக்கும். அல்லது fresh water சுணை கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தில் இருக்கும். (Idea: Life Of Pie) எனவே அதை குடித்து சமாளித்துக்கொள்ளலாம். மேலும் மழை வந்தால் பிடித்து வைத்துக்கொள்ளலாம். ஆமாம், பிடித்து வைக்கப் பாத்திரம்? இதுக்கு தான் கேள்வியின் நாயகன் கொள்றதுக்கு பாத்திரம் எடுத்துப்போவேன் என்றார். (முதலில் “ல்” பிரச்சனையால், பாத்திரத்த வெச்சு கொல்லுவாரா? தலையில கவுத்திவிட்டு மூச்சு திணற வெச்சு கொல்லுவாரோ? புதுமையான டெக்னிக்கா இருக்கேன்னு நான் சீரியசா யோசிச்சேன்) ஆனால் பாத்திரம் எடுத்துப்போகும் அளவுக்கு இளா வாய்ப்பளிக்கவில்லை. ரொம்ப stingy அவர்.

so தண்ணீர் பிரச்சனை solved. டென்ட் அடிக்கும் அளவுக்கு ஒரு பெரிய பிளாஸ்டிக் ஷீட். அதை (மழை மற்றும் கடுமையான வெயிலில்) டென்ட்டாகவும் use பண்ணலாம், குளிருக்கு போர்வையாகவும் பயன்படுத்திக்கலாம்.

கவட்டைக்கு பதில் நான் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டு, சாக்லேட் பாக்கெட் அல்லது சீட்டு கட்டு எடுத்துட்டு போகலாம்.

ஆனால் நான் கண்டிப்பாக ஒரு மாதம் தனிமையில் – அதுவும் செல் போன் இல்லாம – இருக்க வாய்ப்பே இல்லை. கண்டிப்பா லூசாயிடுவேன். (இப்ப மட்டும் எப்படியிருக்கியாம்? ன்னு நீங்க கேக்குறது என் காதுல விழல!)

அஜீத்துக்கு கதை

இது ரொம்ப கஷ்டமான வேலை. எனக்கு மேஜிக் தெரியாது. என்ன முழிக்கிறீங்க? கதைதான எழுதச் சொன்னோம், இவன் என்ன மேஜிக் கீஜிக்குன்னு பீலா விடறான்னு பாக்குறீங்க தான?. அஜீத் படத்தில் (அல்லது சமீபத்திய தமிழ் ஹீரோக்கள் படங்களில் ) கதை என்பது பறம்பொருள் போல. இருக்கும் ஆனால் இருக்காது. தேடுங்க தேடுங்க தேடிட்டேயிருங்க.

ஆனாலும் நான் நம்ப “தலை”க்கு ஒரு கதை யோசிச்சு வெச்சிருக்கேன். அதுல அவர் மட்டும் தான் நடிக்க(?!) முடியும். வேற யாரும் பக்கத்துல கூட வரமுடியாது. அவருக்கே அவருக்கான கதை இது. புது இயக்குனர்களை – கதாசிரியர்களை- அவரைப் போல ஆதரிப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?

படம் ஆரம்பிக்கிறது. ஒரு கழுதை சாந்தமாக நிற்கிறது. காமிரா top angle ல இருக்கு. காமிரா அப்படியே மெதுவா கீழே இறங்கி வருகிறது, அப்போது தான் தெரிகிறது அது உண்மையிலே கழுதை இல்லை, கழுதை வேசத்தில் இருக்கும் அஜித். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. திடீரென்று வெளிச்சம் அவர் மீது விழுகிறது. கேமிரா பல ஆங்கிளில் சுழல்கிறது. ரீரெக்கார்டிங் காதைப் பிளக்கிறது. (நான், உஷாராக கொண்டுபோயிருந்த பஞ்சை காதில் வைத்துக்கொண்டேன். ஐ, நான் தான் ஆழ்வார் பாத்திருக்கேனே!) கேமிரா focus-outoffocus ஆகிக் கொண்டேயிருக்கிறது. (நான் ஏற்கனவே சோடாபுட்டி, எனக்கு தலை சுற்றவே நான் பயத்தில் கண்களை கையைவைத்து இறுக்கமாக மூடிக்கொண்டேன்.) சட்டுன்னு அஜித் கண்களை திறக்கிறார். வித்தியாசாகரிடம் சொல்லி இந்த பிரேமில் matrix revolutions music க்கையும் கழுதை கத்தும் சத்தத்தையும் mix செஞ்சுறலாம். செமத்தியான introduction.

அஜித் அப்படியே slow motion இல் நடந்து வந்து கட்டிலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தனை உதைத்தே கொல்கிறார். நடு நடுவே கழுதை கத்திக்கொள்கிறது.

அடுத்த பிரேம். ஹீரோயின் introduction. அவர் IIM இல் படித்தவர். அஜித் தங்கியிருக்கும் flat க்கு பக்கத்தில் குடிவருகிறார். வந்த அன்றே பக்கத்து flatல் (அஜித் தங்கியிருக்கும் flat) கழுதை குதிரை கனைப்பது போன்ற சத்தம் கேட்டு மிரண்டு போகிறார். மறுநாள் அஜித்தைப் பார்க்கிறார். இவர் தான் இப்படி mimicry செய்தார் என்று யூகித்தவுடன் (atleast நான் ஒரு காரணமாவது சொல்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்) அவருக்கு உடனே காதல் வந்து விடுகிறது. உடனே டூயட். யாரும் எடுத்திறாத அன்டார்டிக்கா பனிசருக்குகளில் அஜித் மற்றும் IIM ஹீரோயின் கழுதைகளுடன் நடனமாடுகின்றனர். அவ்வளவு பனியிலும் நமது ஹீரோ full suit இல் இருக்க, ஹீரோயினும் அவர் LKG யில் போட்ட frock மட்டுமே கொடுக்கப்படும்.

அடுத்த பிரேம். அஜித் ஒட்டகத்தைப் போன்று வேடம் போட்டிருக்கிறார். இந்த முறை ஒரு புதுமையான டெக்னிக்கை கையாள்கிறார். ஒட்டகம், கட்டிலில் விட்டத்தைப் பார்த்து படுத்துக்கொண்டிருப்பவனின் முகத்துக்கு அருகே சென்று வாயைத் திறந்து மூச்சு விடுகிறது. அவன் அங்கேயே பரலோகம் செல்கிறான். மறுபடியும் தீம் மியூசிக் + கழுதை கத்தும் சத்தம்.

அடுத்த பிரேம். ஹீரோயின் அஜித் எங்கே வேலை செய்கிறார் என்று கண்டுபிடிக்க follow செய்கிறார். அவர் zoo வில் கிளீன் செய்யும் வேலை செய்வது தெரிகிறது. அவர் வேலை செய்யும் நேரம் போக ஒரு காலியான கூண்டிலேயே உட்கார்ந்திருப்பது தெரிகிறது. கூண்டுக்கு வெளியே. The Donkey – 1999-2007 என்று போட்டிருக்கிறது.

ஹீரோயின் அஜித்திடம் காதலைச் சொல்லுகிறார். அஜித் முதலில் பிகு பண்ணாலும் டூயட் மட்டும் பாடிக்கொண்டிருக்கிறார். பிறகு ஒரு நாள் ஹீரோயின் அஜீத்திடம் கழுதை போல கத்திக் காண்பிக்கச்சொல்ல அஜித் டென்சனாகிறார். உனக்கு தெர்யுமா. நான் தனியாளில்ல. நான் பேஸ்மாட்டேன். கத்துவேன். என்று காச்மூச்சென்று கத்துகிறார். பிறகு flashback சொல்கிறார். ஹீரோயின் (ரசிகர்களும்) நான் கேக்கவேயில்லையேன்னு சொல்றத அவர் கண்டுக்கல.

அஜித் zooவில் வேலை பார்க்கிறார். அங்கே சிறுத்தை, சிங்கம், யானை போன்ற மிருகங்கள் இருக்கின்றன. அஜித்துக்கு கிளீன் செய்யும் வேலை. அந்த zoo வில் ஒரு கழுதை இருக்கிறது. அதுவும் பார்வைக்கு வைக்கப்பட்டது தான். வேலையெல்லாம் முடித்து விட்டு அஜித் அங்கு தான் வந்து உட்கார்ந்து கொள்வார். (கழுதை ஒன்றும் செய்யாது அது பாட்டுக்கு இருக்கும். மேலும் கழுதையை யாரும் பார்க்கவரமாட்டார்கள் -visitors- நன்றாக தூங்கலாம் என்பது எண்ணம்) கழுதை ஏதோ தன் மீதான பாசம் என்று நினைத்துக்கொள்கிறது. ஒரு நாள், கழுதை அஜீத்திடம் ஏன் என்னை உனக்கு பிடிக்கிறது என்று கேட்கிறது. அஜித் மற்றொரு flashback சொல்ல ஆரம்பிக்கிறார். கழுதை நான் கேட்கல கேட்கலன்னு கத்திக்கொண்டே கூண்டுக்குள்ளே அழுது புலம்புவதை அஜீத் கவனிக்கவில்லை.

அஜித்தின் அப்பா அந்த கிராமத்தில் துணி துவைத்துக் கொடுப்பவர். அவருக்கு ஒரு கழுதை இருக்கிறது. ஒரு நாள் கழுதைக்கு உடம்பு சரியில்லாமல் போக அஜித் மூட்டையைத் தூக்கிகொண்டு செல்கிறார். அப்போது தான் அவருக்கு கழுதைகளின் வலி புரிகிறது. கண்களில் நீர் வழிந்தோடுகிறது. கழுதைகளின் நலனுக்காக போராடுவேன் என்று அழுக்கு துணிகளின் முன்னால் சபதம் எடுத்துக்கொள்கிறார். க.மு.க என்று ஒரு கட்சியும் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். கமுக என்வென்று தெரியாத மக்களுக்கு : கழுதைகள் முன்னேற்றக் கழகம்.

கழுதை மொக்க தாங்க மாட்டாமல் அழுகிறது. அஜீத் எப்பவும் போல தன்னுடைய flashback கேட்டு அழுகிறது என்று நினைத்துக் கொள்கிறார்.

கழுதைக்கு கடுமையான நோயினால் பாதிக்கப்படுகிறது. டாக்டர்கள் கழுதை அதிர்ச்சியான ஜீரனிக்க முடியாத செய்தியைக் கேட்டதால் (should be ajith’s flashback) இப்படி ஆகிவிட்டதென்று சொல்கிறார்கள். மாட்டு டாக்டர் -அப்பரண்டீஸ்- ஒருவர் தவறான மருந்து கொடுத்துவிடுகிறார். கழுதை செத்துவிடுகிறது. ஆனாலும் அஜித்திடமிருந்து தப்பித்துவிட்ட சந்தோசம் அதில் கண்ணில் தெரிகிறது.

அஜித் கோபமாகிறார். கொந்தளிக்கிறார். (ஏன்னா, கழுதை செத்தபிறகு அந்த zoo வேற கழுதை வாங்கல, அந்த கூண்டுக்கு ஒரு காண்டாமிருகத்த கொண்டுவந்திடுச்சு. மக்கள் நிறைய பேரு வாரதால அஜித்தால நிம்மதியா தூங்கமுடியல)
கழுதையின் சாவுக்கு காரணமாயிருந்த அந்த அப்பரண்டீஸ் டாக்டர், அவரோட வந்த கம்பவுண்டர்ஸ் அப்படீன்னு எல்லாத்தையும் கழுதை family (கழுதை, குதிரை. ஒட்டகம், வரிக்குதிரை, ஒட்டசிவிங்கி. இதில் ஒட்டகசிவிங்கி மேக்கப் போடுவதற்கு அமேசான் காடுகளிலிருந்து ஆதி வாசிகளை கூப்பிட்டு வரலாம் என்ற யோசனை இருக்கிறது!) வேசம் போட்டு பழிவாங்குகிறார்.

பிறகு கமுக கட்சி ஆரம்பிக்கிறார். தேர்தலில் நின்று வெற்றியும் பெறுகிறார்.

(இவை அனைத்தும் ஒரே தீம் சாங்.

வெற்றிக் கொடி கட்டு
கழுத முதுகில துணி கட்டு” ன்னு ஏதாவது தத்து-பித்துன்னு வைரமுத்துவிடம் கேட்டு வாங்கிவிடலாம்.)

ஹீரோயின் என்ன ஆனார்? மூனு பாட்டுக்கு ஆடினாங்கல்ல அது போதும். ஒரு பாட்டுக்கு யாராவது லத்தீன பாடகரைக் கூப்பிட்டு “கழா கழா கழா நீ தானே கோவேரி கழா” ன்னு பாடச்சொல்லலாம்.
அகராதி: கழா – கழுதை செல்ல பெயர்.

யாராவது கால்ஷீட் வாங்கிக்கொடுங்கப்பா!

மனிதர்களின் உண்மையான குணாதிசயங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தான் உணர்ந்து கொள்ள முடியும்

உண்மை. முற்றிலும் உண்மை. என்னுடைய physics வாத்தியார் சொல்லுவார் : ஒரு மாணவனின் உண்மையான குணங்களை அறிய வேண்டுமென்றால் அவனை அவனது நெருங்கிய தோழர் வட்டாரத்தில் விட்டுப்பார்க்கவேண்டும் என்பார். மிகவும் அமைதியான மாணவன் கூட சந்தர்ப்பம் கிடைக்கும் போது குணங்களை மாற்றிக்கொள்கிறான். liberalize ஆகிறான். liberation : break all rules.

நான் பெரும்பாலும் நெகடிவ் சமாச்சாரங்களை மனதிலே வைத்து, அந்த நெருப்புக்கு நெய் ஊற்றுபவன் அல்ல (போதும்டா உன் புகழபுராணம்!) ஆனால் இளாவின் இந்த கேள்வி எனது மனதின் ஆழத்தில் புதைந்திருந்த ஒரு சம்பவத்தை மேலெழுப்பி விட்டது. நண்பர்களின் உண்மை குணங்களை நான் அறிந்து கொண்டது அப்போதுதான். உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை என்ற வரியை ஞாபகப்படுத்துவது. நாம் அனைவரும் தனித்தனியே தான். யாரும் யாரையும் சார்ந்தவர்கள் அல்ல. சந்தர்ப்பம் கிடைத்தால் உறவுகளை (நட்பையும்) முறித்துக்கொள்ள சிறிதும் சஞ்சலப்படாதவர்கள். எனினும் நான் அந்த சம்பவத்தை சொல்ல விரும்பவில்லை.

இன்னொரு சம்பவத்தை சொல்கிறேன். நான் கல்லூரி படிக்கும் போது எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சொல்லப்போனால் அவன் தான் கல்லூரியில் எனக்கு முதல் நண்பன். கல்லூரியை விட்டு வரும் வரையில் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள். முந்தாநாள் அவனது பிறந்த நாள். நான் வாழ்த்து கூட சொல்லவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை.

கல்லூரி காலங்களில் paper presentation என்றொரு நிகழ்வு பல வெளி கல்லூரிகளில் நடக்கும். அந்த விழாவிற்கு நாங்கள் apply பண்ணுவோம். எங்களிடம் virtual reality and education என்றொரு அருமையான article இருந்தது. எந்த கல்லூரி paper presentation க்கு அனுப்பினாலும் கண்டிப்பாக தேர்வாகிவிடும். அப்படியிருக்க, என்னுடைய நண்பன் (ராஜன்: பெயரை மாற்றியிருக்கிறேன்) திருச்சிக்கே அனுப்புமாறு சொல்லிக்கொண்டேயிருப்பான். இரு முறை நாங்கள் presentation க்கு திருச்சி சென்று வந்தோம். இதைப் பற்றி வேறு எண்ணங்கள் எனக்கு இருந்ததில்லை. நான் யோசிக்கவும் இல்லை.

அப்புறம் தான் தெரிந்தது அவனுக்கு திருச்சியில் ஒரு காதலி இருந்தாள். அவள் அவனுக்கு அத்தை பெண் தான். நம்மூரில் தான் யாருடனும் அனுசரித்துப் போவோம், இரத்த பந்தகள் சொந்தகளுடன் கண்டிப்பாக அனுசரித்துப் போக மாட்டோமே, வழக்கம் போல அவனுடைய வீட்டுக்கும் அவளுடைய வீட்டுக்கும் சண்டை. ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் கடல் போல கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. நான் அவளுக்கு அண்ணனானேன்.

இருவரும் திருச்சியில் எல்லா இடமும் சுற்றியிருக்கிறார்கள். முக்கியமாக they loved each other and infact he knows about his mother. அவனுடைய அம்மா அவனது காதலுக்கு கண்டிப்பாக ஓகே சொல்ல போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இவன் காலேஜ் முடித்தான். அவளும் காலேஜ் முடித்தாள். அவள் வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். அவள் இவனை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினாள். இவன் அவளை பொறுத்திருக்குமாறு கூறினான். அவள் எவ்வளவு காலம் பொறுத்திருப்பாள்? நம் நாட்டில் பெண்ணிற்கு என்ன உரிமை -பல சமயங்களில் ஆணுக்கே இருப்பதில்லை என்பது வேறு விசயம்- இருக்கிறது? அவள் இவனை வற்புறுத்த வற்புறுத்த இவன் மறுக்க ஆரம்பித்தான். அவள் போன் கால்களை அட்டென்ட் செய்யாமல் அவளை மனதளவில் சாகடித்தான். அவள் என்னைத் தொடர்பு கொண்டாள். அண்ணா, அவனிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றாள். நான் அவனிடம் கேட்டதற்கு அவன் சொன்ன பதில்: வீட்ல ஒத்துக்க மாட்டாங்கடா.

புல்ஷிட். வீட்ல ஒத்துக்காதது முன்னமே தெரியாதா? அவளோடு கை கோர்த்து நகர் வலம் வரும்போது இது தெரியாதா? காதலித்தாயா இல்லையா? காதலிக்கும் வரை காதலித்து விட்டு கடைசியில் நெருக்கடி வரும் போது, இனி வேறு வழியில்லை என்று வரும் போது, வீட்ல ஒத்துக்கமாட்டாங்கன்னு காரணம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

பெற்றோருக்காக தூக்கியெறியப்பட்ட காதல்கள் கணக்கிலடங்காமல் காற்றில் சுற்றித் திரிகின்றன. பெற்றோர் தூக்கியெறிந்த காதல்களும் அந்தரத்தில் மோட்சமற்று பிசாசாய் திரிகின்றன. பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட பெற்றோர்களின் மீதான காதல்களும் போவதற்கு வழி தெரியாமல் ஒரு செக்கு மாட்டைப் போல பிள்ளைகளையே சுற்றி சுற்றி வருகின்றன. ஏன் இத்தனை கஷ்டங்கள்? நமக்கு நாமே பூட்டிக்கொண்ட அர்த்தமற்ற தேவையில்லாத விலங்குகளை என்று அவிழ்த்தெரியப் போகிறோம்? எப்போது நமக்கு விடுதலை?

பெற்றோரின் மீது நாம் வைத்திருக்கும் பாசமும் மரியாதையையும் போன்று, நம்மிடம் பெற்றோருக்கு பாசமும் அன்பும் இருக்கிறதா இல்லையா? நாம் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் போது, அவர்கள் நமது உணர்வுகளை மதிக்கமாட்டார்களா என்ன? மதிக்கவில்லை என்றால் பிறகு அன்பென்ன பாசமென்ன? வரட்டு பிடிவாதம் தானே இருக்கிறது.

இதை தவறு என்றும் சரி என்றும் நான் சொல்லவில்லை. சொல்வதற்கு நான் யார்? ஆனால் மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி என்பது மட்டும் உண்மை.

பேச்சுத்தமிழில் எழுதும் பதிவர்களைப் பற்றி:

பொறாமை. பேச்சுதமிழில் எழுதுவது என்பது மிகவும் கஷ்டம். அனால் successfull ஆக எழுதினால் எளிதாக ரீச் ஆகும். முக்கியமாக நகைச்சுவை உணர்வை அதிகரிக்கும். ஆனால் நான் அருமையான தமிழில் பதிவிடுகிறேன் என்பது, வேறொன்றுமில்லை, கண்டிப்பாக உள்குத்து தான். எனக்கு சில சமயங்களில் பேச்சுத்தமிழில் எழுதியதைப் படிப்பது எரிச்சலாக இருக்கும். குறிப்பாக ஜெயமோகனின் காடு நாவல் மற்றும் அவரது சில சிறுகதைகள். நெல்லை தமிழில் கேரள வாடை அடித்து மம்முட்டி படம் பார்த்த அனுபவமே மேலிடுகிறது.

ஜெகத் எழுதிய நடை பற்றிய பதிவு நான் சமீபத்தில் ரசித்துப் படித்தேன். நன்றாக சிரித்தேன். கோணங்கி பற்றிய இதே போன்றதொரு விமர்சனத்தை சாருநிவேதிதாவின் கோணல் பக்கங்களிலும் படிக்க நேர்ந்தது. மேலும் பயங்கர ஹிட் ஆன வீராசாமி பற்றிய விமர்சனமும் வயிறு வலிக்க வைத்தது.

இனி நிர்மலுக்கான கேள்விகள்:

1. நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆகலாமா? நாட்டை ஆட்சி செய்யலாமா? நன்மை தீமை?

2. புரியவே புரியாத கவிதைகளை கண்டிப்பாக எழுதித் தானாக வேண்டுமா? இப்பொழுது கதைகள் கூட புரியாத அளவுக்கு எழுதுகிறார்களே, இது தேவைதானா? மேலும் பெண்ணியம் என்ற பெயரிலும் எதார்த்தம் என்ற பெயரிலும் சொல்லவே நா கூசும் அளவுக்கான வார்த்தைகளை உபயோகித்து எழுதுவது அவசியம் தானா?

3. உண்மையைச் சொல்லுங்கள் திரிஷா அழகு தானே?

4. காவிரிப் பிரச்சனைக்கு என்னதான் வழி? நதிகளை நாட்டுடைமை ஆக்கலாமா?

5. உங்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கினால் -of course you can act independently!- என்ன செய்வீர்கள்?

வாய்ப்பளித்த இளாவுக்கு நன்றிகள் பல!
Pass to நிர்மல்.

இளாவின் சுடர் :http://ilavanji.blogspot.com/2007/02/blog-post.html

மறு-காலனியசம்

“மும்பை நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 35,000 ஏக்கர் நிலத்தை ரிலயன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அங்கே அவர்கள் ‘மகா மும்பை சிறப்பு பொருளாதார மண்டலத்தை’ (Special Economic Zone-SEZ) தொடங்க உள்ளனர். அந்த நிலப்பரப்பில் உள்ள 43 கிராமங்கள் பெயர்த்தெறியப்பட உள்ளன. நவீன மும்பையைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. நல்ல பருவ மழையும், தடையற்ற விவசாயமும் அவர்களின் வாழ்வைக் காத்து வருகிறது. சந்தை விலை ஏக்கருக்கு 25-30 லட்சம் வரை இருக்க, வெறும் 3-4 லட்சம் ரூபாய் கூட அவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. அந்த கிராமத்தினர் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மகாராஸ்டிரா அரசு வாலை ஆட்டிக்கொண்டு அம்பானி சகோதரர்களின் காலடியில் கிடக்கிறது. பல மாநில முதல்வர்கள் அம்பானி சகோதரர்களின் கண்ணில் படும் படியாக வாலை ஆட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். நிலத்திற்குப் பதிலாக ரொக்கப்பணம் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருந்தாலும், அவைகளை மீறுவதில் பல மானில அரசுகளுக்கு தனிப்பட்ட ஆர்வம் தான். இந்த பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு நில பேரத் தரகர் வேலை பார்ப்பது (Real Estate Broker) பல மாநில அரசுகளுக்கு விருப்பப் பணியாக மாறி விட்டது.”

அ. முத்துகிருஷ்ணன், “குருவும் இசைவான முதலீட்டுச் சூழலும்” என்ற கட்டுரையிலிருந்து.

சரி,SEZ என்றால் என்ன? அவரது எழுத்துக்களிலே:

நம் நாட்டு எல்லைக்குள் சில பகுதிகளைக் கையகப்படுத்தி அதன் எல்லைகளை வரையறுக்கிறார்கள். அங்கே பெரும் நிறுவனங்கள் எந்த துறை சார்ந்தும் தொழில் தொடங்கலாம். மென்பொருள் நிறுவனங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கேளிக்கைப் பூங்காக்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், அங்காடிகள் என தன்னிறைவு பெற்ற பகுதியாக அது திகழும். அந்த துணை நகரம் ஐரோப்பா, அமெரிக்க சாயலோடிருக்கும். அந்த எல்லைக்குள் இந்திய அரசாங்கத்தின் எந்த சட்டமும் செயல்படாது. தொழில் துறைச் சட்டங்கள், சுங்க வரி, விற்பனை வரி, மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் என இது போன்ற ஆயிரக்கணக்கான விதிமுறைகள் நடைமுறைகள் எல்லாம் அங்கே எட்டிக்கூட பார்க்க முடியாது. SEZகளின் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படவிருக்கும் வரி இழப்பு சுமார் 90,000 கோடி. இதை அரசாங்கம் Tax Holiday என்று செல்லமாக அழைக்கிறது.

மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல்:
இந்த நிலப்பரப்பு வெளிநாட்டுத் தூதரகம் போலத்தான் கருதப்படுமாம். வருங்காலத்தில் SEZகளுக்குள் நுழைய விசா, பாஸ்போர்ட் தேவைப் படலாம். Like East India Company’s Private Cities? அதனால் தான் இப்பொழுது பல developing countriesக்கு வந்து இறங்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை, மறுகாலனியிசம் என்று கொஞ்சம் பயத்தோடு அழைக்கிறார்கள். இது ஒரு புதுவகையான சுரண்டல். புதுவிதமான அடிமைத்தனம். Dependency. கொஞ்சம் கொஞ்சமாக நாம் அவர்களது எக்கானமியைச் சார்ந்து வருகிறோம். இந்த சுரண்டலிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நாம் -Indian Based Companies, software,hardware,bio-technology or anything- சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, தொலைநொக்குப் பார்வையோடு பல புதிய பயனுள்ள products கண்டுபிடிக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் மற்றநாட்டினருக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருப்பது? இன்போசிஸ், விப்ரோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக கனிசமான தொகையை செலவு செய்யவேண்டும்.

SEZஇன் disadvantages:
1. மிகச்குறைந்த -அடிமாட்டு- விலையில் நிலங்களைக் கையகப்படுத்துதல்
2. வரிவிலக்கு தவறாக பயன்படுத்தப்படுதல்
3. யாரோ வெகு சிலரின் கொள்ளை லாபத்துக்காக, வேறு யாரோ வரி கட்டுவது.

இந்த முயற்சி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் சிறு ஐயப்பாடும் இல்லை. மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த பணம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கே போதாது என்கிறது ஒரு கட்டுரை. அப்படித்தானே இருக்கிறது. இன்று மதுரையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு குழந்தையைப் படிக்க வைக்க ஒரு quarterக்கு இருபதினாயிரம் ரூபாய் கேட்கிறது ஒரு பள்ளி. என் நண்பர் ஒருவர் சொன்னார்: நானெல்லாம் எனது மொத்த படிப்புக்கே (MCA வரையில்) அவ்வளவு தான் செலவழித்திருக்கிறேன்.

மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு விசயம் : வரி விலக்கு. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பெரிய ஐந்து மென்பொருள் நிறுவனங்கள் ஆயிரம் கோடி வரிவிலக்கு பெறுகின்றன. இவை கடந்த பத்து வருடங்களாக வரிவிலக்கு பெறுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும் இந்த நிறுவனங்கள் தங்கள் வரி விலக்கை நீட்டித்துக்கொள்ள SEZக்குப் படையெடுக்கின்றன.

இவ்வாறான சலுகைகள் ஒட்டுமொத்த எக்கனாமிக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை. ஒரு சிலரின் கைகளிலே தான் பணம் மேலும் மேலும் குவிய வாய்ப்பாக இருக்கும் (பிறகு அவர்கள்,நமது அரசாங்கத்திற்கே சட்டங்கள் இயற்றுவார்கள் இல்லியா?) என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன? இதற்கு அமெரிக்காவே சிறந்த எடுத்துக்காட்டு!

கஷ்டப்பட்டு அன்றாடத் தேவைகளுக்காக உழைக்கும் மிகச்சாதரண – இன்னும் அடித்தட்டிலே இருக்கும் -மக்களே வரி கட்டிக்கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கோடிகளில் புரளும் இவர்களுக்கு ஏன் வரிவிலக்கு? இவர்கள் (பன்னாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்கள்) சம்பாதித்து அருகில் இருக்கும் கிராமங்களையாவது முன்னேற்றினார்களா? பெங்களூருக்கு அருகிலிருக்கும் – IT revolution ஆல் எந்த பாதிப்பையும் காணாமல், இன்னும் அப்படியே எவ்வித வளர்ச்சியும் இல்லாத – கிராமங்களைப் பற்றிய documentary ஒன்றை BBC ஒளிபரப்பினார்கள்.

ஒரு infra-structure development ஏற்படும் போது அந்த பகுதியிலிருக்கும் நிலங்களைக் கையக்கப்படுத்துவது வழக்கம் தான். அதை எதிர்ப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதும் உண்மையே. உதாரணத்துக்கு நேஷனல் ஹைவேய்ஸ் (Nationa Highways) அகலப்படுத்தும் போது ரோட்டின் மிக அருகில் இருக்கும் வீடுகளும், தொழிற்சாலைகளும், பல கட்டிடங்களும் இடிக்கப்படுவதும், கையகப்படுத்தப்படுவதும் இயல்பே, அதற்கு அரசு கொடுக்கும் சொற்ப பணத்துக்குக்கூட ஏதோ நியாயம் கற்பிக்களாம், ஆனால் கோடிகளில் புரளப்போகும் (ரிலயன்ஸ் போன்று ஏற்கனவே கோடிகளில் புரளும்) மக்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் போது நிலத்துக்காக ஏன் நியாயமான (மார்கெட் நிலவரப்படி) தொகை கொடுக்கக்கூடாது?

மென்பொருள் நிறுவனங்களால் தான் பல இளைஞர்கள் தங்களது குடும்பத்தை ஒரே ஜெனரேஷனில் முன்னேற்றியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டுதானாக வேண்டிய சூழ்நிலையில், அந்த வள்ர்ர்சி மற்றவர்களின் தலையில் இடியாக இறங்கக்கூடாது அல்லவா? ஒரு நாடு வாழ ஒரு கிராமத்தை அழிக்கலாம் என்று டுபாகூர் வசனம் பேசினால், ஒரு கிராமம் இல்லையப்பா, நாற்பத்திமூன்று கிராமங்கள்! நாற்பத்திமூன்று.

links:

http://sezindia.nic.in/
http://en.wikipedia.org/wiki/Special_Economic_Zone
http://www.hindu.com/2006/09/28/stories/2006092808341200.htm
http://www.indiantaxsolutions.com/main.php?t=28011984&d=1152598537

Thanks : உயிர்மை

தயிர்வடைகள்

தயிர்வடை சாப்பிடுபவர்கள் Traditional, பக்கார்டி சாப்பிடுபவர்கள் Organic என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமல் இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்துவிட்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே என் மீது கோபம் கோபமாக வருகிறது. என்ன ஜென்மம் நான்? ஆதாலால் குடி மக்களே உங்களுக்கு இந்த அரிய உண்மையை சுட்டிக் காட்டியதற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்லத்தேவையில்லை, திரு. “ஆர்கானிக் எழுத்தாளர்” சாரு நிவேதிதாவிற்கு நேரடியாகச் சொல்லிவிடுங்கள்.

விசயத்துக்கு வருவோம். கோணல் பக்கங்களின் மூன்றாவது தொகுதியில் “உண்மையான பெரியார்” என்ற கட்டுரை (கட்டுரைகள் எழுதுபவர்கள் மன்னிக்கவும், அப்படித்தான் அந்த புத்தகத்தில் இருக்கிறது. மேலும் இந்தப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய நாஞ்சில் நாடன் இந்த மாதிரி இலக்கியத்திற்கு(?!) இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்கிறார்!) யில் இவ்வாறு சொல்கிறார், சாரு நிவேதிதா:

காந்தியை, மகாத்மா என்று சமூகம் சொன்னால் நாமும் கிளிப்பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லுதல். மாறாக அவர் மகாத்மாவாக வாழ்வதற்கு மற்றவர்கள் என்ன விலை கொடுக்க வேண்டியதிருந்தது என்பது பற்றி கேள்வியே கேட்காமல் இருத்தல்.

காந்தி இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்யப்பட்ட செருப்பை மட்டுமே அணிவது என்று முடிவெடுத்த பின்னர், இயற்கையாக இறந்த மாட்டைத்தேடி இரு குழுக்கள் நாடெங்கும் அலைந்தது திரிந்து கண்டுபிடித்து, அவருக்கு செருப்பு வாங்கிக் கொடுத்தார்களாம். இவ்வகையில் காந்தி அணிந்த செருப்பின் விலை அந்தக் காலகட்டத்தில் சாதாரண செருப்பை விட ஐம்பது மடங்கு கூட இருந்ததாம்.

அதனால் அவரை மகாத்மா என்று சொல்வதற்கு கேள்விகள் கேட்கவேண்டுமாம்.

காந்தி, கண்டிப்பாக எங்கிருந்தாலும் இறந்த மாட்டைக் கண்டுபிடித்து எனக்கு செருப்பு வாங்கிவாருங்கள் என்று அடம் பிடித்தாரா? அவர் இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்த செருப்பை மட்டுமே அணிவேன் என்று முடிவெடுத்த பின்னர், அவரது தொண்டர்கள், அவர் வேண்டாம் எனினும், அவருக்காக தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து வாங்கி வந்திருக்கலாம். இவ்வாறு தொண்டர்கள் வாங்கி வராமல் இருந்திருந்தால் கூட, காந்திக்கு இது ஒன்றும் மேட்டரே அல்ல, அவர் செருப்பு அணிவதையே விட்டிருப்பார். கோட்சூட் அணிந்து செல்வத்தில் திளைத்திருந்த போது, கந்தல் ஆடை அணிந்த மக்களைப் பார்த்ததும் அனைத்தையும் தூக்கி எறிந்த அவருக்கு செருப்பு அணியாமல் நடப்பதா பெரிய விசயம்? இதைக்கூட விட்டுத்தள்ளுங்கள். எக்காலத்திலும் உண்மையே பேசுவது என்பது எவ்வளவு பெரிய சமாச்சாரம்? அதை செய்யக்கூடிய அளவுக்கு மனதைரியமும், self-control லும் இருந்தவருக்கு சாதாரண செருப்பு அணியாமல் இருப்பதா பெரிய வேலை? மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாற்பத்தியெட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவருக்கு செருப்பு அணியாமல் இருப்பதா கஷ்டம்?

எங்கே, இவர்களை ஒரு நாள் – ஒரே ஒரு நாள்- உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சரி. கிடக்கட்டும். அவரை மகாத்மா என்று அழைப்பதில் யாருக்கு என்ன கெடுதல் வந்து விட்டது? எவ்வளவு நல்ல பழக்கங்களை வைத்திருந்திருக்கிறார். அதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு : அவருடைய பாத்ரூம்மை அவரே கழுவுவது. இது என்ன பெரிய விசயம், என்கிறீர்களா? எனது நண்பர்கள் சிலரே கூட தாங்கள் உபயோகித்த பாத்ரூம்மை தாங்களே கழுவி விட மாட்டார்கள். சாதாரண மனிதர்களும் நேரம் இல்லை என்றும் ( நேரம் இல்லையா? பாத்ரூம் போவதற்கு நேரம் இருக்கும் போது, கழுவிவிட நேரம் இருக்காதா என்ன? அதெல்லாம் இல்லை, சோம்பேறித்தனம் தான் காரணம் ), இன்னும் வேறு காரணங்கள் சொல்லி தப்பித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நாட்டின் தலைவர், குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் ஏறும் போது இங்கிலாந்து நீதிபதியே கூட எழுந்து நிற்கும் அளவுக்கு மரியதைக்குரியவர், ஏன் பாத்ரூம் கிளீன் பண்ண வேண்டும்? அவரை மகாத்மா என்று அழைப்பதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது? யார், எங்கே குறைந்து போகிறார்கள்?

அவ்வாறு சொல்லும் இலக்கியவாதிகளை, சாரு நிவேதிதா : தயிர்வடை இலக்கியவாதிகள் என்று சொல்லுகிறார்.

1875 இல் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒயின், கூபாவின் பக்கார்டி, பாங்க்காக் கேலிக்கை விடுதிகள், ஜப்பானியப் பெண்கள் அருகிலிருந்து ஊற்றிக்கொடுக்க, தரையிலமர்ந்து ஸாக்கே என்ற மது வகையை அருந்துவது, கேப்ரே பார்கள், “ரா” வாக மட்டுமே அடிக்க வேண்டும் என்ற மிக நல்ல ரூல்ஸைக்கொண்டுள்ள Geronimous என்ற பார், அதில் தொடர்ச்சியாக பதினேழு ஷாட்கள் அடித்து பதக்கம் வாங்கியதைப் பற்றியல்லாம் எழுதுவது எந்த வகை இலக்கியம்? இவர்கள் தான் organic இலக்கியவாதிகளா? (organic wines பற்றி சொல்லியிருப்பாரோ என்று கூட சில நிமிடம் யோசித்தேன். )

கேட்டால், ethics வேறு ஒழுக்கம் வேறு என்கிறார். எடுத்துக்காட்டாக அவரது ப்ராண்ஸ் தேசத்து நண்பரின் ஆப்ரிக்க மனைவி கன்னத்தில் முத்தமிட்டு வறவேற்ற சம்பவத்தைக்கூறி அது அங்கே பழக்கம் ஆனால் இங்கே அப்படி செய்யமுடியாது என்கிறார். அப்படியானால் உங்கள் கட்டுரைகளை ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது தானே?

மேலும் ஆதாரத்திற்கு: அண்டார்டிக்காவில், அண்டாகாகஜம் என்ற மிகப்புகழ் பெற்ற இலக்கியவாதி -அண்டாகாகஜம் என்ற இலக்கியவாதி பனிகுகைக்குள்ளிருந்து அவருடைய அன்னை டபாகாகுஜமுக்கு யாருக்கும் புரியாத புருஷ்கியா மொழியில் எழுதிய கடிதங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும் – SubSnow Stupidity என்ற தொகுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்லி தப்பிப்பது பலருக்கும் வழக்கமாகிவிட்டது.

நாம் நமது நாட்டினர் மகாத்மா என்று சொன்னதை கேள்வி கேட்க்காமல் ஏற்றுக்கொண்டு தயிர் வடை இலைக்கியவாதி ஆகிவிட்டோம், ஆனால் ரனஜித் சொன்னதை அப்படியே நம்பினால் – என்னது? ஆதாரம் இருக்கிறதா? காந்தி மகாத்மா என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இல்லையா என்ன? -அந்த இலக்கியவாதிகளுக்கு என்ன பெயர்?

He is back!

காந்தியடிகள் இப்பொழுது இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்றொரு குறும்படம் youtube இல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. மெகாஹிட். அந்த படத்திற்கு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இலவச விளம்பரம் அளித்தன. நானும் பத்திர்க்கையில் வெளியான செய்தியைப் பார்த்துத்தான் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். பார்த்தேன். ரசித்தேன். இந்திய மக்கள் youtube இல் இருந்து அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

அந்தப் படத்தில் காந்தி அழகாக சண்டை போட்டார் (என்ன இருந்தாலும், தமிழ் சினிமாவில் வரும் , ஒரே குத்தில், அடியாள் பறந்து, பின், பல்டி அடித்து, பிறகு தலைகுப்புற டாடா சுமோவின் கார் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு விழுவதைப் போல அழகாக இல்லை!). இரண்டு கவர்ச்சியான பெண்களுடன் (இருந்தாலும், சீனா தானா பாட்டுக்கு நடனம் ஆடிய பெண்ணை விட அதிகமாகவே உடை அணிந்திருந்தனர். பெப்சி உங்கள் சாய்சில் ஒரு முறை ஒரு பெண் இந்தப் பாடலை விரும்பிக்கேட்டார், உமாவும் சிரித்துக்கொண்டே உங்களுக்கு வழங்குறோம்ங்க என்று சொன்னதை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன். மேலும், சென்ற வருடம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மாணவர்கள் நடனமாட நிறைய ஆசிரியர்கள் இந்தப் பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) ஜாலியாக கைகோர்த்துக்கொண்டு வலம் வருகிறார். மெசின் துப்பாக்கியைப் பயன்படுத்தி பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார். இறுதியில் “he is back. but this time he is crazy” என்று முடிகிறது படம்.

எனக்கு ஏனோ கோபம் வரவில்லை. யாரும் கோபப்படக் கூடாது என்று நான் சொல்லவில்லை. சிலருக்கு கோபம் வரத்தான் செய்தது. பொறுமையாக உண்மை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் கோபப்படத்தேவையில்லை என்பது புரியும். அந்த வீடியோவின் பின்னூட்டத்திலே, சிலர் காந்தியின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறி, வீடியோ போஸ்ட் செய்தவரை தகாத வார்த்தைகளில் திட்டியிருந்தார். காந்தியின் அருமை பெருமைகளை உணர்ந்தவர் எப்படி தகாத வார்த்தைளில் மற்றொருவரைத் திட்டுவார்?

உண்மையைச் சொல்லுங்கள் காந்தீயக் கொள்கைகளை நாம் முழுவதுமாக – அட்லீஸ்ட் சிலவற்றையாவது – நாம் கடைப்பிடிக்கிறோமா? நம்மைச் சுற்றிலும் காட்டப்படும் சினிமாவில் அவ்வளவு வன்முறையையும் ஆபாசத்தையும் வைத்துக்கொண்டு, Ghandi-II படத்தைப் பார்க்கும் போது ஏன் கோபம் வருகிறது? நம்மில் எத்தனைபேர் சத்தியசோதனை படித்திருக்கிறோம்? எத்தனை பேர் படித்துவிட்டு அவர் வழியில் நடந்திருக்கிறோம்? அல்லது நடக்க முயற்சித்திருக்கிறோம்?

உண்மையிலே காந்தி இந்த நூற்றாண்டில் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? “என் சிலைகளை அகற்றுங்கள். உங்கள் வீடுகளில் நீங்கள் மாட்டியிருக்கும் என்னுடைய புகைப்படங்களை தயவு செய்து அகற்றிவிடுங்கள். விளம்பரப் பலகைகைளில் இருக்கும் என் பெயர்களை (எங்கேயாவது இருக்கிறதா என்ன? நான் விளம்பரப் பலகைகளில் ரஜினிகாந்த், விக்ரம், விஜய், மும்தாஜ், நமீதா போன்றோரின் படங்களைத்தான் பார்த்திருக்கிறேன்) தூக்கியெறியுங்கள். என்னை உங்கள் மனதில் மட்டுமே நிறுத்துங்கள். என் வழியையும், கொள்கைகளையும் கடைப்பிடியுங்கள்” என்பார் என்கிறது லகே ரகோ முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.

காந்தியைப் பிடிக்காத நிறைய நபர்கள் இருப்பார்கள். இருக்கிறார்கள். கேட்டால் ஏதேதோ காரணம் சொல்லுவார்கள். அவர் அரசியல் சார்ந்து எடுத்த முடிவுகளைப் பற்றி விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகள்? காந்தீயம்?

கூர்காவிடம் அறை வாங்கிய முன்னா, தனது நண்பனிடம், காந்தி ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்றிருக்கிறார், நான் இன்னொரு கண்ணத்தைக் காட்டினால், அவன் அறைய மாட்டான் பார், என்று சொல்லி மறு கண்ணத்தைக் காட்டுகிறான். கூர்க்கா மறு கண்ணத்தில் ஓங்கி இன்னும் பலமாக மற்றொரு அறை விடுகிறான். இப்ப முன்னாவுக்கு காந்தீயம் மறந்து விடுகிறது. கூர்க்காவை அடித்து நொறுக்கிறான். நண்பனிடம், இரண்டாவது அறைக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு காந்தி சொல்லல என்கிறான்.

காந்தீயக் கொள்கைகளுக்கு, எங்கயாச்சும், இந்த அவசர உலகில் இடம் இருக்கிறதா என்ன? மேலும் காந்தீயம் அவசியம் தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

எனது வீட்டு வாசலில் ஒருத்தன் தினமும் பான் போட்டு எச்சில் துப்பி வைக்கிறான், நான் என்ன செய்யட்டும் என்று ஒருவர் கேட்க்கிறார். அதற்கு காந்தி – அல்லது காந்தி சொல்கிறார் என்ற illusion இல் முன்னாவே சொல்கிறார் – அவன் ஒவ்வொருமுறை துப்பும் போதும் அவனது முகத்தைப் பார்த்து பனிவாக சிரித்து விட்டு அவன் முன்னாலேயே அவன் துப்பிய பான் எச்சிலைக் கழுவுங்கள் என்கிறார். புகார் செய்த அந்த நபரும் அவ்வாறே செய்ய, கொஞ்ச நாளில் பலன் தெரிகிறது. எச்சில் துப்புபவர் சில நாட்களில் திருந்தி விடுகிறார். மன்னிப்பும் கேட்கிறார். எவ்வளவு நாளில் அந்த நபர் திருந்துவார் என்பது சொல்லமுடியாது. அது மாறுபடும். ஆனா திருந்துவார் என்பது நிச்சயம் என்பது படத்தின் கருத்து.

இது அஹிம்சை. நமது பணிவில் திக்குமுக்காடிப்போகும் எதிராளி “இவன் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனா இருக்கான்டா” என்று வேறுவழியில்லாமல் அவனே திருந்திவிடுவது. ஆனால் இதில் மற்றொரு விசயமும் நடக்கும். எச்சில் துப்புபவன் மேலும் இரண்டு மூன்று பான் நபர்களை அழைத்து வந்து இங்கே இலவசமாக துப்பிக்கொள்ளலாம், உடனே க்ளீன் செய்து விடுவார்கள் என்று பெருமையாக நம்மைப் பார்த்து சொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒன்று, அவர்கள் துப்ப துப்ப நாம் இன்முகத்தோடு அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்கள் முன்னிலையில் க்ளீன் செய்ய வேண்டும். பொறுமை வேண்டும். அதைவிட தைரியம் வேண்டும்.

இதே போன்றொதொரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம். வீட்டுச் சுவற்றில் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்கள் முன்னிலையிலே அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே கருணானிதியையோ, ஜெயலலிதாவையோ, இராமதாசையோ, திருமாவையோ கிழித்தெரிய நம்மால் முடியுமா? இங்கு நாய்கள் தான் அசுத்தம் செய்யும் என்னும் வரிகளை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டே சிறுநீர் கழிக்கும் நபர்கள் முன்னிலையிலே (of course அவர்கள் முடித்தபிறகு!) கழுவிவிட நமக்கு பொறுமை இருக்கிறதா? அப்படி பொறுமையாக கழுவி விடத்தான் வேண்டுமா? வெளி நபர்களிடம் பொறுமையாக இருப்பதை விட்டுத்தள்ளுங்கள், வீட்டிலிருக்கும் நபர்களுடன், நம் இரத்த சொந்தகளுடன், நமது உடன்பிறப்புக்களுடன், நமது பெற்றோருடன் நாம் பொறுமையாக இருக்கிறோமா?

உண்மையை ஒப்புக்கொள்ளுவதற்கு தைரியம் வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால்- அதற்குத்தான் நிறைய தைரியம் வேண்டும். மறைப்பதும் சொல்லாமல் இருப்பதும் பொய் சொல்லுவதற்கு சமம்தான். “உண்மையைச் சொல்லிவிட்டு, மனநிறைவோடு கம்பீரமாக தைரியமாக இரு” என்கிறார் காந்தி. முடியுமா? எல்லா சந்தர்ப்பத்திலும் அது முடியுமா? காந்தி சிறு வயதில் தான் வீட்டில் திருடியதை நினைவுகூர்கிறார். பிறகு தனது தந்தையிடம் தான் திருடியதை ஒத்துக்கொண்டு இரவு முழுவதும் அவரது படுக்கைக்கு பக்கத்தில் உட்கார்ந்து அழுததையும் கூறுகிறார். முன்னா ஆர்வமாக “உங்கள் தந்தை உங்களை மன்னித்தாரா?” என்று கேட்க, காந்தி சிரித்துக்கொண்டே, “ம்ம்..கொஞ்ச நாள் பிடித்தது.” என்று சொல்கிறார்.

ஒரு சூழ்நிலையில் முன்னா தனது ஆருயிர் நண்பன் சர்க்யூட்டை அறைந்து விட, சர்க்கியூட் தனிமையில் அழுகிறான். காந்தி முன்னாவிடம் : “அவனிடம் சென்று மன்னிப்பு கேள்” என்கிறார். முன்னா இதெல்லாம் தேவையேயில்லை என்று நினைக்கிறான். ஆனால் காந்தி : “அறைவது சுலபம். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்பது மிகவும் கடினம். அதற்குத்தான் தைரியம் அதிகம் வேண்டும். செய்து பார்” என்கிறார். நண்பனை அறைந்து விட்ட மனப்புழுக்கத்தில் இருந்த முன்னா அவனிடம் சென்று மன்னிப்பு கேட்ட பின்னர், மனதின் பாரம் குறைந்து, இருவரும் மீண்டும் -எந்த சொல்லப்படாத மனசங்கடமும் இல்லாமல் – நண்பர்களாகின்றனர்.

உறவுகளுக்குள் நிறைய விசயங்களை நாம் செய்வதில்லை. We take everything for granted. உதாரணமாக மன்னிப்பு கேட்பது. மன்னிப்பு என்பது “என்னை மன்னித்து விடு” என்று தான் கேட்க வேண்டும் என்றில்லை. மனைவியை ஓங்கி அறைவிட்ட கணவன், சிறிது நேரத்தில், அவளிடம் சென்று “என்னடா செல்லம் கோபமா?” என்று கேட்டால் கூட போதும். மன்னிப்பு கேட்பதிலும் தவறில்லை இல்லையா? மனைவியிடம் மன்னிப்பையும் சேர்த்து கேட்பதால், போனசாக ஏதும் கிடைக்கவாய்ப்பிருக்கிறதே!

இதில் கவனிக்க பட வேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. சும்மா சும்மா மனைவியை அடித்து விட்டு, பிறகு மன்னிப்பு கேட்பதில் எந்த காந்தீயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மன்னிப்பு என்றால் : தவறை உணர்ந்து கொண்டேன் என்று அர்த்தம். தவறை உணர்ந்து கொண்டால் அதை திரும்ப செய்யலாமா? சாரி கேட்பது இப்பொழுதெல்லாம் பேசனாகி விட்டது. சாரி கேட்பது காந்தீயம் இல்லை, தவறை உணர்ந்து மறுபடியும் செய்யாமலிருப்பதே காந்தீயம். திருடியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட காந்தி அதற்குப்பிறகு திருடவேயில்லை என்பதை கவனிக்கவேண்டும்!

அடுத்து பொய் சொல்லாமல் இருத்தல். உண்மையை ஒத்துக்கொள்ளுதல். முன்னா ஒரு ரவுடி. ஆனால் தனது காதலியிடம் தான் ஒரு புரபொசர் என்று சொல்லி ஏமாற்றுகிறார். வில்லன், முன்னாவிடம் இந்த விசயத்தை அவளிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். முன்னா காந்தியிடம் என்ன வழி என்று கேட்க: “அவன் சொல்வதற்கு முன்னால் நீ அவளிடம் உண்மையைச் சொல்லிவிடு. பிறகு அவனிடம் நீ பயப்படத்தேவையில்லை. தைரியமாக நீ உன் போராட்டத்தை தொரலாம்” என்கிறார். உண்மைதான். உண்மையைச் சொல்லிவிட்டு தைரியமாக போராட்டத்தை தொடராலாம். ஆனால் காதலி? நீயும் அவளும் உண்மையாக காதலிக்கும் பட்சத்தில் உங்கள் காதல் கண்டிப்பாக ஜெயிக்கும், ஆனால் நீ உனக்கு உணமையாக இரு என்கிறார். அவர் சஞ்சய தத் என்பதால் அவரது காதல் உண்மை சொல்லியும் ஜெயித்தது, நமக்கு?

ஆனால் காதல் ஜெயித்ததா இல்லை மன்னாங்கட்டியானதா என்பதல்ல முக்கியம். இரவு தூங்கப்போனால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் வர வேண்டும். அப்படி வரவில்லையென்றால் என்ன வாழ்ந்து என்ன பிரயோஜனம்? குற்ற உணர்வில்லாமல் நிம்மதியாக குரட்டை விட ஒரே ஒருவரால் தான் முடியும்: அவர் தனக்கு தானே உண்மையாக இருப்பவர்.

மூடநம்பிக்கை. வில்லனின் மகளுக்கு வில்லன் பொய் சொல்லி திருமணம் ஏற்பாடு செய்கிறார். அதாவது, ஜாதகப்படி மகள் திருமணம் செய்துகொண்டு போனால், கணவன் இறந்து விடுவான் என்கிறார், பையனின் ஜோசியர். இதைக்கேட்டவுடன் வில்லன் சமயோஜிதமாக அவள் பிறந்த நேரத்தை மாற்றி பையன் வீட்டாரை ஏமாற்றி விடுகிறார். இந்த விசயம் மகளுக்கு, திருமணத்திற்கு முதல் நாள் தான் தெரியவருகிறது. அவள் இதை ஒத்துக்கொள்ளாமல், நேரே சென்று பையனின் தகப்பனிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறாள். அவர் திருமணத்தை நிறுத்தி விடுகிறார். முன்னா வந்து சமாதானப்படுத்துகிறார். ஜோசியரும் உடன் இருக்க, பையனின் தந்தை ஜோசியர் சொல்வதைக்கேட்டு திருமணம் நடக்கவே நடக்காது என்கிறார். முன்னா அவரிடம் வாதாடுகிறார். சுற்றிலும் மக்கள் நின்று கொண்டு வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இரு வீட்டாரும் நல்ல படித்து உயர்ந்த நிலையில் இருப்பவர்களே. திருமணத்துக்கு வந்தவர்களும் உயர்மட்டத்தில் இருப்பவர்களே. அப்பொழுது முன்னா ” படிப்பறிவில்லாத ரவுடியான எனக்கு புரிவது கூட உங்களுக்கு புரியவில்லையா” என்று அங்கே நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து கேட்கிறார். வாஸ்து, பெயர்மாற்றம், மோதிரக்கல், ஜாதக தோஷம் என்று எத்தனை நம்பிக்கைகளில் படித்த நாமே சிக்கி வெளிவர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுது விடிவு?

ஒருவன் தனது தந்தையில் ஆயுட்கால சேமிப்பான ஏழு லட்ச ரூபாயை பங்கு சந்தையில் தொலைத்து விடுகிறான். தற்கொலைக்கு முயற்சி செய்யும் அவனிடம் : “முதலில் உன் தந்தையின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று உண்மையைச் சொல். பிறகு எப்படியாது அந்த பணத்தை அவருக்கு திருப்பிக்கொடுப்பேன் என்று உறுதி கொடு” என்கிறார் காந்தி (முன்னா). அதற்கு அவன் “அதற்கு நான் செத்தே போய்விடுவேன்” என்கிறான். “இத்தனை நாள் உன்னைச் சுமந்த உன் தந்தை இனி உன் சவப்பெட்டியையும் சுமக்க வேண்டுமா” என்கிறார். “பணத்தை எப்படி திருப்பி தருவேன்? மிகப்பெரிய தொகை அல்லவா அது?” என்கிறான் அவன். அதற்கு முன்னா ” அது மிகவும் எளிது. சிக்கனமாக இரு. இரண்டு மடங்கு வேலைசெய். பணத்தை மிக விரைவில் திருப்பிக்கொடுத்து விடலாம்” என்கிறார்.

சிக்கனம். கஞ்சத்தனமாக இல்லாமல் சிக்கனமாக இருப்பது மிகப்பெரிய குணங்களில் ஒன்று. கஞ்சமாக இருப்பவர்களையும், ஊதாரியாக இருப்பவர்களையும் நிறைய பார்க்கலாம். சிக்கனமாக இருப்பவரை காண்பது தான் கஷ்டம். சிக்கனமாக இருந்தாலே நிறைய பிரச்சனைகளை சமாளிக்கலாம் இல்லையா? சிக்கனம் என்பது பணத்தில் மட்டும் இல்லை, நாம் செலவழிக்கும் எல்லாவற்றிலும் தான், நேரத்தை சேர்த்து, அன்பை விடுத்து.

இன்று நமது இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று லஞ்சம். ஒரு அரசு ஊழியர் (ஆசிரியர்!) பென்சன் பணம் தரப்படாமல் இழுத்தடிக்கிறார் மற்றொரு அரசு ஊழியர். சம்பந்தப்பட்ட அதிகாரி லஞ்சம் கேட்கிறார். ஆசிரியரோ குடுக்கும் நிலையில் இல்லை. காந்தி ஒரு வழி சொல்கிறார் அது : அந்த ஆசிரியர் அந்த அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று தனது கண்ணாடி, காது கேட்பதற்கான மெசின், சட்டை, பனியன், பேண்ட், ஜட்டி, செறுப்பு என்று அனைத்தையும் அங்கேயே -ஒவ்வொன்றுக்கும் விலை சொல்லி – கழட்டி கொடுப்பது. லஞ்சம் கேட்டவரை வெட்கி தலைகுனிய வைப்பது. லஞ்சம் கேட்டவர் இதற்கெல்லாம் வெட்கப்பட்டால் எப்போதோ லஞ்சம் ஒழிந்திருக்காதா?

நாம் நிர்வாணப் போராட்டம் நடத்தினால் போலீஸ் பிடித்து சென்று விட வாய்ப்பிருக்கிறது, கவனம். நிர்வாணப் போராட்டம் தான் என்றில்லை, வேறு ஏதாவது அஹிம்சை வழியில் போராடுவது. போராடு, ஆனால் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்கிறார். முடியுமா? இன்றைய சூழலில் சாத்தியமா? அதிகாரத்தில் இருக்கும் பெண்களும் கூட கூச்சமின்றி லஞ்சம் கேட்கும் நிலையில், நாம் லஞ்சம் கொடுக்காமல் இருந்தால் நாம தானே பின் தங்கிவிடுவோம்? நமது வேலையல்லவா நின்றுபோகும்? இந்தியன் தாத்தாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கொடுமையை நினைத்துப் பாருங்கள். உண்மையில், அது போன்று யாருக்கும் நடக்கவில்லை என்று சொல்லமுடியுமா? பிணத்தை உறவினரக்ள் எடுத்து செவதற்கு கூட லஞ்சம் கேட்கும் உலகம் இது. அப்படியிருக்க நாம் மட்டும் லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்ன சாதித்து விடப்போகிறோம்?

எல்லோரும் அடிமைப்பட்டுத்தானே கிடக்கிறார்கள், நாம் மட்டும் அடிமை தனத்துக்கு எதிராக குரல் கொடுத்து என்ன சாதித்து விடப்போகிறோம் என்று அன்றைய சுதந்திரப்போராட்ட வீரர்கள் (எல்லா தியாகிகளின் தியாகமும் ஒன்றே. காந்தியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ, நேதாஜியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ சொல்லமுடியாது. இவ்விரு தலைவர்களின் தியாகத்திற்கு கொடிகாத்த குமரினின் தியாகம் எவ்வகையிலும் குறைந்ததில்லை. கொடிகாத்த குமரினின் தியாகத்திற்கு, போராட்டத்தால் நாடு கடத்தப்பட்டு எங்கோ செக்கிழுத்து யாருக்கும் தெரியாமல், யாராலும் அறியப்படாமல் இறந்து போன ஒவ்வொருவரின் தியாகவும் குறைந்ததல்ல!) நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது. அவர்கள் தங்கள் உடமைகளை, உயிர்களை தியாகம் செய்தார்கள். அதைவிட குறைந்த சில தியாகங்கள் செய்ய நாம் முன் வந்தால் சாதிக்கலாம். எதையும் அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. போராட்டம் வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும்.

ஹிந்தி திரைப்பட உலகம் ஒரு பக்கம் பாதாளத்தில் சென்று கொண்டிருந்தாலும், மறுபக்கம் பிரமிக்க வைக்கிறது. சுவதேஸ், ரங் தே பசந்தி போன்ற படங்கள் சில எடுத்துக்காட்டுகள். முன்னாபாயில் எவ்வளவு வாழ்க்கைக்கு தேவையான நல்ல விசயங்கள் இருக்கின்றன. அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் நம்மிடம் இருந்தாலும், இதை தைரியமாக சொல்வதற்கு நிறைய நம்பிக்கை வேண்டும். அதுவும் இன்றைய திரைப்பட சூழலில் இது போன்ற படங்கள் தான் ஆரோக்கியமான நாளைய சினிமா எதிர்காலத்துக்கு ஆக்சிஜன். இப்படத்தின் வெற்றி மேலும் பல நல்ல படங்களின் முயற்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

இந்த படத்தின் தமிழாக்கத்தில் -கண்டிப்பாக தமிழாக்கம் செய்யவேண்டும்- ரஜினியோ, கமலோ ( கமலுக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இல்லை என்று அவர் மறுக்க முடியாது. நடிக்கத்தானே சொல்கிறார்கள். அவர் நடிகர் தானே?) – நடித்தால் மக்களை எளிதாக சென்றடையும் என்று நினைக்கிறேன். காந்தீயக் கொள்கைகள் மறுபடியும் நினைவு கூறப்படும். இதனால் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது, ஆனால் அட்லீஸ்ட் 0.000000001% மக்களையாவது யோசிக்க வைத்தால், அது பெரிய -மிகப் பெரிய -வெற்றி. உதாரணத்திற்கு என்னிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் போல. அதுக்காக நான் காந்தியவாதியாகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. முதலில் நீண்ட காலமாக தொடாமல வைத்திருக்கும் Louis Fisher எழுதிய Biography Of Ghandhiயைப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

மாற்றம் ஏற்படலாம். ஏனென்றால் மாற்றம் என்ற ஒன்றே என்றைக்கும் மாறாத ஒன்று.

வந்தேமாதரம்.

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 3

டிசம்பர் 4, 1984

UCIL இன் மானேஜேர் ஜே.முகுந்த் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஐந்து பேர் டிசம்பர் மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். தொழிற்சாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது, CBI விசாரணையை ஆரம்பித்தது.

அதேசமயத்தில், அமேரிக்காவில், டிசம்பர் மூன்றாம் தேதி பின்னிரவில், டான்பரியில், கனெக்டிக்கட்டில் இருக்கும் Union Carbide Corporation (UCC) தலைமை அலுவலகத்தில், ஒரு டெலக்ஸ் பிரின்டர் சட்டென்று உயிர்பெற்றது. போப்பால் பிரிவில் ஒரு வால்வ் பழுதடைந்து விட்டது என்றும் உயிர்பலி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்ற மிகச்சுருக்கமான தகவலைக்கொண்டிருந்தது அது. பின்னர் செய்தி பெரிய அளவில் கசிய ஆரம்பிக்க அந்த ராட்சத தொழிற்சாலை அதிர்ச்சியில் உரைந்தது.

“போப்பாலில் நடந்து மிகவும் எதிர்பாறாத ஒன்று. இதுக்கு முன்னர் இது போல் எதுவும் நடந்ததில்லை. மேலும் உலகத்திலே பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்களிடம் தான் சிறப்பாக இருக்கிறது” என்பது தான் முதன் முதலில் UCC வெளியிட்ட அறிக்கை. UCC பீதியில் உரைந்திருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை. அமெரிக்காவை இந்தச் செய்தி சென்றடைந்த சில மணி நேரத்திலே, MIC தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் விர்ஜீனியாவில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைகள் நிறுத்தப்பட்டன.

செவ்வாய்கிழமை காலை 4:30 மணியளவில் சில முக்கியமான உயர்மட்ட அதிகாரிகள், இழந்த UCC யின் கவுரவத்தை சீர் படுத்த மிகப் பெரிய அளவிலான பிரச்சாரத்தைத் துவக்கியிருந்தனர். போப்பாலில் பலியானவர்களுக்காக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் ஆறாம் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்கு UCC யின் அனைத்து அலுவலகத்திலும் கொடி அரைக்கம்பத்திலே பறந்தது.

UCC பலரின் நிர்பந்தத்திற்குப் பிறகு “இவ்வளவு பெரிய அளவிலான சேதம் விளையக்கூடும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை” என்று ஒத்துக்கொண்டது. ஆனால் போப்பாலில் என்ன தவறு நடந்தது என்பதைக் கூற மறுத்தது. உயர் மட்ட அதிகாரிகளிலிருந்து, டாக்டர்ஸ், மானேஜர்ஸ், பொறியாளர்கள் என அனைவருமே வாய் திறக்கவில்லை. அதே சமயத்தில், UCC, அமேரிக்காவில் இது போல நடக்க வாய்பில்லை என்று தொடர்ந்து உறுதியளித்துக்கொண்டிருந்தது, விர்ஜினியாவில் மிக அதி நவீன பாதுகாப்பு விசயங்கள் இருக்கிறது பயப்படத்தேவையில்லை என்றது.

உலகநாடுகள் கடுமையாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டன. Breziero, France இல் இருந்த, UCC க்கு சொந்தமான, MIC ஐ வைத்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது. மக்கள் அதை மீண்டும் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரேசில் MIC சேமிப்பைத் தடைசெய்தது. Livingston, Scotland, UCC கொடுத்திருந்த, புதிய தொழிற்சாலை தொடங்கும் திட்டம் ஒன்றை நிராகரித்தது.

அடுத்த மூன்று நாட்களில் UCC பங்குகளின் விலை வால்மார்ட்டில் சடசடவென சரிய ஆரம்பித்தது. இதனால் UCC க்கு ஏற்பட்ட நஷ்டம் ஏறக்குறைய முன்னூறு மில்லியன் டாலர். ஆனாலும் UCC தான் திவாலாகி விட்டதாக ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்திருந்த பேட்டியிலும் எந்தவித பதட்டத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. “எங்களுக்கு இருக்கும் இன்சூரன்ஸ் மற்றும் பிற வருமானங்கள் நன்றாகவே இருக்கின்றன. எங்களது தற்போதைய நிதி நிலவரம் சுபிட்சமாகவே இருக்கிறது” என்றே கூறினார்கள். உலகம் இதை நம்பியது. உடனே பங்கு சந்தையில், UCC யின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

டிசம்பர் 7, 1984

அப்பொழுது வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) தான் UCC யின் சேர்மேனாக இருந்தார். அவர் டிசம்பர் 7, வெள்ளியன்று இந்த சம்பவத்தை விசாரனை செய்ய போப்பால் வந்தடைந்தார். “எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பாகச் செய்வோம்” என்று அவர் அமெரிக்கா புறப்படும் முன்னர் உறுதியளித்தார்.

அவருக்கு டெல்லியில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது, போப்பாலுக்கு அவர் பாதுகாப்பாக அழைத்துச்ச்செல்லப்பட்டார். அவர் போப்பாலை வந்தடைந்ததும் போலீஸ் அவரை கைது செய்தது. UCC யின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால், நடந்து முடிந்த துயர சம்பவத்துக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கருதப்பட்டது.

UCIL இன் கெஸ்ட் கவுஸ்சில், அவர் ஆறு மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்து, இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அவர் டெல்லிக்கு மீண்டும் ரகசியமாக அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து யூனியன் கார்பைடுக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் அவரை பத்திரமாக அவரது சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றது. அதற்கப்புறம் அவர் நீதிமன்றத்திற்கு வரவேயில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று நமது நீதிமன்றம் அறிவித்தது.

டிசம்பர் 10, 1984

அமெரிக்காவுக்கு திரும்பியவுடன் வாரன் ஆன்டர்சன், டிசம்பர் பத்தாம் தேதி ஒரு பத்திரிக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். “இந்தியாவில் உயிரிழந்தவர்களுக்கு சரியான தொகை இழப்பீடாக வழங்கப்படும். இதனால் கம்பெனியின் நிதி நிலவரம் எந்த விதத்திலும் மோசம் அடையாது” என்றார். அவர் இரண்டு விசயங்களை திரும்பத் திரும்ப சொன்னார். ஒன்று: இந்த துயர சம்பவத்தால் கம்பெனி எந்த விதத்திலும் பாதிப்படையாது. இரண்டு: இந்தியாவில் நடந்த – சந்தேகமில்லாமல் உலகத்திலே நடந்த மிக மோசமான – விபத்துக்கு கம்பெனி எந்த வகையிலும் பொறுப்பல்ல.

1945 ஆம் ஆண்டு ஒரு சாதரண சேல்ஸ் மேனாக வேலையில் சேர்ந்த வாரன் ஆன்டர்சன் 1982 இல் அந்த கம்பெனியின் CEO வாக வள்ர்ச்சியடைந்திருந்தார். ஒரு
சேர்மேனாக அவர், கம்பெனியின் செல்வாக்கை உறுதியாக மற்றும் வெற்றிகரமாகவே நிலைநாட்டினார்.

மற்ற தொழிற்சாலைகள் போலவே UCC யும் உற்பத்தியை மனதில் கொண்டே இயங்கிவந்தது. அவர்களது தயாரிப்பை, அவர்கள் தங்களது கணக்கு புத்தகத்தின் எண்ணற்ற படங்களாக, கிராப்பாகத்தான் கண்டார்கள். இந்த தொழிலில் உயிர் பலி இருக்கும் பட்சத்தில், லாபக்கணக்கிலிருந்து சில எண்களை மட்டுமே கழிப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை.

டிசம்பர் 12, 1984

மறுபுறம், போப்பால் அரசுக்கு பிரச்சனைகள் மேலும் மேலும் குவிந்தவாறு இருந்தது. மக்களின் பட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது. யாரைத்தான் நம்புவது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நம்பிக்கையற்ற குழப்பான ஒரு இருண்ட வாழ்க்கையை அவர்கள் மௌனமாக கழித்துக்கொண்டிருந்தனர்.UCC யின் இன்னொரு டாங்க்கிலிருந்த -E611- பதினைந்து டன் MIC எப்படி அழிப்பது -அல்லது நீர்த்தப்படுத்துவது- என்பதே மாநில அரசின் தற்போதைய தலையாய வேலையாக இருந்தது. டிசம்பர் 12 அன்று, ஆபரேசன் பெயித் (operation faith) என்ற திட்டம் முதலமைச்சர் அர்ஜுன் சிங்கால் அறிவிக்கப்பட்டது. இது உண்மையைச் சொல்லப்போனால், டாங்கிலிருந்த MIC ஐ அழிப்பதற்காவே -or rather neutralize- ஏற்படுத்தப்பட்டது. டிசம்பர் 16 அன்று செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆபரேசன் பெயித் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையூட்டுவதற்கு முயற்சித்தது. பள்ளி கல்லூரிகள் டிசம்பர் 23 வரை திறக்கப்படவில்லை. இந்த MIC ஐ நீர்த்தப்படுத்து செயலைப் பற்றி மிகப்பெரிய அளவில் ரேடியோ மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. மக்களின் நம்பிக்கையைத் திரும்பப்பெற தொழிற்சாலைக்கு அருகிலிருந்த மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு முகாம்கள் அமைக்கும் பணி கவனமாக செய்யப்பட்டது.

ஏற்கனவே மனதளவில் பாதி இறந்திருந்த போப்பால் மக்கள் யாரிடமும் நம்பிக்கை வைக்க தயாராக இல்லை. துன்பத்தை நேரில் கண்டு அனுபவித்த மக்கள் ரேடியோ சொல்வதையா கெட்க்கப்போகிறார்கள். அவர்கள் எங்கெங்கோ ஓடினார்கள். பஸ் கூரையிலும், ரயில் கூரையிலும், ஏன் ரயில் பெட்டிகளை இணைக்கும் சங்கிலிகளில் கூட அவர்கள் பயணம் செய்தனர். ஆஸ்பத்திரிகளிலிருந்து நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படாமலேயே மாயமாய் மறைந்தனர். மக்கள், தங்கள் வாழ்க்கை முழுதும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை, வங்கிகளிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறினர். பெட்ரோல் பம்புகளின் நீண்ட வரிசைகளில் அவர்கள் தவமாய் காத்துக் கிடந்தனர். நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உலகத்தின் பல திசைகளிலிருந்து வந்திருந்த மக்கள் ஒரேயடியாக போப்பாலைக் காலி செய்தனர். சிலர் தங்களது சொந்தங்களை ஏதும் எழுதப்படாத சமாதிகளில் விட்டுச்சென்றனர்.

UCC க்கு அருகில் வாழ்ந்தவர்களுக்காக பதினோறு முகாம்கள் அமைக்கப்பட்டன. ஆனால் ஏழையிலும் ஏழைகளே -நகரத்தை விட்டு வெளியேற இயலாதவர்களே- இந்த முகாம்களில் தங்கினர். ஆபரேசன் பெய்த்தைப் பற்றிய விளம்பர போர்டுகள், காலியான வீதிகளில், பேய்களைப்போல காவல் காத்துக்கொண்டு, கொடிய தனிமையில் சோகத்தோடு நின்றுகொண்டிருந்தன.

ஆபரேசன் பெயித் பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட யாருமற்ற தனிமையிலே தான் நடந்தது. அரசு அலுவலகங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகள் பணியாளர்களை நகரத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க அவர்கள்து விடுமுறைகளை ரத்து செய்தன. ஆனால் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தப்பியோடும் மக்கள் அதிகாரிகளின் சம்மதத்திற்காக காத்துக்கிடக்கவில்லை. அன்று மட்டும் எழுபதினாயிரம் மக்கள் நகரத்தைக் காலி செய்தனர் என்று அரசு அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது.

(தொடரும்)

 

நன்றி: Suroopa Mukherjee

Translated from Suroopa Mukherjee’s BHOPAL GAS TRAGEDY : The Worst Industrial Disaster in Human History.

நூறு

என்னோட நூறாவது பதிவுங்க இது. அதுக்கென்ன இப்ப? அப்படீன்னு கேட்டாக்க நான் என்ன சொல்றது? அது வந்து, நான் வலைப்பூ (blog க்கு அது தானே தமிழ்ல பேரு?) ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.ஆரம்பிச்சது என்னவோ பிப்ரவரி 2005. ஆனா சீரியஸா பதிவு செய்ய ஆரம்பிச்சது மே 2006 ல இருந்துதான். முதல்ல படித்த கவிதைகள், செய்திகள் அப்புறம் நகைச்சுவைத் துணுக்குகள்ன்னு தான் கட்-காபி பேஸ்ட் செஞ்சுகிட்டிருந்தேன். திடீர்னு ஒரு நாள் விதிகள் அப்படீங்கற பதிவு போட்டேன். அது நான் சொந்தமா எழுதினது. மீரா ஜாஸ்மீன் பற்றிய பதிவு அது. அப்பவெல்லாம் என்னோட ரூம் மேட்கிட்ட தான் முதல்ல வாசிச்சு காமிப்பேன். அவனும் அரைத் தூக்கத்தில கேட்டுட்டு ஓகேடா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு அடுத்த நிமிசமே குரட்டை விட ஆரம்பிச்சுடுவான். அதுக்கப்புறம் சில நாளில் அவன் வேறு வீட்டுக்கு சென்று விட்டான். அவன் வீட்டைக்காலி செய்ததற்கு நான் எழுதிய பதிவுகளை, கதைகளை வாசித்துக்காட்டி அவனை கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்ற வதந்தி நிலவி வருகிறது. நம்பிவிடாதீர்கள். விதிகளை எதேச்சையாக திண்ணைக்கு அனுப்ப அவர்கள் பிரசுரம் செய்து விட்டார்கள். அது ஒரு தூண்டுகோல்.

நான் சென்னையிலிருக்கும் போதே ரெண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு குறு நாவல் போன்ற ஒன்றையும் எழுதியிருந்தேன். மேலும் பள்ளியில் படிக்கும் போது சில நாடகங்கள் எழுதி இயக்கியிருக்கிறேன். அதையெல்லாம் பிளாக்கில் போட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உங்களை விட்டால் வேறு யார் அதையெல்லாம் படிக்கப்போகிறார்கள்!?. தமிழில் டைப் செய்வது தான் சற்று சிரமான காரியமாக இருந்தது. நான் எழுதிய எல்லா கதைகளையும் ஒரு வழியாக அரங்கேற்றம் செய்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தமிழ்மணம் பற்றிய தகவல் கிடைத்தது. அப்புறம் தேன்கூடு.

என்னுடைய தோழி ஒருவர் தான் அப்போ என் பிளாக்குக்கு டெடிகேட்டட் ரீடர். இப்பவும் தான். ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவ ப்ளாக்கு போய்விடுவார். நான் என்ன குப்பை பதிவு செஞ்சாலும் நல்லா இருக்குடான்னு சொல்ற ஒரே ஜீவன். Thanks காள்யா. இந்த நூறாவது பதிவை உனக்கு டெடிகெட் செய்யறேன்.

கொஞ்சம் சோர்வா, கண்டிப்பா பதிவு செஞ்சுதான் ஆகனுமான்னு இருக்கறப்போ தான் thepreciouss.blogspot- கிருத்திகாவின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு தெரிந்தவரையில் அவ்வளவு அருமையான ஆங்கிலத்தில், அவ்வளவு அழகான இந்திய ஆங்கில பதிவை நான் பார்த்ததில்லை. என்னோட inspiration அவர் தான். அவரிடமிருந்து தான் blog சம்பந்தமாக நிறைய கற்றுக்கொண்டேன். ஏனோ இப்பொழுது அவர் பதிவதில்லை. Harry Potter படிக்கும் ஆர்வம் எனக்கு அவரிடம் இருந்து தான் வந்தது. இப்பொழுது ஐந்தாவது புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். மிக விரைவில் Harry Potter பற்றிய ஒரு பதிவிட வேண்டும்.

அப்புறம் தேன்கூட்டின் சிறுகதைப் போட்டிகள். கதை எழுதுவதையே மறந்திருந்த பொழுது தான் தேகூட்டின் சிறுகதைப் போட்டி பற்றிய அறிமுகம் கிடைத்தது. உடனே என்னுடைய அசட்டு மனிதர்கள் கதையை அனுப்பினேன். பின்னூட்டங்கள் சில வந்தது. அதற்கப்புறம் தேன்கூட்டின் போட்டிக்காகவே கதைகள் எழுத ஆரம்பித்தேன். ஒரு விதமான encouragement அது. பரிசு கிடைக்குதா இல்லையா என்பது பெரிதல்ல. நான் இதுவரை முதல் பத்தில் கூட வந்ததில்லை என்பது வேறு விசயம். ஆனால் என்னாலும் கதை எழுத முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது தேன்கூடு. அப்படி நான் தேன்கூட்டுக்கு அனுப்பிய கதைகளில் எனக்கு பிடித்தமான கதை காடனேரி விளக்கு. ஏனோ நிறைய பேர் புரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். 😦

அப்புறம் யார் எழுதியது என்று மறந்துவிட்டது: train ல தொங்கிக்கிட்டே போற ஒருவருடைய கதை -தேன்கூடு பரிசு போட்டியில் வெளியானது- எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்தக்கதை பரிசு வாங்கியது என்று நினைக்கிறேன். நான் ரசித்த பதிவுகளும் கதைகளும் நிறையவே இருக்கின்றன. அதைப்பற்றியே ஒரு பதிவிட வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போ தேன்கூடு போட்டியை நிறுத்திவிட்டது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கதை எழுதுவதற்கு டாபிக் யார் கொடுப்பா?. தேன்கூடு போட்டிக்கு அனுப்பிய ஒரு கதையை – தொலைவு – ரெவ்யூ செய்து போஸ்டன் பாலா 3.5 outof 4 போட்டிருந்தார். அது கதை எழுதுவதற்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது. நிறைய நம்பிக்கை அளித்தது. Thanks Bala.

ஆயிரம் கால் இலக்கியம் என்ற தொடர் கிருத்திகாவுடன் debate செய்ததால் வந்த விளைவே. நான் எழுதிய current incidents பற்றிய பதிவுகளில் எனக்கு பிடித்தது: சிற்பிகளும் சிலைகளும் அப்புறம் கேட்பதற்கு உரிமையில்லை. சிற்பிகளும் சிலைகளும் என்ற பதிவு நான் எழுதிய உடன் எங்கள் வீட்டிலிருந்து தான் எனக்கு முதல் எதிர்ப்பு வந்தது. அரசியல் எழுதாதே என்று. எங்க அண்ணன் advice மேல advice. அதற்கு இணையாக என்னை திட்டி வந்த ஒரு பின்னூட்டம். அதை பிரசுரிக்க முடியவில்லை :). ஆனால் எனக்கு சந்தோசமே, பின்னூட்டமே இல்லாமல் இருந்த போது அட்லீஸ்ட் திட்டாவது கிடைக்கிறதே. ரொம்ப மோசமான வார்த்தைகளால் திட்டு கிடைத்தது ஆழ்வார் படம் பற்றிய விமர்சனப் பதிவின் போது தான். டாக்டர் ராமதாஸ் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வாரம் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் தான் சினிமா பார்க்க அனுமதிப்போம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். சும்மா ஜோக்குகாகத்தான் சொன்னார் என்று நினைத்திருந்தேன். ஆழ்வார் படத்தின் விமர்சனத்துக்கே கெட்டவார்த்தைகளால் திட்டும் மக்கள் இருக்கும் இந்நாட்டில் அவ்வாறான சட்டம் கொண்டுவந்தால் தேவலையோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

கவிதைகள் எனக்கு பிடிப்பதில்லை. காதல் கவிதைகளைத்தவிர. :)) அது மட்டும் தாங்க புரியுது. அப்படியிருந்தும் ஒரு சில நேரங்களில் சில விபரீத முயற்சிகள் செய்துபார்ப்பேன். அவ்வாறான ஒன்று – ஒன்றே ஒன்று – தான் ரோடெங்கும் நயாகராக்கள் பதிவு. கவிதைகள் எழுதி உங்களைப் படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன். 🙂

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புதுமைப்பித்தன் தான் இன்றைய தமிழ்இலக்கிய bloggerகளின் கருப்பொருள் மற்றும் உருப்பொருள். இவ்வர்கள் இல்லையென்றால் நிறைய பேருக்கு என்ன எழுதுவது என்றே தெரியாது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அ.இரா. வெங்கடாசலபதி தொகுத்தருளிய புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு எனக்கு நிறைய help செய்திருக்கிறது. புதுமைப்பித்தனின் கட்டுரையிலிருந்து சுட்ட கருத்து தான் நான் எழுதிய அமுதத்தை இட்டாள் என்ற சிறுகதை. என் பிறந்தநாள் அன்று பணிரென்டு மணிக்கு எழுதி முடித்தேன். கேக் வெட்டி கொண்டாடி விட்டு போஸ்ட் செய்தேன். நான் சென்னையிலிருக்கும் போது பாதி எழுதி முடிக்காமல் விட்ட கதை காந்தம். ஆனால் இப்பொழுது அது காணாமல் போய்விட்டது. மறுபடியும் முதலிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு தொடர்கதையாகப் பதிவு செய்திருக்கிறேன். யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்ற போப்பால் டிராஜடி பற்றிய தொடரை எப்படியாவது இன்னும் சில வாரங்களில் முடித்துவிட முயற்சிக்கிறேன்.

ஜெயமோகனால் தான் மதி கந்தசாமியின் அறிமுகம் கிடைத்தது. ஒரு பின்னூட்டத்தில் மதியைப்பற்றி நிர்மல் குறிப்பிட்டிருந்தார். என்னைத் தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் encourage செய்துகொண்டிருப்பவர்கள். Thanks Nirmal and Mathy.

போஸ்டன் பாலா போன வருடத்தின் சிறந்த பதிவுகளில் ஒன்றாக குரல்வலையைத் தேர்வு செய்திருந்தார். எவ்வளவு பெரிய encouragement தெரியுமா அது? மதியும் கூட குரல்வலையைப் பற்றி சொல்லியிருந்தார். Thanks again Bala and Mathy.

அவ்வப்போது என் இடுகைகளை கில்லிக்கு கொடுக்கும் பிரகாஷ்க்கும் நன்றிகள். மேலும் என்னை பின்னூட்டங்களின் மூலம் encourage செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் encouragement வரும் பதிவுகளிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன். 🙂 மேலும் நான் நவம்பர் டிசம்பரில் அதிகம் பதிவு செய்யாமல் இருந்தபோது, என்னை வற்புறுத்தி பதிவு செய்ய வைத்த சிவாவுக்கும் நன்றிகள். (மொதல்ல அவனக்கண்டுபிடிச்சு உதைக்கனும்டா..ன்னு நீங்க யோசிக்கிறீங்கதான?)

மேலும் ஒரு பதிவு கூட விடாமல் அத்தனையையும் படித்து விட்டு கருத்து சொல்லும் எனது கலீக்ஸ் சரவணன், சுதா மற்றும் ராம்கிக்கும் நன்றிகள். எனது பழைய ரூம் மேட் அஸ்வினுக்கு -பாவம்ங்க அவன். எத்தனநாள் கண்ணுமுழித்து என் கதைகளைக் கேட்டிருப்பான்னு நினைக்கிறீங்க- ஸ்பெசல் நன்றிகள்

எண்ணற்ற எழுத்தாளர்கள் உருவாவதற்கு களம் அமைத்துக்கொடுத்திருக்கும் Blogger மற்றும் அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய பேருதவியாக இருக்கும் Aggregators: thamizmanam மற்றும் தேன்கூடுக்கு எனது நன்றிகள்.

நான் டைப் செய்ய உதவும் முரசு எடிட்டருக்கும் அதை யுனிகோடாக மாற்ற உதவும் சுரதாவுக்கும் நன்றிகள். எல்லாமே free of cost. Thanks to the technology.

Once Again, Thanks All.

 

BABEL

Sean Penn நடித்த 21 Grams என்ற அருமையான படத்தை இயக்கிய மெக்சிக்கோவில் பிறந்த Alejandro González Iñárritu என்பவர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். BABEL இந்த வருடத்தைய ஆஸ்காருக்கு ஏழு நாமினேஷன்களைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் – ஆனால் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமான – நடக்கும் சம்பவங்கள் காட்டப்படுகின்றன. அதில் வரும் கதாப்பாத்திரங்கள் தீவிரமாக அலசப்படுகின்றன. சம்பவங்கள் Butterfly Effect என்று சொல்ல முடியாவிட்டாலும், கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்று தான்.

முதலில் மொரோக்கோவின் ஒரு மூலையில், ஆடுகள் மேய்த்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. ஹசன் என்பவர், அப்துல்லா என்ற அந்த குடும்பத்தின் தலைவருக்கு துப்பாக்கி ஒன்றை விற்கிறார். அப்துல்லா தனது இரண்டு மகன்களிடம் அந்த துப்பாக்கியைக் கொடுக்கிறார். ஓநாய்களிடமிருந்து ஆட்டு மந்தையைக் காப்பாற்ற இந்த துப்பாக்கியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறுகிறார். ஹசன் அந்த துப்பாக்கி மூன்று கி.மீ வரை சுடும் தன்மை கொண்டது என்கிறார்.

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டாக சுடுகிறார்கள். அவர்களுக்கு இந்த துப்பாக்கி உண்மையிலே மூன்று கி.மீ சுடுமா என்ற சந்தேகம் எழுகிறது. அவர்கள் நின்று கொண்டிருக்கும் மலைமேலிருந்து கீழே ரோட்டில் வந்து கொண்டிருக்கும் வாகனங்களைக் குறிபார்க்கிறார்கள். முதலில் ஒரு வேன் வருகிறது. மூத்தவன் சுடுகிறான். ஒன்றும் நடக்கவில்லை. இளையவன், “உனக்கு சுடத்தெரியவில்லை என்னிடம் தா” என்று வாங்கி அங்கே வந்து கொண்டிருந்த ஒரு டூரிஸ்ட் பஸ்ஸைச் சுடுகிறான். முதலில் ஏதும் நடக்காதது போல சென்று கொண்டிருந்த பஸ் சட்டென்று நிற்கிறது.


அமெரிக்காவிலிருக்கும் ஒரு தம்பதியினர் -Richard, Susan -மொரோக்கோவுக்கு சிதைந்து கொண்டிருக்கும் தங்களது திருமண வாழ்க்கையை சீர் படுத்த டூர் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு மகன். ஒரு மகள். மகனையும் மகளையும் அமேரிக்காவிலிருக்கும் தங்களது வீட்டிலே நானியிடன் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் சிறய வாக்குவாதம் நிகழ்கிறது. ஒருவரை மற்றொருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். டூரிஸ்ட் பஸ் கிளம்புகிறது. ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த சூசன் குண்டடி படுகிறார். இரத்தம் வழிந்தோடுகிறது. அப்துல்லாவின் இளைய மகன் சுட்ட குண்டு சூசனைத் தாக்கியிருக்கிறது.

பக்கத்தில் ஏதும் ஆஸ்பத்திரி இல்லாமல் அருகிலிருக்கும் ஒரு கிராமத்துக்கு அவளை அழைத்துச் செல்கின்றனர்.பஸ்ஸில் உடன் பயனித்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் -அன்வர் – ரிச்சர்டுக்கு உதவியாக இருக்கிறார். போதுமான மருத்துவ வசதி இல்லாததால் குண்டடி பட்ட சூசனுக்கு மயக்க மருந்து இல்லாமலே தையல் போடப்படுகிறது. டூரிஸ்ட் பஸ்ஸில் உடன் பயனித்த அமேரிக்கர்கள் சூடு தாங்காமல் தாங்கள் திரும்ப வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். ரிச்சர்ட் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காமல் டூரிஸ்ட் பஸ் இவர்களை அந்த வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்திலே விட்டுச் செல்கின்றனர். ரிச்சர்ட் தனது எம்பசிக்குப் போன் செய்து போக்குவரத்து வசதி செய்து தரும் படி கேட்கிறான்.
இந்த சம்பவம் பரபரப்பு அடைகிறது. சுடப்பட்டவர் அமெரிக்கர் என்பதால் அமெரிக்கா தீவிரவாத வெறிச்செயல் என்று முத்திரை குத்துகிறது. இது தீவிரவாதம் இல்லை என்பதை நிரூபிக்க மொரோக்கோ அரசு தீவிர நடவடிக்கையில் இறங்குகிறது. மலையில் கண்டெடுத்த தோட்டாக்களை வைத்து என்ன துப்பாக்கி ரகம் என்பதைக் கண்டுபிடித்த போலீஸ் ஹசனை வலைத்துப் பிடிக்கிறது. ஹசன் தான் ஏற்கனவே அப்துல்லாவுக்கு விற்று விற்றதாகக் கூறுகிறான்.

போலீஸ் அப்துல்லாவைத் தேடிக்கொண்டு வரும்போது எதேச்சையாக அப்துல்லாவின் மகன்களை வழியில் பார்த்து அப்துல்லாவின் வீட்டுக்கு வழி கேட்கிறது. நிலமையை உணர்ந்து கொண்ட இரு சிறுவர்களும் – பெரியவன் முழித்து கொண்டிருக்க – சமயோஜிதமாக சிந்தித்து வழி மாற்றிக் கூறுகின்றனர். இந்த சீனில் சின்னப்பையன் செம கூல்.
ஜப்பானில் வாய் பேசவும் முடியாத, கேட்கவும் இயலாத ஒரு பெண்ணின் கதை வருகிறது. அவளது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இந்த மன உளைச்சலுடன், அவளுக்கு தன்னை மற்ற பையன்கள் கண்டுகொள்வதில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. அது obssession ஆக மாறுகிறது. விளைவு, அவள் public seduction இல் இறங்குகிறாள். உள்ளாடை ஏதுமின்றி மிகச்சிறய ஸ்கர்ட் மட்டும் போட்டுக்கொள்வது, டென்டிஸ்டிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பது என்று தொடங்கி கடைசியில் தனது அப்பாவை துப்பாக்கி சம்பந்தமாக விசாரிக்க வந்த டிடெக்டிவ் ஒருவரிடமே தன்னைக்கொடுக்கிறாள். டிடெக்டிவ் முதலில் மறுத்தாலும் பிறகு அவளின் அழுகையையும், நிலையும் நினைத்து சம்மதிக்கிறார். புறப்படும் பொழுது அவள் அவரிடம் ஒரு லெட்டர் கொடுக்கிறாள். அதை பிறகு வெளியே சென்றபிறகு படிக்குமாறு கூறுகிறாள்.

டிடெக்டிவிடம் அவள் தனது தாய் பால்கனியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள் என்கிறாள். அதைத் தான் பார்த்ததாகவும் சொல்கிறாள். அவளின் அப்பா ஒரு வேட்டைப்பிரியர். அவர் மொரோக்கோ சென்றிருந்த பொழுது ஹசனுக்கு – அவருக்கு guide ஆக இருந்திருக்கிறார்- பரிசாக துப்பாக்கியை வழங்கியிருக்கிறார்.

டிடெக்டிவ் கீழே வரும்பொழுது ஊமைப்பெண்ணின் அப்பாவும் வந்து விடுகிறார். அவரிடம் ஹசனுக்கு அவர் தான் துப்பாக்கியைக்கொடுத்தாரா என்று கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டு, அவரது மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு தனது வருத்தத்தை தெரிவிக்கிறார். ஆனால் அந்த ஊமைப்பெண்ணின் அப்பா அதிர்ச்சியடைந்து தன்னுடைய மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை , அவள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்கிறார்.

குழம்பிய டிடெக்டிவ் இரவு உணவின் போது அந்த ஊமைப்பெண் கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று இறுதி வரைக்கூறப்படவில்லை.

ரிச்சர்ட் மற்றும் சூசனின் மகன் மற்றும் மகளைப் பற்றிய கதை வருகிறது. மகனையும் மகளையும் கவனித்துக்கொள்ளும் நானி மெக்சிக்கோவைச் சேர்ந்தவர். அவரது மகனுக்கு அன்று திருமணம். கண்டிப்பாகச் சென்றே தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கும் நானி குழந்தைகளை என்ன செய்வதென்று யாரிடத்தில் விட்டுச் செல்வது என்று தெரியாமல் தன்னுடனே அழைத்துச்செல்கிறார். அவரது உறவினர் ஒருவரின் -கேயில்- காரில் இவர்கள் மெக்சிகோ செல்கின்றனர்.

அமெரிக்க சிறுவன் மெக்சிக்கோவை வினோதமாகப் பார்க்கிறான். கேயில் அநாசாயமாக கோழியின் கழுத்தைத் திருகிக் கொல்வது நம்மையே வெலவெலக்கச் செய்யும் போது இதையெல்லாம் பார்த்திறாத அமேரிக்கச் சிறுவன் என்ன செய்வான். பேந்த பேந்த முழிக்கிறான்.

திருமணம் முடிந்து குடி போதையிலிருக்கு கேயில் கார் ஓட்ட நானியிம் சிறுவனும் சிறுமியும் மீண்டும் அமேரிக்காவை நோக்கி பயனிக்கின்றனர். செக்போஸ்டில் அமேரிக்க போலிஸ் இவர்களைப் பிடித்து நிறுத்துகிறது. கேயலை போதை டெஸ்டிற்கு அழைக்கிறது. நிலைமையை உணர்ந்த கேயல் வேகமாக காரை ஸ்டார்ட் செய்து தப்பிக்கிறான். நீண்ட தூரம் சென்றபின்னர் ஒரு காட்டு வழிப்பாதையில் நானியையும் சிறுவனையும் சிறுமியையும் இறக்கிவிட்டுவிட்டு அவன் சென்றுவிடுகிறான். இரவில் என்ன செய்வது என்று தெரியாமல் சிறுவனும் சிறுமியும் அழுகிறார்கள். நானி செய்வதறியாமல் திகைக்கிறார். அழுகிறார். தவறு செய்துவிட்டதை உணர்கிறார்.

அமேரிக்க போலீஸ் பெற்றோர்களின் சம்மதம் இன்றி பிள்ளைகளை வேறு நாட்டிற்கு அழைத்து சென்றதை கண்டித்து நானியை மெக்சிக்கோவிற்கே திருப்பி அனுப்புகிறது. நானி கதறுகிறார். தனக்கு மெக்சிகோவில் ஒன்றும் இல்லையென்றும் அமேரிக்காவிலே பதினைந்து வருடம் வாழ்ந்து விட்டேன் தயது செய்து என்னை வெளியே அனுப்பாதீர்கள் என்று கெஞ்சுகிறார். பலனில்லை.

சூசனை ஹெலிகாப்பட்டர் வைத்து அமெரிக்க எம்பசி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுவருகிறது. உதவியாக இருந்த அன்வருக்கு ரிச்சர்ட் பணம் கொடுக்கிறார், அன்வர் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். கஷ்டகாலத்தில் மிகவும் அன்புடன் இருந்த சூசனும் ரிச்சர்டும் தங்ளது பிணைப்புகளை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.

அந்த கிராமத்தில், தைத்த பிறகு வழி தெரியாமல் இருக்க சூசனுக்கு அந்த வீட்டிலிருக்கும் கிழவி புகைக்க கஞ்சா கொடுக்கிறாள். அவள் புகைத்து மயக்கமாவதைப் பார்த்து ரிச்சர்ட் அழுவது மிகவும் நெகிழ்ச்சியான சீன். எழுந்திருக்க முடியாமலிருக்கும் சூசன் சிறுநீர் கழிக்க ரிச்சர்ட் உதவுவதும் நெகிழ்ச்சி. Brad Pitt நடிப்பில் மின்னுகிறார். புதிய தோற்றமும் கச்சிதமாகப் பொருந்துகிறது. நானியாக நடித்தவரின் நடிப்பும் மிக இயல்பு. நடு காட்டில் சதுப்பு நிலத்தில் தனித்து விடப்பட்ட பொழுதும், குழந்தைகளை எப்படியாவது எந்த பிரச்சனையுமில்லாமல் அமெரிக்க சென்று சேர்த்துவிட வேண்டும் என்று துடிப்பதிலும் மிளிர்கிறார்.

அந்த ஜப்பானியப் பெண் சற்று மனநிலை சறியில்லாதவள் என்பது எங்களது எண்ணம். மேலும் அவள அந்த டிடெக்டிவிற்கு கொடுத்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தாள் என்பது கடைசி வரை அவிழ்க்கப்படாத முடிச்சு. என்ன எழுதியிருப்பாள்?

ரீரெக்கார்டிங் – Gustavo Santaolalla-அருமையிலும் அருமை. அமைதியான அருவி. கடைசியில் பெயர்கள் போடப்படும் பொழுது வரும் மியூசிக் மிகவும் நன்றாக இருந்தது. நான் மற்றும் இன்னும் வெகு சிலர் மட்டுமே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். Cleaners வந்த பின்னும் நான் உட்கார்ந்திருந்தேன்

அகெடெமி அவார்டுக்கான ஏழு நாமினேசன்கள்:

Nominated: Best Motion Picture of the Year (Alejandro González Iñárritu, Jon Kilik and Steve Golin)

Nominated: Best Achievement in Directing (Alejandro González Iñárritu)

Nominated: Best Performance by an Actress in a Supporting Role (Adriana Barraza)

Nominated: Best Performance by an Actress in a Supporting Role (Rinko Kikuchi)

Nominated: Best Writing, Screenplay Written Directly for the Screen (Guillermo Arriaga)

Nominated: Best Achievement in Editing (Douglas Crise, Stephen Mirrione)

Nominated: Best Achievement in Music Written for Motion Pictures, Original Score (Gustavo Santaolalla)

Inside Man

ருத்ரா திரைப்படம் பார்த்திருந்தவர்களுக்கு, இந்தப் படம் அவ்வளவு ஷாக் கொடுக்காது. ருத்ரா திரைப்படத்தில் பேங்கைக் கொள்ளையடிக்க பபூன் வேஷம் போட்டு உள்ளே நுழைவார். அங்கிருக்கும் மக்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு அது வேணும் இது வேணும் என்று கேட்ப்பார். பிறகு தான் ஒரு பிணைக்கைதியைப் போலவே பயந்து பயந்து வெளியே வருவார். நம்மூர் போலீசும் அவரை கண்டுகொள்ளாது. பாக்கியராஜ் தப்பித்துவிடுவார்.

கிட்டத்தட்ட அந்த விஷயம் தான். நம்மூர்க்காரர்கள் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதை இரண்டரை மணி நேரப் படத்தில் பத்து நிமிடக் காட்சியாக எடுத்தனர். ஆனால் ஹாலிவுட் மக்கள் இதையே முழு படமாக எடுத்திருக்கின்றனர். கொஞ்சம் சுவராஸ்யமாக.

Dalton Russel (Clive Owen) மற்றும் அவரது டீம் மொத்தம் நான்கு பேர். பெயின்ட் அடிக்கும் வேலை செய்பவர்களாக ஒரு பேங்க்கிற்குள் நுழைகின்றனர். infra red கதிர் வீச்சைக் கொண்டு செக்யூரிட்டி கேமிராக்களை shutdown செய்கின்றனர். அங்கிருக்கும் மக்களை பினைக்கைதிகளாகப் பிடிக்கின்றனர். எல்லோரையும் தங்களது டிரஸைக் கலையச் செய்து இவர்கள் கொண்டுவந்திருக்கும் uniform ஐ போடச்சொல்கின்றனர். இப்பொழுது பேங்கிற்குள் இருக்கும் எல்லோருக்கும் – கொள்ளையடிக்க வந்தவர்களையும் சேர்த்து – ஒரே டிரஸ், ஒரே முகமூடி. யார் பிணைக்கைதிகள் யார் கொள்ளையர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எல்லோரையும் முகமூடி அணிந்திருக்கச் செய்கின்றனர். முகமூடியை கழட்டினால் அடி உதை தான். இதற்கு பயந்து கொண்டே எல்லோரும் முகமூடியைக் கழட்டுவதில்லை.

keith frazier (Denzel Washington) துப்பறிவாளர். அவருடைய அசிஸ்டெண்ட் chiwetel. இருவரும் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர். ருசலுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அவன் ஒரு ஜெட் மற்றும் ஒரு பஸ்ஸ¤ம் கேட்கிறான்.

Russel ஒரு சாதாரணத் திருடன் இல்லை. அவனது இலக்கு பணம் மட்டும் இல்லை. இந்த குறிப்பிட்ட வங்கியைக் கொள்ளையடிக்க அவன் திட்டமிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த வங்கியின் சேர்மன் மற்றும் நிறுவனருமான Arthur Case இன் உண்மை சொருபத்தைக் காட்டுவதே Russel இன் முதன்மை இலக்கு.

Arthur Case இரண்டாம் உலகப்போரில் நாசிக்களிடம் யூதர்களைக் காட்டிக்கொடுத்து அதில் வந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறார். மேலும் அவரிடம் ஒரு மோதிரம் இருக்கிறது. அதுவும் அவருடன் வேலை செய்த ஒரு யுதனின் திருமண மோதிரம். He is a war criminal.

இந்த உண்மையை மறைக்க Arthur Case அவரது பேங்க்கிலே லாக்கர் என் 392 இல் நிறைய வைரங்களையும் அந்த மோதிரத்தையும் சில documents களையும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார். அவரது பேங்க் ரெக்கார்ட்ஸில் இந்த லாக்கருக்கான எந்த குறிப்பும் இல்லை.

எனவே Russel இன் கண்களுக்கு தெரியாமல் – ஆனால் Russel க்கு அந்த வைரங்களைப் பற்றியும், மோதிரம் பற்றியும், Nazi Documents பற்றியும் தெரியும் என்பது Arthur Case க்கு தெரியாது – அந்த பொருளைப் பாதுகாப்பாக வெளியே எடுத்து வர whites (Jodie Foster)ஐ அணுகுகிறார். அவர் போடும் கண்டிஷன் : ஒன்று அந்த லாக்கர் மறைக்கப்படவேண்டும் இல்லையேல் அழிக்கப்படவேண்டும் எக்காரணத்தை முன்னிட்டும் வெளிஉலகத்துக்குத் தெரியக்கூடாது.

whites உள்ளே சென்று Russelஇடம் பேசும் போது அவன் ஏற்கனவே எடுத்து வைத்திருப்பது தெரிகிறது. மேலும் அவன் பத்திரமாக வெளியே கொண்டு வருகிறேன் எனக்கு பணம் கொடுத்து விடுங்கள் என்கிறான். ஆனால் உண்மையில் அவன் கொடுக்கப்போவது இல்லை. அவனது இலட்சியமே இந்த விசயம் – Arthur Case ஒரு துரோகி என்பது – வெளி உலகத்திற்கு தெரியவேண்டும் என்பது தானே. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை , Russel க்கு எப்படி யாருக்கும் தெரியாத Arthur Case ரகசியம் தெரிந்தது?

frazier அவன் கேட்ட ஜெட் மற்றும் பஸ் ஒன்றும் கொடுக்க ஒத்துக்கொள்கிறான் ஆனால் அதற்கு முன் தான் பிணைக்கைதிகள் அனைவரும் உயிரோடு தான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்கிறான். Russel இதற்கு சம்மதித்து frazier ஐ அழைத்து பிணைக்கைதிகளைக் காட்டுகிறான். frazier சிறிது அவசரப்பட்டு Russel இன் முகமூடியைக் கழட்டப் பார்க்கிறான். முடியவில்லை. இந்த சண்டையில் frazier தோற்கிறான். ஆனால் Russel, frazier ஐ கொல்லாமல் விட்டு விடுகிறான். போகும் போது frazier தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும் அவளுக்கு ரிங் வாங்க பணமில்லாமல் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறான். அதற்கு Russel : do you love each other? then money is not a problem என்கிறான். Frazer, russel இடம் இவ்வளவு தன்னம்பிக்கையாக இருக்கிறாயே எப்படி நீ எங்களிடமிருந்து தப்பிக்கப்போகிறாய் என்கிறான். அதற்கு Russel இதோ இந்த பேங்கின் வாசல் வழியே தான் நடந்து செல்வேன் என்கிறான்.

போலீஸ் உள்ளே சென்று விட தீர்மானிக்கிறது. போலீஸ் உள்ளே செல்லும் முன்னர் உள்ளே குண்டு வெடிக்கிறது. பிணைக் கைதிகள் மற்றும் russel இன் டீம் வெளியே வருகிறார்கள். போலீஸ் அனைவரையும் பிடித்து வைத்து விசாரனை செய்கிறது. Frazier அனைவரையும் விசாரனை செய்கிறார். No clues. யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் mask போட்டிருந்ததால் எங்களுக்கு தெரியவில்லை என்கின்றனர்.

நிறைய நாட்கள் கழித்து Frazier பேங்க்கின் ரெக்கார்ட்ஸ் பார்த்துக்கொண்டிருக்கும் போது லாக்கர் 392 பற்றிய தகவல்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து, அந்த லாக்கரைத் திறக்க judge இடம் அனுமதி வாங்கிக்கொண்டு வருகிறான்.

அப்பொழுது தான் Russel பேங்க்கிற்குள்ளே தான் setup செய்த ரகசிய அறையிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறான். தனது டீம் மெம்பர்ஸை பத்திரமாக வெளியே அனுப்பிவிட்டு Russel மட்டும் உள்ளேயே (Inside Man) இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறான். உணவுக்கு முன்பே பிணைக்கைதிகளை காட்டி வாங்கிய pizza இருக்கிறது. நிலமை சீராகும் வரை ஸ்டோர் ரூம் போல தோற்றம் அளிக்கும் இடத்தில் rack க்கிற்கு பின்னே ஒரு சிறு அறை அமைத்து -இவர்கள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருக்கும் போது செய்தது- அதனுள்ளே இருந்திருக்கிறான். Master Plan.

வெளியே வரும் பொழுது Frazier மீது இடித்து விடுகிறான்.

Frazier பேங்கிற்குள் நுழைந்து லாக்கர் 392 திறந்து பார்க்கிறான். உள்ளே மோதிரம் இருக்கிறது. அதை வைத்து சேர்மேனை – Arthur Case – war crimes case போடுகிறான்.

வீட்டிற்கு வந்து தனது ஜாக்கெட்டைக் கழட்டும் போது பையில் ஒரு வைரம் இருப்பதைப் பார்க்கிறான். அப்பொழுது தான் பேங்கில் யாரோ தன் மீது மோதியது ஞாபகம் வருகிறது மேலும் Russel சொன்ன : நான் இந்த பேங்க்கின் வாசல் வழியே தான் நடந்து வெளியேறுவேன் என்கிற டயலாக்கும் if you love each other then money money is not a matter என்கிற டயலாக்கும் ஞாபகம் வருகிறது.

Frazier சிரித்துக்கொள்கிறான்.

எல்லாம் சரி படத்தில் எழுத்துப்போடும் போது தில் சே படத்தின் “ச்சைய ச்சைய ச்சைய்யா ச்சைய்யா” பாடல் ஏன் போட்டார்கள் என்று தான் தெரியவில்லை.

மேலும் படத்தில் ஒரு சீக்கியர் வருகிறார். அவர் கொள்ளையடிக்கப்படுகின்ற மேங்க்கில் வேலை செய்பவர். கொள்ளையர்கள் அந்த சீக்கியரை வெளியே விட்டுவிடும் போது, வெளியே நிற்கும் NYPD அவரை பிடித்து கீழே தள்ளி- அவர் நான் பேங்க்கில் வேலை செய்பவன் என்று சொல்வதையும் பொருட்படுத்தாமல் – அவரது டர்பனை அவிழ்க்கச் சொல்கிறது. மேலும் அவரது மீசை தாடியைப் பார்த்து – wooo..Arab..- என்கிறது. சீக்கியவர் நான் Arab இல்லை சீக்கியவன் என் டர்பனைத் தாருங்கள் அது மதம் சம்பந்தப்பட்டது. நான் டர்பன் இல்லாமல் நான் இருக்கக்கூடாது என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்.

பின்னர் விசாரனைக்கு அவரை அழைத்து பேசும் போது – உள்ளே இருக்கும் கொள்ளையர்களைப் பற்றி செய்திகள் தெரிந்து கொள்வதற்கு- அந்த சீக்கியவர் சொல்கிறார் : why cant I go anywhere without getting harrassed?

ஏனென்றால் அது நம் நாடு இல்லை.

எனினும் படத்தில் அவரது கேள்விக்கு பதில் இல்லை.

காந்தம்

(தொடர்கதை)

 

3

செல்லம்மா கண் விழித்தாள். குடிசைக்குள் வெளிச்சம் போதுமான அளவுக்கு இருந்தது. சூரியன் உதித்து வெகு நேரமாகிவிட்டதை உணர்ந்தாள். அருகில் படுத்திருந்த பிள்ளைகள் எழுந்து விளையாடப் போய்விட்டன. ராணி மட்டும் இன்னும் தூக்கத்திலிருந்தாள். செல்லம்மா புரண்டு படுத்து கூரையில் தெரிந்த சின்ன சின்ன ஓட்டைகளினூடே தெரியும் வெளிச்ச கீற்றுகளைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். மழை பெய்தால் தான் கஷ்டம். பெய்யாவிடினும் கஷ்டம். தான் இந்த கிராமத்துக்கு வாக்கப்பட்டு வந்து இந்த எட்டு வருடங்களில் ஒரு முறையோ இரு முறையோ தான் மழை பெய்திருந்ததை நினைத்துக்கொண்டாள். அதுவும் கடந்த ஐந்து வருடங்களாக கடும் வரட்சி. மழையும் இல்லை வேலையும் இல்லை. சில சமயங்களில் பக்கத்து கிராமத்து மொட்டை மலையில் கல்லுடைக்கும் வேலையிருக்கும். உழுது அன்னமிட்ட கைகளால் மாணிக்கம் கள்ளச்சாராயம் விற்பதை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வாழ்க்கை நம்மை கேட்டுக்கொண்டா ஓடுகிறது? நாம் ஏற்றுக்கொண்டால் என்ன ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன?

ஏன் மாணிக்கம் இன்னும் வந்திருக்கவில்லை? இல்லை வந்து விட்டு வெளியே சென்று விட்டாரா? எழுந்து உட்கார முயன்றாள். மிகவும் சிரமாக இருந்தது. கஞ்சி இல்லாத மயக்கம் அவளை பின்னால் தள்ளியது. அருகிலிருந்த குத்துக்கால் மரத்தில் சாய்ந்து கால் நீட்டிக்கொண்டாள். வயிறு மிகவும் பெரிதாக இருப்பது போல இருந்தது. குடிசையின் தாழ்ந்த வாசலில் யார் யாரோ நிற்பது போல இருந்தது. மிகவும் தாகமாக இருந்தது.

“டுர் டுர் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று சத்தம் போட்டுக்கொண்டே செந்தில் குடிசைக்குள் நுழைந்தான். அம்மாவைப் பார்த்ததும் அமைதியாக வந்து செல்லம்மாவின் பக்கத்தில் வந்து குத்த வைத்து உட்கார்ந்து கொண்டான். அம்மாவின் கலைப்பான முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்லம்மா அவன் தலையை வருடிக்கொடுத்து கொஞ்சம் தண்ணி கொண்டுவரச்சொல்லி குடித்தாள்.

மடியில் உட்கார்ந்து கொண்டவனின் தலையைக் கோதிக்கொண்டே “அண்ணன் எங்கடா?” என்றாள். “அவன் மந்தல வெளாடுட்டு இருக்கான்” என்றான் செந்தில். “டேய் செந்தில் உனக்கு ராமு மாமா வீடு தெரியும்ல, அங்க போய் மாமா இருந்தார்ன்னா, அப்பா இன்னும் வீட்டுக்கு வரல எங்க போனார்ன்னு தெரியும்மான்னு கேட்டுட்டு வாடா” என்றாள். செந்தில் வேகமாக தலையாட்டிவிட்டு மறுபடியும் டுர் டுர் டுர் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்லிக்கிட்டே வாசலைக்கடந்து சென்றான்.

செல்லம்மா மெதுவாக முட்டியைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள், மயக்கமாக வந்தது. மெல்ல நடந்து வாசலுக்கு வந்தாள். சிறியதும் பெரியதுமாக மக்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேலே பார்த்த செல்லம்மாவுக்கு அச்சர்யம் தாங்கவில்லை. ஆங்காங்கே கரு மேகங்கள் தெரிந்தன.

எதிரே இருந்த குடிசையின் வெளியிலே கால் நீட்டி உட்கார்ந்திருந்த செங்கமலக்கிழவி “இன்னக்கி வந்துரும் ஆத்தா. காத்து சுத்துவட்டா இல்ல பாரு. காலையில இருந்து ஒரே புழுக்கமா வேற இருக்கு. கண்டிப்பா வரும் ஆத்தா” என்றாள். பக்கத்தில் அவள் பொக்கைவாய் அழகையே பார்த்துக்கொண்டிருந்த அவளது மூன்று வயது பேத்தி ராக்கம்மா “என்ன அப்பத்தா வரும்?” என்றாள் ஆர்வமாக. “ஏ சின்னச்சிறுக்கி.. மழ வரப்போகுதுடி..ஊரெல்லாம் குளிரப்போகுது” என்று ஆருடம் சொல்லும் பாணியில் நீட்டி நிறுத்தி சொன்னாள். ராக்கம்மா “மழையா? வானத்திலிருந்து விழுமா” என்றாள் வானத்தைப் பார்த்துக்கொண்டே, அதிர்ந்தவளாக. அவளுக்கு நிச்சயமாக மழை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

செல்லம்மாவுக்கு ஏனோ மனது ஆனந்தத்தில் அதிர்ந்தது. உடனே மாணிக்கத்தை நினைத்து பழைய சோக நிலைக்கு திரும்பியது. அப்படியே கதவில் சாய்ந்து நின்று கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். தூரத்தில் யாரோ தெருவெங்கும் பேசிக்கொண்டு கையிலும் இடுப்பிலும் பையுடன் ஒரு பெண் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். “அட பேச்சியம்மா வரா” என்றாள் சத்தமாக. மறுபடியும் மனம் குதியாட்டம் போடத் தொடங்கியது.

***

காளியம்மன் கோவில் திடலில் புழுதி படர்ந்து கொண்டிருந்தது. மந்தைக்கு வந்த செந்தில அப்படியே நின்று விட்டான். அவனுடைய அண்ணன் குமாரும், ராமு மாமாவின் மகன் மருதுவும் கட்டிப்புரண்டு கொண்டிருந்தார்கள். மற்ற கோலிகுண்டு சிறுவர்கள் இவர்களின் சண்டையைக் கண்டு கொள்ளாமல் தங்களது விளையாட்டில் மிகுந்த மும்முரமாய் இருந்தனர். சில சிறுவர்கள் கீழே உட்கார்ந்து சண்டையையும் வானத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர். எதைப்பார்ப்பது எதைவிடுவது என்கிற பதட்டம் அவர்களது கண்களில் தெரிந்தது.

செந்தில் அவர்கள் பக்கத்தில் சென்று “அண்ணா அண்ணா” என்று கூப்பிட்டான். குமார் நிமிர்ந்து பார்த்து மேலும் தீவிரமாக சண்டையைத் தொடர்ந்தான். அங்கேயிருந்த பிள்ளையார் கோவிலில் உறங்கிக்கொண்டிருந்த பெரிசுகள் சத்தம் தாங்காமல் எழுந்து வந்து சண்டையை விலக்கிவிட்டார்கள்.

குமார் இன்னும் மருதுவை முறைத்துக்கொண்டேயிருந்தான். செந்திலைக் கண்டுகொள்ளாமல் வேகமாகச் சென்று அனாதையாக விடப்பட்ட தனது கோலிக்குண்டை எடுத்து பின்னால் பெரிதும் கிழிந்திருந்த டவுசர் பையில் போட்டுக்கொண்டான். அமைதியாக கோவில் படியில் வந்து உட்கார்ந்து கொண்டான். செந்தில் சத்தம் போடாமல் அவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். செந்தில் குமாரையே பார்த்துக்கொண்டிருந்தான். குமாரின் முட்டிகாலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அப்பா வந்தவுடன் மருதுவுக்கு அடிவாங்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான், செந்தில்.

“அப்பா வீட்டுக்கு வரல தெர்யுமா?” என்றான் செந்தில். குமார் தெரியும் என்பது போல தலையாட்டினான். “ஏண்ணா அவன் கூட சண்டபோட்ட?” என்றான். குமார் பதில் சொல்லவில்லை. தூரத்தில் நின்றபடியே தூங்கிக்கொண்டிருக்கும் வண்டிமாட்டையே பார்த்துக்கொண்டிருந்தான். செந்தில் குமாரின் கையைப் பற்றி “அண்ணா இன்னிக்கு மழ வருமா?” என்றான்.

குமார் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். முன்பைவிட மேகங்கள் நிறைய இருந்தன. வானம் கரு வண்ணமாயிருந்தது. தூங்கிக்கொண்டிருந்த பெரிசுகள் இப்பொழுது எழுந்து உட்கார்ந்து வானத்தைப்பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். மருது தூரத்தில் இடுப்பில் கைவைத்துக்கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

இரண்டு கிழவிகள் காளியம்மனுக்கு முன்னால் கைகளை தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்துகொண்டிருந்தது. “காளியாத்தா எங்க கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு விடிவு கொடு ஆத்தா. இதுக்கு மேலயும் எங்கள சோதிக்காத. புள்ள குட்டியெல்லாம் மழ தண்ணி இல்லாம வாடி வதங்குதுக. கைவிட்டுறாத ஆத்தா” என்று முனகியபடி நெடுஞ்சான்கடையாக விழுந்து கும்பிட்டனர்.

ஏதோ ஞாபகம் வந்தவனைப் போல செந்தில் எழுந்து மறுபடியும் ஓடத்தொடங்கினான். குமார் “எங்கடா போற” என்றான். “ராமு மாமா வீட்டுக்கு” என்று கத்தி சொல்லியபடி மந்தவெளியைக்கடந்து ஒரு சந்துக்குள் புகுந்து மறைந்தான்.

***

“அடி ராக்கம்மா என்னாடி இந்தப்பக்கம்?” என்றாள் செல்லம்மா முகம் நிறைய மகிழ்ச்சியோடு. பொய்யான கோபத்தை முகத்தில் வைத்துக்கொண்ட ராக்கம்மா “நீங்க சொல்லாட்டி எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களாக்கும். எப்படி வந்துட்டேன் பாருங்க. எப்படிண்ணி இருக்கீங்க? முகமெல்லாம் வாடிப்போயிருக்கு. பசங்க எல்லாம் எங்க?” என்றவளின் பேச்சைக்கேட்டவுடனே செல்லம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

“ஐ ராணிகுட்டி தூங்கறாளா? இன்னும் உனக்கு விடியலையாடா செல்லம்” என்று கொண்டுவந்திருந்த பைகளை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு ராணியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள். தூக்கத்திலிருந்து முழித்த ராணி, தனது அழகிய சிறு கண்களால் அதிர்ச்சி காட்டி “அத்த” என்றாள்.

செல்லம்மா ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சிரமப்பட்டு ராக்கம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சில மாதங்களுக்கு முன் வரை சிறு பெண்ணாக தெரிந்த ராக்கம்மாவா இவள் என்று நினைத்துக்கொண்டாள். சட்டென்று திரும்பிய ராணி “பசங்கள எங்கண்ணி? அண்ணன எங்க?” என்றாள்.

“மந்தவெளிலதான் இருப்பான் குமார் நீ அவன பாக்கலியா? உங்க அண்ணன் நேத்து போனவரு இன்ன வரலடி” என்றாள். பிறகு “நீ எப்படிடி இருக்க? நல்லாயிருக்கியா? உன் புருஷன் உன்ன நல்லா வெச்சுக்கிறானா?” என்று நெகிழ்ச்சியான குரலில் கேட்டாள்.

“நான் நல்லாயிருக்கேன் அண்ணி. அவரு நல்லா பாத்துக்குறாருண்ணி” சிறிது இடைவெளி விட்டு “நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல. இப்படி ஒத்த ஆளா நெற மாசத்தோட கஷ்டப்படுறீங்க. வலியெடுக்குதாண்ணி” என்றாள்.

“இல்லடி காலைல கொஞ்சம் இருந்தது. இப்போ இல்ல” என்றாள் செல்லம்மா.

***

குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. “அத்த மட்டும் தான் வீட்ல இருந்தாங்க. வீட்டுக்கு வரேன்டான்னு சொல்லிட்டாங்க” என்று மூச்சு வாங்க சொல்லிவிட்டு குமாரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான் செந்தில். “அத்த கெழங்கு கொடுத்தாங்க” என்று சொல்லியபடி மரவல்லிக்கிழங்கை டவுசர் பையிலிருந்து எடுத்து குமாரிடம் கொடுத்தான். குமார் “எனக்கு வேண்டாம் நீ சாப்டுடா” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

காற்று பலமாக வீசியது. செந்திலின் வெட்டப்படாத நீண்ட முடி காற்றில் அலைந்தது. புழுதி எழுந்து கண்களை அப்பியது. கரு மேகங்கள் கலையத்தொடங்கின. கிழவிகள் வாயடைத்து மௌனமாக வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

***
(தொடரும்)

காந்தம்

(தொடர்கதை)

 

2

மாணிக்கம் ஓசையின்றி கதவைச் சாத்தினான். பனிகாற்று சில்லென்று அவன் முகத்தைத் தாக்கியது. குளிருக்கு இதமாக கைகளை சூடு பறக்க தேய்த்துக்கொண்டான். தோளில் கிடந்த துண்டை எடுத்து காதோடு சேர்த்து தலையில் கட்டிக்கொண்டான்.மண்ணோடு மண்ணாகத் தேய்ந்து மீதமிருக்கும் ஒற்றை மண் படியில் உட்கார்ந்தான். தெரு வழக்கத்தைவிட மிகவும் அமைதியாக இருப்பதாக உணர்ந்தான். வானம் சுத்தமாக இருந்தது. நட்சத்திரங்கள் தெளிவாக இவனைப் பார்த்து கண்சிமிட்டின.

கைலியின் சுருட்டில் குடித்துவிட்டு வைத்திருந்த பாதிக்கும் குறைவான மீதி பீடியை எடுத்து பற்றவைத்தான். உடனே தொற்றிக்கொண்டு வந்த இருமலை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்.தூரத்தில் எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கின் வெளிச்சத்தில் பனி புகையாய் படர்ந்து கொண்டிருந்தது. இன்னும் தூரத்தில் மொட்டை மலை ஒற்றை மின் விளக்கு மங்களாகத் தெரிந்தது. நேரம் பீடிப் புகையாய் காற்றில் கரைந்தது. உள்ளடங்கிய மிகச் சிறிய கண்கள் வானத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தன.

அணைந்து போன பீடியைக் கீழே போட்டுவிட்டு மாணிக்கம் எழுந்து வீட்டின் பின்புறம் சென்றான். முட்கள் மண்டிய புதர் குளிரில் நனைந்திருந்தது. மாணிக்கம் மெதுவாக முட்களை அப்புறப்படுத்தினான். பின் மண் தரையை தோண்ட ஆரம்பித்தான். உள்ளிருந்து சிறிய மண் பாணையை எடுத்து வெளியே வைத்தான். மண் பானை அழுக்கடைந்த ஒரு துணியினால் மூடப்பட்டிருந்தது. தோண்டிய மண்ணை குழியில் அடைத்து முட்களை அதன் மேல் வைத்துவிட்டு பானையை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்பக்கத்துக்கு வந்தான். தோளிலிருந்த பானையிலிருந்து சலக் சலக் என்ற ஓசை அவன் காதுகளுக்கு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த செல்லாமவைப் பார்த்து மாணிக்கம் ஒரு கணம் திடுக்கிடவேசெய்தான். வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மா,”யோவ்..இன்னிக்கு எங்கயும் போகவேணாம்னு ஏட்டையா சொல்லிட்டு போயிருக்காருய்யா. எங்கயும் போகவேணாம்யா. உன் செல்லம்மா சொல்றேன் கேளுய்யா” என்றாள். கண்களினோரம் ஈரம் கசியத்தொடங்கியிருந்தது. தோளிலிருந்த மண் சட்டியை கீழிறக்காமல் சிறிது நேரம் பேசாமலிருந்தான் மாணிக்கம். பின்னர் “எத்தன நாளைக்குத்தான் நீங்க பசியோட இருப்பீங்க? நெறமாசக்காரி உன்ன எத்தன நாளைக்கு பட்டினி போடுவேன். சோர்ந்து சோர்ந்து அடிவயித்த பிடிச்சிக்கிட்டு சுருண்டு கெடக்குற பிள்ளைகள என்னால பாக்க முடியலத்தா. இன்னிக்கு பாண்டி கண்டிப்பா வாங்கிறேன்னும் சொல்லியிருக்கான். போய்கொடுத்துட்டு காசோட வாரேன் புள்ள. நாளைக்காவது அடுப்பபத்தவைக்கலாம். ஒன்னும் பயப்படாத. எனக்கு ஒன்னும் ஆகாது. குளிருல ரொம்ப நேரம் வெளியில உக்காராத உள்ள போ படுத்துக்க. ராணி முழிச்சுக்கிட்டா பாரு” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் மாணிக்கம்.

தூரத்தில் இருட்டில் மறையும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.

***
மந்தைக்கு வந்த மாணிக்கம் தூரத்தில் பானையை வைத்துவிட்டு, தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, கம்பி கதவுக்குள் சிறைப்பட்டிருந்த காளியம்மனை பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டான். சித்தம் கலங்கிய பைத்தியக்காரனைப்போல அவன் வாய் ஏதேதோ முனுமுனுத்துக்கொண்டேயிருந்தது. உதடு துடித்துக்கொண்டேயிருந்தது. சிறிய எண்ணெய் விளக்கில் காளியம்மன் மிகவும் மங்கலாகத்தான் தெரிந்தார். இவன் விசும்பலைக் கேட்டதாலோ என்னவோ சுவற்றிலிருந்த பல்லி முழித்துக்கொண்டு காளியம்மனை எழுப்பத்தொடங்கியது.

மந்தையைக் கடந்து தார் ரோட்டைக் க்ராஸ் செய்யும் போது அங்கிருந்த இலைகளை பெரிதும் உதிர்த்து விட்ட காய்ந்து போன வேப்பமரத்தில் கட்டிப்போடப்பட்டிருந்த வண்டி மாடுகள் சேர்ந்தார்ப்போல் மாணிக்கத்தைத் திரும்பிப்பார்த்தன. மாணிக்கம் ஒத்தயடிப்பாதையை ஓட்டமும் நடையுமாக கடந்து ஊரணியை அடைந்தான். அங்கிருக்கும் பாழடைந்த பிள்ளையார் கோவிலின் மூலையில் உரங்கிக்கொண்டிருந்த சித்தன் ஒருவன் திடீரென எழுந்து உட்கார்ந்தான். பின் ஏதோ புரியாத பாஷையில் வரம் தந்து விட்டு மீதி உறக்கததை தழுவிக்கொண்டான்.

நேரம் நத்தையைவிட மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. பாண்டி வருகிறார் போல் தெரியவில்லை. நிலாவைப் பார்த்தான். அது எனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல அமைதியாக இவனை பார்த்துக்கொண்டிருந்தது. பாதி உடைந்த நிலையிலிருந்த பிள்ளையார் எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒற்றைக்கண்ணில் தெரிவித்தார். வற்றிப்போன ஊரணியிலிருந்த காய்ந்து போன இலைச்சறுகுகள் மெல்லிய காற்றில் அசைந்து ஒரு விதமான பீதியை உண்டாக்கும் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. அந்த குளிரிலும் மாணிகத்தின் நெற்றி வியர்த்திருந்தது. இப்பொழுது முற்றிலும் தேவைப்படாத தலைக்கட்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். குழந்தைகளின் வாடிய முகத்தை நினைத்துக்கொண்டான், பாண்டி வேகமாக வந்தால் தேவலை என்று நினைத்துக்கொண்டான்.

தூரத்தில் புதர் அசையும் சத்தமும் காலடியில் சருகு மிதிபடும் சத்தமும் கேட்டது. மிக லேசான விசில் சத்தம் ஒன்று கேட்டது. மாணிக்கம் சட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு புதரின் அருகில் சென்று அதே போன்றதொரு விசில் அடித்தான்.

சிறிது நிசப்தத்திற்குப் பிறகு, “அண்ணே, நான் பாண்டியோட மச்சான் முத்து.” என்றொரு குரல் கேட்டது. அடையாளம் கண்டுகொள்ள முயன்ற மாணிக்கத்திடம், முத்து ரகசியமாக, சன்ன குரலில் பேசினான்: “பாண்டி மாமா இன்னக்கி வரமுடியல. நல்ல காய்ச்சல் தூக்கி தூக்கி போட்டது. அதனால அக்கா என்ன அனுப்பிச்சது.” என்றான்.

“நீ..உன்ன..ம்..ம்ம்..பாண்டிக்கு இப்போ எப்படி இருக்கு?” என்றான் மாணிக்கம். “நல்லாயிருக்காருண்ணே. வாங்க என்கூட. என்கிட்ட பணம் இல்ல. மலைக்கு பின்னால் போய் வாங்கிக்கொடுக்கறேன்” என்றான் முத்து.

“மலைக்கு பின்னாலையா?. நான் அங்கெல்லாம் போக மாட்டேன்ப்பா. நீ போய் கொடுத்துட்டு வந்திடு. நான் நாளைக்கு கூட பணம் வாங்கிக்கறேன்” என்றான் மாணிக்கம். நடக்க ஆரம்பித்த மாணிக்கம், திரும்பி, சரிப்பா “நானும் வாரேன்.” என்றான்.

இருவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர். இப்பொழுது மீண்டும் குளிரெடுக்கத்தொடங்கியது. இருவரின் காலடி சத்தங்களையும் தூரத்தில் கேட்கும் நாய்களின் குரைப்புகளையும் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. முத்து நடையைத் துரிதப்படுத்தினான்.

“அண்ணே நீங்க இந்த புதருக்கு பின்னால உக்காந்திருங்க. நான் வந்து விசில் சத்தம் கொடுத்தா மட்டும் வெளியில் வாங்க. நான் கொஞ்ச நேரத்தில வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு கணப்பொழுதில் ஓட்டமும் நடையுமாக ஓடி மறைந்தான் முத்து.

இரவுப்பூச்சிகளின் இடைவிடாத ரீங்காரம் சூழ்நிலையை மேலும் கலவரப்படுத்தியது. மாணிக்கம் ஒரு சாரப்பாம்பு பக்கத்துப்புதரில் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தான். ஏனோ அவனுக்கு ஒட்டிய அடி வயிறுடன் படுத்துக்கிடக்கும் செந்தில் தான் ஞாபகத்துக்கு வந்தான். மாணிக்கம் “நாளைக்கு சோறாக்கிடலாம்” என்று நினைத்துக்கொண்டான்.

தூரத்திலிருந்த இடிந்த மண் மேட்டில் அசையாமல் உட்கார்ந்திருந்த ஆந்தை ஒன்று மாணிகக்த்திடம் ஏதோ சொல்ல நினைத்து பிறகு ஒன்றும் சொல்லாமல் அவனையே வெறித்துக்கொண்டிருந்தது.

***
திடீரென்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்கவே மாணிக்கம் உஷாரானான். எழுந்திருக்கலாமா என்று யோசித்தான். கொஞ்ச தூரத்திலிருந்த புதரிலிருந்து ஒருவன் எழுந்து ஓடினான். துப்பாக்கி சத்தமும், அலறல் சத்தமும் கேட்டது. மேலும் காலடியோசைகள் கேட்டது. மாணிக்கம் எழுந்திருக்கவில்லை. போலீஸ் விசில் சத்தமொன்று மிக அருகில் கேட்கவே மாணிக்கத்தின் இதயம் துடிப்பை அதிகரித்தது. மாணிக்கம் இருந்த இடத்திலே உரைந்தான்.

தடிமனான லத்தி ஒன்று அவன் தோளில் தட்டியது. புதருக்கு அந்தப்பக்கம் கனத்த பூட்ஸ் கால்கள் தெரிந்தன. “எந்திரிடா” என்ற கடுமையான குரல் ஒன்று ஒலித்தது.

(தொடரும்)