(சிறுகதை)
கருப்பட்டிக் காப்பியின் மனம், என் மூளையின்(?) அடி வரை சென்று, வடிந்து கொண்டிருந்த உற்சாகத்தை மீட்டெடுத்துக்கொண்டிருந்தது. அப்பத்தாவின் காப்பி மட்டும் ஏன் இத்தனை ருசியாக இருக்கிறது? இரைச்சல் மிகுந்த நகரத்தின் புழுதிகளில் புகுந்து எங்கு தேடினாலும், இதுபோன்றதொரு காப்பியைக் கண்டுபிடிக்கமுடியாது. கிராமங்கள் தான் எவ்வளவு அழகனாவை? அமைதியானவை? செமஸ்டர் விடுமுறை முடிந்து, கல்லூரி செல்லத் தொடங்கினாலும் இந்த கிராமத்தின் நினைவுகள், ஒரு நிழலைப் போல, சில மாதங்கள் பின் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொரு செமஸ்டரின் விடுமுறையிலும் தவறாமல் நான் என் அப்பத்தாவின் கிராமத்திற்கு வந்துவிடுவேன். நான் வந்து சில நாட்களில் அப்பாவும் அம்மாவும் வந்து விடுவார்கள். ஒருவாரம் இங்கே இருப்போம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய நபர்களைத் தெரிந்திருக்கும். எனக்கு ஒரு சில நண்பர்களே உண்டு. குறிப்பாக அன்பு. கருப்பட்டிக்காப்பியின் படிந்த துகள்கள், தொண்டையில் கமறலை உண்டுபண்ணியது.
நான் மெதுவாக எழுந்து வெளியில் வந்து நெட்டி முறித்தேன். கொட்டாவி ஒன்று போனஸாக வந்தது. குற்றாலத்துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, செறுப்பை அணிந்து கொண்டேன். நாயொன்று என்னைச் சுற்றி சுற்றி வந்து வாலாட்டியது. அன்பு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
‘வாப்பா, மாணிக்கம். எப்ப வந்த? அப்பா அம்மா நல்லாயிருக்காங்களா?’ அன்புவின் அம்மா கேப்பையை புடைத்துக்கொண்டிருந்தார். ‘வாங்கண்ணே, நல்லாயிருக்கீங்களா?’ அன்புவின் சகோதரி மீனா எழுந்துகொண்டாள். ‘ஏண்டி, அண்ணனுக்கு காப்பித்தண்ணி போடு. உக்காரு ராசா.’ மீனா பாயை விரித்தாள். பாய் நைய்ந்திருந்தது.நான் காப்பியை வேண்டாமென்று சொல்லவில்லை. ‘எல்லாம் நல்லாயிருக்காங்கம்மா. அப்பா அம்மா இரண்டு நாள் கழித்து வற்ராங்க’. ‘அடடே, மாணிக்கமா. பரிட்சை முடிஞ்சதா?’ என்று கேட்டுக்கொண்டே அன்பு வந்தான். ‘முடிஞ்சது அன்பு. நீ எப்படியிருக்க?’ என்றேன். அன்பு மெலிந்திருக்கிறான். தலையில் கட்டு போட்டிருக்கிறான். தலைக்கட்டை நான் கவனிப்பதைப் பார்த்ததும், ‘மாணிக்கம், உன் பிரண்டுக்கு புத்தி சொல்லிட்டுப் போ. எப்ப பார்த்தாலும் செவலை கூடவே மல்லுக்கு நிக்கறான். அவன் பவுசு என்ன, நம்ம நிலமை என்ன? நேத்து ரெண்டு பயலுகளும் கட்டி உருண்டிருக்கானுங்க. போனவரு போயிட்டாரு. இவனுங்க சண்டை போட்டு என்ன பண்ணப்போறானுங்க. இவனுக்கு மண்டை உடைஞ்சது தான் மிச்சம்’ அன்பு அம்மாவை முறைத்தான். ‘என்னடா?’ என்றேன். ‘அது ஒன்னுமில்லைடா. இந்தா காப்பியைக் குடி’ என்று மீனாவிடமிருந்து காப்பியை வாங்கிஎன்னிடம் கொடுத்தான். நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘காட்ல கொஞ்சம் வேலையிருக்கு. நீ மலைக்கு போ. நான் ஒரு மணி நேரத்தில வந்துடறேன்.’ என்று அன்பு சொன்னான். நானும் அவனும் வெளியே வரும்பொழுது,’அன்பு, காட்டுக்கு போனமா வந்தமான்னு இருக்கனும். செவலை கூட மல்லுக்கு நிக்காத’ என்றார் அன்புவின் அம்மா. நானும் அதையே சொன்னேன். அவன் சிரித்துக்கொண்டான்.
நான் தெருவில் இறங்கி மலையை நோக்கி நடந்தேன். நாய்கள் தலையை நிமிர்த்தி, என்னை விசித்திரமாக பார்த்தன. பின் ஏனோ தலையை கீழே தாழ்த்தி கண்களை மூடிக்கொண்டன. காளியம்மன் கொவில் மந்தையைத்தாண்டி, ரோட்டைக்கடந்து, கம்மாக் கரையில் நின்று வயல்வெளிகளைப் பார்த்தேன். அதோ அந்த ஒற்றை ஆலமரத்தை சுற்றித்தான் எங்கள் வயல் இருக்கிறது. காற்று மிக இதமாக வீசிக்கொண்டிருந்தது. கம்மாத்தண்ணீரின் ஈரப்பதமும் சேர்ந்து, எனக்கு அயர்வைக் கொடுத்தது.
அன்புவின் அப்பாவை, செவலையின் அப்பாதான் கொன்றார். ஏதோ சொத்து விவகாரம். செவலையின் அப்பா இப்பொழுது ஜெயிலில் தான் இருக்கிறார். ஆறு வருடங்கள் ஆகிவிட்டன இது நடந்து. இன்னும் பகை மறைந்த பாடில்லை.அன்பு அமைதியாய் இருந்தாலும் செவலை அவனை விடுவதில்லை. அன்பு நிறையப் படிக்கவில்லை. இங்கு கிராமத்தில் இருந்த படியே வயல்வெளிகளைக் கவனித்துக் கொள்கிறான். கொஞ்சம் முன்கோபி.ஆனால் வயதை மீறின பொறுப்பாளி. செவலை முரடன்.
கம்மாவில் தண்ணீர் நிறைய இருக்கிறது. இந்த ஆண்டு விவசாயம் நல்லபடியாக நடக்கும். தண்ணீருக்கு பஞ்சம் இருக்காது. நீர்மட்டத்தை ஒட்டியபடியே வெளிர்சாம்பல் நிற பறவையொன்று பறந்து கொண்டிருந்தது. பெயர்தான் தெரியவில்லை. கம்மாவை விட்டு, ஒற்றையடிப்பாதையில் நடந்தேன். மாலை, வயல் வேலை முடிந்து சிலர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். என்னை ஆழமாகப் பார்த்தபடி என்னைக் கடந்து சென்றனர். நகரத்து மனிதர்கள் ஏனோ கிராமத்து மக்களிடம் ஒட்டுவதேயில்லை. ஒரு அன்னியத்தன்மை இருவருக்கிடையே, ஒரு காற்றைப் போல், எப்பொழுதுமே இருக்கிறது. மலை என்னை நோக்கி வருவது போல இருந்தது.
மலையின் அடிவாரத்திலிருக்கும் பிள்ளையார் கோவிலில் வந்தமர்ந்தேன். மலை பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல. மரங்கள் இல்லாத மொட்டை மலை. மலையின் உச்சியில் ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது. கோவிலுக்குப்பின்புறம் ஒரு பெரிய, மிகப் பெரிய ஆலமரம் இருக்கிறது.மலை ஏறும் பொழுது கவனமாக ஏறவேண்டும். சில இடங்களில் பாறை வழுக்குவதாக இருக்கும். பள்ளங்கள் கூட உண்டு. கேணிகளும் இருக்கின்றன. சில கேணிகளின் ஆழம் மலையின் அடிமட்டத்தையும் தாண்டி இருக்கும், என்று அப்பத்தா சொல்லியிருக்கிறார். கேணிகளில் அடர்ந்த பாசி படிந்த தண்ணீர் ஆழத்தை மறைத்தபடி மிக அமைதியாய் – கவணிக்கப்படாத தேர் போல – நிற்கும்.
அரச மரத்தின் இலைகள் ஒன்றோடொன்று உரசி புதிய ராகப்பரிமானம் செய்து கொண்டிருந்தன. பலவிதமான பெயரில்லாத பறவைகள் விசித்திரமான ஓசைகளை எழுப்பிக்கொண்டிருந்தன. பிள்ளையார் இவை அனைத்தையும் இரசித்தபடி, அனையாமல் சுடர்விட்டெரியும் ஒற்றை விளக்கையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மலையின் அடியில் இருக்கும் ஊரணியில் கால்களையும், முகத்தையும் கழுவிக்கொண்டேன். தாமரை மலர்கள் சூரியன் மறைந்து கொண்டிருப்பதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன.
பெருமாள் கோவில் மிக அமைதியாக இருந்தது. மலை ஏறிவந்த கலைப்பு, மூச்சாக என்னிடமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. கோவிலின் பின்புறம், நானும் அன்பும் எப்பொழுதும் வந்தமரும் ஆலமரத்தடிக்கு வந்தேன். காற்று, என் வருகையை அறிந்து சுத்தமாக கூட்டிவிட்டிருந்தது. அங்கிருந்து பார்த்தால் அருகிலிருக்கும் இரண்டு கிராமங்கள் தெரியும். பச்சை வெல்வெட்டாய் வயல் படிந்திருக்கும். வெல்வெட்டு சீறாக காற்றில் அலைந்துகொண்டிருக்கும். இங்கே அடிக்கும் காற்றும், காற்றில் கலந்த அமைதியும், என்னுள் ஒரு தெளிந்த வெளியைத் தோற்றுவிக்கும். மனம் அதில் அமிழ்ந்து, அடங்கிவிடும். பின் காற்றே அந்த வெற்றிடத்தை நிறப்பும்.
குற்றாலத்துண்டை சுருமாடாக மடித்து, தலைக்கு வைத்து, படுத்துக்கொண்டு, ஆல மரத்தின் இலைகளையும், அங்கு வந்தமர்ந்திருக்கும் பறவைகளையும் எண்ணத் தொடங்கினேன். காற்று மிகக் குளிர்ச்சியாக இருந்தது.
கண் இமைகளில் குளிர்ந்த நீர் சொட்டு விழ, கண் விழித்தேன். இலைகள் தெரியவில்லை. இலைகளினூடே சில நட்சத்திரங்கள் தெரிந்தன. மற்றொரு துளி என் கன்ணத்தில் விழ, அடுத்தடுத்த துளிகள் சற்று பெரியதாயிருந்தன. எழுந்து உட்கார்ந்தேன். நல்ல இருட்டு. பெருமாள் கோவில் மேல் எப்பொழுதும் எரியும் ஒற்றை மின் விளக்கும் விடுமுறை எடுத்து விட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, கண் தெரியவில்லை. வேகவேகமாக நடந்து கோவிலின் முன்புறம் வந்தேன். காற்றில் அலைந்துகொண்டிருந்த ஒற்றை விளக்கில் பெருமாள் மிக மங்கலாகத் தெரிந்தார்.
மணி என்னவென்று தெரியவில்லை. மழை நன்றாக பிடித்து விடுவதற்குள், கீழே போய் விடவேண்டும். இந்த கும்மிருட்டில் எப்படி போவது. போய்த்தானாக வேண்டும். நடக்கத்தொடங்கிய சிறிது நேரத்தில் பலத்த இடி ஒன்று கிழிறங்கியது. என் இடது காலில் பெரிய கூர்மையான கல் ஒன்று இடித்தது. விரல்கள் நன்றாக எரிந்தன. தூரல் வலுத்துக்கொண்டேயிருந்தது. பாறை வழுக்கியது. பாதை சுத்தமாகத் தெரியவில்லை. மின்னல் ஒன்று கூர்மையாக இறங்கியது. கண்களை மூடிய நான், குழிக்குள் காலைவைத்து தலை குப்புற விழுந்தேன். குழியில் முட்கள் இருந்திருக்க வேண்டும். இரண்டு மூன்று முட்கள் குத்தியிருக்க வேண்டும்.மழை சடசடவென்று அடிக்க ஆரம்பித்தது. ஐயோ கடவுளே நான் எப்படி மலையைவிட்டு கீழிறங்கப்போகிறேன். மையிருட்டில் திண்டாடியபொழுது, சிறிது தூரத்தில் யாரோ ஒருவர், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையணிந்து வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவருக்கு பாதை நன்றாக பழகியிருக்க வேண்டும். ஐயா – அழைத்தேன். பதில் இல்லை. வேகமும் குறையவில்லை. அவரைப் பின் தொடர்ந்து நடந்தேன். வேகமாக. வழுக்கினாலும் பாதை மாறவில்லை. மறுபடியும் அவரை அழைத்தேன். பதில் இல்லை. நான் வேகத்தைக் கூட்டினேன். நான் எத்தனை வேகமாக நடந்தும் அவரைப் பிடிக்கமுடியவில்லை. எங்களுக்கிடையே இருக்கும் இடைவெளி குறையவேயில்லை, பெய்துகொண்டிருக்கும் மழையைப்போல. நான் தொப்பலாக நனைந்துவிட்டிருந்தேன். இன்னும் சிறிது நேரத்தில் அடிவாரத்தைத் தொட்டுவிடலாம். அதோ அவர் இறங்கிவிட்டார். நானும் சிறிது நேரத்தில் இறங்கிவிட்டேன். அவரைக் காணவில்லை. சட்டென்று என் கண்களை மறைத்து, மறைந்துவிட்டார்ம் ஒரு மின்னலைப் போல. எங்கே போனார்? எங்கே போனாலும் என் கண்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே. பிள்ளையார் கோவிலில் இருக்கிறாரா? காற்றின் இரைச்சல் மனதிற்கு கிலி ஏற்படுத்தியது.
பிள்ளையார் கோவிலில் யாருமில்லை, வழக்கம் போல் பிள்ளையார் தனியாகவே அமர்ந்திருந்தார், காற்றில் அலையும் விளக்கின் துணையோடு. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்கே மறைந்திருப்பார் அந்த வெள்ளைச்சட்டைக்காரர்? அப்பொழுதுதான் கேட்டது அந்த சத்தம். மிகப் பயங்கரமான அலறல் சத்தம். இடியின் சத்தத்தை விட மிகப் பயங்கரமாயிருந்தது, அந்த அலறல்.
நான் திடுக்கிட்டு விழித்தேன். ஆல மரத்தின் இலைகள் மெதுவாக அசைந்து கொண்டிருந்தன. காற்று இதமாக இருந்தது. பெருமாள் கோவில் மின் விளக்கு மிக பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தேன். வாயில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டேன். மலையில் கண்ணுக்கெட்டியதூரம் வரை யாருமில்லை. மழையும் பெய்திருக்கவில்லை. வானம் பிரகாசமாயிருந்தது, நட்சத்திரங்களோடு. நிலவு முழுமையாய் இருந்தது. மறுபடியும் அந்த சத்தம் கேட்டது. மிக அழுத்தமாக. எனக்கு மிக அருகில். நான் என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். ‘என்னை விடுடா’ ஒரு பெண்ணின் அழுகை கலந்த அலறல் சத்தம் கேட்டது. நான் எழுந்தேன். கோவிலுக்கு முன்புறத்திலிருந்து மீனா ஓடிவந்தாள். பின்னாலேயே, செவலை அவளைத் துரத்திக்கொண்டுவந்தான். மீனாவின் மேலாடையைக் காணவில்லை. எனக்கு நிலமை விளங்கியது.
என்னைப் பார்த்ததும் மீனா, அழுதுகொண்டே என் பின்னால் ஒளிந்து கொண்டாள். ‘மீனா, நீ எங்கம்மா இந்நேரம் இங்க வந்த?’ என்றேன் செவலையை முறைத்தபடி. ‘அண்ணா, அன்பு அண்ணனை காட்ல பாம்பு கடிச்சிருச்சு. அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகப்போறாங்க. அம்மா உன்னை கூட்டியாரச்சொல்லுச்சு. இந்த செவலை..செவலை..என்னை..’ என்று அழ ஆரம்பித்தாள்.
‘செவலை, வேண்டாம். போயிடு.’ என்றேன். ‘நீ என்னடா, பண்ணுவ? அசலூர்க்காரன் நீ. அப்பத்தா ஊருக்கு வந்தமா, பெருமாள் மலை ஆலமரத்துக்கடியில படுத்துக்கிடந்தமான்னு இருந்திட்டு போயிடு. எங்க சண்டையில குறுக்க வராத’ என்று சொல்லிக்கொண்டே மீனாவின் கைகளைப் பற்ற முயன்றான்.
நான் என் பலங்கொண்ட மட்டும் அவனை ஒரே தள்ளாக தள்ளினேன். இதை எதிர்பாறாத செவலை நிலை தடுமாறி கீழே விழுந்தான். விழுந்தவன் விழுந்த வேகத்தில் எழுந்தான். இப்பொழுது அவன் கையில் கத்தி முளைத்திருந்தது.
‘செவலை, கத்தியைக்கீழே போடு’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, முழு வேகத்துடன் பாய்ந்து, அதே வேகத்தில் என் வயிற்றில் கத்தியை கனகச்சிதமாக செருகினான். குடலை கிழித்திருக்க வேண்டும். வழி உயிரை எடுத்தது. எடுக்கப்போகிறது. பிசுபிசுப்பாய் சூடான கருஞ்சிவப்பு இரத்தம் மிக மெதுவாக விடுதலை பெற்றது. கீழே சரிந்தேன். ‘அண்ணா அண்ணா’ மீனாவின் குரல் மிகச் சன்னமாக ஒலித்தது. பின் சுத்தமாய் அடங்கியது.
கண் இமைகளில் குளிர்ந்த நீர் சொட்டு விழ, கண் விழித்தேன். வாயில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டேன். எழுந்து உட்கார்ந்தேன். கும்மிருட்டு. மீனாவையும் காணவில்லை, செவலையையும் காணவில்லை. பெருமாள் கோவிலின் மேல் இருக்கும் மின் விளக்கு எரியவில்லை. மழைத்தூரல் அதிகமாகியது. மணி என்ன இருக்கும்? ஏன் இன்னும் அன்பு வரவில்லை? ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று சொன்னானே. இடியொன்று மிகப் பயங்கரமாயொலித்தது. மழை நன்றாகப் பிடித்துவிடுவதற்குள் கீழே போய்விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பாதை சரியாகத் தெரியவில்லை. கூர்மையான பெரிய கல் ஒன்று காலில் இடறியது.
**************
முத்து, கதைக்கு பயன்படுத்திய உத்தி நன்றாக இருந்தது. ஆனால் கதை நடக்கும் களம் மரபுவழி கிராமிய தமிழ் படங்களை நியாபகப்படுத்தியது. பட்டனத்திலிருந்து கிராமம் வந்து அதை அனுபவிக்கும் நாயகன், பாசமான முன் கோபமுள்ள தோழன், நாயகனை அண்ணாவென அழைக்கும் தோழனின் தங்கை போன்றவை பல முறை பார்த்தவை.
LikeLike
எண்ணம் எனது (இயற்பெயர்?) : வருகைக்கு நன்றி. கருத்துக்கு மிக்க நன்றி. மிகவும் சரி. பட்டணத்திலிருந்து கிராமம் வந்து அதை இரசிக்கும் நாயகன் என்ற கதைக்களம் பலமுறை பார்த்த ஒன்று தான். ஆனால் அது புதிய உத்தியோடு சொல்லப்படும் பொழுது சலிப்பையோ, சுழிப்பையோ ஏற்படுத்தாது என்று எண்ணினேன். திருத்திக்கொள்கிறேன்.
LikeLike
நம்ம ஊரு பக்கம் வந்தால் எனக்கு ஒரு போன் பண்ணுங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே மலையை சுற்றுவோம். வருடா வருடம் முத்துமாரியம்மன் கோவில் பொங்கலுக்கு நான் ஒரு கூட்டத்துடன் வருவேன். எனது நம்பர் 9994982237
LikeLike
8 வருடங்களுக்கு பிறகு படிப்பதாலோ என்னமோ கதையோ கருவோ ஈர்க்கவில்லை…
உங்களின் சமீபத்ய எழுத்து நடை பிடித்ததாலோ என்னமோ இது நீங்கள் எழுதியதாக உணரவில்லை…
LikeLike