ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

எனக்கு ஜோதிடத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. நியூஸ்பேப்பரில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். நியூஸ்பேப்பரிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை.

ஏன் இப்பொழுது இதைப்பற்றி எழுதவேண்டும் என்கிற கேள்வி எழுகின்றதானால், நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்ததுதான் இப்பொழுதுதான் நேரம் கிடைத்திருக்கிறது.(மீண்டும் படியுங்கள்: நேரம் வரவில்லை; நேரம் கிடைத்தது:) ). ஆண்டு தொடங்கியவுடன் வருட பலன்களையும் ஜாதகங்களையும் தோஷ நிவர்த்திகளையும் தேடி ஓடுபவர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

ஜோதிடம் பொய். சுத்தப் பொய். உங்களிடம் யாராவது ஜோதிடம் பற்றிச் சொல்கிறார்கள் என்றால் உங்களிடம் ஏதோ ஒன்றை விற்க முயற்சிக்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்களை ஏமாற்றுகிறார்கள்.

ஏன் பொய்? விளக்கமாகச் சொல்கிறேன்.

ஜோதிடம் என்பது என்ன?

ஜோதிடத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. கிரகநிலை ஜோதிடம்.ஜென்ம ராசி சக்கரத்தில் சந்திரனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள். சிலர் சூரியனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள்.சிலர் ஜோதிடம் கணிப்பதற்கு பிறந்த நேரம் மிக முக்கியம் என்கிறார்கள். சிலர் பிறந்த மாதம் முக்கியம் என்கிறார்கள்.இன்னும் பலப் பல வகை.இவர்கள் வைத்திருக்கும் வகைகள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மொத்தமாக மிஞ்சிவிடும் போல இருக்கிறது. மொத்தத்தில் ஜோதிடம் கணிக்கும் எல்லாரும் ஒரே ஒரு அனுமானத்தில் தான் வேலை செய்கிறார்கள், அது: அண்டத்திலிருந்து ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பது தான்.

இந்த சக்திக்கு பலர் பல அறிவியல் விளக்கங்கள் அளிக்கிறார்கள்.புவி ஈர்ப்பு சக்தி என்கிறார்கள். மின்காந்த சக்தி என்கிறார்கள். இன்னும் சிலர் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதை அளக்க முடியாது என்றும் விவரிக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசியில் பார்த்தீர்களேயானால் இந்த சக்திகள் எல்லாம் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அவை நம் மீது செலுத்தும் சக்தியையுமே குறிக்கின்றன.

கிரகங்களின் சக்தி என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதை அளக்க முடியும்.தனிமனிதன் மீதிருக்கும் அதன் சக்தியை அளக்கமுடியவில்லை என்றாலும் ஒரு கும்பல்(!) மீதிருக்கும் சக்தியையாவது அளக்கமுடியவேண்டும் இல்லையா? இன்றிலிருந்து சரியாக இன்னும் பத்துவருடங்களுக்குப் பிறகு வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாகச் சொல்லமுடியாது ஆனால் வெயிலடிக்கும் என்று தோராயமாகச் சொல்லமுடியும். ஆனால் இதையும் ஸ்டாட்டிஸ்டிக்ஸைப் பயன்படுத்தி சோதிக்கமுடியும். இந்த கணிப்பைக்கூடச் சரிபார்க்கமுடியும் இல்லியா?

முதலில் ஜோதிடர்கள் சொல்வது போல கிரகங்களும் நட்சத்திரங்களும் நம்மைப் பாதிக்குமா என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு அவர்கள் சொல்வது போல எந்த சக்தியும் இல்லை இருக்கவும் முடியாது என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு ஜோதிடர்கள் அந்த சக்தியை அளக்கமுடியும் என்று சொல்வது உண்மைதானா என்று பார்ப்போம்(ஒரு க்ளு தருகிறேன்: அவர்கள் சொல்வது பொய்!) அப்புறம் ஜோதிடம் எப்படி மக்களை தெளிவாக சிந்திக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

கொஞ்ச நேரத்துக்கு சும்மானாச்சுக்கும் கிரகங்களின் ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம்மைப் பாதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்;அந்த சக்தி என்னவாக இருக்கமுடியும்?

மூளையைத் திறந்து வைத்துக்கொண்டு யோசிப்போம். நமக்கு இருக்கும் சாய்ஸ் ரொம்பவும் கம்மி.

கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிகமிகமிகமிக குறைவு ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. அடிப்படை இயற்பியல்.

தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் அடிப்படையில் மொத்தம் நான்கு சக்திகளே இருக்கின்றன. அவை புவி ஈர்ப்பு சக்தி, மின் காந்த சக்தி, பிறகு கடின சக்தி (strong force) மற்றும் சன்ன சக்தி(week force). இதில் கடைசி இரண்டு சக்திகள் அணு அளவில் மட்டுமே வேலைசெய்யும். அதுவும் இந்த கடினசக்தி என்பது தூரத்தைப்பொருத்து மாறுபடும். கொஞ்ச பில்லியன் மீட்டர்கள் வந்துவிட்டீர்கள் என்றால் இந்த சக்தி காணாமலே போய்விடும்.

நமக்கும் கிரகங்களுக்குமிடையேயான தூரம் பில்லியன் மீட்டர்ஸைத் அசாத்தியமாகத் தாண்டுவதால் கடைசி இரண்டு சக்திகளும் இங்கு செல்லாது செல்லாது.

எனவே நமக்கு இப்பொழுது புவி ஈர்ப்பு சக்தியும் மின்காந்த சக்தியும் மட்டுமே இருக்கின்றன.

புவி ஈர்ப்பு சக்தி மிகப்பெரிய அளவில் (சூரிய மண்டலம்) எப்படி வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரியும்.அடிப்படையில் புவி ஈர்ப்பு சக்தி இரண்டு விசயங்களைச் சார்ந்தது. ஒரு பொருளின் எடை மற்றும் அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது.பொருளின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் புவி ஈர்ப்பு விசை அதிகமாகும். அதேபோல நீங்கள் அந்த பொருளுக்கு பக்கத்தில் போகப் போக அதன் புவி ஈர்ப்பு விசை அதிகரிக்கும்.

சரி தான் ஆனால் இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் எண்களை உபயோகிப்போம்.ஜூப்பிடர் சந்திரனை விட 25,000 மடங்கு எடை அதிகம் கொண்டது. உண்மையில் இது ரொம்ப அதிகம். ஆனால் அதே சமையத்தில் ஜூப்பிடர் சந்திரனை விட 1500 மடங்கு அதிக தூரத்தில் இருக்கிறது. இப்பொழுது புவிஈர்ப்பு விசை யாருக்கு அதிகம் இருக்கும்? சந்திரனுக்குத் தான்; தூரம் அதிகமாக அதிகமாக புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைந்து விடும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சந்திரனுடன் ஒப்பிடப்பட்டது. சந்திரனின் சக்தி ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மற்ற கிரகங்களின் சக்தி எவ்வளவு இருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது கீழிருக்கும் அட்டவணை.

Planet Mass
(10^22 kg)
Distance
Gravity
(Moon=1)
Tides
(Moon=1)
Mercury 33 92 0.00008 0.0000003
Venus 490 42 0.006 0.00005
Mars 64 80 0.0002 0.000001
Jupiter 200,000 630 0.01 0.000006
Saturn 57,000 1280 0.0007 0.0000002
Uranus 8,700 2720 0.00002 0.000000003
Neptune 10,000 4354 0.00001 0.000000001
Pluto ~1 5764 0.0000000006 0.00000000000004
Moon 7.4 0.384 1.0 1.0

(Thanks: Phil Plait)

பார்த்தீர்களா? கிரகங்கள் நம்மீது செலுத்தும் புவி ஈர்ப்பு சக்தி மிக மிக குறைவு. புவி ஈர்ப்பு விசை தான் ஜோதிடர்களின் கணிப்புக்கு உதவியாக இருக்கிறது என்றால் சந்திரன் தானே எல்லா கிரகக்களை விடவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்? இல்லையே!

இதையே பிடித்துக்கொண்டு சந்திரனுக்குத்தன் சக்தி இருக்கிறதே; அதை வைத்தும் நாங்கள் ஜோதிடம் கணிப்போம் என்று சொல்லாதீர்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனை ஒப்பிட்டுப்பார்ப்பதற்குத்தான். உண்மையில் சந்திரனின் சக்தியும் மிகவும் குறைவுதான்.

எனவே புவி ஈர்ப்பு விசை இல்லை. மின் காந்த சக்தியாக இருக்குமோ?ஒருவேளை அப்படி இருக்குமோ?

புவி ஈர்ப்பு விசை எடையையும் தூரத்தையும் பொருத்தது என்றால் மின் காந்த சக்தி மின் சக்தியையும் தூரத்தையும் பொருத்து மாறுபடும். பிரச்சனை என்னவென்றால் இந்த மிகப்பெரிய பொருள்களான கிரகங்களுக்கு மின் சக்தியே இல்லை என்பது தான்.மின் சக்தி எல்க்ட்ரான்களிடமிருந்தும் ப்ரோட்டான்களிடமிருந்தும் வருகிறது. எதிர் சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும்; எனவெ ஒன்று இல்லாமல் இன்னொன்றைப் பார்ப்பது என்பது முடியாத காரியம். எனவே கிரகங்கள் நியூட்ரல் சார்ஜ் கொண்டவை. அவைக்கு மின்சக்தியே கிடையாது.

சிற்சில காரணங்களால் சில கிரகங்களுக்கு காந்த சக்தி இருப்பதுண்டு. ஆனால் மீண்டும் இதுவும் தூரத்தைப் பொருத்து மாறும்.ஜூப்பிடரின் காந்த சக்தி மிக அதிகம். ஆனால் அது பூமியிலிருந்து மிகவும் தூரமாக இருக்கிறது. எனவே நம்மீது எந்தவித பாதிப்பையும் அதனால் உண்டுபண்ண முடியாது.மேலும் சூரிய குடும்பத்தில் சூரியனுக்குத்தான் அதிக காந்த சக்தி இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வெடிப்புகளால் மின் சக்தி கொண்ட அணுக்கள் மிக அதிகமாக வெளிப்படும் பொழுது அவை பூமியின் காந்த சக்தியை பாதிக்கக்கூடும்.1989இல் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.

எப்படிப்பார்த்தாலும் மற்ற கிரகங்களின் காந்த சக்தி சூரியனின் காந்த சக்தியோடு ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவு. சூரியனுக்கல்லவா முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் ஜோதிடத்தில் சூரியனை விட மற்ற கிரகங்களுக்கு தானே முக்கியத்துவம் அதிகம் இருக்கிறது?

மிஸ்டர் சூரியனார் இதில் ஏதோ சதி இருக்கிறது!

நமக்கு கொஞ்சமாவது பக்கத்தில் இருக்கும் கிரகங்களே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொழுது பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்? சுத்தம். ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தூரம். அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. ஒளி ஒரு ஆண்டுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு சற்றே குறைவு. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி 4.3 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.

புவி ஈர்ப்பு விசை என்றால் சந்திரன் தான் எல்லா கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.மின்காந்த சக்தி என்றால் சூரியன் தான் மற்ற கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.

இரண்டுமே இல்லையே.

பிறகு எந்த சக்தி? நமக்கு மீதமிருக்கும் சக்திகள் குறைந்து கொண்டே வருகின்றன.

ஜோதிடர்களின் நம்பிக்கை என்னவென்றால் இவை தவிர அறிவியலுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது தான். ஆனால் அந்த நம்பிக்கையும் பிரகாசமாக இல்லை.

எல்லா சக்திகளும் தூரத்தைப் பொருத்து மாறுபடும்.இது அடிப்படை அறிவியல். ஒரு பொருள் நமக்குத் தூரமாக இருக்கிறது என்றால் அது நமக்குப் பக்கத்தில் இருக்கும் பொருளைவிட மிகவும் கம்மியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் ஜோதிடர்கள் எல்லா கிரகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன என்கின்றனர். எனவே ப்ளூடோவும் வீனஸ¤ம் ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஜோதிடர்களின் கூற்றுப்படி கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கும் அவைகளின் தூரத்துக்கும் சம்பந்தமேயில்லை. அதே போல் கிரகங்களின் எடையும் ஒரு பொருட்டே இல்லை. இல்லையென்றால் ஜூப்பிடர் அல்லவா சக்திவாய்ந்தாக இருக்க வேண்டும். மெர்க்குரி எல்லாம் ஆட்டைக்கே வராது!

இது சரியாகப்படவில்லையே! விண்கற்கள்? விண்கற்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை.அவை மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சூரியனைச்சுற்றி வருகின்றன.இவற்றுள் பெரும்பாலனவை மற்ற கிரகங்களை விட பூமிக்குத்தான் மிக அருகில் இருக்கின்றன. எனவே அவைகளும் நம்மைப் பாதிக்கவேண்டுமே?பிரச்சனை என்னவென்றால் விண்கற்கள் நிறைய-மிக நிறைய இருக்கின்றன.100 மீட்டர் அகலமுள்ள விண்கற்கள் நம் சூரியகுடும்பத்தில் மட்டும் எவ்வளவு இருக்கின்றன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு பில்லியன்.இவை மிக மிக அதிகம்.பல கிரகங்களுக்குச் சமம். ஜோதிடர்கள் இவைகளையும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது?கன்ஸிடர் பண்ணுங்கப்பா.

வான் ஆராய்ச்சியாளர்கள் பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் 150 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். நிச்சயம் அவை ரொம்ப தூரத்தில் இருக்கின்றன. ஆனால் ஜோதிடர்களுக்குத்தான் தூரம் ஒரு பிரச்சனையில்லியே? எனவே இந்த கிரகங்களும் நம்மீது பாதிப்பை உண்டுபண்ணவேண்டும்.150 கிரகங்கள் என்பது இது வரை கண்டுபிடிக்கப்பட்டவை. இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நம் பால்வெளியில் மட்டும் மொத்தம் பில்லியன் கிரகங்கள் இருக்கின்றன.கிரகங்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. அவைகளையும் ஏன் ஜோதிடர்கள் சேர்த்துக்கொள்ளக்கூடாது?

இப்படி யோசியுங்கள். கிரகம் தங்களது தாய் நட்சத்திரத்தை சுற்றி வரவேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். எனவே அவர்கள் வைத்திருக்கும் டேட்டாவை வைத்து இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே என்று கணிக்கிறார்கள். பின் நாளில் அது உண்மையுமாகிறது. 50 வருடங்களுக்கு முன் வரை ஏன் ஒரு ஜோதிடர் கூட “அடடா இப்பத்தான் மைன்ட்ல ஸ்ட்ரைக் ஆச்சு..இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே” என்று கணிக்கவில்லை?ஏனென்றால் அவர்களால் முடியாது. அவர்கள் வைத்திருக்கும் டேட்டா ஒன்றுக்கும் ஆகாதது. அதற்கு அர்த்தமேயில்லை.

ஜோதிடர்களின் விதிப்படி (தூரமும் எடையும் பொருட்டே அல்ல) இந்த கண்டுபிடிக்கப்படாத பில்லியன் கிரகங்களின் பாதிப்பு எல்லாம் சேர்ந்தால் அது நமது சூரிய குடும்பத்தின் கிரகக்களின் பாதிப்புகளை சும்மா ஊதித்தள்ளிவிடவேண்டும். ஒரு அணுகுண்டு வெடிக்கும் பொழுது அது எப்படி ஊசி விழும் சத்தத்தை விழுங்கி விடுகிறதோ அது போல.

எனவே நாம் கீழ்க்கண்ட ஒரு முடிவுக்கு வரலாம்.
1. நமக்குத் தெரிந்த சக்தி இருக்கிறது;ஆனால் அது ஜோதிடத்துக்கு உதவாது.
2. நமக்குத் தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது அது இயற்பியலின் எல்லா விதிகளையும் மீறிவிடுகிறது.அப்படியானால் பில்லியன் விண்கற்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத (ஆனால் உண்மையில் இருக்கின்ற) பில்லியன் கிரகங்களும் ஜோதிடத்தில் இருக்கவேண்டும். இவை சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஊதித்தள்ளிவிட வேண்டும். ஆனால் (இப்பொழுது) ஜோதிடத்தில் இது இல்லை.

எனவே தெரிந்த சக்தியும் இல்லை தெரியாத சக்தியும் இல்லை.

பிறகு ஜோதிடம் என்பது என்ன? பொய்.ஏமாற்று வேலை.

(மேலும்)

15 thoughts on “ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

  1. சோதிடம் என்பது ஒரு அறிவியல் தான் அதை தவறாக வியாபாரமாகப் பயன்படுத்துபவர்கள் தான் தவறு செய்கிறார்கள்.Back to your postஎன்னங்க உங்க பதிவின் தளமே சரியில்லை கிரகங்களின் விசை{Force} பற்றி விவாதித்துவிட்டு கிரகங்களுக்கு சக்தியில்லை{Energy} என்று சொல்கிறீர்கள்.மேலும் பல விசைகள் இருக்கேFrictional Force?Air Resistance Force?Tension Force? நீங்க இன்னும் நல்லா ஆராய்ந்து விட்டு சொல்லுங்க.வாரேன்

    Like

  2. நீங்கள் கேள்விக்கு விளக்கத்தை உடனே சொன்னா நானும் பதில் விளக்கம் கொடுத்து தெரியாததை தெரிஞ்சுகிறேன்.அப்பத்தான் நல்ல அறிவுப்பூர்வமான விவாதம் செய்யமுடியும்.

    Like

  3. ஸ்மார்ட்: சோதிடம் அறிவியல் இல்லை. இல்லவே இல்லை. நான் கிரகங்களின் சக்தி என்று சொல்லியிருப்பது கிரகங்கள் நம் மீது செலுத்தும் என்று சோதிடர்களால் சொல்லப்படுகிற சக்தி. மீண்டும் ஒரு முறை நான் எழுதியிருப்பதைப் படியுங்கள். மொத்தமே நான்கு விசைகள் என்று சொல்லவில்லை. அடிப்படையில் என்கிற ஒரு வார்த்தை இருக்கிறதே! விசைகள் பல இருக்கலாம். ஆனால் அவற்றுக்கெல்லாம் அடிப்படை நான் மேற்குறிப்பிட்டிருக்கிற நான்கு விசைகளே. இது அடிப்படை இயற்பியல். இந்த நான்கு விசைகளைச் சார்ந்து தான் மற்ற விசைகள் இருக்கின்றன. வாதத்தின் தளம் மிகச்சறியாக இருக்கிறது மிஸ்டர் ஸ்மார்ட். சக்தி என்று நான் சொன்னாலும் பக்கத்திலே ஆங்கிலத்தில் force என்று தானே சொல்லியிருக்கிறேன். உங்கள் ஸ்மார்ட்னெஸை வேறு உருப்படியான ஒன்றுக்குப் பயன்படுத்துங்கள்.

    Like

  4. //கிரகங்கள் நம் மீது செலுத்தும் என்று சோதிடர்களால் சொல்லப்படுகிற சக்தி///அவை இந்த அடிப்படை விசைக்குள் தான் இருக்கும் என்று எப்படிக் கூறமுடியும்?நண்பரே சக்தி வேறு, விசை வேறு, இதுதான் அடிப்படை அறிவு. விளக்கமாகச் சொன்னால், சூரியனிலிருந்து பூமிக்கு வரும் சக்தி ஒளியின் வடிவாக வருகிறது அன்றி நீங்கள் சொல்லுவதுபோல விசையின் வடிவிலா வருகிறது யோசியுங்கள். மேலும் 2010 ம் ஆண்டு வரை மனித அறிவியல் கண்டுபிடித்த அடிப்படை விசைகள் 4 என்றால் வருங்காலத்தில் கூடாது என்பதற்கு ஆதாரமுண்டா? ஒரு விஷயத்தை நாம் கண்டுபிடிக்கமுடியாவிட்டால் அது இல்லை என்றாகாது.

    Like

  5. //உங்கள் ஸ்மார்ட்னெஸை வேறு உருப்படியான ஒன்றுக்குப் பயன்படுத்துங்கள்//நீங்க உடனே பதிலும் அளிக்க மாட்டீர், அப்ருவும் செய்யமாட்டீர் அப்புறம் எப்படி எடுத்த எடுப்பில் முழுவிவாதம் தொடங்க முடியும்?. ஸ்மார்ட்னெஸை போக போக தெரியும்.

    Like

  6. திரு MSV MUTHU அவர்களே,ஜோதிடம்,உண்மையா? பொய்யா? என்று எனக்கு தெரியாது.ஆனால் இப்பொழுதுள்ள அறிவியல் என்பது சில துறைகளில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது.ஆனால் சில துறைகளில் 5 % க்கும் குறைவான அளவு முன்னேற்றம் கூட அடையவில்லை என்பதை அறிவியலாரே ஒத்துக்கொள்கின்றனர்.குறிப்பாக நம் மூளை,இந்த பிரபஞ்சம், போன்றவை.நம் சூர்யக்குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களால் நம் பூமியில் ஏற்படும் பாதிப்பைப் பற்றிய எந்த ஒரு ஆராய்ச்சியும் இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.இதைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இப்பொழுதுள்ள வளர்ச்சி போதாது என்றே கருதுகிறேன்.இதற்க்கு இன்னும் குறைந்தது 20 ஆண்டுகளாவது தேவைப்படும். இந்த பிரபஞ்சத்தைப் பற்றியும்,நம்மூளையைப் பற்றியும், இது வரை அறிவியல் கண்டறிந்தது 5 % கூட இல்லை.அதைப் போல் நம் அருகில் உள்ள சந்திரனில் தண்ணீர் இருந்தது கூட இப்பொழுது தான், நம் இந்திய,சந்திராயன் மூலமே இவ்வுலகம் அறிந்துள்ளது.நம் மொபைல் போனிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சால் எவ்வகையானப் பாதிப்பு ஏற்ப்படும் என்று தீவிரமான ஆராய்ச்சி நடந்து கொண்டுதான் உள்ளது. துல்லியமாக இன்னும் கண்டுபிடித்த பாடில்லை.இன்னும் நம் சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் எந்த வகையான சக்திகளை வெளிப்படுத்துகிறது என்று ஆராய்ச்சி முழுமையடையவில்லை.சொல்லப்போனால் கால்பங்கு கூட ஆராயவில்லை என்று அறிவியலார் கூறுகிறார்கள். இப்பொழுது தான் நியூட்ட்ரினோ பற்றிய ஆராய்ச்சி துவங்கியுள்ளது. முதலில் இதை நிறை, எடை இல்லாத துகள்கள் என்று கூறிய அறிவியலார் தற்போது தான் அதற்க்கு, நிறையும், எடையும் உண்டு என்று கண்டறிந்துள்ளார்கள்.அது ஒரு நொடிக்கு ஒரு லட்சம் கோடி நியூட்ட்ரினோக்கள் நம் உடலைக் கடந்து செல்வதாகக் கண்டறிந்துள்ளனர்.இன்னும் காப்பியும், டீயும் உடலுக்கு நல்லது எனவும்,நல்லதல்ல எனவும் மாறி,மாறி ஆராய்ச்சி முடிவுகள் வந்த வண்ணம் உள்ளது.இன்னும் இதைப் பற்றிய ஆராய்ச்சியே முடியவில்லை.இன்னும் ஜலதோஷம் வராமல் தடுப்பதற்க் குரிய மருந்து கண்டுபிடிக்க வில்லை, இன்னும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே உங்கள் இந்தக் கட்டுரை தற்போதைக்கு ஏற்றுக் கொள்ளலாமே தவிர இது முழு உண்மையல்ல.

    Like

  7. ஸ்மார்ட்:உங்களை உண்மையிலே ஸ்மார்ட் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இயற்பியலின் அடிப்படை கூடத் தெரியாதவர் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது. சூரியனிடமிருந்து சக்தி ஒளி வடிவில் வருகிறது சரி. புவி ஈர்ப்பு விசை சூரியனிலிருந்து பூமிக்கு வருகிறதா இல்லையா? பூமி ஏன் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது? எயின்ஸ்டின் கூறிய ஜெனரல் ரிலேடிவிட்டி தெரியுமா? படியுங்கள் சார். நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்: சக்தி என்ற சொல்லை நான் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் அதை force என்றே பயன்படுத்துங்கள்.

    Like

  8. கிரகஙகளுக்கு சக்தி இருப்பதாகவே வைத்துக்கொண்டால், அதன் பாதிப்பு பூமியில் குறித்த இடதில் உள்ள அனைவருக்க்கும் குறித்த நேரதில் சமனாகவே இருக்க வேண்டும். எந்தவோரு பௌதீக கணியமும் பிறந்த நேரதில் தன்ங்கியிரிபதில்லை.

    Like

  9. in 1900 if someone said that there is a stuff called Computer and there is internet and you can discuss across the globe that ‘Jothidam’ is poi, they might have simply laughed at him.

    Like

  10. நான் திறந்த மனதுடன் விஷயங்களை அணுகுபவன்

    // பூமி ஏன் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது? //

    இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். பூமியோடு சேர்ந்து எல்லாம் சுற்றுகிறது என்கிறார்களே? இங்கே ‘எல்லாம்’ என்றால் என்ன (அல்லது) ‘எல்லாம்’ என்பது எதை எதை எல்லாம் குறிக்கிறது ?

    // எயின்ஸ்டின் கூறிய ஜெனரல் ரிலேடிவிட்டி தெரியுமா? //

    எனக்கு தெரிந்து இது தியரி அளவில் இருக்கிறது

    Like

Leave a comment